Sunday, August 16, 2026
ஆடிப்பூரம்
ஆடி மாதம் என்றதும் அம்மனின் நினைவுகள் தான் ஓடோடி வரும். அதுவும் வெள்ளிக்கிழமையென்றால் கேட்கவே வேண்டாம். குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலத்தில் கோடைவிடுமுறையின் பொழுது ஊருக்குச் செல்லும் இந்த மாதத்தில், வெகுதூர சாலையோர கோவிலில் இருந்து ஆடி மாதக்காற்றில் எல்.ஆர்.ஈஸ்வரியின் 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா' பாடல் மெல்ல காதை வருடும். சிகப்பு, மஞ்சள் சீலைகளை உடுத்திக் கொண்டு ஓம்சக்தி, சமயபுரம், மாரியம்மன் கோவில்களுக்கு வேண்டி, விரதமிருந்து சாரை, சாரையாக பெண்கள் சென்று கொண்டிருப்பார்கள். அம்மனைக் கொண்டாடும் இந்த மாதத்தில் தான் 'ஆடிப்பூர' திருநாளும் வருகிறது. இந்த வருடம், இன்று ஆகஸ்ட் 14, அந்நன்னாள் என்று நாம் அனைவரும் அறிவோம்.
ஆடிப்பூரம், ஆண்டாள் அவதரித்த நாள் என்பதால் ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம், திருமாலிருஞ்சோலை மற்றும் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்புற கொண்டாடப்படும் திருநாளாகும். ஆண்டாள் என்றதும் அழகிய கொண்டை, கிளி, மாலை என்று ஒன்றன்பின் ஒன்றாக நினைவுகள் வரும். பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் கவி அல்லவா? தமிழின் மகத்துவத்தை, காதலை, பக்தியை திருப்பாவை, நாச்சியார் திருமொழி வாயிலாக நமக்கு வழங்கிய பெண் கடவுள். அவதாரம் எடுத்ததே அந்த ரங்கநாதனைச் சேரவே என்று பக்தியை ஊட்டியவள்.
வைணவ மரபுப்படி, ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரியாழ்வார் (விஷ்ணுசித்தர்) தமது நந்தவனத்தில் துளசிச் செடியருகே இருந்த குழந்தையைக் கண்டெடுத்து, 'கோதை' என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். அந்தக் கோதைதான் பின்னாளில் 'ஆண்டாள்' ஆனாள். ஒரு சிறுமியாகத் தொடங்கிய வாழ்க்கை, காதலைக் கவிதையாக்கி, பக்தியைத் தமிழாக்கி, ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் வாழும் ஒரு பெண் குரலாக மாறியது.
அந்தக் கோதையை நினைவுகூரும் திருநாள்தான் ஆடிப்பூரம்.
தமிழ் வைணவ பக்தி இலக்கியத்தில் பன்னிரு ஆழ்வார்களுக்கு மிகச் சிறப்பான இடம் உண்டு.
பெருமாளின் மீது கொண்ட பேரன்பையும் பக்தியையும் அவர்கள் அழகிய தமிழ்ப் பாசுரங்களாகப் பாடினர். அந்தப் பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் ஆண்டாள். அவருடைய இரண்டு முக்கியமான படைப்புகள், திருப்பாவை - 30 பாசுரங்கள், நாச்சியார் திருமொழி - 143 பாசுரங்கள். இந்த இரண்டு படைப்புகளும் தமிழின் பக்தி இலக்கியத்தில் அழியாத இடத்தைப் பெற்றுள்ளன. ஆண்டாளின் பெருமை அவர் ஒரு பெண் ஆழ்வார் என்பதில் மட்டும் இல்லை. தன் உள்ளத்தில் எழுந்த காதலை மறைக்காமல், அதை இறைவன் மீதான பக்தியாகவும், அந்த பக்தியை உயர்ந்த தமிழ்க் கவிதையாகவும் மாற்றியவர் அவர்.
ஆண்டாளின் கவிதைகளில் இறைவன் தொலைவில் இருக்கும் ஒரு தெய்வம் அல்ல. அவர் அவளுடைய மணாளன். அவரை அடைய வேண்டும் என்ற ஏக்கம் அவளுடைய கவிதைகளில் மீண்டும் மீண்டும் வெளிப்படுகிறது. அதனால் ஆண்டாளின் பாடல்களில் பக்தியும் காதலும் ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாத அளவுக்கு இணைந்திருக்கின்றன. மலர்களைத் தொடுத்து மாலையாக மட்டும் அல்ல மனதையும் சேர்த்து மாலவனிடம் அன்பு பாராட்டியவள். "மார்கழித் திங்கள்…" என்று தொடங்கும் திருப்பாவை, தமிழ்நாட்டைத் தாண்டி உலகெங்கும் உள்ள வைணவக் கோயில்களிலும் வீடுகளிலும் ஒலிப்பவை. முப்பது பாசுரங்கள்.
முப்பது நாட்கள், மார்கழியின் ஒவ்வொரு காலையிலும் ஒரு பாசுரம் என்று ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் வைணவத் திருத்தலங்களில் பாடப்பெற்று வரும் காலத்தால் அழியாத பாடல்கள்.
ஆண்டாளின் இன்னொரு முக்கியமான படைப்பு 'நாச்சியார் திருமொழி'. திருப்பாவையைவிட இங்கு ஆண்டாளின் தனிப்பட்ட ஏக்கம் இன்னும் வெளிப்படையாகக் கேட்கிறது. இதிலும் காதல், கனவு, பிரிவின் வலி, ஏக்கம், இறைவனை அடைய வேண்டும் என்ற தீவிரமான விருப்பம் இருக்கிறது. அதில் மிகவும் புகழ்பெற்ற பகுதி “வாரணம் ஆயிரம்”. ஆயிரம் யானைகள் சூழ, மணமகன் வருகிறான். திருமண நிகழ்வுகள் நடைபெறுகின்றன. தோரணங்கள் கட்டப்படுகின்றன... என்று ஆண்டாள் காணும் கனவுத் திருமணத்தின் காட்சிகள் அதில் விரிகின்றன. அதனால் தான் இன்றும் பல தமிழ் வைணவத் திருமணங்களில் "வாரணம் ஆயிரம்" பாசுரங்கள் ஒலிக்கின்றன.
ஒரு பெண்ணின் கனவு, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னொரு பெண்ணின் திருமணக் கனவின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு அழகானது!
ஆடிப்பூரம் வந்துவிட்டால் ஸ்ரீவில்லிபுத்தூர் முழுவதுமே திருவிழாக் கோலமெடுக்கும். முக்கியமாக ஆண்டாள் தேரோட்டம் திருவிழாவின் மிகப்பெரிய நிகழ்வுகளில் ஒன்றாக விளங்குகிறது. சில நாட்கள் அங்கு தங்கி ஒரே ஒரு முறை அந்தக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. மீண்டும் ஒருமுறை செல்ல வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
ஆண்டாளின் வாழ்க்கைக் கதையில் இன்னொரு முக்கியமான நகரம், ஸ்ரீரங்கம்.
காவிரியின் நடுவே அமைந்துள்ள நகரில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீரங்கநாதர், ஆண்டாளின் மனதில் வெறும் தெய்வமாக இல்லாமல் அவளுடைய மணாளானாக இருந்ததால், வைணவ மரபில், ஆண்டாள் இறுதியில் ரங்கநாதருடன் தெய்வீகமாக ஒன்றிணைந்ததாக நம்பப்படுகிறது. அதனால் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் வரை செல்லும் ஆண்டாளின் கதை, ஒரு பக்தையின் பயணமாக மட்டுமல்ல, இறைவனைத் தன் வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுத்த ஒரு பெண்ணின் ஆன்மிகப் பயணமாகவும் பார்க்கப்படுகிறது.
மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ்சோலை அழகர் கோயிலும் ஆண்டாளின் பாசுரங்களுடன் நெருங்கிய தொடர்புடையது. 'நாச்சியார் திருமொழி'யில் திருமாலிருஞ்சோலை அழகரைப் பற்றிய ஆண்டாளின் பக்தி வெளிப்படுகிறது. அவளுடைய கற்பனையில் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறார்.
இறைவனைத் தேடும் மனத்திற்கு உலகமே ஒரு கோயிலாகிறது.
வேகமாக மாறிக்கொண்டிருக்கும் உலகில், அன்பு, ஏக்கம், கனவு, நம்பிக்கை, சரணாகதி போன்ற மனித மனத்தின் சில உணர்வுகள் மட்டும் மாறுவதில்லை. இவை அனைத்தையும் ஆண்டாள் தன் பாடல்களில் உயிர்ப்போடு வைத்திருக்கிறாள். அதனால் ஆண்டாளைப் படிப்பது வெறும் பக்தி இலக்கியத்தைப் படிப்பது அல்ல. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு தமிழ் பெண்ணின் உள்ளத்தைக் கேட்பது. இன்றும் பாடப்படும் ஒவ்வொரு திருப்பாவையிலும், ஒலிக்கும் ஒவ்வொரு “வாரணம் ஆயிரம்” வரியிலும், மார்கழிக் காலையின் ஒவ்வொரு கோலத்திலும் தமிழின் இதயமாக ஆண்டாள் என்றும் வாழ்வாள்.
இனிய ஆடிப்பூர நல்வாழ்த்துகள்! 🙏🌸
Subscribe to:
Post Comments (Atom)
அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்
என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...
-
ஒரு வேலை நிமித்தம் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த கல்வி மண்டல இயக்குனரிடம் சில படிவங்களில் கையொப்பம் வாங்க வேண்டியிருந்தது. நானு...
-
'வெட தௌரோ' என்று சௌராஷ்ட்ரா மக்களால் அன்புடன் அழைக்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோவில் மதுரையில் மிக பிரசித்தம். அதிலும் புரட்ட...
-
இது நடந்தது 1998 ஆம் வருடம். என் மகளின் முதன் முதல் ரயில் பிரயாணம். அப்போது அவளுக்கு மூன்று வயது. எங்கோ ஊருக்குப் போகிறோம் என்று மட்டும் ...
No comments:
Post a Comment