Friday, December 31, 2021

மாதங்களில் அவள் மார்கழி 17



நற்குணங்கள் கொண்ட தர்மவான் நந்தகோபன், பெருமாட்டி யசோதை, உலகளந்த பெருமான் கண்ணன், செம்பொற் சிலம்புகளை அணிந்த பலராமனின் தரிசனம் வேண்டுகிறது "அம்பரமே" என அழகிய தமிழ்ச் சொல்லில் துவங்கும் இந்தப் பாடல்.


மாதங்களில் அவள் மார்கழி 16





தோழிகளுடன் நீராடி விட்டு வாயிற்காப்பாளரிடம் கார்மேக வண்ணன் தங்களுக்குத் தருவதாக சொன்ன பறையைப் பெற்றுச் செல்ல வந்திருக்கிறோம். எந்த ஒரு காரியத்தையும் முடியாது என்று எடுத்த எடுப்பில் சொல்வதை அனுபவமிக்க பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள். இந்த ஆயர்குலச் சிறுமிகளும் மூடியுள்ள நந்தகோபனின் வீட்டு நிலைக்கதவைத் திறக்க முடியாது என்று சொல்லி விடாதே என சொல்வதையும் நயம்பட "வாயால் முன்னமுன்னம் மாற்றாதே" என்கிறாள் ஆண்டாள்.




Thursday, December 30, 2021

மாதங்களில் அவள் மார்கழி 15



ஏலே இளங்கிளியே! இன்னும் என்னடி உறக்கம்? இத்தனை சொல்லியும் எழுவதில் என்ன சுணக்கம்? தோழிகள் கோபத்துடன் கேட்க, ஒரு வழியாக எழுந்து வந்தவள் 'ஏன் இப்படி கோபித்துக் கொள்கிறீர்கள்?' என்று கோபித்துக் கொள்கிறாள். எப்படி இருக்கிறது கதை? "வல்லீர்கள் நீங்களே, நானே தான் ஆயிடுக!" எல்லோரும் போந்தாரோ? என்று தோழி உரைப்பதைத் தமிழில் ஆண்டாள் வெளிப்படுத்தும் பாங்கு தான் எத்தனை அழகு!


Wednesday, December 29, 2021

Sardar Udham



வரலாற்றுச் சம்பவங்களின் அடிப்படையில் சமீபத்தில் வெளிவந்துள்ள பல ஹிந்தி திரைப்படங்களில் "சர்தார் உதம்" சிறந்த படம். வரலாற்றுப் புத்தகங்களில் நாம் படித்த ஜாலியன் வாலாபாக் படுகொலை தொடர்பான சம்பவங்களை மீண்டும் கண்முன் நிகழ்த்தியிருந்தார்கள்.

பள்ளிகளில் நமக்கு கற்பிக்கப்பட்ட இந்தியாவைப் பற்றின உண்மையான வரலாறு என்பது மிகவும் குறைவு. ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா அதற்கு முன் எத்தகைய செல்வச்செழிப்புடன் இருந்தது, நமது செல்வங்களை எப்படி எல்லாம் ஆங்கிலேயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், அவர்களை அடுத்து வந்த முகலாயர்கள் சூறையாடினார்கள் என்பதை சாதுரியமாக நம்மிடம் மறைத்து விட்டதில் இருக்கிறது காங்கிரசின் அரசியல். அது மட்டுமில்லாமல் இந்துக்களின் அடையாளங்களை அழிக்கும் விதமாக இஸ்லாயமியர்கள் சிதைத்த கோவில்களும், பெண்களும், குழந்தைகளும், குடும்பங்களும் எண்ணில் அடங்காதவை. ஆனால் ராபர்ட் கிளைவ், லார்ட் மௌண்ட்பேட்டன், கோரி முகம்மது, கஜினி முகம்மது, திப்பு சுல்தான் என்று அவர்களைப் போற்றிப் படிக்கிறோம். இவையெல்லாம் நம் மேல் திணிக்கப்பட்ட பொய் வரலாறு என்பதை இன்றைய தலைமுறையினர் உணர வேண்டும். அந்த விதத்தில் மிகவும் நன்றாக எடுக்கப்பட்ட படம் இது. அனைத்துப் பள்ளிகளிலும் இப்படத்தைத் திரையிட்டு நம் நாட்டின் விடுதலைக்காக காந்தி தலைமையிலான காங்கிரஸ் தவிர்த்து எத்தனை இயக்கங்கள் போராடி உயிரிழந்திருக்கின்றனர் என்ற உண்மையையும் புரிய வைக்க வேண்டும்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவன் படுகொலையைத் திட்டமிட்டு செய்த ஜெனரல் டயர், அவருடைய உயர் அதிகாரி மைக்கேல் டுவெயர் என்பவரைப் பழிவாங்க இங்கிலாந்து செல்வதிலிருந்து படம் ஆரம்பிக்கிறது. இந்தியாவிலிருந்து எப்படித் தப்பித்து, லண்டன் வந்து சேர்ந்தார், அங்கு ஆறு ஆண்டுகள் வரை டுவெயரைத் தொடர்ந்து கண்காணித்து நேரம் வரும் பொழுது கொன்றது, அவரை விசாரிக்கும் அதிகாரியிடம் ஏன் இந்தப் படுகொலையை செய்ய நேரிட்டது என்று அவர்கள் தரப்பு அநியாங்களைச் சொல்கிறது இப்படம். மெதுவாக நகர்ந்தாலும் சில வசனங்களும், காட்சிகளும் நாம் எப்படி மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறோம் என்பதை மட்டும் சொல்லாமல் சொல்கிறது. நடிகர் விக்கி கௌஷல் இந்த கதாபாத்திரத்தில் பொருந்திப் போயிருக்கிறார். பகத்சிங் மற்றும் இந்திய புரட்சிகர அமைப்பு இளைஞர்களின் தியாகத்தையும் இன்றைய தலைமுறை அறிந்து கொள்வது அவசியம்.

நாகரீகத்தில் பின்தங்கியவர்களாக, படிப்பறிவில்லாத சமூகமாக இருந்த இந்தியாவைக் காக்க வந்தவர்கள் கிழக்கிந்திய கம்பெனி போல இங்கிலாந்து மக்களை நம்ப வைத்து அவர்களின் கொலைகளையும், கொள்ளைகளையும் நியாப்படுத்தியிருக்கிறார்கள். இன்றைய காலம் போல அன்று தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாதது தான் அவர்களுக்குச் சாதகமாக அமைந்து விட்டது. அவர்களின் பொய்யை மெய்யென நம்பியவர்கள் மத்தியில் இந்தியாவைப் பற்றின பிம்பம் மிகவும் தாழ்வாக, கேலிக்குரியாதகாவே இருந்திருக்கிறது. இருந்து வந்தது சில வருடங்களுக்கு முன்பு வரையில் கூட!

உலகப்போரில் இங்கிலாந்திற்காக லட்சக்கணக்கான இந்தியர்கள் பங்கு கொண்டு உயிர் இழந்திருக்கிறார்கள். ஆனால் வரலாற்றில் அவற்றைப் பற்றி எங்கும் மூச்சு விடாமல் இன்று வரையிலும் நமக்கும் உலகப்போர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போல் இருக்கிறோம். பிரிட்டிஷார் வந்து தான் நம் நாட்டை முன்னேற்றினார்கள் அவர்களே ஆண்டு இருக்கலாம் என்ற நச்சு விதையை இன்று வரையில் பரப்பிக் கொண்டுத் திரியும் மூடர்கள் நிறைந்த நாட்டில் "இந்தியாவிற்கு இந்தியர்களே எதிரி" என்ற நிலை தற்போது மிகவும் தீவிரமாக உள்ளது. அபாயகரமானதும் கூட.

இத்தனைப் படுகொலைகளை, இந்தியாவின் கனிம வளங்களை, செல்வங்களைச் சூறையாடிய கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகம் இன்று வரை மன்னிப்புக் கோரவில்லை.

செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம், கட்டபொம்மன் போன்ற படங்களைப் பள்ளியில் இருந்து அன்று அழைத்துச் சென்றார்கள். இன்று வரலாறு என்பது என்னவென்றே அறியாத சமூகம் பொய், புரட்டு அரசியலால் வெறுப்பைச் சுமந்து கொண்டு அலைகிறது. இந்தியர்கள் என்ற எண்ணத்தை மக்களின் மனதில் இருந்து அகற்றும் இத்தகைய விஷ சக்திகள் நாட்டில் பெருகிவிட்ட நிலையில் உண்மையான வரலாறை அறிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டும். அதன் முதல் முயற்சியாக "சர்தார் உதம்" போன்ற படங்களை வரவேற்று மாணவர்களுக்குத் திரையிட்டு காண்பிப்பது அவசியம்.

ஒரு நாட்டின் உண்மையான வரலாறு என்னவென்று அறியாதவர்களால் தாய் நாட்டைப் போற்றிப் பாதுகாக்க முடியாது.

என்னுடைய வரலாற்று ஆசிரியர் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு, எத்தனை பேர் இறந்தார்கள், யாரால் இறந்தார்கள் என்று சொல்லிக் கொடுத்தாரே ஒழிய, ஏன், எவ்வாறு ஆங்கிலேயர்களுக்கு அடிமைப்பட்டோம், எப்படி 100 ஆண்டுகள் வரை நம் செல்வங்களைச் சூறையாடி நம்மை வறுமையில் தள்ளினார்கள் என்று அவரும் உணர்ச்சியுடன் பாடம் நடத்தி தன் உன்னத கடமையைச் செய்யவில்லை. நாங்களும் கேட்கும் வயதில் இல்லை. இன்று நினைத்தால் வெட்கமாக இருக்கிறது.

"S I X G L O R I O U S E P O C H S" by V. D. Savarkar, "India A Wounded Civilization" by V.S.Naipal,"An Era of Darkness The British Empire in India" by Shashi Tharoor புத்தகங்கள் நம் உண்மையான வரலாற்றை நம் சந்ததியினரும் அறிந்து கொள்ள உதவும். எத்தனை உயிர்களை இழந்துப் பெற்ற சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை அறியாதவரை நாம் அடிமைப்பட்டுக் கொண்டே தான் இருப்போம்.










Tuesday, December 28, 2021

மாதங்களில் அவள் மார்கழி 14


வெளியில் எங்காவது செல்வது என்றால் நம்மில் கூட பலரும் முதல் ஆளாக வருவேன் என்று கடைசியில் வந்து நிற்பார்கள். அது போலவே தோழியும் முன்னதாக வந்து அனைவரையும் எழுப்புவேன் என்று சொன்னவள் இன்னும் உறங்கிக் கிடக்கிறாள். அழகிய கண்ணனைப் பாடாமல் இன்னும் என்ன உறக்கம் பெண்ணே? பொறுமை இழந்தவளாக கேட்கிறாள் சுடர்க்கொடியாள் .


மாதங்களில் அவள் மார்கழி 13

 


"வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்று." என்ன ஒரு அழகான சொல்லாடல்! மார்கழி மாதம் குளிர் காலம். குளிர்ந்த நீரில் நீச்சலடித்துக் குளிக்க வா என எத்தனை எடுத்துரைத்தும் உறங்கும் தோழியை எழுப்ப, "தூக்கம் எனும் திருட்டை விடுத்து வா" என்றழைக்கிறாள் ஆண்டாள். ஆம், அதிக தூக்கம் நம் பொன்னான நேரத்தைத் திருடி விடுகிறது என்பதையும் அந்தப் பரந்தாமனை நினைக்காத ஒவ்வொரு நொடியும் வீணே என்கிறாள் கோதை. இந்தப் பாடலிலும் நாராயணின் வீர தீர பராக்கிரமங்களைச் சொல்ல மறக்கவில்லை.


Monday, December 27, 2021

மாதங்களில் அவள் மார்கழி 12


மார்கழி மாதத்தில் பரந்தாமனைப் போற்றிப் பாடிக் கொண்டிருக்கிறோம். ஏனடி இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய் ஆயனின் தங்கையே! அப்படி என்ன தூக்கம்? விரைவில் எழுந்து வா என்று இறைஞ்சுகிறாள்.


Sunday, December 26, 2021

மாதங்களில் அவள் மார்கழி 11

 

மானிடப் பிறவியில் இறைவனை வணங்காமல் வெறும் உண்டு, உறங்குவதில் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்பதைத் தன் அழகுத் தோழியிடம் ஆண்டாள் கேட்பதாக அமைந்துள்ள இப்பாடலில் மேகவண்ணன், கண்ணன், கோபாலன்  புகழைப் பாட வா என்று அழைக்கிறாள். 


The Unforgiveable


பனிக்காலம் வேறு ஆரம்பித்தாகி விட்டது. நல்ல நாளிலேயே நெட்ஃப்ளிக்ஸ், ப்ரைம், ஹுலு என்று பொழுது போகும். இப்பொழுது கேட்கவா வேண்டும்? சமீபத்தில் பார்த்த திரைப்படம் 'The Unforgiveable'. அப்படி ஒன்றும் ஆகா, ஓகோ என்ற படம் அல்ல. சாதாரண திரைக்கதை தான். ஆனால் அதைப் படமாக்கிய விதம் தான் இந்த படத்தைப் பார்க்க வைக்கிறது என்று நினைக்கிறேன்.

சிறைக்குச் சென்று திரும்புபவர்கள் சமுதாயத்தில் வாழ்வது எவ்வளவு கடினம் என்பதையும் இழந்த உறவுகளை மீட்க போரிடும் மனப்போராட்டத்தையும் அழகாக படமாக்கியிருக்கிறார்கள். சிறையில் இருந்து திரும்புபவர்கள் மீண்டும் எந்தப் பிரச்னையிலும் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக போலீஸ் அவர்களை கண்காணிப்பதும் வேறு குற்றவாளிகளின் சகவாசம் அவர்களுக்கு இருக்க கூடாது என்பதும் நல்ல திட்டங்கள் தான். அத்தனை கஷ்டங்களிலும் நாயகிக்கு உறுதுணையாக ஒரு குடும்பம் உதவுகிறது. நாயகியால் நிம்மதியை இழந்த குடும்பம் அவரைப் பழிவாங்க துடிக்கிறது. தன் ஐந்து வயது தங்கையை விட்டு விட்டு இருபது வருடங்கள் சிறையில் இருந்த பெண் விடுதலையானதும் அவளைத் தேடி கண்டடைந்தாளா? மீண்டும் சேர்ந்தாளா? என்பது தான் கதை.

அமெரிக்காவில் தத்து எடுத்து வளர்ப்பது என்பது நடைமுறையில் உள்ள பழக்கம் தான். அதற்குப் பரந்த மனப்பான்மை வேண்டும். வெள்ளையர்கள் வெள்ளையர்களைத் தத்தெடுத்தாலும் அந்தக் குழந்தைகளின் மனப்போராட்டத்தில் தத்தெடுத்த பெற்றோர்களும் குடும்பங்களும் கூட பாதிப்புக்குள்ளாகும். கலாச்சாரம், நிறம், நாடு என்பதையும் தாண்டி சில வெள்ளை அமெரிக்கர்கள், கறுப்பின, தென் அமெரிக்க, ஆசிய குழந்தைகளைத் தத்தெடுத்திருப்பார்கள். எத்தனை பெரிய மனதிருந்தால் இப்படி எல்லாம் செய்ய முடியும் என்று நினைத்துக் கொள்வேன்.  என்ன தான் அவர்கள் அன்பாக அந்தக் குழந்தைகளை வளர்த்தாலும் தத்துக் குழந்தைகள் சில மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள் என்பதே உண்மை. இந்தப் படத்திலும் அப்படித்தான் நிகழ்கிறது.

நாயகியாக சாண்ட்ரா புல்லக் நன்றாக நடித்திருக்கிறார்.



 

Saturday, December 25, 2021

மாதங்களில் அவள் மார்கழி 10

முப்பிறவியில் செய்த பலனைத் தான் இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பது நம்பிக்கை. அதைத்தான் ஆண்டாளும் தன் தோழியின் சுகமான வாழ்க்கைக்கு முப்பிறவியில் திருமாலை வணங்கி நோன்பிருந்ததன் பலனை அனுபவிக்கிறாள் என்று குறிப்பிட்டிருக்கிறாள். நன்கு உறங்குபவர்களைப் பார்த்து கும்பகர்ணனைப் போல் தூங்குவதாக சொல்வது வழக்கம். ஆண்டாளும் இப்பாடலில் ஆழ்ந்து உறங்கும் தோழியைப் பார்த்து அவ்வாறே விளிப்பது அவளுடைய பாடல்கள் எத்தனை யதார்த்தமானது என்பதையே நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.


Friday, December 24, 2021

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் தி வே...

கிறிஸ்துமஸ் நெருங்க, நெருங்க சாண்டா எல்லாம் ச்சும்மா பம்மாத்து என்பவர்களும் சாண்டா எனக்கு இதை வாங்கிட்டு வரணும் அதை வாங்கிட்டு வரணும்னு என்று லிஸ்ட் போட ஆரம்பித்து விடுகிறார்கள்.

சாண்டா கனவுகளுடன் வலம்வரும் வயதில் என்னென்ன பரிசுப்பொருட்கள் கிடைக்குமோ என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் குழந்தைகளுக்கு இருக்கும். சாண்டாவிற்காக ரொட்டி, பாலுடன் வழிமேல் விழிவைத்து காத்திருப்பதெல்லாம் குழந்தைத்தனத்தின் அழகு. சில வருடங்களில் யார் சாண்டா என்று தெரிய வருகையில் பரிசுப்பொருட்களின் பட்டியல் நீள்கிறது. ஆனாலும் ஆர்வமும் எதிர்பார்ப்புகளும் குறைவதில்லை.

அலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைவதற்குள் வேகமாக ஓடி வண்டிக்குள் எதையாவது நான் மறைத்து வைத்திருக்கேனா என்று துழாவுவார்கள் என் குழந்தைகள். எதுவும் கிடைக்கவில்லையென்றால்

"எங்கம்மா ஒளிச்சு வச்சிருக்க? ப்ளீஸ் ப்ளீஸ்" என்று கெஞ்சுவார்கள்.

நானும் எப்படியோ அவர்களிடமிருந்து பொருட்களைக் காத்து கிறிஸ்துமஸ் முன் தினம் மரத்தின் கீழே வைத்து விட்டுத் தூங்கிவிடுவேன். அமெரிக்காவில் இருப்பதினால் இந்த கொண்டாட்டம் குழந்தைகளுக்காக செய்வது வழக்கமாகி விட்டது.

கிறிஸ்துமஸ் நாளன்று அதிகாலையில் அக்காவும் தம்பியும் விரைந்து எழுந்து விடுவார்கள். அவர்கள் எதிர்பார்த்தது கிடைத்து விட்ட மகிழ்ச்சி, கூச்சலில் தெரிந்து விடும். மீண்டும் தூங்கி விடுவேன். அந்நிய தேசத்தில் வளரும் குழந்தைகள் அந்நியப்பட்டு போய்விடக்கூடாது என்பதால் இந்தக் கொண்டாட்டங்கள் அவசியமாகிறது.

முன்பு வேலை பார்த்த அலுவலக கிறிஸ்துமஸ் பார்ட்டிக்கு விடுமுறையில் வீட்டில் இருந்த சுப்பிரமணியையும் அழைத்துச் சென்றேன். பள்ளி விடுமுறை நாட்களில் அடிக்கடி என்னுடன் அலுவலகம் வந்ததால் நண்பர்கள் அனைவருக்கும் நல்ல பரிச்சயம். அவர்களும் அன்போடு பேச, இவனும் அவர்களிடம் ஆர்வமாய் கேள்விகளை கேட்டு எல்லோருக்கும் செல்ல பையனும் ஆனான்.
 
கிறிஸ்துமஸ் கொண்டாட்ட தினம் அதுவும் அலுவலகத்தில் நண்பர்களுடன் குதூகலமாய்...கேட்கவா வேண்டும்? அலுவலகம் முழுவதும் அலங்காரங்களுடன், சாக்ஸ் முதல் டை வரை அனைவரும் சிவப்பு, பச்சை வண்ண ஆடைகளுடனும், முகம் நிறைந்த மகிழ்ச்சியுடன் உலா வரும் நாளல்லவோ? ஆர்ப்பாட்டமாக ஆரம்பிக்கும் காலை உணவு முதல் அரட்டைக் கச்சேரியும் சேர்ந்து ரெசிபி பரிமாற்றங்கள் நடக்க... சுப்பிரமணிக்கு அங்கிருந்த பலவகையான உணவுகளைப் பார்த்தவுடன் ஒரே ஆச்சரியம்! இது என்ன அது என்ன என்று கேட்டானே தவிர எதையும் முயற்சி செய்து பார்க்கவில்லை. வழக்கம் போல டோனட்ஸ், பேகல் பக்கம் ஒதுங்கிக் கொண்டான். சாப்பிட்டு முடித்ததும் சரி, நீ போய் விளையாடு இல்லைன்னா மேத் பண்ணு என்றவுடன் நான் கொஞ்ச நேரம் சுத்திட்டு வர்றேன் என்று மற்றவர்களிடம் பேச ஓடிப் போய் விட்டான்.

பதினோரு மணிவாக்கில், "எங்கம்மா போன நீ? ஆளையே காணோம்?"

"என்னடா வேணும் உனக்கு?"

"அந்த ரூம்ல Wii கேம்ஸ் செட்டப் பண்ணிக்கிட்டு இருக்காங்கம்மா."

"லஞ்ச் முடிச்சிட்டு அங்க போகலாம்டா."

எப்படா மதிய நேரம் வருமென காத்திருந்து அரைகுறையாக சாப்பிட்டு விட்டு விளையாட ஓடினவன் தான். எத்தனை வகையான பல நாட்டுச் சிறப்பு உணவுகள்! வீட்டில் சமைத்தது, கடைகளில் வாங்கியதை வரிசைப்படுத்தி அழகாக வைத்திருந்தார்கள். கலையுணர்வுடன் உணவுகளைப் படைப்பதிலும் என்னவொரு நளினம்! அழகு!

நாங்களும் சாப்பிட்டு முடித்து விட்டு கேம்ஸ் விளையாட சுப்பிரமணியை மறந்தே போனேன். அதற்குள் டெஸெர்ட்ஸ் என்றவுடன் கூட்டம் கலைந்து அதையும் உண்டு களித்து மீண்டும் விளையாட்டில்...

நடுவில் கிறிஸ்துமஸ் பாடல்களைப் பாடும் கூட்டம் இன்னிசை இசைக்க...அதையும் அனுபவித்துக் கொண்டே...

வீடு செல்லும் நேரம் நெருங்குகையில் சுப்பிரமணியை தேடினால் அவனுடன் ஷிஃப்ட் போட்டு வீ கேம்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். சிறுவனோடு விளையாடுகிறோமேதோற்றுப் போகிறோமே என்று நினைக்காமல் ஜாலியாக அவர்களும், தன்னை விட பல வயது மூத்தவர்களுடன் விளையாடுகிறோமே என்று துளி கூட பயமில்லாமல் அனைவரையும் சமாளித்துக் கொண்டு சுப்பிரமணியும்... என்னைப் பார்த்தவுடன்
"ப்ளீஸ்ம்மா இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்ச நேரம்" என்று கெஞ்சி 

"கிளம்புடா போதும்."

அவர்களும் உன் பையன் நன்றாக விளையாடுகிறான். அவனிடம் நாங்கள் எல்லோருமே தோற்றுப் போனோம். அடுத்த வருடம் பார்க்கலாம் என்று அச்சாரம் போட்டு அவர்களும் கிளம்ப...

எனக்கு உன் ஆஃபிஸ் எப்பவுமே பிடிக்கும்மா. அப்பா ஆஃபிஸ் சரியான போர். இங்க எல்லாரும் நல்லா ஜாலியா பழகுறாங்க. யார் யார் எப்படி விளையாடினார்கள் என்று பேசிக் கொண்டே... நீ ஹேப்பியா இருந்தியாம்மா? எனக்குத் தெரியும் நீயும் சந்தோஷமா இருந்திருப்ப. உங்க டீம் எப்பவுமே ஜாலியா இருக்காங்க. இப்ப தான புரியுது நீ ஏன் சந்தோஷமா வேலைக்குப் போறேன்ன்னு... நானும் கம்ப்யூட்டர் சயின்ஸ் தான் படிச்சு உன்னைய மாதிரியே ஜாலியாஆஆஆ இருக்கப் போறேன்!

டேய் வருஷத்துல ஒருநாள் தான்டா இந்த மாதிரி ஜாலியா இருக்கும்ங்கறத நம்ப மாட்டேங்கறானே😩😩😩

என்னடா லதாவுக்கு வந்த பெரும் சோதனை! நம்ம ரகசியத்த தெரிஞ்சுச்சுக்கிட்டானே... ஹ்ம்ம்ம்.

இப்பொழுதெல்லாம் தம்பிக்கு அக்காவும், அக்காவுக்குத் தம்பியும் பரிசுப்பொருட்களை வீட்டுக்கு அனுப்பி, "எடுத்து என் ரூமுக்குள்ள வச்சிடும்மா" என்று இருவரும் சொல்கிறார்கள். எங்களுக்கு என்னடா வாங்கியிருக்க என்று கேட்டால் வழக்கம் போல்

"Lots of Love" தான் பதிலாக வருகிறது😍

ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் பெல்ஸ் ஜிங்கிள் ஆல் தி வே... 

😜😜😜

மாதங்களில் அவள் மார்கழி 9

 

எத்தனை முறை கூவி அழைத்தும் எழும்பாத தோழியை எழுப்புமாறு மாமியிடம் முறையிடுகிறாள் ஆண்டாள். அவள் என்ன ஊமையா? செவிடா?என்ன தான் ஆயிற்று அவளுக்கு? இப்படியும் சோம்பல் அவளை ஆட்கொள்ளுமா என்று வியக்கிறாள்! இப்பாடலில் தோழியின் செல்வச்செழிப்பினை விவரித்தவாறே நாராயணனின் திருநாமங்களைச் சொல்ல அழைக்கிறாள்.

Wednesday, December 22, 2021

புலம்பெயர்ந்தவர்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - மகளின் பார்வையில்

இன்று உலகின் பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த பல மக்கள் அந்தந்த நாடுகளின் கலாச்சாரத்தோடு ஒட்டவும் முடியாமல் ஒதுங்கவும் முடியாமல் தங்களையும் குழப்பி தங்கள் குழந்தைகளையும் குழப்பிக் கொண்டு வளர்க்கிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகளே. அவர்களுக்கு வீட்டின் உள்ளும் வெளியேயும் என இரு வெவ்வேறு உலகங்கள். பெற்றோர்களை விட அதிகளவில் வெளியுலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தங்களை அந்நிய உலகில் இருத்திக் கொள்ள பாடுபடுகிறார்கள். பெற்றோர்களாக நல்லது கெட்டது எடுத்துச் சொல்லும் கடமை நமக்கிருக்கிறது. அதே சமயத்தில் குடியேறிய நாட்டின் கொண்டாட்டங்களில் பங்கு கொண்டு குழந்தைகள் பங்குபெறுவதையும் தடை செய்வதில் நியாயம் இல்லை. அப்படி நினைப்பவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லவே கூடாது. இங்கு பலரின் குழந்தைகள் பெற்றோர்களின் எதிர்ப்புகளால் ஒருவித மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். இது சரியா? தவறா? என்று சிந்திக்க வேண்டும். தவறு என்றால் எப்படி திருத்திக் கொள்வது என்று நம்மை நாமே பரிசீலித்துக் கொள்ள வேண்டும். 

வெளிநாடுகளில் குறிப்பாக அமெரிக்காவில் பலரும் கிறிஸ்துமஸை வெறும் பரிசுப்பொருட்கள்  கொடுத்து மகிழும் நாளாக, நண்பர்கள், குடும்பங்களுடன் இணைந்து உண்டு மகிழும் தினமாக தான் கழிக்கிறார்கள். வயதானவர்களும் வெகு சில அமெரிக்க கிறிஸ்தவ குடும்பங்கள் மட்டுமே தேவாலயத்திற்குச் சென்று வருகிறார்கள். பெரும் நிறுவனங்களும் தங்கள் லாபத்தைப் பெருக்கிக் கொள்ளும் விதமாக இந்த கொண்டாட்டத்தை முன்னிறுத்துகிறது. அதை உலகம் முழுவதும் நிறுவ பார்க்கிறது. இந்தியாவில் கிறிஸ்தவர் அல்லாதோர் கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் பள்ளிகளில் குழந்தைகளை வற்புறுத்துவதாக கேள்விப்படுகிறேன். இது தவறு. கண்டிக்கத்தக்கதும் கூட.

என் மகள் அவளுடைய கல்லூரி செய்தித்தாளில் கட்டுரைகள் எழுதுவது வழக்கம். கல்லூரிக்குள்ளே நடக்கும் நிகழ்ச்சிகள், மாணவர்களின் எண்ணங்கள், கல்லூரி நிர்வாகத்தின் குறைபாடுகள், வெளியுலகில் நடக்கும் நிகழ்ச்சிகள் என்று எழுதியுள்ளாள். அதில் மிகவும் கவனம் பெற்றது இந்த கட்டுரை.  எங்களுக்கு மிகவும் பிடித்ததும் கூட. புரிந்துணர்தலில் தான் வாழ்க்கையின் அடிநாதமும் அனுபவமும். 

அமெரிக்காவில் சேர்ந்தாற் போல விடுமுறை என்பது தேங்க்ஸ்கிவிங், கிறிஸ்துமஸ் விடுமுறையில் மட்டுமே கிடைக்கும் அரிய நாட்கள்.  குழந்தைகளும் வீட்டிற்கு வந்து தங்கிச் செல்வதால் பலரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் இனிமையான நாட்கள். எங்களைப் பொறுத்தவரையில் கிறிஸ்துமஸ் என்பது விடுமுறைக் கொண்டாட்டம் மட்டுமே. இதில் மதம் என்ற கேள்விக்கே இடமில்லை. குழந்தைகளுடன் குடும்பமாக அவர்களுக்குப் பிடித்த பொருட்கள் வாங்கிக் கொடுத்து உணவுகள் உண்டு அளவளாவி மகிழும் விடுமுறை. அவ்வளவே!

My daughter was an assistant editor of her college newspaper, 'The Statesman'.  She had been regularly contributing articles.  This one appeared relevant to me for most of us NRIs. 

Here is her typescript: 

What I see as a point of immense frustration are people who move to a new world and refuse to adapt and assimilate themselves into that new culture. As a first generation immigrant, I can tell you that moving across the world to a place where you don’t know the first thing about anything is an overwhelming experience. It gets better when you learn to speak the language of the people surrounding you. It becomes easier when you adopt basic mannerisms and avoid accepted faux paus of the new society. And it finally becomes fun when you get to participate in the festivities of the new culture – for instance, celebrating Christmas, even if you’re not Christian.  

This rings even more true for families. As a first-generation child of an immigrant family, I am well aware of the difficulties kids face in a brand new environment.  Sure, it is a continual adjustment process, one that might take years. My parents made the effort to have a fancy sit-down dinner for our first Thanksgiving, and it was an experience that I was able to share with the other kids in my class.  It created a common ground between me and my classmates. When my parents made the effort to read up on stories of Santa Claus, tell them to me, and create that belief – it built the bridge to make friends with other like-minded six-year-olds. Opening my presents on my first Christmas is a day that I haven’t forgotten. 

It’s important to point out that I believe that Christmas is a secular holiday. 
Commercialization has had a greater impact than just fattening the pockets of businesses – it is the sole reason that Christmas, and even Easter to an extent, can even be thought of as secular. Right now, these holidays are not events just pertain to Christians, because they’re losing that religious aspect. Christmas is now embodied by a fat man dressed up in a red outfit giving gifts to children. Christmas is about finding that perfect gift to give every single member of your family, and that one person at work whose name you drew in “secret Santa.” So celebrate Christmas, regardless of what cultural background you’re from! Create an egg hunt in your backyard and eat chocolate bunnies on Easter. If you find yourself in Germany – drink during Oktoberfest. If you’re in Japan, follow the customs of Valentine’s day and White day. Doing so provides an insight into the life of a different culture. It’s how you learn and experience a different world first-hand. 

Yet I still interacted with people in high school who weren’t given gifts because of their cultural background, and were not allowed to partake in the social festivities. I met people who have never celebrated a single birthday because it wasn’t something their parents did when they were younger. The concept of birthday parties was a foreign idea, and instead of adopting it and trying it, it was shunned. There were students who weren’t allowed to go to school dances or prom because it was deemed “inappropriate.” 

I am by no means arguing that moving to a different country requires that abandon your roots. My parents have raised me the way they were raised – they brought me to the temple regularly, they instilled in me the traditional values they grew up with, etc. Maintaining that identity is important – it holds you to the world you came from. It betters your current environment by creating diversity within the population. But there are people who won’t partake in the festivities at all, and I think that hurts more than it helps. 

Because once you move to a different country, or even a different city, you make the decision to become a new person, influenced by both worlds. It’s important to remember where you come from, but it’s equally as important to experience and live in the new life that you have created. It is an extraordinary opportunity to get to live in multiple cultures at once– and it gets more fun when you really learn to celebrate all of them.

மாதங்களில் அவள் மார்கழி 8


தன்னுடன் நீராட தோழிகளை அழைத்துச் செல்வதாக அமைந்த இப்பாடல்கள் ஒவ்வொன்றிலும் நாராயணனின் புகழையும் அவனுடைய வீர தீர பராக்கிரமங்களையும் எளிய தமிழில் எடுத்துரைக்கும் பாங்கும் அத்தனை அழகு!




 

மாதங்களில் அவள் மார்கழி 7

 


அதிகாலையில் பறவைகள் எழுப்பும் ஓசையும் தங்கள் இணையுடன் கதைக்கும் கீச்சுக்குரலும் பாடல்களும் அழகே அழகு. திருமணமான பெண்கள் வேலை செய்கையில் அவர்களின் கழுத்தில் இருக்கும் தாலியின் தங்கமும் மணிகளும் சேர்ந்து ஓசையெழுப்பும். இந்தப் பாடலில் காலைக்காட்சியைப் பறவைகள் எழுப்பும் ஒசை வாயிலாகவும், ஆயர்குலப் பெண்கள் மத்தால் தயிரைக் கடைகையில் எழும் ஒலியின் வாயிலாகவும் அழகுத்தமிழில் எடுத்துரைக்கிறாள் ஆண்டாள்.  தடைகளை நீக்கும் கேசவனை அந்த நாராயணனைப் போற்றிப் பாடும் பாடல்கள் கேட்டும் இன்னும் உறங்கும் மர்மமென்ன? கதவைத் திற பெண்ணே என்று தோழியின் வீட்டுக்கதவைத் தட்டுவதாக அமைந்துள்ள இப்பாடலில் கேசவனைக் காண எப்படியெல்லாம் விடியலில் தோழிகளுடன் உரையாடுவதாக கற்பனை செய்துள்ளாள் அதுவும் தேன்மதுர தெள்ளத்தமிழில் ! 

(ஆனைச்சாத்தன் என்பது குருவியினம் என்று தெரிந்து கொண்டேன். )


Tuesday, December 21, 2021

மாதங்களில் அவள் மார்கழி 6

 



கருட வாகனனின் வீர தீர பராக்கிரமங்களைச் சொல்லி ஹரி நாமம் கொண்ட கண்ணபிரானை அழைக்கும் குரலுக்குச் செவிசாய்க்க தூக்கத்திலிருந்து விரைந்து எழுந்திருக்குமாறு தோழியிடம் கூறும் அழகுப்பாடல். 




Monday, December 20, 2021

Little Things

'Little Things' நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியான நீண்ட ஹிந்தி தொடர். நாயகி 'மிதிலா பல்கர்' பல தொடர்களிலும் படங்களிலும் நடித்திருக்கிறார். இன்றைய நவநாகரீக இளைய தலைமுறை 'டேட்டிங்', 'லிவிங் டுகெதர்' கலாச்சாரத்தில் இறங்கியுள்ளது. ஒரே வீட்டில் சில வருடங்களாக சேர்ந்து வாழும் திருமணமாகாத ஜோடி அவரவர் வாழ்வில் கடந்து செல்லும் சிறுசிறு விஷயங்களைக் கொண்டு பயணிக்கிறது இந்த தொடர்.

நினைத்த நேரத்தில், நினைத்த உணவை விரும்பிச் சாப்பிடும் உணவுப்பிரியனாகவும் தன்னுடைய கல்வித்தகுதிக்கேற்ற வேலையைத் தேடும் நாயகன். வேலையில் முன்னேறிச் செல்லத் துடிக்கும் அதே வேளையில் நண்பனின் விருப்பங்களுக்கும் பெற்றோருக்காகவும் துடிக்கும் பெண்ணாக நாயகி. இருவருக்கும் அவரவர் தனிப்பட்ட பிரச்னைகள் உண்டு. சேர்ந்து வாழ்வதில் உள்ள சிக்கல்களும் பேசப்பட்டிருக்கிறது. ஆனால் உயர்மட்டத்தில் வாழும் இளைஞர்களின் வாழ்க்கையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. 'தொணதொண'வென்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள் இருவரும். நடுநடுவே தத்துவம் வேறு.

மகன்/மகளுடைய வருவாயை எதிர்பார்க்காத பெற்றோர்கள் அவர்களுடைய நவீன வாழ்க்கை முறைக்கும் ஒத்துழைக்கிறார்கள். கைகளில் பணம் புரள, நல்ல உடை, தங்களுக்குப் பிடித்த பயணங்கள், உணவு, வார விடுமுறையில் நண்பர்களுடன் கொண்டாட்டங்கள் என்று செலவிடும் ஒரு தலைமுறை உருவாகி வருகிறது. அங்கு பணம் ஒரு பொருட்டே அல்ல. இத்தொடரில் மிக கவனமாக தவறுகளின் எல்லைகளை கணித்திருந்தார்கள். நிஜ வாழ்வில் சாத்தியமா என்று தெரியவில்லை.

ஏதோ மேலை நாடுகளில் கேள்விப்பட்ட 'லிவிங் டுகெதர்' நல்லதா கெட்டதா? இந்திய மண்ணிற்கு இது தேவையா என்பதையெல்லாம் தாண்டி சிந்திக்க நிறைய விஷயங்கள் உள்ளன. அதையெல்லாம் இத்தொடர் முழுவதுமாக கையாளவில்லை.

தன்னுடைய படிப்பிற்குத் தகுந்த வேலையைத் தேடும் கதாநாயகன் மேற்படிப்பிற்காக பெங்களூரு செல்ல, அவர்களுக்கிடையே சிறு இடைவெளி ஏற்பட, ஒருவரை ஒருவர் அதிகம் நேசிப்பதை உணர்கிறார்கள். என்ன தான் ஈருடல் ஓருயிராக சேர்ந்தே இருந்தாலும் உறவுகளில் அவ்வப்போது இடைவெளிகள் அவசியம். அது ஒருவரை ஒருவர் மேலும் புரிந்து கொண்டு நீட்டித்த அன்பை உருவாக்கும். உருவாக்கியதா? எப்படி? என்று போகிறது கதை.

29 பாகங்கள் நிறைந்த குறுந்தொடர். நண்பர்கள் காதலர்களாக உருமாறும் நேரத்தில் ஏற்படும் தடுமாற்றங்களை எப்படி கையாளுகிறார்கள்? நடுநடுவே போரடிக்கும். அதையெல்லாம் ஓட விட்டு நேரம் அதிகமிருந்தால் பார்க்கலாம். 
தங்கள் வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க துடிக்கும் யுவன், யுவதிகளுக்குப் பிடிக்கலாம். 


மாதங்களில் அவள் மார்கழி 5

 


மாயன், தேவகி மைந்தன், தாமோதரனை வழிபட நீராடி மணம் வீசும் மலர்களுடன் செல்வோம் என்பதை விளிக்கும் பாடலில் தேவகியின் வயிற்றுக்குப் பெருமை சேர்த்தவன், சேட்டைகள் பல செய்து யசோதையின் கோபத்திற்கு ஆளானவன் என்பதை எத்தனை அழகாக சொல்லியிருக்கிறார்! 


Sunday, December 19, 2021

மாதங்களில் அவள் மார்கழி 4

 

நீராட நீர்நிலைகளுக்குச் செல்லும் மக்களுக்காக பர்ஜந்யனிடம் கோரிக்கை விடும் அழகுப் பாடலில்  கார்மேகவண்ணன், பத்மநாபன், சாரங்கபாணி என்று ஏகாந்தமாய் கண்ணனை விளிக்கிறாள் ஆண்டாள்! 


Saturday, December 18, 2021

மாதங்களில் அவள் மார்கழி 3



அந்த பரந்தாமனை நினைத்து விரதமிருப்பதால் உலகில் என்னென்ன நன்மைகள் விளையும் என்பதை இப்பாடலின் வாயிலாக அழகாக எடுத்துரைக்கிறாள் ஆண்டாள் தன்னுடைய அழகான மொழிநடையில். ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடுவோம் என்று அழைக்கிறாள் தோழிகளை. 

Friday, December 17, 2021

மாதங்களில் அவள் மார்கழி 2

முதற் பாடலில் கண்ணனை நோன்பிருந்து வணங்க, விடியலில் தோழிகளை எழுப்புகிறாள் ஆண்டாள். இரண்டாவது பாடலில் பரந்தாமனின் திருவடிகளை அடைய எப்படி நோன்பிருக்க வேண்டும் என்று கூறுகிறாள். நெய், பால் சேர்க்காமல் அதிகாலையிலேயே நீராடி, தீய சொற்கள், தீய பேச்சுக்கள் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளாமல் இல்லாதவர்களுக்குத் தர்மம் செய்ய வேண்டும் என்று போதிக்கிறாள். வையத்து வாழ்வீர்காள் என்று ஆரம்பமே என்ன ஒரு அழகு! 'பாவை நோன்பு' என்பது இளம்பெண்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பு. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.




Thursday, December 16, 2021

மாதங்களில் அவள் மார்கழி 1


மார்கழி என்றதும் நினைவிற்கு வருவது ஆண்டாளும், திருப்பாவையும், குளிர்காலைப் பொழுதில் வாசலில்  பெண்கள் இடும் அழகிய கோலங்களும், பரந்தாமனின் கீர்த்தியைப் பஜனைப் பாடிச் செல்லும் பக்தர்களும் தான். திருமால் வீற்றிருக்கும் அனைத்து தலங்களிலும் ஆழ்வார்களின் பாசுரங்கள் எதிரொலிக்கும் இனிய மாதம். வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பகல் பத்து உற்சவம் நடைபெறும் நாட்களில் கிடைக்காத மூலவர் தரிசனம் வைகுண்ட ஏகாதசியன்று முதல் திரும்ப கிடைக்கும். இராப்பத்து உற்சவமும் தொடங்கி பத்து நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது. திவ்யதேசங்களில் பெருமாளுக்கு அலங்காரங்களும் பூஜைகளும் ஏகாந்தமாக நடைபெறும். தூர தேசத்தில் இருந்தாலும் நான் சென்று தரிசித்து வந்த திவ்ய தேசம்,  மதுரையில் அமைந்துள்ள பெருமாள் கோவில்களை நினைத்துக் கொள்கிறேன். 

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வாருக்கு மகளான கோதை  என்றழைக்கப்படும் ஆண்டாள் பாடிய முப்பது பாடல்களே 'திருப்பாவை' என்றழைக்கப்படுகிறது. இந்த ஆண்டாள் பாசுரங்கள் மார்கழி மாதத்தில் தினமும் கோவில்களில் பாடப்படும் முக்கிய பாடல்களாகும்.

திருப்பாவைப் பாடல்கள் ஒவ்வொவன்றின் எளிய தமிழும் ஆண்டாளின் அன்பும் பெருமாளின் பராக்கிரமங்களும் படிப்போரை வசப்படுத்தும். பல வருடங்களாக தமிழில் எழுதாமல் இருந்த பழக்கத்தை மாற்றும் விதமாக மார்கழி மாதம் முழுவதும் தினம் ஒரு திருப்பாவைப் பாடலை என் கைப்பட அடித்தல் திருத்தல் இல்லாமல் எழுதிப் பார்க்க ஆசை. கோணல்மாணலாகத் தான் வருகிறது. மாதம் முடிவதற்குள் பள்ளிக்காலத்தில் எழுதிய எழுத்துக்கள் போல வந்து விடும் என்ற நப்பாசை தான்😊 ஆசை நூறு வகை. அதில் இதுவும் ஒரு வகை😉

திருப்பாவைப்பாடல்கள் மற்றும் அதன் பொருளை இந்த சுட்டியின் மூலம் அறிந்து கொண்டேன். அதையே என் கைப்பட எழுதிப்பார்க்கிறேன்.

திருப்பாவைப் பாடல்களின் அழகே அதன் எளிமையான இனிமையான கொஞ்சிப் பேசும் தமிழ் தான்! வாசித்தாலே இன்பம். தோழியர்களை விடியலில் எழுப்பும் அற்புதமான விவரணை. ஒவ்வொரு பாடலிலும் கண்ணனைப் போற்றும் விதம் என தென்றலாக பாடல்கள் படிப்போரின் மனம் கவர்கிறது. இப்பாடலில் கார்மேனியான், கதிர்மதியம் முகத்தான், நந்தகோபன் குமரன், யசோதையின் இளஞ்சிங்கம் என்று கண்ணனைக் குறிப்பிடும் விதம் அத்தனை அழகு. கவித்துவமான பாடல் என்றால் இதுவன்றோ! 




Wednesday, December 15, 2021

ஸ்வஸ்திகா


தொன்று தொட்டு இந்துக்களின் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிக்கும் குடும்பங்களில் 'ஸ்வஸ்திகா' ஒரு மங்களச் சின்னமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில், பூஜையறைகளில், மங்களப் பொருட்களில் என எங்கும் வியாபித்திருக்கும் இந்தப் புனிதச் சின்னம் செழிப்பு, அதிர்ஷ்டம், வெற்றியைக் குறிக்கும். 'ஸ்வஸ்திக்' எனும் சமஸ்க்ரித சொல்லில் இருந்து உருவான ஸ்வஸ்திகா 'நல்லது இருக்க வேண்டும்' என்ற பொருள் தருகிறது. சமண மதத்தில் அவர்களுடைய ஏழாவது தீர்த்தங்கரரின் அடையாளமாகவும், புத்த மதத்தில் புத்தரின் கால் தடங்களைக் குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது. இதைத்தவிர, ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் பூர்வகுடிகளுக்கும் புனிதச் சின்னமாக இருந்திருக்கிறது.

நேர்மறையான எண்ணங்களைப் பிரதிபலிக்கும் ஸ்வஸ்திகா, யூத எதிர்ப்புச் சின்னமாக இரண்டாம் உலகப்போரின் போது ஹிட்லரால் பயன்படுத்தப்பட்டதால் இழிவுப்படுத்தப்பட்டது. அதன் பின் யூதர்களுக்கு ஆதரவாக மேலை நாடுகள் பலவும் இச்சின்னத்தை முற்றிலும் தடைசெய்து விட்டது. இன்று நாசிச சின்னமாக உருவெடுத்து மக்களின் மனதில் எதிர்மறை எண்ணங்களை வளர்த்தெடுக்கிறது. இதனைத் தடுக்கும் விதமாக அமெரிக்காவில் இருக்கும் இந்து அமைப்பு 'Hindu American Foundation' (HAF), பள்ளிகளில்  இந்து, சமண, பௌத்த, வட அமெரிக்க, ஆப்பிரிக்கா ஆதிகுடிகளின் வாழ்க்கையில், வழிபாடுகளில், மதங்களில் ஸ்வஸ்திகா சின்னம்  எவ்வாறு அடையாளப்படுத்தப்படுகிறது என்பதை பாடங்களின் வாயிலாக அதன் உண்மைப் பொருளை குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

சிறு வயதில் இருந்தே நான் கண்டு வளர்ந்த மங்களச் சின்னம் ஸ்வஸ்திகா. கோவில்கள், வீட்டுப் பூஜையறைகள், கடைகள், வாசலில் போடும் கோலங்கள் என இன்று வரையில் இரண்டற கலந்திருக்கும் புனிதச் சின்னம் எனக்குப் புதிது அல்ல. நான் வாசலில் போடும் கோலங்களில் இச்சின்னத்தைக் கண்ட அமெரிக்க நண்பர்களுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தாலும் அதன் உண்மைப் பொருள் தெரிந்தவுடன் ஏற்றுக் கொண்டு என்னை கவனமாக இருக்க அறிவுறுத்தினார்கள். 

நான் கோலம் போட ஆரம்பித்த நாளிலிருந்து பண்டிகை நாட்களில் இக்கோலத்தைப் போட்டு வருகிறேன். அதனால் இந்த வருட தீபாவளியன்று சிறு கல்லில் தீபக்கோலம் இட்டு நடுவில் ஸ்வஸ்திகா வரைந்து அதை முகநூல் குழு ஒன்றில் (Rock Art group) பதிவாக போட்டிருந்தேன். 27,000 உறுப்பினர்கள் கொண்ட குழுமம் அது. என் பதிவிற்கு வந்த முதல் கமெண்ட்டே 'A swastika?' அதிர்ச்சி ஸ்மைலியுடன்.

இன்னொருவர் "Why is there a nazi sign? Wow."

தவறாக புரிந்து கொள்கிறார்கள் என்று பதிவில் ஸ்வஸ்திகா பற்றின சிறு குறிப்பு ஒன்றையும் சேர்த்து விட்டேன். இந்துக்களின் வாழ்க்கையில் இது ஒரு மங்களச்சின்னம் என்றவுடன் 'Thank you for explaining this. I learned something new today' என்று தன்மையாக பதில் போட்டிருந்தார் அந்தப் பெண்மணி. பலரும் ஸ்வஸ்திகா முத்திரையின் பொருளை அன்று தான் தெரிந்து கொண்டதாகவும் நன்றிகளும் தீபாவளி வாழ்த்துகளும் தெரிவித்திருந்தனர்.

ஒரே ஒரு பெண்மணி மட்டும்," என்னால் இந்தச் சின்னத்தை ஜீரணிக்க முடியவில்லை" என்றதற்கு அக்குழுவில் இருக்கும் பெண்கள் பலரே அவருக்குப் பதில்அளித்திருந்தார்கள்.
 
'I believe that the Nazis appropriated their symbol and this is its origin." என்று ஒருவரும்,
'it is widely used through India and Nepal as it is their ancient symbol. Swastikas also have an ancient history in Europe, appearing on artifacts from pre-Christian European cultures.' என்று வேறொருவரும் பதிவிட,
 
"அது எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். இதனால் பலருக்கும் மனவருத்தம் ஏற்படுமென்றால் நான் பகிரமாட்டேன்" என்று எதிர்வினையாற்றியிருந்தார். அவருக்குச் சளைக்காமல் பதில் அளித்துக் கொண்டே இருந்தார்கள் பலரும். நான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லி விட்டு வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். ஆரோக்கியமான முறையில் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டிருந்ததை ஆச்சரியத்துடன் கவனித்துக் கொண்டிருந்தேன். சில உரையாடல்களை உங்கள் பார்வைக்காக இங்கே எடுத்துப் போட்டிருக்கிறேன்.

அந்தப் பதிவை விரும்பாத பெண் எழுதியவை இது 👇

'I completely understand where you are coming from. It was a historical sanskrit symbol, but now carries a different meaning for millions of people, representing unspeakable horrors. If something I liked had been appropriated by a multi-murderer and caused pain to others to see, then I would no longer use it.

if they really wanted to avoid comparison to Nazi swastica they could have added the flair at the tips and the dots around the center.

it will never be palatable to me. It is now a symbol of hate, oppression, war, and murder.'

nope you don’t. But just be prepared for people to see you as being insensitive to others.

nope. I’m not intolerant. I understand it used to mean something else. If you fail to recognize how hateful a symbol it is to many, many people, that shows how intolerant and cruel you currently are. Attacking those who object to it is trying to normalize the Nazi regime. How very sad.

this isn’t difficult. Nobody is saying don’t use it in the privacy of your own homes or in places of worship. No insensitivity or intolerance here. But if you bring it out in *public* knowing full well the complete history and knowing you will be traumatizing others with it and trying to force your view on others then you are being cruel and insensitive.

That is one reason why there is separation of church and state here in the states. Have the faith you want, but that doesn’t give you the right to make others endure your personal beliefs.

பலரும் அவருக்குப் புரிய வைக்கும் விதத்தில் பதிலளித்திருந்தது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்ததது. அவர்களின் பதில்களில் சிலவற்றை மட்டும்  இங்கே பகிர்ந்திருக்கிறேன்.👇

1. This isn't *completely* the same iconography. The easiest way to tell the difference between a swastika and a hakenkreuz (the Nazi symbol) is that the swastika's arms lay flat and the hakenkreuz is on a diagonal. but the swastika as a religious symbol doesn't necessarily have to have the dots. Some religions use the dots, some don't. But the symbol doesn't require them in order to make it palatable to you.

2. I mean you're entitled to your opinion. But personally as a Japanese-American woman I feel like our cultures and other cultures who have used this symbol for thousands of years deserve to be able to use it for our religious and cultural purposes without the judgement or needing to make it palatable for you. It's not our fault that the Nazis took a symbol of peace and appropriated it. We don't owe it to you to add dots so you don't associate it with Nazis.

3. you do realize that *you're* being intolerant and insensitive, right? You expect us to conform to your expectations of "appropriateness" in order to make you feel more comfortable despite the fact that this has been tradition for thousands of years. it's not our fault the Nazis took this symbol and appropriated it. Don't punish us for the faults of others.

4. I fully recognize that the Nazis took the symbol and appropriated it and have made it to be a symbol of hate. But I also think that Hindus, Buddhists, Jainists, Native Americans, and Norse Pagans deserve to reclaim and redefine the symbol so that it no longer is associated automatically with Nazism. And I'm not attacking you, I'm pointing out that a symbol that we have used for thousands of years was stolen from us and used in ways we don't agree with. We don't deserve to be punished for the actions of those who have wronged us.

5. Nazism, racism, and anti-Semitism has one place in our world- our history books. It is important that we have real, adult conversations about the actions and beliefs of the Nazis so we can continue to keep future generations educated on the subject and hopefully avoid another group just like it gaining power. That being said, that includes explaining how they took a symbol that has had significant religious meaning for thousands of years and altered it, using it for their own wicked purposes. And the importance of being able to recognize the differences between the swastika and a hakenkreuz. Indigenous religions, ancient religions, and Eastern religions should not be punished for their symbol being appropriated.

6. The whole point of this post and my stance is that we are trying to educate people so the symbol can be reclaimed for the people who really own it.

Swarnalatha Kuppa that's such a shame as it will get the shocked emotion every time its seen. Not fair ...

7. interesting. Thanks for the education.  traditional Indian art to me is so beautiful...

8. Learn something every day. Sorry your loved symbol invokes the evils of the Nazi party which invokes a worldwide negative response. Happy Diwali Thank you for educating me on this symbol. I also think Nazis when I see it but now I know there is another, more original meaning to it. Happy Diwali

9. sadly that symbol will always hold negative connotations to so many people, despite any education on other cultures. The deep hurt that the symbol represents cannot simply be undone by learning other cultures use the symbol too.

10. I absolutely understand your point. Absolutely. However, there are MILLIONS of people who are not Nazi's....not even German, who have used this as THEIR religious symbol. We should always take it in the context it's given. If it's presented by a Hindu, a Buddhist etc, for a holiday, then take it at exactly at its face value. If it's used as graffiti by an Arian group, then call it out with all the shame it deserves. But never deny a people their religious holiday. Namaste

11. it isn't just a matter of "liking" the symbol, it had cultural and religious meaning way before it was misappropriated by evil people. It isn't fair to erase the cultures of those who have used it as it should be for generations over what happened with the Nazis. Yes people assume it is evil, educating people is important. It is more harmful to let the misinformation about this symbol stand, than it is to share it and what truly means. Sometimes to heal you must confront and understand the pain.

12. Folks, PLEASE stop calling it a swastika and mentioning Nazis. Yes, we ALL see it, we can't unsee it, but it's disrespectful to Indian culture.

13. What we all need to do is enjoy the symbol as it was intended and not for what it became. We need to give it back! This is much like someone not choosing to celebrate my cultural traditions simply because it is not aligned with their own. If we give it back to where it belonged then we are agreeing it was stolen for malicious purposes. And we as a whole human race need to refuse to allow that theft to continue through generations to come.

14. We need to stop holding today's people accountable for the garbage others have spewed over time. How many of you still celebrate the Cross? There is certainly death associated with it. But there is also life.
We need to celebrate each other. We need to unite. We are not celebrating evil with this symbol. We are rising above its heinous misuse. Let's all celebrate by breathing joy for a switch. The meaning behind this brings only good tidings. இதற்குப் பதில் இல்லை.

That symbol was used thousands of years before Hitler, and will be used thousands of years after. It has a rich and beautiful spiritual history. Happy Diwali! It's a shame that such horror was brought to a symbol that is supposed to bring love and honor. Keep educating the people. Maybe we could all switch this around."
இப்படி பலரும் தங்கள் கற்றுணர்ந்ததையும் இப்பதிவின் மூலம் கற்றுக் கொண்டதையும் பதிவு செய்திருந்தார்கள். 

பல நாட்டு மக்கள் பெரும்பாலும் வெள்ளையினத்தவர் தான் அந்தக் குழுவில் இருக்கிறார்கள். அவர்களில் பலரும் ஸ்வஸ்திகாவின் பொருளை உணர்ந்து கொண்டோம். இத்தனை அர்த்தம் பொதிந்த அழகுச் சின்னத்தை மூர்க்கன் ஒருவன் சிதைத்து விட்டான் என்று வருத்தப்பட்டிருந்தார்கள். அவனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஏற்றுக் கொள்ள முடியாத வலி தான். எனக்கும் அவர்களின் கோபம், வருத்தம், வலியெல்லாம் புரிகிறது. அதையும் பதிவு செய்தேன். ஆனால் ஆண்டாண்டு காலமாக எங்கள் வீடுகளில் புழங்கி வரும் ஒரு நம்பிக்கைச் சின்னம், எனக்கு  மகிழ்வையும் உற்சாகத்தையும் கொண்டாட்டத்தையும் தருவதை நான் விட்டுக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது சரியல்ல என்பதில் உறுதியாக இருந்தேன். அதையே என் பதிலாகவும் சொல்லிக் கொண்டிருந்தேன். 

ஓரிருவர் அந்தப் பதிவை நீக்க வேண்டும் என்றவுடன் அந்தக் குழுவின் அட்மின் பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து
"Next person who calls this Nazi swastika is going to get booted. Grow up people! She’s defined the symbol over and over again!" என்றதற்குப் பிறகு அமைதியானார்கள். சிலர் குழுவை விட்டுக் கூட விலகியிருக்கலாம்.

எத்தனை பழமையான அர்த்தம் பொதிந்த கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைச் சின்னத்தை ஒரு தனிமனிதனால் வெறுப்புச் சின்னமாக மாற்றி தலைமுறை தலைமுறையாக வலியுடனும் வேதனையுடனும் வாழ வைக்கிறது என்பது துயரம் தான்.

இந்தியாவில் பயன்படுத்தும் மங்களச் சின்னத்திற்கும் லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்ற ஹிட்லர் பயன்படுத்திய ஸ்வஸ்திகாவிற்கும் இருக்கும் வேற்றுமைகளை என்னால் முடிந்தவரையில் 150 பேருக்காவது எடுத்துச் சொல்ல முடிந்ததில் எனக்குத் திருப்தியே. பொது வெளியில் இந்தியர்கள் பலரும் பேச தயங்கும் இவ்விஷயத்தில் எனக்காக பரிந்து பேசிய மற்ற நாட்டினருக்கு இருந்த புரிதல் ஆச்சரியப்படுத்தியது. 

கோவிலுக்குச் சென்று வழிபடும் ஒவ்வொரு இந்துவுக்கும் ஸ்வஸ்திகா சின்னத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துரைக்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதை மறக்க கூடாது. ஸ்வஸ்திகா பற்றின எதிர்மறையான பிம்பத்தை குழந்தைகளின் மனதிலிருந்து அகற்ற,  பள்ளிகளில் அதன் தாத்பரியத்தை எடுத்துரைக்கும் வகையில் பாடங்களை மாற்றி அமைக்க 'அமெரிக்க இந்து அமைப்பு' முன்னெடுத்திருக்கும் திட்டங்களுக்கு இந்துக்களாகிய நாம் ஒருங்கிணைந்த ஒத்துழைப்பு தர வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம் என்பதனையும் உணர்வோம்.

Saturday, December 11, 2021

நனவானதா கனவு - 2?

விமானம் பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் குடிக்க தண்ணீர், பழச்சாறுகள், மதுபானங்கள் வர பயணியர்களிடையே சிறிய சலசலப்பு. இன்னும் சிறிது நேரத்தில் இரவு உணவைக் கொடுத்து விடுவார்கள். சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியது தான். இருள் கவிழத் துவங்கும் வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பனிக்கால ஆகாயம் எப்பொழுதும் ஏதோ ஒரு சோகத்தைத் தாங்கி கொண்டிருப்பது போலவே 'உம்ம்ம்ம்'மென்றிருக்கும். ஏதேதோ நினைவுகள் அலைக்கழித்துக் கொண்டிருந்த போதும் மீண்டும் "What is your passion? why didn't you pursue it?" என்ற "ஜார்ஜ்"ன் கேள்விகள் கேட்க... மனம் 'டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்' என பிற்காலத்திற்கே சென்று விட்டது.

இப்படி என் கனவுகளைப் பற்றி முதன்முதலில் கேட்டதும் கவலைப்பட்டதும் ஈஷ்வர் தான். எல்லோருடைய வாழ்க்கையிலும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என இரு அத்தியாயங்கள் இருக்கும். திருமணத்திற்கு முன்னும் எனக்கு இரு வெவ்வேறு பருவங்கள். கவலைகள் இன்றி கனவுகளுடன் துள்ளித் திரிந்ததொரு பருவமும், கவலைகளுடன் துயரமான பருவமுமாய் இருந்த நேரத்தில் கனவுகளைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கே இருந்தது? வாழ்க்கையின் முரணே அதுதானே! நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அப்புறம் என்ன சுவாரசியம் இருந்து விடப்போகிறது?

கல்லூரிப் படிப்பிற்குப் பின் மேற்கொண்டு படிக்க வேண்டும் அது ஐஐடியில் படிக்கும் எம்டெக்கா அல்லது உள்ளூரில் எம்பிஏவா என்ற கனவெல்லாம் எல்லோரையும் போல ஒரு காலகட்டத்தில் இருக்கத்தான் செய்தது. விதி என் வாழ்வில் விளையாடும் வரையில். பிறகு வீட்டில் நிலைமை தலைகீழாக மாறியவுடன் பெங்களூரு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கும் மூட்டை கட்டி பரணில் ஏத்தியாயிற்று. விதி விட்ட வழி என்று நித்தம் ஒரு பிரச்னையை எதிர்கொண்டு அந்நியப்படுத்திய உலகில் வாழ வேண்டிய நிர்பந்தம். தூற்றியவர்கள், இகழ்ந்தவர்கள் முன் வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்பொழுது தான் திருமணமும் அரங்கேறியது. 

அதற்குப் பிறகு தான் இழந்த எனக்கான வாழ்க்கையை வாழும் சந்தர்ப்பங்களும் கிடைக்க ஆரம்பித்து என் கனவுகளைப் பற்றின கேள்விகளும் எழ,

"பேசாம TSMல எம்பிஏ மாலை நேர வகுப்புகள் சேர்ந்துடேன். உனக்குத்தான் படிக்க பிடிக்குமே?" ஈஷ்வர் கேட்க, அதே நேரத்தில் தான் அவர் தொலைதூர கல்வியில் இக்னோ(IGNOU)வில் மானேஜ்மெண்ட் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வருகிற புத்தகங்களைப் படித்துப் பார்த்து சில அசைன்மெண்ட்களில் உதவி இருக்கிறேன். பலதும் "தலை சுத்துதே" பாணியில் இருக்க, எனக்கு எம்பிஏ வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அவர் எடுத்திருந்த பாடங்கள் அப்படி. நான் இன்னும் சிறிது ஆராய்ந்திருந்தால் எனக்கான பாடங்களைத் தேர்வு செய்திருக்கலாம். இன்று இருப்பது போல் அன்று ஐடி தொடர்பில் நிறைய வாய்ப்புகள் இல்லாததும் அவசரப்பட்டு முடிவெடுத்ததில் ஆர்வத்துடன் இருந்த எம்பிஏ படிப்பில் ஆர்வமில்லாமல் போய் விட்டதில் வருத்தம் தான் எனக்கு.

சரி, கனடா/அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க என்ன செய்யலாம், எப்படி என்னைத் தயார் செய்து கொள்வது என்று திட்டமிடும் நேரத்தில் கையில் குழந்தை, முழு நேர வேலை என்று வாழ்க்கை பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. தகவல்கள் அறிந்து கொள்ள இன்றைய இணைய வசதிகள் அவ்வளவாக மதுரையில் அன்று கிடையாது. ஒரு டாக்குமெண்ட்டை ஈமெயிலில் அனுப்ப டிஸ்க்கில் போட்டு கம்ப்யூட்டர் சென்டரில் முதல் நாள் இரவில் கொடுத்தால் அடுத்த நாள் அனுப்பி இருப்பார்கள். அது ஏதோ உளவுத்துறை ரகசிய தகவல் போல "அனுப்பி விட்டோம் சார். தகவல் வந்ததும் சொல்லுகிறோம்." சொந்தமாக ஈமெயில் அக்கௌன்ட் கூட இல்லாத காலம் 😔 மேலைநாடுகளில் மேற்படிப்பு படித்த என் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மதுரை பல்கலையில் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்து அவர்களின் அறிவுரையில் GRE, TOEFL எழுத, படிக்க ஆரம்பித்தேன். அதே நேரத்தில் மதுரைக் கல்லூரியில் பகுதி நேர வேலையாக எம்எஸ்சி வகுப்புகளுக்குப் பாடங்கள் எடுக்க, அந்த அனுபவம் கூட வட அமெரிக்காவில் பயன்படும் என்று சொன்னார்கள்.

TOEFL தேர்வெழுத சென்னைக்குப் போனால் அந்த உலகமே வேறு மாதிரியாக இருந்தது😟 மதுரையில் கிணற்றுத்தவளையாக வளர்ந்து விட்டு ஆங்கிலத்தில் மட்டுமே கதைத்துக் கொண்டு குட்டைப்பாவாடை, தோள்கள் தெரிய சட்டை, அலைபாயும் கூந்தல் என்றிருந்த இளம்பெண்களிடையே நான் மட்டும் சுடிதார், நெற்றியில் பொட்டு, குங்குமம், காதில் ஜிமிக்கி என்று அருக்காணியாக தனித்து இருந்தேன். அட ராமா! இவர்கள் எல்லாம் இப்பொழுதே நியூயார்க்கிற்குப் பயணப்படுபவர்கள் போல இருக்கிறார்களே! இவர்களுடன் நான் போட்டியிட்டு, என்னவோ போடா மாதவா என்று நம்பிக்கை இழக்கையில், இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. வகுப்பில் எல்லோருமே மாணவர்கள் தான் என்று ஈஷ்வர் ஆறுதல் சொன்னாலும் 'சே! எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது? நான் ஆசைப்பட்ட மாதிரி வேலையோ, மேற்படிப்போ அமையாமல் போனது என்று கோபம் கோபமாக வந்தது. வழக்கம் போல படபடவென்று பொரிய ஆரம்பித்தேன்.

"கவலைப்படாத. நான் தான் இருக்கேனே. நீ நினைச்சது நடக்கும்."
அந்த நேரத்தில் ஈஷ்வரின் ஆறுதல் வார்த்தைகள் தான் நம்பிக்கையையும், கனவினைத் துரத்தும் உற்சாகத்தையையும் தந்தது💖 நினைத்த மதிப்பெண்கள் வந்த பிறகு கனடாவில் சில பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி அதில் ஒன்றில் கிடைத்தும் விட்டது. என்ன, உதவித்தொகை அங்கு சேர்ந்த பின் தான் கிடைக்கும். எவ்வளவு என்று எல்லாம் தெரியாமல் குழந்தை, கணவருடன் செல்ல மனம் ஒப்பவில்லை. வேலை செய்து கொண்டே, குழந்தையையும் பார்த்துக் கொண்டு ஒன்னும் தெரியாத ஊரில் வாழ்வது கடினமென தோன்றவே, என் 'கனவு நகர'த்தில் வேலை தேடுவது என்று முடிவாயிற்று.

இதற்குள் ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் பகுதி நேர வேலையாக M.E சிவில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு 'AUTOCAD' வகுப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் முழு நேர வேலையும், மதுரைக் கல்லூரி, கம்ப்யூட்டர் சென்டர் என இரு பகுதி நேர வேலைகளும், அதைத்தவிர செமஸ்டர் தேர்வு பேப்பர் திருத்துதல், குழந்தை, குடும்பம் என்று வாழ்க்கை இறக்கைக் கட்டிப் பறந்து கொண்டிருந்தது. மென்பொருள் நிறுவனங்களில் சேர வேண்டுமென்றால் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஈஷ்வரின் நண்பர் வைத்திருந்த செண்டரில் படிக்க ஏற்பாடுகள் ஆயிற்று. அங்கு தான் 'கிளையன்ட் சர்வர்' ப்ரோக்ராம் எழுதுவது எப்படி, Oracle-SQL என்று அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த மென்பொருள் வாயிலாக கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. முதன்முதலாக கணினி ஒன்றையும் வாங்கி வீட்டிலிருந்து படிக்க பிரமிப்புடன் எப்பொழுதும் பிஸியாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. நடுநடுவே மானே தேனே பொன்மானே என்பது போல் ஊர் சுற்றவும் மறக்கவில்லை😉 ஈஷ்வரும் கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து அவரும் படிக்க ஆரம்பித்து விட்டார்😇

எங்களுடைய எதிர் வீட்டில் பேராசிரியர் அன்பழகன் வசித்து வந்தார். அவர் தியாகராஜர் ஸ்கூல் ஆஃப்மேனேஜ்மென்ட்ல் எம்பிஏ மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புகள் எடுக்க முடியுமா? என்ற கேட்க, ஈஷ்வரும், "நல்லா இருக்கும். எடுக்கலாம்ல?" என்று கேட்க,

"ஆத்தீ. அந்த அறிவாளிகளுக்கு எல்லாம் என்னால எடுக்க முடியாது. ஏற்கெனவே வாழ்க்கை பிஸியா போய்ட்டு இருக்கு. இதுல இது வேறயா? அதற்குப் பதிலாக 'Oracle Financials' படிக்கிறேன்" என்று அதிக பணம் கட்டி அழகப்பன் நகரில் இருந்து வைகை ஆற்றைத்தாண்டி தல்லாகுளம் வரை சென்று வர வேண்டியிருந்தது. 'லோலோ'வென்று வேலைகள், படிப்பு என்று ஒரே அலைச்சல். நிற்க கூட நேரம் இல்லாமல் நாய் பிழைப்பு தான். மகள் முக்கால்வாசி நேரம் அம்மா வீட்டில்.  ஆனால் படிக்கும் ஆசையில் எதுவும் தெரியவில்லை. புதியவைகளை கற்றுக் கொள்ள என்றுமே தயங்கியதில்லை. வேலைகளையும் விரும்பிச் செய்தேன். பாவம் ஈஷ்வர் தான். அவருடைய வேலையுடன் மாலையில் என்னை கொண்டு போய் இறக்கி விட்டு இரவில் மீண்டும் வந்து அழைத்துச் செல்வது என்று ஓட்டமாக இருக்கும்.

பிறகு வேலைகளுக்கு முயற்சிக்க ஆரம்பிக்க, பயமும் தொற்றிக் கொண்டது. மென்பொருள் தொழிலில் என்னை விட ஏழு எட்டு வயது குறைந்த இளைஞர் பட்டாளங்களுடன் மோத வேண்டும். வெள்ளிக்கிழமை தினசரி செய்தித்தாள்களில் கோயம்புத்தூர், சென்னை என்று நிறுவனங்களின் நேர்காணலுக்கான விளம்பரங்கள் வரும். மகளை அம்மாவிடம் விட்டு விட்டு சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டு விடுவோம். அங்கு சென்றால் எல்லாம் பொடிசுகள் 'தாட்பூட்' என்று பீட்டர் விட்டுக் கொண்டிருக்க, நான் பயந்து பயந்து இவர்களுடனா போட்டிப் போடப் போகிறேன் என்று கலங்கி நிற்பேன். ஐந்து இடங்களுக்கு குறைந்தது நானூறு பேர்களாவது அங்கு இருப்பார்கள்😒

"இந்த நேர்காணல்கள் எல்லாம் உனக்கு நல்ல அனுபவங்களைத் தரும். பயப்படாத. தைரியமா பேசு. உனக்கு என்ன தெரியுமோ அதைத் தெளிவா சொல்லு. ஆல் தி பெஸ்ட்." சொல்லி விட்டுப் போயிடுவார் ஈஷ்வர். எனக்குத்தான் உதறலாக இருக்கும். முதல் இரு நிறுவனங்கள் மூலமாக அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு என்னை நான் தயார் செய்து கொள்ள ஏதுவாக இருந்தது. அதற்குப் பிறகு கோயம்புத்தூரில் நடந்த ஒரு நேர்காணலில் வரிசையாக பல தேர்வுகள். ஒவ்வொரு தேர்வின் முடிவிலும் பலரை வெளியே அனுப்பி விடுவார்கள். ஒரே 'திக் திக் திக்' தான். ஏழு மலை ஏழு கடல் தாண்டி என்னை நிரூபித்த பிறகு இறுதியாக அழைத்து அடுத்த நேர்காணல் பெங்களூரில் என்ற பொழுது கனவு நனவாகும் நேரம் வந்து விட்டது என அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

அங்கு வந்திருந்த நபர் ஒருவர் ஈஷ்வருடன் பேசிக் கொண்டிருந்தவர் வந்திருந்த பலரில் என்னுடைய மென்பொருள் பிரிவில் நான் மட்டுமே தேர்வான நிலையில் கனடா சென்று வேலை செய்ய சம்மதமா என்று கேட்க, "நெஜம்மாவா?" ஆச்சரியத்துடன் கேட்ட என்னைப் பார்த்து, அவருடைய நிறுவனத்திற்காக ஆட்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். சம்மதம் என்றால் இப்பொழுதே உங்கள் 'ரெசுமே' கொடுங்கள். என்று அவருடைய தொடர்பு எண்ணைக் கொடுக்க, அதற்குப் பிறகு கனடாவிலிருந்து 'இண்டர்வியூ' தேதியும் வர, முருகா! எப்படி பேசுவாங்களோ , என்னென்ன கேள்விகள் கேட்பார்களோ என்று தூக்கம் போயிற்று.

"உனக்கு உன்னைப் பற்றித் தெரியவில்லை. பயப்படாமல் தைரியமாக பேசு. நான் தான் இருக்கேனே" ஈஷ்வர் சொல்ல,

ம்ம்ம்ம்ம்...

தொலைபேசி ஆடம்பர பொருளாக இருந்த காலம். கணவரின் நண்பர் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டு அன்று இரவு 'இண்டர்வியூ'க்காக காத்திருந்த நொடிகளை இன்று நினைத்தாலும் நடுக்கமாக இருக்கிறது. மாற்றங்களை எதிர்கொள்வதில் இருக்கும் பதட்டமும் பயமும் இன்று வரையில் இருந்தாலும் என்ன தான் நடக்குதுன்னு பார்த்துடலாம் என்கிற மனமும் கூடவே இருக்கிறது😉

"எப்படி உரையாடலை ஆரம்பிப்பது. பதில்களைச் சொல்வது என்று ஈஷ்வர் ஏற்கெனவே வகுப்புகள் எடுத்திருந்தாலும் பயந்து கொண்டே தான் இருந்தேன். பேசியவர் நான் பயந்து கொண்டிருக்கிறேன் என புரிந்து கொண்டு கலகலப்புடன் ஆரம்பித்து அதற்குப் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விதத்தில் பதில்களைச் சொல்லி, அவரும் "யூ ஆர் செலக்டட்" என்றவுடன்... முருகா முருகா. என் கனவும் நனவாகுமா என்று நம்ப முடியாமல் இருந்த கணங்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது. அடுத்த நாளே ஃபெடெக்ஸ்ல் கனடிய நிறுவனத்திடமிருந்து வேலைக்கான உத்தரவு வர, விசா வாங்கும் வேலைகளில் இறங்கி விட்டோம். அடுத்த சில நாட்களில் கனடா செல்ல தமிழக கல்வித்துறையிடம் இருந்து ஒப்புதல் வாங்க வேண்டிய வேலைகளில் மும்முரமாக, என்னைச் சுற்றி இருந்தவர்கள் எத்தனை தடைகளை ஏற்படுத்த முடியுமோ அத்தனையையும் செய்தார்கள். நான் ஒரு படி முன்னேறினால் நான்கு படிகள் பின்னுக்கு இழுத்து விட தயாராக இருந்தார்கள். முகத்திற்கு நேரே சிரித்துப் பேசுபவர்கள் முதுகுக்குப் பின்புறம் "இவள்" எப்படி கனடா போகலாம் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்க, அத்தனை தடைகளையும் தாண்டி வர நான் எதிர்பாராத நண்பர்கள் அந்த நேரத்தில் உதவிக்கு கிடைத்ததும் என் பாக்கியம்.

இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த என் பெற்றோர், கணவர், நண்பர்களுக்கு என்றென்றும் என் நன்றிகளை நினைவு கூர்ந்து கொண்டிருப்பேன். என் கனவுகள் நனவாக இன்று வரையில் யாரென்றே தெரியாத மனிதர்கள் எல்லாம் அந்தந்த நேரத்தில் உதவி செய்ததை மறக்கவே முடியாது.  என்னுடைய கெட்ட நேரங்களில் வரமாக வந்தவர்கள். இன்று நினைத்தாலும் நாங்கள் ஆச்சரியப்படும் விஷயமும் அது தான்.

சென்னையில் 'ஜார்ஜ்' மீண்டும் என் கனவுகளைத் தொடர அறிவுறுத்த, சிரித்துக் கொண்டே விடை பெற்றேன்.

ஆக, என் கனவினைத் துரத்தி நனவாக்கியிருக்கிறோம். பட்டம் பெற்றுத்தான் கனவினை நனவாக்க முடியும் என்றில்லை. இன்று வரையில் வேலைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்றும் என்னை மகிழ்விக்கும் செயல்களைச் செய்வதும், கற்றுக் கொள்வதுமாய் தான் இருக்கிறேன் என்ற திருப்தி வர, மிச்சமிருக்கும் கடமைகளையும் ஒழுங்காக செய்து முடித்து விடும் வரம் வேண்டும் என்ற நினைவுடன் மதுரையில் இறங்கினேன்.

தடைகளைக் கடந்து அதனைத் தீவிரமாக தொடர்ந்து முயற்சிக்கையில் கனவுகள் நனவாகும் என்பதே நான் கற்றுக் கொண்டது. சரி தானே?



Thursday, December 9, 2021

அஞ்சலி

இந்தியாவில் இருக்கும் வரை ராணுவத்துக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்றிருக்கும் சாமானிய தமிழனின் மனப்போக்கில் தான் நானும் இருந்தேன். பயணங்களில் ராணுவீரர்கள் சிலரைப் பார்த்திருக்கிறேன். திரைப்படங்கள் மூலமாக அறிந்து கொண்ட ராணுவத்தில் கூட வட நாட்டு முகங்கள் அதுவும் சீக்கியர்கள் தான் அதிகமிருந்தனர். ஒட்டு மொத்த இந்தியாவில் பஞ்சாப் மாநில மக்கள் தான் அதிகமாக ராணுவத்தில் பணிபுரிவார்களோ? அவர்களுக்குத் தான் நாட்டுப்பற்று அதிகமோ என்று அதிசயித்து இருக்கிறேன். படிக்கும் வயதில் இலங்கையில் நடந்த கலவரங்கள், உண்மை எது பொய் எது என்று தெரியாமல் இந்திய ராணுவத்தின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள். ராணுவத்தினருக்கு ஏகப்பட்ட சலுகைகள் என்று சொல்ல தெரிந்த தமிழனுக்கு அவர்களின் வாழ்க்கை எத்தனை கடினமானது என்று புரிய வைக்க மறந்த தில்லாலங்கடிகள் நமக்கு வாய்த்த தலைவர்கள்.

மூலக்கரை குடியிருப்பில் வாழ்ந்த பொழுது பக்கத்து வீட்டுப் பெண்ணின் அண்ணன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவுடன் ஊருக்குத் திரும்பியிருந்தார். மரியாதையான மனிதர். அவருடைய நண்பர் ஒருவர் பட்டாளத்தில் இறந்து விட்டதாகவும் அவர் மகளுக்கு டியூஷன் எடுக்க முடியுமா என்று கேட்டார். அந்தப் பெண் மேல்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். அதுவும் சென்ட்ரல் போர்ட். அய்யோயோ என்னால முடியாது என்று தவிர்க்கப் பார்த்தேன். ஆனாலும் அவள் அப்பா நாட்டுக்காக உயிரையே துறந்திருக்கிறார். இந்தப்பெண்ணுக்கு இச்சிறு உதவி கூட செய்யவில்லையென்றால் படித்து என்ன பயன் இருக்கிறது என்று ஒத்துக் கொண்டேன். 

முதலில் கணிதத்தில் தடுமாறுவதாக சொன்னவள் மெதுவாக கெமிஸ்ட்ரியும் என்று ஆரம்பித்தாள். அவளுக்காக நான் முன்கூட்டியே பாடங்களைப் படித்துச் சொல்லிக் கொடுக்க, அவளும் தேறி விட்டாள். வகுப்புகள் முடிந்த பிறகு பணத்தைக் கொடுக்கையில் வேண்டாம் என்று எவ்வளவோ மறுத்தும் நன்றி கூறி கொடுத்து விட்டே சென்றாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒருவித மன நெருடல் இருக்கும். இவளைப் போல எத்தனை குழந்தைகள் அப்பா இல்லாமல் இந்த நாட்டில் இருப்பார்களோ? அவளுடைய அம்மாவும் பாவம் தான். டெல்லியில் வளர்ந்ததால் சரளமாக ஹிந்தியில் பேசுவாள். நிச்சயமாக விடுமுறையில் மட்டுமே அவளுடைய அப்பாவுடன் நேரத்தைக் கழித்திருப்பாள். இப்படி பல தியாகங்கள் செய்த குடும்பங்கள் போட்ட பிச்சையில் தான் நம் வீடுகளில் நாம் நிம்மதியாக உறங்குகிறோம் என்ற உண்மை உறைத்திருந்தால் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த நம் நாட்டின் முப்படை தளபதியையும் ராணுவ வீரர்களையும் கிண்டலும் கேலியுமாக பேசுவதற்குத் தகுதியற்றவர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் மனவக்கிரங்களைக் கொட்டுவதைப் பார்த்தால் அருவருப்பாக இருக்கிறது. அற்ப பதர்கள்! இந்த மனவியாதியஸ்தர்களுக்கும் சேர்த்து தான் இறந்தவர்கள் பணிபுரிந்தார்கள். ராணுவத்தினர் இன்றும் பணிபுரிகிறார்கள். என்றும் பணிபுரிவார்கள்.

சமயங்களில் சிங்கப்பூர், தென்கொரியா நாடுகளில் இருப்பதைப் போன்று இந்தியாவிலும் இளைஞர்கள் அனைவரும் இரண்டு வருடத்துக்கு ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தால் தான் வாழவே தகுதியில்லாத அதுவும் மேற்கு வங்காளம், கேரளா, தமிழகத்தில் அதிகம் பீடித்திருக்கும் இந்த மாதிரி ஜந்துகளுக்குப் புத்தி வருமோ?

ஹெலிகாப்டர் விபத்தில் மரணித்த முப்படை தளபதி, அவர் மனைவி மற்றும் ராணுவ வீரர்களின் ஆத்மா சாந்தி பெறட்டும். அவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

ஹரி ஓம்!  

Tuesday, December 7, 2021

நனவானதா கனவு - 1?

ஊரிலிருந்து வந்த செய்தியை ஜீரணிப்பதற்குள் மண்டைக்குள் ஓராயிரம் கேள்விகள். மாலையில் அவசர அவசரமாக பயணத்துக்கான திட்டமிடல் ஆரம்பிக்கும் பொழுது தான் கடவுச்சீட்டு எங்கிருக்கிறது என்று தேடியதில் நல்ல வேளை! வீட்டில் தான் இருந்ததது. இல்லையென்றால் பயணம் ஒரு நாள் தள்ளிப் போயிருக்கும். உடனே அடுத்த கேள்வி. விசா வாங்க வேண்டுமே! இப்ப எப்படி வாங்குறது?

"அதெல்லாம் பிரச்னையில்லை. காலையில் நியூயார்க் நகரத்தில் உள்ள தூதரகத்திற்குச் சென்று வாங்கி விடலாம்." எளிதாக சொல்லி விட்டார் ஈஷ்வர்.

வேற வழி?

உடனே நான்கு நாட்களுக்குத் தேவையானவற்றைச் சமைத்து முடித்து மகளிடம் தம்பிக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று சொல்லி அவளும் நான் இவர்களைப் பார்த்துக் கொள்கிறேன். நீ போயிட்டு வாம்மா என்று பொறுப்பாக பேசியது அத்தனை ஆறுதலாக இருந்தது.

சுப்பிரமணி மட்டும் பாவம் போல் இருந்தான். "அக்கா, அப்பா சொல்றத கேட்டுக்கணும். நேரத்துக்கு ஸ்கூலுக்குப் போயிடணும். ஹோம்ஒர்க் ஒழுங்கா பண்ணிடனும். சரியா?" எஸ் மாம். நீ எப்ப திரும்ப வருவ என்றவனை சமாதானப்படுத்தி விட்டு,

ஈஷ்வரிடமும் குழந்தைகளைக் கவனமாக பார்த்துக் கொள்ளுமாறு சொல்லி விட்டு பயணத்துக்கான பெட்டிகளில் துணிகளை வைத்துக் கொண்டேன்.

"நாளைக்கு காலையில 6 மணிக்கு ரயில் இருக்கு. 8.30க்கு நியூயார்க் சிட்டி போய் சேர்ந்துடலாம். அங்க இருந்து டாக்ஸியில தூதரகத்துக்குப் போய் வேலைகளை முடிச்சிட்டு மதியம் ஏர்போர்ட் போயிடலாம்."

ஹ்ம்ம்ம். வேலைகளை முடித்து விட்டு தூங்கச்செல்லும் பொழுது நேரம் நள்ளிரவைத் தாண்டியிருந்தது.

காலையில் ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பி ரயில் நிலையத்தில் என்னை இறக்கி விட்டு, "பயப்படாம போயிட்டு வா. இங்க நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேன். இந்த நேரத்தில் உங்க குடும்பத்தோட நீ இருக்கணும். ஃபோன் பண்ணிக்கிட்டே இரு." ஆறுதலாக வழியனுப்பி ஈஷ்வர் சென்று விட,

முதன்முதலாக தனியாக ரயில், விமானப் பயணங்கள்! கைப்பை, பெட்டிகளை வைத்துக்கொண்டு ட்ரைன், டாக்ஸி, ஏர்போர்ட் செல்ல மீண்டும் இரு தடங்கள் மாறி ரயில் பயணம், ஏர் ட்ரெயின் என்று நினைக்கவே மலைப்பாக இருந்தது!

"அதெல்லாம் நீ சமாளிச்சிடுவ. பயப்படாத!"

இப்படி சொல்லிச் சொல்லியே ... 😔😔😔

அதிகாலை ரயில் பயணம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதுவும் ஹட்ஸன் ஆறு வழியெங்கும் துணையாக வந்தாலும் ரயிலின் ஆட்டத்தில் தூங்கிவிட்டிருந்தேன். கண்விழித்துப் பார்க்கையில்  நான் ரசிக்கும் நியூயார்க் நகரம் காலை நேரத்து  உற்சாக முகங்களுடன் 'பளிச்'சென்றிருந்தது. பூத்தூவலாய் பனி விழும் அழகும், குளிருக்குப் பயந்து முகம் மட்டும் தெரிய பவனி வரும் 'மெல்லத் திறந்தது கதவு அமலா'க்களும், யாரைப் பற்றியும் கவலைப்படாமல் தலைதெறிக்க ஓடிக்கொண்டிருந்த கூட்டத்தில் நானும் ஐக்கியமானேன். அங்கிருந்து வாடகைக்காரில் தூதரகம் சென்றால் அங்கு ஒரு பஞ்சாயத்து. இத்தாலி அடிமை அரசில் மக்களுக்கு எது தான் சுமுகமாக முடிந்திருக்கிறது ? (அந்த அனுபவத்தை ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன். )

உடனே ஆல்பனி இந்திய சங்கத்தின் தலைவரை அழைத்து பிரச்னைகளைச் சொல்லி அவர் தூதரக அதிகாரியுடன் தொடர்பு கொண்ட சில நிமிடங்களில் விசா எந்தவித பிரச்னையுமில்லாமல் வந்து சேர்ந்தது. நன்றி கூறி விமான நிலையம் செல்ல டாக்ஸி பிடித்து முதலில் ரயில் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த காவலர்களிடம் எப்படி போவது, எங்கு அடுத்த ரயிலைப் பிடிப்பது விவரங்களைத் தெரிந்து கொண்டு அப்பாடா என்றும் உட்காரும் பொழுது தான் தெரிந்தது காலையிலிருந்து எதுவும் சாப்பிடாமல் சுற்றிக் கொண்டிருக்கிறேன் என்று. பசி, களைப்பு, தூக்கமின்மை என்று எல்லாம் சேர்ந்து தலையில் சம்மட்டியால் அடிப்பது போல் வலி.மதிய நேரம் வேறு. விமான நிலையத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன். பெரியதும் சிறியதுமாக இரண்டு பெட்டிகளுடன் எப்படியோ  விமானநிலையம் வந்து சேர்ந்தேன்.

முதன் முதலாக கணவர், குழந்தைகள் இல்லாத தனிமைப்பயணம். என்னவோ போலிருந்தது. இதற்கு முன்பு ஊருக்குச் செல்ல இதே விமானநிலையத்தில் நுழையும் பொழுதே அத்தனை மகிழ்ச்சியாக இருக்கும். ஹ்ம்ம்😓

சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் நேற்று நடந்த நிகழ்வுகளை மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தேன். இழப்பில் தான் தூர தேசத்தின் வலி புரிகிறது. அப்பாவின் மேல் கோபம் தான் வந்தது. அவரவர் விதிப்படி தான் எல்லாம் நடக்கிறது. அதிகம் யோசித்தால் தலைவலி தான் மிஞ்சும் என்று புரிந்தது. எமிரேட்ஸ் டிக்கெட் கவுண்டரில் ஆள் நடமாட்டம் தெரிந்தவுடன் வரிசையில் சேருவதற்குள் எனக்கு முன்பாக இருவர் வந்து நின்று கொண்டார்கள். எனக்குப் பின்னால் இளைஞன் ஒருவன் பார்க்க கல்லூரி மாணவன் போல தெரிந்தான். தமிழன் போல இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டேன். அவனுக்குப் பின்னால் 'மளமள'வென்று பெட்டிகளுடன் கூட்டமும் சேர்ந்து விட்டது. இன்னும் கவுண்டர் திறக்கவில்லை. அதற்குள் 20 பேராவது வரிசையில் நின்றிருப்போம். பசிக்க வேறு ஆரம்பித்து விட்டது. எப்படா டிக்கெட் கைக்கு வரும்? பெட்டிகளை கொடுத்து விட்டு சாப்பிட போவோம் என்றிருந்தது. அதற்குள் ஈஷ்வரிடமிருந்து ஃபோன்.

எனக்குப் பின்னால் நின்றிருந்த இளைஞன் எப்பொழுது கவுண்டரைத் திறப்பார்கள் என்று கேட்க, தெரியவில்லை என்றேன். அவன் வேறு மாநிலத்தில் இருந்து இரண்டு விமானங்கள் மாறி நியூயார்க் வந்து சேர்ந்திருந்தான். கல்லூரிப் படிப்பு முடித்து திருமணத்திற்காக சென்னை செல்வதாக கூறினான்.

தமிழா நீங்க? என கேட்டு தமிழில் உரையாட ஆரம்பித்தோம். தாய்மொழியெனில் எத்தனை எளிதாக பேச முடிகிறது! சொந்த ஊர் தஞ்சாவூர். தன்னுடன் கல்லூரியில் படித்த ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயித்து அவள் இரு வாரங்களுக்கு முன்பே ஊருக்குப் போய்விட்டதாகவும் தனக்கு விடுமுறை இல்லாததால் ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்வதாகவும் கூறினான். திருமணத்தைக் கூட வேறு வழியில்லாமல் தான் இப்படி கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆற அமர குடும்பங்களுடன் உட்கார்ந்து திருமணச் சடங்குகள் செய்ய முடியாத அளவிற்கு வேறு பல நிர்பந்தங்கள் நம்மை ஆட்கொண்டு விட்டிருக்கிறது. ஆனந்த நிகழ்வுகள் கூட ஏதோ ஒரு கடமையாக  நினைக்க வைக்கிறது! ம்ம்ம்ம்... வாழ்த்துக்களைச் சொல்லி விட்டு மீண்டும் கவுண்டரில் ஆள் எப்படா வருவார்கள் என்று பார்த்துக் கொண்டிருந்தோம். 

அவனுக்குப் பின்னால்  'seinfield' ஆங்கிலத்தொடரில் வரும் 'ஜார்ஜ்' கதாபாத்திரம் போலவே 'குறுகுறு'வென சிநேகப்பார்வையுடன் ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். முகத்தில் புன்னகையுடன் அவர் பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டே கையை நீட்ட, பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அவருடன் 'தகடு தகடு' சத்யராஜ் மாதிரி உயர்ந்த ஒடிசலான குதிரை வால் போட்டுக் கொண்டவரும் குள்ளமாய் ஒருவரும் அறிமுகப்படுத்திக் கொண்டார்கள். இந்த 'ஜார்ஜ்' பிறந்தது வளர்ந்தது புரூக்ளின் நியூயார்க்கில் என்றாலும் தற்போது 'புர்ட்டோ ரிக்கோ'வில் வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினார். புர்ட்டோ ரிக்கோ கரிபியனில் இருக்கும் அமெரிக்கப் பிரதேசம். அழகான இயற்கை எழில் வாய்ந்த தீவு. சிறிது நேரம் அந்த தீவினைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். இன்னும் கவுண்டரில் ஆட்கள் வருவதும் போவதுமாய் தான் இருந்தார்கள்.

'ஜார்ஜ்' தன் நிறுவனத்திற்காக ட்ரான்ஸ்ஃபார்மர்கள் ஆர்டர் கொடுக்க சென்னையில் உள்ள தொழிற்சாலைக்குச் செல்வதாகவும் அப்படியே இந்தியாவில் சில இடங்களுக்குச் சுற்றுலா செல்லவிருப்பதாகவும் கூறினார். நானும் தஞ்சாவூர் பையனும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றதும் அவருக்கு ஒரே மகிழ்ச்சி! தமிழ்நாட்டைப் பற்றி நிறைய கேள்விகள் கேட்டார். தெரிந்ததைக் கூறினோம். இந்தியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களைக் கேட்ட பொழுது தென்னிந்தியக் கோவில்கள், கன்னியாகுமரி, கர்நாடகா, கேரளா, என்று நான் சொல்லும் பொழுது, அடடா! இதெல்லாம் தெரியாமல் நாங்கள் தாஜ்மஹால், ஜெய்பூர் போகிறோம் என்றார்.

மேலை நாட்டினருக்கு இந்தியா என்றாலே ராஜஸ்தானும் தாஜ் மகாலும் தான் நினைவிற்கு வருகிறது. அது தான் இந்தியா என்று நினைக்கிறார்கள். ஒரே ஒரு முறை வந்து சுற்றிப் பார்த்துச் செல்லும் நாடு அல்ல இந்தியா. அதன் ஒவ்வொரு மாநிலங்களும் பல சிறப்புகளுடன் இருக்கிறது என்று எனக்குத் தெரிந்ததைக் கூறினேன்.அடுத்த முறை கண்டிப்பாக இந்த இடங்களுக்குச் சென்று வருவேன் என்றார்.

அடிக்கடி நான் கூறிய இடங்கள், பெயர்களை எழுதி வைத்துக் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது! இந்தியாவில் தற்காப்பாக இருப்பது, என்ன மாதிரி உணவுகளை உண்பது, எப்படி பேசுவது என்று ஓரளவு கூகுள் செய்து விட்டு வந்திருந்தார். நாங்கள் பேசும் போது உன்னிப்பாக கவனித்து நிதானமாக பேசினார். அவருடன் வந்திருந்த இருவரும் அமைதியாக இருந்தார்கள். 'ஜார்ஜ்' மட்டும் பேசிக்கொண்டே இருந்தார். பேச்சு அப்படியே ஏன், எதற்காக அமெரிக்கா வந்தீர்கள் என்பதில் வந்து நின்றது. நான் மேற்படிப்பு படிக்க ஆசைப்பட்டு கனடா வருவதாக தான் இருந்தது. மாணவியாக வந்து குழந்தை, கணவருடன் வாழ்வது அத்தனை எளிதல்ல. இருவரையும் விட்டு விட்டு படிக்க வரும் அளவுக்கு எனக்குத் துணிச்சலும் இருக்கவில்லை. அதற்குள் வேலை ஒன்று கனடாவில் கிடைத்தது. அதே வருடத்தில் அமெரிக்க நிறுவனத்தில் வேலை கிடைத்தவுடன் இங்கே குடிபெயர்ந்தோம். இங்கேயே குழந்தைகள், குடும்பம் என்று இப்போது குடியுரிமையையும் பெற்று செட்டிலாகி விட்டோம் என்றேன்.

"அப்ப உங்க படிப்பு கனவு என்னாச்சு ?" ஏகப்பட்ட கவலையுடன் கேட்டார் 'ஜார்ஜ்'.

நான் வேலை பார்த்த நிறுவனத்தில் மேற்படிப்பு படித்தவர்களும், PhD பட்டம் வாங்கியவர்களும் நான் செய்யும் அதே வேலையைத் தான் செய்கிறார்கள். இதற்கு எதற்குப் படிக்க வேண்டும். வீண் செலவு என்று விட்டு விட்டேன் என்றவுடன்,

"No, No, You should pursue your dreams." என்றார். இந்த அமெரிக்கர்களே இப்படித்தான். தங்களுடைய கனவு, லட்சியம் என்று அதற்காக குடும்பத்தையும் துறக்க அஞ்ச மாட்டார்கள். நமக்கு அப்படியா?

என்னடா லதாவுக்கு வந்த புது சோதனை? நான் எப்பவோ அந்த படிப்பு சம்பந்தப்பட்ட கனவுகளை மூட்டை போட்டு பரணில் ஏற்றி வைத்து விட்டேன். இவர் என்னடான்னா,

"latha, you should follow your passion. You seem to be a smart person."
ன்னு நம்மள வேற ஸ்மார்ட் பெர்சன்னு சொல்லி குழப்பி விட்டாரேன்னு யோசித்துக் கொண்டிருந்தேன்😇 அமெரிக்கர்கள் இப்படித்தான் அறிமுகப்படுத்திய சில நிமிடங்களில் பெயரைச் சொல்லி அழைக்க ஆரம்பித்து விடுவார்கள். நமக்கு தான் அது மாதிரி பேச தெரியவில்லை.

என் முன்னால் நின்றிருந்த பெண் கவுண்டரை நோக்கி நகர, "நாம் ஒரு படம் எடுத்துக் கொள்ளலாமா? என்னுடைய blogல் உங்க அனுமதியோட இந்த படத்தைப் போடலாமா?" என்று அவருடைய blog முகவரியைக் கூட தந்தார். நானும் என்னுடைய பயணச்சீட்டை வாங்கிக் கொண்டு அவர்களிடம் விடைபெற்று சாப்பிட சென்று விட்டேன். ஆனால் மனதில் அவர் கேட்ட கேள்வி தான் துரத்திக் கொண்டே இருந்ததது.

"latha, you should follow your passion."

நெஜம்மாவே நான் குறிக்கோள் இல்லாத வெஜிடபிள் வாழ்க்கை தான் வாழ்கிறேனோ? ஏதோ பிழைப்பு ஓடுகிறது என்று இருக்கிறதா என்னுடைய வாழ்க்கை? ஐயோ இப்படி என்னை குழப்பி விட்டுப் போய் விட்டாரே இந்த மனுஷன் என்று யோசித்துக் கொண்டே சாப்பிட்டதில் கவலைகளை மறந்திருந்தேன். சாப்பாடும் காலியாகி விட்டிருந்தது. செக்யூரிட்டி இத்யாதிகளைக் கடந்து விமானத்திற்காக காத்திருக்கையிலும் அதே கேள்வி தொடர்ந்தது. விமானத்தில் மீண்டும் ஜார்ஜ் & கோ வைப் பார்த்தவுடன் "சென்னையில் சந்திப்போம். சுகமான பயணத்திற்கு வாழ்த்துகள்" சொல்லிக் கொண்டு அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டோம். நானும் விமானத்தில் ஏறி விட்ட தகவலை ஈஷ்வருக்குச் சொல்லி பத்திரமாக குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள் என்று பேசி முடித்தேன்.

என் அருகில் அமர்ந்திருந்தவர் ஃபோனில் மனைவியுடன் தமிழில் பேசிக்கொண்டிருந்தார். அட! தமிழா! அவரும் சம்பிரதாயத்துக்கு சிரிக்க, நானும் சிரித்து வைத்தேன். நல்ல வேளை ஜன்னலோர இருக்கை கேட்டது வசதியாகி விட்டது.

"ஆர் யூ கோயிங் டு சென்னை?"

"ஆமாங்க. நீங்க?"

"ஓ! நீங்க தமிழ் பேசுவீங்களா? "

"ஓ! நல்லா பேசுவேனே."

"இல்ல, ஃபோன்ல வேற மொழியில பேசுன மாதிரி இருந்தது அதான் கேட்டேன்."

"ஆமாம். அது என் தாய்மொழி. உங்க ஊரு?"

"ராஜபாளையம். அம்மா தவறிட்டாங்க. அதான் அவசரமா கிளம்பினேன்."

"ஓ! சாரி!"

"வெறிச்"சென்றிருந்தது பனிக்கால வானம். விமானம் அழகிய நியூயார்க் நகரைச் சுற்றியபடி வானுயர்ந்த கட்டட குவியல்களைக் கடந்து நீலநிற அட்லாண்டிக் மேல் பறக்க துவங்கியது. மனம் மீண்டும் மதுரைக்குச் செல்ல, கண்களில் என்னையுமறியாமல் கண்ணீர்!

(தொடரும்)





Wednesday, December 1, 2021

நியூ இங்கிலாந்து - நியூஹாம்ப்ஷயர் 1


வெர்மாண்ட்டிலிருந்து நியூஹாம்ப்ஷயர் வரும் வழியெங்கும் இலையுதிர்கால மலையழகு கொட்டிக்கிடந்தது. எத்தனைப் படங்கள் 'க்ளிக்'கினாலும் ஆசை தீரவில்லை. இன்னும் ஊருக்குள் சென்று பார்க்க வேண்டிய இடங்களில் வேறு படங்களை எடுக்க வேண்டுமே என்று காமெராவிற்கு சிறிது ஒய்வு கொடுத்தோம்.
"அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்..." பாடல் மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.

வெர்மாண்ட் எல்லையிலிருந்து ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு நியூஹாம்ப்ஷயரில் கடை ஒன்றை கண்டடைந்தோம். அப்பாடா என்றிருந்தது! அங்கிருந்த காசாளரிடம் எத்தனை அருமையாக இருக்கிறது உங்கள் ஊர் என்றவுடன், ஆமாம். இங்குள்ள பல மக்களுக்குத் தான் அருமை தெரியவில்லை. "வீ டேக் இட் ஃபார் கி3ராண்ட்டட்" என்றார். எத்தனை சத்தியமான வாக்கு! ஒன்றின் அருமையத் தெரிந்து கொள்ள அதை இழந்தால்தான் புரியுமோ நமக்கெல்லாம்? காபி சாப்பிட்ட பிறகே ஈஷ்வருக்கு உயிர் வந்தது போல இருந்தது. இருக்காதா பின்ன? வீட்டிலிருந்து கிளம்பி ஐந்து மணிநேரமாகி விட்டிருந்தது. இயற்கையோடு பயணித்து வந்ததில் களைப்பே தெரியவில்லை. கடைக்கு எதிரே சிறிய தேவாலயம் வண்ண மரங்கள் சூழ அழகாக இருந்தது. வெர்மாண்ட்டிலும் இதுபோன்ற தேவாலயங்களே அதிகமாக இருக்கிறது. இதுவும் நியூஇங்கிலாந்து மாநிலங்களுக்கே உரியது போல என்று நினைத்துக் கொண்டோம். இங்கிருந்து மவுண்ட் வாஷிங்டன் எவ்வளவு தொலைவு என்று கேட்டதற்கு, இன்னும் அரை மணிநேரத்தில் வந்து விடும் என்று சொன்ன பெண்ணிற்கு நன்றி சொல்லிவிட்டு ஆவலோடு நியூஹாம்ப்ஷயரின் புகழ் பெற்ற ரயில் பயணத்தை நோக்கி கிளம்பினோம்.

சரியாக அரைமணி நேரத்தில் பெரிய விளம்பர பலகையில் "Cog train" படமும் நுழைவாயிலில் கா1க்3 ரயில் மாடலும் வைத்திருந்தார்கள். கா1க்3 ரயில்னா என்ன? என்று ஈஷ்வரிடம் கேட்டால் ஆச்சரியத்துடன் "கா1க்3 ட்ரெயின் தெரியாதா? ஊட்டியில இருக்கே. பார்த்ததில்லையா?"

"எனக்கென்ன தெரியும்? ஆத்த கண்டேன். அழகரைக் கண்டேன். ஊட்டிக்குப் போயிருக்கேன் ஆனா அந்த ட்ரைன்ல போனதில்ல."

"கா1க்3 ட்ரெயின்ல ஒரு பல் சக்கரம் இருக்கும். இது உயரமான மலைப்பகுதிகளில் செல்லும் ரயில்களில் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவும். நீ நல்லா கவனிச்சுப் பாரு."

ஆஹா! இதுவரை நான் அப்படியொன்றையும் பார்த்ததில்லையே. ஆவலாகி விட்டது எனக்கு.

வண்டியை நிறுத்தி விட்டு வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவைச் சாப்பிட்டு முடித்தோம். மணி 11.30. 12 மணிக்குத்தான் எங்களுடைய ரயில் பயணம். அங்கிருந்த அலுவலகத்தில் முன்பதிவு செய்திருந்த விவரங்களைக் காண்பித்து பயணச்சீட்டுகளை வாங்கிக்கொண்டுமலையடிவாரத்திற்குச் சென்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அங்கே 5 வட இந்தியர்கள் கணவன்-மனைவி சகிதம் வந்திருந்தார்கள். சத்தமாக பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் அவர்களில் ஒருவர் ஐபேடில் படங்களைப் பிடித்துக் கொண்டும் என குஷியாக இருந்தனர். அவர்களில் ஒருவர் வந்து அறிமுகம் செய்து கொண்டார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நியூஜெர்சியிலிருந்து வந்திருந்தார்கள். நாங்கள் மட்டுமே அங்கிருந்த இந்திய-அமெரிக்கர்கள். மற்றவர்கள் அனைவரும் வெள்ளை அமெரிக்கர்கள் மட்டுமே. அதுவும் வயதானவர்கள் அதிகமிருந்தனர்!

மலை உச்சியிலிருந்து மெ...து...வாக இரண்டு பயணப்பெட்டிகள் இறங்கிக் கொண்டிருந்தது. சமவெளிகளில் ரயில் பயணம் செய்திருக்கிறேன். மலையில் ரயிலில் பயணம் செய்யப் போவது இதுதான் முதல் தடவை என்பதால் ஆர்வமாகவும் உற்சாகமாகவும் கொஞ்சம் படபடப்பாகவும் இருந்தது😊 மலை அடிவாரத்தை விட உச்சியில் குளிர் அதிகமிருக்கும் என்பதால் பனிக்கால உடைகளுடன் தயாராக சென்றிருந்தோம்.

வடகிழக்கில் உள்ள மிக உயரமான மலையான மவுண்ட் வாஷிங்டன் நியூஹாம்ப்ஷயரில் மிகவும் பிரபலமான அடையாளங்களில் ஒன்றாகும். இந்த மலையில் Cog trainல் பயணிக்கும் அனுபவத்தைப் பெறவே பயணிகள் பலரும் இம்மாநிலத்திற்கு வருவதுண்டு. இங்கு கால்நடையாகவும், தத்தம் வண்டிகளிலும், ரயிலிலும் மலையேறலாம். நாங்கள் சென்றது இலையுதிர்காலம் வேறு. அக்டோபர் கடைசி வாரம் என்பதால் நல்ல கூட்டம். நவம்பரில் குளிர் வந்து விடும். மரங்களும் இலைகளைத் துறந்து விடும்.

கீழிறங்கிய இரண்டு ரயில் பெட்டிகளும் நின்றவுடன் பயணிகள் இறங்க, நாங்கள் பயணச்சீட்டைக் காண்பித்து எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்து கொண்டோம். ஈஷ்வருக்கு முதல் வரிசையில் ஜன்னல் பக்கம். எனக்குப் பின் வரிசையில் ஜன்னல் பக்கம் கூட கிடைக்கவில்லை. ஏமாற்றமாக இருந்தது😖 ரயில் புறப்பட துவங்கியவுடன், ஈஷ்வர் அருகில் இருந்த காலி சீட்டில் உட்காரலாம் என்று எங்கள் குழுவின் வழிகாட்டி கூறியவுடன் மகிழ்ச்சியுடன் இடம் மாறினேன். மலைப்பாதைத்தெளிவாக தெரிந்தது. ஒரு பெட்டியில் 70 பேர் பயணிக்கிறார்கள். மொத்தம் நான்கு பெட்டிகள் நாள் முழுவதும் ஏறுவதும் இறங்குவதுமாய் இருக்கிறது.

பயணிகளை வரவேற்றுத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு கா1க்3 ரயில் வரலாற்றைப்பற்றி சிறிது பேசிக்கொண்டு வந்தார் எங்கள் பெட்டியின் brake man, (பெயர் மறந்து விட்டது😐)பயணத்தின் போது நடுநடுவே பாதையின் வழித்தடங்களை மாற்றும் பொறுப்பில் இருப்பவர். உலகிலேயே முதன்முதலில் மலையேறும் ரயில் இங்கு தான் துவங்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தில் இருக்கும் பிளட்டஸ் ரயிலுக்குப் பிறகு உலகின் இரண்டாவது செங்குத்தான ரயில் என்ற பெருமையும் இந்த கா1க்3 ரயிலுக்கு இருக்கிறது. ஸ்விட்சர்லாந்திலிருந்து பொறியாளர்கள் தொழில்நுட்பத்தை அறிந்து கொண்டு அங்கு செயல்படுத்தியதாக கூறியதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது! அங்கு நீளமான ரயிலில் நீண்ட பாதையில் பனிசூழ்ந்த மலையில் பயணம் செய்ததும் உடனே நினைவுக்கு வந்தது.

750,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட 'வொயிட் மௌண்டைன்' நியூ ஹாம்ப்ஷயரின் இயற்கை எழில் கொஞ்சும் வனப்பரப்பு. அதில் அமைந்திருக்கும் வாஷிங்டன் மலையில் 6288 அடி மலைஉச்சி வரை ரயில் பாதை போடப்பட்டிருக்கிறது. மொத்தம் 45 நிமிட பயணம். மலையில் ஏறத் துவங்கும் பொழுதே பயணிகள் அனைவரும் தத்தம் இருக்கையை விட்டு எழுந்து நடமாடக் கூடாது. மற்ற பயணிகளுக்கு எவ்விதத்திலும் இடைஞ்சலாக இருக்க கூடாது என்று சொன்ன சில நிமிடங்களில் ஐபாடில் படம் எடுத்துக் கொண்டிருந்த வட இந்தியர் ஒருவர் முன்வரிசையில் வந்து அமர்ந்து கொண்டது மட்டுமிலலாமல் வீடியோ எடுக்கிறேன் பேர்வழி என்று பின்னால் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு இடைஞ்சலாகவும் நின்று கொண்டார். brake man கடிந்து கொண்ட பிறகு அமர்ந்தார். சிறிது நேரத்தில் ஒரு சீனப் பெண் 'கிடுகிடு'வென்று ரயில் பெட்டியின் முன்புறத்தில் காலைத் தொங்கப்போட்டுக் கொண்டு அமர்ந்தே விட்டார். வந்ததே கோபம் brake manக்கு. அவர் சொல்லியதை எப்படி காதில் வாங்கி கொள்ளாமல் இப்படியெல்லாம் இருக்கிறார்களோ என்று மற்ற எல்லோருக்கும் கோபம். வெள்ளையர்கள் அனைவரும் அவர்கள் இருக்கையில் இருக்க, இந்த இருவரின் செயல் முகஞ்சுளிக்க வைத்தது😏😖

ஜன்னல் வழியே விரிந்த உலகில் கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் மலைகள் மலைகள் மட்டுமே. அதுவும் இலையுதிர்கால அழகுடன் வண்ணங்களைச் சுமந்து நின்றதில் நாங்கள் மலைத்துப் போயிருந்தோம்! "பனிக்காலத்தில் பனிப்புயலால் பல உயிர்கள் பலியாயிருக்கின்றன. மலையுச்சியில் பனிமூட்டம், மலை, குளிர் என வானிலை நிலவரம் மாறிக்கொண்டே இருக்கும். அருகில் உயர்ந்த மலைகள் இல்லாததால் பலமான காற்றும் வீசி வெட்பநிலை உறைபனிக்குக் கீழ் சென்று விடும் அபாயமும் இங்கு சகஜம். மலையேறுபவர்கள் அதற்கான உடைகளை அணிந்து கொண்டு வர வேண்டும்" என்று பிரேக் மேன் சொல்வதைக் கேட்கவே அச்சமாக இருந்தது. ஆனால் ஹாயாக ஒரு இளம்பெண் தன்னந்தனியாக குட்டை ஷார்ட்ஸ் அணிந்து இறங்கிக்கொண்டிருந்தார்! எப்படித்தான் இப்படி தனியாக இவர்களால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் மலை ஏறி இறங்க முடிகிறதோ! ஆச்சரியமாக இருந்தது.

மாறும் வானிலை, பனிமூட்டம் இம்மலைப்பகுதியில் சாதாரணமான ஒன்று. நாங்கள் சென்றிருந்த நாளில் அப்படி ஏதும் இல்லாமல் காட்சிகள் தெளிவாக தெரிந்தது எங்கள் பாக்கியம் என்று நினைத்துக் கொண்டோம். மலையில் மெதுவாக ரயில் ஏறுவதால் மலைக்காட்சிகளை வேடிக்கைப் பார்க்கவும் படங்கள் எடுக்கவும் வசதியாக இருந்தது. கரடுமுரடான மலை. சில அடிகள் வரை தான் மரங்கள் தென்பட்டது. உயரே செல்ல செல்ல பாறைகளில் ஒட்டிக்கொண்டிருந்த பாசிகளைத்தவிர மரங்கள் எதுவும் இல்லை. ரயில் பாதையைத் தாங்கும் ஒவ்வொரு மரக்கட்டைகளுக்கும் இரும்பினாலான தூண்களுக்கும் வரிசைக்கிரமமாக எண்கள் உள்ளதால் பராமரிக்க எளிதாகிறது என்று பிரேக் மேன் கூறினார். நடு மலையில் 25 டிகிரி கோணத்தில் ரயில் பெட்டி நின்று விட்டது. எதிரே மெ...து...வாக இரண்டு பெட்டிகள் ஊர்ந்து இறங்கிக் கொண்டிருந்தது. அவர்களுக்கு வழி விட, எங்கள் பிரேக் மேன் ஸ்விட்ச் போட்டுத் தண்டவாளங்களைத் தடம் மாற்ற, உள்ளிருந்தவர்கள் கையசைத்தும் விசிலடித்தும் அந்தப் பெட்டிகள் இறங்கிச்செல்வதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.

கடல் மட்டத்திலிருந்து 6,288 அடி உயர மலையுச்சியை நெருங்கும் வேளையில் பனிமூட்டம் சூழ, நிழலாக காட்சிகள் தெரிந்தது. 'க்ரீச்ச்ச்ச்' ஒலியுடன் சக்கரங்கள் தண்டவாளத்தை உரசி நிற்கையில் பலமான காற்றுடன் குளிரும் சேர்ந்து கொள்ள, நல்ல வேளை! பனிக்கால உடைகள் சகிதம் வந்திறங்கினோம் என்று இருந்தது. பயணிகள் அனைவரும் இறங்கிக்கொள்ள, 45 மணிநேரத்தில் திரும்பிவிட வேண்டும் என்று சொல்லி விட்டு,காத்துக் கொண்டிருந்தவர்களை ஏற்றிக் கொண்டு இறங்க ரயில் ஆயத்தமாக, பிரேக் மேனுக்கு டிப்ஸ் கொடுத்து விட்டு பல வருடங்கள் காத்திருந்த மலையுச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். 

(தொடரும்)


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...