Saturday, December 11, 2021

நனவானதா கனவு - 2?

விமானம் பறக்கத் துவங்கிய ஒரு மணி நேரத்தில் குடிக்க தண்ணீர், பழச்சாறுகள், மதுபானங்கள் வர பயணியர்களிடையே சிறிய சலசலப்பு. இன்னும் சிறிது நேரத்தில் இரவு உணவைக் கொடுத்து விடுவார்கள். சாப்பிட்டு விட்டு தூங்க வேண்டியது தான். இருள் கவிழத் துவங்கும் வானை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். பனிக்கால ஆகாயம் எப்பொழுதும் ஏதோ ஒரு சோகத்தைத் தாங்கி கொண்டிருப்பது போலவே 'உம்ம்ம்ம்'மென்றிருக்கும். ஏதேதோ நினைவுகள் அலைக்கழித்துக் கொண்டிருந்த போதும் மீண்டும் "What is your passion? why didn't you pursue it?" என்ற "ஜார்ஜ்"ன் கேள்விகள் கேட்க... மனம் 'டொய்ங் டொய்ங் டொய்ங் டொய்ங்' என பிற்காலத்திற்கே சென்று விட்டது.

இப்படி என் கனவுகளைப் பற்றி முதன்முதலில் கேட்டதும் கவலைப்பட்டதும் ஈஷ்வர் தான். எல்லோருடைய வாழ்க்கையிலும் திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என இரு அத்தியாயங்கள் இருக்கும். திருமணத்திற்கு முன்னும் எனக்கு இரு வெவ்வேறு பருவங்கள். கவலைகள் இன்றி கனவுகளுடன் துள்ளித் திரிந்ததொரு பருவமும், கவலைகளுடன் துயரமான பருவமுமாய் இருந்த நேரத்தில் கனவுகளைப் பற்றி சிந்திக்க நேரம் எங்கே இருந்தது? வாழ்க்கையின் முரணே அதுதானே! நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் அப்புறம் என்ன சுவாரசியம் இருந்து விடப்போகிறது?

கல்லூரிப் படிப்பிற்குப் பின் மேற்கொண்டு படிக்க வேண்டும் அது ஐஐடியில் படிக்கும் எம்டெக்கா அல்லது உள்ளூரில் எம்பிஏவா என்ற கனவெல்லாம் எல்லோரையும் போல ஒரு காலகட்டத்தில் இருக்கத்தான் செய்தது. விதி என் வாழ்வில் விளையாடும் வரையில். பிறகு வீட்டில் நிலைமை தலைகீழாக மாறியவுடன் பெங்களூரு சென்று வேலை பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கும் மூட்டை கட்டி பரணில் ஏத்தியாயிற்று. விதி விட்ட வழி என்று நித்தம் ஒரு பிரச்னையை எதிர்கொண்டு அந்நியப்படுத்திய உலகில் வாழ வேண்டிய நிர்பந்தம். தூற்றியவர்கள், இகழ்ந்தவர்கள் முன் வாழ்ந்து சாதித்துக் காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்பொழுது தான் திருமணமும் அரங்கேறியது. 

அதற்குப் பிறகு தான் இழந்த எனக்கான வாழ்க்கையை வாழும் சந்தர்ப்பங்களும் கிடைக்க ஆரம்பித்து என் கனவுகளைப் பற்றின கேள்விகளும் எழ,

"பேசாம TSMல எம்பிஏ மாலை நேர வகுப்புகள் சேர்ந்துடேன். உனக்குத்தான் படிக்க பிடிக்குமே?" ஈஷ்வர் கேட்க, அதே நேரத்தில் தான் அவர் தொலைதூர கல்வியில் இக்னோ(IGNOU)வில் மானேஜ்மெண்ட் கோர்ஸ் படித்துக் கொண்டிருந்தார். அவருக்கு வருகிற புத்தகங்களைப் படித்துப் பார்த்து சில அசைன்மெண்ட்களில் உதவி இருக்கிறேன். பலதும் "தலை சுத்துதே" பாணியில் இருக்க, எனக்கு எம்பிஏ வேண்டாம் என்று முடிவு செய்து விட்டேன். அவர் எடுத்திருந்த பாடங்கள் அப்படி. நான் இன்னும் சிறிது ஆராய்ந்திருந்தால் எனக்கான பாடங்களைத் தேர்வு செய்திருக்கலாம். இன்று இருப்பது போல் அன்று ஐடி தொடர்பில் நிறைய வாய்ப்புகள் இல்லாததும் அவசரப்பட்டு முடிவெடுத்ததில் ஆர்வத்துடன் இருந்த எம்பிஏ படிப்பில் ஆர்வமில்லாமல் போய் விட்டதில் வருத்தம் தான் எனக்கு.

சரி, கனடா/அமெரிக்கா சென்று மேற்படிப்பு படிக்க என்ன செய்யலாம், எப்படி என்னைத் தயார் செய்து கொள்வது என்று திட்டமிடும் நேரத்தில் கையில் குழந்தை, முழு நேர வேலை என்று வாழ்க்கை பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. தகவல்கள் அறிந்து கொள்ள இன்றைய இணைய வசதிகள் அவ்வளவாக மதுரையில் அன்று கிடையாது. ஒரு டாக்குமெண்ட்டை ஈமெயிலில் அனுப்ப டிஸ்க்கில் போட்டு கம்ப்யூட்டர் சென்டரில் முதல் நாள் இரவில் கொடுத்தால் அடுத்த நாள் அனுப்பி இருப்பார்கள். அது ஏதோ உளவுத்துறை ரகசிய தகவல் போல "அனுப்பி விட்டோம் சார். தகவல் வந்ததும் சொல்லுகிறோம்." சொந்தமாக ஈமெயில் அக்கௌன்ட் கூட இல்லாத காலம் 😔 மேலைநாடுகளில் மேற்படிப்பு படித்த என் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மதுரை பல்கலையில் பேராசிரியர் ஒருவரைச் சந்தித்து அவர்களின் அறிவுரையில் GRE, TOEFL எழுத, படிக்க ஆரம்பித்தேன். அதே நேரத்தில் மதுரைக் கல்லூரியில் பகுதி நேர வேலையாக எம்எஸ்சி வகுப்புகளுக்குப் பாடங்கள் எடுக்க, அந்த அனுபவம் கூட வட அமெரிக்காவில் பயன்படும் என்று சொன்னார்கள்.

TOEFL தேர்வெழுத சென்னைக்குப் போனால் அந்த உலகமே வேறு மாதிரியாக இருந்தது😟 மதுரையில் கிணற்றுத்தவளையாக வளர்ந்து விட்டு ஆங்கிலத்தில் மட்டுமே கதைத்துக் கொண்டு குட்டைப்பாவாடை, தோள்கள் தெரிய சட்டை, அலைபாயும் கூந்தல் என்றிருந்த இளம்பெண்களிடையே நான் மட்டும் சுடிதார், நெற்றியில் பொட்டு, குங்குமம், காதில் ஜிமிக்கி என்று அருக்காணியாக தனித்து இருந்தேன். அட ராமா! இவர்கள் எல்லாம் இப்பொழுதே நியூயார்க்கிற்குப் பயணப்படுபவர்கள் போல இருக்கிறார்களே! இவர்களுடன் நான் போட்டியிட்டு, என்னவோ போடா மாதவா என்று நம்பிக்கை இழக்கையில், இதெல்லாம் ஒரு பிரச்னையே இல்லை. வகுப்பில் எல்லோருமே மாணவர்கள் தான் என்று ஈஷ்வர் ஆறுதல் சொன்னாலும் 'சே! எனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது? நான் ஆசைப்பட்ட மாதிரி வேலையோ, மேற்படிப்போ அமையாமல் போனது என்று கோபம் கோபமாக வந்தது. வழக்கம் போல படபடவென்று பொரிய ஆரம்பித்தேன்.

"கவலைப்படாத. நான் தான் இருக்கேனே. நீ நினைச்சது நடக்கும்."
அந்த நேரத்தில் ஈஷ்வரின் ஆறுதல் வார்த்தைகள் தான் நம்பிக்கையையும், கனவினைத் துரத்தும் உற்சாகத்தையையும் தந்தது💖 நினைத்த மதிப்பெண்கள் வந்த பிறகு கனடாவில் சில பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பி அதில் ஒன்றில் கிடைத்தும் விட்டது. என்ன, உதவித்தொகை அங்கு சேர்ந்த பின் தான் கிடைக்கும். எவ்வளவு என்று எல்லாம் தெரியாமல் குழந்தை, கணவருடன் செல்ல மனம் ஒப்பவில்லை. வேலை செய்து கொண்டே, குழந்தையையும் பார்த்துக் கொண்டு ஒன்னும் தெரியாத ஊரில் வாழ்வது கடினமென தோன்றவே, என் 'கனவு நகர'த்தில் வேலை தேடுவது என்று முடிவாயிற்று.

இதற்குள் ஒரு கம்ப்யூட்டர் செண்டரில் பகுதி நேர வேலையாக M.E சிவில் என்ஜினீயரிங் மாணவர்களுக்கு 'AUTOCAD' வகுப்புகளும் எடுத்துக் கொண்டிருந்தேன். ஒரே நேரத்தில் முழு நேர வேலையும், மதுரைக் கல்லூரி, கம்ப்யூட்டர் சென்டர் என இரு பகுதி நேர வேலைகளும், அதைத்தவிர செமஸ்டர் தேர்வு பேப்பர் திருத்துதல், குழந்தை, குடும்பம் என்று வாழ்க்கை இறக்கைக் கட்டிப் பறந்து கொண்டிருந்தது. மென்பொருள் நிறுவனங்களில் சேர வேண்டுமென்றால் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஈஷ்வரின் நண்பர் வைத்திருந்த செண்டரில் படிக்க ஏற்பாடுகள் ஆயிற்று. அங்கு தான் 'கிளையன்ட் சர்வர்' ப்ரோக்ராம் எழுதுவது எப்படி, Oracle-SQL என்று அவர்கள் தயாரித்துக் கொண்டிருந்த மென்பொருள் வாயிலாக கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. முதன்முதலாக கணினி ஒன்றையும் வாங்கி வீட்டிலிருந்து படிக்க பிரமிப்புடன் எப்பொழுதும் பிஸியாக வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. நடுநடுவே மானே தேனே பொன்மானே என்பது போல் ஊர் சுற்றவும் மறக்கவில்லை😉 ஈஷ்வரும் கம்ப்யூட்டர் கோர்ஸ் ஒன்றில் சேர்ந்து அவரும் படிக்க ஆரம்பித்து விட்டார்😇

எங்களுடைய எதிர் வீட்டில் பேராசிரியர் அன்பழகன் வசித்து வந்தார். அவர் தியாகராஜர் ஸ்கூல் ஆஃப்மேனேஜ்மென்ட்ல் எம்பிஏ மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் சயின்ஸ் வகுப்புகள் எடுக்க முடியுமா? என்ற கேட்க, ஈஷ்வரும், "நல்லா இருக்கும். எடுக்கலாம்ல?" என்று கேட்க,

"ஆத்தீ. அந்த அறிவாளிகளுக்கு எல்லாம் என்னால எடுக்க முடியாது. ஏற்கெனவே வாழ்க்கை பிஸியா போய்ட்டு இருக்கு. இதுல இது வேறயா? அதற்குப் பதிலாக 'Oracle Financials' படிக்கிறேன்" என்று அதிக பணம் கட்டி அழகப்பன் நகரில் இருந்து வைகை ஆற்றைத்தாண்டி தல்லாகுளம் வரை சென்று வர வேண்டியிருந்தது. 'லோலோ'வென்று வேலைகள், படிப்பு என்று ஒரே அலைச்சல். நிற்க கூட நேரம் இல்லாமல் நாய் பிழைப்பு தான். மகள் முக்கால்வாசி நேரம் அம்மா வீட்டில்.  ஆனால் படிக்கும் ஆசையில் எதுவும் தெரியவில்லை. புதியவைகளை கற்றுக் கொள்ள என்றுமே தயங்கியதில்லை. வேலைகளையும் விரும்பிச் செய்தேன். பாவம் ஈஷ்வர் தான். அவருடைய வேலையுடன் மாலையில் என்னை கொண்டு போய் இறக்கி விட்டு இரவில் மீண்டும் வந்து அழைத்துச் செல்வது என்று ஓட்டமாக இருக்கும்.

பிறகு வேலைகளுக்கு முயற்சிக்க ஆரம்பிக்க, பயமும் தொற்றிக் கொண்டது. மென்பொருள் தொழிலில் என்னை விட ஏழு எட்டு வயது குறைந்த இளைஞர் பட்டாளங்களுடன் மோத வேண்டும். வெள்ளிக்கிழமை தினசரி செய்தித்தாள்களில் கோயம்புத்தூர், சென்னை என்று நிறுவனங்களின் நேர்காணலுக்கான விளம்பரங்கள் வரும். மகளை அம்மாவிடம் விட்டு விட்டு சனிக்கிழமை அதிகாலை புறப்பட்டு விடுவோம். அங்கு சென்றால் எல்லாம் பொடிசுகள் 'தாட்பூட்' என்று பீட்டர் விட்டுக் கொண்டிருக்க, நான் பயந்து பயந்து இவர்களுடனா போட்டிப் போடப் போகிறேன் என்று கலங்கி நிற்பேன். ஐந்து இடங்களுக்கு குறைந்தது நானூறு பேர்களாவது அங்கு இருப்பார்கள்😒

"இந்த நேர்காணல்கள் எல்லாம் உனக்கு நல்ல அனுபவங்களைத் தரும். பயப்படாத. தைரியமா பேசு. உனக்கு என்ன தெரியுமோ அதைத் தெளிவா சொல்லு. ஆல் தி பெஸ்ட்." சொல்லி விட்டுப் போயிடுவார் ஈஷ்வர். எனக்குத்தான் உதறலாக இருக்கும். முதல் இரு நிறுவனங்கள் மூலமாக அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொண்டு அதற்கேற்றவாறு என்னை நான் தயார் செய்து கொள்ள ஏதுவாக இருந்தது. அதற்குப் பிறகு கோயம்புத்தூரில் நடந்த ஒரு நேர்காணலில் வரிசையாக பல தேர்வுகள். ஒவ்வொரு தேர்வின் முடிவிலும் பலரை வெளியே அனுப்பி விடுவார்கள். ஒரே 'திக் திக் திக்' தான். ஏழு மலை ஏழு கடல் தாண்டி என்னை நிரூபித்த பிறகு இறுதியாக அழைத்து அடுத்த நேர்காணல் பெங்களூரில் என்ற பொழுது கனவு நனவாகும் நேரம் வந்து விட்டது என அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.

அங்கு வந்திருந்த நபர் ஒருவர் ஈஷ்வருடன் பேசிக் கொண்டிருந்தவர் வந்திருந்த பலரில் என்னுடைய மென்பொருள் பிரிவில் நான் மட்டுமே தேர்வான நிலையில் கனடா சென்று வேலை செய்ய சம்மதமா என்று கேட்க, "நெஜம்மாவா?" ஆச்சரியத்துடன் கேட்ட என்னைப் பார்த்து, அவருடைய நிறுவனத்திற்காக ஆட்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். சம்மதம் என்றால் இப்பொழுதே உங்கள் 'ரெசுமே' கொடுங்கள். என்று அவருடைய தொடர்பு எண்ணைக் கொடுக்க, அதற்குப் பிறகு கனடாவிலிருந்து 'இண்டர்வியூ' தேதியும் வர, முருகா! எப்படி பேசுவாங்களோ , என்னென்ன கேள்விகள் கேட்பார்களோ என்று தூக்கம் போயிற்று.

"உனக்கு உன்னைப் பற்றித் தெரியவில்லை. பயப்படாமல் தைரியமாக பேசு. நான் தான் இருக்கேனே" ஈஷ்வர் சொல்ல,

ம்ம்ம்ம்ம்...

தொலைபேசி ஆடம்பர பொருளாக இருந்த காலம். கணவரின் நண்பர் வீட்டுத் தொலைபேசி எண்ணைக் கொடுத்து விட்டு அன்று இரவு 'இண்டர்வியூ'க்காக காத்திருந்த நொடிகளை இன்று நினைத்தாலும் நடுக்கமாக இருக்கிறது. மாற்றங்களை எதிர்கொள்வதில் இருக்கும் பதட்டமும் பயமும் இன்று வரையில் இருந்தாலும் என்ன தான் நடக்குதுன்னு பார்த்துடலாம் என்கிற மனமும் கூடவே இருக்கிறது😉

"எப்படி உரையாடலை ஆரம்பிப்பது. பதில்களைச் சொல்வது என்று ஈஷ்வர் ஏற்கெனவே வகுப்புகள் எடுத்திருந்தாலும் பயந்து கொண்டே தான் இருந்தேன். பேசியவர் நான் பயந்து கொண்டிருக்கிறேன் என புரிந்து கொண்டு கலகலப்புடன் ஆரம்பித்து அதற்குப் பிறகு கேட்ட கேள்விகளுக்கு எனக்குத் தெரிந்த விதத்தில் பதில்களைச் சொல்லி, அவரும் "யூ ஆர் செலக்டட்" என்றவுடன்... முருகா முருகா. என் கனவும் நனவாகுமா என்று நம்ப முடியாமல் இருந்த கணங்கள் எல்லாம் நினைவிற்கு வந்தது. அடுத்த நாளே ஃபெடெக்ஸ்ல் கனடிய நிறுவனத்திடமிருந்து வேலைக்கான உத்தரவு வர, விசா வாங்கும் வேலைகளில் இறங்கி விட்டோம். அடுத்த சில நாட்களில் கனடா செல்ல தமிழக கல்வித்துறையிடம் இருந்து ஒப்புதல் வாங்க வேண்டிய வேலைகளில் மும்முரமாக, என்னைச் சுற்றி இருந்தவர்கள் எத்தனை தடைகளை ஏற்படுத்த முடியுமோ அத்தனையையும் செய்தார்கள். நான் ஒரு படி முன்னேறினால் நான்கு படிகள் பின்னுக்கு இழுத்து விட தயாராக இருந்தார்கள். முகத்திற்கு நேரே சிரித்துப் பேசுபவர்கள் முதுகுக்குப் பின்புறம் "இவள்" எப்படி கனடா போகலாம் என்பதே அவர்களின் எண்ணமாக இருக்க, அத்தனை தடைகளையும் தாண்டி வர நான் எதிர்பாராத நண்பர்கள் அந்த நேரத்தில் உதவிக்கு கிடைத்ததும் என் பாக்கியம்.

இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த என் பெற்றோர், கணவர், நண்பர்களுக்கு என்றென்றும் என் நன்றிகளை நினைவு கூர்ந்து கொண்டிருப்பேன். என் கனவுகள் நனவாக இன்று வரையில் யாரென்றே தெரியாத மனிதர்கள் எல்லாம் அந்தந்த நேரத்தில் உதவி செய்ததை மறக்கவே முடியாது.  என்னுடைய கெட்ட நேரங்களில் வரமாக வந்தவர்கள். இன்று நினைத்தாலும் நாங்கள் ஆச்சரியப்படும் விஷயமும் அது தான்.

சென்னையில் 'ஜார்ஜ்' மீண்டும் என் கனவுகளைத் தொடர அறிவுறுத்த, சிரித்துக் கொண்டே விடை பெற்றேன்.

ஆக, என் கனவினைத் துரத்தி நனவாக்கியிருக்கிறோம். பட்டம் பெற்றுத்தான் கனவினை நனவாக்க முடியும் என்றில்லை. இன்று வரையில் வேலைக்குத் தேவையான தகுதிகளை வளர்த்துக் கொண்டு தான் இருக்கிறேன். என்றும் என்னை மகிழ்விக்கும் செயல்களைச் செய்வதும், கற்றுக் கொள்வதுமாய் தான் இருக்கிறேன் என்ற திருப்தி வர, மிச்சமிருக்கும் கடமைகளையும் ஒழுங்காக செய்து முடித்து விடும் வரம் வேண்டும் என்ற நினைவுடன் மதுரையில் இறங்கினேன்.

தடைகளைக் கடந்து அதனைத் தீவிரமாக தொடர்ந்து முயற்சிக்கையில் கனவுகள் நனவாகும் என்பதே நான் கற்றுக் கொண்டது. சரி தானே?



No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...