Friday, February 28, 2020

1945

உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் யூதர்களைக் கொன்று குவித்த ஹாலிவுட் படங்கள் பெரும்பாலானவை மனதை உலுக்குபவையாகவே இருக்கும். ஒரு இனத்தின் பாதிப்பை இரு பாத்திரப் படைப்புகள் மூலமாக அவர்களுக்கான வசனங்கள் ஏதுமின்றி வன்முறைக் காட்சிகளின்றி மிக அழகாக எடுத்திருந்ததே இப்படைப்பின் வெற்றி. யூதர்களை ஊரை விட்டு விரட்டி அவர்களின் சொத்துக்களையும் உடைமைகளையும் மனச்சாட்சியின்றி கொள்ளை அடித்ததன் பின்னணியில் எடுக்கப்பட்ட படம். ஹங்கேரியில் சிறு கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளூடே விரிந்து செல்லும் காட்சிகளில் நல்ல மனம் படைத்தவர்களும் அதனால் தத்தளிப்பவர்களும் உண்டு.

அமேசான் ப்ரைம்ல் காண கிடைக்கிறது.

தேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்


பிப்.24, 2020 சொல்வனம் இதழ் 217ல் வெளிவந்துள்ள கட்டுரை.

தேர்தல் சடுகுடு…இது அமெரிக்க ஸ்டைல்

இதை நீங்கள் வாசித்துக் கொண்டிருக்கையில், அதிபர் ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் பற்றியும், இதனால் இந்தியாவுக்கு என்ன சாதகம், அமெரிக்காவுக்கு என்ன பாதகம் போன்ற விவாதங்கள்தான் பரபரப்பான பேசுபொருளாக இருந்தாலும், இந்தக் கட்டுரையில் நாம் அதைப் பற்றியெல்லாம் பேசப் போவதில்லை.


எதிர்வரும் அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்ட நிலையில், அவரைக் களத்தில் எதிர்கொள்ளப் போகிற ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் தேர்தலின் கள நிலவரங்களையும், அதன் எதிர்பார்ப்புகளைப் பற்றித்தான் பார்க்கப் போகிறோம். துவக்கத்தில் இருபத்தி ஐந்து பேர் தங்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தி இருந்தாலும், தற்போது ஏழு பேர்தான் களத்தில் இருக்கின்றனர்.

மொத்தம் இருக்கும் ஐம்பது மாநிலங்களில் நடைபெறும் காக்கஸ் கூட்டங்கள், ப்ரைமரி தேர்தல்களில் இவர்களுக்கு கிடைக்கும் ஆதரவையொட்டித்தான் அதிபர் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். தற்போது இந்த மாகாணத் தேர்தல்கள் ஒவ்வொரு மாநிலமாய் நடைபெற்று வருகின்றன. ஒரு மாநிலத்தில் முன்னிலை பெறும் வேட்பாளர் அந்த மாநிலத்தின் மொத்த மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளின் வாக்குகளைப் பெறுவார் என்பதால் தேர்தல் களம் சூடேறிக் கிடக்கிறது.

அயோவா மாகாணத்தில் துவங்கிய ஜனநாயக் கட்சியின் அதிபர் வேட்பாளர் காக்கஸின் முடிவுகள் களத்தில் யாரெல்லாம் முக்கியமானவர்கள் என்பதை அடையாளங் காட்டுவதாக இருந்தது. அதன் பிறகு நடக்கும் ஒவ்வொரு மாகாணத்தின் ப்ரைமரி தேர்தல்களில் கிடைக்கும் ஆதரவு, எதிர்ப்புகளைப் பொறுத்து ஒவ்வொருவராகக் களத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். இதுதான் காலங்காலமாய் இருந்துவரும் நடைமுறை.

தற்போது ஏழு பேர் வாய்ப்புள்ள அதிபர் வேட்பாளர்களாகக் களத்தில் இருப்பவர்கள் முறையே; முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன். இண்டியானா மாகாணத்தின் சவுத்பெண்ட் நகரின் முன்னாள் மேயர் பீட் புடஜஜ். வெர்மான்ட் மாநில செனட்டர் பெர்னி சாண்டர்ஸ். மாசாசுசெட்ஸ் செனட்டரான எலிஸபெத் வாரன். மின்னசோட்டா செனட்டரான ஏமி க்ளோபுக்கர். தொழிலதிபர்களான ஆண்ட்ரூ யாங், டாம் ஸடையர்.

அயோவா மாகாண காக்கஸில் எந்தவொரு வேட்பாளருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்து வந்த நியூ ஹாம்ப்ஷயர் காக்கஸ் முடிவுகள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் எதிர்பாராத வகையில் அயோவாவில், மிக இள வயது வேட்பாளரான சவுத்பெண்டின் முன்னாள் மேயல் பீட் புடஜஜ் முதலிடம் பெற்றிருக்கிறார். இந்த தேர்தலின் மிகப் பெரிய அதிர்ச்சி, பழுத்த அரசியல்வாதியும் முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் நான்காம் இடத்திற்குத் தள்ளப்பட்டதுதான்.

இதையடுத்து நியூ ஹாம்ஷயர் ப்ரைமரி மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் இணையத்தில் முன் பதிவு செய்த ஜனநாயக கட்சியினர் வாக்குச் சாவடிக்குச் சென்று தங்களின் தெரிவான வேட்பாளருக்கு வாக்களிப்பார்கள். நியூ ஹாம்ப்ஷயர் ப்ரைமரி க்ளோஸ்ட் வகையில் நடைபெறும். மாற்றுக் கட்சியினரும், ஜனநாயக கட்சியின் மாநிலக் கிளையின் ஒப்புதலோடு இந்த தேர்தலில் கலந்து கொள்ள முடியும் என்பதால் இந்தத் தேர்தல் முடிவுகளை நாடே ஆவலுடன் எதிர் நோக்குகிறது.

நியூ ஹாம்ப்ஷயர் மாநிலத்தில் 24 மக்கள் பிரதிநிதிகளும், 9 கட்சிப் பிரதிநிதிகளும் இருக்கின்றனர். இந்த தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர்கள் மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவை முழுமையாகப் பெறுவார்கள். அதிபர் தேர்தலுக்கு ஒன்பது மாதங்கள் இருக்கும் நிலையில் இந்த ஆரம்ப கட்டப் ப்ரைமரியில் நம்பிக்கையான வேட்பாளர்கள் அடையாளம் காட்டப்படுவார்கள் என்பதாலும், அடுத்தடுத்து நடைபெறும் ப்ரைமரிகளில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்துதான் இறுதி நிலவரம் தெரியவரும். எனவே, இந்த ஆரம்ப நிலையில் பின்னடைந்தாலும் எதிர்வரும் தேர்தல்களில் தங்களை பலப்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் எல்லா வேட்பாளர்களுக்குமே இருப்பதால் இன்னார்தான் என இப்போதே எவரையும் குறிப்பிட்டுச் சொல்வது அபத்தமாயிருக்கும்.

மாநில ப்ரைமரி தேர்தல்களுக்கு முன்னால், வேட்பாளர்கள் தங்களுக்குள் நிகழ்த்திக் கொள்ளும் வாத விவாதங்கள் வாக்காளர்களால் மிக உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன. இதுவரை நடந்த விவாதங்களில் அனைவருமே தங்களுக்கான வாய்ப்புகளைச் சரியான அளவில் பயன்படுத்திக் கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர். போட்டியில் இருக்கும் மிக இளையவரான 38 வயது பீட் புடஜஜீயை அரசியல் அனுபவம் இல்லாதவர் என ஜோ பைடன் குறை சொன்னபோதும், பீட் புடஜஜ், ஜோ பைடனுக்கு ஆதரவான தன் கருத்தின் மூலமாக அனைவரின் கவனத்தையும் கவர்ந்த்தை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

பெர்னியின் சோசலிஷ கோட்பாடுகளினால், முதலாளித்துவ அமெரிக்காவுக்குக் கூடுதல் செலவுகளும், மக்களுக்குள் பிரிவினையும் உருவாக்கும் என்கிற ஜோ பைடன் வைத்த குற்றச்சாட்டினை , ஏமி க்ளோபுச்சர் தனக்குச் சாதகமாகத் திருப்பிக் கொண்ட்து இன்னொரு சுவாரசியம். எலிஸபெத் வாரன் பெண்களுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசிவந்தாலும் அவர் நான்காவது இடத்திலேயே தேங்கியிருக்கிறார். தற்போது ஏமி க்ளோபுச்சருக்கு மூன்றாம் இடம்.

ஆண்ட்ரு யாங்கின் “அனைவருக்கும் சம்மான வருமான” கொள்கை பெரிய அளவில் கவனிப்போ, வரவேற்போ பெறவில்லை. நடைமுறைக்கு சாத்தியமற்றது என அரசியல் விமர்சகர்களும் ஒதுக்கித் தள்ளிவிட்டனர். தற்போதைய சூழலில் அவர் போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டுள்ளார்.

மிக எளிதாக முதல் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் துனை அதிபரான ஜோ பைடன் தற்போது மிகப் பரிதாபகரமாக ஐந்தாம் இடத்தில் இருக்கிறார். தற்போது நடைபெற்ற காக்கஸ், ப்ரைமரி தேர்தல்கள் வெள்ளையின மக்கள் அதிகமாய் வசிக்கும் பகுதியென்பதால், வரும் நாட்களில் கருப்பின மக்கள் நிறைந்திருக்கும் மாநிலங்களில் தன்னால் எளிதில் ஆதரவை பெறமுடியுமென நம்புவதாக தன் ஆதரவாளர்களிடம் பேசி வருகிறார். லத்தீன் அமெரிக்க மக்களும் ஜோ பைடனை ஆதரிக்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஜோ பைடனைப் போலவே டாம் ஸ்டேயரும் கருப்பின அமெரிக்கர்களை நம்பியிருக்கிறார்.

தற்போதைய நிலையில் முதல் இரண்டு இடங்களில் இருந்துவரும் பீட் புடஜஜும், பெர்னி சாண்டர்ஸும் தங்கள் நிலையை தக்க வைக்கக் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். பெர்னி இளைஞர்கள் மற்றும் இடதுசாரி வாக்காளர்களைத் தன் வசம் இழுக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார்.

இந்த எழுவரைத் தவிர ஒருவர் தற்போது அனைவரின் கவனத்திலும் வந்திருக்கிறார். அவர் தொழில் அதிபரான மைக்கேல் ப்ளூம்பெர்க். ஏறத்தாழ ட்ரம்பின் அத்தனை கல்யாண குணங்களையும் கொண்டவரான அவர், தான் மட்டுமே ட்ரம்ப்பிற்குச் சரியான போட்டியாக இருக்கமுடியும் என நம்புகிறார். அதற்காகக் கோடிக் கோடியாகப் பணத்தைக் கொட்டி விளம்பரங்களைச் செய்து வருகிறார். இவர் நியூயார்க் நகரின் முன்னாள் மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ப்ளூம்பெர்க்கின் அரசியல் வரவை மற்ற வேட்பாளர்கள் வரவேற்கவில்லை. அவரின் குணாதிசயங்களை மக்களுக்கு உணர்த்த விவாத மேடையை அனைவரும் பயன்படுத்திக்கொண்டார்கள். ஜோ பைடன் பெர்னி சாண்டர்ஸை எதிர்த்தாலும் கருத்துக் கணிப்பில் முதலிடத்தில் சாண்டர்ஸும் அடுத்த நிலையில் ப்ளூம்பெர்க்கும் இருப்பது கலவரமே! நெவாடா மாநில விவாதத்தில் அனைவரிடமும் இருந்த பதட்டம் சனிக்கிழமை தேர்தல் முடிவு வரை தொடரும்.

இப்படியாக அமெரிக்கத் தேர்தல் களம், ஜனநாயகக் கட்சியினரால் அமர்களமாகி இருக்கிறது. நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாய் புதிய புதிய பரபரப்புகள், செய்திகள், வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் அந்தரங்கங்கள், அவர்கள் பெற்ற நன்கொடைகள், முரண்பாடுகள், உட்பூசல்கள் அது பற்றிய விவாதங்கள் என ஊடகங்களுக்குக் கொண்டாட்டம்தான்.

கடந்த நான்கு ஆண்டுகளில் ஒரு நல்ல அதிபரின் தேவையை ட்ரம்ப் தொடர்ந்து உணர்த்தி வருகிறார். அமெரிக்காவையும், சர்வதேசங்களையும் முன்னெடுத்துச் செல்லக் கூடிய நிதானமான, முதிர்ச்சியான ஒரு தலைவர்தான் இப்போதைய உடனடித் தேவை. அந்த தேவையை அமெரிக்கர்கள் நிறைவேற்றுவார்களா என்பதைக் காண உங்களோடு சேர்ந்து நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.

Tuesday, February 11, 2020

அமெரிக்க அதிபர் தேர்தலும் அதன் ஆயத்த விநோதங்களும்


பிப். 09 2020 சொல்வனம் இதழ் 216ல் வெளிவந்துள்ள கட்டுரை.

ஒருவழியாக அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 சூடு பிடிக்கத் துவங்கியிருக்கிறது. மற்ற நாடுகளைப் போலல்லாமல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்கே தேர்தல் நடத்தும் விநோதர்களின் தேசம் இது. கொஞ்சம் சிக்கல், நிறையக் குழப்பங்கள், திடீர் திருப்பங்கள் என தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை இனி சுவாரசியங்களுக்கு பஞ்சமிருக்காது.


யார் விரும்பினாலும், வெறுத்தாலும் அமெரிக்க அதிபராக வருகிறவர் தான் சர்வதேச அரசியல், பொருளாதாரங்களின் போக்கைத் தீர்மானிப்பவராகவும், திசை திருப்புகிறவராகவும் ஏன் பாதிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அதிபர் வேட்பாளர்களின் அத்தனை அம்சங்களும் தீவிரமான பரிசீலனைக்குள்ளாவதில் ஆச்சரியமில்லை. இந்த நடைமுறையில் எடுக்கப்படும் தவறான முடிவுகள் சர்வ தேசத்தில் எத்தனை பெரிய பாதிப்புக்குள்ளாக்கும் என்பதற்கும் தற்போதைய அதிபரின் தன்னிச்சையான, அடாவடியான செயல்பாடுகளே பெரிய உதாரணம். அந்த வகையில் இம்முறை இந்த காக்கஸ், பிரைமரி கூட்டங்களின் செயல்பாடுகள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்படும். அமெரிக்காவின் 50 மாகாணங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் பெருவாரியான ஆதரவைப் பெறுவது என்பது எந்த ஒரு வேட்பாளருக்கும் பெரியதொரு சவால். அதற்கு போதுமான தகுதியும், மிகுதியான பணபலமும், கூடுதலாக ஆதரவாளர்களின் பங்களிப்பும், தொழிற்சங்கங்கள் உட்பட சமூகத்தில் பல்வேறு பிரிவுகளின் உதவியும் மிக மிக அவசியம்.

நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடப் போகும் இரு பெரும் கட்சிகளின் அதிபர் வேட்பாளர்களை அவ்வந்த கட்சிகளின் மாநாட்டிற்கு முன்னர் தேர்வு செய்யும் நடைமுறை தான் தற்போது துவங்கியிருக்கிறது. ஒரு பக்கம் குடியரசுக்கட்சியின் சார்பில் ட்ரம்ப் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகிவிட்ட நிலையில், மறுபக்கம் ஜனநாயகக்கட்சியில் ஆளாளுக்கு தங்களைக் கட்சியின் வேட்பாளர்களாக முன்னிறுத்திக் கொண்டிருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் அதிபராக ஆசைப்படலாம், ஆனால் அதற்கான தகுதியும் திறமையும், தொலைநோக்கும் இருக்கிறதா என்பதை உரசிப் பார்க்கும் நிகழ்வுகள் தான் இந்த“காக்கஸ்” எனப்படும் கூட்டங்களும் பிரைமரி தேர்தல்களும்.

இந்தக் கூட்டங்களில் கட்சியின் சார்பில் களத்தில் குதிக்க ஆசைப்படுகிறவர்கள் தங்களுடைய கொள்கைகள், நிலைப்பாடுகள், திட்டங்கள், வியூகங்களை ஆதரவாளர்கள் மத்தியில் விரிவாக எடுத்துக்கூறி ஆதரவு கோருவார்கள். காக்கஸ் நடக்கும் நாளில் கட்சியின் ஆதரவாளர்கள் தங்களுக்குள் வாய்ப்புடைய வேட்பாளர்களின் தகுதி, திறமைகளை அலசும் வகையில் வாதவிவாதங்களின் மூலம் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வார்கள். அதன்பிறகு வாக்குகளின் மூலமாக தங்களின் தெரிவுகளைப் பதிவு செய்வார்கள். இப்படியான ஒரு நடைமுறையைத் தான் இந்த “காக்கஸ்” கூட்டங்கள் செய்கின்றன.

வேட்பாளர்களைப் பரிந்துரைக்கும் இந்த தேர்தல்களை “ப்ரைமரி” என்கிறார்கள். இவை “ஓப்பன்”, “க்ளோஸ்ட்” என இரண்டு பகுதிகளாக நடைபெறுகின்றன. இந்த தேர்தல்களில் வாக்களிக்க விரும்புவோர் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்க வேண்டும். அப்போது தங்கள் சார்ந்துள்ள கட்சியின் பெயரையும் குறிப்பிடலாம். இந்த ஓப்பன் தேர்தல்களில் வாக்காளர்கள் தங்களுடைய அபிமான அல்லது தங்களின் தெரிவான மாற்றுக்கட்சி வேட்பாளருக்குக் கூட வாக்களிக்கலாம். என்ன தலைசுற்றுகிறதா! சுற்றினாலும், இந்த ஓப்பன் தேர்தல் நடைமுறை இதுதான். க்ளோஸ்ட் தேர்தலில் அந்தந்த கட்சியின் வாக்காளர்கள் தங்கள் கட்சி நடத்தும் பிரைமரி வேட்பாளர்களில் ஒருவருக்கு தங்களின் வாக்குகளை அளிக்க வேண்டும். தற்போது பன்னிரண்டு மாநிலங்களில் க்ளோஸ்ட் பிரைமரி தேர்தல் நடை முறையில் இருக்கிறது. இருபத்தைந்து மாநிலங்களில் ஓப்பன் பிரைமரியும் மற்ற மாநிலங்களில் இரண்டு முறையிலும் என்று குழப்பமான தேர்தல் முறையில் அதிபர் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த பிரைமரி தேர்தல்களை (ஓப்பன் & க்ளோஸ்ட்) மாநில அரசே நடத்துகிறது. காக்கஸ் கூட்டங்களை கட்சிகளின் மாநில பிரிவுகள் நடத்துகின்றன.அதிக வாக்குகள் பெற்ற வேட்பாளர்கள், கட்சியினர் மற்றும் மக்களின் கவனத்தைப் பெறுவதோடு தங்களுக்கு ஆதரவான மக்களின் பிரதிநிதி வாக்குகளைப் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மக்களின் பிரதிநிதிகள் (Delegtes) என கட்சிகளால் வரையறுக்கப்பட்டுள்ளது. 48 மாநிலங்களில் அதிக வாக்குகள் பெறும் முன்னணி வேட்பாளரே அம்மாநிலத்தின் அனைத்துப் பிரதிநிதிகளையும் பெறுகிறார். மெய்ன் & நெப்ரஸ்கா மாநிலங்களில் மட்டும் இந்த நியதி வேறுபடுகிறது. நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் மக்களின் பிரதிநிதிகளுடன் அக்கட்சியின் பிரதிநிதிகளும் (சூப்பர் டெலிகேட்ஸ்) அதிபர் வேட்பாளரைத் தேர்வு செய்கிறார்கள். கட்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 3,979 பிரதிநிதிகளையும் காக்கஸ், பிரைமரி தேர்வுகள் முடிவு செய்கிறது. குடியரசுக் கட்சி மாநாட்டில் அவர்களுடைய 2,552 பிரதிநிதிகள் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். போலவே, அவர்களுடைய காக்கஸ், பிரைமரி தேர்தல் முறைகளும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையும் மாநில கட்சியின் விதிகளுக்கு உட்பட்டவையாக இருக்கிறது. எத்தனை குழப்பமான வேட்பாளர் தேர்வு முறை? அதுவும் கட்சிக்கொரு நியதி. மாநிலத்துக்கொரு சட்டம்!

அயோவா , நெவாடா, நார்த் டக்கோட்டா, வயோமிங் மாநிலங்களில் இரு பெரும் கட்சிகளால் காக்கஸ் நடத்தப்பட்டாலும், 1972 முதல் அயோவாவில் தொடங்கும் அதிபர் வேட்பாளர் தேர்வுக்கான முதல் காக்கஸ் அதிக எதிர்பார்ப்பைத் தருகிறது. இந்த வருட தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜூலையில் நடக்கவிருக்கும் கட்சி மாநாட்டில் 1,991 பிரதிநிதிகளைப் பெற்றிருந்தால் மட்டுமே கட்சியின் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார். அயோவாவில் வெற்றி பெறும் சதவிகிதத்தைப் பொறுத்து 41 பிரதிநிதிகள் வேட்பாளர்களிடையே பங்கிடப்படுவார்கள். எண்ணிக்கையில் குறைந்து இருந்தாலும் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரைத் தேர்ந்தெடுக்கும் முதல் தேர்தல் களம் அயோவாவில் தொடங்குவதாலும் பெரும்பான்மை வெள்ளை அமெரிக்கர்கள் இருக்கும் மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் நாட்டு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்காவிட்டாலும் இங்கு முன்னணியில் வரும் வேட்பாளர்கள் மற்ற மாநிலங்களிலும் பெருங்கவனம் பெறுவதோடு அதிக நன்கொடைகளையும் பெறும் சாத்தியம் இருப்பதால் வேட்பாளர்களிடையே அயோவா காக்கஸ் முடிவுகள் முக்கியத்துவம் பெறுகிறது. ஒபாமாவிற்கு அரசியல் உத்வேகத்தை அயோவா காக்கஸ் முடிவுகள் அளித்ததைப் போல தங்களுக்கும் சாதகமான முடிவுகள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே வேட்பாளர்களும் இம்மாநிலம் முழுவதும் தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள். இங்கு பிரைமரி தேர்தல் போல் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்காமல் பள்ளி வளாகங்கள், நூலகங்கள், பேராலயங்கள், உணவுக்கூடங்கள் என மக்கள் கூடும் பொது இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் மக்கள் ஒரு குழுவாக தங்களுடைய வேட்பாளருக்கு விவாதங்களின் மூலம் ஆதரவைத் திரட்டுகிறார்கள். அதிக அளவில் மக்களின் வாக்குகளைப் பெற்றவர்களுக்கு கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவும் நியூ ஹாம்ப்ஷயர் தொடங்கி அடுத்து வரும் பிரைமரியில் கட்சி, ஊடகங்கள் மற்றும் மக்களிடையே அதிக முக்கியத்துவமும் நம்பிக்கையும் கிடைக்கிறது.

2016 காக்கஸ் தேர்வு முறைகளில் சிறிது மாற்றம் செய்யப்பட்டு அறிமுகப்படுத்திய புதிய செயலி முறையாக வேலை செய்யாததால் ஏற்பட்ட குழப்பங்கள், கணினி, செல்போன் மூலம் பரிமாறப்பட்ட தகவல்களில் ஏற்பட்ட தடங்கல்கள் காரணமாக பிப்ரவரி 3ந் தேதி 1,681 இடங்களில் நடைபெற்ற காக்கஸின் முடிவுகள் வெளிவர தாமதமானது. பெர்னி சாண்டர்ஸும் ஜோ பைடனும் முன்னணி வகிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் சிறு மாறுதல். பிப்ரவரி 7 வரை பீட் புடஜஜ் 13 மாநில பிரதிநிதிகளையும் பெர்னி சாண்டர்ஸ் 12 மாநில பிரதிநிதிகளையும் பெற்று முன்னணியில் இருக்கிறார்கள். 8 பிரதிநிதிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் எலிசெபத் வாரனும், நான்காம் இடத்தில் 6 பிரநிதிகளைப் பெற்று பின்தங்கிய நிலையில் ஜோ பைடனும் ஒரேயொரு பிரதிநிதியுடன் ஏமி குளோபுச்சர் என எதிர்பாராத முடிவுகளுடன் நியூஹாம்ப்ஷயர் பிரைமரியில் தங்கள் கவனத்தைச் செலுத்தி வருகிறார்கள்.

2016ல் ஹிலரி கிளிண்டன் அயோவாவில் 23 பிரதிநிதிகளைப் பெற்று அமெரிக்காவின் அயோவா காக்கஸில் வென்ற முதல் பெண் அதிபர் வேட்பாளரானார். 21 பிரதிநிதிகளைப் பெற்ற பெர்னி சாண்டர்ஸ் இறுதி வரை அவருக்குப் போட்டியாளார் ஆனார். பெர்னிக்கு கட்சியினரின் ஆதரவு செல்லாதவாறு ஹிலரி செய்த தகிடுதத்தங்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டு பெர்னி ஆதரவாளர்கள் பலரும் 2016 தேர்தலில் வாக்களிக்காமல் ட்ரம்ப் வெற்றி பெற அவர்களும் காரணமாயினர். ட்ரம்ப்பை எதிர்த்து நின்ற ஹிலரி இந்நாட்டின் முதல் பெண் அதிபராக பொறுப்பேற்க தேர்தலில் அதிக வாக்குகள் (பாப்புலர் வோட்) பெற்றிருந்தாலும் அமெரிக்க தேர்தல் முறையில் அதிக எலெக்டோரல் வாக்குகள் பெற்ற ட்ரம்ப் அதிபரானது போல், மக்களின் ஆதரவு அதிகம் இருந்தாலும் கட்சிப் பிரதிநிதிகளின் ஆதரவு யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவரே தான் அதிபர் வேட்பாளராகவும் முடிகிறது. இனி ஒவ்வொரு மாநிலங்களிலும் நடக்கவிருக்கும் பிரைமரி மற்றும் காக்கஸ் முடிவுகள் வேட்பாளர்களையும் மக்களையும் கட்சி மாநாடு வரை எதிர்பார்ப்புடன் வைத்திருக்கும். இருபத்தியொன்பது அதிபர் வேட்பாளர்களுடன் தேர்தல் களத்தில் இறங்கிய ஜனநாயக கட்சியில் பல்வேறு காரணங்களுக்காக பதினெட்டு பேர் விலகிட, பதினோரு வேட்பாளர்களுடன் அயோவா காக்கஸில் பீட் புடஜஜ், பெர்னி சாண்டர்ஸ், எலிசெபத் வாரன், ஜோ பைடன் அதிக கவனம் பெற்றிருக்கிறார்கள்.

மக்களுக்கும் ஜனநாயக அதிபர் வேட்பாளர்களுக்கும் அதிருப்தியை தந்திருக்கும் அயோவா காக்கஸ் குழப்பமான முடிவுகளின் தீர்வுக்காக காத்திருக்காமல் வேட்பாளர்கள் நியூஹாம்ப்ஷயர் பிரைமரியில் முழு கவனம் செலுத்தி ஆதரவு கோரி வருகிறார்கள். இதுநாள் வரை வயதிலும் அனுபவத்திலும் குறைந்தவராக கருதப்பட்ட பீட் புடஜஜ் இன்று ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாகவும் மாறி இருப்பது மக்களிடையே அவருக்கு இருக்கும் ஆதரவைப் பறைசாற்றுகிறது. அதே உத்வேகத்துடன் இனி வரும் பிரைமரியிலும் அவருடைய முக்கியத்துவம் தொடருமா என்பது தான் கேள்வி. மோன்மௌத் பல்கலை நடத்திய கருத்துக்கணிப்பில் நியூஹாம்ப்ஷயர் பிரைமரியில் பெர்னி சாண்டர்ஸ் முன்னணியில் அவரைத் தொடர்ந்து பீட் புடஜஜ் இருப்பதும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் துணை அதிபரின் செல்வாக்கு குறைகிறதோ என்ற கேள்வியுடன் ஆவலாக காத்திருக்கிறது தேர்தல் களம்.

பணபலமும், மக்களின் ஆதரவும், பிரநிதிகளின் பேராதரவும் உள்ளோரைத் தான் தங்கள் கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலுக்குத் தேர்ந்தெடுக்கிறது இவ்விரு பெரும் கட்சிகளும். தேர்தலுக்கு முந்தைய வருடத்திலிருந்து வேட்பாளர்களும் நன்கொடைகள் பற்றின விவரங்களை வெளியிட, அரசியல் களம் சூடு கொள்ள ஆரம்பிக்கிறது. பிரதிநிதிகளைப் பெற மக்களின் ஆதரவு கோரி நாடு முழுவதும் சூறாவளிச் சுற்றுப்பயணம், ஊடகங்களில் தங்கள் கொள்கைகளை விளம்பரப்படுத்தல் என செலவுகளையும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதால் பல நல்ல வேட்பாளர்கள் போதிய நன்கொடை இல்லாமல் களத்திலிருந்து வெளியேறும் துன்ப சம்பவங்களும் இதே நேரத்தில் தான் நடக்கிறது.

ஒப்பீட்டளவில் நமது இந்திய தேர்தல் களம் எவ்வளவு எளிமையானது என்பதை இந்நேரத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லை!

அமெரிக்க அதிபர் தேர்தலை, அதன் கள நிலவரங்களை சர்வதேசங்கள் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றன. எந்த அளவுக்கென்றால், கடந்த தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையினர் அதிபர் தேர்தலின் போக்கையே மாற்ற உழைத்தனர் என குற்றம் சாட்டும் அளவுக்கெல்லாம் சர்வதேச கவனங்கள் இந்த தேர்தலின் மீது குவிந்திருக்கின்றன. புதிய அதிபர் தங்களோடு எத்தனை ஒத்துப் போவார் என்பதில் துவங்கி அரசியல், பொருளாதார, சமூக, பாதுகாப்பு என அனைத்திலும் தங்களோடு இணக்கமாய் செல்லக் கூடிய ஒருவரைத்தான் எல்லா நாடுகளும் எதிர்பார்க்கின்றன.

காலங்காலமாய் அமெரிக்க தேர்தல் களம் பல்வேறு காரணங்களுக்காக பல நாடுகளுக்கும் இன்றியமையாத ஒன்றாகாவே இருந்து வருகிறது. அதிபராக பொறுப்பேற்பவர் பிற நாட்டுத் தலைவர்களுடன் ஒத்துச் செல்பவரா, அவருடைய உள்நாட்டு, வெளிநாட்டுக் கொள்கைகள், அரசியல் சித்தாந்தங்கள் தங்களை எவ்விதம் பாதிக்கப் போகிறது, அடுத்த நான்கு வருடங்கள் பங்குச்சந்தை முதல் உள்நாட்டுப் பொருளாதாரம், வேலை வாய்ப்புகள், மருத்துவ காப்பீடு, குடியேற்ற சட்ட மாறுதல்கள் என நீளும் பட்டியல்களுடன் தற்போதைய அதிபரை எதிர்கொள்ள சரியான ஜனநாயக கட்சி வேட்பாளாரைத் தேர்ந்தெடுக்கும் மிகப்பெரிய கடமையும் ஜனநாயக கட்சிக்கு இருப்பதால் இத்தேர்தல் களம் முக்கிய நிகழ்வாக உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

அயோவா காக்கஸ் முடிவுகளைத் தெரிவிப்பதில் இவ்வளவு குழப்பம் உள்ள கட்சி எப்படி நாட்டை வழிநடத்த முடியும்? தன் மீதிருந்த கண்டனத் தீர்மானத்தை கட்சி செனட்டர்கள் மூலமாக முறியடித்து விட்டு இது ஒரு அரசியல் காழ்ப்புணர்ச்சி என்று கொக்கரிக்க ஆரம்பித்து விட்டாரே ட்ரம்ப். அவரை எதிர்கொண்டு வெற்றி கொள்ள தகுதியான வேட்பாளரை மக்கள் தேர்ந்தெடுத்தாலும் கட்சி ஆதரிக்குமா என்பது தான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி!

தற்போதைய சூழலில் அமெரிக்காவை வழிநடத்த ஒரு மகத்தான ஆளுமை மிக்க தலைவர் அவசியம் என்பதை பெருவாரியான அமெரிக்கர்கள் உணரத் துவங்கியிருக்கின்றனர். நிதானமற்ற, எடுத்தேன் கவிழ்த்தேன் ரக முடிவுகள், வாய் புளிச்சதா மாங்காய் புளிச்சதா பேச்சுகள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்திய பாதிப்புகளைக் கண்கூடாக கண்ட பின்னர் பலரும் வெளிப்படையாக தங்களுடைய எதிர்பார்ப்புகளை, ஏமாற்றங்களை பேசத் துவங்கி இருக்கின்றனர். ஆனாலும் கூட, அந்த தகுதியான ஆளுமை யார் என்பதை தெரிவு செய்வதில் நிறைய குழப்பங்களும், கருத்து வேறுபாடுகளும் இருக்கின்றன.

அந்த வகையில் மக்கள் சக்தி எத்தனை மகத்தானது என்பதை உணரவும், உணர்த்தவும் இந்த காக்கஸ் கூட்டங்களும் பிரைமரி தேர்தல்களும் உதவுமென நம்புகிறேன்.

இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்


ஜனவரி 12, 2020 சொல்வனம் இதழ் 214ல் வெளிவந்துள்ள என் கட்டுரை.
இஸ்லாமியத் தீவிரவாதமும் அமெரிக்கப் பிடிவாதமும்

காசிமெ சுலைமானி, ஈரானில் கொண்டாடப்பட்ட மூத்த ராணுவத் தளபதி.
அந்நாட்டின் பெருந்தலைவர் அயதுல்லா அலி ஹோமேய்னிக்கு அடுத்த நிலையில் மக்களால் அதிகம் மதிக்கப்பட்டு மத்திய கிழக்கிலும் தனிப்பெரும் சக்திவாய்ந்த நபராக கருதப்பட்டவர். அமெரிக்காவிற்கு எதிராக நடக்கும் போரில் ஈடுபட்டு வந்த ஈரானின் ராணுவப் பிரிவின் அங்கமாக விளங்கும் குத்ஸ் படையை ஏப்ரல் 2019ல் ட்ரம்ப் அரசு தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து அவ்வியக்கத்தின் மீதும் அதன் தொடர்பில் இருக்கும் நிறுவனங்களின் மீதும் பல்வேறு தடைகள் விதிக்கப்பட்டன. அமெரிக்க அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை, தாக்குதல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் திட்டமிட்டுத் தன் நாட்டிற்கும், நாட்டு மக்களுக்கும் அச்சுறுத்தலாய் விளங்கியதால் ட்ரம்ப் அரசு சுலைமானியைக் கொல்லத் திட்டமிட்டது.

ஜனவரி 3, 2020ந் தேதி ஈராக் விமான நிலையத்தில் தனது சகாக்களுடன் காரில் கிளம்பியபோது அவரைக் கண்காணித்துக் கொண்டிருந்த அமெரிக்க ட்ரோன், ஏவுகணைகளை வீசிக் கொன்றது. அவருடன் ஈராக்கைச் சேர்ந்த அல் ஹஷ்த் அல் ஷாபி கிளர்ச்சியாளர் படையின் துணைத் தளபதி அபு மஹ்தி அல் மஹந்திஸ் உள்ளிட்டோரும் கொல்லப்பட்டதாக அமெரிக்க அரசு அறிவித்தது.

ஈரானின் அரசு நிர்வாகத்தில் பலம் வாய்ந்த நபரான சுலைமானியின் கொலை, ஈரானிலும் மத்திய கிழக்கிலும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியது. மூன்றாம் உலகப் போருக்கான தொடக்கப் புள்ளி இதுதான் என அரசியல் விமர்சகர்களும், ஊடகங்களும் கவலை தெரிவித்தன. தன் நாட்டுப் படைத் தலைவரின் மரணத்திற்கு ட்ரம்ப்தான் காரணம் என்றதுடன், அமெரிக்காவுக்குக் கடும் பதிலடி அளிக்கப்படும் என ஈரான் நிர்வாகத் தலைவர் அயதுல்லா அலி ஹோமெய்னி கூறியுள்ளதைத் தொடர்ந்து, மசூதிகளில் சிவப்புக் கொடிகளை ஏற்றிப் போருக்குத் தயாரானதாக அறிவித்தது.

ஈரான் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் 52 நிலைகளைத் தாக்கப் போவதாக ட்ரம்ப் ட்விட்டரில் கொக்கரித்தார். உலகின் பலமான ராணுவம், மில்லியன் டாலர் நவீன போர்க்கருவிகள் ஈரானுக்காக காத்திருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

அமெரிக்காவுக்கு ஆதரவான அணி, எதிரான அணி என இரு பிரிவுகளாக மத்திய கிழக்கு நாடுகள் பிரியும் வாய்ப்புகள் உருவானது. இதனால் இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படையினர், அமெரிக்க நிறுவனங்கள், கட்டுமானங்கள், முதலீடுகளுக்கு பெரும் நெருக்கடி உண்டாகும். அமெரிக்க மக்களவையிடம் (காங்கிரஸ்) ஆலோசிக்காமல் அவசரப்பட்டு இது போன்ற முடிவை ட்ரம்ப் எடுத்து விட்டதாக ஜனநாயக கட்சியினர் தங்கள் அதிருப்தியை வெளிக்காட்ட, அதை மறுத்து குடியரசுக் கட்சி சார்பில் சமாதானங்கள் சொல்லப்பட்டன.

அமெரிக்கத் தூதரகங்களைத் தாக்குவது தொடங்கி தூதர்கள் மற்றும் வெளிநாடுகளில் வாழும் அமெரிக்க மக்களின் உயிர் பாதுகாப்பிற்கும் , அமெரிக்க மூலதனங்களின் அழிவு அச்சுறுத்தலுக்கும் காரணமாக இருந்ததால் இஸ்லாமியப் புரட்சி பாதுகாப்புப் படையினரை வழிநடத்தும் காசிமெ சுலைமானியை கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்ன் முடிவைப் பாதுகாப்புத் துறை நிறைவேற்றியதாக அத்துறையும் விளக்கம் அளித்துள்ளது.

சமீபத்தில் ஈராக்கில் அமெரிக்க படைத்தளத்தில் கொல்லப்பட்ட அமெரிக்கர் ஒருவரின் பின்னணியில் ஈரான் ஆதரவு ஈராக்கிய படைகள் இருந்ததும், பாக்தாத்தில் அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டதும் இச்சம்பவத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இஸ்லாமிக் ஸ்டேட் தலைவன் அபு அல் பாக்தாதியைப் போல பயங்கரமானவர், பல அமெரிக்கர்களின் இறப்பிற்கும் காரணமானவர் என்று அமெரிக்க உள்துறைச் செயலர் மைக் பாம்பேயோவும் தெரிவித்துள்ளார். ஈரான், ஈராக், சிரியா மற்றும் லெபனான் நாட்டு ஷியா முஸ்லீம்களை ஒருங்கிணைத்து அமெரிக்காவிற்கு எதிரான படையைத் திரட்டி போருக்குத் தேவையான ஆயுதங்களையும், வெடிமருந்துகளையும், பயிற்சிகளையும் வழங்கியதில் இதுவரை ஆயிரக்கணக்கில் அமெரிக்கர்களும் கூட்டணி நாட்டுப் படையினரும் மத்திய கிழக்கு நாடுகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று முன்னாள் சிஐஏ டைரக்டர் மற்றும் அமெரிக்கப் படைத்தளபதியுமான ஜெனரல் டேவிட் பெட்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகளாக பயங்கரவாத தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாலும் அமெரிக்கப் படைகள் மீது மேலும் பல கொடூர தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருந்ததாலும் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இது போருக்கான ஆரம்பம் அல்ல அமெரிக்கா மீதான போரை நிறுத்தவே காசிமெ சுலைமானி கொல்லப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கில் ஈரானின் வளர்ச்சியைத் தடுக்கவே திட்டமிட்ட இத்தாக்குதல் நடைபெற்றுள்ளது. தங்கள் படைத்தலைவரைக் கொன்ற இந்த அதிரடி முடிவால் மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் நடவடிக்கைகளை ஈரான் மேற்கொள்ளுமென ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் மொஹமத் ஜாவத் ஜரிஃப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளிக்கிழமையன்று கச்சா எண்ணெய் விலை உயர்வும் பங்குச்சந்தை நிலவரத்திலும் மாற்றங்கள் வந்து விட்டது.

ஈரான் நாட்டு அதிபர் ஹசான் ரொஹானி தங்களுடைய படைத் தலைவரைக் கொன்று அமெரிக்கா பெருந்தவறை செய்து விட்டது. இதற்கான பதிலடியைத் தந்தே தீருவோம். அண்மை நாடுகள் ஒற்றுமையாகச் செயல்பட்டு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து வெளிவர வேண்டும் என்ற அறிக்கைக்கு, ஈரானால் அமெரிக்கச் சொத்துக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டால் தன்னுடைய நாடும் ஈரான் மீது அதிவிரைவில் மிகப்பெரும் தாக்குதல்களைத் தொடரும். பொருளாதாரத் தடைகளும் நீட்டிக்கப்படும் என்ற ட்ரம்பின் ட்விட்டர் பதிலால் மூன்றாம் உலகப்போர் சூழும் அபாயங்கள் இருப்பதாக வாஷிங்டனும் போர்ச் சூழலை விரும்பாத மக்களும் அச்சத்துடன் நிலவரங்களைக் கண்காணித்து வருகிறார்கள். ஐம்பத்தைந்து சதவிகித அமெரிக்கர்கள் போரை விரும்பவில்லை. இரு நாடுகளும் தங்களுக்குள்ள பிரச்சினைகளைப் பேசித்தீர்த்துக் கொள்வது அவசியம் என்கிற குரல்கள் அமெரிக்காவில் துவங்கி உலகமெங்கும் எதிரொலித்தது.

உயர்பதவியிலிருக்கும் வெளிநாட்டு அதிகாரியை கொன்றதன் மூலம் மறைமுகமாக ஈரானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுவதாகவும் மத்திய கிழக்கில் ஸ்திரமற்ற நிலைமையும் அமெரிக்கர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அன்றைய தாக்குதலில் இறந்த ஈரான் ஆதரவு ஈராக்கிய படைத்தலைவரின் ஆதரவாளர்கள் “Death to America” கோஷங்களுடன் அமெரிக்காவிற்கு எதிராக ஈராக்கில் போர்க்கொடி உயர்த்தியுள்ளதும் அமெரிக்கப் படைகளுடன் நட்பு நாட்டுப் படைகளுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதால் உலக நாடுகளும் கவலையுடனே இவ்விரு நாடுகளையும் கவனித்து வருகிறது.

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நிலவும் மோதல் போக்கைத் தொடர்ந்து 2015ஆம் ஆண்டு உலக நாடுகளுடன் செய்துகொண்ட அணு சக்தி தொடர்பான ஒப்பந்தங்களிலிருந்து விலகுவதாகவும் ஐநாவின் அணுசக்தி கண்காணிப்புக் குழுவுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது. இதற்கிடையே, ஈராக் ராணுவத்துக்கான பயிற்சியை நிறுத்தி வைப்பதாக வட அமெரிக்க நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்புக்கான ‘நேட்டோ’ அமைப்பு அறிவித்துள்ளது.

ஈரானின் வலுவான இணையத் தொழில்நுட்பத்தால் அமெரிக்காவில் இணைய தளங்களை முடக்கும் தீவிரவாத செயல்களில் ஈடுபடலாமென தற்போதைய உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் சாட் ஓல்ஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீவிரவாதிகள் ஒசாமா பின்லாடன் மற்றும் அபு அல் பாக்தாதி இறப்பின் பின் விளைவுகளை விட தங்கள் படைத்தலைவருக்காக ஒரு தேசமே அதிரடி தாக்குதலில் இறங்கக்கூடிய சாத்தியங்கள் இருப்பதால் உலகமே கவலையுடன் உற்று நோக்கும் நிகழ்ச்சியாக உருவெடுத்துள்ளது.

குத்ஸ் ராணுவத்தால் வளர்த்தெடுக்கப்பட்ட பயங்கரவாத அமைப்பு ஹெஸ்புல்லா மற்றும் கிளர்ச்சியாளர் படைகளால் அமெரிக்க இணைய தளங்கள் முதல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தளவாடங்கள், தூதரகங்கள், நட்பு நாடுகளான இஸ்ரேல், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் தனி நபர் தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்பட்ட சூழ்நிலையில் ஜனவரி 7, 2020 அன்று ஈராக்கிலிருந்த இரு அமெரிக்கப் படைத்தளங்களின் மீது ஈரானின் ஏவுகணைகள் பாய்ந்தன.

எண்பது அமெரிக்கத் தீவிரவாதிகளைக் கொன்று விட்டதாக ஈரானும், ‘ஆல் இஸ் வெல்’ என ட்ரம்ப்பும் சொல்லிக் கொண்டனர். இந்த கட்டத்தில் அமெரிக்கா பதிலுக்கு என்ன செய்யப் போகிறது என உலகமே பதட்டத்தோடு பார்த்துக் கொண்டிருக்கையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஈராக்கில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பாக உள்ளனர். ஈரான் நடத்திய தாக்குதலால் அமெரிக்க படைத்தளத்தில் சிறிய அளவிலேயே பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. பயங்கரவாதத்தை முன்னெடுப்பதில் முன்னிலையில் உள்ள ஈரான் மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும். நான் அமெரிக்க அதிபராக இருக்கும் வரை ஈரான் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டேன். உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட அமெரிக்க விரும்புகிறது’ என்றார்.

மத்திய கிழக்கில் ஷியா ராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஸுன்னி முஸ்லீம்களும் வளர்ந்து வரும் ஈரானின் ஆதிக்கத்தை ஈராக்கிலும் மற்ற நாடுகளிலும் விரும்பாதவர்களும், பெரும்பான்மையான குடியரசுக் கட்சியினரும் இவ்விஷயத்தில் ட்ரம்ப் அரசிற்கு ஆதரவாகவே இருக்கிறார்கள்.

இஸ்ரேலின் ஆதரவு அமெரிக்காவிற்குச் சாதகமாக இருந்தாலும் ஈராக்கிலிருந்து அமெரிக்கப்படைகள் வெளியேற்றப்பட்டால் சிரியாவை தக்க வைத்துக் கொள்வதிலும் மத்திய கிழக்கில் இருக்கும் அமெரிக்காவின் மூலதனங்களுக்கும் பாதிப்புகள் அதிகம். தற்போதைய ட்ரம்ப் அரசின் வெளியுறவுக் கொள்கையால் சிரியாவில் குர்திஷ் படையினரின் உறவை முறித்துக் கொண்டதில் உருவாகியிருக்கும் வெற்றிடமும், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ட்ரம்ப் அரசு விலகியதும் ரஷ்யாவுக்கு அங்கு தம் அதிகாரத்தைப் பரப்ப வாய்ப்பளித்திருக்கின்றன. ஈரானுடன் கைகோர்த்து மத்திய கிழக்கில் தங்களுடைய அதிகாரத்தை விரிவுபடுத்த ரஷ்யா இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது. இன்றைய சூழ்நிலையில் வல்லரசு அமெரிக்காவை நிலையற்ற பலவீனமான நாடாக உலக அரங்கில் முன்னிறுத்தி தங்களுடைய அதிகாரத்தை முன்னெடுத்துச் செல்லவும் அமெரிக்கா மீதான நேட்டோ நாடுகளின் அதிருப்தியும் ரஷ்யாவிற்குச் சாதகமே. வெளிநாடுகளின் தலையீடுகள், படுகொலைகள், பிரிவினைவாத முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக துருக்கியும் அறிக்கை விட்டிருப்பது அமெரிக்காவிற்குப் பின்னடைவு தான்.

அமெரிக்க காங்கிரஸ் அவையின் ஒப்புதல் இல்லாமல் ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ட்ரம்ப் ஈடுபடுவது தொடர்பாக பிரதிநிதிகள் சபையில் ட்ரம்பின் அதிகாரத்தைக் குறுக்கும் தீர்மானத்தை ஜனநாயக கட்சியினரும், குடியரசு கட்சியினர் சிலரின் ஆதரவோடு கொண்டு வந்தனர். இது இப்போது மேலவையான செனட்டின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

ட்ரம்ப் எடுத்த அதிரடி முடிவு என்று அவரது ஆதரவாளர்கள் புகழ்ந்தாலும், பின்விளைவுகளைச் சிந்திக்காமல், தகுந்த ஆதாரங்கள் இல்லாமல் நடந்த தேவையற்ற தாக்குதல் என்று எதிர் தரப்பினர் விமர்சித்தாலும், இனி வரும் நாள்கள் எப்படியிருக்குமோ என்ற கேள்விதான் பலருக்கும். மத்தியக் கிழக்கில் அமெரிக்க தளவாடங்கள் மற்றும் படை வீரர்களுக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போருக்கு ஆயத்தமாகப் பல்லாயிரக்கணக்கான படை வீரர்கள் மத்திய கிழக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவிற்கு எதிராக ஈரான் எடுக்கப் போகும் ஆயுதம் என்னவென்றுதான் பரபரப்பாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஈரானின் தற்போதைய நிலையில் போர் எழ வாய்ப்பில்லை. ஆனால், நட்பு நாடுகளில் அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கைகள் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எது எப்படி இருந்தாலும் தீவிரவாதம் ஏற்புடையதன்று. மனித குலத்தின் நசிவிற்கும் அழிவிற்கும் மதவாதமும், அது முன்வைக்கும் தீவிரவாதமும்தான் காரணம். அதை உணர்வது அனைவருக்குமே நன்மை பயக்கும்.

அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள்


டிசம்பர் 15, 2019 சொல்வனம் இதழ் 212ல் வெளிவந்த என் கட்டுரை.
அன்று க்ளிண்ட்ன்! இன்று ட்ரம்ப் – அமெரிக்க நாடகங்கள்

2016 நவம்பர் மாதம் எட்டாம் தேதி நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அமெரிக்க மக்களை மட்டுமல்ல உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வாகிப் போனாலும், வாஷிங்டன் தங்களை கைவிட்டதென நினைத்திருந்த மக்களிடம் இனி அமெரிக்கர்களுக்கே முன்னிடம். அரசு மறந்து போன மக்களை இனியும் மறக்க விட மாட்டேன். வெளிநாடுகளுக்குச் சென்ற நம் வேலைகளை மீட்பதும் சட்ட விரோத குடியேற்றத்தை தடுத்து மெக்ஸிகோவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே சுவர் எழுப்பி குற்றங்களை குறைக்கவும் , ஒபாமாகேரை ஒழித்து மக்களுக்கு குறைந்த செலவில் மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டத்தையும், வெளிநாடுகளிலிருந்து வேலைவாய்ப்பை பெற வழங்கும் ஹெச்1பி விசா முறைகேடுகளை சீர்திருத்தவும் ஆவன செய்வேன். அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே போன்ற வசீகர வாக்குறுதிகளில் வெள்ளை அமெரிக்கர்களின் வாக்குகளை அதிக அளவில் பெற்று சரித்திர சாதனை படைத்த வெற்றியில் பெரும்பான்மை செனட் மற்றும் பிரநிதிநிதிகள் சபை உறுப்பினர்களுடன் வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் 45வது அதிபராக பொறுப்பேற்றார் டிரம்ப்.

தீவிரவாத நாடுகளுக்கும் உள்நாட்டில் புதிதாக குடியேறும் அகதிகளுக்காகவும் மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டு உள்நாட்டு மக்களின் தேவைகளையும் கட்டமைப்பையும் அரசாங்கம் நிராகரித்த உணர்வும், அயல்நாடுகளுக்குச் சென்ற வேலைவாய்ப்புகள் மற்றும் புலம்பெயர் மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் வேலையிழப்பும் அரசாங்க அமைப்பைச் சாராத ஒருவரான ரீகன் ஆட்சிக்காலம் மீண்டும் மலராதாவென கனவு கொண்டவர்களையும் குறி வைத்தே டிரம்பின் தேர்தல் வாக்குறுதிகளும் மேடைப்பேச்சுகளும் நகர, அவருடைய கணிப்பும் தவறவில்லை. முதலிய அடிப்படை நாடான அமெரிக்காவில் வேலைவாய்ப்புகள் படித்தவர்களுக்கும், கல்லூரிக் கல்வி என்பது வசதியுள்ளவர்களுக்கு மட்டுமே என்றிருக்கும் மாறாத சூழலில் அரசாங்கத்தின் மேல் கோபமும் ஆத்திரமும் கொண்டிருந்த மக்களின் வாக்குகளே டிரம்ப்பை அதிகார பீடத்தில் அமர்த்தியது. அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற ஹிலரி கிளிண்டன் மேல் நம்பிக்கையிழந்த வாக்காளர்களும், டிரம்ப்பை நன்கு அறிந்திருந்தும் அதிபரான பிறகு அவர் நடத்தையிலும் பேச்சிலும் மாற்றங்கள் இருக்கும் என்று தீவிரமாக நம்பியவர்களும், அவருடைய தேர்தல் வாக்குறுதிகளில் நம்பிக்கை கொண்ட வெள்ளை அமெரிக்கர்களும், வாக்களிக்காத பொது மக்களும் டிரம்ப்பின் பிரமாண்ட வெற்றிக்கு காரணமாயினர்

பொதுத்தேர்தலில் ட்ரம்ப்பை விட ஹிலாரி கிளிண்டன் 2.87 மில்லியன் அதிக ஓட்டுகள் பெற்றிருந்தாலும்

எலெக்டோரல் காலேஜ் சிஸ்டம் முறையில் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதால் அதில் வெற்றி பெற்று அதிபரானவர் தான் டிரம்ப்.

பதவியேற்றவுடன் அகதிகள் குடியேற்றத்திற்கு அவர் விதித்த தடை இஸ்லாம் மதத்தினவரை வேற்றுமைப்படுத்துகிறதோ என்று நீதித்துறையும் அத்தடையை நிராகரித்துக் கொண்டே இருந்தது. அரசியல் ஆதாயங்களுக்காக இது வரை கட்சிகள் செய்ய தயங்கிய, சட்ட விரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றும் சட்டத்தில், கடுமையான மாற்றங்கள் கொண்டு வர இரு கட்சிகளும் இணைந்து செயல்பட்டாலும், ஒபாமாகேரை அழித்து புதிய திட்டங்களைக் கொண்டு வர அவர் கட்சியினரின் ஆதரவின்றி ஏதும் செயல்படுத்த முடியாத குழப்ப நிலைக்கு அவரே காரணமாகியுள்ளார். தன்னுடைய அமைச்சகத்தில் பொறுப்பேற்றவர்களுடன் ஏற்படும் கருத்து மோதல்களினால் நிலையற்ற அரசாங்கத்தின் மீது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அவநம்பிக்கையும் , உலக அரங்கில் மற்ற நாடுகளுடன் கொள்கைரீதியாகவும், உடன்படிக்கைகளில் செய்த மாற்றங்களினாலும், நண்பர்களை எதிரிகளாக்கிக் கொண்டு அமெரிக்கா தனித்து செயல்பட வேண்டிய நிலைமையில் இனி வரும் காலங்களில் உலக நாடுகளுடன் உறவுகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் என்ற அச்சமும் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நியமனத்தில் அவருடைய வேட்பாளர் நீல் கோர்ஸச் தேர்ந்தெடுக்கப்பட்டது டிரம்ப்பிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.

நிலக்கரி உற்பத்தித் துறையில் 80,000 பேர் வேலையிழப்பதற்குக் காரணமென கூறி 200 நாடுகள் பங்கேற்கும் பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது உலக அரங்கில் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. ஒப்பந்தத்திலிருந்து வெளியேறி நிலக்கரிச் சுரங்கங்களை மீண்டும் செயல்படுத்துவதும் ட்ரம்ப்பின் தேர்தல் அறிக்கைகளில் ஒன்று.

சிரியா, லிபியா, சூடான்,சோமாலியா, ஏமன், ஈராக், ஈரான் நாடுகளிலிருந்து முஸ்லீம் மக்களை நாட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் தடை உத்தரவை ஹவாய் மற்றும் கலிஃபோர்னியா நீதிமன்றங்கள் சட்டபூர்வமாக நாட்டிற்குள் நுழைபவர்களை மதத்தின் பெயரால் தடை செய்ய முடியாது என்று ட்ரம்ப்பின் கோரிக்கையை நிராகரித்தது. பலத்த எதிர்ப்பிற்குப் பிறகு ஈராக் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக நார்த் கொரியா, வெனிஸுலா பட்டியலில் சேர்க்கப்பட்டு இருந்தாலும் முறையான திட்டவரைவுகள் இல்லாத குழப்ப நிலையில் நீதிமன்ற நிலுவையில் இந்த தடை உத்தரவுகள் உள்ளன.

2000 மைல் சுவருக்கான 25 பில்லியன் டாலர் செலவுகளை மெக்ஸிகோ அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மெக்ஸிகோ நிராகரிக்க, அமெரிக்க சட்டசபையிலும் அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ட்ரம்ப்பின் தேர்தல் அறிக்கையை தோல்வியடைய செய்திருக்கிறது.

தேர்தல் அறிக்கைகளுள் ஒன்றான, ஈரான் மேல் விதிக்கப்பட்ட அணு ஒப்பந்த தடைகளை விலக்கிக் கொள்ள மறுத்திருக்கிறது டிரம்ப் அரசாங்கம். ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் என்பதை அமெரிக்கா ஏற்றுக் கொள்கிறது. டெல் அவிவ்விலிருந்து அமெரிக்க தூதரகம் ஜெருசலேத்திற்கு மாற்றப்படும் என்றும் கூறியுள்ளது, அரபு நாடுகள் மற்றும் பாலஸ்தீனியர்களிடையே புகைச்சலை ஏற்படுத்தியிருந்தாலும் யூதர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.



அவருடைய விநோதமான ட்வீட்களாலும் , ஊடகத்துறை மற்றும் நீதித்துறையை தாக்கி அமெரிக்க ஜனநாயகத்தையும் தன் கருத்துகளுடன் ஒத்துவராதவர்களை அவமானப்படுத்தியும் டிரம்ப் சர்வாதிகாரியாகச் செயல்பட நினைத்தாலும் அரசியலமைப்பு அவரின் செயல்களைத் தடுத்து முறியடித்து நீதியை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. ஒபாமாகேர் நீக்கப்பட வேண்டுமென்ற கருத்திலும் , மெக்ஸிகோ- அமெரிக்க எல்லையில் சுவர் கட்டுவதற்கு அவருடைய கட்சியினரே ஆதரிக்காததும், ஊடகத்துறையின் தொடர் விமரிசனங்கள், அகதிகள் குடியேற்றத்தில் நீதித்துறை அவரின் உத்தரவுகளை மூன்று முறை மறுத்து, அதிபராக இருந்தாலும் நீதித்துறைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதை உணர்த்திக் கொண்டிருப்பதும் சிறிது ஆறுதல் தருவன.

இத்தனை குழப்பங்களுக்கிடையில் அதிபராக பொதுமக்களின் மதிப்பீடுகளில் அதலபாளத்திற்குச் சென்றாலும், அவருடைய ஆதரவாளர்களிடையே அவருடைய செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதே அவரின் பலம். பெருகிவரும் வேலைவாய்ப்புகளும், மேலேறிச் செல்லும் பங்குச்சந்தையும் இன்று வரை அவரின் பலமாக இருந்தாலும் என்று சரியுமோ என்ற அச்சமும் மக்களிடையே இருந்து வருகிறது.

பதவியேற்ற நாளிலிருந்து அவரின் மேல் சுமத்தப்பட்ட பல்வேறு குற்றங்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்டால் அதிபர் பொறுப்பிலிருந்து விலக நேரிடும் நாளையும் ஆவலுடன் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது வாஷிங்டன். ரஷ்யாவுடனான தொடர்பால் நாட்டின் ‘கட்டுப்படுத்தப்பட்ட தகவல்கள்’ எதிரிகளிடம் சிக்கிவிடுமோ என்ற பயமும், அதைத் தொடர்ந்து டிரம்ப் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ரஷ்ய தொடர்புகளை விசாரிக்கும் குழுவினரின் பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டால் அரசியலமமைப்புச் சட்டத்தின்படி டிரம்ப் பதவியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்ற மக்களின் எதிர்பார்ப்பும் பொய்யாகிப் போனது.

அதிபர் பதவியிலிருக்கும் ஒருவர் தன்னுடைய பதவிக்கோ நாட்டு மக்களுக்கோ குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாலோ, லஞ்சம், ஊழல், பெருங்குற்றங்கள் அல்லது தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தாலோ அவரை அப்பதவியிலிருந்து நீக்கும் குற்றச்சாட்டுக்களையும் அதன் தொடர்பான விசாரணைகளையும் மேற்கொள்ளும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவைப் பிரதிநிதிகளுக்கு உண்டு. செனட் விசாரணையும் முடிந்து குற்றங்கள் நிரூபணம் ஆகும் வரை அதிபர் பதவியிலிருப்பவர் ஆட்சியில் தொடர முடியும். இதற்கு முன் இரு அமெரிக்க அதிபர்கள் மீது கண்டனத்தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டிருந்தாலும் அதிபர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்படவில்லை. செனட் விசாரணை முடிந்ததும் அவர்கள் கட்சியினரின் ஆதரவுடன் பதவியில் நீடித்திருக்கிறார்கள்.

ஆபிரகாம் லிங்கனின் மறைவிற்குப் பிறகு துணைத்தலைவராக இருந்த ஆண்ட்ரூ ஜான்சன் அதிபர் பொறுப்பேற்றார். அவருடைய பதவிக்காலத்தில் கறுப்பின அமெரிக்கர்களுக்கு எதிராக கொண்டு வந்த தீர்மானங்களும், ஆபிரகாம் லிங்கனால் நியமிக்கப்பட்டிருந்த செக்ரேட்டரி ஆஃப் வார் பதவியில் இருந்து எட்வின் ஸ்டாண்டன் என்பாரை நீக்கி செனட் ஒப்புதல் பெறாமல் லொரென்ஸோ தாமஸ் என்பவரை நியமித்து அரசியலமைப்புச் சட்டத்தை அவமதித்த குற்றத்திற்காகவும் மேலும் சில பல குற்றச்சாட்டுகளுக்காகவும் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தீர்மானித்திருந்தது. செனட் விசாரணையில் அவருடைய கட்சியினரின் ஒத்துழைப்பால் பதவியில் தொடர்ந்துள்ளார்.

மோனிகா லெவின்ஸ்கியுடன் முறைகேடான உறவில் இருக்கவில்லை என்று மக்கள் மற்றும் சட்டத்தின் முன் பொய் சொன்னதற்கும் வெள்ளை மாளிகை அலுவலர்கள் சிலரை உண்மைக்குப் புறம்பாக விசாரணையில் தனக்குச் சாதகமாக ஒத்துக்கொள்ள பணித்ததற்கும் பில் கிளிண்டன் மேல் குற்றஞ்சாற்றப்பட்டு இருந்தாலும் அதிபரை பதவியில் இருந்து நீக்கும் அளவிற்கு மாபெரும் குற்றங்கள் கிடையாது என்று பதவியில் தொடர அவர் சார்ந்த கட்சியினரின் செனட் ஆதரவும் மக்களின் பேராதரவும் சாதகமாக இருக்க, தன்னுடைய பதவிக்காலம் முடியும் வரை பில் கிளிண்டன் அதிபராக தொடர்ந்தார்.

வாட்டர்கேட் ஊழலில் நடந்த குற்றங்களுக்காகவும் தவறான நடவடிக்கைகளுக்காகவும் ரிச்சர்ட் நிக்சன் குற்றஞ்சாட்டப்பட இருந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்ததால் அவர் தப்பித்தார்.

அடுத்த வருட அதிபர் தேர்தலுக்குத் தயாரான நிலையில் ஜோ பைடன் மகனின் மேல் ஊழல் தொடர்பான விசாரணை நடந்தால் எதிர்கட்சிக்குப் பாதகமாக, அதே வேளையில் தனக்குச் சாதகமாக இருக்கும் என்று தன்னுடைய அரசுக்கு ஒத்துழைக்க உக்ரைன் நாட்டு அதிபரை ட்ரம்ப் நிர்பந்தித்த உரையாடலும் அதைத் தொடர்ந்த அவரது பிரதிநிதிகளின் திரைமறைவுப் பேச்சுவார்த்தைகளும் கண்டனத் தீர்மானத்திற்கு வழிவகுத்திருக்கின்றன. காங்கிரஸிற்கு ஒத்துழைக்க மறுத்தும், சாட்சிகளை விசாரணைக்குச் செல்வதை தடுக்க முயன்றும், அதிபர் பதவிக்குக் குந்தகம் விளைவித்ததாக, நாட்டின் நலன் கருதி டிரம்ப் மேல் காங்கிரசால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு நீதித்துறையின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. அதற்குப் பிறகு செனட் விசாரணை நடக்க வேண்டும். அதில் நிரூபணம் செய்யப்பட்டால் மட்டுமே அதிபர் பதவியிலிருந்து அவரை விலக்க முடியும். இல்லையென்றால் அதையும் தன் மேல் வீணாக பழி சுமத்தியதாக கூறி வாக்குகளைச் சேகரிக்க தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள விழைவார் டிரம்ப்.

இன்று குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் அதிபர் செனட் விசாரணையில் தப்பிப்பாரா? அவருடைய கட்சியினரின் ஆதரவு இருக்குமா? அப்படியே நீடித்தாலும் 2020 தேர்தல் அவருக்குச் சாதகமாகஅமையுமா? எதிர்க்கட்சி வேட்பாளர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்ற ட்ரம்ப்பின் கனவு பலிக்குமா? தன்னுடைய ஆட்சியில் குறைந்திருக்கும் வேலையில்லா எண்ணிக்கையும், இதுவரை சரிவை நோக்கிச் செல்லாத பொருளாதாரமும், ஹெச்1பி விசாவில் கொண்டு வந்த மாற்றங்களும், வெளிநாட்டிற்குச் சென்ற நிறுவனங்களின் மேல் விதித்த அதிக வரியும், உலக அரங்கில் அமெரிக்காவின் செலவுகளை கட்டுப்படுத்தியதும் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற வழிவகுக்குமா என்பதை இனிவரும் காலங்களில் அரங்கேறப் போகும் செனட் விசாரணையும் அடுத்த வருட தேர்தல் களேபரங்களும் நிர்ணயிக்கும்.

உள்ளாட்சி மற்றும் இடைத்தேர்தல்கள் மக்களின் எண்ணங்களையும் அதிபரின் ஆட்சியில் அதிருப்தி கொண்டதையும் பிரதிபலிப்பதால் மக்களை எதிர்கொள்ள குடியரசுக்கட்சியினர் அச்சத்துடனும் ஜனநாயக கட்சியினர் செனட் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை மீட்டெடுத்து பெரும்பான்மை கட்சியினராக வலம் வரும் நாளுக்காகவும் காத்திருக்கிறார்கள். ஜனநாயக கட்சியினரின் மேல் இருந்த அதிருப்தியில் மக்களிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதா? அக்கட்சி அதிபர் வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகள் மக்களுக்கு நம்பிக்கையூட்டுகிறதா என்பதை 2020 தேர்தல் களமே தீர்மானிக்கும். எக்காரணங்களுக்காகவும் கட்சியை விட்டுக் கொடுக்க வேட்பாளர்களோ கட்சித்தலைமையோ விரும்புவதில்லை. நாட்டு மக்களின் நலன் இரண்டாம் பட்சம் தான் என்பதே நிதர்சனம்!

Wednesday, February 5, 2020

கே.டி


பெற்றவரே ஆனாலும் மூப்பும் நோயும் வந்த பிறகு யார் அவரைப்  பார்த்துக் கொள்வது, செலவுகளைச் சமாளிப்பது என்பதில் ஆரம்பித்து சொத்து பத்திரத்தில் கையொப்பம் வாங்கிக் கொண்டு அவர் கதையை முடித்து விட வேண்டும் என்ற கொடிய எண்ணம் பெற்ற குழந்தைகளிடையே வருவதை எண்ணி வெட்கி தலைகுனிய வைக்கிறது இப்படம்.

ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு பெற்றவர்களைப் புறக்கணிக்க ஆயிரம் காரணங்கள். திருமணமான மகனோ, மகளோ தத்தம் குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய நிர்பந்தம். பெற்றோர்களுடன் செலவிடும் நேரங்களும் குறைவு. அவர்களுடைய ஆசைகள், விருப்பங்களைக் கேட்டுக் கொள்வதுமில்லை. அப்படியே கேட்டுக் கொண்டாலும் இந்த வயதில் உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என்று அவர்கள் வாயை எளிதில் கட்டிப்போட முடிகிறது. நாளைக்கு நமக்கும் அது தான் நிலைமை என்று யோசிக்காமலே!

துணையை இழந்த மனிதர்கள் அதுவும் மனைவியை இழந்த கணவர்களின் நிலைமை மிகவும் கொடூரம் தான். இப்படத்தில் அந்த முதியவர் தான் விரும்பிச் சாப்பிடும் பிரியாணியை ரசித்து ருசித்து உண்பது, தன்னுடைய சிறுவயது ஆசைகள் நிறைவேறுகையில் குழந்தையைப் போல் துள்ளிக் குதித்து மனம் திறந்து சிரிப்பது... வயதானவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறது இப்படம்.

முதுமையில் அவர்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் கனிவான பேச்சும், அனுசரணையும், அன்பும் ஆதரவும் தான். நாளை நம்முடைய நிலைமையும் இதுதான். யோசித்து நடப்போமா?

படம் முழுவதும் கூடவே பயணிக்கும் இயற்கை எழில் சூழ்ந்த கிராமம், வெள்ளந்தி மனிதர்கள், கோவில், குளம், மலைகளும் அழகு.










ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...