Thursday, May 30, 2019

Prom night


மே மாதம் என்றாலே மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்று (ஜூனியர் வருடம்) மற்றும் பன்னிரண்டாம் (சீனியர் வருடம்) வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கொண்டாட்டமான மாதம். இம்மாதத்தில் தான் ஒரு மாலையில் ஜூனியர் ப்ராம் மற்றும் சீனியர் ப்ராம் கொண்டாடுகிறார்கள். நண்பர்களுடன் கூடி ஆடி மகிழும் சில மணிநேர குதூகலமான நிகழ்ச்சி இது. மறக்க முடியாத தருணங்களும் கூட! கல்லூரி இறுதியாண்டில் நடந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சி பள்ளி இறுதி ஆண்டிலும் ஆரம்பித்துப் பல வருடங்களாக சிறப்பாக நடந்து வருகிறது.

மேல்நிலைப்பள்ளிகளில் "டான்ஸ் நைட்" என்று வருட இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியின் ஸ்டைலிஷ் வெர்ஷன் தான் இந்த "ப்ராம் நைட்". மாணவிகள் அழகழகு உடைகளில் வலம் வர, மாணவர்கள் அந்த இரவுக்கென்றே பிரத்தியேகமான tuxedo அணிந்து கொண்டு தங்களுடைய நண்பர்களுடன் உண்டு ஆடி மகிழும் நாள். உடைகள் வாங்குவதில், தலையலங்காரம் செய்து கொள்வதில் என்று படிப்புடன் இதற்காகவும் நேரத்தைச் செலவழிக்கும் குழந்தைகளுக்காக கையிருப்புகளைச் செலவழிப்பார்கள் பெற்றோர்கள். வேறு வழியில்லை என்பது தான் நிதர்சனம்.

மகளின் ப்ராம் நைட் அன்று லிமோசின் வண்டியை ஒரு மணிநேரத்திற்கு வாடகை எடுத்துக் கொண்டு அதில் அவள் தோழிகள் நால்வருடன் நகரை வலம் வந்து நடன நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று ஆடிப்பாடி உண்டு மகிழ்ந்து இனிய நினைவுகளுடன் வந்தார்கள். அவளுடைய தோழிகளில் ஒருவர் 500 டாலருக்கு உடை வாங்கியது கண்டு பெருத்த அதிர்ச்சி எனக்கு! மகளும் அவளுக்குப் பிடித்த உடையை 100 டாலருக்குள் வாங்கிக் கொண்டாள். நிகழ்ச்சி நாளன்று தலையலங்காரத்துக்கென தனி செலவு! அங்கு வந்திருந்த மாணவிகளைப் பார்த்த பொழுது ஏதோ ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்குச் செல்வது போல் அத்தனை அலங்காரம்! விலையுர்ந்த ஆடைகள்! பிரமிப்பாகத் தான் இருந்தது!

சென்ற வாரம் சுப்பிரமணியும் அவன் நண்பர்களுடன் சென்று வந்தான். மகளுக்குச் செய்த செலவுகளை விட அதிகமாக செலவழிக்க வேண்டியிருந்தது!

இந்த ஓரிரவுக்காக பெண்கள் உடைகளுக்காகவும் அலங்காரங்களுக்காகவும் குறைந்தபட்சம் $150 வரை செலவு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் இதில் கொஞ்சம் தாராளம். அதிக செலவுகள் செய்வோரும் உண்டு! செலவிற்குப் பயந்தும் இதெல்லாம் ஹராம் என்று நினைப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இதில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. வாழ்வில் ஒரு அங்கமாக நண்பர்களுடன் இனிமையாக கழியும் பொழுதுகள். இதில் ஒன்றும் தவறு இல்லை. அவர்களே வேண்டாம் என்றால் ஒகே. அமெரிக்கா வந்த பிறகு இது நம் கலாச்சாரம் பண்பாடு இல்லை என்று கூச்சல் போட்டு தவறு செய்து விடுவார்களோ என்று அஞ்சுபவர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள். அதிக ஆசையுடன் தத்தம் நண்பர்களுடன் இந்நிகழ்ச்சிக்குச் செல்ல ஆசைப்படும் குழந்தைகளைத் தடுப்பதால் வருத்தம் மட்டுமல்ல பெற்றோர்கள் சொல்லும் காரணங்களின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு இந்த அனுபவத்தைத் தவற விடும் குழந்தைகள் பின்னாளில் பெற்றோர்கள் மேல் கோபபப்படவும் செய்யலாம்.

இந்நிகழ்ச்சிக்குச் செல்ல அனுமதிச்சீட்டின் விலை $85. இது அரங்கம், உணவு, டிஜேக்கான செலவிற்காக. இது மட்டுமா? மாணவன் ஒருவன் மாணவியை தன்னுடைய "ப்ராம் டேட்" ஆக அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் அவளுக்கும் சேர்த்தே அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும். பூங்கொத்து செலவு வேறு தனி! இதற்காக முறையாக அவளின் அனுமதி பெற வேண்டும். சில மாணவிகள் மாணவர்களை நிராகரிப்பதும் நடக்கிறது. அதற்காக ஆசிட் வீச்சு என்று வன்முறையில் எல்லாம் இறங்குவதில்லை. பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள் மாணவர்கள். இந்த மனமுதிர்ச்சியில் தான் நாம் பின் தங்கியிருக்கிறோமோ? இங்கு தான் வேறுபடுகிறோமோ?

சுப்பிரமணியிடம் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இது ஒரு நல்ல நிகழ்ச்சி தான். ஆனால் இந்த பகட்டும் ஆடம்பரமும் தேவையில்லாத ஒன்று என்று தெரிந்து கொண்டதாக கூறினான். தன்னுடன் படிக்கும் இந்திய மாணவி ஒருத்தி மட்டும் சேலையில் வந்திருந்தாள். "I respect you." என்று அவளை பாராட்டியதாகச் சொல்லி, ஏன் இத்தனை செலவு செய்து உடைகள், அதுவும் சில மணிநேரங்களுக்காக கிரிமினல் வேஸ்ட் என்று செலவு செய்ததை எண்ணி வருத்தப்பட்டான். இந்நிகழ்ச்சியை வைத்து எப்படி வியாபாரம் செய்கிறார்கள்? மக்களை எப்படி மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள் என்றும் ஆச்சரியப்பட்டான்! 

பூக்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள், வாடகை லிமோசின் வண்டிகள், நிகழ்ச்சிக்குப் பின்னான பார்ட்டிகள், உணவுகள், நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் என்று ஒரு பெரிய தொழிலாகவே மாறி பலதரப்பட்ட நிறுவனங்களுக்கும் லாபகரமான மாதம் இது.

இத்தனை செலவுகள் செய்து இந்த நிகழ்ச்சி தேவையில்லை. ஆடம்பரமில்லாமலும் நன்றாகவே கொண்டாட முடியும். ஆனால், அமெரிக்காவில் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் மக்களைச் செலவு செய்ய வைக்கும் நிறுவனங்களின் தந்திரங்கள் நிறைய இருக்கிறது. இவர்களாகவே போலியான ஒரு பிம்பத்தை தோற்றுவித்து  விளம்பரங்கள் வாயிலாக மக்களின் மனதிலும்  அதனை நிறுவி  விற்பனைகள் மூலமாக  கொள்ளை லாபம் பார்ப்பதில் இவர்களை அடித்துக் கொள்ளவே முடியாது!








Sunday, May 26, 2019

இருண்ட காலத்தை நோக்கி ...



பெண்களைப் பாதிக்கும் வகையில் பல அமெரிக்க மாநிலங்களில் கொண்டு வரப்பட்டிருக்கும் சட்ட மாறுதல்கள் மக்களிடையே பெருங்கொந்தளிப்பை ஏற்பட்டுள்ள்ளது. ஜார்ஜியா மாநிலத்தில் மே 13ந் தேதி கருக்கலைப்பு தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தில் கருவுற்ற பெண் ஆறு வாரத்திற்குள் அதாவது கருவின் இதயத்துடிப்பு கேட்பதற்கு முன் கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற சட்ட மாறுதலுக்கு கவர்னர் கையொப்பமிட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஒப்புதல் பெற்று விட்டால் 2020லிருந்து இச்சட்டம் அமலாக்கப்பட்டு விடும்.

இதனைத் தொடர்ந்து மிகவும் கடுமையான கருக்கலைப்புச் சட்டம் ஒன்றை 2019 மே மாதம் 15ந் தேதி அலபாமா மாநிலங்களவைக் கூட்டத்தில் 'Pro Life Law' என்று அமல்படுத்தியிருக்கிறார்கள். இச்சட்டத்தின் படி, கருவுற்ற நாளிலிருந்து எட்டு வாரங்களுக்குப் பிறகு கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாது. கருக்கலைப்பை கொலைக் குற்றமாகவும் கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக மருத்துவருக்கு 99 ஆண்டுகள் வரை தண்டனையும் இச்சட்டத்தால் வழங்க இயலும். கவனமற்ற முறையில் நடந்த கர்ப்பம், பிறந்த குழந்தையை வளர்க்க போதிய நிதி நிலைமை இல்லாத சூழல், குழந்தை தற்பொழுது வேண்டாம் என்று எடுக்கும் முடிவுகளால் இனி கருக்கலைப்பு செய்து கொள்ள முடியாது. இச்சட்டம் வன்புணர்வினால் கருவுறும் பெண்களையும் கூட கருத்தில் கொள்ளவில்லை என்பதே பலரின் எதிர்ப்பிற்கும் காரணம். கருவைச் சுமக்கும் பெண்ணின் உடல்நிலை அபாய நிலையில் இருக்கும் ஒரே ஒரு காரணத்திற்காக மட்டுமே சட்டப்படி கருக்கலைப்பு செய்ய முடியும். இது பெண்களுக்கெதிராக இழைக்கப்பட்ட அநீதி என்று பலரும் கொந்தளிக்கும் நிலையில் வலது சாரி ஆளுங்கட்சியினரும் அவர்கள் சார்பு கொண்டவர்களும் உயிரைக் கொலை செய்வதைத் தடுக்கிறோம் என்று வாதிட்டு இச்சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

எட்டு வாரங்களுக்குப் பிறகான கருக்கலைப்பு என்பது மூளை, இதயம் வளர்ச்சியடைந்த நிலையில் ஒரு உயிரைக் கொலை செய்வது போலத்தான் என்கிறது இச்சட்டம். கருவைச் சுமக்கும் பெண்ணிற்கு இருக்கும் அதே வாழ்வுரிமை வளரும் கருவிற்கும் உண்டு. அதனால் கருக்கலைப்பைக் கொலைக்குற்றமாக கருத வேண்டும். மனிதர்கள் தவறு செய்கிறோம் என்பதைக் கூட மறந்து இத்தகைய கொலைபாதக செயலைச் செய்து வருவதை தடுப்பதாக இந்தச் சட்டம் அறிவுறுத்துகிறது என்று வாதிடுகிறார்கள் சட்டமியற்றியவர்கள்.

அலபாமாவில் குழந்தைகள் வேண்டாம் என்பவர்கள் அதற்கான பாதுகாப்பு முறைகளைக் கையாள வேண்டும். அதையும் மீறி கரு உண்டானால் தற்போதைய புதிய சட்டத்தின் படி கருக்கலைப்பு காலம் முடிந்த பின்னர் எதுவும் செய்து கொள்ள முடியாது. இதனால் கரு உருவானது அறியும் முன்னே சட்டப்படி கருக்கலைப்பிற்கான காலத்தையும் கடந்து விட்டிருக்கும் பெண்கள் குழந்தைப்பெற்றுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். கருவைச் சுமக்க போதிய உடல் வலிமை இல்லாத பெண்களின் இறப்பு விகிதமும் அதிகமாகும்.

வளர்ந்து வரும் நாடுகளில் வருடத்திற்கு 25 மில்லியன் கருக்கலைப்புகள் பெரும்பாலும் தவறான உறவுகளாலும் அல்லது கருக்கலைப்பு தடைவிதிக்கப்பட்டிருக்கிற காரணத்தினால் அபாயகரமான வழியில் மேற்கொள்ளப்படும் கருக்கலைப்புகளால் நடந்து வருவதாகவும் அதில் 7 மில்லியன் பெண்கள் வரை பாதிக்கப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் வாய்ப்புக்களே அதிகம்!

இப்புதிய சட்டம் வருமுன்னே 2014ம் ஆண்டிலேயே பல countyகளிலும் தொண்ணூறு சதவிகிதம் கருக்கலைப்பு மருத்துவமனைகள் மூடப்பட்டிருக்கிறது. டிரம்ப் ஆட்சியில் Planned Parenthood, கருத்தடை மற்றும் பாதுகாப்பான இனப்பெருக்க முறைக்காக ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதிகளையும் தடைசெய்ய முயல்கிறார்கள். இதனால் அதிகம் பாதிக்கப்படப்போவது போதிய ஊதியம் இல்லாத கல்வியறிவு குறைந்த வறுமையில் வாடும் புறநகர் மக்களே! அதிலும் பெரும்பான்மையினர் வெள்ளை அமெரிக்கர்கள் அல்லாதாவர்களாம். திட்டமிட்டே பெண்களின் மீதான வன்முறையை குழந்தைகளின் உயிரைக் காப்பதாக தங்கள் மத நம்பிக்கையினை திணிப்பதற்கும் இந்த அரசாங்கம் முயன்று வருகிறது. பெற்றவர்களால் வளர்க்க முடியாத சூழ்நிலையிலும் உண்டான கருவை பெற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று கூறும் அரசோ, இச்சட்டத்திற்கு ஆதரவாக இருப்பவர்களோ பிறந்த குழந்தையினை நல்முறையில் வளர்க்க உத்தரவாதம் தர முடியுமா?

குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு வறுமையிலோ, முறையான கல்வி பெற வழியில்லாமல் வேலையில்லாமல் தீய வழிகளில் ஈடுபட்டு அரசாங்கத்திற்குப் பாரமாய் இருப்பதை விட கருவில் அழிப்பதில் என்ன தவறு என்று வாதிடும் பெண்களுக்கு அரசாங்கத்தின் பதில் பெண்களை மட்டுமே பாதிக்கும் வகையில் இருப்பது தான் இன்று போராட்டங்கள் நடைபெற காரணமாகி இருக்கிறது. பெண்ணை கர்ப்பமாகிவிட்டு ஆண் விலகிச்செல்ல, அந்நிலையில் பிறக்கும் குழந்தைக்கு முழுப்பொறுப்பேற்க முடியாத நிலையில் பெண்ணால் கருக்கலைப்பு செய்து பிறக்கப் போகும் குழந்தை எதிர்கொள்ளப் போகும் அபாயங்களிலிருந்து காப்பாற்ற முடிவதை இப்பொழுது தடை விதித்திருக்கிறார்கள். ஆனால் சம்பந்தப்பட்ட ஆண் இத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியும். குழந்தைச்செலவிற்கு பணம் மட்டுமே கொடுத்து ஒதுங்கிக் கொள்ள முடியும். அதுவும் அவ்வளவு எளிதாக கொடுத்து விட மாட்டார்கள். முடிந்தவரை பெண்களை அலைக்கழிக்கவே பார்ப்பார்கள். குழந்தை வளர்க்கும் பொறுப்பும் இல்லை. சில இடங்களில் ஆணே கருக்கலைப்புக்கு ஒப்புதல் அளித்தாலும் இனி அதுவும் முடியாது. எப்படியும் பெண்ணே எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு இச்சட்டம் கொண்டு வந்துள்ளது.

"கருக்கலைப்பை முடிவு செய்யும் உரிமை கருவுற்றிருக்கும் பெண்ணிற்கே" என்று நாற்பத்தியாறு வருடங்களாக நிலவி வந்த அரசியலமைப்புச் சட்டத்தை 'Pro Life Law' மூலமாக மாநிலங்களில் தடை விதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.ஆளும் கட்சியினரின் அதிகார பலத்தால் உச்சநீதி மன்றத்திலும் ஒப்புதல் பெற்றுவிடும் சாத்தியக்கூறுகளே அதிகம். அலபாமா மாநிலத்தைத் தொடர்ந்து மிசௌரி, ஓஹையோ, யூட்டா மாநிலங்களும் இச்சட்டத்தை அமல்படுத்த முன்னெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து மத்தியில் ஆளும் கட்சியினரின் அதிகாரத்தில் இருக்கும் வேறு பல மாநிலங்களிலும் சட்ட மாற்றங்கள் கொண்டு வர முனைகிறார்கள்.

பெண்களின் உரிமையைப் பாதுகாக்கும், பாதுகாக்க நினைக்கும் அதிபராக வருபவராலும் கட்சியினராலும்  மட்டுமே இச்சட்டத்தில் சில மாற்றங்கள் கொண்டு வர இயலும். அதுவும் அவர்கள் பெருமளவில் வெற்றி பெற்றால் மட்டுமே! மாநிலத்தில் இச்சட்டம் இருந்தாலும் மத்தியில் கொண்டு வரும் சட்டம் அதனை ரத்து செய்யும் வகையிலும் இப்புதிய சட்டத்தை எதிர்த்துப் பெண்களின் உரிமையைக் காப்போம் என்றும் பேட்டி அளித்துள்ளார்கள் ஜனநாயக கட்சியினர் சார்பில் அதிபராக போட்டியிடும் சிலர். சமீபத்திய கருத்துக்கணிப்பில் 71 சதவிகித மக்கள் புதிய சட்ட மாறுதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள். அதில் 52 சதவிகித்தனர் குடியரசுக்கட்சியினர். பெண்களின் உரிமையைப் பாதுகாக்கும் சட்டத்தையும் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ வசதிகளையும் அளிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உள்ளது. அமெரிக்கப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைந்தால் சாத்தியப்படலாம். அது கிடைக்கும் வரை போராடித்தான் ஆக வேண்டும்.

மக்களிடையே கருத்தடை விழிப்புணர்வும்,  முறைகளும் இன்னும் அதிக அளவில் ஏற்படுத்துவது ஒன்று தான் தீர்வாக இருக்க முடியும். இச்சட்டங்கள் மென்மேலும் குற்றவாளிகளையும், மனநோயாளிகளையும், மன, உடல் வளர்ச்சிக்கு குன்றிய குழந்தைகள் பிறப்பை அதிகரிக்கவே செய்யும். மருத்துவமனைக்குச் செல்ல இயலாத சூழலில் கருக்கலைப்பைச்  செய்ய முனைய,  சிறை செல்லும் பெண்களின் எண்ணிக்கையும் கூடும். அவர்களை கொலைகாரர்களாக பாவித்து சட்டங்கள் தண்டிக்கும். இதெல்லாம் எதற்காக?

பெண்ணின் உடலைக் கட்டுப்படுத்தும் ஆணின் சிந்தனைப்போக்கில் சிறிதளவிலும் மாற்றம் ஏற்படாத நிலையை ஒன்றே இச்சட்டம் பறைசாற்றுகிறது. கருவுறும் பெண்ணைக் குறைகூறும் சமுதாயம் ஆணை மட்டும் விட்டு விடுகிறது. முன்னேறிய நாடு என்று தன்னைப் பறைச்சாற்றிக்கொள்ளும் அமெரிக்காவில் இந்த நூற்றாண்டிலும் பெண்களுக்கெதிரான அநீதி தொடர்வதும் அதை எதிர்த்துப் பெண்கள் போராட வேண்டிய துரதிர்ஷ்ட நிலைமையும் வருந்தத்தக்கதே!

இப்போராட்டத்தில் பெண்களுக்கு ஆதரவாக நிற்கும் ஆண்கள் அனைவருக்கும் நன்றி.





































































































































































































































































































































































































































































































































































































































































































































Friday, May 24, 2019

மஹாயான புத்தர் கோவில்


ஆல்பனியிலிருந்து ஒரு மணி நேரத்தொலைவில் கெய்ரோ நகரில் உள்ள இரண்டு புத்த மடாலயங்களில் ஒன்று இந்த மஹாயான புத்தர் கோவில். பௌத்த மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றான மஹாயான பௌத்த நெறிமுறைகளைக் கடைப்பிடிக்கும் புலம்பெயர்ந்த சீனர்கள் இங்கு வந்து வழிபடுகிறார்கள். அழகான மலைச்சூழலில் 166.5 ஏக்கர் பரப்பளவில் தியான மண்டபங்களுடன் அமைந்துள்ள இக்கோவில் மனதிற்கு அமைதியையும், கலையுணர்வுடன் கட்டப்பட்டிருக்கும் வெவ்வேறு கட்டடங்கள் கண்களுக்கு விருந்தாகவும் அமைந்திருக்கிறது. சிறு குளங்கள், தோட்டங்களென ரம்மியமான சூழ்நிலை.

நுழைவாயிலில் ஏழு மாடிகளுடன் உயர்ந்து நிற்கும் Jade Pagodaவில் தியான ரூபத்தில் அமைதி தவழும் புத்தரின் உருவச்சிலை ஒவ்வொரு மாடி அறையிலும். ஏழாவது மாடியிலிருந்து மற்ற ஐந்து கோவில் மணடபங்களையும் காண முடிகிறது.

விடுமுறை நாட்களில்  குழந்தைகளுக்கு புத்தரின் வரலாறு, போதனைகள், தியான வகுப்புகளும், சீன கொண்டாட்ட நாட்களில் மக்கள் கூடுமிடமாகவும், சிறப்பு வழிபாடுகளுமாக உள்ளது. புத்த துறவிகள் வகுப்பெடுத்தும் வழிபாடுகள் செய்தும் கொண்டிருந்தார்கள். நாங்கள் சென்றிருந்த நாளில் பெரும்பாலும் ஆங்கிலம் தெரியாத வயதான சீனர்களையே காண முடிந்தது.

ஒரு கோவில் மண்டபத்தில் புத்த மதக் கொள்கை, கோட்பாடுகளுடன் வாழ்ந்த போதிசத்வர்களின் ஐநூறு  சிலைகள் பார்க்கவே பிரமிக்க வைக்கும் வகையில் அமைத்திருக்கிறார்கள். கோவில் மண்டப வெளியில் ஆக்ரோஷமாக , சாந்தமாக என பலவித முகபாவனைகளுடன் போதிசத்வர் சிலைகள். மூலவர் போன்று பெரிய சிலைகள் கோவில்களின் உள்ளே. விவரங்கள் தான் தெரியவில்லை. அங்கிருந்தவர்களுக்கு ஆங்கிலத்தில் விளக்கிச் சொல்லவும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.


1962ல் ஒரு கோவிலில் ஆரம்பித்து இன்று ஆறு கோவில்கள் அவ்வளாகத்தில் பரவி நிற்கிறது. இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையவும், மறுபிறவியில் புத்தரின் பாதையைத் தேர்ந்தெடுத்து வழிநடக்கவும் , நன்றி நவிலழும்  அதற்கான சிறப்பு வழிபாடுகளும் இங்கு நடைபெறுகிறது.

நியூயார்க் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்களில் பழமையான இக்கோவிலும் ஒன்று.


மஹாயான புத்தர் கோவில் படங்கள்...

Thursday, May 16, 2019

திரும்பிப்பார்க்கிறேன் - போராட்ட வாழ்க்கை

மகளின் கல்லூரி இறுதியாண்டில் வகுப்புகள், தேர்வுகள், ஆராய்ச்சிக்கட்டுரைகள் என்று நேரமில்லாமல் அவள் ஓடிக்கொண்டிருந்த காலமது! மேற்படிப்பா அல்லது வேலைவாய்ப்பா என்று முடிவு செய்து வார இறுதிகளில் பாஸ்டன், வாஷிங்டன், நியூயார்க் என்று எங்கெங்கு வேலைவாய்ப்புக்காக நிறுவனங்கள் இணைந்து வழங்கும் ஜாப் ஃபேர் நடக்கிறதோ அதற்கும் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தாள். அங்கு அவளுடைய பயோடேட்டா கொடுத்து முதற்கட்ட இண்டர்வியூக்கள் முடிந்த நிறுவனங்களில் ஒன்று நேர்முகத்தேர்வுக்காக அவளை நார்த் கரோலினாவில் இருக்கும் அவர்களுடைய அலுவலகத்திற்கு வரச் சொல்லி அவளும் காலை வகுப்புகளை முடித்துக் கொண்டு மதிய உணவு எடுத்துக் கொள்ளக்கூட நேரமில்லாமல் கல்லூரியிலிருந்து ஒன்றரை மணிநேர ரயில் பயணத்தில் நியூயார்க் நகரம் சென்று அங்கிருந்து வேறொரு ரயிலில் 45 நிமிட பயணம் மேற்கொண்டு பிறகு ஏர்ட்ரெயின் மூலம் 15-20 நிமிடங்களில் விமான நிலையத்திற்குச் சென்றடையும் பொழுது மணி 4.30. அங்கு சென்றடையும் வரை எங்களுக்குத் தகவல்கள் சொல்லிக் கொண்டே இருந்தாள்.

சுப்பிரமணியை பள்ளியிலிருந்து அழைத்து வரும் பொழுதே இடியும் மின்னலுமாய் மழை கொட்டிக் கொண்டிருந்தது. தொலைக்காட்சிச் செய்திகளில் நியூயார்க் நகரத்திலும் அதிமழை, இடி, மின்னல் என்ற பொழுது தான் அடடா! இந்தச் சூழ்நிலையில்... நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மகளிடமிருந்து ஃபோன்.

அம்மா...இங்கே ஒரே கலவரமா இருக்கு. நான் போற விமானம் இப்போதைக்குப் போகாது லேட்டாகும்ங்கிறாங்க. ஒரே கூச்சலும் குழப்பமாவும் இருக்கு. அனேகமா எல்லா ஃப்ளைட்ஸ்ம் கான்சல் பண்ணிடுவாங்க போல!

அடுத்த ஃப்ளைட் எத்தனை மணிக்கு?

எட்டு மணிக்கு.

நீ ஊருக்குப் போய்ச் சேர லேட்டாய்டுமே! அங்க இருந்து தங்கப்போற ஹோட்டலுக்கு அரைமணி நேரமாவது ஆகும். ராத்திரி பத்து பத்தரை ஆயிடும். புது ஊர் வேற!

என்ன பண்ணலாம்மா? கேட்கும் பொழுதே அழுகைக்குத் தயாராகும் குரல்!

நான் இந்த இண்டர்வியூக்காக எதுவுமே தயார் பண்ண நேரமில்லை. புரஃபஸர் வேற அடிக்கடி க்ளாஸ் கட் பண்ணிட்டுப் போறே. ஃபெயில் பண்ணிடுவேன்னு சொல்லி இருக்கார். நேரத்துக்குப் போய் சேர்ந்துட்டு நைட் கொஞ்சம் பார்த்துக்கலாம்னு இருந்தேன். எனக்கு நம்பிக்கையே இல்லை. அந்த ஆஃபீஸ்ல வேற யாரையும் காண்டாக்ட் பண்ண முடியலை. இங்கே ஒரே தள்ளுமுள்ளா இருக்கு. எனக்கு மட்டும் ஏன் இப்படி?

பசி மயக்கம், எதிர்பாராத தடங்கல்கள், தயார் பண்ணிக்கொள்ளாத நேர்முகத்தேர்வினை எதிர்கொள்ளப் போகும் பதட்டம், வகுப்பில் ஆசிரியரின் கண்டிப்பு என்று நினைத்தபடி எதுவும் நடக்காத நிலையில் மொத்தமும் கனமாக அழுத்தியதில் அழ ஆரம்பித்து விட்டாள்.

சே! தனியாக மகளின் முதல் விமானப்பயணம்! இப்படியா இருக்க வேண்டும்? ஏன் தான் என் குழந்தைகளுக்கு மட்டும் இப்படி!

அழாதே! அப்பா வேணா வரட்டுமா? நீ போய்த்தான் ஆகணும்னா நாளைக்கு காலையில கிடைக்கிற முதல் ஃப்ளைட்ல போற மாதிரி கேளு.

சரிம்மா... அங்க கவுண்டர்ல ஏதோ சொல்றாங்க. கேட்டுட்டு வர்றேன்.

இப்ப என்ன பண்ணலாம்? நான் போயிட்டு வரவா? பாவம் இவ்வளவு கஷ்டப்படறா. கலக்கத்துடன் கணவர்.

நீங்க எப்படி இந்த மழையில நாலு மணிநேரம் அப்புறம் ராத்திரி முழுக்க ஓட்டினாலும் போய்ச்சேர காலையில பத்து மணியாயிடும்! ஒரு சமாதானத்துக்காகத் தான் சொன்னேன். நீங்க மட்டும் ஒட்டுறதும் கஷ்டம். போனா இவனையும் கூட்டிட்டு நாம எல்லாரும் சேர்ந்து தான் போகணும் இல்லைன்னா அந்த கம்பெனியை கூப்பிட்டு வேற நாள்ல இண்டர்வியூ வைக்கச் சொல்லணும். நானும் ஈமெயில் அனுப்பிட்டேன். ஃபோன்ல மெசேஜ் கூட விட்டுட்டேன். ஆஃபிஸ் நேரம் முடிஞ்சதனால யாரும் பார்த்திருக்க மாட்டாங்க. வெய்ட் பண்ணுவோம்.

அம்மா...நாளைக்கு காலையில ஆறு மணிக்கு ஒரு ஃப்ளைட் இருக்கு. டிக்கெட் கொடுத்துட்டாங்க. இப்ப என்ன பண்றது?

நீ திருப்பி காலேஜ்க்குப் போயிட்டு நாளைக்கு காலையில மூணு மணிக்கு கிளம்பி வர்றது நடக்கிற காரியம் இல்ல. பக்கத்துல ஹோட்டல் இருந்தா அங்க போய் தங்கிட்டு காலையில வந்திடலாம். ஏர்போர்ட்ல இருக்கிற ஹோட்டல் கவுண்டர்ல ஏதாவது ஒன்னை புக் பண்றியா இல்ல நான் பண்ணவா?

வேண்டாம் நானே பண்ணிடறேன் என்று சொல்லி விட்டுச் சென்றவள் மீண்டும்.... சே! இங்கேயும் கூட்டம்மா. நான் ஆன்லைன்ல பக்கத்துல இருக்கிற ஹோட்டல் ரூம் புக் பண்ணிடறேன்.

மொத்தமா ஃப்ளைட் எல்லாத்தையும் கான்சல் பண்ணியிருப்பாங்க. மழை கொட்டிக்கிட்டு இருக்கிறதால அவங்களும் வேற என்ன பண்ண முடியும்?

அப்படியே ஏர்போர்ட் டாக்ஸி புக் பண்ணிடு.

சரிம்மா.

ஹோட்டல் ரூம் கிடைத்து டாக்ஸி கிடைக்கவில்லை.

வெளியில் சென்று ஏதோ ஒரு டாக்ஸியில் ஏறி ஹோட்டலுக்குத் தான் போயிட்டு இருக்கேன். அங்க போய்ச் சேர்ந்தவுடன கூப்பிடவா?

வேண்டாம் வேண்டாம். நீ ஃபோன்லேயே இரு.

அம்மா, வண்டியில GPS இல்லையாம். ஃபோன் GPS வேணுமாம்.

GPS இல்லாதவன்லாம் எதுக்கு நியூயார்க்ல வண்டிய ஒட்டிக்கிட்டு இருக்கான். நீ ஸ்பீக்கர்ல போடு. அவன் வண்டியில இருக்கிற ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர், கார் நம்பர் டீடைல்ஸ்லாம் அவனுக்கும் கேட்குற மாதிரி சொல்லிட்டே வா. எந்த பக்கம் போகுதுன்னு அப்பப்ப அப்டேட் பண்ணிட்டே இரு.

அதற்குள் அந்த டிரைவரும் GPSல் வழியைப் போடச் சொல்ல...

ஒரே மழை! ஒண்ணுமே தெரியலை! எங்கே போகிறோம் என்று தெரியாமல் மகள். எந்த வண்டியில் ஏறியிருக்கிறாள் என்ற பதட்டம் எங்களுக்கு. பத்திரமாக போய்ச் சேர வேண்டுமே என்ற கவலை அதிகரிக்க...எரிச்சலாக வந்தது. இன்று பார்த்து ஏன் எல்லாமே இப்படி போய்க் கொண்டிருக்கிறது?

இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ஹோட்டல் போய்ச்சேர?

நடுவுல ஏதோ ஒரு வழிய மிஸ் பண்ணிட்டான் போல.

இவன் என்ன டிரைவர்? வழி கூட தெரியாம? நேரம் செல்லச்செல்ல பதட்டம் கூடிக்கொண்டே போனது.

டிரைவரிடமே எங்க இருக்கு அந்த ஹோட்டல் ? ஏன் இவ்வளவு லேட்டாகிறது என்று கேட்டு....

ஒரு வழியாக ... அம்மா... ஹோட்டலுக்கு வந்துட்டோம்.

அப்பாடா! முதல்ல இவனை அனுப்பு! GPS இல்லாம வழியும் தெரியாம இவன்லாம் ஒரு டிரைவர்!

அம்மா! இந்த ஹோட்டல்ல நான் ரூம் புக் பண்ணலையாம். இவங்க பிரான்ச் வேற ஒண்ணு. இங்க பக்கத்துல தானாம்.

ஐயோ! இன்னொரு டாக்ஸியா?

அவங்க ஷட்டில் கூப்பிட்டுருக்காங்க.

அப்ப சரி!

ஒருவழியாக ரூம் போட்டு அங்கே போனவுடன் சேர்த்து வைத்து ஓவென்று அழுகை!

முதல்ல சாப்பாடு ஆர்டர் பண்ணு.

பசியில்லை.

சாப்பிட்டா தான் கொஞ்சம் தெம்பா இருக்கும். தெளிவா யோசிக்க முடியும். சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு. அப்புறம் இண்டர்வியூக்கு ரெடி பண்ணிக்கோ. சரியா என்றவுடன்

சரிப்பா. நான் கொஞ்ச நேரம் கழிச்சு கூப்பிடறேன்.

பாவம்ங்க! முதல் முதல்ல தனியா போற பயணம் இவ்வளவு மோசமா இருந்திருக்கக் கூடாது. ஹ்ம்ம்...

சிறிது நேரம் கழித்துப் பேசுகையில் கொஞ்சம் தெளிவாக இருந்தது குரல். தூங்கலையா?

இல்லம்மா. கொஞ்ச நேரம் படிக்கிறேன். நாளைக்கு காலையில 3.30 மணிக்கு எழுப்பிடு. அஞ்சு மணிக்கு ஷட்டில் வந்திடும்.

குட்நைட் சொல்லி விட்டு என் மகளுக்கு ஏன் இப்படியொரு சோதனை என்று வருந்திக் கொண்டே வீட்டு வேலைகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.

தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்து காலையில் நான் எழுப்பி விடுவதற்குள் அவளே எழுந்து விட்டிருந்தாள். ஏர்போர்ட் போனவுடன், விமானம் ஏறியவுடன் என்று ஊர் போய்ச் சேரும் வரை அப்டேட் செய்து கொண்டே இருந்தாள்.

கவலைப்படாதே! இதெல்லாம் அனுபவங்கள்! திரும்பிப் பார்க்கையில் இதையெல்லாம் நீ கடந்து வந்திருக்கிறாய் என்று பெருமையாகத் தான் இருக்கும். உன் வயதிற்கு இது அதிகம் தான் ஆனாலும் நீ என் மகள். இதையெல்லாம் எளிதில் கடந்து விடுவாய். நேர்முகத் தேர்வை நன்றாகச் செய். அத்தனை ஆர்வமுடன் அவர்கள் நிறுவனத்தில் சேர நீ எவ்வளவு கஷ்டப்பட்டு வந்திருக்கிறாய் என்பதையும் அழகாகச் சொல்லி விடு ஆல் தி பெஸ்ட் சொல்லி அனுப்பி விட்டு...கடவுளே! எல்லாம் சுபமாக முடிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு...

நானும் அந்த அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு அவள் வந்து சேரும் நேரத்தைச் சொல்லி அவர்களும் அதற்கேற்றவாறு நான்கு குழுக்களுடனான நேர்முகத் தேர்வினை மூன்று குழுக்களுடன் மட்டும் வைத்துக் கொண்டு வேறொரு நாளில் ஸ்கைப் மூலம் நான்காவது குழுவுடனும் இண்டர்வியூ என்று முடித்தார்கள்.

மீண்டும் விமானம் ஏறி நியூயார்க் வரும் பொழுது அம்மா, என்னோட ஷூ ஹீல்ஸ் உடைஞ்சு போச்சு தெரியுமா? அதோட தான் இண்டர்வியூக்குப் போனேன்! இந்த மாதிரி யாருக்கும் நடக்கக் கூடாது. ஒர்ஸ்ட் டே ஆஃப் மை லைஃப்!

கவலைப்படாதே! இந்த மாதிரி அனுபவங்கள் தான் உனக்குப் பலமாக இருக்கும். இனி உலகத்தில் எந்த விமான நிலையத்தில் எத்தனை குழப்பங்கள் வந்தாலும் உன்னால் எதிர் கொள்ள முடியும். இனி வரும் நாட்களிலும் இப்படி எதிர்பாராத ஏதாவது ஒன்று நடந்து கொண்டே தானிருக்கும். நாம் எப்படி எதிர்கொள்கிறோம் என்பதில் தான் இருக்கிறது நம்முடைய வெற்றியும் தோல்வியும். இனி கல்லூரித்தேர்வுகளில் கவனம் செலுத்து. எதைப் பற்றியும் கவலைப்படாதே.  இதை விட வேற ஏதாவது புதுசா வந்தா இதெல்லாம் ஒன்னுமே இல்லைன்னு தோணும். டேக் இட் ஈஸி! வேற வழியில்லைன்னு சொன்னாலும் மிகவும் வருத்தமாக இருந்தது.

பாவம் இதுக்கே இப்படி பயந்து நொந்து போய்விட்டாளே!

எது எப்படியோ எல்லாம் சுகமாக முடிந்து வேலைக்கான ஆர்டரும் கிடைத்து விட்டது. அனைத்துத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்கள் எடுத்து வேறு இரு நிறுவனங்களிலும் வேலை கிடைத்த பெருமையுடன் அவளுடைய ஆசிரியர்களும் பெருமிதம் கொள்ளும் வகையில் இனிதே நிறைவடைந்தது அவளுடைய கல்லூரி வாழ்க்கை.

வெளியில் இருந்து பார்ப்பவர்கள் யாருக்கும் இதெல்லாம் தெரிவதில்லை. கடந்து வந்த கடுமையான பாதைகளைக் கண்டுகொள்வதில்லை பலரும்! வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு கவலை என்பது ஒன்று இல்லவே இல்லை. சுகமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் நம்மூரில் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பிரச்னைகள், போராட்டங்கள் எல்லோருக்கும் எங்கேயும் இருக்கிறது.

சிலருக்கு வாழ்க்கையில் எளிதாக எல்லாம் அமைந்து விடுகிறது. பலருக்கும் அந்தக் கொடுப்பினை இருப்பதில்லை. அநேகமாக ஒவ்வொருவர் வாழ்விலும் பல தடைகள் எதிர்பாரா வருந்தத்தக்க தருணங்கள் இருந்திருக்கும். ஐயோ! எனக்கு மட்டும் ஏன் என்று புலம்பிக் கொண்டிராமல் எப்படி தகர்த்து வெளிவருவது என்று யோசிக்கும் மனம் தளர்ந்து போவதில்லை என்பது என் அனுபவத்தில் கண்டறிந்தது.

இன்று வரை அவளுக்கு எதுவுமே எளிதில் கிடைப்பதில்லை. ஒவ்வொரு விஷயத்தையும் போராடித்தான் பெறுகிறாள். என்னுடைய இருபது வயதில் இதை விட மிகப்பெரிய போராட்டங்களைக் கடந்து தான் வந்திருக்கிறேன் என்றாலும் இந்த விஷயத்தில் என்னைப்போலவே இருக்கிறாளே என்று வருத்தமும் மகிழ்ச்சியும்! சோர்வடைந்தாலும் துவண்டு விழாமல் மீண்டு வரும் இந்தப் போராட்ட குணம் இருந்தாலே போதும். வாழ்க்கையில் நிறைய சாதிக்கலாம் என்று என் குழந்தைகளுக்குச் சொன்னேன், சொல்கிறேன், சொல்லிக் கொண்டே இருப்பேன்!

சரிதானே?






















































































Monday, May 6, 2019

Alone in Berlin


ஹிட்லரின் கொடுங்கோல ஆட்சிக்காலத்தில் நடந்த நிகழ்வுகளைக் கொண்டு எத்தனை திரைப்படங்கள் வந்தாலும் உட்கார்ந்து பார்க்கும்படிதான் இருக்கிறது. மக்களின் விருப்பத்திற்கு மாறாக அவர்களுடைய குழந்தைகளை போர்முனைக்கு அனுப்புவதும் பெண்கள், ஆண்கள் அனைவரையும் போருக்குத் துணையாக வேலைகளைச் செய்ய வைத்தும், சந்தேகப்படும் நபர்களைக் கொன்று குவிப்பதும், யூதர்களின் பொருட்களைக் கொள்ளையடிப்பதும், ஹிட்லரைத் தெய்வமாகவும் அவர் செயலுக்கு ஆதரவாக மூளைச்சலவையும் செய்யப்பட்டிருப்பது போல் இயங்கியிருக்கிறார்கள் ஜெர்மானியர்கள். அவர்களிடையே பல நல்ல மனிதர்களும் யூதர்களுக்கு ஆதரவாக இருந்து பலரையும் காப்பாற்றியிருப்பதும் வரலாறு அறியும்.

ஃப்ரான்ஸ் நாட்டுடனான போரில் தங்கள் ஒரே மகனை இழந்த பெற்றோர்கள் ஹிட்லருக்கு எதிராக செய்யும் மௌன யுத்தமே கதை. அவர்களிருவரைத் தவிர மற்றவர்கள் எல்லாம் அரசுக்குத் துணையிருக்கிறார்கள் என்று தெரிந்தும் ஒரு சிலராவது ஹிட்லருடைய தவறுகளையும் அவரால் கொல்லப்படும் தங்கள் குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள மாட்டார்களா என்ற ஆதங்கத்தில் செய்யும் செயலில் உண்மையை உணர்ந்தும் உதவி செய்ய இயலாத நிலையில் காவல்துறை அதிகாரியும், கொடுங்கோலனுக்குத் துணையாக கொடூர அரசு அதிகாரிகளும், நாஜிப்படைகளுக்குப் பயந்து வாழும் யூத மக்களும், அவர்களுக்கு உதவும் சில நல்லுள்ளங்களும் என்று படம் முழுவதும் வருகிறார்கள்.

ஒரு குடும்பத்தில் உயிரிழப்பு என்பது எப்படியெல்லாம் பாதிக்கும், எத்தகைய மனமாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை வெளிப்படுத்தியிருக்கும் படம். மெதுவாக நகர்ந்தாலும் பார்க்க வைக்கிறது.


முகநூல் பதிவு - மாறாத ஒரு இனம்

நேற்று கோவில் கலையரங்கத்தில் பன்னிரு ஆழ்வார்களைப் பற்றி குழந்தைகள் வில்லுப்பாட்டு, நாடகம், நாட்டியம், ஹரிகதா வாயிலாக இனிய தமிழில் வழங்கியது அருமையாக இருந்தது. அவர்களின் பாசுரங்களை நியூஜெர்சியிலிருந்து வந்திருந்த சுபா ஸ்ரீனிவாசன் கணீரென்ற குரலில் லயித்துப் பாடி கேட்போரை ஆனந்தப்படுத்திக் கொண்டிருந்தார். வயலின் வாசித்த ஸ்ரீநாத் என்ற இளைஞனும் மிருதங்கம் வாசித்த ஷங்கரும் அவரின் பாடலுக்கு இனிமையைக் கூட்டினார்கள். இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஜானகிக்கு பாராட்டுகள்.

கிட்டத்தட்ட இரண்டரை மணிநேரம் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பலரும் ஆரம்பத்தில் அமைதியாக இருந்து மெதுவாக ஊர்க்கதைகளை உரக்கப் பேசி, நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கிறதே என்ற நினைவு கூட இல்லாமல் நடந்து கொண்டது அநாகரீகம் என்றால் குழந்தைகள் ஓடியாடி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்ததை எந்த பெற்றோரும் கண்டு கொள்ளாதது அதை விட கொடுமையாக இருந்தது. தத்தம் குழந்தைகள் நிகழ்ச்சி முடிந்தவுடன் பலரும் சென்று விட்டார்கள். நடுவில் பத்து நிமிட இடைவெளியில் சுண்டல் சாப்பிடச் சென்ற பலரும் அங்கேயே தங்கி விட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்காக ஐம்பது குழந்தைகளை பல நாட்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார்கள். அவர்களும் தமிழில் பேசியதைக் கேட்க அழகாக இருந்தது. அதுவும் தெள்ளத் தெளிவாக ஹரிகதா சொன்ன க்ருஷா அனைவரையும் வசீகரித்து விட்டாள். தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு பெற்றோர்களும் பல நாட்கள் அலைந்திருக்கிறார்கள். அப்படி இருக்க, மற்ற குழந்தைகளின் நிகழ்ச்சியையும் பாடுவோரையும் கவுரவிக்கும் விதமாக நிகழ்ச்சி முடியும் வரையில் இருந்திருக்க வேண்டாமா?

இதே பெற்றோர்கள் தான் இரட்டை அர்த்தப்பாடல்களுக்கு டப்பாங்குத்து ஆட்டம் போடும் நடனங்களுக்கு கடைசி வரை இருந்து பார்த்து கைத்தட்டி விட்டுச் செல்கிறார்கள்.

உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் மாறாத ஒரு இனம் உண்டெனில்...









Wednesday, May 1, 2019

தொழிலாளர் தினம்

எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது தெருவில் காய்கறி, பழங்கள், வாழை இலை, பூக்கள் விற்பனை செய்யும் தெருவோர சந்தையில் வியாபாரம் செய்தவர்கள் பலரும் பெண்களே. காலையில் ஆறு மணிக்கே தலையில் கூடை நிறைய காய்களுடனும் தள்ளு வண்டியிலும் வருபவைகளை ஆண்கள் சிலர் ஒத்தாசை செய்ய இறக்கிக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு பெரிய வாழைத்தாரை ஒற்றை ஆளாய் வண்டியிலிருந்து தலையில் சுமந்து கீழே இறக்கி வைப்பதும், இலைகளைத் தரம் பார்த்து பிரித்து வைத்து கெட்டிகாரத்தனமாய் வாயாடி வியாபாரம் செய்வதும்,மார்போடு ஒட்டி பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தையை வைத்துக் கொண்டு வாழைத்தண்டை சீவும் இளம்பெண்ணை எப்படி இவ்வளவு சாமர்த்தியமாக, வலிமையாக இருக்கிறார் என்று ஆச்சரியமாய் பார்த்த நாட்களும் உண்டு.

அவர்களுக்குள்ளே பேசி சிரித்துக் கொண்டு அன்று கிடைத்த வருமானத்தை எண்ணிப் பார்த்து அடுத்த நாள் வியாபாரத்திற்குத் தயாராகும் அப்பெண்கள் பலருக்கும் குடும்பம், குழந்தைகள் என்று உண்டு. இவர்களின் சம்பாத்தியம் அவர்களுக்குத் தேவை. இப்படி குடும்பத்திற்காக, தனக்காக என்று சுயமாக உழைத்த பெண்களை என்னையறியாமல் மரியாதையுடன் கடந்து வந்திருக்கிறேன்.

முகம் நிறைய சுருக்கங்களுடன் தொங்கட்டான் பாட்டிகள் சுணங்காமல் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து குடும்பத்தை கரையேற்றி வருவது காலம் காலமாக தொடர்கிறது. இவர்களுடன் மிகுந்த ஆர்வத்துடனும், வியப்புடனும் பழகியிருக்கிறேன். வெயில் சாயும் வரை கொண்டு வந்த பொருட்களை விற்று முடிக்கும் வரை அவர்களின் சாப்பாடும் அவ்விடத்தில் தான்! இயற்கை உபாதைகளை அதுவும் பெண்களின் மாதாந்திர பிரச்னைகளை எப்படி கையாண்டிருப்பார்கள் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது! வசதியாக வீட்டில் இருந்து கொண்டே எத்தனை ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம்!

அனைவரும் தூக்குச்சட்டியில் பழைய சோறும், சின்ன தட்டில் ஊறுகாயும் கொண்டு வந்திருப்பார்கள். நடுநடுவே காஃபி, புகையிலை, வெத்திலை என்று வாயையும், வயிற்றையும் நிரப்பிக் கொண்டு வாரியர் டயட், இன்டெர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்று அலப்பறை செய்யாமல் இயற்கையாகவே இருக்க வேண்டிய சூழ்நிலையில் வெயிலில் வைட்டமின் டியும் கிடைத்து உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும்


இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள் !

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...