Thursday, August 2, 2018

திரும்பிப்பார்க்கிறேன்...கற்றதனாலாய பயன்

வேலை முடித்து கல்லூரியிலிருந்து வீட்டிற்குத் திரும்பி மகளுக்கு சாப்பிட கொடுத்து விட்டு நானும் சாப்பிட்டு முடித்து டீ போட்டுக் கொண்டிருக்கையில் அழைப்பு மணி சத்தம். இதுவே ஆல்பனி என்றால் யாராக இருக்கும் என்று யோசித்திருப்பேன். அன்று மதுரையில் யார் எப்பொழுது வருவார்கள் என்று தெரியாது. எந்த நேரமும் தெரிந்தவர்கள் வீட்டிற்கு உரிமையோடு போய் பேசி விட்டு வரலாம். வாசலில் நின்றிருந்தவரைப் பார்த்து ஐந்தாறு வருடங்களாகி விட்டிருந்தது. ஆள் மாறாமல் அதே அமைதியுடனும் புன்னகையுடனும்! கல்லூரியில் வேறொரு துறையில் படித்த சீனியர் மாணவி. அவர் எதுக்கு இப்பொழுது வந்திருக்கிறார் என்று யோசித்துக் கொண்டே வரவேற்று அவருக்கும் டீ எடுத்துக் கொண்டு பேச அமர்ந்தேன்.

கணவரிடம் அவரை அறிமுகப்படுத்தி விட்டு பொதுவாக சில விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். இன்னும் அவர் வந்த காரணத்தைச் சொல்லவில்லை. வெகு நேரம் கழித்து தனக்கு கணினியியல் சம்பந்தப்பட்ட சில பாடங்களில் கேள்விகள் இருப்பதாகவும் அதற்கு உதவ முடியுமா என்று கேட்டார். அவர் சொன்ன பாடங்களை நான் கல்லூரியில் படித்தும் வேலை பார்த்துக் கொண்டிருந்த கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்பும் எடுத்துக் கொண்டிருந்ததால் சரியென்று சொல்ல, அவருடைய அசைன்மெண்ட் பேப்பர்களை கொடுத்தார். அமெரிக்க பல்கலையின் பெயரோடு இருக்கவும், அவர் தன் சோகக்கதையைச் சொல்ல... கண்முன்னே 47 நாட்கள் படம் விரிந்தது. கிட்டத்தட்ட ஜெயப்ரதா கதாபாத்திரத்தின் கதை தான். அவர் கூறிய விஷயங்களை நம்ப முடியவில்லை. இவ்வளவு மோசமான மனிதர்கள் கூட இருக்கிறார்களா என்று அதிர்ச்சியாக இருந்தது. நரகத்திலிருந்து தப்பித்து மன உளைச்சலுக்கும் ஆளாகியிருந்தார். அமெரிக்கா சென்ற பிறகு கல்லூரியில் மேற்படிப்பு படித்து நடுவில் தொடர முடியாமல் மீண்டும் படிக்க கல்லூரியிலிருந்து  ஒப்பந்தம் பெற்று வந்திருந்தார். இரண்டு மாதத்தில் தேர்வு நெருங்குவதாகவும் அவருக்குப் படிக்க உதவுமாறும் கேட்டுக் கொள்ள நானும் உதவினேன்.

முதலில் அசைன்மெண்ட் முடித்து அனுப்பி வைத்து தேர்வுக்கும் அவரைத் தயார் செய்து அவரும் எழுதி முடிக்க, நாங்கள் கனடா வந்து விட்டோம். சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரி ஒன்றில் வேலை பார்ப்பதாகத் தெரிந்து கொண்டேன்.

திருமணம் என்ற போர்வையில் பெண்களின் வாழ்க்கையை எவ்வளவு எளிதாக சிதைக்க முடிகிறது சில ஆண்களால்? படித்தவர்கள் பண்பானவர்கள் என்ற மாய பிம்பத்தையும் வெளிநாட்டில் வசித்தாலும் பெண்களைச் சிறுமைப்படுத்துவதிலும் மாற்றம்மில்லை என்றுணர்ந்தேன். எத்தனை கனவுகளுடன் வாழ்க்கையை ஆரம்பித்திருப்பார் அந்தப் பெண் என்பதை நினைத்த பொழுது மிகவும் வருத்தமாக இருந்தது. .

சித்திரவதைகளையும் மன உளைச்சல்களையும் வலியுடன் கடந்து வாழ்ந்து சாதிக்க வேண்டும் என்ற முடிவுடன் வந்திருந்த பெண்ணிற்கு உதவ முடிந்ததே என்ற திருப்தி எனக்கு.

நான் பயின்ற கல்வியால் எனக்குப் பொருளாதார ரீதியாக எண்ணற்ற பயன்கள் கிடைத்திருக்கிறது. கிடைத்துக் கொண்டிருமிருக்கிறது.  அன்று அப்பெண்ணிற்கு உதவ முடிந்ததில் கிடைத்த மனநிறைவு ஒன்று போதும் கற்ற கல்வியின் பெரும்பயனை அடைந்ததற்கு.

🙏🙏🙏

ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...