Monday, December 19, 2022

The Elephant Whisperers

சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியாகியுள்ளது "The Elephant Whisperers" என்றொரு குறும்படம். தலைப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இது யானைகளைப் பற்றின படம் என்று. இதற்கு முன் வெளியான படம் ஒன்றைப் பற்றி ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன். Holiday in the Wild யானைகளைப் பிடிக்காத மக்கள் குறைவாகத் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரிய உருவம் பார்க்க பயமாக இருந்தாலும் ஒரு குழந்தையைப் போல பழகுவதைக் கோவில்களில் பார்த்திருப்போம். மக்களும் கோவில் யானைகளுடன் மனதோடுப் பழகி தங்களில் ஒருவராக நெருங்கி விடுவார்கள். கொஞ்சம் அச்சத்துடன் தான். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் யானை இறந்த போது பொதுமக்கள் அளித்த சிறப்பான இறுதி ஊர்வலமாகட்டும் அழுது கொண்டே அந்த யானையைக் கொன்றுவிட்டதாக அவர்களின் கொந்தளிப்பாகட்டும் மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையேயான ஆத்மார்த்தமான அன்பை அது வெளிப்படுத்தியது.

இந்த குறும்படமும் அப்படித்தான். காட்டில் தனித்து விடப்பட்ட, நலிந்த யானைகளை வளர்க்கும் இரு மனிதர்களைப் பற்றின படம். இயற்கையோடு இணைந்த வாழ்வில் இருக்கும் வெள்ளந்தித்தனம் அந்த மனிதர்களிடம் இருக்கும்.தங்களைக் கவனித்துக் கொள்பவர்களைத் தன் இனமாக கொண்டாடும் மிருகங்கள் மனிதர்களை விட மேல். மனிதர்களின் பாதிப்பு இல்லாத காடுகள் அரிதாகிக் கொண்டு வரும் வேளையில் இப்படியொரு இடத்தில் வாழும் பொம்மன், அவர் மனைவி பெல்லி என்று இருவரும் அனாதையாக வந்த ரகு என்ற யானையை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். தங்கள் குழந்தையாக பாவித்து அவர்கள் ரகுவுடன் பேசுவதும் கொஞ்சுவதும் ரகுவும் அவர்களுடன் குலாவுவதும் அந்தக் கண்கள் பார்ப்போரை வசீகரிக்கும்.

தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகளின் முகாம். அங்கு வாழும் பெல்லி என்பவர் அனாதையாக விடப்பட்ட யானைகளை வளர்க்கும் பொறுப்பிலிருக்கும் ஒரே பெண்மணி. அவருடைய கணவர் ஒரு யானையால் இறந்தவர். பொம்மனை மறுமணம் செய்து கொண்டு யானைகளைப் பராமரித்து வாழ்ந்து வருகிறார். ரகு சாப்பிட மறுத்து கீழே போடும் ராகி உருண்டைகளைக் குரங்குகள் விரும்பி சாப்பிடுவது இயற்கையில் எதுவும் வீணாகப் போவதில்லை என்று புரிய வைக்கிறது. குரங்குகள், கழுகு, புலி என்று காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு. மனிதர்களுக்குத் தான் அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.

நான் முன்பு பணிபுரிந்த இடத்தில் நியூயார்க் மாநிலத்தில் கடைகளிலும், வீடுகளிலும் சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த தந்தத்தாலானப் பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். மனம் பதறி விட்டது. எத்தனை யானைகள் கொல்லப்பட்டதோ ? ரகு போன்று எத்தனை இளம் யானைகள் கஷ்டப்பட்டதோ என்று இன்று நினைத்தாலும் தந்தத்திற்காக யானைகளை வேட்டையாடும் மனிதர்கள்,அவர்களை வேட்டையாடத் தூண்டுபவர்கள் எல்லாம் ஏன் வாழ்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றும்.

பசுமையான காடு, சலசலத்து ஓடும் ஆற்றில் ரகு குளிக்கும் காட்சிகள், பிடித்த உணவைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைத்தனம், மனிதர்களின் உணர்வுகளை புரிந்து ஆறுதலாக அரவணைக்கும் ரகு என்று எல்லாமுமே அழகு! இரண்டாவது குழந்தை வரும் பொழுது முதல் குழந்தைக்கு ஏற்படும் அதே பொறாமை ரகுவிற்கும் வருகிறது.விலங்குகளுடன் வாழும் உலகில் மனிதன் தன் சுயத்தை இழந்து புனிதனாகிறான். இயற்கையோடு இணைந்தால் எல்லாமே அழகு! அது தான் இந்த குறும்படம் நமக்குச் சொல்வது. கண்டு களியுங்கள்!






Tuesday, December 13, 2022

கங்கா தேசத்தை நோக்கி - 1

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது.

கங்கா தேசத்தை நோக்கி

இரண்டு வருடத்திற்கு ஒரு முறை தாய்மண்ணில் கால் பதித்து உற்றார், உறவினர்களையும், கோவில் குளங்களையும் பார்த்து விட்டு வந்தால் தான் அடுத்த இரு வருடங்களை நிம்மதியாக கழிக்க முடியும் என்ற மனநிலையிலேயே இருந்து பழகி விட்டதால் 2018 மதுரை விசிட்டிற்குப் பிறகு 2020 கோடை விடுமுறைக்காக ஆவலாக காத்திருந்தோம். அந்தோ! கொரோனா கொடும்பாவியால் உயிருக்குப் பயந்து எங்கும் செல்ல முடியவில்லை. 2020 முடிந்து 2021 கூட வந்துபோய்விட்டது. 2022லாவது சாத்தியமா என்று நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க, நண்பர்கள் பலரும் மூட்டை முடிச்சுகளுடன் அவரவர் பிறந்தகத்துக்குச் சென்று டேரா போட்டு வந்தார்கள். நமக்கு என்று காலம் கனியுமோ என்று காத்திருந்தோம்.

ஒரு சிறு சந்தர்ப்பம் அமைந்தது. இதற்கு மேல் பொறுக்க முடியாது. 2020ல் போகவேண்டும் என முடிவு செய்திருந்த இடங்களுடன் பல யூடியூப் காணொளிகளில் கண்டு மனம் லயித்துப் போன மேலும் சில இடங்களுக்கு புண்ய யாத்திரை கிளம்பி விட முடிவு செய்தோம் நானும் கணவரும். மகனும் மகளும் மகிழ்ச்சியாக போய்வாருங்கள் என ஊக்கமளித்தார்கள். எங்கெங்கு போவது என்று திட்டமிடும் பொழுதே அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. சிறுவயதிலிருந்து கனவாக மனதிலேயே பதிந்துவிட்டிருந்த தலங்களை காணப்போகும் பரவசம். என்ன தான் தென்னிந்தியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் வட இந்தியாவிற்குச் செல்லவே கொஞ்சம் யோசிக்கத்தான் வேண்டியிருக்கிறது. மொழி ஒரு பெரிய பிரச்னை என்றால் உணவும் மக்களும் அந்த இடங்களைப் பற்றின அறியாமையும் தட்பவெப்பநிலையும் அதிகமாகவே சிந்திக்க வைத்தன. மொழி தெரியாத அயல்நாடுகளுக்குச் செல்லும் பொழுது கூட இத்தனை யோசிக்கவில்லை. ஆனால் நம் நாட்டிற்குள் ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல மனிதர்களை நம்பலாமா என்பதிலிருந்து எத்தனை மெனக்கெட வேண்டியிருக்கிறது! அதனால் ஒவ்வொன்றையும் அலசி ஆராய்ந்து தேர்வு செய்தோம்.

அந்த நாளும் வந்தே விட்டது. அதிக சுமைகள் வேண்டாம் என்று தேவைப்பட்ட துணிகளுடன் அதிகாலையிலேயே கிளம்பி விட்டோம். செருப்பு, ஷூ, பனிக்கால, கோடைக்கால துணிகள் என அதுவே இரண்டு பெரிய பெட்டிகள் ஆயிற்று! முதல் முறையாக மதிய நேர விமானப்பயணம். அதுவும் ‘ஏர் இந்தியா’வில்! ஆல்பனியிலிருந்து நியூயார்க் விமான நிலையம் செல்ல குறைந்தது நான்கு மணிநேரம் ஆகும். காலையில் ஆறு மணிக்குத் தயாராகி வாடகை வண்டியில் நியூயார்க் சென்றடைந்து வண்டியை கொடுத்து விட்டு பெட்டிகளுடன் ஏர் ட்ரெயின் மூலம் விமான நிலையமும் வந்தாயிற்று. மனதெல்லாம் குதூகலம். கூடவே கொஞ்சம் பயமும். சென்னையில் காய்ச்சல் பரவுகிறது வடக்கில் கொரோனா பீதி செய்திகளால் குழப்பமும் கூடவே இருந்தது. ஆரம்பித்திருக்கும் பயணம் இனிமையாக, உடல் நோயின்றி நினைத்தபடி எல்லா கோவில்களுக்கும் சென்று வர வேண்டும் என்று எல்லா கடவுள்களிடமும் வேண்டிக் கொண்டு ‘ஏர் இந்தியா’ கவுண்டருக்குச் சென்றால் நீண்ட வரிசை. வேகமாக வந்த பெண்மணி ஒருவர் “ஏர் சுவிதா விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தீர்களா செய்தீர்களா?” என்று கேட்டார்.

“அது என்ன?” என்றவுடன் வரிசையிலிருந்து ஒதுக்கி கோவிட் தடுப்பூசிகள் பற்றின விவரங்களை அவர் சொன்ன தளத்திற்குச் சென்று பதிவேற்றம் செய்யுமாறு கூறினார். இதை முன்கூட்டியே சொல்லியிருந்தால் வீட்டிலேயே செய்து முடித்திருக்கலாம். ஆரம்பித்து விட்டார்கள் என்று நொந்தபடி செய்து முடித்து மீண்டும் நீண்ட வரிசையில் ஐக்கியமானோம். பேரன்,பேத்திகளுடன் கோடையைக் கழித்து விட்டு ஊருக்குத் திரும்பிச் செல்லும் பல தாத்தா பாட்டிகள். பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள் எங்களுக்கு முன்னும் பின்னும் நின்று கொண்டிருந்தார்கள். எங்கள் முறை வந்த பொழுது கவுண்டரில் இருப்பவர் என்னுடைய ஓசிஐ அட்டையைத் திருப்பித்திருப்பி பார்த்தவண்ணம் இருந்தார். யாரையோ அழைத்தார். அவர்கள் சிறிது நேரம் கணினியை நோண்டிக் கொண்டிருந்தார்கள். காரணம் என்னவென்று எனக்குத் தெரியும். எதுவும் சொல்லவில்லை. அவர்களுக்குள் ஏதோ தீர்மானத்திற்கு வந்து டிக்கெட்டைக் கொடுத்து அனுப்பினார்கள். வெளியில் வந்ததும் அவர்கள் ஏன் தாமதப்படுத்தினார்கள் என்று ஈஷ்வரிடம் விளக்கினேன். “பிரச்னை இல்லையே?” என்றவரிடம் அரசு விதிவிலக்கு அளித்துள்ளது. அதனால் பயம் வேண்டாம் என்று சொல்லிவிட்டு செக்யூரிட்டி அக்கப்போருக்காக காத்திருந்தோம். எல்லாம் முடிந்து சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக்கொள்ளக் கூட நேரமில்லை. நேராக விமானத்திற்குள் ஏறி அமர்ந்து கொண்டோம். இருவருக்கும் வெவ்வேறு இடத்தில் அமர்ந்து கொள்ளுமாறு டிக்கெட் கொடுத்திருந்ததை மாற்ற முடியவில்லை. ஈஷ்வருக்கு பயங்கர கோபம். 14 மணிநேரப் பயணம். அதுவும் நேரடியாக டெல்லி செல்லும் விமானம். எதற்கு சிறுகுழந்தை போல புலம்புகிறார் என்று பெட்டிகளை வைத்து விட்டு என்னிடத்தில் அமர்ந்து கொண்டேன். அவரும் என்னைத் தாண்டி சென்று அவருடைய இடத்தில் அமர்ந்து கொண்டார் முகத்தை ‘உம்’மென்று வைத்துக் கொண்டு.

மக்களின் சலசலப்பு அடங்க, விமானம் புறப்படப் போவதை ஏன் இத்தனை அவசர அவசரமாக இந்த விமானிகள் சொல்கிறார்கள் என்பது எனக்குப் புரிவதே இல்லை. அவர்கள் சொல்வதில் பாதி புரிவதுமில்லை. அதைப்பற்றி யாரும் அலட்டிக் கொள்வதுமில்லை என்பது வேறு விஷயம். அவர் எதையோ முனகி விட்டு அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிட்டார். விமானப் பணிப்பெண் ஒருவர் விமானத்தில் விபத்து ஏற்பட்டால் எப்படி குதிக்க வேண்டும், மூச்சு முட்டினால் என்ன செய்ய வேண்டும் என்று விலக்கிக் கொண்டிருந்தார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களும் ஏகாம்பரிகளும் அதனைப் பொருட்படுத்தவில்லை. இதைப் பார்த்தால் மனதில் சிறு சஞ்சலம் ஏற்படும் என்ற காரணமாக கூட இருக்கலாம் அல்லது விமானியின் மேல் அதீத நம்பிக்கையாக இருக்கலாம். எது எப்படியோ இங்கும் அங்கும் பரபரப்புடன் சென்று கொண்டிருந்த அம்மணிகளும் சமர்த்தாக அவர்கள் இருக்கையில் அமர்ந்து விட, விமானத்தின் வெளியே ‘காத்தாடி’ சுழல,  ‘கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்’ என்ற ஒலியுடன் விமானம் பின்னோக்கி நகர்ந்து  தன் முன்னோக்கிய பயணத்தை தொடங்கியது. 

என் அருகில் ஒரு வயதான தம்பதியர். அந்த வயதிலும் அந்தப் பெண்மணி மிகவும் கறாராக கணவரிடம் நடந்து கொண்டார். பாவம்! அந்த மனுஷன்! அம்மணியின் கைப்பையை அவர் வைத்துக் கொண்டு போர்வை போர்த்தி விடுவதும் கேட்டவற்றை எடுத்துக் கொடுப்பதுமாய் இருந்தார்! ஹ்ம்ம்! நமக்கு அந்த கொடுப்பினை இல்லை.

தரையில் போட்டிருந்த கம்பளம் சொல்லாமல் சொல்லிற்று அதன் வயதை! நீண்ட நேரப்பயணத்தில் படங்களைப் பார்த்துக் கொண்டே செல்வது என் வாடிக்கை. ஹைதர் காலத்து டிவி. உடைந்து போன ரிமோட். போர்வை கூட கேட்டால் தான் கொடுக்கிறார்கள். காலில் சுடுதண்ணீரைக் கொட்டியது போல் இங்கும் அங்கும் ஓடும் விமான பணிப்பெண்கள். “டிவி வேலை செய்யவில்லையா நாங்களும் முயற்சிக்கிறோம். சாரி” என்று பதிலை தயாராக வைத்திருந்தார்கள். அனைவரையும் முக கவசம் அணிந்திருக்குமாறு வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். ‘டாடா’ இந்த விமான நிறுவனத்தை வாங்கிய பிறகு மாறுதல் இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன். கழிப்பறையைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். பாராட்டப்படவேண்டிய விஷயம். இதற்கு முன் குழந்தைகளை அழைத்துச் சென்ற பொழுது விமானம் முழுவதும் ஒரே நாற்றம். அந்த கொடுமை இப்பொழுது இல்லை என்பதே பெரிய ஆசுவாசம் தான்.

பள்ளிகள் திறந்து விட்டதால் அந்த வயதினரும் அவர்களின் பெற்றோர் கூட்டமும் இல்லை. சிறு குழந்தையை ஊருக்கு அழைத்துச் செல்பவர்கள் என நான்கைந்து பேர். தொப்பையும் தொந்தியுமாய் அதிகளவில் சீக்கியர்கள். சீக்கிய அம்மாக்கள் சிலர் ‘சிக்’கென்று நவீன உடையில் நளினமாக இருந்தார்கள். பழம்பெரும் ஹிந்தி நடிகைகள் சிலரை நினைவூட்டினார்கள். நகைகள் நிறைய போட்டுக் கொண்டு அழகாக சேலை அணிந்த இளமையான தெலுங்கு பேசும் அம்மாக்கள் பலர். பனிக்காலத்திலிருந்து தப்பித்துச் செல்பவர்கள் கூட்டம். வெகு சில இளைஞர்கள். என் வயதினர் என்று கலவையான கூட்டத்தைச் சம்மந்தபடி, அழகிய நியூயார்க் நகரை வலம் வந்து வானில் பறக்கத் துவங்கியது விமானம். 

என் பக்கவாட்டில் அமர்ந்திருந்த இளம்பெண்மணி நிமிடத்திற்கொருமுறை தலையைக் கோதிக் கொண்டே இருந்தார். இதென்ன வியாதியோ! முன்வரிசையில் இருந்த இளைஞன் பணிப்பெண்களை நொச்சுக் கொண்டிருந்தான். பாவம் தான் இந்தப் பெண்கள் என்று தோன்றியது! 

சிறிது நேரம் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். கிண்டிலில் முன்னேற்பாடாக தரவிறக்கியிருந்த திரு.சுதாகர் கஸ்தூரி எழுதிய “நேரா யோசி” புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தேன். எளிய தமிழ் நடையில் இன்றைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கு நேர்மறையாக தீர்வு காண்பது எப்படி? நம்முடைய அணுகுமுறையில் தான் பிரச்னைகளுக்கான தீர்வுகள் இருக்கிறது என்பதை அவருடைய அனுபவங்கள் மூலமாக எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் பல புத்தக குறிப்புகளுடன் விளக்கியிருந்தது அருமை. நிச்சயம் இன்றைய மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கும் அந்தப் புத்தகம். 

அதைப் படித்து முடிக்கையில், ‘காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா’ என்று மொத்தமே பத்து கடலை போட்ட உப்பின நொறுக்குத்தீனி பாக்கெட் ஒன்று கொடுத்தார்கள். இப்பொழுதெல்லாம் பாக்கெட்டுகளில் அடைக்கும் காற்றுக்குத்தான் கட்டணமே! ‘என்னவோ போடா மாதவா’ என்று நொந்தபடி எப்படா சாப்பாடு வரும். தூங்கலாம் என்றிருந்தது. சே! டிவி வேறு இல்லாமல் போரடித்தது. ஃபோனில் சிறிது நேரம் வார்த்தை விளையாட்டு விளையாடிக் கொண்டிருந்தேன். தூக்கம் வர தூங்கியும் விட்டேன். என்னை எழுப்பி “சைவ உணவை கேட்டிருந்தீர்கள். இதோ” என்று அழகாக அடுக்கி வைக்கப்பட்ட தட்டை நீட்டியவரிடம் இருந்து வாங்கிக் கொண்டேன். தூங்கிக் கொண்டிருந்த என் பக்கத்து இருக்கை அம்மணியும் எழுந்து அவருடைய உணவுத்தட்டை வாங்கிக் கொண்டார். சாப்பாடு நன்றாகத்தான் இருந்தது. ரொட்டியைத் தவிர மற்றதையெல்லாம் சாப்பிட்டு முடித்தேன். அந்தப் பெண்மணி மிக அழகாக முள்கரண்டியில் சாப்பிடுவதைப் பார்த்தால் அடிக்கடி பயணிப்பவர் என்பது தெரிந்தது.

உண்ட மயக்கம் பயணியர்களை உறக்கத்தில் ஆழ்த்த தவறவில்லை. கண்விழித்துப் பார்த்தால் சிலர் நடந்து கொண்டிருந்தார்கள். பாதி தூரம் தான் கடந்திருக்கிறோம். இன்னும் ஏழு மணிநேரம் இருக்கிறது! மெதுவாக யாரையும் இடித்து விடாமல் தூங்கிக் கொண்டிருந்த மனிதர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சிறிது நேரம் நடக்கலாம் என்று நானும் நடந்து ஈஷ்வரைப் பார்த்தால் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தார். அந்தப் பெரிய விமானத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மொத்தமே நான்கைந்து வெள்ளையர்கள் மட்டுமே! மற்றவர்கள் எல்லோரும் இந்தியர்கள். இந்தியர்களில் தான் எத்தனை வகை மனிதர்கள்! தலைப்பாகை போட்டுக் கொண்ட சீக்கியர்கள், போடாதவர்கள், வெள்ளை, கறுத்த நிறத்தவர் என்று கலவையாக இருக்கிறது நம் தேசம்! உறக்கத்தில் பெரியவர்களின் முகத்தில் அத்தனை களைப்பு. சிறு குழந்தைகளோ சுகமாக அம்மாவின்தோளில், மடியில் தூங்கிக் கொண்டிருந்தார்கள். தூங்காத குழந்தைகளைக் கையில் வைத்துக் கொண்டு அப்பாக்கள் மெதுவாக நடந்து கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் ஒரு குழந்தையுடன் பேச, அழகாய் சிரிச்சது செல்லம். ‘பிள்ளையாய் இருந்துவிட்டால் தொல்லையேதும் இல்லையடா’ கவிஞரின் வார்த்தைகளில் எத்தனை உண்மை! பொழுது போகாமல் கையை காலை ஆட்டி இடுப்பை முறித்து விட்டு நிமிர்ந்தால் ஈஷ்வர் ! இருவரும் சிறிது நேரம் பேசி விட்டு மீண்டும் அவரவர் இடத்திற்குச் சென்று அமர்ந்தோம்.

இப்பொழுது திரு.ஹரன் பிரசன்னா எழுதிய ‘சாதேவி’ சிறுகதை தொகுப்பிலிருந்து இரண்டு கதைகளைப் படித்தேன். நன்றாக இருந்தது. மீண்டும் ஒரு குட்டித்தூக்கம். விழித்தவுடன் கொஞ்ச நேரம் நடை. அதற்குள் சாப்பாடு வண்டி வர, அப்படியென்றால் சீக்கிரமே ஊர் வந்து விடுகிறது என்று அர்த்தம். ஹையா! மீண்டும் விட்ட இடத்தில் இருந்து கதையை வாசித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் விமானம் தரையிறங்கப் போவதால் அனைவரையும் அவரவர் இடத்தில் அமருமாறு விமானி கேட்டுக் கொண்டு டெல்லியில் மழைப்பொழிவதை அறிவித்தார். அடர் பஞ்சுப்பொதி மேகங்களுக்குள் விமானம் செல்லும் பொழுது ‘கிலி’யாகத்தான் இருந்தது. அடடா! கிளம்பும் பொழுதே ஈஷ்வரும் பயணம் முழுவதும் மழையாக இருக்கப் போகிறது என்று வருத்தப்பட, அதெல்லாம் சரியாகிடும் என்று சொல்லியிருந்தேன். இப்பொழுது இறங்கும் போதே மழையா என்றுகவலையாக இருந்தது.

வழக்கமான நேரத்தை விட அரைமணிநேரம் முன்பாகவே டெல்லி வந்து சேர்ந்து விட்டோம். இரவில் தான் பெரும்பாலும் இந்தியா வருவது அதுவும் சென்னை வந்திறங்குவது வாடிக்கை. பகலில் வந்திறங்குவது நன்றாக இருந்தது. சென்னை விமான நிலையத்தில் இறங்கியவுடன் வரும் உஷ்ணமோ மக்கிய வாடையோ இங்கு இல்லை. பெரிய விமான நிலையம். சுத்தமாக நன்றாக இருந்தது. குடியேற்ற பரிசோதனைகள் முடிந்து பெட்டிகளுக்காக காத்திருந்தோம் காத்திருந்தோம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை! அவரவர் பெட்டிகளை எடுத்துக் கொண்டு மக்கள் வெளியேற, எங்களைப் போல் சிலர் மட்டும் எங்கே எங்கே என்று தேடிக் கொண்டிருந்தோம். இதுவும் எனக்குப் புதிது. இறங்கியவுடன் பெட்டிகள் கிடைத்துவிடும். இன்றோ இவ்வளவு நேரமாகியும் வரவில்லை. எங்களுடன் வந்தவர்கள் பலரும் கிளம்பிவிட்டனர். என்னாச்சு எங்கள் பெட்டிகளுக்கு?

‘டை’ மாட்டிக் கொண்டு கையில் வாக்கி டாக்கி, டேப்லெட்டுடன்  இருந்த ஏர் இந்தியா நிர்வாகியிடம் பெட்டிகளைக் காணவில்லை என்று சொன்னால் “நியூயார்க்கில் இருந்து சில பெட்டிகள் வரவில்லை”என்று கூறவும் ஆஹா! ஆரம்பிச்சிடுச்சா என்று பதட்டமாகி விட்டது. நாங்கள் இப்பொழுதே டெல்லியை விட்டு கிளம்பிவிடுவோம் என்றவுடன் பயணச்சீட்டை வாங்கிச் சரிபார்த்து விட்டு உங்களுடைய பெட்டிகள் இங்கே தான் இருக்கிறது தேடுவோம் என்று பார்த்தால் யாரோ புண்ணியவான் பெட்டிகளை கன்வேயர் பெல்ட்டிலிருந்து எடுத்து கீழே வைத்திருந்தார். இந்த வேண்டாத வேலையை ஏன் செய்தார் என்று தெரியவில்லை. அதில் எங்கள் பெட்டிகள் இரண்டும் இருந்தது . அப்பாடா! என்று நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டே முன்பதிவு செய்திருந்த வண்டிக்காரரைத் தொடர்பு கொண்டால் “மே ஆரா ஹூன். தும் பாஹர் ஆவோ.” என்று இரைச்சலுடன் பேசவும் இனி இருக்கிறது ‘ஏக் காவ்மே ஏக் கிஸன்’ கதை என்று சிரித்துக் கொண்டே விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தால் புயல்மழை என்பார்களே அப்படியொரு மழை!

வெளியே வந்த மொத்தக்கூட்டமும் ஸ்தம்பித்துப் பின் அவரவர் வழியே செல்ல ஆரம்பித்தது. பஞ்சாபியர்கள் கூட்டம் பேருந்துகளிலும், கார்களிலும் செல்ல போக்குவரத்து நெரிசல். அடாது மழை, மக்கள், வண்டிகள். ஆனாலும் ஏதோ ஒரு ஒழுங்கில் அனைத்தும் அதுபாட்டுக்குச் சென்று கொண்டிருந்தது. எங்கள் வண்டியை மட்டும் காணவில்லை. இறங்கி ஒரு காஃபி கூட குடிக்கவில்லை. மீண்டும் அழைத்தால் அதே பதில். சிறிது நேரம் கழித்து அவர் ஏதோ ஒரு இடத்தில் எங்களை வருமாறு சொல்ல, இடி, மின்னல், மழைச்சத்தத்தில் என்னவென்றே புரியவில்லை. “இதற்குத்தான் ஆங்கிலமும் பேசத்தெரிந்த வண்டி ஓட்டுநரைக் கேட்கச் சொன்னேன். இவரை எப்படி நம்புவது?” என்று எங்களுக்குள் ஒரு சின்ன சண்டை வருவதற்குள் உள்ளூர் விமான நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஒருவர் நாங்கள் போராடுவதைப் பார்த்து ஃபோனை வாங்கி விவரங்களைக் கேட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எங்கு செல்ல வேண்டும் என்று கைகாட்டி உதவினார். இதுதான் இந்தியா. தவிப்பதை அறிந்து உதவி செய்வது! அவருக்கு நன்றி சொல்லிவிட்டு ஐந்து நிமிடங்களுக்கு நடந்து சென்று மீண்டும் அழைத்தால் மழைக்கு ஒதுங்கியிருந்த கூட்டத்தில் குட்டையாக ஒரு மனிதர் கையசைத்துக் கொண்டே வர, சிரித்த முகத்துடன் ‘நமஸ்தே’ சொல்லிவிட்டு பெட்டிகளை வாங்கிக்கொண்டு “வண்டி அங்கிருக்கிறது. வாருங்கள்” என்றார். சாலைகளில் மழைத்தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.விடாத மழையில் எப்படி வர முடியும் என்றவுடன் வண்டியை எடுத்துக் கொண்டு வந்து ‘கடகட’வென பின்சீட்டில் ஒரு கால் வைத்து பெட்டிகளை மேலே ஏற்றி ஒரு அழுக்கு பிளாஸ்டிக் துணியால் மூடி கயிறு கட்டி எங்களையும் ஏறுங்கள் என்றவுடன் ஓடிப் போய் ஏறினாலும் சிறிது நனைந்து விட்டோம். ஷூக்கள் தொப்பலாக நனைந்து அங்கிருந்து கிளம்பினால் போதும் என்றிருந்தது!

அதிக நேர காத்திருப்பு. மொழி புரியாமல் அலைய நேரிட்டதில் முகம் தெரியாத வண்டியோட்டியின் மீதிருந்த கடுப்பெல்லாம் அந்த குட்டையான ‘துறுதுறு’வென மனிதரை நேரில் பார்த்ததும் வண்டியில் ஏறியவுடன் ஆஞ்சநேயர், காயத்ரி, விநாயகர் உருவச்சிலைகளை வரிசையாக காரில் பார்த்ததும் அப்பாடா என்றிருந்தது. அவர் மேல் நம்பிக்கையும் பிறந்தது.

அவர் வேகமாக எதையோ கேட்க, நாங்கள் ‘திருதிரு’வென முழிக்க, மெதுவாக பேசுங்கள். கொஞ்சம் தான் ஹிந்தி தெரியும் என்றவுடன் அவர் முகத்தில் ஏகப்பட்ட குழப்பம். இனி எப்படி மொழி தெரியாத ஊரில் சுற்றப்போகிறோமோ என்ற நினைப்பே மலைப்பாக இருந்தது.

மழை இப்போதைக்கு நிற்பதாகத் தெரியவில்லை. விமானநிலையத்தை விட்டு வெளியே நகரின் போக்குவரத்து நெரிசலுடன் ஐக்கியமானோம். வண்டிகள் ஊர்ந்து கொண்டே செல்ல, தேசியக்கொடி பறக்கும் கட்டடங்களைக் கடந்து நெடுஞ்சாலையைத் தொடுகையில் மழையின் வீரியம் குறைந்திருந்தது. அனைத்துவித வாகனங்களும் முண்டியடித்துச் செல்லும் சாலைகளைக் கடந்து மீரட் பைபாஸைத் தொட, கருமேகங்கள் விலகி மழையும் நின்றிருந்தது. அமெரிக்க நேரப்படி இரவாகிவிட்டதால் உறக்கமும் கண்களைத் தழுவ, வேடிக்கை பார்ப்பதில் நாட்டம் கொண்ட மனமோ மறுக்க, உத்தரபிரதேச மாநில எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

டெல்லி-உத்தரபிரதேச நெடுஞ்சாலை புதிது போல் ‘பளிச்’சென்று இருந்தது. ‘புதிய இந்தியா’வில் பயணிக்கிறோம் என்ற பெருமிதத்துடன் தேசியக்கொடி பறந்து கொண்டிருந்த கட்டடங்களைக் கடந்து ஒரு மணிநேரத்தில் க4ஸியாபாத் ஜில்லா வழியே சென்று கொண்டிருந்தோம். பல புதிய அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடங்கள் உருவாகி வருகிறது. நெடுஞ்சாலை என்றாலும் ஷேர் ஆட்டோ, கைவண்டி, சைக்கிளையும் பார்க்க முடிகிறது. சமயங்களில் எதிர்த்தாற்போல் வந்து மரணபயத்தையும் கொடுக்கிறார்கள்! எதையும் கண்டு கொள்ளாமல் வாயில் எதையோ மென்று கொண்டே மனைவியிடம் தான் எங்கிருக்கிறேன் என்று அப்டேட் பண்ணிக்கொண்டு வந்தார் எங்கள் டிரைவர். தாய்லாந்தில் வாடகை வண்டி ஓட்டுபவர்கள் அத்தனை மரியாதையாக வண்டியில் இருப்பவர்கள் முன் ஏதும் பேசாமல் கேட்ட கேள்விகளுக்குத் தட்டுத் தடுமாறி ஆங்கிலத்தில் பதில் சொல்லுவார்கள். ஆட்களும் படு சுத்தமாக உடையணிந்து ‘பளபள’ என்றிருந்தார்கள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே எங்கு வந்து அழைத்துச் செல்ல வேண்டுமோ அங்கு வந்து காத்திருப்பார்கள். இங்கோ, பாக்கெட்டைத் திறந்து பான் போடுவதென்ன, சத்தம் போட்டு மனைவியிடம் பேசுவதென்ன? அயல்நாடுகளில் கஸ்டமர் தான் தெய்வம். இந்தியாவில் அதற்கு நேர்மாறு! இன்னும் நாம் கடக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.

நெடுஞ்சாலையிலிருந்து தெருக்கள் வழியாக செல்ல ஆரம்பித்தோம். க2ஜியாபாத் சாலையோரக்கடைகளைப் பார்த்தால் மதுரையில் 70களில் இருந்த கடைகள் போல இருந்தது! அழுக்கான மக்கள். வீடுகளும் கூட! . இங்குள்ள பல வீடுகளில் முகப்பு மட்டும் தான் வண்ணம் பூசப்பட்டு இருக்கிறது. பக்கவாட்டில் செங்கல் தெரிய சுவர்கள்! பணத்தைச் சேமிக்கும் வழியோ? வீடுகளின் முன் திறந்தவெளி சாக்கடைகள். ஆனந்தமாக சிறுவர்கள் விளையாட பெரியவர்கள் தீவிரமாக பேசிப் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தார்கள். தள்ளுவண்டிகளில் காய்கறி, பழங்கள், பண்டங்கள் என வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அரசியல் பிரமுகர்களின் விளம்பர பலகைகள் பல அளவுகளில் பார்க்குமிடங்களில் எல்லாம் ஆக்கிரமித்திருந்தது. உயரமான பாலங்கள் கட்டும் வேலைகள் ஜரூராக நடந்து கொண்டிருக்க இப்பொழுது தான் இந்த மாநிலத்திற்கு விடியலே பிறந்திருக்கிறது! இனி நிலைமை மெல்ல மாறும். உத்தரப்பிரசதேசத்தின் விவசாய பூமிப்பகுதியில் பயணித்ததால் அப்படி தோன்றியதோ என்னவோ. ஆனால் நொய்டா, ஃபரிதாபாத் நகரங்கள் எல்லாம் அபரிதமான வளர்ச்சியுடன் பிரமிப்பைத் தந்தது.

தூக்கத்திலிருந்து விழித்த ஈஷ்வர் டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று வண்டியோட்டுபவரிடம் சொல்ல அவரும் பக்கத்தில் தான் கடை இருக்கிறது. அங்கே அழைத்துச் செல்கிறேன் என சொல்லிவிட்டார். போஜ்புர் வழியெங்கும் பச்சைப்பசேலென விளைநிலங்களில் கரும்புத் தோட்டங்கள். கல்லூரிகள், தொழிற்சாலைகள் பலவற்றையும் கடந்து ‘ஜெயின் ஷிகன்ஜி’ உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்தப் பகுதியில் பிரபலமான உணவகம் போலிருக்கிறது. இங்கே ‘சா2ய்’ அருமையாக இருக்கும். வேறு ஏதாவது சாப்பிட வேண்டுமென்றால் கூட சாப்பிடலாம் என்று சாலையோரக் கடையில் நிறுத்தினார். அருகிலேயே ஒரு ‘குப்தாஜி’ கடையும் இருந்தது!

வாசலில் ஒரு நாய் எங்களை வரவேற்க, கடையில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்தது! “இங்கேயா” என நான் கேட்கவும் “வேற வழி?” என்று ஈஷ்வரும் ‘தீன் சாய்’ சொல்லிவிட்டு சுற்று முற்றும் பார்த்தால் இங்கு எப்படி சாப்பிடுகிறார்கள் என்று தோன்றியது! பெரிய பாத்திரத்தில் மூன்று பேருக்கு டீ போட பாலை ஊற்றி , எங்கிருந்தோ தண்ணீரை எடுக்கவும் எனக்குப் பயமாக இருந்தது. மூடி வைத்திருந்த பாத்திரங்களின் மேல் எல்லாம் கொத்து கொத்தாக ஈக்கள்! கடவுளே! உடம்புக்கு ஒன்றும் ஆகாமல் இருக்க வேண்டுமே. டீத்தூளுடன் மசாலா சேர்த்து நன்றாக கொதிக்க வைத்தார். எத்தனை கரண்டி சர்க்கரையைப் போட்டோரோ தெரியாது. இனி கவனமாக இருக்க வேண்டுமோ? அழகாக அடுக்கி வைத்திருந்த மண் குவளையில் ஊற்றிக் கொடுக்க, ஆஹா! மசாலா டீ திவ்யமாக இருந்தது. ஏன் இருக்காது? கொஞ்சநஞ்சமா சர்க்கரையைப் போட்டார்?

அங்கு எண்ணையில் பொரித்த பிரட், கிழங்குகள் கொண்டு செய்த பலகாரங்கள் அடுக்கப்பட்டு கண்ணாடி மூடிய மேஜையில் வைத்திருந்தார்கள்.. சாப்பிடத் தான் கொஞ்சம் தைரியம் வேண்டும் அதுவும் பயணிகள் மிகவும் கவனத்துடன் தான் வெளியிடங்களில் சாப்பிட வேண்டும். சுகாதாரம் சொல்லிக்கொள்வது போல் இல்லை. சுற்றி இருப்பவர்கள் பலரும் துப்பிக் கொண்டே தான் இருந்தார்கள். என்ன தான் பாரதப் பிரதமர் ‘ஸ்வச் பாரத்’ திட்டத்தைக் கொண்டு வந்து குப்பைகளை நீக்கினாலும் துப்பிக் கொண்டே இருக்கும் இந்தியர்கள் வாயைத் தைக்கும் திட்டம் ஒன்றையும் கொண்டு வந்தால் தான் நல்லது. அந்தளவுக்கு எரிச்சலைத் தந்தது இந்த எச்சில் விவகாரம். மூத்திரச்சந்து மதுரையும் இதற்கு சளைத்தது இல்லை.

வரும் வழிதோறும் வண்ண வண்ண விளக்குகளுடன் நிறைய இருக்கைகள் போட்ட பெரிய உணவகங்கள் சாலையோரம் தென்பட்டன. ஆனால் சாப்பிடும் ஆட்கள் ஒருவரைக் கூட பார்க்கவில்லை. வார இறுதியில் கூட்டம் இருக்குமாம். எப்படி கட்டுப்படியாகிறதோ என்று தெரியவில்லை. மீண்டும் ஒரு மணிநேரப் பயணம். வழியில் கிராமத்துக் காட்சிகளுக்கு குறைவே இல்லை. எருமைமாடு பூட்டிய வண்டிகள், காளை மாடுகள், வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டே வந்தோம். நல்ல வேளை மழை இல்லை. கங்கையின் கால்வாய் பகுதியில் புதிய பாதை அமைக்கும் வேலை நடந்து கொண்டிருக்கிறது. மழைநீர் பொங்கிப் பெருகி கங்கையுடன் ஓடிக்கொண்டிருந்ததைக் காண அழகாக இருந்தது. “கங்கா ஜி” என்று அன்போடு விளித்து வணங்கினார் எங்கள் டிரைவர். அங்கே குட்டி ஹரித்வார் இருக்கிறது. அப்பகுதியில் பயணிப்பவர்கள் தவற விட வேண்டாம்.

நடுவில் தம்பியிடமிருந்து அழைப்பு வர, நாங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிச் சொன்னவுடன் அலுவல் நிமித்தமாக அங்குள்ள ஆலைகளுக்கு பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் அவன் வந்திருந்த பொழுது அங்கிருந்த நிலைமையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாக கூறினான். சுதந்திரம் கிடைத்த பொழுது இந்தியா எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்ததாகவும் கல்வியில் மிகவும் பின்தங்கியிருந்தார்கள். இப்பொழுது நிலைமை மாறியிருக்கலாம் என்று சொன்னான். இன்னும் நிறைய மாற வேண்டும். எங்களுக்கும் இந்த இடத்தைப் பார்த்து அப்படித்தான் தோன்றுகிறது. தென் இந்தியாவைப் போல வர இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ? ஆனால் யோகிஜியின் ஆட்சியில் முன்னேற்றங்கள் இருப்பதாக நாங்கள் பேசிய சிலர் மகிழ்ச்சியுடன் கூறியதை நானும் தம்பியிடம் பகிர்ந்து கொண்டேன்.

ஒரு மணிநேரத்தில் முசாஃபர்நகர் வந்து சேர்ந்தோம். மாலை நேரமாகி விட்டிருந்தது. டிரைவருக்குப் பசித்திருக்கிறது போல. உணவகத்தின் அருகே நிறுத்தினார். அங்கிருந்த கடையில் ரொட்டிகள் வாங்கி நாய்களுக்குப் போட்டோம். இந்தியாவில் திரும்பிய பக்கமெல்லாம் நாய்கள் இருக்கிறது! அருகிலிருந்த பான் விற்கும் கடையில் வெற்றிலையுடன் சேர்த்துச் சாப்பிட விதவிதமான பொருட்களை வைத்திருந்தார்கள்! உணவகத்தில் ‘சுடச்சுட’ சமோசா, பூரி தயாராகிக் கொண்டிருந்தது. சாப்பிடுவதற்கும் மக்கள் இருந்தார்கள். எப்படா ஹரித்வார் போய் கங்கா ஆரத்தி பார்ப்போம் என்று ஆவலாக இருந்தது எங்களுக்கு.

“இங்கிருந்து ஒரு மணி நேரத்தில் ரூர்க்கீ. அங்கிருந்து அரைமணி நேரத்திற்குள் ஹரித்வார். அவ்வளவு தான். கங்கா ஆரத்தி பார்த்துடலாம்.” சொல்லிவிட்டு வண்டிக்கு காஸ் போடணும் என்று பெட்ரோல் நிலையத்திற்குள் வண்டியை விட்டார் ட்ரைவர். ரூர்க்கீ கேட்ட பெயராக இருக்கிறதே என்று யோசிக்கையில் தான் பிரபலமான ஐஐடி இருப்பது நினைவிற்கு வந்தது.

பெட்ரோல் நிலையத்திற்குள் வரிசையாக வண்டிகள் காத்திருக்க யாரும் நகருவது போல் தெரியவில்லை. எங்கள் வண்டியை நடுவழியிலேயே குறுக்காக நிறுத்தி விட்டு என்ன ஏது என்று கேட்க போய்விட்டார் டிரைவர் . “கொஞ்ச நேரமாகுமாம்.” சொல்லிவிட்டு பக்கத்து வண்டிக்காரருடன் அரட்டை வேறு! “ஹ்ம்ம்… ஊர் போய்ச் சேர்றதுக்குள்ள இருட்டிடும் போலிருக்கு.” மழை இல்லை என்ற ஆறுதல் மட்டும் தான் அப்போதைக்கு. எனக்கென்ன என்று அந்த களேபரத்திலும் ஒரு நாய் நிம்மதியாக அங்கே தூங்கிக் கொண்டிருந்தது! பைரவர்கள் இல்லாத இடமே இல்லை! ஒரு அலங்கார மினி வேன் நிறைய மக்கள்! வட இந்தியாவில் லாரிகள், டூரிஸ்ட் வேன்கள் எல்லாம் வண்ணமயமாக அலங்காரங்களுடன் இருக்கிறது. நம்மூர் லாரிகள் அப்படி . இல்லாததால் வித்தியாசமாக தெரிந்ததோ என்னவோ!

இது என்ன வழக்கமோ தெரியவில்லை. வாடகை வண்டி எடுத்தால் பெட்ரோல்/காஸ் போட நம்மிடமே காசு வாங்கித் தான் போடுகிறார்கள் இந்த வண்டிக்காரர்கள்! 3000 ரூபாய் வாங்கிக் கொண்டு காரில் காஸ் போட்டு கிளம்பினோம். சூரியன் விடை பெற காத்திருந்தது. உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து உத்தர்காண்ட் மாநிலத்தில் ஹரித்வார் நகரை வந்தடையும் பொழுது இரவு மணி ஏழரை. நன்கு இருட்டி விட்டிருந்தது. ரூர்க்கீ-ஹரித்வார் நெடுஞ்சாலையில் நாங்கள் முன்பே பதிவு செய்திருந்தாக நினைத்திருந்த ‘ஹோட்டல் கிரிஸ்டல் கங்கா ஹயிட்ஸ்’ வந்து சேர்ந்தோம். முன்பதிவில் ஏற்பட்ட குழப்பம் நீங்கிய பிறகு கங்கா நதியைப் பார்த்தபடி இருக்கும் அறையைக் கேட்டு வாங்கி ஜன்னலின் திரைச்சீலையைத் திறந்தால் சிறிது தொலைவில் ‘சலசல’வென கரைகள் தொட்டு ஓடிக்கொண்டிருந்தாள் கங்கா.ஜெய் மாதா! சுற்றிலும் மலைகள். ‘மினுக்மினுக்’ ஒளியில் ஆங்காங்கே கோவில்கள். திவ்யமாக இருந்தது. எங்களின் புண்ய யாத்திரையின் முதலாம் இடத்திற்கு வந்து சேர்ந்து விட்டோம்.

சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு கங்கையைக் காணும் ஆவலுடன் அங்கு செல்லும் வழியைக் கேட்டுக் கொண்டு கிளம்பி விட்டோம். விடுதியிலிருந்து ஐந்து நிமிட நடை தான். சாலையைக் கடந்தால் ‘ஷங்கராச்சார்யா சவுக்’. எதிரே பெரிய சிவன் சிலை. தலையிலிருந்து கங்கை பீறிட்டு வருவது போல் செய்து வண்ண விளக்கு அலங்காரங்களுடன் திவ்யமாக இருந்தது அந்த இடம். ஹரித்வாரில் நாங்கள் கங்கை அன்னையை தரிசித்த முதல் இடம் ‘அம்ரப்பூர்’ படித்துறை. படிகளில் இறங்கி அன்னையை வணங்கி தலையில் கங்கை நீரை தெளித்துக் கொண்டோம். உடல் சிலிர்த்துக் கொண்டது. கரையோரச் சுவர்களில் கங்கை, சிவன், முனிவர்கள் திருவுருவச்சிலைகளை வைத்திருந்தார்கள். சமீபத்திய தொடர் மழையால் மண்ணோடு கலந்து அதிவேகமாக ஓடிக்கொண்டிருந்தாள் உள்ளூர் மக்களால் அன்போடு அழைக்கப்படும் “மா கங்கா”. நதியின் மறுகரையில் கோவில்களும் ஆசிரமங்களும் தெரிந்தது. கரையோரம் மாலை நேர தீபங்களை ஏற்றி வைத்திருந்தது அழகு. சிறிது நேரம் படிகளில் அமர்ந்து கரைபுரண்டு ஓடும் இந்தப் புண்ணிய நதியைக் காண தான் இத்தனை வருடங்கள் காத்திருந்தோமோ! மகிழ்ச்சியாக இருந்தது.

ஒரு இளஞ்ஜோடியும் இளைஞர்கள் குழாமும் அங்கு வந்து அமர்ந்து கொண்டார்கள். சிலர் வேகவேகமாக இரவு நடை நடந்து கொண்டிருந்தார்கள். நாளை விடிந்த பிறகு மீண்டும் வந்து பார்க்கலாம் என்று கிளம்பினோம். தெருக்களில் ஜன நடமாட்டம் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ளூர் மக்கள் நின்று கொண்டிருந்தனர். ஒரே ஒரு சாப்பாட்டுக் கடை. பழங்கள் ஏதும் கிடைக்கவில்லை. நாங்கள் தங்கியிருந்த விடுதி உணவகத்தில் பால், பழங்களை உண்டு மறுநாள் போக வேண்டிய இடங்களைத் திட்டமிட்டு பகலில் ஹரித்வாரைக் காணும் கனவுகளுடன் உறங்கச் சென்றோம்.

படங்கள்: பயணம் ஆரம்பம்

கங்கா தரிசனம் "மா கங்கா "

Saturday, November 26, 2022

தேவிப்பட்டினம்

திருப்புல்லாணி பெருமாள் கோவில் தரிசனம் முடித்ததும் நவபாஷண நவக்கிரக கோவில் இருக்கும் தேவிப்பட்டினத்திற்குச் சென்றோம். தூறலும் நின்று போக, சூரியபகவான் வெளியே தலைகாட்ட வருணபகவானின் அருளுக்கு காத்திருந்தது போல கருமேகங்களுடன் வானம் உலா வந்துகொண்டிருந்தது. கடலோரம் அமைந்துள்ள இத்தலத்தில் ஸ்ரீராமன், சிவனையும் நவக்கிரகங்களையும் வழிபட்டதாக ஐதீகம். பரிகாரம் , பித்ருக்கடன்களைச் செய்ய அதிகளவில் மக்கள் இங்கு வருகிறார்கள். 2011ல் வந்திருந்த பொழுது நல்ல கூட்டம். தண்ணீரில் இறங்கி நவக்கிரகங்களுக்குப் பூஜைகள் செய்து கொண்டிருந்தார்கள். இந்த முறை கூட்டம் இல்லை. 

கோவில் அருகே வண்டியை நிறுத்திய ஒருவர், " நேர்த்திக்கடன் செய்ய உதவுவதாக ஏமாற்றுபவர்கள் இங்கு அதிகம். போலிகளிடம் ஏமாற வேண்டாம்" என்று எச்சரிக்கை செய்தார். ஒலிபெருக்கியிலும் அதே வசனத்தைத் தொடர்ந்து ஓட விட்டிருந்தார்கள். பரவாயில்லையே என்று தோன்றியது! அத்தனை ஏமாற்றுக்காரர்கள் இருக்கிறார்கள் போல! வைத்தீஸ்வரன் கோவில் அருகே இப்படித்தான் நாடி ஜோதிடம் பார்க்கலாம் என்று புற்றீசல் போல ஒரு கூட்டம் வரும். அதில் எத்தனை பேர் உண்மையானவர்கள் என்று தெரியாது. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை மக்களின் நம்பிக்கையை, அறியாமையை ஏமாற்றும் வித்தகர்கள் எல்லா துறைகளிலும் இருக்கத்தான் செய்வார்கள். நாம் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தேவிப்பட்டினம் அழகிய சிறு கிராமம். கோவில் எதிரே பரந்து விரிந்த அமைதியான கடல். மண்டபத்தில் பரிகார பூஜைகள் செய்ய தயராகிக் கொண்டிருந்தனர். சலனமில்லாத ஆழமான கடல் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொடுத்தது. அமைதியாக சிறிதுநேரம் அதை ரசித்து விட்டு ராமேஸ்வரத்திற்குப் பயணம் செய்தோம்.  

காணொளி இங்கே:மதுரை-ராமநாதபுரம்


Friday, November 18, 2022

திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவில்


உத்தரகோசை மங்கை கோவிலில் இருந்து வெளியே வரும் பொழுது மழை தூற ஆரம்பித்து விட்டது. அங்கிருந்து திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாக திட்டம். 2011ல் ராமேஸ்வரத்திற்கு குழந்தைகள், நண்பர் முருகன்-செல்வி குடும்பத்துடன் சென்றிருந்த பொழுது அவசரஅவசரமாக இரவில் நடையைச் சாத்துமுன் ஓடிச்சென்று தீபஒளியில் திவ்யமாக காட்சியளித்த பெருமாளைப் பார்த்ததும் பெருமாள் கோவில்களில் கிடைக்கும் மணமுள்ள 'காரசார' புளியோதரை பிரசாதம் சாப்பிட்டதும் மட்டுமே நினைவில் இருந்தது. கோவில் கோபுரம், பிரகாரங்கள், தாயார் சந்நிதி எல்லாம் எப்படி இருந்தது என்று கூட நினைவில் இல்லை. அதனால் இந்த திவ்யதேசத்திற்கு மீண்டும் சென்று வர தீர்மானித்தோம்.

தூறல் வருவதும் போவதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. 15 நிமிடத்திற்குள் திருப்புல்லாணி வந்து சேர்ந்தோம். காலை நேரப்பயணத்தின் குளுமையும் தூறலும் வசீகரன் இல்லாத வானமும் சமீப மழையில் பசுமைப் போர்த்திய ராமநாதபுரமும் கொள்ளை அழகு! 108 திவ்யதேசத்தில் 44வது திவ்யதேசம் இத்திருக்கோவில். புரட்டாசி மாதத்தில் சென்றிருந்தாலும் வார நாள் அதுவும் அதிகாலை என்பதால் கூட்டம் அதிகமில்லை. வாசலில் துளசி மாலையையும் தாமரைப்பூவையும் வாங்கிக் கொண்டு கோவிலுக்குள் சென்றோம். அங்கும் காலை நேர நைவேத்ய பூஜை நடந்து கொண்டிருந்தது. மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் இருப்பதைப் போலவே இங்கும் பெருமாள் நின்ற, அமர்ந்த, சயன கோலங்களில் காட்சியளிக்கிறார்.

அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மூலவர் ஆதிஜெகந்நாதப் பெருமாள். உற்சவர் கல்யாண ஜெகந்நாத பெருமாள். தாயார் சந்நிதியில் பேரழகுடன் பத்மாசனித் தாயார். உற்சவர் கல்யாணவல்லித் தாயார். என்ன அழகான அலங்காரம்! பெருமாள் கோவில்களில் கரிய பெருமாளுக்கும் தாயாருக்கும் என்றுமே அலங்காரம் திவ்யமாக இருக்கும். இங்கும் கண்கொள்ளா காட்சியாக இருந்தது. அனந்த சயன கோலத்தில் தர்ப்ப சயன ராமர். இலங்கையிலிருந்து சீதா தேவியை அழைத்து வர கடல் அரசனிடம் சரணடைந்து ராமர் வேண்டி வணங்கிய சரணாகதி தலம். நின்ற கோலத்தில் பட்டாபிராமர். இலங்கையிலிருந்து ஸ்ரீராமன் திரும்பிய போது மீண்டும் இங்கு வந்து பக்தர்களின் வேண்டுதலின்படி பட்டாபிஷேகம் செய்து கொண்டதால் பட்டாபிஷேக ராமர். சந்தான கோபால கிருஷ்ணர் சந்நிதியில் தசரதர் குழந்தை வரம் வேண்டி பெருமாளை வணங்கி யாகம் செய்ததால் புத்திரபாக்கியம் வேண்டி பலரும் இக்கோவிலுக்குச் செல்கிறார்கள். இக்கோவிலின் தல விருட்சம் அரசமரம். மரத்தடியில் நாகப் பிரதிஷ்டை செய்து வழிபட்டால் புத்திரப்பேறு உண்டாகும் என்பது ஐதீகம். மரக்கிளைகளில் பக்தர்கள் கட்டிய சிறு தொட்டில்களும் மரத்தைச் சுற்றி நிறைய நாகர் சிலைகளும் இருந்தது. நீர் நிரம்பிய மிகப்பெரிய தெப்பக்குளம்.

அதிகாலையில் சென்றதால் அனைத்து சந்நிதிகளிலும் நடந்த பூஜைகளை திவ்யமாக பார்க்க முடிந்தது. இக்கோவிலின் சுவையான பாயசம் 9.30 மணிக்கு மேல் தான் கிடைக்கும் என்று சொல்லிவிட்டார்கள்😑

இனிமையான திருப்தியான தரிசனம் கிடைத்த திருப்தியுடன் தேவிப்பட்டினத்திற்குச் சென்றோம்.

படங்கள்: திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் கோவில்


உத்தரகோச மங்கை திருக்கோவில்



மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது உத்தரகோச மங்கை திருக்கோவில். இந்தக் கோவிலைப் பற்றி படித்தவுடன் ஊருக்குச் செல்லும் பொழுது கண்டிப்பாக அங்கு சென்று வரவேண்டும் என்று நினைத்திருந்தேன். இந்த முறை அதற்கான சந்தர்ப்பமும் வாய்த்தது. அதிகாலையில் ஐந்து மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பி விட்டோம். நெரிசல் இல்லாத நெடுஞ்சாலைப் பயணம். முன்பை விட இப்பொழுது மதுரையைச் சுற்றி அதிகளவில் பைபாஸ் சாலைகள்! இந்த முறை வருணபகவானின் கருணையால் வறண்ட மதுரையும் பசுமையுடன் இருந்ததைப் பார்க்க அழகு.

மாரியம்மன் தெப்பக்குளம் தாண்டியதும் விரகனூர் வரை விரவியிருந்த நகரம் இப்பொழுது அதையும் தாண்டி வளர்ந்திருக்கிறது. கிராமங்களின் சுவடுகள் மறைந்து சிறுசிறு நகரங்களாக மாறிவிட்டிருக்கிறது. விரகனூர் பகுதிகளில் அதிகளவில் இருந்த செங்கற்சூளைகள் குறைந்து விட்டது போல் தோன்றியது. பள்ளிகளும் கல்லூரிகளும், மதுரைக்கே உரிய காபிக்கடைகளும் குறைவில்லாமல் இருக்கிறது. நாங்களும் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி காபி குடித்தோம். அந்த அதிகாலை வேளையிலும் மணக்க மணக்க நெருக்கித் தொடுத்த மல்லிகைப்பூ விற்றுக் கொண்டிருந்தவரிடம் பூக்களை வாங்கிச் சூடிக்கொண்டேன். மதுரை மல்லிக்கே உரிய மணம் ! ம்ம்ம்ம்ம் 💗

வானம் மழை மூட்டமாய் இருந்தாலும் தூரத்தில் தலையை நீட்டும் சூரியபகவான். விடியல் கொள்ளை அழகு. வழியெங்கும் கருவேல மரங்களுக்கு குறைச்சல் இல்லை. ஆங்காங்கே மூட்டம் போட்டு செங்கற்களால் மூடி இந்த மரத்தினை எரித்து கரியாக்குகிறார்கள் . "கறுப்புத்தங்கம்" என்று ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாக இருந்ததாக வண்டியோட்டியவர் கூறினார். வயல்வெளிகளில் நெல் பயிரிட்டிருந்தார்கள். தண்ணீருக்கும் குறைவில்லை போல பசுமை கண்களை நிறைத்தது. சிவகங்கை, திருப்புவனம், பரமக்குடி தாண்டி ராமநாதபுரம் செல்வதற்கு முன்பாக ஒரு சாலை பிரிந்து செல்கிறது. பிரிந்து செல்லும் சாலையில் ஊருக்கு அருகே செல்கையில் அழகான கோவில் கோபுரம் தெரிகிறது. கோவிலின் முன்பு பரந்த வெற்று நிலம். சுற்றிலும் கடைகள். கோவிலின் இடப்பக்கத்தில் தேரை நிறுத்தி வைத்திருந்தார்கள்.

பழமையான கோவில் என்பதை உள்ளே சென்றவுடன் உணர முடியும். இரண்டு கோபுரங்கள் உள்ளது. ஏழு நிலைகள் கொண்ட ராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைய வேண்டும். இரண்டாவது மொட்டைக்கோபுரமாக காட்சியளிக்கிறது. இராமநாதபுரம் சமஸ்தானத்திற்குரிய திருக்கோயில். சேதுபதி மகாராஜா குடும்பத்தினரின் சிலைகள் கோவில் மண்டபங்களில் உள்ளது. விநாயகர் , பலிபீடம், கொடிமரம், நந்தியை வணங்கி உள்ளே சென்றால் மூலவர் மங்களேசுவரர் காட்சி தருகிறார். சமஸ்தானம் இன்றும் கோயில் நிர்வாகத்தைக் கவனித்து வருகிறது என்றார் அங்கிருந்த அய்யர். காலை நைவேத்ய பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது. கோவிலில் எங்களைத் தவிர அப்பொழுது வேறு யாரும் இல்லை. சுற்றுப் பிரகாரம் ராமேஸ்வரத்தின் பிரகாரத்தை நினைவூட்டியது. அக்னிதீர்த்தத்தின் எதிரே நடராஜருக்குத் தனி சந்நிதி. மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்குச் செய்யப்படும் அபிஷேகம் மிகவும் பிரபலம். சஹஸ்ரலிங்க சந்நிதியும் உள்ளது.

"மூலவர் மங்களநாதர். உத்தரம்னா உபதேசம். கோசம்னா ரகசியம். மங்கை, பார்வதி. பார்வதி தேவிக்கு இறைவன் வேதங்களின் ரகசியங்களை உபதேசித்த தலம்ங்கறதால உத்தரகோசமங்கைன்னு இந்த ஊருக்குப் பேர். ஒரு காலத்தில் கடல் இக்கோவில் வரை இருந்திருக்கிறது. திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசின படலம் இங்கு அரங்கேறியதாக ஐதீகம். அம்பாள் மங்களேசுவரி. இங்குள்ள இரத்தின சபாபதி மிகவும் பிரபலம். வருடத்தில் ஒரு நாளைத் தவிர மற்ற நாட்களில் உடல் முழுவதும் சந்தனம் பூசி காட்சி தரும் மரகத நடராஜரை ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டும் அலங்காரங்களுடன் பார்க்கலாம் என்பதால் கூட்டம் அலைமோதும். அங்கே இருப்பது அக்னி தீர்த்தம்." என்று பூஜைகள் செய்து கோவிலைச் சுற்றிக் காண்பித்தார் அய்யர். மக்களின் ஆதரவால் கோவில் கட்டுமானப்பணிகள் நடப்பதாகவும் கூறினார்.

பழமையான அமைதியான கோவில்கள் தரும் மனநிறைவை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவித்தே அறிய வேண்டிய அனுபவம் அது. இன்னும் சில மணிநேரங்கள் அங்கு செலவிட ஆசை தான். ஆனால் அருகிலிருக்கும் திவ்யதேசத்திற்குச் செல்ல வேண்டும். சிவனை மனதார வணங்கி விடைபெற்று வந்தோம்.

ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி 
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி 
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி 
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி 
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி





நானே நானா யாரோ தானா

இன்று மாலை கோவிலுக்குச் சென்றிருந்தோம். உள்ளே நுழைந்தவுடன் என்னடா இத்தனை ஜோடி செருப்புகள் இருக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தக் குளிரிலும் பள்ளி நாளிலும் இத்தனை பேர் கோவிலுக்கு வந்திருக்கிறார்களே ஏதாவது விசேஷமா என்று உள்ளே சென்று பார்த்தால்,
ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. பத்து மலையாளி குடும்பங்கள் அங்கிருந்தன. "இன்னிக்கு மண்டல பூஜை ஆரம்பம்" என்று அய்யர் கூறவும், நாளைக்குத் தானே கார்த்திகை மாசம் என்று குழப்பமாகிவிட்டது எனக்கு😕

சுவாமிக்கு மாலைத் தொடுக்க உதவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சுருட்டைமுடி அழகி மை தீட்டிய கண்களுடன் 'பளிச்'சென்று சிரித்துக் கொண்டே "துளசி கல்யாண பூஜை எப்படி நடந்தது" என்று கேட்டார். இதற்கு முன் இவரை நான் பார்த்தது கூட இல்லை. துளசி கல்யாண பூஜையைப் பற்றி இவர் ஏன் என்னிடம் கேட்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவரே, "நீங்கள் தானே பூஜைக்கு என்னை வரச் சொன்னீர்கள்" என்று அடுத்த குண்டைப் போட்டார். நானா? எப்போது? என்றவுடன் 
"நீங்கள் இல்லையா? சாரி! அவர் உங்களைப் போலவே இருந்தார். அதான்..." வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே நகர்ந்தார் மலையாளக் கரையோரம் இசை பாடும் அழகி.😍

அடடா! ஆல்பனியில என்னைய போல எத்தனை பேரும்மா இருக்கீங்க?😉

இங்கே தான் இந்தக் கதை என்றால் கேதார்நாத் செல்கிற வழியில சந்தித்த செட்டியார்கள் குடும்பத்தில் ஒருத்தரும் "இவங்க சிரிக்கிறது பேசுறத பார்த்தா யார் பெயரையோ சொல்லி அவங்க மாதிரி இல்ல" என்று...😟😆

இப்படித்தான் நியூயார்க் விநாயகர் கோவில் உணவகத்தில் வரிசையில் காத்திருந்த பொழுது பின்னாடி நின்றிருந்தவர்கள் அட! நம்ம ஆல்பனி மக்கள். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் வேறு பெயரில் என்னை அழைத்தார். நான் திரும்பிப் பார்க்கவில்லை. இரண்டாவது முறையும் யாரையோ அழைக்கிறார் போல என்று நினைத்துத் திரும்பினால் "சாரி! இவரோட மன்னி அப்படியே உங்களை மாதிரியே இருப்பா. அதான் லதான்னு பேரு கூட மறந்துடுச்சுப் பாருங்க." என்றார். பிள்ளையாரப்பா...அந்த மன்னி யாரப்பா?😝

நியூஜெர்ஸியியில் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்திற்குச் சென்றிருந்த பொழுது அவர்களுடைய பழக்க வழக்கங்களைக் காணும் ஆசையில் முதல் வரிசையில் உட்கார்ந்து திருமண வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல உயரமான அழகான பெண்மணி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். நானும் அவர் கட்டியிருந்த சேலை நன்றாக இருக்கிறதே? நல்ல வடிவாக வேறு இந்தப் பெண்மணி இருக்கிறாரே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென திரும்பிப் பார்த்தவர் சிரித்துக் கொண்டே அருகில் வந்து அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு
"உமாவோட சிஸ்டரா நீங்க?" என கேட்க,
"உமாவா ? அவங்க யாரு?" என நான் "திருதிரு"வென முழிக்க,
"பொண்ணோட அம்மா தான் உமா. என் ஃபிரெண்ட்." என்றார்.
"அப்படியா? நான் மாப்பிள்ளை வீட்டுச் சார்பா வந்திருக்கேன்" என்றவுடன், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "உங்க ஊர்ல இருக்கிற இவரைத் தெரியுமா?" என்று ஆல்பனியில் பிரபலமான மருத்துவரைக் கேட்டார்.
"ஓ! நல்லா தெரியுமே. நல்ல மனிதர். நன்கொடையாளர். என் கணவருக்கு நல்ல பழக்கம்." என்றவுடன் 'டபக்'கென்று ஃபோனில் அவரை அழைத்து அவரும் ஃபேஸ்டைமில் வர, சிறிது நேரம் பேசினோம். பிறகு அந்தப் பெண்மணி என்னை அழைத்துக் கொண்டு போய் அங்கிருந்த அவருடைய அம்மா, அப்பாவை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும், "நாங்க உன்னைய கோவில்ல பார்த்திருக்கிறோம்மா" என்றார்கள். இந்தப் பெண்மணியின் தங்கை எங்கள் ஊரில் இருக்கிறாளாம்.
அப்பப்பா! சிறிது நேரத்தில் என்னமாய் பேசிவிட்டாள் அழகி😊

நண்பர்களுடன் டொரோண்டோ கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது பெருமாள் சந்நிதியில் பட்டர்,
"என்ன இப்பல்லாம் கோவில்ல சுத்தமா பார்க்க முடியறதுல்ல?" என கேட்கவும் யாரைக் கேட்கிறார் என்று சுற்றிப் பார்த்தால் அவர் என்னைத் தான் கேட்டுக் கொண்டிருந்தார்.
"என்னையா? நான் ஆல்பனியிலேருந்து வந்திருக்கேன்." ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். ஆஹா! டொரொன்டோல இருக்கிற என்னோட 'டூப்' யாருன்னு தெரியலையே?😛

ஒரு முறை ஆல்பனி கோவிலில் நான் பாட்டுக்கு சிவனே என்று சாமி கும்பிட்டுத் திரும்புகையில்
"நேத்து நீங்க ரொம்ப நல்லா பாடினீங்க?" என்று அப்பாவியாக ஒரு பெண் சொல்லவும்,
"நானா? பாடினேனா?" நமக்குத் தான் சங்கீதம்னாலே கிலோ என்ன விலையாச்சே என்று யோசித்து
"நீங்க என்னைய மாதிரி வேற யாரையோ பார்த்திருக்கீங்க" என்றவுடன் "அப்படியே உங்களை மாதிரியே இருந்தாங்க" என்றார். ஒரு பாடகி பேர வச்சது என் குத்தமா உன் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல...😜

கல்லூரியில் என்னைப் போலவே ஒரு சீனியர் மாணவி இருந்தாள். பார்க்க கொஞ்சம் அவளும் என்னைப் போல இருப்பாள். பள்ளியில் இருந்தே அவள் தான் என் அக்கா என்று பலரும் நினைத்திருந்தார்கள். கல்லூரியிலும் பலர் கேட்டார்கள். எனக்கு வகுப்பெடுத்த விரிவுரையாளர் ஒருவரையும் என் அக்காவா என்று கேட்பார்கள். கொஞ்சம் ஒத்துக்கலாம்.

எங்கள் சமூகத்து மக்கள் சிலர் நான் குப்பா வீட்டுப்பெண் என்பதை மறந்து "அவங்க வீட்டுப்பெண்ணா? இவங்க வீட்டுப்பெண்ணா?" என்று வேறு வேறு குடும்ப பெயர்களைச் சொல்லிக் கேட்பார்கள். அதிலாவது கொஞ்சம் நியாயம் இருக்கிறது. எங்கள் சமூகத்தில் கொஞ்சம் முகம் ஒத்துப்போகும்.

ஆனால் மற்றவர்கள் கேட்கையில் 'நவராத்திரி' சிவாஜி மாதிரி மற்ற கெட்டப்களையும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொள்வேன்😇😇😇

ஒரு முகம்
ஒவ்வொருக்கும் புதுமுகமாக
தெரிவது ஏனோ?






Friday, November 11, 2022

மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்

சிறுவயதில் இருந்தே கோபுரங்களை வேடிக்கைப் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். கழுத்தை வளைத்து உயர்ந்த மீனாட்சி அம்மன் கோபுரங்கள் அதுவும் தெற்கு, மேற்கு கோபுரங்களைப் பார்க்க அத்தனை கடவுள் உருவச்சிலைகள் வண்ணங்களுடன் இருக்கும். ஆனால், ஓரளவுக்கு மேல் தெரியாது. அதை விட கோபுரத்தின் உச்சியில் இருக்கும் யாளியின் உருவம் கீழிருந்து பார்க்கும் பொழுதே பெரிதாக தெரியும் என்றால் உச்சியில் எத்தனை பெரிய உருவமாக இருக்கும் என்று யோசித்ததுண்டு.

தெற்கு கோபுரத்தில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட சுதைச்சிற்பங்கள் இருப்பதாக அறிந்து கொண்டேன். சமீபத்தில் கேமரா உதவியால் பார்க்கையில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களைப் பற்றி யாரவது எழுதியிருந்தால் அதைப் படிக்க வேண்டும் என்ற ஆவல் கூடியுள்ளது. அப்படி ஏதாவது புத்தகம் இருந்தால் தெரியப்படுத்துங்கள். நன்றி.

படங்களுக்கு மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்கள்



 

வாயில்லா ஜீவன்கள்

மதுரையில் மக்களின் எண்ணிக்கை மட்டுமல்ல தெருக்களில் நாய்களின் எண்ணிக்கையும் பெருகி விழிபிதுங்கி நிற்கிறது. அதுவும் சில நாய்கள் நம்மைத் துரத்தும் கொடுமையும் வேறு! ஏற்கெனவே நாய்களைக் கண்டால் பயம் அதுவும் தெருநாய்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அது மனதில் என்ன ஓடுகிறது என்று யாருக்குத் தெரியும்? நன்கு பழகிய மனிதர்களையே இந்த காலத்தில் புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது. இவர்கள் வேறு பயமுறுத்துகிறார்கள். தெருவுக்கு இரண்டு மூன்று குறையாமல் இருக்கிறது. நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்கருகில் புதிதாக ஒரு கட்டடம் கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். அதன் வாசலில் இரவானால் குறைந்தது ஏழு நாய்கள் வந்து படுத்துக் கொள்ளும். அவர்களுக்குப் பயந்தே இரவில் சீக்கிரமாக வீடு திரும்புவது உண்டு.

காலையில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி சித்திரை வீதிகளில் நடந்து செல்கையில் சில சோம்பேறி நாய்கள் ஊருக்கேற்றபடி எனக்கென்ன என்று தூங்கிக் கொண்டிருக்கும் காட்சியைப் பார்க்கலாம். சோம்பல் முறித்துக் கொண்டும் மக்களோடு மக்களாக குரைக்காமல் நடந்து செல்லும் சில நாய்களையும் கண்டோம். காஃபி, பலகாரக் கடைகளில் அங்கிருப்பவர்களின் முகத்தைப் பார்த்தபடி பரிதாபமாக நிற்கிறது.

அப்படி ஒரு நாயைப் பார்த்தோம். ஏதாவது பிஸ்கட் வாங்கிப் போடலாம் என்று கடைக்காரரிடம் கேட்க அவரும் ஒரு பாக்கெட்டைத் தந்தார். எடுத்துப் போட்டால் முகர்ந்து பார்த்து விட்டு இது எனக்குப் பிடிக்காது என்று சொல்லாமல் தள்ளி நின்றது😒 சாலையோரக் கடைகளை வைத்திருந்தவர்கள்,"வாடா வந்து சாப்பிடு." என்று குழந்தையிடம் பேசுவது போல பேசியதும் "எல்லாம் சாப்பிடுவான். கொஞ்ச நேரம் ஆகட்டும்." என்று எங்களிடமும் கூற ஆச்சரியமாக இருந்தது.

"என்ன சாப்பிடுவான்?" என்று கேட்க, பால் வேண்ணா வாங்கிக்கொடுங்க" என கூற, ஈஷ்வரும் பால் வாங்கிக் கொண்டு வந்தார். அதுவோ 'சுடச்சுட' இருந்தது. அதற்குள் ஒரு பெண்மணி, "இந்தப் பாத்திரத்துல தான் நாங்க தண்ணி வைப்போம் இதுல ஊத்திடுங்க." என்று சொட்டை விழுந்த அலுமினிய சட்டியைக் கொடுத்தார். பாலை ஊற்றியவுடன் அவரே சிறிது நேரம் ஆற்றி அங்கு வைத்து விட்டார். சமீபத்தில் குட்டிப் போட்ட நாய் ஒன்று வேகமாக வந்து ரொட்டிகளைத் தின்று பால் குடிக்க சென்றது. இன்னும் ஆறவில்லை போல. காத்திருந்தது. "இது குட்டிங்க எல்லாம் அந்த குப்பைதொட்டிக்குப் பின்னால தான் இருக்கு." அந்த நாயும் நிமிடத்திற்கொருமுறை குப்பைத்தொட்டிப் பக்கம் பார்த்துக் கொண்டே இருந்தது. அம்மா அல்லவா?

அங்கிருந்தவர்கள் நேரத்துக்கு இந்த நாய்களுக்கு ரொட்டிகளையும் பாலையும் கொடுத்து வளர்த்து வருகிறார்கள் என்று தெரிந்து கொண்டோம். அவர்களே சிறு கடைகளை வைத்துப் பிழைப்பு நடத்துபவர்கள். ஆனாலும் ஒரு ஜீவன் பசியோடு அலைவதைப் பொறுக்காமல் உதவுகிறார்கள் என்பதைக் கேட்க ஆறுதலாக இருந்தது.

அடுத்த நாள் அம்மன் சன்னதி அருகே படங்களை எடுத்துக் கொண்டிருந்தோம். கழுத்தில் காலருடன் பார்க்க வீட்டில் வளர்க்கும் நாய் போல நன்றாக இருந்தது. அதற்கும் ரொட்டி வாங்கிப் போட்டோம். ஒன்றிரண்டைத் தின்று விட்டு ஈஷ்வரைத் தொடர்ந்து புதுமண்டம் வந்தது. அங்கிருந்து நாங்கள் தெற்குச் சித்திரை வீதி செல்ல, அதுவும் எங்களைத் தொடர்ந்து பின்னாடியே வந்தது. மேற்குச் சித்திரை வீதிக்குத் திரும்பியவுடன் சுற்று முற்றும் பார்த்து விட்டு வந்த வழியே போய் விட்டது.

இட்லி, பன் என்று ஏதாவது சாப்பிட வாங்கி கொடுத்திருக்கலாமோ என்று பிறகு தான் தோன்றியது. அதற்குள் அவன் போய்விட்டிருந்தான்.

இந்த முறை தான் தெருவில் கத்திக் கொண்டு மூர்க்கமாகத் தொடரும் நாய்களைப் பார்க்கவில்லை. ஆனாலும் நாய்களைக் கண்டால் பயம் தான். இவர்களின் எண்ணிக்கையை குறைக்க வழியில்லையா? பாவம் இந்த வாயில்லா ஜீவன்கள்!



Sunday, November 6, 2022

புதுமண்டபம்

புதுமண்டபம் என்றதும் உடனே நினைவிற்கு வருவது மின்னொளியில் ஜொலிக்கும் கடைகளும் மக்கள் வெள்ளமும் தான்! சிறுவயதில் ஸ்லோகம், கோலப்புத்தகங்கள் முதல் கோனார் தமிழ் உரை வரை வாங்க அங்குள்ள கடைகளுக்கு அம்மாவுடன் செல்வது வாடிக்கை. கிழக்குச் சித்திரை வீதி வழியாக உள்ளே நுழைகையில் வெளிச்சுற்றில் இடப்பக்கத்தில் புத்தகக்கடைகள்! அந்தச் சிறு கடைகளில் அத்தனை புத்தகங்களை அழகாக அடுக்கி கேட்கும் புத்தகங்களை அவர்கள் எடுத்துக் கொடுக்கும் பொழுது எப்படி இத்தனைப் புத்தங்கங்களை நினைவில் வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டதுண்டு. வலப்பக்கத்தில் பித்தளை, இரும்பு, தாமிர பாத்திரக்கடைகள். பெரும்பாலும் மதுரையைச்சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் குடும்பங்களுடன் வந்து சீர் பாத்திரங்களை வாங்கிச் செல்வார்கள். அதுவும் சுபமுகூர்த்த நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். விதவிதமான வடிவங்களில் பாத்திரங்களை வேடிக்கைப் பார்ப்பதும் நன்றாகத் தான் இருக்கும். 

இடப்பக்க உள்சுற்றுக்கடைகளில்  நூல், பூஜைக்குத் தேவையான மங்கலப் பொருட்கள் முதல் பெண்களின் அலங்கார பொருட்கள் வரை கிடைக்கும். எதிர்வரிசையில்  "தடதட" வென ஒலியெழுப்பும் தையல் எந்திரங்களின் ஓசை. அங்கு தான் திருவிழா, பரதநாட்டியம்,  கோவில் திரைச்சீலைகள் என்று வண்ணமயமான துணிகளைத் தைத்துக் கொண்டிருப்பார்கள். தைத்து முடித்த துணிகளைப்  பின்னால் இருக்கும் சிலைகளின் மேல் போட்டு வைத்திருப்பார்கள்! சிலைகளுக்கும் அழகாக துணிகளைத் தைத்து தங்கள்  கைத்திறமையைக் காட்டியிருக்கும் தையற்கலைஞர்கள் அனைவரும் ஆண்களே!

நடுவில் வசந்த மண்டபம் வருடத்தில் இருநாட்கள் மட்டுமே அம்மையப்பனுக்காக திறக்கப்பட்டிருக்கும். ஒரு முறை அதைக் காணும் வாய்ப்பும் எங்களுக்கு கிட்டியது. இப்பொழுது யாருக்காக முழுநேரமும் திறந்து வைத்திருக்கிறார்கள்😠😠😠 

கடைசிவரை சென்றால் எழுகடல் தெருவில் போய் முடியும் புதுமண்டபம். அங்கே பெரிய நந்தீஸ்வரர் கிழக்கு கோபுரத்தை நோக்கி அமர்ந்தவண்ணம் இருப்பது அழகு. அவரது கொம்புகளின் வழியே அம்மனின் திருக்கல்யாண கோல சிற்பம் பார்க்க பரவசம். 

வாசலில் பழங்கள்,பூக்கள், தட்டுமுட்டுச்சாமான்களை விற்பவர்களும்  இருப்பார்கள். காலையில் சென்றால் ஒருவித அழகுடன் இருக்கும் அதே புதுமண்டபம் மாலையில் வண்ண விளக்குகளுடன் ஜொலித்துக் கொண்டிருக்கும்.

புதுமண்டபத்தில் 124 தூண்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் இருக்கிறதென்று கேள்விப்பட்டேன். ஆனால் இதுநாள் வரையிலும் அதனைப் பார்க்க கொடுத்து வைக்கவில்லை. அங்கிருந்த கடைகள் உள்ளிருந்த தூண்களை முழுவதுமாய் மறைத்து விட்டிருந்தது. பொறுப்பில்லாதவர்களால் பல தூண்களும் சேதமடைந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்த கடைகளை அப்புறப்படுத்தி அருகிலேயே ஒரு இடத்தில் மாற்றி விட்டிருக்கிறார்கள். ஆனால் பழைய கடைகளின் வியாபாரமோ உற்சாகமோ இன்றி சோபித்துப் போய்க் கிடக்கிறது புதுக்கட்டடம்! 

சரி கடைகளை அப்புறப்படுத்தி விட்டார்கள். இனி  புதுமண்டபத்தின் அழகைக் காணலாம் என மிகவும் ஆவலுடன் இந்த வருடம் அங்கே சென்றால் பலத்த ஏமாற்றம்😔 மொத்தமாக மூடிவிட்டிருக்கிறார்கள். முன்புறம் கூட்டி குப்பையில்லாமல் கொஞ்சம் பார்க்கும் படி இருக்கிறது.  அழுக்குப்படிந்து குப்பைகள் சூழ, மழை நீர் தேங்கி கொசுக்களை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. முடை நாற்றம் வேறு. பார்க்கவே வருத்தமாக இருந்தது. 

திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட அரிய கலைப்பொக்கிஷங்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் துளியும் நமக்கு இல்லை. முறையாகப் பராமரித்து வரும் தலைமுறையினருக்கு நம் முன்னோர்களின் பெருமைமிகு ஆட்சி, அரசியல், கலைத்திறன்களை சொல்ல வழியேதும் செய்யாமல் பொய்ப் பிரச்சாரங்களில் மூளைச்சலவை செய்து கொண்டிருக்கிறார்கள். நம் இனத்தின் மேல் நமக்கே வெறுப்பு வரும் வகையில் அரசியல் நாடகம் அரங்கேறிவருவது தான் வேதனை.

இன்று மாலுக்குச் செல்லும் கூட்டம் அறியுமோ புதுமண்டபம் மதுரையின் பழமையான வணிகவளாகம் என்று! நான் கொண்டாடிய ஒவ்வொன்றும் இன்று சிறிது சிறிதாக சிதைந்து கொண்டிருக்கிறது😔

பழமையைத்  தன்னுள்ளே கொண்ட மதுரை அருமையான கோவில்களின் நகரம்.  புதுமண்டபத்தின் வரலாற்றை மக்கள் அறிந்து கொள்ள மாநகராட்சி மனது வைக்க வேண்டும். கோவில் வருமானத்தில் இந்து அறநிலையத்துறை மனச்சாட்சியுடன் நடந்தால் அம்மன் கோவில் மற்றும் அதனைச் சார்ந்த கோவில்கள், புதுமண்டப சிற்பங்களையும் சிலைகளையும் பாதுகாத்து மக்கள் கண்டு செல்ல வழி செய்யலாம். 

அம்மன் கோவிலில் தீப்பற்றி எரிந்த இடத்தையே வருடங்கள் கடந்தும் இன்னும் ஒன்றும் செய்யாமல் இருட்டடிப்பு செய்வதாக உள்ளூர் மக்கள் வேதனையில் கொந்தளிக்கிறார்கள். கோவில் கோபுரங்கள் பொலிவிழந்து புனரமைக்கப்படாமல் கோவில் வருவாயைக் குறி வைத்தே ஆட்சி நடத்துபவர்களிடமிருந்து என்று விமோச்சனம் கிடைக்குமோ?

அவளுக்கே வெளிச்சம்!

கடைகளுடன் இருந்த நேரத்துப் புகைப்படங்களும், சமீபத்தில் எடுத்த புகைப்படங்களும் இங்கே 

புதுமண்டபம், மதுரை


Wednesday, November 2, 2022

பாடவா உன் பாடலை ...

"பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
ஏனென்று நான் சொல்லலாகுமா
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா ..." 
என டிக்டாக்கில் தந்தையும் மகனும் பாடி மனதைக் கவர்ந்தனர். அதைத் தொடர்ந்து பல பாடல்கள்.  தனியாகவும் பலருடனும் அபி (அபிஷேக் வெங்கட்) என்ற இளைஞன் சிரித்த முகத்துடன் பாடி பலரையும் கவர்ந்திருக்கிறான் என்று அந்த ஐடியைப் பின்பற்றுபவர்களையும் அவர்களின் பின்னூட்டங்களையும் பார்த்தால் தெரிந்தது. இந்த வயதில் இத்தனை இசை ஞானமா! ? அனாயாசமாக கர்னாடக சங்கீதம், ஹிந்துஸ்தானி, தமிழ், மலையாளம், ஹிந்தி, பெங்காலி திரைப்பட பாடல்கள், மேற்கத்திய இசை என்று கலந்து கட்டி ரசிகர்களைத் தன் வசம் ஈர்த்தவரைப் பார்த்தால்  மேலைநாட்டவர் போல் தோற்றம். வட இந்தியரோ என்றும்  நினைக்கத் தோன்றும். அதுவும் அவர் தந்தையுடன் பாடியதால் பெயரை வைத்து  தென்னிந்தியர் என்று தெரிந்தது. தமிழ் உச்சரிப்புகள் எல்லாம் தெள்ளத்தெளிவாக! ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. சமூக ஊடகங்களில் அவரை நானும்  பின்தொடர, 73 ராகங்களைப் பாடியதன் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார். 

"AIM for Seva" அமைப்பிற்காக இந்த வருடம் அமெரிக்காவில் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளார் என்றவுடன் ஆனந்தமாக இருந்தது. நேரடியாகவே அவர் பாடுவதைக் கேட்கும் சந்தர்ப்பத்தை விட்டு விடக் கூடாது என்று விடுமுறை முடிந்து ஊரில் இருந்து வந்த அடுத்த நாளே என்றாலும் தூக்கமும் கண்களைத் தழுவினாலும் கிளம்பி சென்று விட்டோம் நானும் ஈஷ்வரும்!

அபியின் அறிமுகப்படலம் முடிந்ததும் ஓடி வந்து மேடையில் எற, ரசிகர்களின் ஏகோபித்த ஆரவாரம் ! வணக்கம் தெரிவித்து விட்டு விநாயகர் துதியில் ஆரம்பித்த நொடியில் கூட்டம் அவர் குரலுக்கு அடிமையானது. அவருடன் சேர்ந்து பலரும் பாட, அபிக்கும் உற்சாகம். ஆல்பனி சிறிய ஊர் என்றாலும் ஏகப்பட்ட கர்நாடக சங்கீத ஆசிரியர்களும், பாடகர்களும் மாணவர்களும் உள்ளனர். அனைவருக்கும் குஷி. அவருடைய இசைக்குழுவினர் இல்லாமல் முன்னேற்பாடாக இசைக்கோர்வையுடன் தயாராக வந்திருந்தார். அமெரிக்காவில் இன்னும் கொரோனா கெடுபிடியால் விசா பிரச்னை தொடருகிறது போல 😐 அரங்கில் தமிழ் மக்கள் கூட்டம் அதிகம் என்று நினைக்கிறேன். தமிழில் பாட வா என கேட்டவுடன் பலத்த கரகோஷம்.

ஒவ்வொரு பாடலைப் பாடும் பொழுது அதனுடன் தொடர்புடைய அவருடைய அனுபவங்களைச் சுவையாக பகிர்ந்து கொண்ட விதம் அழகு! பெற்றோர், குறிப்பாக அவருடைய தந்தை அவருடைய இசைத்திறமையைச் செப்பனிட்டு வளர்த்து இருக்கிறார் என்பதை மறவாமல் குறிப்பிட்டதும் தன்னுடைய குருக்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருப்பதாக நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

தன்னுடைய "73 ராகங்கள்" நிகழ்ச்சியைக் கேட்டு திரு.எஸ்.பி.பி அவர்கள் கைப்பட எழுதிய கடிதத்தில் பாராட்டுக்களுடன் இன்னும் தன்னை மெருகேற்ற அறிவுரைகளையும் அன்பாக தெரிவித்திருந்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அவரைக் காணும் பாக்கியம் கிடைக்கவில்லை. அதே போல் லதா மங்கேஷ்கர் வீட்டைப் பார்த்தும் நேரில் சந்திக்க முடியாமல் போனது. அவருடைய பாடலைப் பாடப் போகிறேன் என்றவுடன் அந்தப் பாடலாகத் தான் இருக்கும் என்று எதிர்பார்த்தபடி எனக்கு மிகவும் பிடித்த பாடலைப் பாடினார். ஆஹா! இது போதும் எனக்கு இது போதுமே! வேறென்ன வேண்டும் இந்தப் பாட்டு போதுமே என்று மனதிற்குள் பட்டாம்பூச்சி! அதே போல், தனக்கு மிகவும் பிடித்த எஸ்.பி.பி பாடல் என்று பாடியதும் ஆஹா! எனக்கு ஒரே கொண்டாட்டம். என்ன தான் சங்கீதம்னா கிலோ என்ன விலை என்றிருந்தாலும் சதா எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கும் எனக்கு அபி பாடிய தமிழ் பாடல்கள் சில ஹிந்தி பாடல்கள் எல்லாம் பிரபலமான பாடல்கள் தான் என்றாலும் நேரில் பாடுவதைக் கேட்க சுகமாக இருந்தது. அவருடைய தந்தைக்கு திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் திரு.டிஎம்.சௌந்தரராஜன் பாடிய பாடல்கள் மிகவும் பிடிக்கும் என்று ஆரம்பித்து துவக்கத்தில் நான் சொன்ன பாடலை "என்னோடு சேர்ந்து பாடுபவர்கள் விருப்பம் தெரிவிக்கலாம்" என்றவுடன் ஈஷ்வரும் வேறு சில நண்பர்களும் பாட நிகழ்ச்சி களைகட்டியது.

ராகங்கள் பெயரைச் சொல்ல அவர் பாடிக் காண்பித்து அதே ராகத்தில் அமைந்திருந்த பாடல்களைப் பாடியது சிறப்பு. தான் பாடியது மட்டுமில்லாமல் அரங்கத்தில் இருந்தவர்களையும் பாட உற்சாகமூட்டினார். சிரித்த முகத்துடன் அவர் நிகழ்ச்சியை வழங்கியதில் ரம்மியமான பொழுதாக இனிதே கரைந்தது  ஞாயிறு மாலை.

"AIM for Seva" சமூக அமைப்பு செய்யும் மகத்தான பணிகளையும் நேரில் அவர்களின் பள்ளிக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் பாடியதையும் அங்கு அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியுடன் இசை, விளையாட்டு என்று பல்வேறு திறமைகளை ஊக்குவிக்கும் வகுப்புகளும் வழங்கப்படுவதற்கு நன்கொடைகள் எவ்வளவு உதவுகிறது. அதற்கு தானும் ஒரு விதத்தில் உதவிபுரிவது தன்னுடைய அதிர்ஷ்டம் என்று தொடர்ந்து அமைப்பிற்கு உதவுமாறு வேண்டிக்கொண்டார். பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி ஸ்வாமி அவர்கள் இயற்றிய சில பாடல்களையும் பாடி மகிழ்வூட்டினார்.

உடல்நலம் சுகமில்லாமல் இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாமல் பாடி மகிழ்வித்ததைப் பாராட்டியே ஆக வேண்டும். அமெரிக்காவில் 27 நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இன்னும் 10 ஊர்களுக்குப் பயணம் செய்ய வேண்டும் என்றார். அவருக்கு எல்லாம் வல்ல கடவுள் துணை புரியட்டும்.

ஆல்பனி அன்பர் ஒருவரின் மூலமாகத் தான் இந்த நிகழ்ச்சிக்கான வாய்ப்பு கிடைத்தது. அதனாலேயே ஆல்பனி தனக்கு மிகவும் நெருக்கமான நகரம் என்று கூறவும் அரங்கம் அதிர கைத்தட்டல் தான். வீ லவ் யூ அபி 💞💞💞

"The greatest musical instrument given to a human being is the voice."
-தயானந்த சரஸ்வதி

தன் குரலால் பலரையும் மகிழ்விக்கும் அபியின் இசைப்பயணம் மென்மேலும் உயர வாழ்த்துகள்! 





Monday, September 12, 2022

அர்ஷ வித்ய குருகுலம்




பென்சில்வேனியா மாநிலத்தில் பொகோனோ மலைப்பகுதியில் 99 ஏக்கர் நிலப்பரப்பில் பூஜ்யஶ்ரீ் தயானந்த சரஸ்வதி சுவாமிகளின் அழகிய "ஆர்ஷ வித்ய குருகுலம்" அமைந்துள்ளது. இங்கு மாணவர்கள் தங்கி வேதாந்த கல்வியை கற்கும் வகையில் வகுப்புகள் நடக்கிறது. எங்களை மிகவும் கவர்ந்தது அங்கிருக்கும் அழகான சிறிய தட்சிணாமூர்த்தி திருக்கோவில். தினந்தோறும் காலை ஐந்தரை மணிக்கு ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது. ரம்மியமான காலைப்பொழுதில் திவ்யமான ருத்ரம் இசைக்கப்பட, அபிஷேக ஆராதனைகளுடன் பூஜைகள். ஏகாந்தமாக இருந்தது. பல வருடங்களாக செல்ல நினைத்து சமீபத்தில் தான் இங்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆல்பனியில் இருந்து மூன்றரை மணிநேரப் பயணம். பென்சில்வேனியா எல்லையைத் தாண்டியவுடன் மலைகளும், காடுகளும் சூழ்ந்த ஸ்டரௌட்ஸ்பர்க் நகரில் இருக்கிறது குருகுலம்.

உள்ளே நுழைந்தவுடன் ஓங்கி உயர்ந்த மரங்களும் குடில்களும் அமைதியைத் தருகிறது. வரிசையாக தங்குமிடங்கள். திருப்பதியை நினைவில் கொண்டு வந்தது. இருவர் தங்கும் வகையில் படுக்கை, குளியலறை வசதிகளுடன் அறைகளைச் சுத்தமாக வைத்திருந்தார்கள். ஆசிரமத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்ட நண்பர் ஒருவர் எங்களுக்காக முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருந்தார். கோவிலுக்கு அருகிலேயே அறைகள் கேட்டு கிடைத்ததில் பரம மகிழ்ச்சி. நாங்கள் சென்ற வேளையில் அன்றைய இரவு ஆராதனை நடந்து கொண்டிருந்தது. வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்தவர்களும் யோகா வகுப்பில் கலந்து கொண்டவர்களும் அங்கிருந்தனர். பூஜை முடிந்தபிறகு இரவு உணவை புதிதாக கட்டியுள்ள உணவகத்தில் அருந்தலாம் என்று போகும் வழியையும் கூறினார்கள்.

பெரிய சமையல் அறையுடன் பலர் அமர்ந்து சாப்பிடும் வண்ணம் உணவுக்கூடம். வரிசையாக பழங்கள், உணவை வைத்திருந்தார்கள். அங்கிருந்தவர்கள் அனைவரும் இன்முகத்துடன் வரவேற்று உணவருந்தச் சொன்னார்கள். சாத்வீக உணவு. அத்தனை ருசியாக இருந்தது. அமெரிக்கர்கள் பலரும் அங்கு வந்து செல்கிறார்கள். வேதாந்த வகுப்புகளில் கலந்து கொள்கிறார்கள். ஆனந்தமாக உணவை உட்கொள்கிறார்கள்.

அடுத்த நாள் காலையில் வேதாந்த குருமூர்த்தியின் ருத்ராபிஷேக பூஜையில் கலந்து கொண்டோம். திவ்ய அலங்காரத்துடன் குரு பகவான். அமைதி தவழும் கோவிலில் தியானம் செய்ய சுகம். விடிகாலைப் பனியுடன் “சிலுசிலு” தென்றல் என்று அதிகாலை திருப்பதியில் இருப்பது போன்ற சூழல். ஏழரை மணிக்கு காலை உணவு. இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதியில் நடந்து செல்ல ஒரு மைல் சுற்றளவில் பாதை அமைத்திருக்கிறார்கள். காய்கறி, பழத்தோட்டங்கள், மரங்கள், செடி, கொடிகளில் பூத்திருக்கும் மலர்கள் என கண்களுக்கும் விருந்து.

ஒன்றும் செய்யாமல், எண்ணாமல் "சும்மா இருக்க" முடிந்தால் அதுவே வரம். அங்கு அதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கிறது. மனம் அமைதியாக சில மணிநேரங்களாவது கவலைகளில் இருந்து தற்காலிகமாக தப்பித்துக் கொள்ள முடிகிறது.

கோடைக்காலங்களில் மாணவர்களுக்குப் பலவித வேதாந்த, யோகா வகுப்புகள் நடைபெறுகிறது. குழந்தைகள் விளையாட மைதானங்களும் பெரியவர்கள் அமர்ந்து பேச, தியானிக்க என்று வசதிகளுக்கு குறைவில்லை.
அங்கு ஸ்ரீதயானந்த சரஸ்வதி சுவாமிகள் தங்கியிருந்த குடிலில் தியானம் செய்ய அனுமதி உண்டு. அங்கும் அமைதி தவழ்ந்து கொண்டிருந்தது. பாண்டிச்சேரியில் இருக்கும் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமம் நினைவிற்கு வந்தது. எப்படி நேரம் ஓடிப்போனது என்றே தெரியவில்லை! அதற்குள் மதிய ஆரத்தி நேரம் வந்து விட்டது. மீண்டும் கோவிலுக்குச் சென்றோம். பூஜை முடிந்த பிறகு மதிய உணவு. அசத்தலான சாப்பாடு. எனக்கு மிகவும் பிடித்த ரசமலாய். பார்க்க பார்க்க ஆனந்தம். திகட்ட திகட்ட பேரின்பம்.

திவ்ய மதுர பேரானந்தம் என்பது இது தானோ? மனமும் வயிறும் குளிர நன்றாக சாப்பிட்டோம். சற்று நேர ஒய்வு. மீண்டும் மெதுவாக ஒரு நடை. அருகிலிருக்கும் சிருங்கேரி சாரதாம்பாள் கோவிலுக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து அறைச் சாவியை அலுவலகத்தில் ஒப்படைத்து விட்டு சிறிது காணிக்கையையும் வழங்கி விட்டு நன்றி சொல்லிக் கிளம்பினோம்.

அமெரிக்கா முழுவதும் இந்துக்கோவில்களில் குழந்தைகளுக்கான பால பாடம் சுவாமிகளின் வழிகாட்டுதலில் நடத்தப்பட்டு வருகிறது. ‘Aim for Seva’ அமைப்பின் மூலம் உறைவிடப் பள்ளிகளை அமைத்து ஏழை மாணவ, மாணவியர்களுக்கு இலவச கல்வியையும் வழங்கி வருகிறார்கள்.

மனஅமைதியை விரும்புவர்களுக்கு அருமையான இடம் இந்த குருகுலம்.

“Give the world the best you have and the best will come back to you.”

-Swami Dayananda Saraswathi

அதிக வருமானம் ஆதிக்கம் செலுத்துமா?

கணவனை விட மனைவி அதிகம் சம்பாதித்தால் ஆணுக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை வந்து விடுகிறது. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான். இதற்காகவே பயந்து படித்த பெண்களை வேலைக்கு அனுப்பாத பல ஆண்கள் உள்ளனர்.

கணவனை விட தான் அதிகம் சம்பாதிக்கிறோம் என்ற நினைப்பில் சில பெண்கள் ஆண்களையும் அவர்கள் குடும்பத்தாரையும் துச்சமாக எண்ணுகிறார்கள். நடத்துகிறார்கள். இதுவும் உண்மை.

வெகு சிலரே, “நம்” குடும்பத்துக்காக என்று நினைத்து ஒருவரின் உயர்ச்சியில் மகிழ்கிறார்கள். வீட்டு வேலைகளில் பங்கு கொள்கிறார்கள்.

வேலைக்கே செல்லாமலும் கணவரை விட குறைந்த வருவாய் இருந்தாலும் அடிமை போல நடத்தும் பெண்களும் உண்டு.

தனிநபர் வருமானம் என்றால் பெண்ணை அடிமையாக நடத்தும் ஆண்களும் உண்டு என்பது தெரிந்ததே.

வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் கொண்டது. பெண் அதிகம் சம்பாதித்தால் ஆண் அச்சப்படத் தேவையில்லை. அதனால் உண்டாகும் மனச்சிக்கல்களின் முடிவில் இருவரின் மகிழ்ச்சியையும் குடும்பத்தையும் அழித்து விடும். அதிகம் சம்பாதிப்பதால் அதிகாரம் செய்யும் உரிமையும் தனக்குத்த்தான் என்று எண்ணுகிற வீட்டில் அமைதியும் சந்தோஷமும் விடைபெற்று விடும்.

கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் இல்லங்களில் அன்பான, அழகான வாழ்க்கைக்கு இரு மனங்கள் இசைந்து செல்தல் அவசியம். ஒருவருக்கொருவரின் விட்டுக்கொடுத்தலும் அரவணைப்பும் உற்சாகமூட்டுதலும் பேரின்ப பெருவாழ்க்கைக்கு அத்தியாவசியம். இதற்கு மனம்விட்டுப்்பேசி பிரச்னைகளைக் கண்டறிந்து தீர்வுகாணல் ஒன்றே இன்பமான இல்லறத்துக்கு வழிவகுக்கும்.

பங்கு கொண்ட பெண்கள் பலரும் தாங்கள் ஏதோ தங்கள் கடமையிலிருந்து (மனைவி, தாய்) விலகி வேலைக்குச் செல்வதாக மன்னிப்பு கோரும் மனநிலையிலேயே பேசுவது போல எனக்குத் தோன்றியது. மனைவி வேலைக்குச் சென்றால் குடும்பத்திற்கு நல்லது என்று நினைக்கும் கணவன் அவளுக்கு ஒத்தாசையாக அனைத்து விஷயங்களிலும் இருப்பான். இருக்கிறான். அப்படி இல்லாமல் குடும்பத்திற்காக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு வீட்டு வேலைகளில்  உதவி செய்யாமல் இருக்கும் கணவர்கள் தாழ்வு மனப்பான்மையால் பீடிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று தான் அர்த்தப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. 

உணர்ந்தோர் வாழ்கிறார்கள். மற்றலரெல்லாம் “விதியே” என நடமாடுகிறார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு  பெண்மணியைத் தான் ஃபேஸ்புக் போராளிகள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். புதுக்கோட்டையிலிருந்து சிவகங்கை வரை தினமும் வேலைக்குச் செல்லும் பெண் பாத்திரம் கழுவி வைக்கச் சொல்கிறாள் என்று சொன்ன அவர்  கணவரை ஏனோ ஓரவஞ்சமாக விட்டுவிட்டது ஆணாதிக்க திராவிட சமூவம்😏




Thursday, September 8, 2022

செய்யும் தொழிலே தெய்வம்

நேற்று ஷூ வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்குள் நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி துள்ளிக்குதித்துக் கொண்டே வேகமாக வந்து, "ஹாய் மை நேம் இஸ் சூஸன்." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "என்ன மாதிரியான ஷூ வேண்டும்?" என்று கேட்டார்.

நானும், " எனக்கு உயிர்போற குதிகால் வலி. நல்ல ஷூ வேண்டும்" என்றேன்.

அவரும் பாதங்களைப் படமெடுத்து சிறிது நேரம் ஏன் குதிகால் வலிக்கிறது என்று ஒரு மருத்துவரைப் போல் படங்களை வைத்து விளக்கி விட்டு, உள்ளே சென்று ஷூக்கள் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று போனார்.

நரைத்த தலைமுடி. குட்டையான உருவம். தெளிவான பேச்சு. துறுதுறு முகம். வயது 55+ ஆக இருக்கலாம். எப்படி இவ்வளவு உற்சாகமாக வேலை பார்க்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்று அட்டைப்பெட்டிகளுடன் வந்தவர் ஒரு பெட்டியிலிருந்து ஷூ ஒன்றை எடுத்து லேஸ் பிரித்து, "இதைப் போட்டுப் பார்." என்றார்.

"எனக்கு இந்த கலர் பிடிச்சிருக்கு." சொல்லிக் கொண்டே வாங்கிப் போட்டு நொண்டி நொண்டி நடந்து பார்த்து, அதற்குள் அவர் இரண்டாவது, மூன்றாவதையும் பிரித்துக் கொடுக்க நானும் போட்டுப் பார்க்க...

"தேர்ந்த மருத்துவரைப் போல இத்தனை விஷயங்களைப் பேசுகிறீர்களே. அது சம்பந்தமாக படித்திருக்கிறீர்களா?" என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.
அதற்கு அவர் சிரித்துக் கொண்டே "நான் பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறேன். இருபது வருடங்கள் நியூயார்க் சுகாதாரத்துறையின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பபாளராக இருந்து இரு வருடங்களுக்கு முன்பு தான் பணியிலிருந்து ஒய்வு பெற்றேன்." என்று ஆச்சரியமூட்டினார்!

"அப்ப கொரோனா காலத்துல நீங்க இல்லையா?"

"ஆறு மாதம் வரை இருந்தேன். அதற்கு முன்பு வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுப்பரவல் , டிக் வேறு பல பூச்சிகளின் மூலம் உருவாகும் நோய்கள் பற்றின ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒய்வு பெற்றதும் 'LLBean' என்ற கடையில் துணிகளை மடித்து வைப்பது, பொருட்களை வரிசைப்படுத்தி வைப்பது போன்ற வேலைகள். இங்கு சேர்ந்து ஒரு வருடம் இருக்கும். எனக்கு ஓட மிகவும் பிடிக்கும். என் அம்மா 100 வயதாக இரு வாரங்கள் இருக்கும் பொழுது தான் இறந்தார். அதுவரையில் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தவர். இங்கு வேலை செய்வதால் பலரையும் தினமும் சந்திக்கிறேன். எனக்கும் பிடித்திருக்கிறது."

“ஓ! அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கணினியியல் துறையில் வேலை கிடைத்தும் இருமுறையும் என்னால் சேர முடியவில்லை." என்று என் அனுபவத்தையும் சொல்லி பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் கனடாவில் சஸ்கேட்ச்சுவான் எனும் குளிர் பிரதேசத்தில் பிறந்து கால்கரியில் படித்து முடித்து அமெரிக்காவில் வந்து செட்டிலாகியிருக்கிறார். அவருடைய குழந்தைகளை ஒரு பஞ்சாபி பெண்மணி தான் வளர்த்திருக்கிறார். "என் குழந்தைகள் பஞ்சாபி உணவை விரும்பி உண்பார்கள். கனடா-இந்தியா கலாச்சார விழா நாட்களில் பஞ்சாபி உடைகளை அணிந்து கொள்வார்கள். அந்தப் பெண்மணி பாசத்துடன் என் குழந்தைகளை வளர்த்தார்" என்று நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

இந்தியாவில் நான் எந்தப் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன் என்று கேட்டு தெரிந்து கொண்டார்.

"கனடாவில் வெளிநாட்டவர்களை விரும்பி அழைத்துக் கொள்வார்கள்." அமெரிக்காவில் அப்படி இல்லை என்று சொல்லாமல் கண்களை உருட்டினார்.

என் பெயரையும் தவறில்லாமல் உச்சரித்தார். பரவாயில்லையே என்றவுடன் அவரின் கீழ் படித்த இந்திய மாணவர்களின் பெயர்களைச் சொன்னார்.

பணம் கொடுத்து விட்டுத் திரும்புகையில் "சீக்கிரம் உனக்கு குணமாகட்டும்." என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார்.

பொதுவாகவே அமெரிக்காவில் "கஸ்டமர் கேர்" என்பது தான் தொழிலின் அடிப்படை. அவர்கள் தான் நமக்கு மூலதனம் என்று உணர்ந்த எந்த நிறுவனமும் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள பணியாட்களுக்குப் பயிற்சி அளிக்கும். நான் சென்ற கடையும் ஷூக்களுக்கு மிகவும் பிரபலமானது. அங்கு வருபவர்களுடன் இணக்கமாக பேசுவார்கள். அவர்களைப்பற்றி விசாரிப்பார்கள். அவர்களிடம் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்குவார்கள். அதனால் தான் கொள்ளை விலையில் விற்றாலும் வாங்கி கொண்டுச் செல்ல கூட்டம் இருக்கிறது. பெரும்பாலான கடைகளில் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்காமல் (பிடிக்கா விட்டாலும்) கவனிப்பார்கள். ஆரம்ப அமெரிக்க நாட்களில் இது பெரிய கலாச்சார அதிர்ச்சியாகவே இருந்தது எனக்கு!

மெத்த படித்தவர்கள் என்ற அகம்பாவோமோ எந்த வேலையையும் கீழ்த்தரமாக எண்ணும் மனோபாவமோ இல்லாது நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பலரையும் அறிவேன். எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படையாகவே நான் இங்கு பகுதி நேரம் வேலை செய்கிறேன் என்று உயர் பதவியில் இருப்பவர்கள் கூறிக் கேட்டிருக்கிறேன். அமெரிக்கர்கள் பலரிடமும் இருக்கும் இந்த குணாதிசயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம் மக்களில் பலரும் தங்களால் தான் அமெரிக்காவில் தினசரி வேலைகள் நடப்பதைப் போல் 'நான் இப்படியாக்கும் நான் அப்படியாக்கும்' என பீலா விடுவார்கள். அப்பேர்ப்பட்ட மனிதர்களிடையே வெட்டி கௌரவம் பார்க்காமல் உயர் படிப்பு படித்திருந்தாலும் கைநிறைய ஓய்வூதியம் கிடைத்தாலும் ஒய்வு காலத்தில் தனக்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்த சூஸனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது. அவருடைய 'இகிகை'யை அவர் கண்டறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறார். கடந்து வரும் மனிதர்கள் எதையாவது ஒன்றை கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள்!
 
வாழ்க வளமுடன்!

சிருங்கேரி வித்யா பீடம்


கர்நாடாகாவில் சிருங்கேரியில் அமைந்துள்ளது ஸ்ரீ சாரதா பீடம். சங்கர மடத்தைச் சேர்ந்த இந்த அமைப்பு அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பொக்கோனோ மலைப்பகுதியில் ஸ்டரௌட்ஸ்பர்க் நகரில் 35 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய சிருங்கேரி வித்யா பீடத்தை நிறுவியுள்ளது. அமைதியான சூழலில் அமைந்துள்ள அழகிய திருக்கோவிலில் ஸ்ரீசாரதாம்பாள் திவ்யமாக கொள்ளை அழகுடன் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அம்பாள் உலாவர தங்கரதம், வாகனங்களுடன் மஹாகணபதி, ஆதிசங்கரர் பிரதான சந்நிதிகளுடன் புதிய கோவில் வளாகம் அமைந்துள்ளது. கோசாலை ஒன்றையும் பராமரித்து வருகிறார்கள். 

அமெரிக்காவில் சனாதன தர்மத்தை வளர்க்கவும் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நமது வேத கலாச்சாரத்தின் உண்மையான நடைமுறையைப் பின்பற்றவும் வேத பாடசாலையில் கற்றுத் தரப்படுகிறது.
மலைகள் சூழ இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் சர்வ அலங்கார்ங்களுடன் சாராதம்பாளின் திவ்ய தரிசனம் இனிய அனுபவம்.




ஶ்ரீவாரி பாலாஜி திருக்கோவில்


நியூஜெர்சி மாநிலத்தில் ஃப்ராங்க்ளின் நகரில் புதிதாக ஶ்ரீவாரி பாலாஜி திருக்கோவிலைக் கட்டி வருகிறார்கள். கோபுர வேலைகள் துவங்குவதற்கு முன்பு பெருமாளை பிரதிஷ்டை செய்து உள்ளே வைத்திருக்கிறார்கள். தற்காலிகமாக எதிரில் உள்ள கட்டிடத்தில் உற்சவ மூர்த்திகளுடன் தினப்படி பூஜைகள் நடந்து கொண்டிருக்கிறது. இக்கோவில் ஶ்ரீரங்கத்தில் இருக்கும் ஆண்டவன் ஆசிரமத்தைச் சார்ந்தது என்று அங்கிருந்த பட்டர் கூறினார். ஶ்ரீராமானுஜர் மடத்தைச் சேர்ந்த கொடையாளர்களின் தயாள குணத்தால் இங்கும் ஓரு கோவில்

கோவிலைக்கட்டும் பணியைச் செய்ய சிவகங்கை, புதுக்கோட்டையிலிருந்து இருவர் வந்திருந்தனர். அவர்களைச் சந்தித்துப் பேசியதில் “பலருக்கும் விசா கிடைக்காததால் வேலை மந்தமாக சென்று கொண்டிருக்கிறது. பனிக்காலத்திற்குள் வெளிவேலைகளை முடிக்க வேண்டும்” என்று கூறினார்கள். நம்மூர் மக்களைப் பார்த்துப் பேசிய சந்தோஷத்துடன் ஊர் திரும்பினோம். அடுத்த வருடம் கோடையில் கும்பாபிஷேகம் நடக்கலாம்.





ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...