Monday, December 19, 2022

The Elephant Whisperers

சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளியாகியுள்ளது "The Elephant Whisperers" என்றொரு குறும்படம். தலைப்பிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் இது யானைகளைப் பற்றின படம் என்று. இதற்கு முன் வெளியான படம் ஒன்றைப் பற்றி ஏற்கெனவே பகிர்ந்திருக்கிறேன். Holiday in the Wild யானைகளைப் பிடிக்காத மக்கள் குறைவாகத் தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். பெரிய உருவம் பார்க்க பயமாக இருந்தாலும் ஒரு குழந்தையைப் போல பழகுவதைக் கோவில்களில் பார்த்திருப்போம். மக்களும் கோவில் யானைகளுடன் மனதோடுப் பழகி தங்களில் ஒருவராக நெருங்கி விடுவார்கள். கொஞ்சம் அச்சத்துடன் தான். பாண்டிச்சேரி மணக்குள விநாயகர் யானை இறந்த போது பொதுமக்கள் அளித்த சிறப்பான இறுதி ஊர்வலமாகட்டும் அழுது கொண்டே அந்த யானையைக் கொன்றுவிட்டதாக அவர்களின் கொந்தளிப்பாகட்டும் மனிதனுக்கும் யானைகளுக்கும் இடையேயான ஆத்மார்த்தமான அன்பை அது வெளிப்படுத்தியது.

இந்த குறும்படமும் அப்படித்தான். காட்டில் தனித்து விடப்பட்ட, நலிந்த யானைகளை வளர்க்கும் இரு மனிதர்களைப் பற்றின படம். இயற்கையோடு இணைந்த வாழ்வில் இருக்கும் வெள்ளந்தித்தனம் அந்த மனிதர்களிடம் இருக்கும்.தங்களைக் கவனித்துக் கொள்பவர்களைத் தன் இனமாக கொண்டாடும் மிருகங்கள் மனிதர்களை விட மேல். மனிதர்களின் பாதிப்பு இல்லாத காடுகள் அரிதாகிக் கொண்டு வரும் வேளையில் இப்படியொரு இடத்தில் வாழும் பொம்மன், அவர் மனைவி பெல்லி என்று இருவரும் அனாதையாக வந்த ரகு என்ற யானையை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார்கள். தங்கள் குழந்தையாக பாவித்து அவர்கள் ரகுவுடன் பேசுவதும் கொஞ்சுவதும் ரகுவும் அவர்களுடன் குலாவுவதும் அந்தக் கண்கள் பார்ப்போரை வசீகரிக்கும்.

தெப்பக்காடு யானைகள் முகாம் ஆசியாவிலேயே மிகவும் பழமையான யானைகளின் முகாம். அங்கு வாழும் பெல்லி என்பவர் அனாதையாக விடப்பட்ட யானைகளை வளர்க்கும் பொறுப்பிலிருக்கும் ஒரே பெண்மணி. அவருடைய கணவர் ஒரு யானையால் இறந்தவர். பொம்மனை மறுமணம் செய்து கொண்டு யானைகளைப் பராமரித்து வாழ்ந்து வருகிறார். ரகு சாப்பிட மறுத்து கீழே போடும் ராகி உருண்டைகளைக் குரங்குகள் விரும்பி சாப்பிடுவது இயற்கையில் எதுவும் வீணாகப் போவதில்லை என்று புரிய வைக்கிறது. குரங்குகள், கழுகு, புலி என்று காட்டு விலங்குகள் ஒவ்வொன்றும் அத்தனை அழகு. மனிதர்களுக்குத் தான் அதனைப் பாதுகாக்கத் தெரியவில்லை.

நான் முன்பு பணிபுரிந்த இடத்தில் நியூயார்க் மாநிலத்தில் கடைகளிலும், வீடுகளிலும் சட்டத்திற்குப் புறம்பாக வைத்திருந்த தந்தத்தாலானப் பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தார்கள். மனம் பதறி விட்டது. எத்தனை யானைகள் கொல்லப்பட்டதோ ? ரகு போன்று எத்தனை இளம் யானைகள் கஷ்டப்பட்டதோ என்று இன்று நினைத்தாலும் தந்தத்திற்காக யானைகளை வேட்டையாடும் மனிதர்கள்,அவர்களை வேட்டையாடத் தூண்டுபவர்கள் எல்லாம் ஏன் வாழ்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றும்.

பசுமையான காடு, சலசலத்து ஓடும் ஆற்றில் ரகு குளிக்கும் காட்சிகள், பிடித்த உணவைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தைத்தனம், மனிதர்களின் உணர்வுகளை புரிந்து ஆறுதலாக அரவணைக்கும் ரகு என்று எல்லாமுமே அழகு! இரண்டாவது குழந்தை வரும் பொழுது முதல் குழந்தைக்கு ஏற்படும் அதே பொறாமை ரகுவிற்கும் வருகிறது.விலங்குகளுடன் வாழும் உலகில் மனிதன் தன் சுயத்தை இழந்து புனிதனாகிறான். இயற்கையோடு இணைந்தால் எல்லாமே அழகு! அது தான் இந்த குறும்படம் நமக்குச் சொல்வது. கண்டு களியுங்கள்!






No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...