Sunday, March 29, 2015

இணைய வேதாளம்

முதன் முதலில் இணையம் மூலம் நண்பர்களுடனும், உற்றார், உறவினர்களுடனும் தொடர்பு கொண்ட பொழுது தகவல்தொழில் நுட்பத்துறையின் வளர்ச்சி பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. உலகம் சுருங்கி விட்டது என்று நகரம் முதல் குக்கிராமங்கள் வரை கொண்டாடித் தீர்த்தது.

அப்போதே அப்படி என்றால் இப்போது சொல்லவா வேண்டும்? பேஸ்புக் , ட்விட்டர், ஃபேஸ்டைம், கூகிள் டாக், வாட்ஸ்ஆப்,  இன்ஸ்டக்ரம் ...என்று வளர்ந்து வரும் சமூக வலைதளங்கள் உள்ளங்கையில் உலகம் என்று நம் வாழ்க்கையை கணினிக்கும், கைப்பேசிக்கும் அடிமையாக்கி விட்டது.

வீட்டை விட்டுத் தொலைவில் இருக்கும் குடும்பங்கள் ஒன்றோடொன்று தகவல் பரிமாற்றங்கள் செய்து கொள்ள கடிதம் எழுதிய பழக்கமெல்லாம் மறைந்து ஈமெயில் என்றாகி, முகம் பார்த்துப் பேச வேண்டுமா - ஸ்கைப் , ஃபேஸ்டைம் என்று நித்தமும் பேசி சிரிக்க என்று ஆனந்தமாக போகிறது  பெற்றவர்களுக்கும், நண்பர்களுக்கும்!

குழந்தை பிறப்பு முதல் பெரியவர் இறப்பு வரை வீடியோவில் நேரடியாகவே ஒளிபரப்பு செய்து விடுகிறார்கள்!

இப்போதுள்ள சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்திருப்பது பேஸ்புக். இதன் மூலம் பல வருடங்களாகப் பார்த்துப் பேசியிராத நண்பர்கள் முதல் சொந்தங்கள் வரை கூடிப் பேச முடிகிறது. ஒரு நல்ல நாளா, ஊரில் விசேஷமா, ஒரு அவசர உதவியா உடனுக்குடன் கேட்டுத் தெரிந்து கொள்ள முடிகிறது.

சிலர் தங்களிடம் உள்ள திறமைகளை வெளிக்கொணரும் ஒரு மேடையாகவும் கூட இருக்கிறது. தனக்குத் தெரிந்த நண்பர்கள், அவர்களின் நண்பர்கள் என்று நண்பர்கள் வட்டம் விரியத் தொடங்குகிறது. அரசியல், இசை, மொழி, ஜாதி, மதம், கட்சி, பிடித்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், பொழுதுபோக்குகள் ... என்று பல்வேறு குழுமங்கள். தன் ரசனையை ஒத்தவர்களுடன் சேர்ந்து  அறிவை வளர்க்கவும், விவாதம் செய்யவும்,  நேரத்தை ஓட்டுபவர்களும் அதிகம்.

ஒத்து வரதாவர்களுடன் கண்ணியமாக ஒதுங்கிப் போவதும், கடுகு விஷயத்தை மலை போல் பெரிதாக்கி 'நீயா நானா' மோதி பார்க்கிறேன் பேர்வழி என்று தரக்குறைவாக பேசி டாஸ்மாக்கில் இருந்து வந்தவன் போல பிதற்றுவதும் அதைக் கண்டு துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று கூட்டம் சிதறுண்டு ஓடுவதும் பல குழுமங்களிலும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. பலரும் அடிக்கடி வெளிநடப்பு செய்வதும் நடக்கிறது!

ஒரு கருத்தை ஒருவர் சொன்னால், கருத்தை விட்டுவிட்டுச் சொல்பவருடைய ஆதிமூலத்தை ஆராய்ந்து அதை வைத்து நடக்கும் இணையச் சண்டைகள் மிகப் பிரபலம்.  சொன்ன கருத்துகளை புரிந்து கொள்பவர்களை விட அவர்களாகவே புரிந்து கொண்ட கருத்துகளை வைத்து நடக்கும் சண்டைகள்  அதிகம். கருத்து வேறுபாடுகள் வரும் போதெல்லாம் சேற்றை வாரி தூற்றிக் கொள்வதில் நம்மை அடித்துக் கொள்ளவே முடியாது என்று நித்தம் நிரூபிக்கும் கூட்டங்களும் உண்டு.

இங்கும் வந்து நான் வயதில் பெரியவன், எனக்கு எல்லாம் தெரியும் என்று அதிகப்பிரசங்கித்தனம் செய்பவர்களும், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று கோமாளித்தனம் செய்பவர்களும் உண்டு.

சில பதிவுகள் நம்மை அறியாமல் வாய் விட்டு சிரிக்க வைக்கிறது. சில சிந்திக்க வைக்கிறது. சில கோபமூட்டுகிறது, சில பொறாமைப்பட வைக்கிறது என்று தினமும் ஏதாவது ஒரு வகையில் பொழுது போகிறது.

பலவகையான குழுமங்கள் - சமூகநலனைக் கருதிச் செயல்படுபவைகள், பெண்களுக்காக, குழந்தைகளுக்காக, கல்லூரியில் படிப்பவர்களுக்காக, இயற்கை மருத்துவம், ஆரோக்கியம்,விவசாயம், படிப்பை சார்ந்து, பிறந்த மண்ணைச் சார்ந்து, தாங்கள் படித்ததை பிறருக்கும் பயனுள்ள வகையில் தங்கள் பக்கங்களில் போட்டு அதை மற்றவர்கள் படித்துப்  பயன் பெறுவதும்(!) ... இப்படி பல ஆயிரக்கணக்கான குழுமங்கள் சண்டை சச்சரவுடனும், பயனுள்ள கருத்துக்களுடனும் போய்க் கொண்டிருக்கிறது.

இதில் தற்காப்புக்காக முகமூடி அணிந்து கொண்டு பலரும், தன்னை வெளிப்படுத்த தைரியம் இல்லமால் பலரும்,  நடிகர் நடிகை படங்களுடன் வலம் வருபவர்கள் என்று பன்முகங்களை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். நன்கு தெரிந்தவர்களைத் தவிர ஆணுடன் பேசுகிறோமா, பெண்ணிடம் பேசுகிறோமா என்று தெரியாமல், ஆண்களின் பெயரில் பெண்களும் பெண்களின் பெயரில் ஆண்களும் என்று இது ஒரு மாயாவி உலகம்.

எனக்கு எவ்வளவு லைக்ஸ் கிடைத்திருக்கிறது என்று பெருமைப்பட்டுக் கொள்பவர்களும், ஈகோ இல்லை என்று மார் தட்டிக் கொண்டு ஈகோவுடன் அலைபவர்களும், நல்லவன் வேடம் போட்டு ஆஸ்கார் அவார்ட் வாங்கத் துடிக்கும் உத்தம வில்லன்கள் அதிகம் வலம் வருவதையும் காண முடியும்.

சிலரைப் பற்றி அவர்கள் பக்கத்தில் ஆஹோ, ஓஹோ என்று புகழ்ந்து எழுதியவர்களே ப்ரைவேட் மெசேஜில் அவர்களைப் பற்றி பிற நண்பர்களுடன் அவதூறாக பேசி தங்களின் மூளை வளர்ச்சியை தாமாகவே பதிவு செய்து விடுகிறார்கள். பெரும்பாலும் மெத்த படித்த மேதாவிகள் என்று தங்களை நினைத்துக் கொள்பவர்களே மட்டமான இச்செயல்களில் ஈடுபட்டு அவர்கள் மனவிகாரங்களை கொட்டவும் செய்கிறார்கள்!

இணையதளம் நல்லது என்று சொல்லும் அதே நேரத்தில் இணையம் என்ற மாய உலகில் அதை கையாளத் தெரியாமல் மாட்டிக் கொண்டு முழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! தவறாக பயன்படுத்துபவர்கள் குறைவாக இருந்தாலும் பாதிப்பு எனும் பொழுது வேதனைப்படுபவர்கள் அதிகம். படிக்கும் வயதில் சிலர் தடம் புரள இதுவும் காரணமாவது தான் வேதனை தரும் விஷயம். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை புரிந்து கொண்டால் சரி.

பெற்றோர்களுக்குத் தெரியாமல் குழந்தைகள் வாழும் இணைய வாழ்க்கை பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து பல குடும்பங்களும் அவதிப்படுகின்றன.
பள்ளிகளும், பெற்றோர்களும் இவ்விஷயத்தில் மிக்க கவனம் கொண்டு மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.
அரசாங்கமும் மக்களிடையே விழிப்புணர்வை கொண்டு வரும் மிகப் பெரிய பொறுப்பில் இருக்கிறது.

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் அவசர உதவி என்று வரும் பொழுது இந்த தகவல் தொழில் நுட்பம் பெரும்பங்கு வகிக்கிறது. தெரியாத பயனுள்ள தகவல்களை கேட்டறியவும் முடிகிறது. பலருக்கும் இது ஒரு பொழுதுபோக்கவும்,  சொந்த பந்தங்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசவும், வெளியிடங்களில் நடக்கும் நல்லது கெட்டது தெரிந்து கொள்ளவும் என்று... லிஸ்ட் நீண்டு கொண்டே போனாலும்...

நாணயத்தின் இருபக்கம் போல் இதனால் நன்மைகளும், தீமைகளும் - எல்லாம் அவரவர் பார்வையில்.




Sunday, March 22, 2015

நீ எப்பம்மா வருவே???

காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு காலங்கள் ஓடினாலும் இந்நாள் மட்டும் நினைவுகளை பின்னோக்கிச் செல்ல வைத்து விடுகிறது. என்றாவது ஒருநாள் இறக்கத் தான் போகிறோம் என்று தெரிந்திருந்தாலும் அந்த இழப்பு நம்மைத் தாக்கும் பொழுது தான் அதன் பாதிப்பு அதிகம் தெரிகிறது.

வைத்தியம் செய்ய வசதியில்லாமல் இறப்பது, பார்த்துக் கொள்ள ஆட்கள் இல்லாமல் இறப்பது, முதுமையின் காரணமாக இறப்பது என்பதை ஏற்றுக் கொள்ளும் மனம், 'திடீர்' இழப்பை ஏற்றுக் கொள்ளத்  தடுமாறுகிறது. அதுவும் குடும்பத்தில் உள்ளவரின் இறப்பு எனும் போது அதன் பாதிப்பிலிருந்து மீள்வதும் கடினமாக இருக்கிறது.

ஐந்து வருடத்திற்கு முன்பு இதே நாளில் அன்று தொலைபேசியில் அடுத்தடுத்துஅழைப்புகள் வந்திருந்ததைப் பார்த்தவுடனே ஒரு நெருடல். எடுத்து பேசும் பொழுது தம்பி கவலையுடன் அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கிறோம். மதியம் திடீரென்று நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது என்றார். அந்த நேரம் வரை அவருக்கு ஒன்றும் சீரியஸாக இருக்காது என்ற நம்பிக்கையில் அவனும் இருந்தான்.

எந்த ஆஸ்பத்திரியில் ?

தெற்குவாசல் வடமலையானில்.

டாக்டர்கள் இருக்கிறார்களா?

பெரிய டாக்டருக்குத் தகவல் சொல்லியாயிற்று. அவர் எப்போது வருவார் என்று தான் தெரியவில்லை. அப்பாவை அவசரப்பிரிவில் வைத்திருக்கிறார்கள். நீங்கள் யாரும் அருகில் இல்லை. எனக்கு பயமாக இருக்கிறது என்று வருத்தப்பட்டான்.

ஒன்றும் ஆகாது. கவலைப்படாதே. என்ன நடக்கிறது என்று தெரியப்படுத்து என்று ஃபோனை வைத்து விட்டாலும் மனசு அடித்துக் கொண்டு தான் இருந்தது. வாழ்க்கை நிம்மதியாக போகிறதே என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இப்படி ஒரு செய்தியா??

அடுத்து என்ன செய்தி வருமோ என்று காத்திருந்த நேரத்தில் மூத்தவனிடம் இருந்து ஃபோன். ஐயோ! இவன் என்ன சொல்ல போகிறானோ என்று படபடப்புடன் எடுத்தால்...

அப்பா உயிருடன் இல்லை என்று தேம்பி தேம்பி சிறு குழந்தையைப் போல் அழுது கொண்டே சொல்லவும் என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை. கம்பெனியில் மூத்த பதவியில் இருப்பவன், குடும்பத்தில் எனக்கு இளையவன் என்றாலும் மூத்தவனாக பொறுப்புகளைச் சுமப்பவன் வாய் விட்டு அழும் பொழுது ஆறுதல் சொல்ல முடியாமல் தவிக்க... வந்த அழுகையையும் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒரு மகனாக உன் கடமையை அவருக்குப் பிடித்த மாதிரி செய்திருக்கிறாய். போன மாதம் கூட உன் வீட்டில் இருக்கும் வரை அவரை நன்றாகவே கவனித்திருக்கிறாய். வேறு என்ன செய்ய முடியும்? இப்படி ஒரு நிலைமை வரும் என்று தெரியுமா என்ன? வருத்தப்படாமல் போய் அவருக்குச் செய்ய வேண்டிய காரியங்களை செய்து முடி. அழாதே. எதுவும் நம் கையில் இல்லை.

சரி, நீ எப்பொழுது வருவாய்???

எனக்காக காத்திருக்க வேண்டாம், சொல்லும் போதே உடைந்து போனேன்.

அதற்குள் மதுரையில் இருந்து தம்பி சின்னவனும், நீங்கள் எல்லோரும் வரும் வரை அப்பாவை வைத்திருக்கலாம் என்று ஐஸ்பாக்ஸ் சொல்லி இருக்கிறோம். வந்து விடு சீக்கிரம்.

நான் இன்று கிளம்புவது சாத்தியமில்லை. நாளை இரவு கிளம்பி வந்து சேருவதற்குள் இரண்டு மூன்று நாட்கள் ஆகி விடும். எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம். காரியங்களை முடித்து விடுங்கள்.

பெற்றவன் முகத்தை பார்க்க கூட முடியாத தொலைதூரத்தில் இருந்து கொண்டு என்ன செய்ய முடியும்? மெளனமாக அழுவதைத் தவிர!

சில நிமிடங்களுக்குள் மீண்டும் ஃபோன். அக்காவிடமிருந்து! நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது? நேற்று கூட பேசும் போது நல்லா தானே இருந்தார்? இவருக்கு என்ன குறை? பார்த்துக் கொள்ள ஆளில்லையா?? வசதி இல்லையா?? செக்-அப் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி இப்போது பார். போய் சேர்ந்துட்டார் மொத்தமாக! அவளும் அழுது கொண்டே பேச, நீ உன் உடம்பை பார்த்துக் கொள். உன் குரலை கேட்டால் BP ஏறிடும் போலிருக்கு என்றவுடன் கொஞ்சம் தணிந்தாள். நாங்கள் எல்லோரும் கிளம்பி விட்டோம். நீ எப்போது வருவாய்?

ம்ம்ம்...வருகிறேன். நீ போய் பார்த்துக் கொள்.

மனதும், உடலும் சோர்ந்து விட்டது. மனதுக்குள்ளே அழுதழுது தொண்டையும், தலையும் 'விண்விண்' என்று வலிக்க..

அதற்குள் கணவருக்கும் தகவல் தெரிந்து வருத்தப்பட்டார். இப்பொழுதுதான் உன் தம்பியுடன் பேசினேன். நன்றாகத் தானே இருந்தார்? ஷாக்கிங் ஆக இருக்கிறது.

அன்று காலையில் அப்பா கோவிலுக்குச் செல்வதை பார்த்ததாக அவர் நண்பர்களும் கூறி இருக்கிறார்கள். பெரியப்பா பையனோ சித்தப்பாவை அன்று மதியம் பார்த்துப் பேசி விட்டு வந்தேனே? என்னால் நம்பவே முடியவில்லை என்று கணவரிடம் சொல்லி இருக்கிறார்.

சரி, நான் பிறகு பேசுகிறேன். பேசுவதற்கு எனக்கும் தெம்பில்லை என்று வைத்து விட்டேன்.

தங்கையிடமிருந்து ஃபோன். மிகவும் நொறுங்கிப் போயிருந்தாள். அழுது கொண்டே இருந்தாள்.

அவர் விதி. நாம் என்ன செய்ய முடியும்? ஆஸ்பத்திரியில் பல நாட்கள் இருந்து அவரும் கஷ்டப்பட்டு அவரைச் சுற்றி இருப்பவர்களையும் கஷ்டப்படுத்தாமல் போனாரே என்று திருப்திபட்டுக்க வேண்டியது தான். ஒரு டாக்டராக உனக்குத் தெரியாததல்ல.  

அவள் ஏதேதோ பேச நினைத்தாள் போலும். அப்பா பெண்ணாயிற்றே! சிலருக்குப் பேசுவதற்கும், அழுவதற்கும் கூட உரிமைகள் மறுக்கப்படுகிறது. நாளை சிகாகோவிலிருந்து விசா வாங்கிக் கொண்டு நானும் மகளும் ஊருக்குச் செல்கிறோம். நீ எப்போது கிளம்புகிறாய்?

தெரியவில்லை.

சீக்கிரம் வந்து விடு. அழுது கொண்டே அவளும் வைத்து விட்டாள்.

மீண்டும் தம்பியிடமிருந்து ஃபோன். வீட்டுக்கு அப்பாவை அழைத்து வந்தாச்சு. மாமாக்கள், பெரியப்பா, பெரியம்மா, நண்பர்கள் என்று அனைவரும் தகவல் தெரிந்து வந்திருந்தார்கள். எல்லோரும் பேசி முடித்து அம்மாவிடம் கொடுக்க... அழுது முடியட்டும் என்று காத்திருந்தேன். நல்லா தான் இருந்தார். இப்படி ஆகும்னு தெரியல. உன் கூட பேசணும்னு சொல்லிட்டே இருந்தார்... அதுக்குள்ளே இப்படி ஆயிடுச்சு!

அமைதியாக கேட்டுக் கொண்டே இருந்தேன். என்ன பேசுவது?

ஐஸ் பாக்ஸில் தான் வைத்திருக்கிறோம். நீங்கள் எல்லோரும் வந்தவுடன் காரியங்களைச் செய்யலாம் என்று.

எனக்காக ஒன்றும் காத்திருக்க வேண்டாம். அக்கா வந்தவுடன் செய்ய வேண்டிய காரியங்களை செய்து விடுங்கள்.

அப்பா முகத்தை கடைசியாக பார்க்க வேண்டாமா??? நீ வாம்மா, சீக்கிரம்!

அந்த கொடுப்பினை தான் இல்லையே? அதற்கு மேல் பேச முடியவில்லை ...

என்ன செய்வது? முதலில் பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்று பார்க்க வேண்டும். விசா வாங்கும் தொல்லை வேறு இருக்கே?

மாலையில் வீடு வந்தவுடன் கணவரும் இந்தியா போக டிக்கெட், விசா வாங்க போக வேண்டிய இடம், ட்ரைன் டிக்கெட் என்றிருக்க...

மகளும், நீ போம்மா, நான் என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல். நான் பார்த்துக் கொள்கிறேன். எதைப்பற்றியும் கவலைப்படாதே. நீ ஊருக்குப் போய் பாட்டியுடன் இருந்து விட்டு வா என்றாள். 

மகனோ குழப்பத்துடன், எனக்கு அப்பாவின் அப்பா, அம்மாவை தெரியாது. தாத்தாவும் இப்பொழுது இல்லை. பாட்டியையாவது உடம்பை நன்றாக பார்த்துக் கொள்ளச் சொல்லுங்கள். நான் ஒழுங்காக ஸ்கூலுக்குப் போய் வருவேன். நீ கவலைப்படாமல் போய் விட்டு வாம்மா என்றான்.

உன் பேரக்குழந்தைகளுக்காவது நீ இன்னும் சிறிது காலம் உயிரோடு இருந்திருக்கலாம்ப்பா...

இயந்திர கதியில் நானும் தயாரானேன்...

ஊருக்குச் செல்ல.


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...