Wednesday, March 29, 2023

மென்திறன்கள் அவசியம். ஏன் ?


தொழில்நுட்பம் அதிவேகமாக வளர்ந்து வரும் வேளையில் நாம் பணிபுரியும் துறைக்கேற்ப நம் அறிவை வளர்த்துக் கொள்வதும் அவசியமாகிறது. அப்பொழுது தான் பணியில் நீடித்து இருக்க முடியும். வேலைவாய்ப்புகளைப் பெறுவதற்குத் தான் துறை சார்ந்த கல்வியறிவு தேவைப்படுகிறது. இதனை 'Hard skills' என்கிறோம். இதில் பின்தங்கிவிட்டால் கிடைத்த வேலையைக் கொண்டு காலத்தை ஓட்ட வேண்டிய சூழலில் இருக்க வேண்டியிருக்கும். ஆனால் பணியிடத்தில் மென்மேலும் வளர்ந்து முன்னேறிச்செல்ல 'Hard skills'டன் நமக்குத் தேவையாக இருப்பது 'Soft skills' எனும் மென்திறன்கள் தான்.

நாம் படிக்கும் பள்ளியிலோ, கல்லூரியிலோ 'Soft skills' திறமைகளைச் சொல்லித் தருவதில்லை. நாம் வளரும் சூழலில் கற்றுக்கொள்ள வேண்டிய இந்தப் பாடங்கள் இன்று வியாபாரமாக மாறி அதைச் சொல்லிக் கொடுக்க நமக்கு ஆள் வேண்டியிருக்கிறது. முதன்முதலில் கனடாவிற்கு பணிநிமித்தமாக சேர்ந்த இடத்தில் அங்கிருந்த கனடிய மக்களுடன் எப்படி பேச வேண்டும்? பழக வேண்டும் என்று கூடத் தெரியாது. அந்நிய மொழி மட்டுமன்றி அந்நிய பழக்க வழக்கங்களும் முற்றிலும் அறிந்திராத நேரம் அது. உண்ணும் உணவிலிருந்து உடுத்தும் உடை வரை அந்நியப்பட்டு நின்றதால் நிறுவனத்தில் சில பயிற்சிகள் அளித்தார்கள். அப்பொழுது தான் தெரிந்தது துறை சார்ந்த அறிவு மட்டும் இருந்தால் போதாது. துறையிலுள்ள மனிதர்களிடம் பழகுவதிலும் பேசுவதிலும் தான் நம் திறமையை மேலும் வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும். அதிகார வர்க்கத்தினைக் கவர முடியும் என்று கற்றுக் கொண்டேன்.

நாம் சொல்ல வருவதை எப்படித் தெளிவாக சொல்வது? நிர்வாகம்,/குழுவினர் சொல்வதை எப்படி முழுமையாகப் புரிந்து கொள்வது? நாம் பேசுவது புரியாவிட்டால் ஈமெயில் மூலம் எப்படி எழுதிப் புரியவைப்பது? நம் உடல்மொழி மூலம் எவ்வாறு நம்மை, நம் தன்னம்பிக்கையை உணர்த்துவது என்று அறிந்து கொண்டேன். இதற்காக வகுப்புகள் எடுத்தார்கள்!

வேலையிடத்தில் முதல் பேச்சிலேயே நம்மை எடை போட்டு விடுவார்கள். முதல் கோணல் முற்றிலும் கோணலாக மாறி விடாமல் இருக்க பேச்சுத் திறமையை, அடுத்தவர் பேசி முடிக்கும் வரை காத்திருந்து ஐயங்களை எழுப்புவது எல்லாம் அதிமுக்கியம் என்று கற்றுக் கொண்டேன். காது கொடுத்துக் கேட்கும் திறமை என்பது மிகமிக அவசியம். அவசரக்கொடுக்காக பேசி, மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்பவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். அதற்காக எப்பொழுதும் அமைதியாகவே வேடிக்கைப் பார்ப்பதும் நல்ல தகுதி அன்று. நம்முடைய வேலைகளை குறித்த நேரத்தில் முடித்துக் கொடுப்பது நம் மீதான நம்பிக்கையை வளர்க்கும்.

குழு மனப்பான்மையுடன் வேலை செய்பவர்களைத்தான் நிறுவனங்கள் விரும்பும். தொழில்நுட்பத்தைப் பற்றின அறிவு ஓரளவு இருந்தால் போதும். குழுவில் உள்ளவர்களுடன் அனுசரணையாக செல்பவர்களால் எங்கு சென்றாலும் எளிதாக வேலை செய்யவோ பழகவோ முடியும். ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு விதம். குறை கண்டுகொண்டே இருப்பவர்களிடம் இருந்து விலகி, ஊக்குவிப்பவர்களோடு தொடர்பில் இருப்பது மன, உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அடுத்தவரின் உழைப்பைச் சுரண்டி தான் செய்ததாக காட்டிக் கொள்ளும் மக்கள் தான் இங்கு அதிகம். அவரவர் உழைப்பிற்கான அங்கீகாரத்தை வழங்கிப் போற்றுதல் மிகச் சிறந்த குணம். தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கான மிக முக்கியமான தகுதியும் கூட!

சிலர் எப்பொழுதும் விவாதம் செய்து கொண்டோ, தான் செய்த தவறுகளை மறைக்க அடுத்தவர் மீது குற்றம் சுமத்திக் கொண்டோ இருப்பார்கள். பணியிடத்தில் செய்யும் வேலையில் பிரச்னைகள் வந்தால் தீர்வுகளை நோக்கியே நம் எண்ணம் செல்ல வேண்டும். நான் முன்பு பணிபுரிந்த இடத்தில் தினமும் காலையில் துறை சார்ந்த சந்திப்பு நடைபெறும். அப்பொழுது முன்தினம் நடந்த வேலை குளறுபடிகளைப் பற்றி திட்ட மேலாளர் கூற ஆரம்பித்தவுடன், இதற்கு காரணம் அந்த துறை, இந்த துறை என்று மாற்றி மாற்றி துறைத்தலைவர்கள் அடுத்தவரைச் சுட்டிக் காட்டி தவறை மறைக்க யத்தனிப்பார்கள். இந்த நேரத்தில் பிரச்னையை ஆராய்ந்திருந்தால் தீர்வுகள் கிடைத்திருக்கும் என்று பலமுறை எண்ணியிருக்கிறேன். என் மன நிம்மதிக்காக எண்ணி மூன்றே வாரத்தில் அந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு வேலை தேடிச் சென்று விட்டேன்.

பணியிடத்தில் ஒருவரைப்பற்றி ஒருவரிடம் புறணி பேசி நல்ல பெயர் எடுக்க சிலர் நினைப்பார்கள். அதில் ஓரளவு வெற்றி கிடைத்தாலும் குழுவினரின் ஆதரவற்றவர்களாக தனித்து விடப்படும் கொடிய நிலைக்கு ஆளாவார்கள். குற்றம் சுமத்துவதோ, இல்லாததைப் பொல்லாதாதைப் பற்றி அவதூறு பேசுவதோ இல்லாமல் நாசூக்காக குறைகளை நிவர்த்தி செய்யும் வழிகளைச் சொல்லிக் கொடுக்கலாம். நிறைகளைக் கூறி குறைகளைக் களையும் வழிகளைக் கூறுவதன் மூலம் அவர்களுடைய முன்னேற்றத்தில் அக்கறை காட்டலாம். அதே போல் நம்முடைய குறைகளைச் சுட்டிக் காட்டும் பொழுது அவசரப்படாமல் எதிர்வினையாற்றாமல் ஆற அமர சிந்தித்து ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் இருக்க வேண்டும். மிகவும் கஷ்டமான ஆனால், அவசியமான ஒன்று.

பணியிடத்திலும் சரி, வீட்டிலும் சரி நேரத்திட்டமிடல் என்பது மிக அவசியம். நம் நாளின் வெற்றியைத் தீர்மானிப்பதே இந்த திறமை தான். இதைக் கையாளுபவர்கள் வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். 

இந்த குணாதியசங்களை எளிதில் நம் வாழ்க்கையில் இருந்தே கற்றுக் கொள்ள முடியும். வீடுகளில் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவுக்காரர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் நாம் கடைபிடிக்கும் பழக்கங்கள் தான். இன்று மனிதர்களை விட்டு விலகி கணினியில் மூழ்கி தனித்திருக்கும் தலைமுறை உருவாகி வருவதால் இதனைக் கற்றுக் கொடுக்கும் நிறுவனங்கள் கல்லா கட்டிக் கொண்டிருக்கின்றன. நம்மைச் சீர்படுத்திச் செழுமையாக்கிக் கொள்ள பல்வேறு புத்தகங்கள், அனுபவமிக்க மனிதர்கள் நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். செவி சாய்த்து நம்மைத் திருத்திக் கொள்வோம்.

என்னைப் பொறுத்தவரையில் பணியிடத்தில் தான் நாளின் பெரும்பகுதியை கழிக்கிறோம். என்ன தான் படித்த படிப்பிற்காக, பணத்திற்காக வேலைக்குச் சென்றாலும் அங்கு செல்லும் பொழுது மன நிம்மதியுடன் மகிழ்வுடன் ஒவ்வொரு நாளும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளும் இடமாக இருக்க வேண்டும். 'கடனே' என்று செல்லும் பொழுது தான் அங்கிருக்கும் மனிதர்களை வெறுக்க ஆரம்பித்திருப்போம். வேலையின் மீது நாட்டம் குறைய ஆரம்பித்திருக்கும். மனமும் உடலும் எளிதில் சோர்வடைந்து நம் மேல் நமக்கு வெறுப்பும் தோன்றி 'என்னடா பொல்லாத வாழ்க்கை' என்று பாட ஆரம்பித்திருப்போம்.

அதனால் பல வேலைகளுக்கு கடினமான திறன்கள் முக்கியம் என்றாலும், அவை பெரும்பாலும் போதுமானதாக இல்லை. எந்தவொரு பணியிடத்திலும் வெற்றி பெறுவதற்கு அவசியமான தொடர்பு, குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன், சிக்கலைத் தீர்த்து வைக்க மாற்றி யோசிக்கும் திறன் போன்ற வலுவான மென்மையான திறன்களைக் கொண்டவர்களைத்தான் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கிறது.

"இனிமை நிறைந்த உலகமிருக்கு. இதிலே உனக்கு கவலை எதுக்கு" என்று பாட வேண்டுமானால் நம்முடைய மென்திறன்களை ('Soft skills') வளர்த்துக் கொள்வது அவசியம்.












Monday, March 27, 2023

8. கேதார்நாத்

 எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. எட்டாவது தொடராக கேதார்நாத் பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் கேதார்நாத்

 

கருமேகங்கள் கூடுவதும் கலைவதுமாய் வானில் வித்தை காட்டிக் கொண்டிருக்க, திட்டமிட்டபடி கேதர்நாத் பயணம் அன்று சாத்தியப்படுமா என்று அலைக்கழித்துக் கொண்டிருந்தது என் மனம். நினைத்தபடி ‘சரர்தாம்’ யாத்திரை நடக்கும் என்ற நம்பிக்கையுடன் காத்திருந்தோம். ஒருமணிநேரத்திற்குப் பிறகு எங்களுக்கு முன்னால் காத்திருந்த ஒரு குழுவினருடன் ஹெலிகாப்டர் கிளம்பிச் சென்றவுடன் தான் அப்பாடா என்றிருந்தது! செட்டியார் குடும்பங்களும் “நாம் நினைத்தபடி சேர்ந்து போய் விடலாம்” என்று கூற மகிழ்ச்சியானோம். ஆறு நபர்கள் கொண்ட குழுவாக செல்ல ஆரம்பித்து மூன்றாவது முறையாக வானில் வட்டமடித்துக் கீழிறங்கிய ஹெலிகாப்டரில் ‘சலோ சலோ’ என்று எங்களை அழைத்துக் கொண்டு அங்கே பணிபுரிந்தவர்கள் தலையைத் தாழ்த்திக் கொண்டு ஓடுமாறு எங்களை விரட்ட, எங்கள் உடைமைகளைத் தூக்கிக் கொண்டு இன்னொருவர் ஹெலிகாப்டரின் பின் பகுதியில் தூக்கிப் போட, நல்லவேளை கையில் கேமெராவை எடுத்துக் கொண்டேன் என்று நிம்மதியாக இருந்தது.

ஹெலிகாப்டரில் இருந்து படமெடுக்கக் கூடாது என்பது பைலட்டின் கடுமையான எச்சரிக்கை. அதனால் பயந்து கொண்டே ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். இரு நிமிடங்களுக்குள் ஆட்களை ஏற்றி கைவிரலை பணியாளர் ஒருவர் உயர்த்திக் காண்பிக்க, அழகாக மேலேறி சாய்ய்ய்ந்து மலைகளுக்கிடையில் ‘விர்ர்ர்ர்ர்ர்’ரென நுழைந்து பறக்கையில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் வயிற்றில் படபடக்க.. தெய்வமே…. எத்தனை அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறோம்! இயற்கை அன்னை ஒத்துழைத்தால் மட்டுமே இந்தப்பயணம் சாத்தியப்படும். இல்லையென்றால் நினைக்கவே நடுங்கியது. சுற்றிலும் ஓங்கி உயர்ந்த ‘பச்சைப்பசேல்’ இமயமலை. கீழே மந்தாகினி ஆறு வளைந்து வளைந்து அழகாக ஓடிக்கொண்டிருக்க, நடைப்பயணம் செல்லும் பாதையும் தூரத்தில் தெரிந்தது. கொஞ்சம் எட்டிப் பார்க்கக் கூட பயம்! மனமெல்லாம் சிவனைத் துதிக்குக் கொண்டே வர, ஐந்தாவது நிமிடத்தில் கேதர்நாத் மலையுச்சியில் வான் பறவை இறங்கியது.



அங்கேயும் ‘உத்தர உத்தரன’ என்று விரைவாக இறங்கச் சொல்ல வேகவேகமாக கீழே இறங்கி தலையைத் தாழ்த்திக் கொண்டு ஓடினோம். ஒருவர் எங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார். ஹெலிகாப்டர் சுழலி ‘ட்ர்டர்ட்ர்டர்’ என்று உறுமிக் கொண்டே இருந்தது. அங்கிருந்து ஏற்றிச் செல்ல வேண்டியவர்களை ஏற்றிக் கொண்டு மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தது ஹெலிகாப்டர். ஆட்களை ஏற்றி மலையில் கொண்டு வந்து இறக்கி விட்டு அங்கிருக்கும் பயணிகளை ஏற்றிக் கொண்டு ‘சோன்பிரயாக்’ செல்ல பத்து நிமிடங்கள் தான் ஆகிறது. ஒருநாள் முழுவதும் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கிறது இந்த வான்பறவை! ஐந்து மணிக்கு கேதர்நாத் வந்து சேர்ந்து புண்ணிய பூமியில் கால் பதித்தவுடன் வார்த்தைகளால் விவரிக்க இயலாத உணர்வு மெய்சிலிர்க்க வைத்தது! கடல்மட்டத்திலிருந்து 3500மீட்டருக்கும் மேலான உயரத்தில் இருப்பதால் ‘சில்ல்ல்ல்ல்ல்ல்’ குளிர். வழியெங்கிலும் பக்தர்கள் தங்கிச் செல்லக் கூடாரங்கள். 2013ல் நடந்த இயற்கை சீற்றத்தில் இழந்த பகுதிகளைச் சீர்படுத்தும் பணிகளும் புதிய கட்டிட வேலைகளும் நடந்து கொண்டு இருந்தது. பனியின் ஆக்கிரமிப்பால் வருடத்தில் பாதி நாட்கள் மக்கள் நடமாட்டம் இருப்பதில்லை. எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்த இன்னும் சில ஆண்டுகள் ஆகலாம்.

மேடுகளைக் கடந்து சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு குடியிருப்புக் கட்டடங்களும் கடைகளும் இருந்தது. அங்கிருந்து கோபுர தரிசனம்! ‘சிவசிவ’ என்று கைகூப்பி வணங்கினோம். அனைவர் கண்களிலும் ஆனந்தக்கண்ணீர்! “பார்த்தீங்களா! நாம் பத்திரமா வந்து சேர்ந்துட்டோம்!” என்று அவர்களுடைய மற்ற குழுவினரையும் சந்தித்துப் பேசி அறிமுகப்படுத்திக் கொண்டோம். நினைத்தபடி சித்தன் குடியிருக்கும் மலையில் பிரமிப்புடன் நின்று கொண்டிருந்தோம்! வார்த்தைகளால் சொல்லிட இயலாத பேரானந்த பெரு அனுபவம் அது!



எல்லோரும் சேர்ந்து கோவிலுக்குச் செல்லும் முன் நந்திக்கு நெய் அபிஷேகம் செய்து விட்டுச் செல்ல எங்களையும் தங்களுடன் செட்டியார் நண்பர்கள் அழைத்துச் சென்றார்கள். ஊரிலிருந்து நெய், விபூதி, மஞ்சள், குங்குமம் எல்லாம் எடுத்து வந்ததில் தெரிந்தது அவர்களுடைய முன் பயண அனுபவங்கள்! எங்களுக்கும் அவற்றைக் கொடுத்து அபிஷேகம் செய்ய உதவ, நண்பர்களுக்கு நன்றிகள் கூறி நாங்களும் பூஜைகள் செய்து வேண்டிக் கொண்டோம்.

மழை நின்ற பின் மலைக்கு வருபவர்கள் கூட்டம் அதிகரிக்க, கோவிலுக்குள் செல்லும் வரிசையும் நீள ஆரம்பித்து விட்டது. பூஜைப் பொருட்களை விற்கும் சிறு கடைகள் அந்தப் பகுதி முழுவதும் நிரம்பியிருந்தது. நீண்ட ஜடாமுடியுடன் உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டிருந்த சாமியார்களிடம் ஆசிகளை வாங்கிக் கொண்டும் படங்களை எடுத்துக் கொண்டும் ஒரு கூட்டம். மணியடித்து “ஹரஹர மஹாதேவ்” குரல்கள் எல்லா திசைகளிலும் ஒலித்துக் கொண்டிருந்தது. மக்கள் அனைவர் முகங்களும் திவ்யமாக சிவனைக் கண்ட ஆனந்தத்தால் மலர்ந்திருந்ததைக் காண மகிழ்ச்சியாக இருந்தது. கனவு நனவாகிக் கொண்டிருக்கும் மகிழ்ச்சியும் பிரமிப்பும் கலந்து அமைதியாக இருந்தோம். கோவில் வாசலில் சிவ நாமம் கேட்கக் கேட்க பரவசமாக, வேகவேகமாக உள்ளே சென்று சுவாமியைத் தரிசித்து விட்டு வெளியில் வந்தோம். உள்ளே சென்றவுடன் நந்தி தரிசனம். அவர் எதிரே சிவ சன்னிதி. மதுரையில் வீற்றிருக்கும் எம்பெருமான் சுந்தரேஸ்வரர் போலன்றி வேறு உருவம்! சரியாக கவனித்தேனா என்று எனக்குள்ளேயே சந்தேகம் வந்து விட்டது. எதற்கும் மீண்டும் ஒருமுறை கோவிலுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.



வெளியில் வந்தவுடன் கோவிலைச் சுற்றி வலம் வருகையில் தான் தெரிந்தது எத்தகைய பேரிடரிலிருந்து நம் கோவிலைக் காப்பாற்றியுள்ளது அந்த பெரும்பாறை என்று! “பீம் ஷிலா” (பீமன் பாறை) என்று அன்புடன் அழைக்கப்படும் அந்தப் பாறை கிட்டத்தட்டக் கோவிலின் அகலம் இருக்கிறது. சிறு சிறு பாறைகள் அதனைத் தடுத்து நிறுத்தியுள்ளது. ஜூன் 16, 2013ல் பெருமழையுடன் சீறி வந்த காட்டாற்று வெள்ளத்தில் கேதர்நாத் மலையில் ஏற்பட்ட பிளவில் பாறைகள் உருண்டு வந்திருக்கிறது. அதில் ஏகப்பட்ட உயிர்கள் பலியானதும் கோவிலும் வெள்ளத்தில் மூழ்கியதையும் செய்திகளில் படித்ததும் காணொளிகளைக் கண்டதும் பலருக்கும் நினைவில் இருக்கலாம். அப்படியொரு நிகழ்வை அங்கு அக்கணத்தில் நினைத்துப் பார்க்கவே அச்சமாக இருந்தது. பெரும் வெள்ளத்தால் கோவிலுக்கு அதிக பாதிப்பை உண்டாக்காமல் தடுத்த ‘பீம் ஷிலா’வை தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள். நாங்களும் எங்களது நன்றியைக் கூறி வணங்கி கோவிலைச் சுற்றி வந்தோம். ஓரிடத்தில் விதவிதமான வடிவத்திலும் அளவிலும் சிவலிங்கங்கள், சூலங்கள் வைக்கப்பட்டிருந்தது. மலை மீதேறி மக்கள் சிலர் சென்று கொண்டிருந்தார்கள். அந்தி சாயும் பொழுதில் பனிச்சிகரத்தின் மேல் பகலவனின் தரிசனம் சிறிது ஆறுதலைத் தந்து மனதையும் கொள்ளை கொண்டது.



ஆறு மணிக்கு இருள் கவிழ, மாலை நேர ஆராதனைக்காக கூட்டம் சேர ஆரம்பித்தது. வண்ண விளக்குகளால் கோவில் மேலும் பொலிவுற்று நின்றிருந்த அழகைப் பலரும் வளைத்து வளைத்து படங்களும் விடீயோக்களும் செல்ஃபிக்களும் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நாங்களும் எங்கள் பங்கிற்கு எடுத்துக் கொண்டோம். ஆராதனைப் பாடல் ஒலிக்க, மணிச்சத்தத்தில் கூட்டம் மெய்மறந்து நின்று கொண்டிருந்தது. எத்தனை முறை கோவிலைச் சுற்றி வந்தோம் என்று நினைவில்லை. நிற்காமல் நடந்து கொண்டே இருந்தோம். ஓரிடத்தில் சூடாக ‘சாய்’ சாப்பிட அந்த குளிருக்கு அத்தனை இதமாக இருந்தது. இரவு இரண்டு மணியளவில் சிறப்பு தரிசனத்திற்கு செட்டியார் நண்பர்கள் டிக்கெட் வாங்கி அனுமதி பெற்று விட்டார்கள். எங்களையும் வரச் சொல்லி விட்டு அவரவர் தங்கும் விடுதிக்குச் சென்று சிறிது நேரம் இளைப்பாறி விட்டு வரலாம் என்று அங்கிருந்து கிளம்பினோம். வழியில் ஓரிடத்தில் கூடாரம் போட்டு பஜனைப்பாடல்கள் பாடிக் கொண்டிருந்தார்கள். கார்த்திகை மாதத்தில் பெரியப்பா வீட்டில் நடக்கும் ஐயப்பன் பஜனை நாட்கள் நினைவிற்கு வந்து சென்றது.



எங்களுடைய பயண முகவர் கோவிலின் அருகே இருந்த தெரு ஒன்றில் இருந்த விடுதியில் இரவு தங்க அறையை ஏற்பாடு செய்திருந்தார். தெருவில் நுழைய, வழியெல்லாம் ‘சொதசொத’வென்று சாக்கடையும் மழைநீரும் கலந்த சகதி 😑 அப்படியொரு விடுதியை இதுநாள் வரை கண்டதில்லை. குறுகலான படிகள். சிறிய அறை. அதற்குள் இத்தினிக்கோண்டு பாத்ரூம்! ஜன்னல் மூடியிருந்தது. ஆனால் சுவற்றிற்கும் ஜன்னலுக்கும் இடையே இருந்த விரிசல் வழியாக -3 டிகிரி குளிர்க்காற்று உள்ளே வந்து கொண்டிருந்தது. கட்டில் ஏதோ ஹீட்டர் இல்லாத இக்ளூவில் இருப்பது போல அத்தனை குளிராக. பற்கள் தந்தியடிக்க, குளிர்ந்த போர்வையை ஒன்றுக்கு இரண்டாகப் போர்த்திக் கொண்டாலும் குளிர் அடங்கவில்லை. தூங்கின மாதிரி தான்!

அதற்குள் குப்தகாசி விடுதியில் சந்தித்த மும்பை பெண் வித்யா நாங்கள் எங்கிருக்கிறோம் என்று கேட்டு இரவு உணவு சேர்ந்து சாப்பிடலாம் என்று சொல்ல, நாங்களும் நேரத்தைச் சொல்லி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தோம். சாப்பாடும் விடுதியில் கேட்டால் கிடைக்கிறது. நாங்கள் வெளியே செல்வதால் அங்கே சாப்பிடவில்லை. நல்ல கூட்டம். முன்பதிவு செய்யவில்லையென்றால் விடுதிகளில் அறைகள் கிடைப்பது கடினம். இல்லையென்றால் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். வசதிகளை அதிகம் எதிர்பார்த்துச் செல்லக் கூடாது😐

அந்த விடுதியின் உரிமையாளர் கோவில் அர்ச்சகரும் கூட! இரவு தரிசனத்திற்கு உதவிகள் வேண்டுமா என்று கேட்டார். அவருடைய தம்பி பெங்களூரு இன்ஃபோஸிசில் இந்த வருடம் தான் வேலைக்குச் சேர்ந்திருக்கும் இளைஞன். வீட்டிலிருந்து வேலை செய்வதாகவும் வார விடுமுறையில் மலையேறி இங்கு வருவதாகக் கூறினான். நன்றாகப் பேசிக்கொண்டிருந்தான். 2013 வெள்ளத்தில் அவனுடைய சகோதரன், அப்பா, பெரியப்பா என்று குடும்ப உறுப்பினர்கள் பலரை இழந்திருப்பதாக கூறியதைக் கேட்க கஷ்டமாக இருந்தது. யாரும் எதிர்பாராத நேரத்தில் எப்படியான அசம்பாவிதம் அரங்கேறியுள்ளது! இயற்கையின் முன் நாம் ஒன்றுமில்லை என்று தெரிந்தும் இயற்கைக்கு முரணான செயல்களைச் செய்வதை என்று மனித ஜென்மம் நிறுத்துமோ தெரியவில்லை. ஹ்ம்ம்ம்!



வித்யாவை கோவில் அருகில் சந்திப்பதாகக் கூறி விடுதியை விட்டு வெளியில் வந்தோம். பஜனை கனஜோராக நடந்து கொண்டிருந்தது. பஜாரில் விளக்கொளியில் கடைகள், உணவகங்கள் ஜொலிக்க எங்கும் மக்கள் வெள்ளம்! உணவகங்களிலிருந்து ‘கமகம’வென வாசனை பசியைத் தூண்டியது. வித்யா நெற்றியில் மஞ்சள் பட்டை குங்குமத்தில் திரிசூலம் வைத்துக் கொண்டிருந்தார். எங்களுக்கும் அப்படியே வைத்து விடச்சொல்லி அங்கிருந்த பெண்மணியிடம் கூறி பணத்தைக் கொடுத்தார். நாங்கள் மூவரும் கோவிலைச் சுற்றி வந்து படங்கள் எடுத்துக் கொண்டோம். அங்கிருந்த ‘பஞ்சாபி தாபா’விற்குச் சென்று சாப்பிடலாம் என்று அழைத்துச் செல்ல, கூட்டமோ கூட்டம். எப்படியோ இடத்தைப் பிடித்து அமர்ந்து எங்களுக்கும் சேர்த்து அவரே உணவுகளைக் கேட்டு ஆர்டர் செய்தார். ரொட்டி, காரசாரமான கிழங்கு மசாலா, சன்னா மசாலா சுவையோ சுவை. அவர் தங்கியிருக்கும் அறை அத்தனை சுகமாக இல்லை என்று தெரிந்தது. “இரவு இரண்டு மணிக்கு முடிந்தால் கோவிலுக்கு வருகிறேன். இல்லையென்றால் மும்பை வந்தால் வீட்டுக்கு கண்டிப்பாக வாருங்கள். வாட்ஸப்பில் தொடர்பில் இருக்கலாம்.” நாளை ‘சொப்தா’ சென்று அங்கிருந்து துங்நாத்திற்கு மலையேறிச் செல்வது தான் அவரது திட்டம். நாங்களும் அவரைச் சந்தித்ததில் மகிழ்ந்தோம் என்று கூறி அங்கிருந்து கிளம்பி கடைகளைச் சுற்றிப்பார்த்து விட்டு விடுதி வந்து சேர்ந்தோம்.

போர்வையின் கதகதப்பு எல்லாம் போதவில்லை. எப்பொழுது மணி இரண்டாகும் என்று காத்திருந்த நேரத்தில் எப்படி தூங்கினேன் என்று தெரியவில்லை! இந்தக் குளிரிலும் நன்றாகத் தூங்குகிறாய் என்று ஈஷ்வர் எழுப்பும் பொழுது மணி அதிகாலை 1.30. விரைந்து தயாராகி கோவிலுக்குச் செல்வதற்குள் மணி இரண்டே கால் ஆகிவிட்டிருந்தது. செட்டியார் குடும்பங்கள் அதற்குள் கோவிலுக்குள் சென்று விட்டிருந்தார்கள். அடடா! மிஸ் பண்ணிட்டோமே! என்று அங்கிருந்த காவலரிடம் சொன்னால் வரிசையில் வாருங்கள் என்று கீறல் விழுந்த ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார். சிறப்பு தரிசனத்திற்கான கட்டணம் கட்டி நண்பர்கள் உள்ளே சென்று விட்டார்கள் என்று கூறியும் நம்பவில்லை. பிறகு என்ன நினைத்தாரோ உள்ளே சென்று நண்பர்களிடம் இருந்து டிக்கெட்டை கொண்டு வந்து காண்பிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளே விட்டார். எங்களுக்கு முன் நின்று கொண்டிருந்த பெண்கள் குளிருக்கு ஜாக்கெட் கூட போட்டுக் கொள்ளாமல் எப்படி இந்த மைனஸ் குளிரில் இப்படி நடமாட முடிகிறது என்று அதிசயிக்க வைத்தார்கள். சிலர் காலில் செருப்பு கூட போட்டுக் கொள்ளவில்லை! கூட்டம் மிக மிக மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. மூன்று மணியளவில் கோவிலுக்குள் நுழைந்தோம். அங்கே ஒரு சிறுவன் சுவாசிக்கத் திணறிக் கொண்டிருந்தான். அத்தனை அடி உயரத்தில் இது சகஜம் என்றாலும் அவனைப் பார்த்தால் பாவமாக இருந்தது. அந்த மாதிரியான குடும்பங்கள் விரைந்து சென்று தரிசிக்க அனுமதிக்க வேண்டும். செட்டியார் நண்பர் குடும்பங்கள் வழிபாடு முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தார்கள்.



இப்பொழுது தான் கோவிலை அமைதியாகப் பார்க்க முடிந்தது. நடுவே குட்டி நந்தி. சன்னிதானம் முழுவதும் தங்க முலாம் பூசிய தகடுகளால் வேய்ந்திருந்தார்கள். அதுவும் சமீபத்தில் தான் என்று கேள்விப்பட்டோம். பாண்டவர்கள், குந்தி மாதா, திரௌபதியின் திருவுருவங்களைச் செதுக்கியிருந்தார்கள். மஹாபாரதப் போருக்குப் பின் முக்தி வேண்டி பாண்டவர்கள் சிவனை நோக்கித் தவம் புரிய, சிவன் காட்சியளித்த இத்தலத்தில் பாண்டவர் வழித்தோன்றலான அபிமன்யுவின் பேரன் ஜன்மேஜயா தன் முன்னோர்கள் நினைவாக இந்தக் கோவிலைக் கட்டியுள்ளார். இங்கு சிவன், நந்தியின் முதுகு வடிவில் காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். 12 ஜோதிர்லிங்களில் கேதர்நாத் கோவிலும் ஒன்று. ‘கே’ என்றால் மோக்ஷம். ‘தர்’ என்றால் வாசல். இங்கிருந்து பாண்டவர்கள் சொர்க்கத்தை அடைந்ததால் கேதர்நாத்தில் இருக்கும் சிவனை தரிசித்தோருக்கு மோக்ஷத்திற்குச் செல்லும் வழி கிடைக்கும் என்பது ஐதீகம். 1000 ஆண்டுகளுக்கும் பழமையான கோவிலைச் சுற்றி முனிவர்களும் பெரியவர்களும் தவங்கள் பல புரிந்து வந்த இதே இடத்தில் தான் ஸ்ரீஆதிசங்கராச்சாரியார் கேதரேஷ்வரை வணங்கி யோக சமாதி அடைந்திருக்கிறார்.

கோவிலில் பொறுமையாக அனைவரும் நின்றிருந்தோம். உள்ளே சன்னிதானத்தில் பூஜைகள் செய்து சிவனைத் தொட்டு வழிபட அனுமதிக்கிறார்கள். அருகே செல்லும் பொழுது தான் மேரு மலையைப் போன்ற தோற்றத்தில் காட்சி தரும் சிவன் என்று அறிந்து கொண்டோம். பாலாபிஷேகம் செய்து அர்ச்சனை செய்த அங்கிருந்த பல நிமிடங்கள் உலகமே மறந்து விட்ட உணர்வு! எங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக மாறிவிட்டது. மனநிறைவைத் தந்த தரிசனத்தை முடித்து வெளியில் வரும் பொழுது நான்கு மணி. இன்னும் கூட்டம் காத்திருந்தது. அதற்குள் காலைநேர தரிசனத்திற்காக மக்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்திருந்தார்கள். இரவு நேர தரிசனம் முடியும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும்.



விடியலுக்காக காத்திருந்த அமைதியான காலை. பனியில் உறைந்திருந்த மலைகள். பக்தி முகங்கள். எங்கோ தூரத்தில் ‘ஹரஹர ஷம்பு ஷம்பு ஷிவ மஹாதேவா…’ பாடல் கேட்க ஆனந்தமாக இருந்தது. மக்களின் நடமாட்டத்தில் தூங்கிக் கொண்டிருந்த இரு நாய்கள் உறக்கம் கலைந்து எழுந்தது. அதில் ஆண் நாய் பெண் நாய்க்கருகே வந்து முகத்தோடு முகம் உரசி காதலைப் பரிமாறிக் கொண்டிருந்த காட்சி கொள்ளை அழகு! அவள் தான் கண்டுகொள்ளாமல் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள். அவன் அவளுக்காக அருகிலேயே காவல் காத்துக் கொண்டு கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். நம் இனம்😊

மீண்டும் அந்த குளிர்ந்த விடுதி அறைக்குச் செல்ல மனமில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தோம். கோவிலைச் சுற்றி மக்கள் நடமாட பரந்த இடத்தைச் சுத்தமாகப் பராமரிக்கிறார்கள். ஓரிடத்தில் நெருப்பு வைத்துக் குளிர்காய்ந்து கொண்டிருந்த மக்களோடு சிறிது நேரம் நாங்களும் அமர்ந்திருந்தோம். இரவில் மலையேறிய டெல்லியைச் சேர்ந்த இளைஞனும் அவருடைய வருங்கால மனைவியும் திருமணத்திற்கு முன் சிவனைத் தரிசிக்க அந்தப் பெண்ணின் அக்காள் குடும்பத்துடன் வந்திருந்தனர். உபியைச் சேர்ந்த கணவன்-மனைவி பிரசாதத்தை எங்களுடன் பகிர்ந்துகொண்டனர். டெல்லியிலிருந்து இரு பள்ளி மாணவர்கள். அதில் ஒருவர் தமிழைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் பிறந்து வளர்ந்தது டெல்லியில் என்பதால் அவருடைய பேச்சுத்தமிழ் இந்திக்காரர்கள் பேசுவது போல் இருந்தது. அவர்கள் மலையேறி கோவிலுக்கு வந்திருந்ததைப் பாராட்டினோம். இப்படியும் இளைஞர்கள் இருக்கிறார்கள்! நெருப்பின் கதகதப்பிற்கு நாய்களும் அருகில் வந்து படுத்துக் கொண்டது.

சுடச்சுட காபியோ டீயோ சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஓரிடத்தில் பவுடர் பாலில் காபி கிடைத்தது. அதற்கு குடிக்காமலே இருக்கலாம் என்று மீண்டும் கோவிலை ஒரு சுற்று சுற்றினோம். நல்ல குளிர். எப்படித்தான் மக்கள் போதிய உடைகளை அணியாமல் இருக்கிறார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது! மணி ஐந்தே கால் ஆகிவிட்டது. முன்தினம் டீ குடித்த கடை திறந்து ஆட்கள் தென்பட, டீக்குச் சொல்லிவிட்டு உள்ளே சென்று உட்கார்ந்து கொண்டோம். அங்கே வந்திருந்தவர்கள் மறக்காமல் பார்லே-ஜி ரொட்டி சாப்பிட்டுக் கொண்டே தேநீரைக் குடித்தார்கள். நமக்கு வடை, போண்டா, பஜ்ஜி போல வட இந்தியர்களுக்கு ‘சாய்’ சாப்பிடும் பொழுது கொறிக்க ரொட்டி வேண்டியிருக்கிறது😋 மெதுவாக குடித்து முடித்து அறைக்குச் சென்று எங்களுடைய பொருட்களை எடுத்துக் கொண்டு ஹெலிகாப்டர் நிற்கும் இடத்திற்கு அரைமணி நேரத்தில் வந்து சேர்ந்தோம்.



குளிர் அதிகமாகிக் கொண்டிருந்தது. முகம், கை, கால்கள் ஜில்லிட, வலி பின்னியது. சரியாக ஆறு மணியிலிருந்து ஹெலிகாப்டர் சேவை தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள். அங்கே பல ஹெலிகாப்டர் நிறுவனங்கள் மூலமாக வந்தவர்கள் அவரவர் இடங்களில் காத்திருந்தார்கள். செட்டியார் நண்பர்களும் வந்துவிட்டார்கள். பாவம்! பலரும் முறையான உடைகளை அணியாமல் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்கள். பசிக்கும் நேரத்தில் பிஸ்கட் கொடுத்து உதவினார்கள். சூரியபகவானின் பொற்கதிர்கள் பனிச்சிகரங்களின் மேல் உலாவரும் அழகைக் காண கண் கோடி வேண்டும்! திவ்யமாக இருந்தது!

அடித்துப் பிடித்து வரிசையில் நின்று நான்காவது ட்ரிப்பிற்கு அனுமதி கிடைத்தது. மற்ற எல்லா நிறுவன ஹெலிகாப்டர்கள் வந்தாலும் நாங்கள் செல்ல வேண்டிய ஹெலிகாப்டர் மட்டும் ஏழு மணி வரை வரவில்லை. ஹெலிகாப்டரில் செல்ல முதலில் அங்கு வருபவர்களுக்கு First-In-First-Out முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படியெல்லாம் ஒரு அமைப்பும் இல்லை. அங்கே இருந்த அலுவலர் உடம்பெல்லாம் திமிராக சர்வாதிகாரத்தனமாக பேசிக் கொண்டிருந்தார். சிலர் அவரிடம் கெஞ்சிக் கொண்டிருந்ததைச் சற்றும் கண்டுகொள்ளாமல் எப்படி இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கிறார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது. அந்தக் குளிரில் மக்கள் படும் கஷ்டத்தை மனிதாபிமான முறையில் பார்த்தால் கூட உதவியிருக்கலாம். என்ன மனிதனோ? யார் பேச்சும் கேட்க மாட்டேன் என்று உரக்கப் பேசி அனைவரின் வயிற்றெரிச்சலை வாங்கி கட்டிக் கொண்டிருந்தார். தான் அனுமதித்தால் மட்டுமே ஹெலிகாப்டரில் செல்ல முடியும் என்ற சிறு அதிகார போதையில் அவர் நடந்து கொண்ட விதம் மிக மோசமானது.



7.30 மணிக்கு எங்களது முறை வந்தவுடன் ஓடினால், ஈஷ்வரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு தமிழ் நண்பர்கள் குடும்பம் ஒன்றோடு என்னை மட்டும் அனுப்பிவிட்டார்கள். ‘விர்ர்ர்ர்ர்’ரென ஹெலிகாப்டர் உயரே பறக்க, மலைகளில் வரையாடுகளும் எருமைகளும் மேய்ந்து கொண்டிருந்த அழகுக்காட்சியும், படிகளில் ஏறி வரும் மக்களும், பாய்ந்து ஓடோடிச் செல்லும் மந்தாகினி ஆறும் மனதை இலகுவாக்கின. எங்களை இறக்கி விட்டுச் சென்ற சில நிமிடங்களில் ஈஷ்வரும் வந்து சேர்ந்தவுடன் அங்கிருந்த உணவகத்திற்குச் சென்றோம். இரண்டு வேன்களில் வந்திருந்த செட்டியார் குடும்பங்கள் அனைவரும் அங்கிருந்தார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் தோசைக்காக காத்திருந்து உண்டோம். பூரியும் சுவையாக இருந்தது. மதுரையில் சாப்பிட்டது போல அத்தனை சுவை! காபியை விடுவானேன் என்று அதையும் குடித்து விட்டு எங்கள் வண்டிக்காரரை அழைக்க, அவர் அங்கே தான் இருந்தார்.

செட்டியார் நண்பர்களிடம் இருந்து விடைபெற்று வண்டியில் ஏறியவுடன் தூக்கமும் கண்களைச் சுழற்ற, குப்தகாசி விடுதி வந்து இறங்கி அறைக்குள் சென்று தூங்கியது தான்! பத்து மணி இருக்கும் என்று நினைக்கிறேன். திடீரென யாரோ ‘டொக்டொக்’ என்று கதவைத் தட்டுவது போல் இருந்தது. கண்விழித்துப் பார்த்தால் மணி நான்காகி விட்டிருந்தது. பறவை ஒன்று ஜன்னலைக் கொத்திக் கொண்டிருந்தது. கதவைப் பூட்டிவிட்டு ஈஷ்வர் வெளியில் சென்றிருந்தார். இவ்வளவு நேரமா தூங்கியிருக்கிறேன்! பசிக்கிற மாதிரி இருந்தது. குளித்துத் தயாராகி ஈஷ்வரை அழைத்தேன். “போதுமா தூக்கம்? என்ன சாப்பிடற?” என்று கேட்டுக் கொண்டே வந்தவரிடம் அப்போதைக்கு ‘சாய்’ மட்டுமே போதும் என்று கூறி அதை ஆர்டர் செய்தோம். அவர் மதியம் ஏதோ சாப்பிட்டிருந்தார். 

“மலைகளைப் பார்த்துக் கொண்டே இருந்தால் மனதிற்கு அத்தனை அமைதியாக இருக்கிறது.” என்றார். உண்மை தான் “ஹிமாலயாஸ் காலிங்” என்பது இதற்குத்தானே! ஏதோ ஒரு சக்தி. அது மலையின் அமைதியோ, அழகோ, பரந்து விரிந்த வானமோ, துள்ளியோடி வரும் நதியோ தெரியவில்லை. கண்களையும் மனதையும் நிறைத்து யோகநிலைக்குக் கொண்டு செல்லும் அதிஅற்புதமான சக்தி அங்கே இருந்தது. முழுமையாக அனுபவித்தோம். இப்படியே இரண்டு மணிநேரங்கள் ஓடிவிட்டது.



திடீரென்று ரிசார்ட்டில் ஐந்து பேர் வந்து இறங்கினார்கள். இரு ஆண்கள் ஒரு 60+ பெண்மணி என மூவர் வெளிநாட்டினர். மற்ற இருவரில் ஒருவர் காவி உடையணிந்து யோகிபாபு தலைமுடியுடன் பார்க்க வேடிக்கையாக இருந்த குட்டையான மனிதர். இன்னொருவர் அவர்கள் வண்டியை ஓட்டி வந்த டிரைவர். சத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டு அமைதியைக் குலைத்து எரிச்சலை உண்டாக்கினார். அவர்களைப் பார்த்ததும் விடுதி மேனேஜர் கிருஷ்ணாவின் முகத்தில் அதிருப்தி. இவர்களைப் பற்றித் தெரியும் போல! நாங்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகில் வெளிநாட்டினர் மூவரும் அமர்ந்து கொண்டார்கள்.

ஒரு சினேகமான புன்னகை. எங்கிருந்து வருகிறோம்? என்று ஆரம்பித்து இரவு உணவு வரை நீண்டது எங்கள் உரையாடல். அவர்கள் ஏதோ ஒரு குருஜியுடன் (மகாராஜா) சார்தாம் யாத்திரை வந்திருந்தார்கள். அங்கே தங்குவதற்கு அறை இல்லை என்று வேறு வண்டியில் வரும் குருஜிக்காக காத்திருந்தார்கள். ரஷ்யாவிலிருந்து அடிக்கடி வந்து செல்பவர்களாம். கும்பமேளாவிற்கும் வருவோம் என்று ஆச்சரியப்படுத்தினார்கள். அவர்களின் கும்பமேளா பேட்டி இந்திய செய்தித்தாளில் வந்திருந்ததைக் காட்டினார்கள். இந்தியாவைப் பற்றி, இந்து மதத்தைப் பற்றி வெகுவாக பாராட்டி மனிதகுலத்திற்குத் தேவையான அத்தனை நல்ல விஷயங்களும் இங்கே இருக்கிறது. அது தான் எங்களைக் கவர்ந்தது என்று கூறியதைக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களைப் போல பலரும் அவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அந்தப் பெண்மணி நல்ல வசதியானவர் போல தெரிந்தார். பேசிக் கொண்டே இருந்தார். அமெரிக்கா, ரஷியா, உக்ரைன் போர் என்று நேரம் போனதே தெரியாமல் பேசிக் கொண்டிருந்தோம். ரிஷிகேஷில் உள்ள ஆசிரமத்தில் ஒரு அமெரிக்கப்பெண்மணி தங்கி ஆசிரமத்திற்கு நல்லது செய்வது போல் இந்தியர்களின் மனதில் இந்தியாவைப் பற்றின வெறுப்பை வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவது போல் செய்து கொண்டிருக்கிறார். மக்கள் தான் விழித்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். எந்த ஆசிரமம் என்று கேட்க நினைக்கையில் அவர்களுடைய குருவும் அவருடைய மனைவியும் வந்து சேர்ந்தனர். தாடி, நீண்ட தலை முடி, பிரகாசமான முகத்துடன் குருஜி அட்டகாசமாக இருந்தார். அவர் மனைவி பார்வையாலேயே மக்களை எடை போடுபவர் போல தெரிந்தார். அவர்கள் எங்களைப் பற்றி குருவிடமும் அவருடைய மனைவியிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் விடுதியை விட்டுச் செல்லும் பொழுது பேசிவிட்டுச் சென்றார்கள்.

ரஷ்யர்கள் விடைபெற்றுச் செல்ல, இரவு உணவிற்கு காத்திருந்தோம்.

“சரியான டுபாக்கூர் சாமியார். இவரையும் நம்பி மேலை நாட்டு மக்கள் வருகிறார்கள். நல்லவேளை இங்கே அறை காலியாக இல்லை. இவர்களோடு மல்லுக்கு கட்ட முடியாது” என்று விடுதி மேலாளர் கிருஷ்ணா சொல்லவும் ஆச்சரியமாக இருந்தது. பழகிய இரு தினங்களில் அவருடைய தன்மையாக பழகும் குணமும் சிரித்த முகத்துடன் பயணிகளைக் கவனித்துக் கொண்ட விதமும் எங்களை மிகவும் கவர்ந்திருந்தது. கிடைக்கும் நேரத்தில் அரசாங்க வேலைக்காகான தேர்வுகளுக்காக படித்துக் கொண்டிருந்தார். “கஷ்டப்பட்டு எழுதி தேர்ச்சி பெற்றாலும் அரசாங்க அதிகாரிகள் அவர்களுக்குத் தெரிந்தவர்களுக்கு வேலைகளைக் கொடுத்து விடுகிறார்கள். பாஜக ஆட்சியில் இருந்தாலும் இன்னும் இந்த மாதிரி கூட்டம் இருக்கிறது. இவர்கள் எல்லாம் ஒழிந்தால் தான் நல்லது” என்று விரக்தியோடு பேசினார். “கொரோனா காலத்தில் இந்த விடுதியை எப்படி சமாளித்தீர்கள்?” என்று கேட்டதற்கு, இலவச இணைய இணைப்பு, உணவு என்று அறிவித்ததில் பலர் அங்கே வந்து தங்கியிருந்திருக்கிறார்கள். நல்ல யோசனை தான். அருமையான இடம். நாங்கள் செல்வதற்கு இரு நாட்களுக்கு முன்பு ஹிந்தி படக்குழு ஒன்று ஒரு வாரத்திற்குத் தங்கி அருகில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள். 

‘திடுதிடு’ப்பென்று மிகப்பெரிய மலேசிய பயணியர் கூட்டம் வந்திறங்கியது. இதனால் தான் அறை இல்லை என்று ரஷ்யர்களிடம் கிருஷ்ணா சொன்னார் என்று புரிந்தது. இதோடு நாங்கள் சந்திக்கிற மூன்றாவது மலேசிய கூட்டம். அவர்கள் அடுத்த நாள் கேதர்நாத் செல்வதாக கூறினார்கள். அதற்குள் சுடச்சுட சுவையான இரவு உணவு தயாராகி எல்லோரும் சாப்பிட்டு முடித்தோம். பன்னீர் இல்லாமல் வடஇந்தியர்களால் இருக்க முடியாது போலிருக்கு. சுவையான பன்னீர் பட்டர் மசாலா! சூடான குலாப்ஜாமூன்! சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். யம்மி யம்😋


அடுத்த நாள் எங்களுடைய பத்ரிநாத் பயணம். குப்தகாசி, கேதர்நாத் அனுபவங்கள் மிக திருப்தியாக அமைந்ததில் மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றோம். பத்து மணி போல் இருக்கும். பக்கத்து அறையில் இருந்து பூம் பாக்ஸில் விளங்காத பாடலைச் சத்தமாக அலற விட்டுக் கொண்டிருந்ததில் தூக்கம் போயிற்று. கூடவே பாட்டில்கள் உருளும் சத்தம் வேறு. அமைதியான மலைப்பிரதேசம். மற்ற அறைகளில் பயணியர்கள் தங்கி இருக்கிறார்கள் என்ற அறிவு கூட இல்லாமல் குடித்துக் கும்மாளமிட வந்திருக்கும் தறுதலைகள். கோபத்தில் சுவற்றை நான்கு முறை தட்டினேன். சத்தத்தைக் கொஞ்சம் குறைத்தார்கள். ஆனால் நிறுத்தவில்லை. விடுதியின் அலுவலகத்திற்குப் ஃபோனைப் போட்டால் தூக்க கலக்கத்தில் “கிருஷ்ணாவிற்கு போன் செய்யுங்கள்” என்று ஹிந்தியில் சொல்லி வைத்து விட்டார் அங்கே இருந்த சிப்பந்தி. சிறிது நேரத்தில் கிருஷ்ணாவே அழைக்க, பக்கத்து அறையில் தங்கியிருப்பவர்களின் அட்டகாசத்தைக் கூறினேன். அதற்குப் பிறகு தான் அந்தப் பொறுப்பற்றவர்களின் கொட்டம் அடங்கியது. புண்ணிய பூமியில் இப்படியும் சில ஜென்மங்கள்! இவர்களைப் போன்றவர்கள் மத்தியில் கிருஷ்ணா போன்ற பொறுப்பான இளைஞர்கள் தான் நம்பிக்கையைத் தருகிறார்கள்.

ஜெய் ஸ்ரீகேதர்! ஜெய் போலோநாத்!

கேதார்நாத்

வில்லேஜ் ரிசார்ட்

வில்லேஜ் ரிசார்ட்2

7. உத்தரகாசி -குப்தகாசி

 எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயணம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது. ஏழாவது தொடராக உத்தரகாசி-குப்தகாசி பயணம் பற்றிய கட்டுரையை சொல்வனத்தில் படிக்க இங்கே சொடுக்கவும் உத்தரகாசி -குப்தகாசி

 

தடைகள் பல கடந்து கங்கோத்ரியில் கங்கா அன்னையைத் தரிசித்த பரம திருப்தியுடன் உத்தரகாசியிலிருந்து குப்தகாசிக்கு அதிகாலை 6 மணிக்குப் புறப்பட்டோம். ஏழு மணி நேரப் பயணம். காலை உணவைப் பொட்டலம் கட்டிக்கொடுக்கச் சொல்லிவிட்டு மீண்டும் ஒருமுறை பாகீரதி ஆற்றை வணங்கி மனநிறைவுடன் ‘பை பை உத்தரகாசி, பை பை ஷிவ்லிங்கா ரிசார்ட் ‘ என்று அங்கிருந்து விடைபெற்றோம். குளிர்காற்று உடலை வருட, எங்களைப் போலவே அங்கு தங்கியிருந்த யாத்திரீகர்கள் பலரும் கேதார்நாத் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். இந்த ‘சார்தாம்’ யாத்திரை முழுவதும் ஒரே ஒழுங்குவரிசையில் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் எனச் செல்கிறது. அதனால் யாரென்றே அறிந்திராத அன்பர்களை அங்கு தொடர்ந்து சந்தித்து அளவளாவ மகிழ்ச்சியாக இருந்தது. அதிகாலைப் பயணம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதுவும் இமயமலைப் பயணம் அழகான ரசிக்கத்தக்க காட்சிகளுடன் கண்களையும் மனதையும் நிறைவு செய்து கொண்டிருந்தது. மலையிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் குறுகிய சாலையில் ஏகப்பட்ட வளைவுகள். அதிகாலைப் போக்குவரத்து அதிகம் இல்லாததால் பிரச்சினையில்லை. இல்லையென்றால் திகிலான பயணமாகத் தான் இருந்திருக்கும். அனுபவமுள்ள ஓட்டுநர் என்பதை எங்கள் டிரைவர்ஜி அடிக்கடி நிரூபித்துக் கொண்டிருந்தார்.

ஒரு மணி நேர மலைப்பயணத்தில் ‘சவ்ரங்கி கால்’ என்னுமிடத்தில் வண்டியை நிறுத்தினார் அசோக்குமார்ஜி. இரண்டு மூன்று சுற்றுலா வாகனங்கள் எங்களுக்கு முன்பே வந்து நின்று கொண்டிருந்தது. சுற்றிலும் மலைகள். நான்கைந்து பலகாரக்கடைகள். அழகான ‘சோரங்கிநாத்’ கோவில். பனிக்காலத்தில் இங்கு கொட்டிக் கிடக்கும் பனியைக் கண்டுகளிக்க மக்கள் வருவார்களாம்! திரும்பிய திசையில் எல்லாம் பசுமையான இமயமலை பரவியிருந்தது கொள்ளை அழகு! காலை பூஜை முடிந்து அலங்காரங்களுடன் திவ்யமாக தேவி தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தாள். சிறிய கோவில் தான் என்றாலும் சுத்தமாக இருந்தது. கோவிலைச் சுற்றி வந்து சிறிது நேரம் மலைக்காற்றைப் பூரணமாக சுவாசித்துக் கொண்டிருந்தோம். அங்கிருந்த மரங்களில் மக்கள் வேண்டுதலுக்காகத் துணிகளை முடிந்து வைத்திருந்தார்கள். எத்தனை எத்தனை வேண்டுதல்கள்! அனைவருக்கும் அவர்கள் வேண்டியது கிடைக்கட்டும் என்று அவர்களுக்கும் சேர்த்து வேண்டிக் கொண்டேன். மக்கள் கூட்டம் இல்லாத இடத்தில் கிடைக்கும் அமைதியும் அழகும் அங்கே குடிகொண்டிருந்தது. காண்போரை வசீகரம் செய்யும் இடம் அது! இளைஞர்கள் வளைத்து வளைத்து செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

 அங்கிருந்த கடையில் சில மிட்டாய்களை வாங்கிக் கொண்டு விறகு அடுப்புகளில் களிமண் பூசிய பாத்திரங்களில் சமையல் செய்து கொண்டிருந்த உணவகத்தில் ‘சுடச்சுட’ இட்லியைப் பார்த்தவுடன்,
“பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க
காத்திருந்த காட்சி இங்கு காண கிடைக்க…” பாடல் மனதில் ஒலிக்க, கடைக்குள் நுழைந்தோம். இட்லி வேண்டும் என்றவுடன் கடைக்காரர் இட்லித்தட்டிலிருந்து அலேக்காக சுடு இட்லிகளை கையாலேயே எடுத்துத் தட்டில் வைத்து சாம்பார் ஊற்றிக் கொண்டு வந்தார். இட்லி பெரிதாக பூப்போல மிருதுவாக, ‘ஆஹா…இதுவல்லவோ மல்லிப்பூ இட்லி. யம் யம் யம்…’ அது சாம்பார் மாதிரி இல்லை. எங்கள் வீடுகளில் ‘தக்காளி அவுண்டி’ என்று செய்யும் குழம்பு மாதிரி அத்தனை சுவையாக இருந்தது. தமிழக உணவு வடக்கே எங்கோ ஒரு மூலையில் கிடைக்கிறது அதுவும் குறைந்த விலையில் தரமாக! சிறப்பு! ஆலு பரோட்டாவும் தயாராகிக் கொண்டிருந்தது. மேகி நூடுல்ஸை விரும்பிச் சாப்பிடும் கூட்டம் அதிகரித்துக் கொண்டு வருவதை அங்கிருந்த கடைகளில் அடுக்கி வைத்திருந்ததில் தெரிந்தது. என் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிட்டிருப்பார்கள்! வனாந்திரமாக இருந்த இடத்தில் கிடைக்காத காலை உணவே இல்லை. ஆச்சரியமாக இருந்தது!

எதிரில் இருந்த கடையில் ‘சாய்’ சாப்பிடலாம் என்று அங்கே சென்றால் அங்கிருந்த சிறுவன் ‘கடகட’வென சமையல் வேலைகளைத் தனியாளாக செய்து கொண்டிருந்தான். கடையின் பின்புறம் மலை. எதிரே மலை என்று எங்கெங்கு காணினும் பரந்து விரிந்த இமயம்! அது என்னவோ தெரியலை என்ன மாயமோ புரியலை நம் கைச்சமையல் தராத திருப்தி வெளியே சில இடங்களில் கிடைக்கிறது. அதுவும் இந்தப் பயணத்தில் ரசித்து ரசித்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். திருப்தியான காலை உணவை உண்ட பரவசத்துடன் தொடர்ந்தது எங்கள் பயணம். யாத்திரைக்கு வருபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாகவே இருக்கிறார்கள். அங்குக் கழிப்பிட வசதிகள், அதுவும் வயதானவர்களுக்கு, பெண்களுக்கு இல்லாதது தான் பெரிய குறையாக இருந்தது! அரசு இந்த விஷயத்தில் கண்டிப்பாக கவனம் செலுத்த வேண்டும்.

‘பார்க்குமிடங்களெல்லாம் நந்தலாலா’ தான். எத்தனை இடங்களில் நின்று மலை அழகை ரசித்தாலும் போதவில்லை. எங்கும் செல்லாமல் அங்கேயே தங்கி விட வேண்டுமென பல நேரங்களில் எங்களுக்குத் தோன்றியது. விவசாயம் பெரும்பாலும் பாசுமதி அரிசி ரகம் மலைகளில் விளைவிக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டோம். சிறு சிறு மலைக்கிராமங்கள். நம்மூரில் இருக்கும் மரத்தடி பிள்ளையார் போல் சாலைகளில் சிவன், ஹனுமன், தேவி, சூலாயுதம் கொண்ட சிறு சிறு தெருக்கோவில்கள் பல. மக்கள் நின்று வணங்கி விட்டுச் செல்கிறார்கள். பறவைகளின் இன்னிசை கீதம் சூழலை மேலும் இனிமையாக்கிக் கொண்டிருந்தது. கிராமத்துக் கோவில்கள் கலையம்சத்துடன் கட்டப்பட்டிருந்தது அழகு. நடுவழியில் பெரிய பாறை உருண்டு சாலையில் இருந்ததைக் கவனமாக கடந்து வந்தோம். சில இடங்களில் ‘Sinking zone ahead’ வாசகங்கள், மழையில் அடித்துச் செல்லப்பட்ட சாலையில் புழுதி பறக்கப் பயணம், குறுகலான வளைவுகள் என வழி முழுவதும் திடீர் திடீரென ‘மரண பயத்த காட்டிட்டான் பரமா’ காட்சிகளுக்கும் பஞ்சமில்லை😌

நான்கு மணிநேரத்திற்குப் பிறகு ஊர் ஒன்றின் வழியே பயணம். கன்சாலி செல்லும் வழியில் குறைந்த விலை தங்கும் விடுதிகள் பல இருந்தது. பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்கள் சீருடை அணிந்து கூட்டம் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். இதே நகரத்தில் என்றால் மஞ்சள் வண்ணம் பூசிய பேருந்துகள் சாலைகளை ஆக்கிரமித்திருக்கும். இந்தக் குழந்தைகள் பாவம் தான்! மணி பத்தரை ஆகி விட்டிருந்தது. எந்த நேரத்தில் பள்ளியை ஆரம்பிப்பார்களோ என்ற யோசனையுடன் நிமிர்ந்தால் ‘கப்’பென்று முடை நாற்றம் அருகிலிருந்த குப்பைமேட்டில் இருந்து. பாவம் அந்த வழியாக நடந்து செல்பவர்கள். மூக்கைப்பொத்திக் கொண்டு தான் நடக்க முடியும். அருகிலேயே வீடுகள். எப்படித்தான் சுவாசிக்கிறார்களோ என்று கவலையாக இருந்தது. குப்பைகளை முறையாகப் பராமரிக்கும் திட்டங்கள் இன்னும் வரவில்லையா இல்லை எதையும் சகித்துக் கொண்டு செல்லும் இந்திய மனப்பாங்கின் காரணமாக கண்டுகொள்ளாமல் மூக்கைப் பொத்திக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கிறோமோ தெரியவில்லை. உருப்படாத விஷயங்களுக்குப் போராடுபவர்கள் சுற்றுப்புறச்சூழலைப் பாதிக்கும் இவ்வாறான விஷயங்களுக்கு மக்களுடன் சேர்ந்து போராடினால் தீர்வு கிடைக்கும். அதைத்தான் நாம் செய்ய மாட்டோமே😔

நண்பகல் நேரத்தில் சிறு அருவிப்பாதையில் ‘சாய்’ குடிக்க வண்டியை நிறுத்தி சிறிது தூரம் நடந்து சென்றோம். தண்ணீருக்குப் பஞ்சமில்லை என்பதால் குழாய்களில் கொட்டிக் கொண்டிருந்தது. உணவகங்களில் அனைத்துவிதமான உணவுவகைகளும் கிடைக்கிறது! பெரிய பெரிய மூங்கில் கூடைகளைச் சுமந்து மலைவாழ் பெண்கள் மலைகளில் ஏறி ஊருக்குச் சென்று கொண்டிருந்தார்கள். கடினமான வாழ்க்கை தான்! திடமான பெண்கள்! ‘டாடா’ பேருந்துகளும் மஹிந்திரா வண்டிகளும் ஹோண்டா பைக்குகளும் அதிகம் தென்பட்டது. வழியில் மீண்டுமொரு இடத்தில் பாறைகள் உருண்டு விழுந்திருந்த காட்சியைக் கடந்து செப்பனிட்டுக் கொண்டிருக்கும் சாலை வழியே வந்தோம். காலையில் ‘ஷிவலிங்கா ரிசார்ட்’ உணவகத்தில் கொடுத்திருந்த அவல் உப்புமா, சாண்ட்விச், வாழைப்பழத்தைச் சாப்பிட்டுக் கொண்டே போக்குவரத்து நெரிசலில் நகருக்குள் பயணம். மணி 2.45. கேதார்நாத்திற்கு இன்னும் 47கிமீ தூரம் இருந்தது. வளைவுகளில் புண்ணிய பூமிக்கு வருகை தரும் யாத்திரீகர்களுக்கு அரசு சார்பில் வாழ்த்துக்களைச் சொல்லியிருந்தார்கள்.

மூன்று மணியளவில் குப்தகாசி நகரை வந்தடைந்தோம். கடல்மட்டத்திலிருந்து 4000அடி மேல் இமயமலையில் அமைந்துள்ள அழகான புராதன நகரம். விதவிதமான துணிகள், கலையலங்காரப் பொருட்கள், இனிப்புத் தின்பண்டங்கள், மருந்துகள் , பழங்கள், காய்கறிகள் என்று சகலவிதமான பொருட்களை விற்கும் பல கடைகள் வழியெங்கும். உத்தரகாசியில் இருக்கும் பழமையான காசிவிஸ்வநாதர் கோவிலைப் போலவே இங்கும் காசிவிஸ்வநாதர் கோவில் உள்ளது. மகாபாரதப் போருக்குப் பின் முக்தி வேண்டி பாண்டவர்கள் சிவனைக் காண தவம் இருக்கையில் முதலில் நந்தியாக இங்கு காட்சி அளித்துப் பின் கேதார்நாத்தில் சிவரூபமாக தரிசனம் அளித்தார் என்பது ஐதீகம். கேதார்நாத் செல்வதற்கு முன் இக்கோவிலுக்கு மக்கள் செல்வது வழக்கம். காசியிலிருந்து சிவபெருமான் இங்கு வந்து ஒளிந்திருந்ததால் இந்த இடத்திற்கு குப்தகாசி என்ற பெயர். ‘குப்த’ என்றால் ஒளிதல் என்று அர்த்தமாம்.

தெருவில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி, “அதோ மக்கள் வருகிறார்களே அந்த வழியே சென்றால் கோவிலுக்குச் சென்று விடலாம். போய்விட்டு வாருங்கள்” என்று அசோக்குமார்ஜி சொல்லி விட்டார். இப்படித்தான் என்ன ஏது என்று சொல்லாமல் தடாலடியாக இறக்கி விட்டு விடுவார். கடைகள் தானே இருக்கிறது இங்கே கோவில் எப்படி? நம்மூர் என்றால் கோபுரம் தொலைவிலிருந்தே தெரிந்து விடும். அங்கிருந்த மக்களிடம் “மந்திர் கஹான் ஹே?” என்று கேட்டு அவர்களும் வழியைச் சொல்ல, வீடுகள், கடைகளைத் தாண்டி ஒரு கிலோமீட்டர் தூரம் மூச்சு முட்ட சுமார் 100 படிகளுக்கும் மேலே ஏறிச் செல்லும் வழியெங்கும் கொத்துக்கொத்தாக மின்சார வயர்கள் அங்கும் இங்கும் என்று பார்த்தாலே ‘ஷாக்’காக இருந்தது. சாய்ந்தாற் போல ஒரு தெருவில் காரைக்குடி அரண்மனை வீடு போன்ற கட்டட அமைப்பு. திறந்தவெளி வடிகால். எதிரில் பூஜைக்கு வேண்டிய பொருட்களை விற்கும் கடைகள் இருந்தது. இதுவா கோவில் என்று உள்ளே எட்டிப்பார்த்தால் 1000 வருடங்களுக்கும் மேலான கோபுர அழகுடன் கோவில்! ஆஹா!

மலையடிவாரத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் அமையப்பெற்ற அழகே உருவான குப்தகாசி கோவில் பழமையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கும் சிறப்புப் பெற்ற புண்ணியத்தலம் ஆகும். கோவிலில் நுழைந்தவுடன் சிவனை நோக்கி இருக்கும் நந்தி காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் சிவலிங்கம். பின்னால் பார்வதி உருவம். சக்தி பீடங்களில் ஒன்று என்று அறிந்தோம். விஸ்வநாதர் கோவிலின் முன்னால் யமுனையும் கங்கையும் கலக்கும் மணிகர்ணிகை குண்டம் இருந்தது. சுற்றிலும் மலைகள் சூழ கோவில் அமைந்திருக்கும் இடமே தெய்வீகமாக இருக்க, அங்கிருந்து செல்ல மனமில்லாமல் கிளம்பினோம்.

பெருமழை அடித்துச் சென்றிருந்த சாலையில் தட்டிமுட்டி வண்டி கஷ்டப்பட்டு ஏறி மூன்றரை மணிவாக்கில் நாங்கள் தங்க ஏற்பாடு செய்திருந்த ‘தி வில்லேஜ் ரிட்ரீட்’ வந்து சேர்ந்தவுடன் அப்பாடா என்று இருந்தது. நீண்ட பயணம். குறைந்தது ஐந்தாறு மலைகளில் ஏறி இறங்கி வந்திருப்போம். ஆனாலும் களைப்பில்லை. நாங்கள் வந்திருப்பதை அறிந்தவுடன் அலுவலக மேலாளர் துடிப்பான இளைஞர் கிருஷ்ணா வந்து பெட்டிகளை எடுத்துச் சென்றார்! சிரித்த முகத்துடன் சினேகபாவத்துடன் இனிமையானவராகத் தெரிந்தார். எங்களுடைய அறையைக் காண்பித்து விட்டு இரவு எட்டு மணிக்குச் சாப்பாடு, இப்பொழுது ‘சாய்’சாப்பிட வாருங்கள் என்று சொல்ல, சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு ரிசார்ட்டை சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம்.

எங்களுடைய பயணத்தில் எங்களுக்கு மிகவும் பிடித்த தங்குமிடம் என்றால் அது இந்த ரிசார்ட் தான். முன்னறையிலிருந்து பார்த்தால் தூரத்தில் மலையிலிருந்து மந்தாகினி துள்ளியோடி வருவது தெரிகிறது. எதிரே பனிபடர்ந்த மலைச்சிகரங்கள். ‘டபடப’ என்று ஓயாமல் சுழலி கத்திகளைச் சுழற்றிச் செல்லும் பெரிய பெரிய ‘பளபளா’ ஹெலிகாப்டர்கள். டேராடூனில் இருந்து ஹெலிகாப்டரில் கேதார்நாத் செல்லும் வசதிகளும் இருக்கிறது. அழகாக வானில் வட்டமடித்துச் செல்லும் பெரிய வண்ணப் பறவையைப் பார்ப்பதே அழகு தான்.

எந்தப் பனிச்சிகரத்தைப் பார்த்தாலும் சிவரூபமாகவே மனதில் பதிந்து விட்டிருக்கிறது. அமைதியாக ஆளுக்கொரு பக்கம் அமர்ந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தோம். எதிரே குப்தகாசி நகரின் அழகு கட்டடங்கள். கருமேகங்களுடன் ‘சிலுசிலு’ காற்று என்று ரம்மியமான மாலைப்பொழுது. 6.30 மணியளவில் வானம் இருண்டு கொண்டே வர, கருமேகங்களை முத்தமிட்டு மறையும் வான் வசீகரன் மனதை கொள்ளை கொண்டான். மறக்காமல் ‘க்ளிக்’கிக் கொண்டேன். இந்த உலகம் தான் எத்தனை அழகு! எதைப்பற்றியும் சிந்திக்காமல் அந்த நொடிப்பொழுதில் வாழும் வாழ்க்கை தான் எத்தனை இனிமையாக இருக்கிறது! ஆனால் இது நிரந்தமல்லவே😔அப்படி நினைப்பதெல்லாம் நடந்து விட்டால்… என்ன சுவாரசியம் இருந்து விடப்போகிறது? சரிதானே?

யோசித்துக் கொண்டே திரும்பினால் ஒரு பெண் இடுப்பை வளைத்து யோகா செய்து கொண்டிருந்தார். சிறு புன்னகை. அறிமுகப்படுத்திக் கொண்டோம். “இடுப்பு வலி, குதிகால் வலி. அதான் யோகா செய்கிறேன்” என்றவர் அப்பொழுது தான் அங்கு வந்திருந்தார். மும்பையிலிருந்து டேராடூன் வந்திறங்கி தனியாக கேதார்நாத், துங்நாத் பயணமாம்! அவருடன் வரவிருந்த தோழி கடைசி நேரத்தில் அப்பாவின் உடல்நிலை காரணமாக வரமுடியாமல் போய்விட்டது. பணத்தைத் திரும்பப் பெற முடியாது என்பதால் தனியாக கிளம்பி வந்துவிட்டேன் என்றார். அய்யோடா! அமெரிக்காவில் எங்கு வேண்டுமென்றாலும் தனித்துச் செல்ல என்னால் முடியும். மதுரையில் நான் தனியே வெளியே சென்றால் ஏழு மணிக்குள் வீட்டுக்கு வந்து விட வேண்டும் என்று இன்று வரை எனக்கு அம்மா இடும் கட்டளை. இல்லையென்றால் வரிசையாக அழைப்புகள் வர ஆரம்பிக்கும். இந்தப் பெண்மணிக்கு அந்த பயம் எல்லாம் இல்லை போலிருக்கு!

என் மைண்ட் வாய்ஸை புரிந்து கொண்டவராக, அவருடைய அப்பா இப்படித்தான் அடிக்கடி எங்காவது அழைத்துச் செல்வார். வளர்ந்தவுடன் தனியே பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உற்சாகப்படுத்தியதால் இந்தியாவில் பல இடங்களுக்குத் தனியாகவும் நண்பர்களுடனும் தானும் தன் சகோதரனும் செல்வதால் “பழகிவிட்டது. நிம்மதியாக இருக்கிறது. நான் ஒரு மார்வாடிப் பெண். எங்கள் வீடுகளில் சதா சமையல் வேலை நடந்து கொண்டிருக்கும். யாராவது விருந்தினர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். வீட்டில் மாமனார், மாமியார், மகன், கணவன் என்று சிறு குடும்பம் தான். ஆனால் வேலை இருந்து கொண்டே இருக்கும்.” அதனால் தனக்காக நேரம் எடுத்துக்கொள்ளும் பொழுது பெட்டியைத் தூக்கிக் கொண்டு எங்காவது கிளம்பி விடுவாராம். பல இடங்களில் ஹைக்கிங் செல்வது இவருடைய பொழுதுபோக்கு என்று ஆச்சரியப்படுத்தினார். இப்பொழுதும் ‘துங்நாத்’ கோவிலுக்கு ஹைக்கிங் செல்வதற்காக வந்திருந்தார். இவருடன் கூடவே ஒரு வழிகாட்டியும் நடந்து வர முன்பதிவெல்லாம் செய்து வைத்திருந்தார். படித்த படிப்பு வீணாகக் கூடாது என்பதற்காக ஆன்லைனில் டியூஷன் எடுப்பதாகக் கூறி எங்களைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். அவருடைய உறவினர்கள் பலரும் நியூயார்க், நியூஜெர்சியில் இருக்கிறார்கள் என்றார். “நாளை நானும் கேதார்நாத் செல்கிறேன்.எங்கே தங்குகிறீர்கள்? அங்கே சந்திப்போம்.” என்று தொலைபேசி எண்களைப் பரிமாறிக்கொண்டோம்.

இந்தியாவில் மலையேற்றம் செல்ல பல நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த குழுக்களைப் பல இடங்களில் வைத்துள்ளது. அவர்களுடன் இரவு நேர இமய மலையேற்றம், பனிக்கால மலையேற்றம் என்று போக முடிகிறது. ஆகா! துங்நாத் கோவிலைப் பற்றி முன்பே தெரிந்திருந்தால் போயிருக்கலாம் என்று தோன்றிற்று. அதற்கு வித்யா (மும்பைப் பெண்) ‘பஞ்ச கேதார்’ என்று ஐந்து சிவத்தலங்கள் இருக்கிறது. குப்தகாசி கோவிலில் நந்தியாக காட்சி தந்த சிவபெருமானை இனம் கண்டு கொண்ட பாண்டவர்களிடமிருந்து தப்பிக்க நினைக்க, பீமனின் பிடியில் சிக்குண்ட நந்தியின் உடல்பாகங்கள் ஐந்து மலைகளில் சிதறி அங்கு பாண்டவர்கள் சிவனுக்காக கோவில்களைக் கட்டினார்கள் என்பது ஐதீகம் என்று கூறினார். கேதார்நாத், மத்யமகேஷ்வர், துங்நாத் , கர்பேஷ்வார், ருத்ரநாத் தான் அந்த பஞ்ச கேதார் தலங்கள். முடிந்தால் இன்னொருமுறை அந்தக் கோவில்களுக்குச் சென்று வாருங்கள் என்றார்.

இதற்குத் தனியாக இன்னொரு முறை வரவேண்டும் போலிருக்கே! ஏற்கெனவே உத்தரகாசியில் சந்தித்த மலேசியா மக்கள் 12 ஜோதிர்லிங்க தரிசனம் பெற ஒருமுறை சென்று வாருங்கள் என்று உசுப்பேத்தியிருந்தனர். அதில் சோம்நாத் கோவிலும் இருப்பதால் ஒரு சின்ன ஆசை. என் மூதாதையர்கள் அங்கிருந்து தான் புலப்பெயர்ந்தவர்கள் என்பதால் அங்குச் செல்ல வேண்டுமென்ற கனவு இன்று வரை எனக்கு உண்டு. பார்க்கலாம்! இப்படி பார்க்க வேண்டிய கோவில் பட்டியல் நீண்டு கொண்டே போனால் நான் தான் என் செய்வேன்😟

அதற்குள் ஐந்தாறு தெலுங்கு பேசும் குடும்பங்கள் கேதார்நாத் பயணத்தை முடித்துத் திரும்பியிருந்தனர். அவர்களுள் மஞ்சு என்ற பெண்மணி அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு எங்களுடன் பேச ஆரம்பித்தார். “பயங்கரமான குளிர் அங்கே. நியூயார்க்கில் உங்களுக்குப் பழக்கமாகியிருந்தாலும் இங்கே வசதிகள் குறைவு என்பதால் கேதார்நாத்தில் தங்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காது” என்று கூறவே, அடடா! அங்கு தங்க வேண்டும் என்று அடம்பிடித்து எங்களுடைய பயண முகவரிடம் கூறினோமே! அவரும் இதைத்தான் சொல்லியிருந்தார். “அடிப்படை வசதிகளைத் தவிர வேறு எதையும் அங்கே எதிர்பார்க்க முடியாது. என்னைக் குற்றம் சொல்லக் கூடாது” என முன்பே எச்சரித்திருந்தது நினைவிற்கு வந்தது. இப்போது குழப்பமாகி விட்டது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது. மஞ்சுவின் மகள் அமெரிக்காவில் இருப்பதாகவும் அடிக்கடி வந்து செல்வேன் என்றும் கூறினார். அவருடன் வந்திருந்தவர்களின் குழந்தைகளும் அமெரிக்காவில் குடியேறியிருந்தார்கள். இங்கே பெற்றோர்கள் ஆனந்தமாகப் புண்ணிய யாத்திரை சென்று கொண்டிருக்கிறார்கள். அதிர்ஷ்டக்காரர்கள் தான்!

அதற்குள் இரவு உணவு தயாராகி விட, வித்யாவும் எங்களுடன் இணைந்து கொண்டார். சுடச்சுட பன்னீர் கிரேவி, நான், தால், சோறு, ஆச்சார், தயிர், காய்கறி சப்ஜி, சேமியா பாயசம். சாப்பிடக்கூடாது என்று நினைத்தாலும் எல்லாவற்றையும் சாப்பிட்டு முடித்தேன்😊 காலையில் 10 மணிவாக்கில் கேதார்நாத் செல்லலாம். ஹெலிகாப்டர் பயணத்திற்கு முன்பதிவை பயண முகவர் ஏற்கெனவே செய்து நேரமும் குறித்திருந்தாலும் சீக்கிரம் சென்றால் நல்லது என்று அறிவுறுத்தினார். நாங்களும் காலை பத்து மணிக்குச் செல்ல முடிவு செய்தோம். இந்தப் பயணத்தில் முதல் முறையாக நீண்ட நேரம் தூங்கப் போகிறோம் என்று மகிழ்வுடன் தூங்கிப் போனோம்.

எப்பொழுது நன்றாக தூங்க நினைக்கிறோமோ அப்பொழுது தான் சீக்கிரமே முழிப்பு வந்து விடும். ஆந்திராவிலிருந்து வந்திருந்தவர்கள் பத்ரிநாத் செல்ல மூட்டை முடிச்சுகளுடன் தயாராகிக் கொண்டிருந்தார்கள். யாரோ சத்தமாக விஷ்ணு சஹஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். வெளியில் சிறிது நேரம் நடந்து விட்டு சாப்பாட்டு அறையில் சுடச்சுட டீயை எடுத்துக் கொண்டு முன்னறை தொங்கு நாற்காலியில் அமர்ந்து வேடிக்கைப் பார்த்தால் பறவைகளின் ‘கீச்கீச்’ சத்தம். தெளிந்த வானம். பனிபடர்ந்த மலையின் மேல் உலா வரும் வான் வசீகரன். ‘சில்ல்ல்ல்ல்ல்’ மலைக்காற்று என்று புத்தம் புது காலை வரவேற்றது. சமையலறையில் பூரி, மசாலா தயாராகிக் கொண்டிருந்தது. யம் யம் யம்…😍

ரிசார்ட்டை ஒட்டி இறங்கிச் சென்றால் மாட்டுக்கொட்டகையுடன் சில கூரை வீடுகள். யாரையும் கண்டுகொள்ளாமல் கையில் இருக்கும் கைப்பேசியில் விளையாடிக் கொண்டே எருமைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள் இளம்பெண் ஒருத்தி. கொஞ்சம் சுதாரிப்பாக இருந்தாலே ஏதேதோ நடக்கிறது. அவளுக்குப் பழகிய இடம் என்பதால் இப்படி இருக்கிறாளோ என்னவோ. கவனமாக இருக்கலாம் என்று தோன்றியது. அங்கே நான் பார்த்தவரையில் ஆண்களை விட பெண்களே கைப்பேசியில் நாட்டம் கொண்டிருந்ததைப் போன்று தோன்றியது. கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும். நடுத்தர வயதுப் பெண்மணி ஒருவர் கிடுகிடுவென மரம் மீதேறி இலைகளைப் பறித்து ஆடுகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். எப்படி இவ்வளவு வேகமாக மரம் மீதேறினார் என்று ஆச்சரியமாக இருந்தது. அங்கு வந்து அமர்ந்த அழகான பறவைகளைப் படம் எடுத்துக் கொண்டேன்.



விரைந்து குளித்து முடித்து துணிகளைச் சலவைக்கு அங்கேயே கொடுத்து விட்டு காலை உணவைச் சாப்பிட்டோம். எத்தனை பூரி சாப்பிட்டேன் என்று தெரியவில்லை. உப்புமாவையும் விடவில்லை. நன்றாக வயிறு நிறையச் சாப்பிட்டு விட்டு கிருஷ்ணாவிடம் நாளை பார்க்கலாம் என்று சொல்லி ‘சோன்ப்ரயாக்’ சென்றோம். அங்கிருந்து தான் கேதார்நாத் பயணம் துவங்குகிறது. வழியெல்லாம் சாலைகள் இருந்த இடத்தில் மழைத்தண்ணீர் அடித்துச் சென்றதால் வெறும் கற்களும் மண்ணும் தான் மிஞ்சியிருந்தது. எங்கெங்கோ வளைந்து வளைந்து சென்று ஹெலிகாப்டர் தளத்திற்கு வந்து சேர்ந்தோம். கேதார்நாத் செல்ல பல தனியார் நிறுவனங்கள் ஹெலிகாப்டர் சேவையை வழங்கி வருகின்றன. இதில் சென்றால் ஐந்து நிமிடங்களில் சென்று விடலாம். நடந்து மலையேறினால் குறைந்தது எட்டு மணிநேரம் ஆகும் என்பதால் நாங்கள் செல்லவில்லை. முடிந்தால் இறங்கி வரலாம் என்று அப்போதைக்கு முடிவெடுத்தோம்.

எங்களுடைய பயண முகவர் ஏற்கெனவே கேதார்நாத் சென்று வர முன்பதிவு செய்து காலை 11.30 மணிக்கு நேரம் குறித்திருந்தாலும் நாங்கள் அன்று அங்கு சென்ற நேரத்தைக் கணக்கில் கொண்டு மூன்று மணிக்குத் தான் செல்ல முடியும் என்று கூறி விட்டார்கள். என்ன இப்படி இருக்கிறார்கள்? சொன்ன நேரத்திற்கு விட முடியவில்லை என்றால் எதற்கு முன்பதிவு என்று ஏமாற்றமாகிவிட்டது எனக்கு. அங்கே ஒரு ஹாலில் குறைந்தது 75 பேராவது அவரவர் சொந்தங்களுடன் அமர்ந்திருப்பார்கள். கோவிட் பற்றின எந்த பயமும் இந்தியாவில் பார்க்கவில்லை. மகிழ்ச்சியாக இருந்தது. அதற்காக அசட்டையாகவும் இருக்க முடியாதே? மாஸ்க் இல்லமால் எங்கும் செல்லக் கூடாது என்று அன்பு மகள் வேறு கட்டளையிட்டிருந்தாள்.

கழிவறை செல்லும் வழி என்று போட்டிருந்த இடத்தில் எப்படித்தான் உட்கார்ந்திருக்கிறார்களோ😑 குமட்டும் நாற்றம். ஈக்கள் வேறு மொய்த்துக் கொண்டிருந்தது. சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டிய இடத்தை மிக மிக அசுத்தமாக வைத்திருக்கிறோம். அதைப்பற்றின கவலைகள் ஏதுமின்றி இருக்கிறோம். என்ன செய்வது? டிசைன் அப்படி! அங்கே இருக்கப் பிடிக்காமல் வெளியே வாசலுக்குச் சென்று காத்திருந்தோம். உள்ளே நம்மூர் மக்களைப் போல் ஒரு பெரிய குழு ஒன்று இருந்தது. வெளியே காத்திருக்கையில் ஒருவர் மெதுவாக எத்தனை மணிக்கு எங்களுடைய ஸ்லாட் என்று பேச்சு கொடுத்தார். பார்த்தால் நம்மூர் பக்கத்து ஆள் மாதிரி இருக்கிறாரே என்று நினைத்து பேசிக் கொண்டிருந்தோம். பிறகு வழக்கம் போல, எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்க, நியூயார்க், மதுரை என்று சொல்ல, “அட… நீங்க தமிழா? இவ்வளவு நேரம் இது தெரியாம இங்கிலிஷ்ல பேசிட்டு இருந்திருக்கோம் பாருங்க” என்று சிரித்தோம். அவர் உடனே அவர் குழுவில் இருந்தவர்களை அறிமுகப்படுத்திப் பேசினார். காரைக்குடிச் செட்டியார் குடும்பங்கள். மதுரை, சென்னை, பெரியகுளம் பகுதிகளில் இருந்து இரண்டு வேன்களில் வந்திருந்தார்கள். மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து வந்திருந்த மனிதர் மிகவும் அமைதியானவராகத் தெரிந்தார். தொழில் சம்பந்தமாக அமெரிக்காவிற்கு வந்து சென்றிருப்பதாகக் கூறினார். இங்கே வந்து மதுரை ஆட்களைச் சந்திப்போம் என்று நினைக்கவில்லை என்று மகிழ்ந்தார்.

அவர்களில் ஒரு குழு கேதார்நாத் சென்று விட்டதாகவும் இவர்கள் சென்று இரவு தங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருப்பதால் அங்கு தங்கும் விடுதிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலரே முறையான உடைகளை அணிந்திருந்தார்கள். பலரும் வெறும் செருப்பு மட்டுமே. குளிரைத் தாங்கும் ஜாக்கெட் கூட இல்லை. “எப்படிங்க அங்க இரவு இருப்பீங்க? -3 டிகிரி செல்சியஸ்னு போட்டிருக்கு.” என்றால் ஒரு இரவு தானே அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம் என்று ஆச்சரியமூட்டினார்கள். பாவமாக இருந்தது. அவர்கள் எதிர்பார்த்து வந்தது ஒன்று. நடப்பதோ வேறொன்று.


எதிரில் ஒரு உணவகம் இருந்தது. அங்கே காரைக்குடிகாரர் ஒருவர் சமையல்காரர்/மேற்பார்வையாளராக இருந்தார். தமிழ்நாட்டு கூட்டத்தைப் பார்த்தவுடன் சாப்பாடு தயார். இட்லி, தோசை கிடைக்கும் என்று ஆசை காட்டி விட்டுப் போக, நாங்கள் அங்கே உடனே ஆஜர். மேஜையில் அமர்ந்தால் ஈக்கள். யக்😖 ‘மொறுமொறு’ தோசைக்கு ஆர்டர் கொடுத்து விட்டு கையை ஆட்டி ஈக்களை விரட்டிக் கொண்டே இருந்தோம். சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் ருசியாக இருந்தது. கூடவே ‘சாய்’. மணி ஒன்று தான் ஆகியிருந்தது. கூட்டம் இப்பொழுது கொஞ்ஞ்ஞ்சம் குறைந்திருந்தது.

தமிழ்மக்கள் “வாங்க இங்க வந்து உட்காருங்க.’ என்று அவர்களுக்கு அருகில் நாற்காலிகளைப் போட்டு அழைக்க நாங்களும் அமர்ந்து கொண்டோம். வாழ்க்கையில் தனது குழந்தைகளின் கடமைகளை முடித்த திருப்தியில் பலரும் மூன்று நடுத்தர வயது குடும்பங்களும் வந்திருந்தனர். ஒருவர் ஆரம்பப்பள்ளி வயது குழந்தைகளுடன் வந்திருந்தார்! பாவம் அந்த குழந்தைகள்! நேரத்திற்குத் தூங்க முடியாமல் சாப்பிட முடியாமல் கஷ்டம் தான். செட்டிநாடு ஸ்பெஷல் சீடை என்று கொடுத்தார்கள். “சாப்பிடுங்க நல்லா இருக்கும். மதுரையில செட்டிநாடு பலகாரங்கள் விற்கிற கடை இருக்கு. ஊருக்குப் போறப்ப வாங்கிட்டுப் போங்க” என்று முகவரியையும் கொடுத்தார்கள். சீடை சூப்பராக இருந்தது. கண்டிப்பாக மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் இருக்கும் அந்த செட்டிநாடு கடைக்குப் போறோம். அள்றோம் என்று மனதில் குறித்துக் கொண்டேன்.

குழுவில் ஒருவருடைய மகன் அட்லாண்டாவில் இருப்பதாகவும் கோடையில் அங்கிருந்ததாகவும் அடிக்கடி அமெரிக்காவிற்கு வந்து செல்வதாகக் கூறினார். பலருடைய குழந்தைகளும் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறி இருந்தனர். குழுவின் தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு தமிழக ஆளுநர் வரை ஆட்கள் தெரிகிறது. அங்கிருந்து உத்தரகாண்ட் கவர்னரிடம் சொல்லி இவர்கள் எல்லோரும் முன்பதிவு செய்யாமலே ஹெலிகாப்டர் பயணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது. பரவாயில்லையே!

சிறிது நேரத்தில் அறிமுகமானாலும் வடமாநிலத்தில் தமிழில் பேசியதால் மகிழ்ச்சியும் நெருக்கமும் உண்டாயிற்று. அவர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. ஜோதிர்லிங்க யாத்திரை, அமர்நாத் யாத்திரை சென்று வந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார்கள். நாம் தான் எங்கேயும் போகாமல் இருக்கிறோமோ என்று தோன்றியது.

மூலையில் ஒரு வட இந்திய பாட்டி ‘லொக்லொக்’ என்று இருமித் தள்ளிக் கொண்டிருந்தார். போடு மாஸ்க்கை என்று மீண்டும் மாஸ்க்கை போட்டுக் கொண்டோம். இந்த வயதில் இப்படிப்பட்ட உடல்நிலையில் கேதார்நாத் செல்லும் பாட்டியின் அசாத்திய தைரியம் எனக்குப் பிடித்தது. இப்படி வயதானவர்கள் பலரும் ‘சார்தாம்’ யாத்திரைக்கு வந்திருந்தார்கள். அதுவும் கொரோனா காலத்திற்குப் பிறகு 2022ல் கோவில் திறந்ததால் அதிக கூட்டம் என்று நினைக்கிறேன்! வெளியில் ஹெலிகாப்டர் வந்திறங்கும் பொழுதே ‘மடமட’வென்று ஆட்கள் இறங்கவும் ஆறு நபர்களை அழைத்துச் சென்று அமர வைத்தும் விடுகிறார்கள். அது பேரோசை எழுப்பி ‘விர்ர்ர்ர்ர்’ரென பறந்து மலைகளுக்கிடையில் அழகாக வளைந்து செல்வதைப் பார்க்க நன்றாக இருந்தாலும் அடி மனதில் கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. திரும்பி வரும்பொழுது ‘லொக்லொக்’ பாட்டி கேதார்நாத் போய்விட்டிருந்தார். அப்பாடா!

இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பி விடலாம். மூன்று மணி என்று சொல்லி மணி நான்காகி விட்டது. இருட்டுவதற்குள் போய் விடவேண்டும் என்ற பதட்டம் ஆரம்பித்து விட்டது. வானில் கருமேகங்கள் சூழ, ஹெலிகாப்டர் பயணம் தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது. “ஈஸ்வரா! ஏமாத்திடாதேப்பா! உன்னைய பார்க்க இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். இன்னுமொருமுறை வர முடியுமா தெரியலை.” என்று வேண்டிக் கொள்ள ஆரம்பித்தேன். அங்கிருந்தவர்கள் அவரவர்க்குத் தெரிந்த சிவப்பாடல்களைப் பாடி வேண்ட ஆரம்பித்தார்கள். இன்னொருவர் “தைரியமாக இருங்கள். கண்டிப்பாக கோவிலுக்குப் போய்விட்டுத் தான் நீங்கள் ஊருக்குப் போவீர்கள். குலதெய்வம் கோவிலுக்கு வேண்டி காசு முடிஞ்சு வச்சுட்டு வந்திருக்கிறேன். எந்த தடங்கலும் ஏற்படாது” என்று ஆறுதல் கூறினார். இப்படியே ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறி மேகம் எப்பொழுது கலையும் என்று காத்துக்கொண்டு இருந்தோம். 4.30 மணியளவில் மீண்டும் வானில் ஹெலிகாப்டர்கள் பறக்கும் ஓசை. ஆனால் வேறு நிறுவன ஹெலிகாப்டர்கள். இந்த நிறுவன பைலட் மேகங்கள் முற்றிலும் விலகிய பின்னர் தான் ஹெலிகாப்டர் பயணம் தொடரும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டார். அதுவரை காத்திருக்க வேண்டியது தான். என்ன செய்ய? இருட்டி விட்டால் இன்று போக முடியாது என்று வேறு வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். 

காலையில் 11 மணியிலிருந்து ‘சித்தம் போக்கு சிவன் போக்கு’. நல்லதே நடக்கும் என்று காத்திருந்தோம்.


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...