Showing posts with label நீயாநானா. Show all posts
Showing posts with label நீயாநானா. Show all posts

Sunday, December 15, 2024

'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா?

இன்றைய வாழ்க்கையில் குடும்பத்தினரை விட நண்பர்கள் மிக நெருங்கியவர்களாக பலருக்கும் இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக, ஆண்களுக்கு. நண்பர்களிடம் மனம் விட்டுப் பேசுவதைப் போல பலரும் தங்களுடைய மனைவியிடம் கூட பேசுவதில்லை என்பதே உண்மை. பெண்கள் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார்கள். சூழ்நிலைகளைப் புரிந்து கொள்வதில்லை. எதற்கெடுத்தாலும் அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். குடும்பத்தில் மேலும் குழப்பத்தையே ஏற்படுத்துகிறது. அதனால் தான் நண்பர்களைச் சந்தித்துப் பேசுகிறோம் என்பது தான் பல ஆண்களின் வாதம்.

இவற்றையெல்லாம் கூட ஒப்புக்கொள்ளலாம். அது என்ன, நண்பர்களுடன் இருந்தால் 'கட்டிங்' போட்டால் தான் கொண்டாட்டமா? இது தான் அவர்களின் மனைவியரின் வாதம். சென்ற வார 'நீயா நானா' விவாதம் இதைப் பற்றியது தான்.

எனக்குத் தெரிந்து என் தந்தை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையையும் அவர் நண்பர்களுடன் பொழுதைக் கழித்து விட்டு வருவார். இது வாடிக்கை. ஞாயிறுகளில் நாங்கள் பாட்டிவீட்டிற்குச் சென்று விடுவோம். அதனால் குடும்பத்தில் ஒன்றும் பிரச்சினையில்லை.

என் கணவரும் மதுரையில் நண்பர்களைப் பார்த்து விட்டு வருகிறேன் என்று அவர்களைச் சந்தித்துப் பேசி விட்டு வருவார். இது வாடிக்கையாகப் பலரது வீடுகளிலும் நடக்கின்ற கதை தான்.

ஆனால், கடந்த சில வருடங்களாக, நண்பர்கள் சந்தித்துக் கொண்டால், 'மச்சி, ஓபன் த பாட்டில்' என்று 'பார்ட்டி' வைத்துக் கொண்டாடுவது' வாடிக்கையாகி விட்டிருக்கிறது. எப்படி அப்படியொரு சந்தர்ப்பத்தை உண்டாக்கலாம் என்று நன்றாகவே திட்டமிடுகிறார்கள். அதற்குத் தான் பல குடும்பங்களில் பெண்கள் பொங்குகிறார்கள்.

"வாரம் முழுக்க வேலை. வீட்டிற்கு வேண்டிய அத்தனையையும் செய்து விடுகிறோம். எங்களுக்காக சில மணி நேரங்கள். மனைவியிடம் கூட பேச முடியாததை நண்பர்களுடன் பேசிக் கொள்கிறோம். பழைய பள்ளி, கல்லூரி நாட்களைப் பற்றிப் பேசுகிறோம். ஆனந்தமாக, நண்பர்களுடன் ஒரு அரட்டை. அப்படியே கொஞ்சம் குடி. இது தப்பா?"

"அய்யோ பாவம்! அவர்களும் மனுஷங்க தானே? ஒரு 'கட்டிங்' அடிச்சா என்ன தப்பு? நண்பர்களுடன் இருக்கிறப்ப?" ஒன்றுமே தெரியாதது மாதிரி பெண்களிடம் கேள்விகள் கேட்கிறார் கோபிநாத்.

ஒரு 'கட்டிங்' என்று ஆரம்பித்து எல்லை மீறிச் சென்று விட்டால்? ஏதாவது ஆபத்து நேர்ந்து விட்டால்? அந்த நேரத்தைக் குடும்பத்துடன், குழந்தைகளுடன் செலவிடலாமே? ஏன் சிறையிலிருந்து தப்பித்துச் செல்வது போன்ற பாவனை? இப்படி பல கேள்விகளும் தங்களைத் தவிக்க விட்டு விட்டு இவர்கள் மட்டும் ஜாலியாக ஆட்டம் போடுகிறார்களே என்ற அங்கலாய்ப்புகளும் மனைவிகளிடமிருந்து.

படித்தவர்கள், பணியில் இருப்பவர்கள் மெல்ல மெல்ல தங்கள் கவலைகளை மறைக்க இப்படித்தான் ஒரு 'கட்டிங்'கில் ஆரம்பித்து பின் அது தினமும் தொடர்ந்து அடிமையாகிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஏதும் தங்கள் வாழ்வில் நடந்து விடக்கூடாது என்பதில் பெண்களுக்குரிய அச்சம் என்பது புரிந்து கொள்ள முடிகிறது. நான் 'மொடாக்குடியன்' இல்லை. அப்படி எல்லாம் ஆகிவிடமாட்டேன் என்று கற்பூரம் ஏற்றி சத்தியம் செய்து கொள்பவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்பவர்கள் தான். குடிக்கு அடிமையாகி விட்டால் பணியிடத்தில் சுணக்கம், வீட்டில் கருத்து வேறுபாடு என்று சடுதியில் படுபாதாளத்திற்குள் தள்ளி விடும்.

இப்பொழுதெல்லாம் பணி நிமித்தமாக, நண்பர்களுடன், வெளியூர்களுக்குச் சென்றால் என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லிக் குடிப்பது அதிகரித்து விட்டது. அதுவும் தவிர, தட்டுப்பாடின்றி கிடைக்கும் மதுபானமும், 'குடி, குடி' என்று குடிமக்களைக் குடிகாரர்களாக்கி காசு பார்க்கும் கேவலமான அரசாங்கமும் இருக்கும் வரை பெண்கள் தவிப்புடனும் அச்சத்துடனும் வாழ வேண்டிய துர்பாக்கிய நிலை. இதனால் எத்தனை எத்தனை குடும்பங்கள், பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்?

மெல்ல, மெல்ல போதை மாநிலமாக நம் கண்முன்னே தமிழகம் மாறிவருவது வேதனையான நிலைமை. பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே குடிக்கு அடிமையாகி வரும் போக்கு பல பெற்றோர்களுக்கும் அச்சத்தைத் தருகிறது. முன்பு, பயந்து பயந்து குடித்தார்கள். இன்றோ, நண்பர்களின் "சந்திப்புகள்" என்றாலே பெரும்பாலான இடங்களில் குடி இல்லாமல் இல்லை என்றாகிவிட்டது.

கடவுளின் அருள் இருந்தாலோ அல்லது மிகக் கட்டுப்பாடு கொண்ட மனம் இருப்பவர்களால் மட்டுமே குடிப்பழக்கத்திலிருந்து மீள முடியும் என்று நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்கள் கூறியது தான் உண்மை.

குடும்பத்தின் நன்மை கருதி குடிக்கு அடிமையாகாமல் தங்கள் நேரத்தைப் பயனுள்ளதாகச் செலவிடும் மக்களும் இருக்கும் நாட்டில் தான் இப்படிப்பட்ட குடிகாரர்களும் உருவாகுகிறார்கள் வெவ்வேறு காரணத்தை அவர்களாகவே கொடுத்துக் கொண்டு.

என்னவோ போடா மாதவா!














Sunday, October 20, 2024

டிஜிட்டல் கொள்ளை


இன்றைய 'நீயாநானா'வில் வலைஉலக ஏமாற்றுக்காரர்களிடம் சிக்கி வாழ்க்கையையும் பணத்தையும் தொலைத்தவர்கள் பற்றின விவாதம் நடந்தது. ஏமாற்றுபவர்கள் எல்லா காலத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். தொழில்நுட்பம் வளர,வளர அவர்களும் புதுப்புது வழிகளைக் கையாண்டு நூதன முறையில் ஏமாற்றுகிறார்கள்.

நாம் ஏன் ஏமாறுகிறோம்? போதுமான கல்வியறிவு இல்லை என்று சொல்லலாம் என்றால் நன்கு படித்து, பதவியில் இருப்பவர்கள் தான் அதிகம் ஏமாறுகிறார்கள். வெளியில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.

டிஜிட்டல் யுகத்திற்கு முன்புவரை வங்கி, அஞ்சல்துறையில் பணத்தைச் சேமித்து வைத்தார்கள். கூடுதல் வட்டிக்கு வைப்புச் சான்றிதழ் முறையில் பாதுகாப்பாக முதலீடு செய்தார்கள். விவரம் அறிந்தவர்கள், கையில் தாராளமாகக் காசு புழங்கும் வீட்டினர், பணத்தை நிலத்திலும் தங்கத்திலும் முதலீடு செய்தனர். அதற்கும் ஒரு படி மேலாக செல்வந்தர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்தார்கள்.

காலம் மெல்ல மாறியது. படித்தவர்கள் அதிகமானார்கள். வேலை தேடி அலையும் கூட்டம் பெருகியது. வேலை வாங்கித்தருகிறேன் என்று பூஞ்சைகளாய் பூத்தது சிறு நிறுவனங்கள் பல. கஷ்டப்பட்டு அவர்கள் கேட்ட பணத்தைப் புரட்டிக் கொடுத்து வெளிநாட்டு வேலைக்காகக் காத்திருந்த பலரையும் மும்பை, மத்திய கிழக்கு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா என்று அழைத்துப்போய் பலரும் நரகத்தில் சிக்குண்டவர்களாகத் தப்பித்து வீடு போய்ச் சேர்ந்தால் போதும் என்று ஓடிவந்தது வரலாறு.

சீட்டு கட்டி கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தைக் கொடுத்து இரவோடு இரவாக நிறுவனங்கள் பூட்டைப்போட்டுத் தலைமறைவாகி அதில் பலர் பணத்தைத் தொலைத்தனர்.

அவ்வளவு ஏன் ? நடிகர்களை வைத்து 'ஈமு' கோழி நாடகம் நடந்ததை யாராலும் மறக்க முடியுமா? எத்தனை பேர் பணத்தை இழந்தார்கள்!

பெண்களிடம் தங்கத்தை மெருகேற்றுகிறேன் என்று ஆட்டையைப் போட்ட எத்தனை கதைகளைக் கேட்டிருப்போம்? ஒரு சவரன் கொடுத்தால் இரட்டிப்பாக்கிக் கொடுப்பேன் என்று முதலில் உண்மையாகவே இரட்டிப்பாக்கி ஆசையைத் தூண்டி விட, எத்தனை பெண்கள் கணவருக்குத் தெரியாமல் நகைகளை இழந்தார்கள்?

நெட்ஃப்ளிக்ஸ்ல் 'Jamtara:Sabka Number Ayega' என்ற தொடரில் படிப்பறிவு இல்லாத சைபர் குற்றவாளிகள் ஒரு குக்கிராமத்தில் இருந்து எப்படி நகர்வாழ் மக்களின் பணத்தைச் சுருட்டுகிறார்கள் என்று காட்டுகிறார்கள். நம்பவே முடியாது. ஆனால் உண்மையிலேயே அப்படி நடந்திருக்கிறது.

சமீபகாலமாக வேலைவாய்ப்புகள் பெருகியதில் குடிசைகள் ஓட்டுவீடுகளாகியது. கைகளில் பணம் புரளத்துவங்கியது பலரிடம். ஆனாலும் ,அவனை விட நான் பணக்காரனாக வேண்டுமென்ற ஆசை. பெண்பித்தர்கள் பலரும், குறுக்குவழியில்/ஓசியில் பணம் கிடைக்கும் என்பதை நம்பி ஏதோ ஒரு நப்பாசையில் பலரும் வீட்டில் பூச்சிகளாக சைபர் குற்றவாளிகளிடம் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

புதிய தொழிலை ஆரம்பிக்க வலைத்தளங்களில் எதையோ தேடிக்கொண்டிருந்தவரின் கண்ணில் பட்ட விளம்பரம் விபரீதத்தைக் கொண்டு வந்து அவர் மூன்று லட்சம் வரை இழந்திருக்கிறார். பாவம்! நேர்மையாகத் தொழில் செய்ய முயன்று ஏமாந்திருக்கிறார்!

குழந்தைக்கு டயபர் வாங்க இணையத்தில் தேடி புதுக்கடை, தள்ளுபடி என்று 3000 ரூபாய் வரையில் ஏமாந்திருப்பவர் படித்தவர் தான். இணையத்தை நம்பி இப்படி ஒரு இழப்பு!

போலி வர்த்தக கணக்கில் சிக்கிப் பணத்தை இழந்தவர்கள் தான் அதிகம். ஆசை! ஆசை! எல்லோரும் 'தருமி'யாக ஆசைப்பட்டு உள்ளதும் போச்சு நொள்ளைக்கண்ணாவாக.

இருப்பதிலேயே கொடூரம் இந்த கதை தான். வெளிநாட்டில் வேலை என்று அழைத்துப் போய் ஒரு ஆணை பெண்ணாக 'chat' செய்ய வைத்து அதில் ஏமாந்த 'பெண் பித்தர்களிடம்' இருந்து பல லட்சங்கள், கோடிகள் என்று சுருட்டி இருக்கிறார்கள். ஏமாந்தவர்கள் பலர் விவாதத்தில் கலந்து கொண்டிருந்தார்கள். இந்திய அரசும் வெளிநாட்டுக்குச் சுற்றுலா விசாவில் ஊருக்குச் சென்றவர்கள் பற்றின தகவலை வைத்து மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது சிறப்பு. நிச்சயம் பாராட்டத்தக்க செயல். வேறு நாட்டினர் இன்னும் மாட்டிக் கொண்டுள்ள விஷயத்தில் இந்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து மாட்டிக் கொண்டவர்களை மீட்டு வந்திருக்கிறது.

என் மகள் ஜெர்மனிக்குப் படிக்கச் சென்றிருந்த பொழுது கல்லூரியில் இருந்த ATMல் பணம் எடுத்திருக்கிறாள். அடுத்த முறை பணம் எடுக்கச் சென்றிருந்த பொழுது அவளுடைய வங்கிக்கணக்கில் இருந்த மொத்தபணமும் காலி என்று தெரிய வந்தது. அலறி அடித்துக் கொண்டு என்னிடம் கூற, நேரே வங்கிக்குச் சென்று தெரிவித்தேன். பொதுவாகவே ஐரோப்பா செல்பவர்களுக்கு இது நடக்கும் என்று நண்பர்கள் மூலம் அறிந்திருந்ததால் அவள் ஊருக்குச் செல்லும் முன் வங்கியில் அவளுடைய படிப்புக்காக ஜெர்மனி செல்வதும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கும் படியும் கூறி இருந்தேன். அவர்களும் தாய்லாந்தில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பணத்தை எடுத்திருக்கிறார்கள் என்று விசாரணை செய்து கண்டுபிடித்தார்கள். எங்கள் பணத்திற்கு எந்த பங்கமும் இல்லை. போன மொத்த பணத்தையும் கணக்கில் வரவு வைத்து புது கார்டையும் கொடுத்து விட்டார்கள்.

இப்படி உலகமெல்லாம் கிரெடிட் கார்டு, ஈமெயில் மூலம் திருட்டுத்தனங்கள் தொடர்ந்து நடந்து கொண்டு தானிருக்கிறது. அமெரிக்காவில் அதிகம். இந்த அழகில் 'சிப் ரீடர்'ஐ வைத்து பர்ஸிலிருக்கும் கடன் அட்டை மூலம் பணத்தை லவட்ட முடியும் என்பது திருடர்களுக்கு வசதியாகப் போய் விட்டது😖

ரயிலில் பயணம் செய்யும் பொழுது மகனின் பர்ஸை திருடிய அடுத்த கணமே அவன் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முயற்சித்திருக்கிறார்கள். நல்ல வேளை! வங்கி உடனே கைபேசியில் code அனுப்பியவுடன் இவனும் பர்ஸ் தொலைந்ததைச் சொல்லி அந்த பரிவர்த்தனையை நிறுத்தி விட்டான். அதனால் தப்பித்தான்.

இது ஏதோ இந்தியாவில் மட்டும் அதுவும் 'டிஜிட்டல் இந்தியா' ஆன பிறகு நடப்பது போலவும் கோட்டு சூட்டு கோபி சொல்லாமல் இருந்தால் தானே அதிசயம்? என்ன இருந்தாலும் திரா விட வளர்ப்பு அல்லவா?

வங்கிகள் மக்களின் பணத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டிய கடமை அவர்களுக்கு இருக்கிறது. யாருடைய கணக்கிலிருந்தோ பணம் செல்கிறது என்றால் உடனே கைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி அவர் இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறாரா அல்லது code/OTP எண்ணை அனுப்பி உறுதி செய்துகொள்ளலாம்.

மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை வங்கிகளுக்கு உண்டு. மக்களும் குறுகிய வழியில் பணம் கிடைக்கிறது என்று ஆசைப்படாமல் தெளிவாகக் கேட்டறிந்து கொள்வது நல்லது. மக்களும் விழிப்புணர்வுடன் குடும்ப உறுப்பினர்களுக்கு அறிவுறுத்துவது நல்லது. கடமையும் கூட!

அவசியமான விவாதம்.




Sunday, September 15, 2024

கணவன் அமைவதெல்லாம்...


"படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் Vs வீட்டில் இருக்கும் பெண்கள்" - இன்றைய நீயாநானாவின் விவாதம். முதலில் இந்த விவாதம் சரிதானா? இது அவரவர் விருப்பம் சார்ந்தது. படிப்பதற்கு அறிவை வளர்த்துக் கொள்ளவே என்று ஒருசாராரும் இல்லை படித்ததைக் கொண்டு அத்துறையில் சிறப்புற பணியாற்றவே என்று விவாதம் வைத்துக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் நியாயம் இருந்திருக்கும். அப்படியென்றால் பலரின் வாதம் விமரிசனத்திற்குள்ளாகியிருக்கும் என்பது வேறு விஷயம்.

குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் அனைவரும் தங்களின் மனத்திருப்திக்காக, அதுவே தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார்கள். அது சரி. குடும்ப நலனுக்காக, குழந்தைகள் வளர்ப்பிற்காக என்று கூறும் பொழுது தான்வேலைக்குச் செல்லும் பெண்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை போன்றதொரு பிம்பம் ஏற்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பல பெண்களுக்குக் கூடுதல் பணிச்சுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் பலருக்கும் உண்டு. அதுவும் நேரம், காலம் தெரியாமல் வேலை பார்க்க வேண்டிய சூழலில் குடும்பத்தையும் பணியையும் நிர்வகிக்க வேண்டுமென்றால் அலாதியான திறமை வேண்டும். இல்லையென்றால் அமைதியான குடும்பத்தில் பூகம்பம் தான் வெடிக்கும்.

இந்த விவாதத்தில் பேசிய பெண்கள் பலரும் குழந்தைகள் வளர்ப்பிற்காக, உறவுகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதற்காக, கணவனின் முன்னேற்றத்தில் உதவியாக என்று அடுக்கினார்கள். பலரும் வேலைக்குச்சென்று திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பிறந்த பின்னால் வேலையை விட்டிருக்கிறார்கள். நாம் அருகிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது தான். இவர்கள் எல்லோருக்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் தன்னை நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. பேசிய பெண்கள் நல்ல பொருளாதார வசதிகளுடன் இருப்பதைப் போலத்தான் தெரிந்தது. அது அவர்களின் அதிர்ஷ்டம். அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அவர்கள் விருப்பம் வீட்டில் இருப்பது என்பதில் அவர்கள் கணவருக்கும் உடன்பாடு இருப்பதால் எந்தப் பிரச்சினையுமில்லை. இவர்கள் எல்லோரும் 'விடிந்தாலே கனவு நனவாகுமே' சன்ரைஸ் காபியுடன் கணவனை எழுப்புபவர்கள். அவர்களும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கைப்பேசியில் வாட்ஸப் குழுமங்களில் அரட்டை அடித்துக் கொண்டே ஆனந்தமாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

ஆனால் உண்மையில் இப்பெண்களில் பலரும் கறிக்கடை, சந்தை, பலசரக்கு கடைகளுக்குச் செல்ல ஏகமாக அவர்களை விரட்டிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் "இங்க நான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு அலையறேன்" என்ற வசனங்கள் எல்லாம் கேட்கும். எல்லார் வீடுகளில் இல்லையென்றாலும் "நான் வீட்டில எவ்வளவு வேலைகளைச் செய்றேன் தெரியுமா" என்ற புலம்பலும் தொடரும். "வேலைக்குப் போற திமிரு", "கையில பணம் இருக்குன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கறா" என்று எதிர் தரப்பினரைப் பார்த்துப் புழுங்கி அவனைத் துவைத்து வேலைக்குச் செல்லும் பெண்களை விடவும் செலவுகள் அதிகமாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். மறுக்க முடியாது.

படித்து முடித்த ஒரு பெண் வேலைக்குச் செல்ல பல காரணிகள்: குடும்பப் பொருளாதாரம், தான் கற்ற கல்வியைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு, தன் கல்வி அறிவை மேம்படுத்த, ஒரு பெண்ணால் குடும்பத்தையும் பணியையும் சிறப்புற நிர்வகிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை... என்று சொல்லிக் கொண்டே சொல்லலாம். இல்லையென்றால் பெண்கள் பலதுறைகளிலும் சாதிக்க முடியுமா? நிலவிற்கு விண்கலம் அனுப்பிச் சாதனை செய்த பெண்களுக்குப் பின்னால் நிச்சயமாக அவர்களுடைய கணவர்களும் குழந்தைகளும் பெற்றோர்களும் என்ற மிகப்பெரிய பலம் இருக்கிறது.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் பலரும் முன் திட்டமிடுதலுடன் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். என்ன? பணிக்குச் செல்வதால் 8-10 மணிநேரங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பொறுப்பில்லாதவர்கள், குடும்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர்கள் என்றாகி விடுமா?

ஒரு பெண் வேலைக்குச் செல்வதால் அவளுடைய குழந்தைகளும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வளரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. அந்தக் குழந்தைகள் யாரையும் எதிர்பார்க்காமல் வளர கற்றுக் கொள்கிறது. வீட்டில் அம்மா இருந்து வளரும் குழந்தைகள் மனநிலையும் அதை ஒத்து தான் இருக்கும். "வீட்ல சும்மா தான இருக்கிற" என்று கணவரும் இருப்பார். அதுவே 24 மணிநேர வேலை என்று புரிந்து கொள்ளாமல்.

இன்றைய கால கட்டத்தில் கணவன்-மனைவி இருவர் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் பல துறைகளிலும் சாதிக்க பெண்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளும் தான் தூண்டுகோலாக இருக்கிறது. குடும்பத்தைப் பெண் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்ற சூழல் மாறி வருகிறது. கணவன்-மனைவி இருவருமே குடும்பப்பொறுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டால் மன அழுத்தங்களுக்கு வாய்ப்பே இல்லை. இல்லையென்றாகும் பொழுது தான் வாய்ச்சண்டையில் தொடங்கி மனம் வெறுத்து விவாகரத்து வரை நீள்கிறது.

படித்த பெண்கள் வாழ்வில் மட்டுமா விவாகரத்துகள் நடக்கிறது?

குடும்பம் என்ற அமைப்பில் எல்லாமே சாத்தியம். வீட்டில் இருப்பதால் பொறுப்பானவர்கள் என்றோ வேலைக்குச் செல்வதால் சாதிப்பவர்கள் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது. தன் குழந்தைகள், குடும்பத்திற்கு, தனக்கு எது நல்லதோ அதைச் செய்ய வேண்டும்.

இன்று பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி என்ற இரண்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்க முடிந்ததென்றால் பணத்தேவைக்குத் தந்தையும் குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொண்ட தாயும் தான் காரணம். அன்று பெரும்பாலான அம்மாக்கள் வீட்டிலிருந்து குழந்தைகளை வளர்த்தார்கள். உண்மை தான். இப்பொழுது கல்வி அனைவருக்கும் கிடைக்க, படித்து முடித்த பின் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது யாரையும் சார்ந்திராமல் இருக்கவும் முடியுமென்றால் வீட்டிலும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதில் தவறில்லை.

ஆனால் இரண்டு பக்கத்திலும் ஒரு ஆணின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை. குடும்பம் என்பது இருவரின் பொறுப்புகள் சார்ந்த விஷயம். ஒருவரே ஒரு பொறுப்பைச் சுமக்கும் பொழுது வெறுமையோ வெறுப்போ வரும் சாத்தியக்கூறுகள் அதிகம். அப்பொழுது இன்னொருவர் தங்களுடைய பங்கை மாற்றிக்கொள்ளும் வசதிகள் இருக்க வேண்டும். இந்த விவாதத்தில் கூறியபடி, குழந்தைகள் வளர்ந்து கல்வி முடித்து வீட்டை விட்டுச் சென்ற பின் யாரும் தன்னைச் சார்ந்திருக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கும் பொழுது அதுவரை குடும்பத்தை நிர்வகித்து வந்த பெண் தன் மதிப்பை இழந்தவள் போல் உணருவாள் என்றால் அப்பொழுது வேலைக்குச் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் குடும்பம், பணியிடத்துச் சுமைகளைக் கையாண்டாலும் வீட்டில் கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டே இருக்கும் கணவர்கள் வாய்த்தவர்கள் தான் பாவம். இன்னும் ஒரு தலைமுறை வரை இது தொடரும்.

இப்பொழுது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆண்கள் பலரும் வேலைக்குச் செல்லும் பெண்களைத் தான் விரும்புகிறார்கள். பெண்கள் தான் யோசிக்கிறார்கள். சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் ஆண்கள். 

ஆக, கணவன் அமைவதெல்லாம்...













Sunday, September 1, 2024

நீயாநானா


ஒரு முறை நியூயார்க் விமானநிலையத்தில் காத்திருந்த பொழுதில் தமிழர்களைப் போலத் தெரிந்த குடும்பம் ஒன்றைப் பார்த்தேன். ஒருவேளை அவர்களும் நம்மூருக்குத் தான் செல்கிறார்களோ என்று நினைத்தேன். அப்பா, அம்மா, மகள் போல ஒரு பெண், அவளுடைய கணவர், குழந்தைகள் என்று அங்குமிங்கும் பரபரப்பாகச் சென்று வந்து கொண்டிருந்தார்கள். என்னுடைய அருகிலிருந்த இருக்கையில் அம்மா போலத் தெரிந்த பெண்மணி அமர்ந்து கொண்டார். ஏதோ வேற்று மொழியில் பேசிக்கொண்ட மாதிரி இருந்தது! என்னடா லதாவுக்கு வந்த சோதனை? பார்க்க தமிழ் ஆட்களைப் போல இருந்து கொண்டு புரியாத மொழியில் பேசுகிறார்களே என்று மெதுவாகப் பேச்சுக் கொடுத்தேன்.

ஆண் தான் பேசினார். "பல தலைமுறைகளுக்கு முன்பே தமிழ்நாட்டிலிருந்து பிரேசிலில் கரும்புத்தோட்டங்களில் வேலை செய்யச் சென்ற குடும்பங்கள் பலவும் அங்கிருப்பதாகவும் இவருடைய குடும்பம் தற்போது கலிஃபோர்னியாவிற்கு இடம்பெயர்ந்துள்ளது" என்று கூறினார். தமிழ் தெரியாது என்றார். ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தோற்றம் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிவிட முடியும். அப்படி இருந்தார்கள். கனடாவில் நான் சந்தித்த இலங்கைத் தமிழர்கள் பலரும் ஆங்கிலம் கலக்காத கொஞ்சு தமிழில் கதைத்து என்னை வெட்கப்பட வைத்தார்கள். நம் மொழியையும் கலாச்சாரத்தையும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிறார்கள்.

எங்களுடைய 'சார்தாம்' பயணத்தின் பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த குஜராத் வம்சாவளிகள், மலேசியாவிலிருந்து வந்திருந்த தமிழ்நாடு, கேரளாவைச் சேர்ந்த வம்சாவளிகள் சிலரைச் சந்தித்து அளவளாவும் சந்தர்ப்பம் கிடைத்தது. பல சுவையான தகவல்களைத் தெரிந்து கொண்டோம். தமிழர்கள் பலரும் தங்கள் மூதாதையர் வாழ்ந்த, தங்களுடைய முகம் தெரியாத உறவினர்கள் வாழும் ஊருக்கு வந்து செல்வதில் கிடைக்கும் மகிழ்ச்சியைப் பற்றி உணர்ச்சிப்பூர்வமாகப் பகிர்ந்து கொண்ட பொழுது ஆச்சரியமாகத் தான் இருந்தது. ஆம். அவர்கள் தமிழில் தான் உரையாடினார்கள்.

இந்த வார 'நீயாநானா'வில் தமிழ்நாட்டிற்கு வந்திருந்த நான்காவது தலைமுறையினருடன் நேர்காணல்/விவாதம் நடந்தது. அதில் பலரும் இலங்கைத்தமிழர்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் பேசிய தமிழ் அப்படித்தானிருந்தது. கோவையிலிருந்து புலம் பெயர்ந்து சென்ற குடும்பத்தில் இருந்து வந்திருந்த பெண் மிக அழகாகத் தமிழ் பேசினார். எப்படி தமிழ்நாடே மறந்து கொண்டிருக்கும் கலாச்சாரத்தை, மூன்று தலைமுறைகள் எட்டிப்பார்க்காமல் இருந்த மாநில மொழியை பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று கோபிநாத் கண்கள் வியக்க ஆச்சரியப்பட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார். பரத நாட்டியம், திருக்குறள், பாரதியார் பாட்டு, கும்மி ஆட்டம் என்று கலக்கினார்கள். பரத நாட்டியம் ஆடிய ஃபிஜி தீவிலிருந்து வந்திருந்த பெண் செருப்பு போட்டுக் கொண்டு ஆடியது தான் வித்தியாசமாகத் தெரிந்தது. பரதம் கற்றுக் கொடுத்தவர் முக்கியமான ஒன்றைக் கற்றுக் கொடுக்க மறந்துவிட்டிருக்கிறார்😖அந்தப்பெண் தான் ஒரு "கார்டியோ வாஸ்குலர் சர்ஜன்" என்றதும் கோபிநாத் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்று விட்டார். இதைத்தான் "don't judge a book by its cover" என்பார்கள்.

பர்மா, மலேஷியா, ஃபிஜி தீவு, உகாண்டா, ஆஸ்திரேலியா, கனடா, மாலத்தீவு, தென்னாப்பிரிக்கா என்று உலகின் பல மூலைகளில் இருந்து வந்திருந்த இளைஞர் பட்டாளம் கூறியதிலிருந்து ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள் பலரும் இன்றும் வீடுகளில் தாய்மொழியில் பேசுவதும் பூஜை, புனஸ்காரங்கள், சடங்கு, சம்பிரதாயங்கள் என்று அனைத்தும் செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி ஆய்வாளர் ஒருவர் அங்கிருக்கும் கோவில்கள் தான் இதற்கு காரணம். அதனால் தான் நான்கு தலைமுறைகள் கடந்தும் பரதநாட்டியம், பாட்டு, தமிழ் அழியாமல் இருக்கிறது என்று கூறினார். சில பெண்கள் அழகாக கோலம், ரங்கோலியும் போட,

கோபிநாத்திற்கு ஒரே அதிர்ச்சி. "எமோஷன குறை. எமோஷன குறை" என்று காதில் ஓதியிருப்பார்கள் போலிருக்கு. காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் அழகிய கலையை மறந்து கொண்டிருக்கும் திராவிடர்களுக்கு அதிர்ச்சி வரத்தானே செய்யும்😁 கோலம் போடுவதில் இருக்கும் அறிவியலை மேல்நாட்டுக்காரன் ஆராய்ச்சி செய்கிறான். நாம் தெரிந்த கலையை மறந்து கொண்டிருக்கிறோம். என்னவோ போடா மாதவா😞 

என்னுடைய அனுபவத்தில் கனடா, அமெரிக்காவில் தமிழ் மொழி வகுப்புகள் அந்தந்த ஊர் தமிழ்ச்சங்கங்களால் முன்னெடுத்து குழந்தைகளுக்குக் கற்பிக்கப்படுகிறது. கலிஃபோர்னியா மற்றும் வேறு சில மாநிலப் பள்ளிகளில் வேற்று மொழியாகத் தமிழ் மொழியை அங்கீகரித்து க்ரெடிட் பெறவும் முடிகிறது. நியூயார்க்கில் இன்னும் அந்தளவிற்கு யாரும் முயலவில்லை.

இன்றைய 'நீயா நானா' மூலம் புலம்பெயர்ந்தவர்களின் இன்றைய தலைமுறையினர் தங்களுடைய மூதாதையர்களின் உறவுகளோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள முனைவதும் "தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா" என்று சொல்வதில் பெருமை கொண்டிருப்பதும் பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

வேற்று மொழிகளைக் கற்றுக் கொண்டாலும் வெளிநாடு சென்றாலும் தமிழ் அழியாது என்பதை நிரூபிக்கிறார்கள். நாமோ, மும்மொழிக்கொள்கையால் தமிழ் மொழி அழிந்து விடும் என்று துண்டுச்சீட்டுப்பார்த்து "வெயிட் அண்ட் சீ" சொல்லி அரசுப்பள்ளி மாணவர்களுக்குத் துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.





Monday, July 22, 2024

நீயாநானா?

கஷ்டப்படும் நிலையிலிருந்து உயர, கல்வி ஒன்றே உதவும். சுக, துக்கங்களை மறந்து உழைக்கும் பெற்றோர்கள் தங்களுக்கு கிடைக்காத படிப்பை அடுத்த தலைமுறையாவது பெற வேண்டும் என்று பாடுபடுகிறார்கள். அதை உணர்ந்த மாணவ, மாணவியர் நன்கு படித்து மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இந்த வார நீயாநானாவில் அரசுப்பள்ளியில் படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் வைத்து நடந்த விவாதத்தில் 

கோட்டுசூட்டு கோபி கேட்க மறந்தது:

ஏன் மாணவர்களுக்கு லேப்டாப் கொடுப்பதை அரசு நிறுத்தியது?

நீட் தேர்வினால் எட்டாக்கனியாக இருந்த மருத்துவம் தங்களுக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதைப் பற்றி மாணவர்களுடன் மேலும் பேசாமல் இருந்தது.

எப்படியெல்லாம் அரசியல் செய்கிறது நீயாநானா?

ஆனால் ஒன்று, பல மாணவர்களுக்கும் அவர்கள் படிக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் உதவுவது பாராட்டப்பட வேண்டியது. கல்விக்கட்டணம் முதல் லேப்டாப் வரை கொடுத்து உதவும் அந்த மனசு இருக்கே அதுதான் சார் கடவுள்.
எச்சக்கையால சாப்பாட்டை எச்சை ஆக்கத் தெரிந்தவர்களுக்கு ஏழை மாணவர்களின் வலிகள் புரிவதில்லை. தகுதி பார்த்து உரிமைத்தொகை அரசியல் செய்தவர்கள் தேவைப்படும் இந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியிருக்கலாமே?
 
இதே எதிர்கட்சியாக இருந்திருந்தால் அவியல் செய்திருப்பார்கள் தானே? மிக்சர் தின்று கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் எதைப்பற்றியும் கவலை இல்லை.

ஆக…

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...