Sunday, September 15, 2024

கணவன் அமைவதெல்லாம்...


"படித்து முடித்து வேலைக்குச் செல்லும் பெண்கள் Vs வீட்டில் இருக்கும் பெண்கள்" - இன்றைய நீயாநானாவின் விவாதம். முதலில் இந்த விவாதம் சரிதானா? இது அவரவர் விருப்பம் சார்ந்தது. படிப்பதற்கு அறிவை வளர்த்துக் கொள்ளவே என்று ஒருசாராரும் இல்லை படித்ததைக் கொண்டு அத்துறையில் சிறப்புற பணியாற்றவே என்று விவாதம் வைத்துக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் நியாயம் இருந்திருக்கும். அப்படியென்றால் பலரின் வாதம் விமரிசனத்திற்குள்ளாகியிருக்கும் என்பது வேறு விஷயம்.

குடும்பத்தைக் கவனித்துக் கொள்ள வீட்டில் இருக்கும் படித்த பெண்கள் அனைவரும் தங்களின் மனத்திருப்திக்காக, அதுவே தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாகக் கூறினார்கள். அது சரி. குடும்ப நலனுக்காக, குழந்தைகள் வளர்ப்பிற்காக என்று கூறும் பொழுது தான்வேலைக்குச் செல்லும் பெண்கள் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை போன்றதொரு பிம்பம் ஏற்படுகிறது.

வேலைக்குச் செல்லும் பல பெண்களுக்குக் கூடுதல் பணிச்சுமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் பலருக்கும் உண்டு. அதுவும் நேரம், காலம் தெரியாமல் வேலை பார்க்க வேண்டிய சூழலில் குடும்பத்தையும் பணியையும் நிர்வகிக்க வேண்டுமென்றால் அலாதியான திறமை வேண்டும். இல்லையென்றால் அமைதியான குடும்பத்தில் பூகம்பம் தான் வெடிக்கும்.

இந்த விவாதத்தில் பேசிய பெண்கள் பலரும் குழந்தைகள் வளர்ப்பிற்காக, உறவுகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வதற்காக, கணவனின் முன்னேற்றத்தில் உதவியாக என்று அடுக்கினார்கள். பலரும் வேலைக்குச்சென்று திருமணத்திற்குப் பிறகு அல்லது குழந்தை பிறந்த பின்னால் வேலையை விட்டிருக்கிறார்கள். நாம் அருகிலிருந்து குழந்தையைப் பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது தான். இவர்கள் எல்லோருக்கும் குடும்பத்தில் இருப்பவர்கள் தன்னை நம்பி இருக்கிறார்கள் என்ற எண்ணமும் மேலோங்கியிருக்கிறது. பேசிய பெண்கள் நல்ல பொருளாதார வசதிகளுடன் இருப்பதைப் போலத்தான் தெரிந்தது. அது அவர்களின் அதிர்ஷ்டம். அனைவருக்கும் வாய்ப்பதில்லை. அவர்கள் விருப்பம் வீட்டில் இருப்பது என்பதில் அவர்கள் கணவருக்கும் உடன்பாடு இருப்பதால் எந்தப் பிரச்சினையுமில்லை. இவர்கள் எல்லோரும் 'விடிந்தாலே கனவு நனவாகுமே' சன்ரைஸ் காபியுடன் கணவனை எழுப்புபவர்கள். அவர்களும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு கைப்பேசியில் வாட்ஸப் குழுமங்களில் அரட்டை அடித்துக் கொண்டே ஆனந்தமாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

ஆனால் உண்மையில் இப்பெண்களில் பலரும் கறிக்கடை, சந்தை, பலசரக்கு கடைகளுக்குச் செல்ல ஏகமாக அவர்களை விரட்டிக் கொண்டிருப்பார்கள். கேட்டால் "இங்க நான் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப கால்ல சக்கரத்தைக் கட்டிட்டு அலையறேன்" என்ற வசனங்கள் எல்லாம் கேட்கும். எல்லார் வீடுகளில் இல்லையென்றாலும் "நான் வீட்டில எவ்வளவு வேலைகளைச் செய்றேன் தெரியுமா" என்ற புலம்பலும் தொடரும். "வேலைக்குப் போற திமிரு", "கையில பணம் இருக்குன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கறா" என்று எதிர் தரப்பினரைப் பார்த்துப் புழுங்கி அவனைத் துவைத்து வேலைக்குச் செல்லும் பெண்களை விடவும் செலவுகள் அதிகமாகச் செய்பவர்களும் இருக்கிறார்கள். மறுக்க முடியாது.

படித்து முடித்த ஒரு பெண் வேலைக்குச் செல்ல பல காரணிகள்: குடும்பப் பொருளாதாரம், தான் கற்ற கல்வியைப் பயன்படுத்த ஒரு வாய்ப்பு, தன் கல்வி அறிவை மேம்படுத்த, ஒரு பெண்ணால் குடும்பத்தையும் பணியையும் சிறப்புற நிர்வகிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை... என்று சொல்லிக் கொண்டே சொல்லலாம். இல்லையென்றால் பெண்கள் பலதுறைகளிலும் சாதிக்க முடியுமா? நிலவிற்கு விண்கலம் அனுப்பிச் சாதனை செய்த பெண்களுக்குப் பின்னால் நிச்சயமாக அவர்களுடைய கணவர்களும் குழந்தைகளும் பெற்றோர்களும் என்ற மிகப்பெரிய பலம் இருக்கிறது.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் பலரும் முன் திட்டமிடுதலுடன் வீட்டில் இருக்கும் பெண்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். என்ன? பணிக்குச் செல்வதால் 8-10 மணிநேரங்கள் குழந்தைகளைப் பிரிந்து இருக்கிறார்கள். அதனால் அவர்கள் பொறுப்பில்லாதவர்கள், குடும்பத்தின் மேல் அக்கறை இல்லாதவர்கள் என்றாகி விடுமா?

ஒரு பெண் வேலைக்குச் செல்வதால் அவளுடைய குழந்தைகளும் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு வளரும் சந்தர்ப்பங்கள் கிடைக்கிறது. அந்தக் குழந்தைகள் யாரையும் எதிர்பார்க்காமல் வளர கற்றுக் கொள்கிறது. வீட்டில் அம்மா இருந்து வளரும் குழந்தைகள் மனநிலையும் அதை ஒத்து தான் இருக்கும். "வீட்ல சும்மா தான இருக்கிற" என்று கணவரும் இருப்பார். அதுவே 24 மணிநேர வேலை என்று புரிந்து கொள்ளாமல்.

இன்றைய கால கட்டத்தில் கணவன்-மனைவி இருவர் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தமும் பல துறைகளிலும் சாதிக்க பெண்களுக்குக் கிடைத்துள்ள வாய்ப்புகளும் தான் தூண்டுகோலாக இருக்கிறது. குடும்பத்தைப் பெண் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்ற சூழல் மாறி வருகிறது. கணவன்-மனைவி இருவருமே குடும்பப்பொறுப்புகளில் பங்கெடுத்துக் கொண்டால் மன அழுத்தங்களுக்கு வாய்ப்பே இல்லை. இல்லையென்றாகும் பொழுது தான் வாய்ச்சண்டையில் தொடங்கி மனம் வெறுத்து விவாகரத்து வரை நீள்கிறது.

படித்த பெண்கள் வாழ்வில் மட்டுமா விவாகரத்துகள் நடக்கிறது?

குடும்பம் என்ற அமைப்பில் எல்லாமே சாத்தியம். வீட்டில் இருப்பதால் பொறுப்பானவர்கள் என்றோ வேலைக்குச் செல்வதால் சாதிப்பவர்கள் என்றோ சொல்லிக் கொள்ள முடியாது. தன் குழந்தைகள், குடும்பத்திற்கு, தனக்கு எது நல்லதோ அதைச் செய்ய வேண்டும்.

இன்று பிரக்ஞானந்தா மற்றும் அவரது சகோதரி வைஷாலி என்ற இரண்டு சதுரங்க விளையாட்டு வீரர்களை உருவாக்க முடிந்ததென்றால் பணத்தேவைக்குத் தந்தையும் குழந்தைகளின் தேவைகளைக் கவனித்துக் கொண்ட தாயும் தான் காரணம். அன்று பெரும்பாலான அம்மாக்கள் வீட்டிலிருந்து குழந்தைகளை வளர்த்தார்கள். உண்மை தான். இப்பொழுது கல்வி அனைவருக்கும் கிடைக்க, படித்து முடித்த பின் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்புகள் கிடைக்கும் பொழுது யாரையும் சார்ந்திராமல் இருக்கவும் முடியுமென்றால் வீட்டிலும் ஆதரவு கிடைக்கும் பட்சத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதில் தவறில்லை.

ஆனால் இரண்டு பக்கத்திலும் ஒரு ஆணின் ஆதரவின்றி இது சாத்தியமில்லை. குடும்பம் என்பது இருவரின் பொறுப்புகள் சார்ந்த விஷயம். ஒருவரே ஒரு பொறுப்பைச் சுமக்கும் பொழுது வெறுமையோ வெறுப்போ வரும் சாத்தியக்கூறுகள் அதிகம். அப்பொழுது இன்னொருவர் தங்களுடைய பங்கை மாற்றிக்கொள்ளும் வசதிகள் இருக்க வேண்டும். இந்த விவாதத்தில் கூறியபடி, குழந்தைகள் வளர்ந்து கல்வி முடித்து வீட்டை விட்டுச் சென்ற பின் யாரும் தன்னைச் சார்ந்திருக்கவில்லை என்ற எண்ணம் மேலோங்கும் பொழுது அதுவரை குடும்பத்தை நிர்வகித்து வந்த பெண் தன் மதிப்பை இழந்தவள் போல் உணருவாள் என்றால் அப்பொழுது வேலைக்குச் சென்றிருக்கலாமோ என்ற எண்ணம் நிச்சயம் தோன்றும்.

வேலைக்குச் சென்று வரும் பெண்கள் குடும்பம், பணியிடத்துச் சுமைகளைக் கையாண்டாலும் வீட்டில் கணினியில் எதையாவது நோண்டிக்கொண்டே இருக்கும் கணவர்கள் வாய்த்தவர்கள் தான் பாவம். இன்னும் ஒரு தலைமுறை வரை இது தொடரும்.

இப்பொழுது பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க ஆண்கள் பலரும் வேலைக்குச் செல்லும் பெண்களைத் தான் விரும்புகிறார்கள். பெண்கள் தான் யோசிக்கிறார்கள். சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள் ஆண்கள். 

ஆக, கணவன் அமைவதெல்லாம்...













No comments:

Post a Comment

கலப்படம்

கல்வியும் விஞ்ஞானமும் வளர, வளர மனிதர்கள் அதை நல்வழியில் பயன்படுத்துகிறார்களா இல்லையோ குறைந்த காலத்தில் அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என்று எதற...