Tuesday, September 24, 2024

இதோ இதோ என் பல்லவி

வருடந்தோறும் ‘Aim For Seva’ அமைப்பினர் நன்கொடையாளர்களைக் கௌரவிக்கும் விதமாக இயல், இசை, நாடகக் குழுக்களில் ஒன்றை இந்தியாவிலிருந்து அழைத்து வந்து கலைநிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த முறை ‘ஹே கோவிந்த்’ என்று பல்வேறு இசை வடிவங்களில் கிருஷ்ணனை வாழ்த்திப் பாடும் குழுவினரின் இன்னிசை விருந்து. கிருஷ்ணன் என்றதும் புல்லாங்குழல் தான் நினைவிற்கு வரும். வாய்ப்பாட்டுக்கு இணையாக புல்லாங்குழலின் இசை! கண்களை மூடிக் கேட்க, எங்கோ ஆற்றங்கரையில் பறவைகளின் இன்னிசையோடு கலந்த பாடல் கோபியர் கொஞ்சும் கிருஷ்ணனை கண்முன் கொண்டு வந்தது. இனிமையான பாடல்களைப் பாடியவரோ வேறு உலகத்திற்கே அழைத்துச் சென்று விட்டார்.


இழுத்த இழுப்புக்கெல்லாம் குரல் தேனாய் பாடல்களாய் கேட்டதென்றால் மூச்சை இழுத்து அடக்கி மதுர இசையாக, வாய்ப்பாட்டு பாடுபவருக்குப் போட்டியாக புல்லாங்குழல் வாசித்தவரோ “சபாஷ்” போட வைத்துக் கொண்டே இருந்தார். வெவ்வேறு அளவுகளில் நான்கு புல்லாங்குழல்கள். அதில் இதுவரை நான் பார்த்திராத புதுவகை புல்லாங்குழல் ஒன்று. அவரே வடிவமைத்ததாம். அவர் மூச்சு விட்டாலே இசையாகத்தான் கேட்குமோ? மனிதர் அபார மூச்சு கட்டுப்பாட்டுடன் அங்கிருந்தவர்களைத் தன்னுடைய இசையால் கட்டிப்போட்டு விட்டார். அந்த இசைக்கு ஏற்றாற்போல் அழகிய கண்கவர் ஓவியங்கள் பின்னால் காட்சியாக!
 
ஹரே கிருஷ்ணா! யமுனா நதிக்கே அழைத்துச் சென்று விட்டார்கள்!



புல்லாங்குழலில் இசையை வரவழைக்க எத்தனை கஷ்டம் என்று தெரியும். வீட்டில் ஈஷ்வரும் சுப்பிரமணியும் புல்லாங்குழல் வாசிப்பதால் அதைப்பற்றின கொஞ்சூண்டு அறிவுண்டு.
 
தப்லா வாசித்த இளைஞனோ கைவிரல்களால் கூட இத்தனை அழகான தேனிசையைக் கொண்டு வரமுடியுமா என்று ஆச்சரியப்படுத்தினான். ஜதி்்வேறு பாடி அசத்தினானே பார்க்கணும். வாவ்!

நான் மட்டும் என்ன இளப்பமா என்று பக்கவாத்தியம் வாசித்தவர் “அடடா” என்று அசத்தி விட்டார். அவருக்கும் தப்லா இளைஞனுக்கும் நடந்த போட்டி அரங்கில் இருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டது.

ஆர்மோனியம் இல்லாமல் வாய்ப்பாட்டா? அவர் தானே முதலில் எடுத்துக் கொடுக்கிறார். கூடவே சுருதிப்பெட்டி.
 
தாள வாத்தியம் வாசித்த மனிதர் சகலகலா வல்லவர். குயில் கூவுவது்போல, பறவைகள் ‘சடசட’வென பறப்பது போல கரையும் காற்றாக இசையோடு கலந்த அவரின் வாத்தியங்கள் ஜஸ்ட் லவ்லி!

இசைக்கருவிகள் ஒரு பாடலுக்கு எத்தனை உயிரோட்டமாக இருக்கிறது என்பதை நேரில் பார்த்து அனுபவிப்பது இன்னும் ஏகாந்தம்.
கைகள் விரித்துப் பக்தியுடன் கிருஷ்ணா, ராமா, விட்டலா என்று பாடியதைக் கேட்பவர்களை அந்தப் பரப்பிரம்மனிடமே சரணடைய வைத்துக் கொண்டிருந்தது அம்மனிதரின் பாடல்கள்.
 
மனம் லயித்துப் பக்தியுடன் பாடுகையில் மனதை வருடி உயிரில் கலக்கும் இசைக்கு மொழியேது?
 
மொத்தத்தில் அருமையான இன்னிசை விருந்து. அமெரிக்காவில் உங்கள் ஊருக்கருகில் வந்தால் தவறாமல் சென்று கேளுங்கள்.

இசை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் எனக்கே சிலிர்ப்பைத் தந்த அனுபவம் என்றால் இசை தெரிந்தவர்களுக்குக் கேட்கவே வேண்டாம்.
இசையால் வசமாகா இதயம் எது?

“Aim For Seva” அமைப்பு வசதிகளற்ற மலைவாழ் மற்றும் கிராமப்புற ஏழை மாணவ, மாணவியர்க்கு இலவச உண்டு உறைவிட பள்ளிகள் மூலம் கல்வியை வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி வரும் அருந்தொண்டினை செய்து வருகிறது. புஜ்யஶ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமி அவர்களால் முன்னெடுக்கப்பட்டு இன்று இந்தியாவில் பல இடங்களில் அவர்கள் பலரது வாழ்விலும் ஒளியேற்றி வருவது சிறப்பு. அப்பள்ளியில் படித்து இன்று மருத்துவம் பயிலும் மாணவன் தன் கிராமத்து மக்களுக்கு முன்மாதிரியாக இருந்து சேவை செய்வேன் என்று கூறியதைக் கேட்கையில் மகழ்ச்சியாக இருந்தது.

உலகமெங்கிலும் இருக்கும் நன்கொடையாளர்களின் உதவியால் தன்னார்வலர்கள் இணைந்து நடத்தி வரும் பள்ளிகள் மூலம் கல்வி கற்க வசதியில்லாத குழந்தைகளுக்கு கல்வி கிடைக்க வசதி செய்து கொடுத்திருக்கிறார் சுவாமி அவர்கள்.

கொடுக்கும் பணத்தில் 1 ரூபாய்க்கு 92 பைசாக்கள் மாணவர்களின் கல்விக்காகச் செலவு செய்யப்படுகிறது.


தாராளமாக உதவுங்கள்.
 
“Give the world the best you have and the best will come back to you."
-Sri Dayananda Saraswati Swamy

பிகு: செவிக்கு மட்டுமா இன்பம்? இந்தா சாப்பிடு என்று உணவுப்பொட்டலம் வேறு. ஆஆஆஆ! லதா ஹேப்பி அண்ணாச்சி. மனம் மகிழ்ந்திருக்கும் வேளையில் ஞாயிறு கரைந்து விட்டிருந்தது. திங்கள் உதயமாக…

இதோ இதோ என் பல்லவி


No comments:

Post a Comment

அடுத்த அமெரிக்க அதிபர் யார்?

சொல்வனம் இதழில் வெளிவந்துள்ள அமெரிக்க அதிபர் வேட்பாளர்களின் போட்டியைப் பற்றின கட்டுரை  அடுத்த அமெரிக்க அதிபர் யார்? இன்னும் இரு மாதங்களில் அ...