Showing posts with label மராத்தி. Show all posts
Showing posts with label மராத்தி. Show all posts

Friday, September 1, 2023

ஸ்மைல் ப்ளீஸ்!


மலையாளப் படங்களைப் போலவே மராத்தியிலும் பல அருமையான படங்கள் வெளிவருகிறது. என்னுடைய தாய் பாஷையை ஒத்திருக்கும் மொழி என்பதால் நல்ல படங்கள் என்றால் உடனே பார்த்து விடுவோம். சமீபத்தில் அமேசான் ப்ரைமில் பார்த்த படம் 'ஸ்மைல் ப்ளீஸ்'. புகைப்படம் எடுப்பவருடைய கதை என்பதும் இப்படத்தைப் பார்க்க ஆவலைத் தூண்டியது. மிகக் குறைவான கதாபாத்திரங்களைக் கொண்டு ஆர்ப்பாட்டமில்லாமல் ஒரு கதையை நல்ல செய்தியுடன் கொண்டு வந்ததற்கே பாராட்டலாம். கதாபாத்திரங்களின் அலட்டல் இல்லாத நடிப்பு. அழகான காட்சியமைப்பு. திரைப்படங்கள் என்பது பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும். இதில் கூடவே மறதி நோய் பற்றின சிறிது விழிப்புணர்வும் இருக்கிறது. சபாஷ்👍

'Still Alice' என்ற ஹாலிவுட் திரைப்படம் மறதி நோயால் பாதிக்கப்பட்டவருடைய வாழ்க்கையை அழகாகச் சித்தரித்திருக்கும். அதில் நடுத்தர வயது கதாநாயகி. ' ஸ்மைல் ப்ளீஸ்' படத்தில் மிகச் சிறிய வயதில் கூட இந்நோய் தாக்கும் வாய்ப்புகள் இருப்பதையும் அவரைச் சுற்றியுள்ள குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, நோயை எதிர்கொள்ள கதாநாயகி தடுமாறுவதையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். இன்னும் கூட இந்த நோயால் பாதிக்கப்படுகிறவர்களைப் பற்றி ஆழமாக எடுத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆனாலும் 'அல்சைமர்ஸ்' என்று அங்கொன்று இங்கொன்றுமாக பரவலாக கேட்டுக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்நோயைப்பற்றி மக்கள் அறிந்து கொள்வதும் அவசியம். அதனால் இந்தப்படம் கவனம் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன்.

அவரவர் கனவைத் துரத்தி ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் நோயாளிக்குத் தேவையான கவனத்தையும் அன்பையும் தர வேண்டிய அவசியம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஏற்படுகிறது. அந்நிலையிலும் அன்பானவர்ளின் ஆதரவால் கனவைச் சாதிக்க முடியும் என்ற நல்ல செய்தியுடன் நிறைவடைகிறது. அப்பாடா! நமக்கே ஆயிரத்தெட்டு சோதனைகள்! சோகமாக முடிக்காமல் விட்டார்களே என்று மகிழ்ச்சியாக இருந்தது😊 

மறதி நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை நண்பர்கள் மூலம் கேட்டறிந்திருக்கிறேன். 'Still Alice' படத்தைப் பார்த்தவுடன் எனக்கு அப்படியொரு நிலை வந்தால் எப்படி இருக்கும் என்று உண்மையிலேயே பயந்து போனேன். முன்னெச்சரிக்கையாக குழந்தைகளிடம் கூட பேசினேன். இந்நோயால் பாதிக்கப்பட்டவருக்கு ஏற்படும் குழப்பங்கள், ஏமாற்றங்கள், தனிமை, விரக்தியை பொறுமையாக கையாளும் மனப்பக்குவம் அவரைச் சுற்றிலும் இருப்பவர்களுக்கு அவசியம். அழகான காட்சியுடன் படத்தை நிறைவு செய்ததற்கே விருது கொடுக்கலாம்😊

பொறுமை இருப்பவர்களும் வசதியுடையவர்களும் கிடைத்தால் டிமென்ஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் எஞ்சிய வாழ்க்கையை ஓரளவு நிம்மதியாக கழிப்பார்கள். மற்றவர்களின் நிலைமை பாவம் தான்😔 இவர்களைக் கையாளுவது அத்தனை எளிதல்லவென பாதிக்கப்பட்ட அந்த குடும்பத்தினர் மட்டுமே நன்கு அறிவர். நண்பர் ஒருவரின் தந்தை காணாமல் போய் அவரைக் கண்டுபிடிப்பதற்குள் குடும்பமே பதறிப்போனது. எதிரே நிற்கும் குடும்ப உறுப்பினர் யார் என்றே தெரியாமல் வேற்று மனிதருடன் பேசுவது போல் பேசும் அன்பானவர்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது😢

இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு டிமென்ஷியா பாதிப்பு 7.4% என்று ஆய்வுகள் கூறுகிறது. 60 வயதுக்கு மேற்பட்ட 8.8 மில்லியன் இந்தியர்கள் டிமென்ஷியாவுடன் வாழ்கின்றனர். ஆண்களை விட பெண்களிடையே அதிகமாகவும், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் அதிகமாகவும் இந்நோய்த்தாக்குதல் உள்ளது. தென் மாநிலங்களில் தமிழ்நாட்டில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அல்சைமர் சங்கம் வெளியிட்டுள்ளது😔

தமிழில் ஏன் இத்தகைய படங்கள் வருவதில்லை என்று யோசித்தால் புரியும். சாதியை ஒழித்து விட்டோம் என்று கொக்கரித்துக்கொண்டே கொம்பு சீவும் 'சாதீய' படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைமை மாறாத வரை நாம் மலையாளம், மராத்தி, இந்திப் படங்களைப் பார்ப்போம்.

2020ல் மராத்தியில் சிறந்த கதாநாயகிக்கான விருதை இப்படத்தில் நடித்த 'முக்தா பார்வே' பெற்றிருக்கிறார்👏


Monday, March 28, 2022

பவன்கிந்த் (Pawankhind)

மீண்டுமொரு அருமையான மராத்திப் படம் 'பவன்கிந்த்'. மராத்திய மன்னன் சிவாஜி, அவருடைய தாயார் ஜிஜாபாய் எத்தகைய வீர மகனை வளர்த்து இஸ்லாமிய கொடூரன்களை எதிர்த்துப் போராட வைத்திருக்கிறார் என்று வரலாற்றில் நாம் சிறிது படித்திருக்கிறோம். பாரத நாட்டில் பிறந்து நாட்டை  நேசிக்கும் அனைவருக்கும் வீர சிவாஜியின் வாழ்க்கை வரலாறு என்றுமே உத்வேகத்தை அளிக்கவல்லது. சத்ரபதி சிவாஜியின் வாழ்வில் ஹிந்து ராஷ்டிரத்தை அமைக்க அவருடன் துணை நின்ற படைத்தளபதிகள், வீரர்கள்  அவர்களுடைய தியாகங்களை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது இந்தப் படம். 

1660களில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், கோலாப்பூர் நகருக்கு அருகில், விஷால்காட் கோட்டைக்கு அருகில் உள்ள மலைப்பாதையில் மராட்டிய வீரர் பாஜி பிரபு தேஷ்பாண்டே, சம்பு சிங் ஜாதவ் மற்றும் சித்தி மசூத் ஆகியோருக்கு இடையே நடந்த போரில்  சிவாஜியை பாதுகாப்பாக வேறிடத்திற்கு அழைத்துச் செல்ல நடக்கும் யுத்தம், அதில் உயிரிழந்த வீரர்கள் பற்றின சம்பவத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். 300 மராட்டிய வீரர்களுடன் மராட்டிய படைத்தளபதி பாஜி பிரபு தேஷ்பாண்டே,  12,000 பேரைக் கொண்ட சுல்தானின் படைத் தளபதி சித்தி மசூத்துடன் வீரத்துடன் போராடி  சிவாஜியையும் அவருடன் துணை சென்றவர்களையும் காக்க தன்னுயிர் இழக்கிறார்கள். பல மாந்தர்கள், குடும்பங்கள் செய்த தியாகம் தான் இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் என்பதை எக்காலத்திலும் மறக்க கூடாது என்று சிவாஜி அவர் மகனுக்கு படததில் எடுத்துரைப்பது நம் எல்லோருக்கும் பொருந்தும்.

மகன் எதிரிகளைப் பந்தாட, தாய்  ஜிஜாபாய் கணவனைப் போருக்கு அனுப்பிவிட்டு கவலையுடன் இருக்கும் பெண்களுக்கு ஆதரவாகவும் நன்றியுடனும் கலந்து பேசி உரையாடுவதும் எதிரிகளை போர்முனையில் சந்திக்க ஆயத்தமாக இருக்கும் வீரப்பெண்மணியாக எப்படியெல்லாம் ஆங்கிலேயர், இஸ்லாமியர்களிடம் இருந்து நம் நாட்டைக் காப்பாற்றியுள்ளார்கள் என்பது இந்த தலைமுறையும் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு. 

படத்தின் பொருத்தமான கதை மாந்தர்கள், அவர்களின் மிகைப்படுத்தாத நடிப்பு, காட்சிகளோடு ஒன்றும் பாடல்கள், இறைபக்தி, போர் தாக்குதல்கள்  என்று அன்றைய ஹிந்து அரசர்களின் வாழ்வை அழகாக வெளிப்படுத்திய விதம் அருமை. 

பல உயிர்கள் தியாகம் செய்து தான் நம் நாட்டின் சுதந்திரமும் ஆங்கிலேய, இஸ்லாயமியர்களின் கொடூர ஆட்சியிலிருந்து தப்பிக்கவும் முடிந்திருக்கிறது. அதையெல்லாம் அறியாத சமூகம் ஒன்று வளர்ந்து வருவது மிக ஆபத்தானது. உண்மையான வரலாற்றை மறைத்து பொய்யைத் திணிக்கும் அரசு அமைப்புகளை எதிர்த்து இன்று வரையில் போராடிக் கொண்டிருக்கும் கர்மவீரர்கள் அனைவருக்கும் நாம் என்றும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அமேசான் ப்ரைம்-ல் கண்டுகளிக்கலாம்.




Monday, March 7, 2022

Picasso


அமேசான் ப்ரைமில் எதையோ தேடிக் கொண்டிருந்தததில் மீண்டுமொரு மராத்திப் படம் கண்ணில் பட்டது. படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்க பார்க்க ஆரம்பித்தோம். ஒரு படம் நம்மை பார்க்க வைக்க வேண்டுமெனில் கதை, படமாக்கப்பட்ட விதம், இசை, பாடல்கள், நடிக, நடிகையர்கள் இப்படி ஏதாவது ஒன்று பிடித்தால் பார்க்க ஆரம்பித்து விடுவோம். இப்படத்தில் எல்லாமே மிக நன்றாக பொருந்தி இருந்தது சிறப்பு.

மழையுடன் துவங்கும் முதல் காட்சியிலேயே மனதைக் கவர்ந்து விட்டது இப்படம். மழையில் குளிர்த்த 'பச்சைப்பசேல்' மரங்கள், செடிகள், மனிதர்களோடு படம் பார்ப்பவர்களையும் நனைய வைக்கிறது. படம் நெடுக வஞ்சகமில்லாமல் மழையும் பயணிப்பது கொள்ளை அழகு. அதுவும் அந்தச் சிறுவன் படகில் பக்கத்து கிராமத்திற்குச் செல்லும் காட்சிகள் ஒவ்வொன்றும் முத்துமுத்தாய் இருந்தது.

மாநில அளவில் படம் வரையும் போட்டியில் முதலாம் இடத்தைப் பிடித்த பள்ளி மாணவன் தேசிய அளவில் பங்கு பெற பணம் கட்ட வேண்டிய சூழல். தந்தை ஒரு சிற்பி. மேடை நாடக நடிகரும் கூட. நோயாளி அம்மா. வறுமையான சூழல். ஒரு தந்தையாக, கணவனாக போராடும் தந்தையின் மிகையில்லா நடிப்பும் அந்தச் சிறுவனின் ஏக்கம், ஏமாற்றம், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் கண்களும் இப்படத்தைப் பேச வைக்கிறது அழகான கதையின் வழியாக.

என் சிறுவயதில் தெருக்கூத்துகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசைக்கச்சேரிகள் என்று பலவித பொழுது போக்கு அம்சங்கள் தமிழ்நாட்டிலும் இருந்தன. இன்று வீண் கொள்கைகளைப் பேசி பல நாட்டுப்புறக் கலைகளை இழந்து கொண்டிருக்கிறோம். அற்புத நாட்டுப்புறக்கலைகளை அறியாத தலைமுறை ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தான் நஷ்டம் என்பதைக் கூட அறியாத அறிவிலிகளாக ஒரு காட்டுமிராண்டி சமூகமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் காசு கொடுத்து ஒட்டு வாங்கும் கூட்டங்கள்.

இப்படத்தில் கோவிலில் நடைபெறும் கூத்து/மேடை நாடகத்தை மக்கள் இரவெல்லாம் விழித்திருந்து காண்பார்கள். பொதுவாகவே இத்தகைய நாடகங்கள் புராண கதைகளை மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆடல், பாடல்களுடன் அரங்கேறும். கதாபாத்திரங்களின் உடைகள், மிரட்டலான நடிப்பு, வசனங்கள் மக்களை ஈர்ப்பதால் கூட்டமும் வரும். அப்பாவிடம் தான் வாங்கிய மெடலைக் காண்பித்து பணத்தைக் கேட்க வரும் மகன், தந்தையின் நடிப்பையும், உடையையும், ஊரார் மெச்சி அளித்த பண பரிசையும் விடிய விடிய கண்டு களிக்கிறான்.

சுப முடிவு.

திரைப்படம் என்பது நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். தமிழ் இயக்குனர்களின், மக்களின் ரசனை மாற வேண்டும். மாறினால் மட்டுமே நமக்கு இத்தகைய படங்கள் கிட்டும். இல்லையென்றால்...😭😭😭😭😭



Friday, March 4, 2022

Cycle

தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, கொரியன் தொடர்கள், திரைப்படங்கள் என்று சென்று கொண்டிருந்ததில் அவ்வப்போது மராத்தி படங்களையும்   ஒரு மாறுதலுக்குப் பார்ப்பதுண்டு. அந்த வரிசையில்  'சைக்கிள்' திரைப்படத்தைக் காண நேர்ந்தது. 

கிராமப்புறங்களில் வாழும் மக்கள் நகரத்தில் உழல்பவர்களை விட வெள்ளந்தியானவர்கள். அவர்களிடம் இருக்கும் சக நட்பு, பரிவு, பாசம் எல்லாம் நகரத்தில் எதிர்பார்க்கவும் முடியாது. படத்தின் இயக்குனர் அப்படியான கால கட்டத்தில் இருப்பது போல் இந்தக்  கதை நடப்பதாக துவக்கத்திலேயே சொல்லி விடுகிறார். 

ஜாதகம் பார்க்கும் எளிமையான  ஜோதிடர் குடும்பம். அக்கம் பக்கத்து ஊர் மக்கள் வந்து அவரிடம் பணிவுடன் ஜாதகப்பலன்களை கேட்டுச் செல்ல வருகிறார்கள். சுட்டிப் பெண் குழந்தை. ஜோதிடரின் சைக்கிளுக்கென்று ஒரு கதை இருக்கிறது. அவர் அதைப் பொத்திப்  பொத்தி பாதுகாத்து ஓட்டி வருவார். திடீரென காணாமல் போகும் அந்த சைக்கிளால் ஜோதிடர்,  திருடர்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களை அனாவசிய மிகை உணர்வுகள் இன்றி வெள்ளந்தி மனிதர்களின் பார்வையில் சுவையாக திரைப்படமாக்கியிருக்கிறார்கள். 

பச்சைப்பசேலென கிராமத்துச் சூழல். சூரியோதயம், அஸ்தமன அழகிய கடற்கரை என கண்ணுக்கு குளிர்ச்சியாகவும் காட்சி அமைப்புகள் மனதைக் கவருகிறது. மராத்தி மொழி வார்த்தைகள் பலவும்  என் தாய்மொழியில் பேசுகிறோம்  என தெரிந்தது. மாலை, இரவு நேரங்களில் கதாகலாட்சேபம், புராண நாடகங்கள் என்று தெருக்களில் குடும்பங்களுடன் கண்டு களித்திருந்த காலமும் உண்டு என்பதை தொலைக்காட்சி, வீடியோ கேம்களில் தொலைந்திருக்கும் இந்த தலைமுறையினருக்குப் புரியுமா?

பொருட்களின் மேல் பற்று வைக்காதே என்று படத்தின் துவக்கத்தில் ஒருவருக்கு அறிவுரை சொல்வார் ஜோதிடர். அந்த மனிதரின் ஜாதகம் படு மோசமாக இருக்கும். தன்னால் முடிந்த உதவியைச் செய்து நல்லதே நடக்கும் என்று நம்பிக்கை வார்த்தைகளைக் கேட்டு மகிழ்வுடன் செல்வார் அந்த மனிதரும். தன் மிதிவண்டி தொலைந்தவுடன் தான் அவருக்கு அதன் மேல் இருந்த பற்று புரியும். இப்படி அவர் அடுத்தவருக்குச் சொன்னதைப் புரிந்து கொள்ளும் பல காட்சி அமைப்புகள். 

திருடர்களுக்கோ அந்த மிதிவண்டியின் வாயிலாக ஒரு  மனிதரை எப்படியெல்லாம் மக்கள் கொண்டாடுகிறார்கள். எப்பேர்ப்பட்ட நல்ல மனிதரிடம் திருடி விட்டோமே என்று மனம் வருந்தி திருந்துவதாக சிறு சிறு காட்சிகளின் மூலம் அவர்கள் உணரும் வண்ணம் அமைத்திருந்தது சிறப்பு.

வெற்றுக் கூச்சல் வசனங்கள், ரௌடிகளைக் கொண்டாடும் கதைகள், அரைகுறை நிர்வாண ஆபாச நடனங்கள், சாதி சமூகப் படங்கள் போர்வையில் மிகை நடிப்பும் முட்டாள்தனமான செண்டிமெண்ட் படங்களுக்கு இடையில் இதமான படம் இது. 

 நெட்ஃப்ளிக்ஸ்ல் கண்டு மகிழுங்கள்.

அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...