Monday, March 7, 2022

Picasso


அமேசான் ப்ரைமில் எதையோ தேடிக் கொண்டிருந்தததில் மீண்டுமொரு மராத்திப் படம் கண்ணில் பட்டது. படத்தின் பெயரே வித்தியாசமாக இருக்க பார்க்க ஆரம்பித்தோம். ஒரு படம் நம்மை பார்க்க வைக்க வேண்டுமெனில் கதை, படமாக்கப்பட்ட விதம், இசை, பாடல்கள், நடிக, நடிகையர்கள் இப்படி ஏதாவது ஒன்று பிடித்தால் பார்க்க ஆரம்பித்து விடுவோம். இப்படத்தில் எல்லாமே மிக நன்றாக பொருந்தி இருந்தது சிறப்பு.

மழையுடன் துவங்கும் முதல் காட்சியிலேயே மனதைக் கவர்ந்து விட்டது இப்படம். மழையில் குளிர்த்த 'பச்சைப்பசேல்' மரங்கள், செடிகள், மனிதர்களோடு படம் பார்ப்பவர்களையும் நனைய வைக்கிறது. படம் நெடுக வஞ்சகமில்லாமல் மழையும் பயணிப்பது கொள்ளை அழகு. அதுவும் அந்தச் சிறுவன் படகில் பக்கத்து கிராமத்திற்குச் செல்லும் காட்சிகள் ஒவ்வொன்றும் முத்துமுத்தாய் இருந்தது.

மாநில அளவில் படம் வரையும் போட்டியில் முதலாம் இடத்தைப் பிடித்த பள்ளி மாணவன் தேசிய அளவில் பங்கு பெற பணம் கட்ட வேண்டிய சூழல். தந்தை ஒரு சிற்பி. மேடை நாடக நடிகரும் கூட. நோயாளி அம்மா. வறுமையான சூழல். ஒரு தந்தையாக, கணவனாக போராடும் தந்தையின் மிகையில்லா நடிப்பும் அந்தச் சிறுவனின் ஏக்கம், ஏமாற்றம், சந்தோஷத்தை வெளிப்படுத்தும் கண்களும் இப்படத்தைப் பேச வைக்கிறது அழகான கதையின் வழியாக.

என் சிறுவயதில் தெருக்கூத்துகள், நாடகங்கள், வில்லுப்பாட்டு, இசைக்கச்சேரிகள் என்று பலவித பொழுது போக்கு அம்சங்கள் தமிழ்நாட்டிலும் இருந்தன. இன்று வீண் கொள்கைகளைப் பேசி பல நாட்டுப்புறக் கலைகளை இழந்து கொண்டிருக்கிறோம். அற்புத நாட்டுப்புறக்கலைகளை அறியாத தலைமுறை ஒன்றை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். நமக்குத் தான் நஷ்டம் என்பதைக் கூட அறியாத அறிவிலிகளாக ஒரு காட்டுமிராண்டி சமூகமாக மாற்றி வைத்திருக்கிறார்கள் காசு கொடுத்து ஒட்டு வாங்கும் கூட்டங்கள்.

இப்படத்தில் கோவிலில் நடைபெறும் கூத்து/மேடை நாடகத்தை மக்கள் இரவெல்லாம் விழித்திருந்து காண்பார்கள். பொதுவாகவே இத்தகைய நாடகங்கள் புராண கதைகளை மக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆடல், பாடல்களுடன் அரங்கேறும். கதாபாத்திரங்களின் உடைகள், மிரட்டலான நடிப்பு, வசனங்கள் மக்களை ஈர்ப்பதால் கூட்டமும் வரும். அப்பாவிடம் தான் வாங்கிய மெடலைக் காண்பித்து பணத்தைக் கேட்க வரும் மகன், தந்தையின் நடிப்பையும், உடையையும், ஊரார் மெச்சி அளித்த பண பரிசையும் விடிய விடிய கண்டு களிக்கிறான்.

சுப முடிவு.

திரைப்படம் என்பது நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் இருக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படமும் ஒரு உதாரணம். தமிழ் இயக்குனர்களின், மக்களின் ரசனை மாற வேண்டும். மாறினால் மட்டுமே நமக்கு இத்தகைய படங்கள் கிட்டும். இல்லையென்றால்...😭😭😭😭😭



No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...