Wednesday, February 8, 2023

வாழ்க வளமுடன்!

நேற்று ஷூ வாங்க கடைக்குச் சென்றிருந்தேன். கடைக்குள் நுழைந்து சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருக்கையில் ஒரு பெண்மணி துள்ளிக்குதித்துக் கொண்டே வேகமாக வந்து, "ஹாய் மை நேம் இஸ் சூஸன்." என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு "என்ன மாதிரியான ஷூ வேண்டும்.?" என்று கேட்டார்.

நானும், " எனக்கு உயிர்போற குதிகால் வலி. நல்ல ஷூ வேண்டும்." என்றேன்.

அவரும் பாதங்களைப் படமெடுத்து சிறிது நேரம் ஏன் குதிகால் வலிக்கிறது என்று ஒரு மருத்துவரைப் போல் படங்களை வைத்து விளக்கி விட்டு, உள்ளே சென்று ஷூக்கள் எடுத்துக் கொண்டு வருகிறேன் என்று போனார்.

நரைத்த தலைமுடி. குட்டையான உருவம். தெளிவான பேச்சு. துறுதுறு முகம். வயது 55+ ஆக இருக்கலாம். எப்படி உற்சாகமாக வேலை பார்க்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மூன்று அட்டைப்பெட்டிகளுடன் வந்தவர் ஒரு பெட்டியிலிருந்து ஷூ ஒன்றை எடுத்து லேஸ் பிரித்து, "இதைப் போட்டுப் பார்." என்றார்.

"எனக்கு இந்த கலர் பிடிச்சிருக்கு." சொல்லிக் கொண்டே வாங்கிப் போட்டு நொண்டி நொண்டி நடந்து பார்த்து, அதற்குள் அவர் இரண்டாவது, மூன்றாவதையும் பிரித்துக் கொடுக்க நானும் போட்டுப் பார்க்க...

"தேர்ந்த மருத்துவரைப் போல இத்தனை விஷயங்களைப் பேசுகிறீர்களே. அது சம்பந்தமாக படித்திருக்கிறீர்களா?" என்று அந்தப் பெண்மணியிடம் கேட்டேன்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே "நான் பயோ கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் பட்டம் பெற்றிருக்கிறேன். இருபது வருடங்கள் நியூயார்க் சுகாதாரத்துறையின் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பபாளராக இருந்து இரு வருடங்களுக்கு முன்பு தான் பணியிலிருந்து ஒய்வு பெற்றேன்." என்று ஆச்சரியமூட்டினார்!

"அப்ப கொரோனா காலத்துல நீங்க இல்லையா?"

"ஆறு மாதம் வரை இருந்தேன். அதற்கு முன்பு வெஸ்ட் நைல் வைரஸ் தொற்றுப்பரவல் , டிக் வேறு பல பூச்சிகளின் மூலம் உருவாகும் நோய்கள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்தேன். ஒய்வு பெற்றதும் 'LLBean' என்ற கடையில் துணிகளை மடித்து வைப்பது பொருட்களை வரிசைப்படுத்தி வைப்பது போன்ற வேலைகள். இங்கு சேர்ந்து ஒரு வருடம் இருக்கும். எனக்கு ஓட மிகவும் பிடிக்கும். என் அம்மா 100 வயதாக இரு வாரங்கள் இருக்கும் பொழுது தான் இறந்தார். அதுவரையில் நன்றாக ஓடிக்கொண்டு இருந்தவர். இங்கு வேலை செய்வதால் பலரையும் தினமும் சந்திக்கிறேன். எனக்கும் பிடித்திருக்கிறது."

ஓ! அந்த ஆராய்ச்சி நிறுவனத்தின் கணினியியல் துறையில் வேலை கிடைத்தும் இருமுறையும் என்னால் சேர முடியவில்லை." என்று என் அனுபவத்தையும் சொல்லி பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் கனடாவில் சாஸ்கேட்ச்சுவான் எனும் குளிர் பிரதேசத்தில் பிறந்து கால்கரியில் படித்து முடித்து அமெரிக்காவில் வந்து செட்டிலாகியிருக்கிறார். அவருடைய குழந்தைகளை ஒரு பஞ்சாபி பெண்மணி தான் வளர்த்திருக்கிறார். அவருடைய குழந்தைகள் பஞ்சாபி உணவை விரும்பி உண்பார்கள். இந்தியாவில் நான் எந்தப் பகுதியில் இருந்து வந்திருக்கிறேன் என்று கேட்டார்.

"கனடாவில் வெளிநாட்டவர்களை விரும்பி அழைத்துக் கொள்வார்கள்." அமெரிக்காவில் அப்படி இல்லை என்று சொல்லாமல் கண்ணை உருட்டினார்.

என் பெயரையும் தவறில்லாமல் உச்சரித்தார். பரவாயில்லையே என்றவுடன் அவரின் கீழ் படித்த இந்திய மாணவர்களின் பெயர்களைச் சொன்னார்.
பணம் கொடுத்து விட்டுத் திரும்புகையில் "சீக்கிரம் உனக்கு குணமாகட்டும்." என்று சிரித்தபடி வழியனுப்பி வைத்தார்.

பொதுவாகவே அமெரிக்காவில் "கஸ்டமர் கேர்" என்பது தொழிலின் அடிப்படை. அவர்கள் தான் நமக்கு மூலதனம் என்று உணர்ந்த எந்த நிறுவனமும் அவர்களைத் திருப்திப்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள பணியாட்களுக்கு பயிற்சி அளிக்கும். நான் சென்ற கடையும் ஷூக்களுக்கு மிகவும் பிரபலமானது. அதனால் தான் கொள்ளை விலையில் விற்றாலும் வாங்கி கொண்டுச் செல்ல கூட்டம் இருக்கிறது.

. மெத்த படித்தவர்கள் என்ற அகம்பாவோமோ எந்த வேலையையும் கீழ்த்தரமாக என்னும் மனோபாவமோ இல்லாது நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என்று நினைக்கும் பலரையும் அறிவேன். எந்தவித தயக்கமுமின்றி வெளிப்படையாகவே நான் இங்கு பகுதி நேரம் வேலை செய்கிறேன் என்று சொல்வார்கள். அமெரிக்கர்கள் பலரிடமும் இருக்கும் இந்த குணாதிசயம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. நம் மக்களில் பலரும் தங்களால் தான் அமெரிக்காவில் தினசரி வேலைகள் நடப்பதைப் போல் 'நான் இப்படியாக்கும் நான் அப்படியாக்கும்' என பீலா விடுவார்கள். அப்பேர்ப்பட்ட மனிதர்களிடையே வெட்டி கௌரவம் பார்க்காமல் உயர் படிப்பு படித்திருந்தாலும் ஒய்வு காலத்தில் அதற்கு சம்பந்தமே இல்லாத தனக்குப் பிடித்த வேலையைச் செய்து கொண்டு மகிழ்ச்சியாக இருந்த சூஸனிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய இருக்கிறது.


வாழ்க வளமுடன்!

When my Love blooms

'காதல்' என்னும் ஒற்றை கதைக்களத்தில் மட்டுமே பல கொரியன் தொடர்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்! எப்படி இவர்களால் மட்டுமே இப்படித் தொடர்களை வெவ்வேறு தளத்தில் இயக்க முடிகிறதோ? பேசாமல் நம் தமிழ் இயக்குனர்கள் தென்கொரியா சென்று இவர்களிடம் வகுப்புகள் எடுத்துக் கொள்ளலாம். காதல் தொடர்கள் ஒவ்வொன்றையும் வைத்து அழகான தமிழ் படத்தை இயக்கலாம். அட்ட காப்பி அடிக்கும் இயக்குனர்கள் கொரியன் தொடர்களைப் பார்ப்பது நல்லது.

'வென் மை லவ் ப்ளூம்ஸ்' தொடரில் கல்லூரியில் தொடங்கி நடுவில் தொலைந்த காதல் பின்பு ஒரு நாள் எதேச்சையாக சந்திக்கும் பொழுது மீண்டும் துளிர்க்கிறது. காதலர்கள் இருவரும் மணம் முடித்து அவரவர் பாதையில் சென்று கொண்டிருந்தாலும் ஆழ்மனதில் இருக்கும் காதல் சந்தர்ப்ப சூழ்நிலையால் எப்படி வளர்கிறது என்பது தான் கதை.

பள்ளி/கல்லூரிகளில் பலருக்கும் ஏற்படும் காதல் உணர்வைப் புரிந்து பரஸ்பரம் பரிமாறிக் கொள்வதற்குள் அடுத்த கட்டத்தை நோக்கி வாழ்க்கை நகர்ந்து "நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா?" என்று சோக ராகம் ஆறாத ரணமாய் ஓடிக் கொண்டிருக்கும். அவள்/அவன் சாயலில் வேறு ஒருவரைக் கண்டவுன் சுகமான நினைவுகளாக வந்து செல்லும் தருணங்கள் பலருக்கும் உண்டு. இப்படி வாழ்க்கையை ஒட்டிக் கொண்டிருப்பவர்கள் தான் இத்தொடரின் நாயகனும் நாயகியும்.

நாயகியைப் பற்றி அறிந்தவுடன் நாயகன் அவளைத் தொடர்ந்து கண்காணித்து ஆறுதலாக அவளுடைய சுக துக்கங்களில் பங்கு கொள்ளும் நண்பனாக இருக்க ஆசைப்படுகிறான். சமூகத்திற்குப் பயந்து அவனைப் புறம் தள்ளுகிறாள் நாயகி. அவளின் கணவனும் அவனின் மனைவியும் சேர்ந்து முன்னாள் காதலன் காதலி இருவருக்கும் தொல்லைகள் கொடுக்கிறார்கள். எப்படி மீள்கிறார்கள்? சேர்கிறார்களா? இல்லை அவரவர் வழியே பயணிக்கிறார்களா என்பது தான் கதை.

மெதுவாகச் சென்றாலும் காதலனின் காதலைச் சொல்லாமல் சொல்லும் இடங்கள் அழகு. காதலன் மேல் உயிரையே வைத்திருந்தாலும் அப்பாவின் கெடுபிடிக்குள் மாட்டிக் கொண்ட பெண்ணின் நிலைமையை எடுத்துச் சொல்வது என்று முன்னும் பின்னும் கதை சென்று வருவதை சொல்லிய விதம் சிறப்பு.

தொடர் முழுவதும் வரும் வசனங்கள் (ஆங்கில சப்டைட்டில்) அருமையாக மொழிபெயர்க்கப்பட்டு கவருகிறது. 

"Being alive itself is a sin and debt, so I cannot ever be happy nor complain. I have kept myself so busy, but I still cannot pay for the sin nor the debt. I really want a break now. I want to let it all go."

"You cannot have everything in life. If you choose one, you must give something up.

"The reason I still long for the past, even though so many years have passed, I think it is because we never properly broke up. A real breakup."

மெதுவாகச் சென்றாலும் கொரியாவின் நான்கு பருவங்கள், ஏழை பணக்கார வாழ்க்கை, கம்யூனிச போராட்டங்கள் என கலவையாகச் செல்லும் காதல் தொடர். பார்க்கலாம்.

Tuesday, February 7, 2023

Goodbye

நெட்ஃபிளிக்ஸ்ல் 'Goodbye' என்றொரு ஹிந்திப்படம் வெளியாகி உள்ளது. அமிதாப், நீனா குப்தா, ராஷ்மிகா (தெலுங்கு நடிகை) நடித்துள்ள படத்தில் பிற நடிகர்களைத் தெரிகிறது ஆனால் பெயர் தான் தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா இருவரின் பங்கும் சமமாக இருப்பினும் அம்மாவிடம் தான் பெரும்பாலும் குழந்தைகள் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்வதில் அம்மாவை மிஞ்ச முடியாது என்றாலும் அதன் பின்புலத்தில் அனைத்தையும் சாத்தியப்படுத்தும் அப்பாவின் அன்பை பெரும்பாலான குடும்பங்களில் உணர்வதில்லை. பல குடும்பங்களில் அம்மா, அப்பாவின் பங்கு நேர்மாறானதாக இருக்கும். அப்பாவிடம் நெருங்கி அம்மாவிடம் தூர இருந்து பழகும் குழந்தைகளும் இருக்கிறார்கள். 

குழந்தைகளாக அம்மா, அப்பாவின் அரவணைப்பில் வளர்பவர்கள் தங்கள் சொந்தக்காலில் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்குச் செல்ல, ஒரு சிறிய தற்காலிக விரிசல் உறவுகளில் ஏற்பட்டு விடுகிறது. தற்போதைய கால கட்டத்தில் அது அதிகமாகி இருப்பதைக் கண்கூடாகவே காண முடிகிறது. அவரவர் வேலை, படிப்பு, நண்பர்கள் தாண்டி பெற்றவர்களுடன் உறவைப் பேண நேரம் வேண்டியிருக்கிறது. ஆனால் பெற்றோர்கள் என்றுமே பெற்றோர்கள் தான். குழந்தைகள் நலமாக இருக்கவே விரும்புவார்கள். இத்தகைய சூழலில் வளரும் புரட்சிப் பெண். பழமையைக் கேள்வி கேட்டு புதுமைப்பெண்ணாக வாழ்பவள். அப்பாவிற்கும் அவளுக்கும் இடையே பனிப்போர். வேலை வேலை என்று சதா வேலையைக் கட்டி அழும் மகன் வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன். அந்தப் பெண்ணும் குடும்பத்தின் பாசத்தில் ஒட்டிக்கொள்ளபவள். அப்பா அம்மாவுடன் பாசத்துடன் வாழும் இன்னொரு மகன். தத்தெடுத்து வளர்த்த பிள்ளை. வீட்டில் வேலைக்கு வந்து சேர்ந்த பெண்ணைத் தம் மகளாக பாவிக்கும் அந்த பெற்றோர்கள் என்று வசதியான குடும்பம்.

திடீரென மாரடைப்பில் இறந்து விடும் மனைவி. அந்த விஷயத்தை தனது குழந்தைகளிடம் சொல்லத் தவிக்கும் அப்பா அமிதாப். அவரவர் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வருபவர்களின் எண்ணோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் படம். வீட்டில் எழவோ கல்யாணமோ, கூட இருந்து கவனித்துக் கொள்பவர்கள், கூடவே கொஞ்சம் கமிஷன் அடிப்பவர்கள் என்று இருக்கத்தான் செய்வார்கள். சாவு வீட்டிற்கு வருபவர்கள் இந்தக் காலத்திற்க்கேற்றபடி செல்ஃபி எடுத்துக் கொண்டும் வாட்ஸாப் குழுவில் யார் என்ன சமைத்து வருவது என்று பேசிக்கொண்டும் இருப்பது நடைமுறையில் நடப்பது தான்.

எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்றால் அது ரிஷிகேஷில் அஸ்தியைக் கரைக்க குடும்பத்துடன் செல்பவர்களுக்கு அங்கிருக்கும் புரோகிதர் சொல்லும் அருமையான விளக்கங்கள். பழமையை முழுவதும் உணராது அதைக் கேவிக் கேட்பவர்களுக்கு அவர் போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே செல்லும் அறிவுரைகள். அதில் மனம் மாறும் மகள், மகன் கதாபாத்திரங்கள். நம்முடைய இந்து வழிப்பட்டு முறைகள் பழமையாக இருந்தாலும் மிகவும் அர்த்தம் பொதிந்துள்ளதை இந்த தலைமுறையினர் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்லியவிதத்தில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் நாய் கூட அத்தனை அருமையாக நடித்திருந்தது. சில காட்சிகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.


ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...