Tuesday, February 7, 2023

Goodbye

நெட்ஃபிளிக்ஸ்ல் 'Goodbye' என்றொரு ஹிந்திப்படம் வெளியாகி உள்ளது. அமிதாப், நீனா குப்தா, ராஷ்மிகா (தெலுங்கு நடிகை) நடித்துள்ள படத்தில் பிற நடிகர்களைத் தெரிகிறது ஆனால் பெயர் தான் தெரியவில்லை. ஒரு குடும்பத்தில் அம்மா, அப்பா இருவரின் பங்கும் சமமாக இருப்பினும் அம்மாவிடம் தான் பெரும்பாலும் குழந்தைகள் நெருங்கிப் பழகும் வாய்ப்புகள் அதிகம். குழந்தைகளுக்குப் பார்த்துப் பார்த்துச் செய்வதில் அம்மாவை மிஞ்ச முடியாது என்றாலும் அதன் பின்புலத்தில் அனைத்தையும் சாத்தியப்படுத்தும் அப்பாவின் அன்பை பெரும்பாலான குடும்பங்களில் உணர்வதில்லை. பல குடும்பங்களில் அம்மா, அப்பாவின் பங்கு நேர்மாறானதாக இருக்கும். அப்பாவிடம் நெருங்கி அம்மாவிடம் தூர இருந்து பழகும் குழந்தைகளும் இருக்கிறார்கள். 

குழந்தைகளாக அம்மா, அப்பாவின் அரவணைப்பில் வளர்பவர்கள் தங்கள் சொந்தக்காலில் பிழைப்புத் தேடி வெளியூர்களுக்குச் செல்ல, ஒரு சிறிய தற்காலிக விரிசல் உறவுகளில் ஏற்பட்டு விடுகிறது. தற்போதைய கால கட்டத்தில் அது அதிகமாகி இருப்பதைக் கண்கூடாகவே காண முடிகிறது. அவரவர் வேலை, படிப்பு, நண்பர்கள் தாண்டி பெற்றவர்களுடன் உறவைப் பேண நேரம் வேண்டியிருக்கிறது. ஆனால் பெற்றோர்கள் என்றுமே பெற்றோர்கள் தான். குழந்தைகள் நலமாக இருக்கவே விரும்புவார்கள். இத்தகைய சூழலில் வளரும் புரட்சிப் பெண். பழமையைக் கேள்வி கேட்டு புதுமைப்பெண்ணாக வாழ்பவள். அப்பாவிற்கும் அவளுக்கும் இடையே பனிப்போர். வேலை வேலை என்று சதா வேலையைக் கட்டி அழும் மகன் வெளிநாட்டுப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டவன். அந்தப் பெண்ணும் குடும்பத்தின் பாசத்தில் ஒட்டிக்கொள்ளபவள். அப்பா அம்மாவுடன் பாசத்துடன் வாழும் இன்னொரு மகன். தத்தெடுத்து வளர்த்த பிள்ளை. வீட்டில் வேலைக்கு வந்து சேர்ந்த பெண்ணைத் தம் மகளாக பாவிக்கும் அந்த பெற்றோர்கள் என்று வசதியான குடும்பம்.

திடீரென மாரடைப்பில் இறந்து விடும் மனைவி. அந்த விஷயத்தை தனது குழந்தைகளிடம் சொல்லத் தவிக்கும் அப்பா அமிதாப். அவரவர் வேலையை விட்டுவிட்டு வீட்டிற்கு வருபவர்களின் எண்ணோட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் தான் படம். வீட்டில் எழவோ கல்யாணமோ, கூட இருந்து கவனித்துக் கொள்பவர்கள், கூடவே கொஞ்சம் கமிஷன் அடிப்பவர்கள் என்று இருக்கத்தான் செய்வார்கள். சாவு வீட்டிற்கு வருபவர்கள் இந்தக் காலத்திற்க்கேற்றபடி செல்ஃபி எடுத்துக் கொண்டும் வாட்ஸாப் குழுவில் யார் என்ன சமைத்து வருவது என்று பேசிக்கொண்டும் இருப்பது நடைமுறையில் நடப்பது தான்.

எனக்கு மிகவும் பிடித்த காட்சி என்றால் அது ரிஷிகேஷில் அஸ்தியைக் கரைக்க குடும்பத்துடன் செல்பவர்களுக்கு அங்கிருக்கும் புரோகிதர் சொல்லும் அருமையான விளக்கங்கள். பழமையை முழுவதும் உணராது அதைக் கேவிக் கேட்பவர்களுக்கு அவர் போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே செல்லும் அறிவுரைகள். அதில் மனம் மாறும் மகள், மகன் கதாபாத்திரங்கள். நம்முடைய இந்து வழிப்பட்டு முறைகள் பழமையாக இருந்தாலும் மிகவும் அர்த்தம் பொதிந்துள்ளதை இந்த தலைமுறையினர் உணரும் வண்ணம் எடுத்துச் சொல்லியவிதத்தில் இப்படம் வெற்றி பெற்றுள்ளது. படத்தில் நாய் கூட அத்தனை அருமையாக நடித்திருந்தது. சில காட்சிகள் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.


No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...