Wednesday, January 25, 2023

5. உத்தரகாசி

 

எங்களது சமீபத்திய கங்கையை நோக்கிய பயண அனுபவம் 'சொல்வனம்' இதழில் கட்டுரைத் தொடராக வெளிவருகிறது.

உத்தரகாசி

யமுனோத்ரி சென்று “மா யமுனா”வைத் தரிசித்த மறுநாள் காலையில் அடுத்த ஆறு-ஏழு மணிநேர பயணத்திற்குத் தயாரானோம். நாங்கள் தங்கியிருந்த குடிலின் முன் பாய்ந்தோடிக் கொண்டிருந்த யமுனை ஆற்றின் கரையோரம் கடைசியாக மீண்டும் ஒருமுறை நடந்து செல்கையில் “சாலை கூட சரியாக இல்லாத, வசதிகள் குறைந்த இந்த இடத்தில் போய் எங்களை ஏன் தங்க வைத்தீர்கள்?” என்று இருநாட்களுக்கு முன்பு பயண முகவருடன் ஏகத்திற்குச் சண்டை போட்டது ஞாபகத்திற்கு வந்தது. அவரும், “நீங்கள் கேட்ட மாதிரி இயற்கைச் சூழலுடன் அமைதியான இடத்தில் தான் இருக்கிறது. உங்களுக்குப் பிடிக்கும். முதலில் சொன்ன இடம் எத்தனை முயன்றும் கிடைக்கவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள். இனி இருக்கப் போகும் இடங்கள் எல்லாம் உங்களுக்கு மிகவும் பிடிக்கும்,” என்று சொன்னாலும், “நீங்கள் கொடுத்த பணத்திற்குச் சரியான இடத்தில் உங்களைத் தங்க வைக்கவில்லை” என்று டிரைவர் வேறு ஏற்றி விட்டதால் எங்கே ஏமாந்து விட்டோமோ என்று கூட தோன்றிற்று. அப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்பதனால் தானே தனியாரிடம் சென்று பயணத்திட்டத்தைப் போட்டோம் என்று கோபப்பட்டோம். ஆனால் இத்தனை அருகில் ஓடும் ஆறு. 12 குடில்களில் பயணிகள் யாருமற்று நாங்கள் மட்டுமே தனியாக இருந்த நாட்களும் மிக நன்றாக மறக்கமுடியாத அனுபவமாக இருந்தது. தாராளமாக மக்கள் இங்கே பயமின்றி தங்கலாம்.

டெல்லி வந்து இறங்கிய நாள் முதல் மழையும் கருமேகங்களும் மட்டுமே பார்த்த கண்களுக்கு அன்றைய காலையில் மழை மேகங்கள் இன்றி நீலவானில் சூரிய பகவானின் வரவு புத்துணர்ச்சியை அளித்தது. தாத்தா தேநீர் கொடுத்து விட்டு காலை உணவு விரைவில் தயாராகி விடும் என்று சொல்லி விட்டுச் சென்றார். நாங்களும் தயாராகி எங்களுடைய இரண்டு பெட்டிகளையும் இரண்டு சிறிய பெட்டிகளையும் வெளியில் எடுத்து வைத்தோம். சுடச்சுடப் பூரி, சன்னா மசாலா, அங்கு விளையும் காய்கறிகளைக் கொண்டு செய்த ‘ஆச்சார்’ என்று தாத்தா அமர்க்களப்படுத்தியிருந்தார். பெரிய உணவகம் போலன்றி வீட்டுச் சாப்பாடு போல எளிமையாக இருந்தாலும் உடலுக்கு ஒத்துக்கொள்ளும் உணவே பிரயாணங்களில் மிக முக்கியம். தங்குமிடத்தில் சில அசௌகரியங்கள் இருந்த போதிலும் இந்த இடம் எங்களுக்குப் பிடித்து விட்டது. தனிமை விரும்பிகளுக்கு ஏற்ற இடம். தாத்தா பெட்டிகளை வண்டியில் ஏற்ற அவருக்கு நன்றியைக் கூறி சிறிது அன்பளிப்பையும் வழங்கி விடைபெற்றோம். இந்த முறை மரியாதையாக நாங்கள் நடந்தே அந்த சாய்வு சாலையில் மேலேற, பெட்டிகளுடன் வண்டியை எடுத்துக் கொண்டு அசோக்குமார்ஜியும் வந்து விட்டார்.

முன் தினம் நதிக்கரையோரம் சந்தித்த மனிதர்கள் வாழும் கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றவுடன் அதற்குத் தனி கட்டணம் என்று டிரைவர்ஜி சொல்ல, நாங்களும் ஒத்துக்கொண்டோம். எங்கள் பயணத்திட்டத்திலிருந்து சிறிது விலகி வேறு ஊர்களுக்குச் செல்ல விரும்பினால் அதற்குத் தனிக் கட்டணம் என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள். ஒரு வண்டி செல்லும் அளவே இருந்த மலைப்பாதையில் வழியெங்கும் வண்ண வண்ண பூக்கள் பூத்திருந்தது கொள்ளை அழகு. வளைந்து வளைந்து செல்லும் பாதையில் மேலேறிச் சென்று கொண்டிருந்தோம். கிராமம் மட்டும் கண்ணில் படவேயில்லை. நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் நல்ல உயரத்தில் அந்த ஊர் இருந்தது! நேற்று இத்தனை தொலைவிலிருந்து வந்திருந்தார்களா அந்த மக்கள்! அவர்களில் சிலர் நடந்து வேறு சென்றார்களே! அடேயப்பா!

வழியில் ஒரு பள்ளி/கல்லூரி வளாகம் ஒன்றைக் கடந்து வந்தோம். மாணவ, மாணவியர்கள் சிலர் வாசலில் நின்று அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். பல கிலோமீட்டர்கள் நடந்தே பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களைப் பார்க்கும் பொழுது தான் நகரத்தில் வாழும் நாம் அனுபவிக்கும் பல சலுகைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது! இந்தப் பகுதிகளில் இரு சக்கர மோட்டார் வாகனங்கள், பலரையும் ஏற்றிச் செல்லும் வேன்களைப் போக்குவரத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள். புல்கட்டைச் சுமந்து செல்லும் பெண்கள், மேய்ச்சலுக்கு கால்நடைகளை அழைத்துச் செல்பவர்கள் என்று ஓரிருவர் வழியில் தென்பட அவர்களிடம் கோவில் எங்கிருக்கிறது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு வண்டியிலிருந்து இறங்கி குறுக்கு வழியில் நடந்து ஊருக்குள் சென்றோம். நிற்காமல் குழாயில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்க, ஒருவர் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தார். நிமிர்ந்து பார்த்து சினேகப்புன்னகை உதிர்த்து மேலேறிச் செல்லுமாறு வழி கூறினார்.

சாணி, சகதி சூழ்ந்த இடத்தில் மொய்க்கும் ஈக்களையும் முதுகு மேல் அமர்ந்திருந்த பறவையையும் கண்டுகொள்ளாமல் அசை போட்டுக் கொண்டிருந்த கால்நடைகளைக் கடந்து சென்றால் பச்சை, மஞ்சள் வண்ணம் பூசிய எளிமையான மலைப்புற வீடுகள். வீட்டு வாசலில் வேலை செய்து கொண்டிருந்த பாட்டியிடம் சிறிது நேரம் “பேசினேன்”!!! அவரும் பொக்கைவாய்ச் சிரிப்பில் பதில் சொன்னார். எனக்குத் தான் புரியவில்லை. ‘சும்மா இருப்பது எப்படி?’ என்று அவர் எதிர் வீட்டுத் தாத்தாவிடம் கேட்டால் நிறைய பதில்கள் தருவார் போல! எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டார்கள். தெருக்கள் என்று இல்லை. ஒற்றையடிப்பாதையில் மேலேறிச் சென்றால் சிறிதும் பெரிதுமாக நெருக்கமாக வீடுகள். பல அறைகள் கொண்ட வீடுகளில் இரண்டு மூன்று குடும்பங்கள் தங்கியிருப்பது போல இருந்தது.

கோவிலைத் தேடி வந்திருக்கிறோம் என்றவுடன் வீட்டு வாசலில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள், சிறுவர்கள் என்று சிறு பட்டாளம் அங்கே ஒன்று கூடியது. பெண்கள் அவரவர் வீட்டு மாடியிலிருந்து எங்களை ‘ஏலியன்கள்’ போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். கூட்டத்திலிருந்த ஒருவர் “நேற்று உங்களை ஆற்றோரம் பார்த்தோம்” என்று கொஞ்சும் ஆங்கிலத்தில் பேசி அதிசயிக்க வைத்தார்! “எங்கள் ஊருக்கு வந்ததற்கு நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறி சில படங்களையும் எடுத்து கொடுத்தார். அந்த ஊரின் பெயர் ‘டக்ஹ்யத் காவுன்'(Dakhyatgaun). படிப்பறிவு குறைந்த பெரியவர்களும் பள்ளிக்குச் செல்லும் சிறுவர்களும் என மிகச் சிறிய கிராமம். விவசாயமும் கால்நடைகளைப் பராமரிப்பதுமே முக்கியமான தொழிலாக இருக்கிறது. தெருவோரத்தில் சுவர்கள் சூழ இரு குழாய்களில் தண்ணீர் அமோகமாக கிடைக்கிறது. அழகர்மலை தீர்த்தம் போல அத்தனை சுவையாக! கொடுத்து வைத்தவர்கள்! அங்கேயே குளிக்கிறார்கள். வீட்டுப் பயன்பாட்டுக்குத் தண்ணீரை எடுத்துச் செல்கிறார்கள். மலையில் ஏறி இறங்கி கடினமான வேலைகளை செய்து திடமான உடற்கட்டுடன் அவர்களைப் பார்க்க கொஞ்சம் பொறாமையாகத் தான் இருந்தது! பெண்கள் கடின உழைப்பாளிகளாகத் தெரிந்தார்கள். தலையை முழுவதும் மூடி அந்த சீதோஷணத்திற்கு ஏற்ற உடைகளில் எந்தவித ஒப்பனைகளும் இல்லாமலே இயற்கை அழகுடன் கவர்ந்தார்கள். ‘சும்மா இருத்தல்’ என்ன என்று அங்குச் சோம்பி உட்கார்ந்து இருந்த வயதான ஆண்களைப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அதே வயதுப் பெண்கள் வேலைகளைச் செய்து கொண்டிருந்தார்கள்! ம்ம்ம்…

இந்தச் சிறிய ஊரில் இருக்கும் இரண்டு சிவன் கோவில்களை முன்தினம் நாங்கள் சந்தித்த சென்னை எம்ஐடியில் படித்தவரும் அவருடைய மனைவியும் நிர்வகித்து வருகிறார்கள். நவராத்திரி முதல் நாள் என்பதால் ‘ஜெய் தத்தேஷ்வர் மஹாதேவ்’ கோவிலில் பூஜையை முடித்து விட்டு அவர் மற்றொரு கோவிலில் இருந்தார். நேரமின்மை காரணமாக அந்தக் கோவிலுக்குச் செல்ல முடியவில்லை. நாங்கள் சென்றிருந்த அழகான சிறிய சிவன் கோவிலில் இருந்து சுற்றுப்புற மலையின் அழகும், விளைநிலங்களும், துள்ளியோடும் யமுனா ஆறும், விவசாய நிலங்களும், சிலேட்டுக்கூரைகள் கொண்ட வீடுகளும் என்று வித்தியாசமான சூழல் கண்ணுக்குக் குளிர்ச்சியாகத் தெரிந்தது. பார்க்க கொண்டைப்பூ போல இருந்த மலர்கள் மலையில் ஆங்காங்கே பூத்து மேலும் அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தது.

அவர்களிடமிருந்து விடைபெறும் பொழுது தேநீர் அருந்தி விட்டுச் செல்லலாமே என்று பாட்டி சிரித்துக் கொண்டே கேட்க, நன்றியுரைத்து விடைபெற்றோம். அவர்களிடம் இருந்த வெள்ளந்தித்தனமும் அமைதியும் இயற்கையோடு ஒன்றிய வாழ்வும் முகத்தில் தவழ்ந்த புன்னகையும் அங்கிருந்த சில மணிநேரங்களில் அவர்களைப் பற்றின என்னுடைய கணிப்பு, ‘இருப்பதைக் கொண்டு நிறைவாக வாழ்’ என்பதாக இருந்தது. நாம் கடந்து வரும் மனிதர்களிடமிருந்து கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை விஷயங்கள் இருக்கிறது! ‘மினிமலிசம்’ பற்றிப் படித்துத் தெரிந்து கொள்ளும் நகர மாந்தர்களுக்கிடையில் படிக்காமலே அப்படி வாழ்கிறார்கள் இந்த மலைப்புற மக்கள்! இல்லாத போது தான் இருப்பதைக் கொண்டு நிம்மதியாக வாழ்வோமோ என்னவோ! நகர வாழ்க்கையில் நித்தம் ஒரு பிரச்சினையுடன் போராடும் மக்களால் இப்படி சில நிமிடங்களாவது அமைதியாக இருக்க முடியுமா? அதையும் காசு கொடுத்துத்தான் கற்றுக்கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலையில் இருக்கிறோம் என்பது தான் முகத்திலறையும் உண்மை! இங்கே இவர்கள் குழுவாக வாழ்கிறார்கள். ஒருவருக்கு ஒன்று என்றால் ஊரே கூடி விடும் போல அத்தனை நெருக்கமாக இருக்கிறது வீடுகள்! “இகிகை” புத்தகத்தில் கூறியது போல இப்படி வாழ்வது தான் நீண்ட ஆயுளையும் மகிழ்ச்சியையும் நிறைவான வாழ்க்கையையும் தரவல்லதோ? இக்கரைக்கு அக்கரைப் பச்சை என்பது இதுதானோ? என்று பலவற்றை யோசித்துப் பேசிக்கொண்டே எங்கள் பயணம் உத்தரகாசியை நோக்கித் தொடர்ந்தது.

புண்ணியத்தலங்களுக்குச் சென்று வரத் திட்டமிடுகையில் எங்களுடைய பயணம் மலைப்பாதை வழியாகச் செல்லும் என்று தெரிந்திருந்தாலும் இப்படி வளைந்து நெளிந்து பல மலைகள் ஏறி இறங்கிச் செல்லும் கடினமான ஒன்று என்று நாங்கள் அறிந்திருக்கவில்லை. அதுவும் ஓரிடத்திலிருந்து இன்னொரு கோவிலுக்குச் செல்ல குறைந்தது ஐந்தாறு மணிநேர பயணங்கள். தொடர் மழையால் மலைச்சரிவுகளும் உருண்டு வரும் சிறு பாறைகளும் குறுகிய சாலைகள் உடைபட்டுக் கிடந்ததும் எங்கள் பயணத்தை நினைத்தபடி முடித்துவிடுவோமா என்று ஒவ்வொரு நாளும் யோசிக்க வைத்தது.

பர்கோட்டிலிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் உத்தரகாசி, உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள புராதன நகரம். கங்கோத்ரி செல்ல இதன் வழியே தான் செல்ல வேண்டும் என்பதால் யாத்திரிகர்கள் பலரும் தங்கிச் செல்லும் இடமும்கூட . சில பல மலைகள் கீழிறங்கி மீண்டும் சில மலைகள் மீதேறி வளைந்து சென்று கொண்டிருந்த பயணத்தில் இரண்டு மணி நேரத்தில் ‘மேகர்கவ்’ என்ற ஊரிலிருந்த ‘ஷிவ் குஃப்’ என்னும் சிவன் குகைக்கு வந்து சேர்ந்தோம்.

150மீட்டர் உயரத்தில் உள்ள கோவிலுக்குச் செல்ல படிகள் அமைத்திருந்தாலும் செங்குத்தான பாதையில் செல்வதால் கொஞ்சம் கடினமானதாகத்தான் இருக்கிறது. அதுவும் மழை பொழிந்து வழுக்கலான படிகளில் ஏறுவதால் நிறைய கவனம் வேண்டியிருந்தது. என்னைப் போலவே பலர் சிரமப்பட்டு ஏறிக்கொண்டிருந்தார்கள். வழியில் அங்கு வாழும் சிறுவர்கள் மிட்டாய், சாக்லேட் கேட்டுப் பின்வருகிறார்கள். என் கையிலிருந்த மிட்டாயை அவர்களுக்கும் கொடுத்தேன். மலை ஏறுகையில் எப்பொழுதும் ஆரஞ்சுப்பழங்களோ மிட்டாய்களோ எடுத்துச் செல்வது என் வழக்கம். வழியில் சிறு சிறு அருவிகள் இரைச்சலுடன் பாய்ந்து செல்வதைப் பார்க்க அழகாக இருந்தது. நடுநடுவே மக்கள் சிறிது இளைப்பாறி ஏறிச்சென்று கொண்டிருந்தார்கள். இறங்குபவர்கள் சிலர், ” மிக அற்புதமான கோவில். கஷ்டப்பட்டாவது ஏறிச்சென்று விடுங்கள்” என்று ஆவலைக் கூட்டினார்கள்.

அங்கே சென்றால் நீண்ட வரிசை. தமிழில் சிலர் பேசுவதைக் கேட்க, ‘ஆகா! நம் மக்கள் வந்திருக்கிறார்களே’ என்று ஆனந்தமாக இருந்தது. ஒரு வயதான மாமாவும் மாமியும் அருவி தீர்த்தத்தின் அருகில் படம் எடுத்துக் கொள்ள திணறிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உதவ, “நீங்களும் தமிழ் பேசுவேளா? ரொம்ப நன்றி!” என்று கூறி விட்டுச் சென்றார்கள். நன்றாக மேக்கப் போட்டுக் கொண்டிருந்த வட இந்தியக் குடும்பம் ஒன்று எங்களுக்குப் பின் நிற்க, முன்னால் சென்னை மாம்பலத்திலிருந்து வந்த குழுவினர் நின்று கொண்டிருந்தார்கள். தனியே ஒரு பேருந்தில் பயணித்து கூடவே சமையலுக்கு ஆட்களையும் அழைத்து வந்திருந்தார்கள். அவர்கள் தனி வேனில் ஓரிடத்தில் சமைக்கச் சென்று விட்டார்களாம். இங்கே தரிசனம் முடிந்த பிறகு சுடச்சுடச் சாப்பாடு கிடைக்கும் என்று பசியுடன் இருக்கும் எங்களை நன்றாக ஏற்றி விட்டார்கள். ஒரு சில நடுத்தர வயதினரைத் தவிர எல்லோருமே ஓய்வு பெற்றவர்களாகத் தெரிந்தனர். அவர்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர்களாக ஒரே தெருவில் பழகியவர்களாக இருந்ததைக் கண்டு அதிர்ஷ்டசாலிகள் என்று தோன்றியது. ஓய்வு பெற்ற பின்னர் நண்பர்களுடன் உறவினர்களுடன் புண்ணியதலங்களுக்குச் சென்று வருவது பெரும்வரம் தான். அனைவருக்கும் சாத்தியமில்லை என்றாலும் அப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியசாலிகள் தானே? அவர்களும் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று கேட்டு சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்குள் வரிசையும் சிறிது நகர, கோவிலின் முன்மண்டபத்தில் நின்றுகொண்டிருந்தோம்.

சுவரில் சிவன், சக்தி உருவங்களை வரைந்திருந்தார்கள். கோவில் என்றால் இப்படித்தான். சிவன், சக்தி என்றால் இப்படித்தான் என்று பார்த்துப் பழகிய கண்களுக்கும் மனதிற்கும் அந்தச் சித்திரங்கள் சிறுபிள்ளைத்தனமாகத் தெரிந்ததில் வியப்பேதுமில்லை. ஈஷ்வரும் “நாம் அப்படியொரு பிம்பத்தை மனதில் உருவாக்கி வைத்திருக்கிறோம். இவர்களுக்கு அப்படி அல்ல. மனிதர்களைப் போலவே கடவுளையும் பார்க்கிறார்கள். அதனால் தான் இப்படி வந்திருக்கிறார்கள்.” என்றார். இருக்கலாம்.

இந்த “பிரகதீஷ்வர் பஞ்சனன் மஹாதேவ்” குகைக் கோவிலை 1998 வருடம் தான் கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்று பலரும் வந்து செல்லும் பிரபலமான கோவில் ஆக இருக்கிறது. கரடுமுரடான கற்கள் நிறைந்த குகைக்குள் உள்ளே இறங்கிச்செல்லவும் வெளியில் வரவும் கொஞ்சம் சிரமம் தான். கீழே உட்கார்ந்து மெதுவாக இறங்கினால் குகையில் நீர் வழிய சுண்ணாம்புப்பாறைகள். அது சிவலிங்கம் போலவும், விநாயகர், ஹனுமான், திரிசூலம் போல காட்சி தருவதால் இதிலும் ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனின் திருவுருவைக் கண்டு மக்கள் பரவசத்துடன் வணங்குகிறார்கள். அங்கிருந்த அர்ச்சகர் விளக்கேற்றிப் பூஜைகள் செய்தார். மேலேற தவழ்ந்து வர வேண்டியிருக்கிறது. “முட்டி பத்திரம்” என்று எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். சிராய்ப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதிக எடை உள்ளவர்கள் உள்ளே சென்று வருவது பெருஞ்சிரமம் தான். வெளியில் வந்தவுடன் சிலுசிலு மலைக்காற்றும் காலை வருடிச்செல்லும் நீரோடையும் இதமாக இருந்தது. ‘சிவசிவ’ என்று அவனை நினைத்துக் கொண்டே படிகளில் இறங்கினோம். கோவிலின் கீழே வரிசையாக காய்கறி, பழக்கடைகள் இருந்தன. பெரும்பாலும் அங்கே மலைகளில் இயற்கை விவசாயத்தில் விளையும் ஒரு சில காய்கறிகள். ஆப்பிள் பழங்கள் மட்டுமே இருந்தது. லெமன் சோடா பிரபலம் என்று நினைக்கிறேன். நன்றாக வியாபாரம் லாஜிக் கொண்டிருந்தது. குடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவர்கள் பயன்படுத்திய தண்ணீரைப் பார்த்து கலக்கமாகி விட்டது. சூடாக ஆலு பரோட்டா, சமோசா இத்யாதிகளையும் விற்றுக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்து கிளம்பும் பொழுது மணி பகல் இரண்டாகியிருந்தது.

அதுவரையில் ஒழுங்காக இருந்த சாலைப்பயணம் இப்பொழுது மலைச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட பாதையில் செல்ல வேண்டிய அவஸ்தையான பயணமாகிப் போனது. ஜேசிபி எந்திரங்கள் மூலமாக பாறைகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீர்படுத்திக் கொண்டிருக்க, பல வளைவுகள் பயணித்து கீழே இறங்கிக் கொண்டிருந்தோம். வழியில் புதிதாக அழகான பாலமும் சுரங்கப்பாதையையும் கட்டியிருக்கிறார்கள். கண்ணுக்குக் குளிர்ச்சியாக விவசாய நிலங்களும், கூடவே சாம்பல் நிறத்தில் பவனி வரும் ‘பாகீரதி’ ஆறும் மனதிற்கு அமைதியைத் தந்தது. சிறிய அழகிய வண்ணமயமான மலைக்கிராமம் தெரிந்தது. ஒரு மணிநேரத்தொலைவில் வரிசையாக வண்டிகளை நிறுத்திப் பலரும் அங்கிருந்த கடைகளில் மதிய உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தரசு (Dharasu) என்ற ஊரில் செலவிற்குப் பணத்தை எடுக்க ஏடிஎம் இயந்திரத்தைத் தேடிக் கொண்டுச் சென்றோம். குட்டி ஊர். பலவிதமான கடைகள் இருந்த தெருவில் நல்ல கூட்டம். உதட்டுச்சாயம் அணிந்த மெல்லிடைப் பெண்கள் நேர்த்தியாக உடையணிந்து சென்று கொண்டிருந்தார்கள். திருமணமான பெண்கள் வகிடு நிறைய குங்குமம் வைத்துக் கொண்டு ‘பளிச்’ என தெரிந்தார்கள். வழியில் பஞ்சாப் தேசிய வங்கி ஒன்றும் அதன் அருகே ஏடிஎம் மெஷினும் இருக்க, பணத்தை எடுத்துக் கொண்டோம். சந்தையில் சில பழங்களையும் வாங்கிக் கொண்டு தொடர்ந்தது எங்கள் பயணம். நான்கு மணியளவில் பாகீரதி நதிக்கரையில் அமைந்துள்ள உத்தரகாசி நகரில் இருக்கும் காசிவிஸ்வநாதர் கோவிலுக்கு வந்து சேர்ந்தோம்.

சுற்றிலும் பச்சைப்பசேல் மலைகளை கருமேகங்கள் நெருங்குவதும் விலகுவதுமாய் ரம்மியமாகக் காட்சி தர, சமீபத்திய பெரு மழையினால் வண்டிகள் நிறுத்துமிடம் சகதிகளுடன் சொதசொதவென்று இருக்க, தினம்தினம் ஆயிரக்கணக்கில் கோவிலுக்கு வந்து செல்பவர்கள் கடந்து செல்ல வேண்டிய பாதையைச் செப்பனிட்டுப் பராமரிக்க வேண்டாமா? மழை ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் அரசின் அலட்சியமும் மெத்தனப்போக்கும் தான் பெரும் காரணம். இல்லையென்றால் கோவில் இருக்கும் இடத்தை இப்படிப் போட்டு வைத்திருப்பார்களா? வண்டியைச் சகதி இல்லாத ஓரத்தில் நிறுத்த நாங்கள் இறங்கிக் கொண்டோம். இப்படியா? நடந்து செல்லவே பயமாக இருக்கிற நிலையில் வைத்திருப்பார்கள் என்று கோபமாக வந்தது.

வண்டி நிறுத்தத்திலிருந்து ஐந்து நிமிட நடையில் ஒரு சிறிய சந்தில் கோவில் இருக்கிறது. தெருவுக்குள் நுழையும் பொழுதே அங்கிருந்த கல்லூரியிலிருந்து “வந்தே மாதரம்” என்று ஒருமித்த குரலில் மாணவர்கள் முழங்கும் கோஷம் காதுகளை இனிமையாக்கியது. ஏன் ? நம் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் தினமும் ‘வந்தே மாதரம்’ சொல்லி நாளை ஆரம்பிக்கக்கூடாது என்று எண்ணிக் கொண்டே வழியிலிருந்த கடைகளைத் தாண்டி கோவிலுக்குள் காலடி எடுத்து வைத்தோம். நாங்கள் சென்றிருந்த நேரத்தில் கூட்டம் இல்லாததால் அமைதியாக இருந்ததது கோவில்.

வாரணாசியின் வடக்கே அமைந்துள்ள இந்தச் சிவ தலம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. தன் பாவங்கள் தீர, பரசுராமர் இங்கு தவம் புரிந்ததாக மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது. மார்க்கண்டேய முனிவர் எம தர்மனிடமிருந்து தன் உயிரைக் காத்துக் கொள்ள, சிவனை நோக்கி இங்கே தவம் புரிந்ததாகவும் ஐதீகம். சிறிது சாய்ந்த நிலையில் இருக்கும் பெரிய சிவலிங்கத்திற்கு நாமே அபிஷேகம் செய்து வழிபட முடிகிறது. அர்ச்சனைப் பொருட்களுடன் சென்றால் பூஜைகள் செய்து தருகிறார்கள். நந்தி சன்னிதியில் அமர்ந்து சிலர் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். சிறிய இடம் தான். கூட்டம் இல்லாததால் அது சாத்தியமாயிற்று. வரிசையாக நின்று நிம்மதியாக இறைவனை வழிபட முடிவது எத்தனை பெரிய வரம்? எங்கும் ‘சிறப்பு தரிசன’ கட்டண வசூலிப்புகள் இல்லை. இவையெல்லாம் என்று தமிழகத்தில் சாத்தியப்படுமோ? சுற்றுச் சுவர்களில் ஜோதிர்லிங்க கோவில்களை வரைந்திருந்தார்கள். இங்கும் பழமையான கோவில் கோபுரம் மனதைக் கவர்ந்தது.

சிவனின் சன்னிதிக்கு எதிரே சக்தி பீடம். அங்கே 1500 வருடங்களுக்கும் பழமையான, ஆறு மீட்டர் உயரமும் 90 சென்டிமீட்டர் அகலமும் கூரை அளவிற்கு உயர்ந்த திரிசூலம் உள்ளது. மகிஷாசுரனை வதைத்த திரிசூலம் என்பது ஐதீகம். திரிசூலம் முழுவதும் சிகப்பு வண்ணத் துணிகளால் பக்தர்களால் சுற்றப்பட்டு இருந்தது. குங்குமம் அர்ச்சித்த அழகான தேவியின் திருவுருவம். விசாலமான கோவில். அரசமரத்தின் கீழ் விநாயகர், ஆஞ்சநேயர், மார்க்கண்டேயர் சன்னிதிகள் இருக்கிறது. யாக குண்டமும் இருந்தது. பக்தர்கள் இளைப்பாறிச் செல்ல வசதிகள் செய்திருக்கிறார்கள். காவல்துறையினர் சிலர் அங்கே பணியில் இருந்தார்கள். வயதான பெண்கள் வரிசையாக அமர்ந்து பிச்சையெடுத்துக் கொண்டிருந்தது தான் மனதை வருத்தியது. யாரைப் பற்றியும் கவலைப்படாமல் ‘பைரவர்கள்’ ஹாயாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். கோவிலுக்குச் சென்று வந்தால் கிடைக்கும் மனநிம்மதியுடன் வெளியேறினோம்.

வண்டியில் ஏறி, நகர்ப்புற நெரிசலைத் தாண்டிச் சென்று கொண்டே இருந்தோம். வழியில் பல தங்கும் விடுதிகள் இருந்தாலும் இந்த பயண முகவர் சொன்ன இடம் மட்டும் கண்ணில் தென்படவே இல்லை. இப்படியே சென்று கொண்டிருந்தால் ஆற்றில் தான் இறங்க வேண்டும் என்று நினைக்கையில் ஊரை விட்டுச் சிறிது தொலைவில் இருந்தது நாங்கள் தங்கியிருந்த ‘சிவலிங்க ரிசார்ட்’ . வண்டியை நிறுத்தியவுடன் விடுதி சிப்பந்திகள் பெட்டிகளை எடுத்துக் கொண்டுச் சென்று விட்டனர். நல்ல பெரிய தங்கும் விடுதி. அறையும் பெரிதாக ஓகே ரகம் தான். பிரீமியம் என்று சொன்னாலும் ஓரளவுக்குத் தான் நன்றாக இருக்கிறது! தேநீர் சாப்பிடலாம் என்று விடுதி உணவகத்திற்குச் சென்றோம்.

அங்கே நான்கு பெண்களைப் பார்க்க தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் போல இருந்தார்கள். மலேசியாவிலிருந்து வந்திருந்தார்கள். பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டோம். ஹரித்வாரில் இப்படித்தான் ஒரு குழுவைச் சந்தித்தோம். இவர்கள் இரண்டாவது. ஒவ்வொரு வருடமும் மலேசியாவிலிருந்து பல குழுக்களாக இந்தியாவிற்கு வருகிறார்கள். தாய்நாட்டை விட்டுப் பிரிந்து பல தலைமுறைகளாக மலேஷியாவில் வாழ்ந்தாலும் இந்தியாவில் உள்ள புண்ணியத்தலங்களுக்குத் தவறாமல் செல்கிற அவர்களைப் பார்த்து பொறாமையாகவும் பெருமையாகவும் இருந்தது. தீவிர சைவர்கள். அவர்களில் ஒருவர் மதுரைக்குச் சென்று வந்த இனிய அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய மகளுக்கும் மிகவும் பிடித்த கோவில் என்றார். ‘மதுரை அழகி’ என்றால் சும்மாவா? அவர்களில் ஒரு 70 வயதுப் பாட்டி பார்க்க துறுதுறுவென்று இருந்தவர் யமுனோத்ரி கோவிலுக்கு நடந்தே சென்றிருக்கிறார். படா பாட்டி! என்று பாராட்டினேன். கேரளா பூர்விகம் என்றாலும் தற்போது யாரையும் அங்கு தெரியாது என்றவர் தமிழில் நன்றாகப் பேசினார். கேதார்நாத் கோவிலுக்கும் எட்டு மணிநேரம் நடந்தே மலையேறிச் செல்ல இருப்பதாகக் கூறி அசத்தினார்! இப்படியும் மக்கள் இருக்கிறார்கள்! “சுற்றுலாப் பேருந்தில் யமுனோத்ரி சென்று வந்த அனுபவத்தை மறக்கவே முடியாது. பாதி நேரம் கண்களை மூடித்தான் பயணித்தோம். திருப்பங்களில் ஒரு பக்கம் ‘கிடுகிடு’ பள்ளம். கீழே ஓடிக்கொண்டிருக்கும் யமுனா ஆறு. மறுபக்கம் மலைகள். அப்பப்பா!” என்று கூற நாங்களும் ஆமோதித்தோம்.

பெரு மழையினால் கங்கோத்ரி செல்லும் பாதையில் மலைச்சரிவுகள் ஏற்பட்டு சாலைப் போக்குவரத்தைத் தடை செய்திருப்பதால் மூன்று நாட்களாக கங்கோத்ரிக்குச் செல்ல முடியாமல் இந்த விடுதியில் மாட்டிக் கொண்டிருப்பதாகவும் மறுநாள் காலை கேதார்நாத் செல்வதால் அவர்களுக்காகவும் வேண்டிக் கொள்ளுமாறும் கூறினார்கள். மழை இல்லாத பொழுதில் உத்தரகாசியில் இருக்கும் சிறு கோவில்களுக்கும் காசிவிஸ்வநாதரை தினம் இருமுறையும் பார்த்து வந்திருந்தார்கள். “நாளைக்கும் கோவிலுக்குச் செல்ல முடியுமா என்பது சந்தேகம் தான்” என்று வயிற்றில் புளியைக் கரைத்தார்கள். “என்னது? மூணு நாளா இங்கேயே இருக்கிறீங்களா? கடவுளே அப்படி ஏதும் நடந்திடாம காப்பாத்துப்பா. இவ்வளவு தூரம் இனியொருமுறை வர முடியுமா என்று தெரியவில்லை.” மானசீகமாக மனதிற்குள் வேண்டிக்கொண்டேன்.

எத்தனை வசதிகள் இப்போதெல்லாம்? டெல்லி வந்து இறங்கியவுடன் ‘மூவிங் கிச்சன்’ என்று சமையல்காரர்களும் பண்டங்களும் பயணிகள் கூடவே வரும் வசதிகள் உள்ளது. அதற்கென நிறுவனங்கள் இருக்கிறது. எங்கு தங்குகிறார்களோ அந்த விடுதியின் சமையலறையை வாடகைக்கு எடுத்துச் சமைத்துக் கொடுக்கிறார்கள். ஆரோக்கியமான சைவ உணவுகள். வட இந்தியாவில் இருந்தாலும் நமக்குப் பிடித்த வீட்டுச் சமையல் கிடைப்பது வயதானவர்களுக்கு நல்லது. இதுவரை நாங்கள் இந்த வசதியைப் பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ‘ஷிவ் குஃப்’ல் சந்தித்த மாம்பலத்து ஆட்கள் ஊரிலிருந்த அவர்களோடு சமையற்காரரையும் அழைத்து வந்திருந்தார்கள். பேருந்தை நிறுத்திச் சமைத்துக் கொள்வதாகக் கூறியது நினைவிற்கு வந்தது. எங்களுக்கு எப்பொழுதும் போகும் ஊரில் என்ன சாப்பாடு கிடைக்குமோ அதை உண்பது பிடிக்கும். சில இடங்களில் தேடித்தேடி பிரபல உணவு வகைகளை உண்போம். ஆனால் சிலர் வெளிநாடுகளில் கூட இந்திய உணவு விடுதிகளைத் தேடிச் செல்வதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும்! வீட்டில் அதைத்தானே காலம்காலமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இங்கு வந்தும் இதே தானா? நம்மவர்களுக்குச் சப்பாத்தி மேல் ஏதோ கோவம்😉

‘கலகல’வென்று பேசிக்கொண்டிருந்ததில் நேரம் போனதே தெரியவில்லை. சிறிது நேரப் பேச்சில் நெடுங்காலம் பழகிய உணர்வு. வேற்று மொழி பேசும் இடத்தில் நம் மொழி பேசுபவர்கள் மீது வரும் பாசம்! இதுவே இப்படி என்றால் என் தாய்பாஷை பேசுபவர்களைப் பார்த்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவர்களிடமிருந்து விடைபெற்று அறைக்குத் திரும்பினோம்.

பால்கனி கதவைத் திறந்தால் ‘சிலுசிலு’ காற்றில் சாம்பல் நிற ‘பாகீரதி’ பாறைகளின் மேல் பாய்ந்தோடிக் கொண்டிருந்தாள். சுற்றிலும் இமயமலை! பல வண்ணங்களில் உத்தரகாசி நகர கட்டடங்கள் என்று கண்ணுக்கு விருந்தாகக் காட்சிகள். சிறிது நேரம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு விடுதியின் பின்வாசல் வழியே நடந்து சென்று ‘ஜில்’லென்றிருந்த நதியைத் தொட்டு அவளை வழிபடும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கூறி வணங்கினோம். கோவிலில் ஜோதிர்லிங்க, சக்தி பீட திவ்ய தரிசனம். மனதில் இருந்த கவலைகளும் தெளிவான நதியின் ஓட்டத்தில் மெல்ல கரைந்து விடாதா என்று ஏக்கமாக இருந்தது. செங்குத்தான படித்துறைகளில் நிறைய படிகள். கவனமாக இறங்க வேண்டியுள்ளது.

பசியெடுக்கவே விடுதிக்குத் திரும்பினோம். இங்குள்ள விடுதிகள் அனைத்திலும் காலை, இரவு உணவிற்கும் சேர்த்தே கட்டணம் வசூலிக்கிறார்கள். எங்களுடைய பயணத்தில் நாங்கள் தங்கும் மூன்றாவது விடுதி இது. எட்டு மணிக்குத் தான் இரவுணவு. இந்தியாவிற்கு வந்து வழக்கமாகச் சாப்பிடும் நேரங்கள் எல்லாம் எக்குத்தப்பாக மாறிவிட்டிருந்தது!

வரவேற்பறையில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்த பொழுது தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்திருந்த அம்மா, அப்பா, மகன் குடும்பத்தைச் சந்தித்தோம். பார்க்க வட இந்தியர்கள் போல இருந்தாலும் பல தலைமுறைகளாகத் தென்னாப்பிரிக்காவில் இருக்கிறார்கள். இங்கு உறவினர்கள் யாரும் இல்லாவிட்டாலும் வருடம் ஒரு முறை இந்திய விஜயம் செய்வோம் என்று சிரித்த முகத்துடன் அந்தப் பெண்மணியும் அவருடைய கணவரும் கூறினார்கள். இரு மகன்கள் நல்ல வேலையில் இருக்கிறார்கள். சமீபமாக இந்தியர்கள் சிலரின் அரசியலால் அவர்கள் இருக்கும் நாட்டுக்கு கேடு. அவர்களால் மற்ற இந்தியர்களுக்கும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என்று வருத்தத்துடன் அவர்கள் நாட்டு அரசியலைப் பற்றிப் பேசினார்கள். கோடிகோடியாக இத்தனை பணத்தை வைத்துக் கொண்டு என்ன தான் செய்வார்களோ இந்த மலைமுழுங்கிகள் என்று தோன்றியது! அவர்கள் இரண்டாவது முறையாக ‘சார்தாம்’ பயணம் மேற்கொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. “எனக்கு இந்தியா என்றால் அவ்வளவு பிடிக்கும்.” என்றார் அந்தப் பெண்மணி. அவர்களும் இரண்டு நாட்களாக கங்கோத்ரிக்குச் செல்ல காத்திருந்தார்கள். மீண்டும் வேண்டிக் கொண்டேன்.

எட்டு மணிக்கு உணவு தயாரானதும் உணவகத்திற்குச் சென்று அங்கிருந்த மேஜைகளில் அமர்ந்து கொண்டோம். வழக்கம் போல ரொட்டி, தால் மக்கனி, சோறு, சாம்பார், பப்பட், தயிர், சூப், காய்கறிகள், ஆச்சார், பழங்கள் என்று நன்றாக இருந்தது. கல்லூரி முடித்து பெங்களூரில் வேலை செய்து கொண்டிருக்கும்(தற்போது வீட்டிலிருந்து) மகனுடன் ராஜஸ்தானிலிருந்து வந்திருந்த அகர்வால் குடும்பம் ஒன்றைச் சந்தித்தோம். பார்த்தவுடன் அந்தப் பெண்மணி “உங்களை ஷிவ் குஃப் கோவிலில் பார்த்தோம்.” என்றார். ஏனோ ஹிந்தியில் ‘சளசள’ வென்று பேசியது புரிந்தாலும் சப்டைட்டில் இல்லையே என்று வருத்தமாக இருந்தது. நானும் என்னுடைய ‘தத்தக்காபித்தக்கா’ ஹிந்தியில் பதில் சொல்லிக் கொண்டிருந்தேன். அப்பா பெருமையாக மகன்களை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். மூத்த மகன் மேல் அளவில்லாத பாசம் போல அம்மாவுக்கு. மகன் தலையை கோதி முதுகைத் தடவி விட்டுப் பெருமையாக அவன் ஆங்கிலத்தில் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார். சுப்பிரமணியன் நினைவு வந்து போனது. இந்த அம்மாக்களே இப்படித்தான்😍 நாளை கோவிலுக்குச் சென்று விடலாம் என்று நம்பிக்கையுடன் பேசினார்.

அதைக் கேட்டு பக்கத்தில் இருந்த கணவன், மனைவி இருவர் எங்களுடன் பேச்சில் கலந்து கொண்டனர். அவர்கள் அட்லாண்டாவிலிருந்து வந்திருந்தார்கள். கணவர் அங்கிருக்கும் பல்கலையில் ஒரு துறையின் தலைவராகப் பணிபுரிவதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். ஈஷ்வரும் அவரும் தத்தம் அமெரிக்க தொடர்பு எண்களைப் பரிமாறிக் கொண்டார்கள். அந்தப் பெண்மணி கோவாவில் புரோகிதர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராம். “கவலைப்பட வேண்டாம். நாளை கண்டிப்பாக கோவிலுக்குச் செல்வோம். நம்பிக்கையோடு தூங்கப்போகலாம்” என்று சொல்லி விட்டு “நாளை மீண்டும் சந்திப்போம்” என்று கூறி விடைபெற்றோம். “மறுநாள் காலையில் அனைவரும் ஆறு மணிக்கு கிளம்புவதால் காலை உணவை எடுத்துச் செல்ல தயாராக வைத்திருப்போம். வேண்டுமென்றால் அறைக்கே அனுப்பி விடுவோம்” என்று விடுதி உணவகத் தலைமை சமையல்காரர் சொல்ல, நாங்களும் நன்றி கூறி வெளியேறினோம்.

அறைக்குத் திரும்பி டிரைவர் ஜியிடம் “நாளை ஆறு மணிக்கு கிளம்புவோம்” என்றவுடன் அவர், “இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. நாளை காலை 8.30 மணி வரை அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரியாமல் எதற்குப் போக வேண்டும்?” என்று கூற, “இங்கே இருப்பதற்குப் பதிலாக சாலையில் போய் காத்திருக்கலாம். அனுமதி கிடைத்தால் நல்லது. இல்லையென்றால் திரும்பி விடலாம்” என்று சொல்லி விட்டோம். உறங்கும் மலைகளையும் வண்ண விளக்குகளின் நிழல்களைச் சுமந்துச் செல்லும் ஆற்றையும் ‘மினுக்மினுக்’ என்று மின்னிக்கொண்டிருந்த நகரின் அழகையும் ரசித்துக் கொண்டே அடுத்த நாள் “மா கங்கா”வின் தரிசனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தூங்கிப் போனோம்.

உத்தரகாசி-குப்தகாசி படங்கள்

Barkot - Uttarakasi

Uttarakasi Vishwanath Temple



No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...