Showing posts with label உறவுகள். Show all posts
Showing posts with label உறவுகள். Show all posts

Wednesday, June 15, 2022

அன்புள்ள அப்பா

ஒரு முறை 'நீயா நானா'வில் அப்பாக்கள் Vs மகன்கள் என்ற சுவாரசியமான விவாதம் நடந்தது. மகன்கள் அனைவரும்அவரவர் அப்பாக்கள் மீது ஒரே மாதிரி குற்றசாட்டுக்கள் தான் வைத்தார்கள்.

"எப்ப பாரு திட்டுவார்."

"செலவுக்குப் பணம் கேட்டா கோவம் வரும்."

"அன்பா பழக மாட்டார். அதனால தான் அம்மாகிட்ட எல்லாம் பேசுறோம்." இப்படி போய்க்கொண்டிருந்தது அவர்களின் வாதம்.

அப்பாக்களும் மகன்கள் மீது ஒரே மாதிரியான குற்றச்சாட்டுக்களைத் தான் வைத்தார்கள்.

"ஒன்னும் சொல்ல மாட்டான். அவங்க அம்மாகிட்ட தான் எல்லாத்தையும் சொல்லுவான். சொல்ற பேச்சைக் கேட்க மாட்டான். எதிர்த்துப் பேசுவான். அன்பா நாலு வார்த்த பேசினதில்ல."

இதில் ஒருவர் "எல்லாத்துக்கும் காரணம் அவன் அம்மா தான் சார்." என்று ஒரு போடு போட்டார்.

உண்மையாக இருக்குமோ என்று எனக்கே தோன்றியது. பிள்ளை நம் பேச்சைக் கேட்டு நம் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும் என்று அம்மாக்கள் அவர்களைத் தங்கள் சொல்பேச்சு கேட்பவர்களாக வளர்க்கிறார்களோ? மகன் தன் மீது மட்டுமே அதிக பாசம் கொண்டுள்ளவனாக இருக்க வேண்டும் என்ற உளவியல் காரணமாக கூட இருக்கலாம்.

என் மகன் விளையாட்டாக பேசியதைக் கணவரிடம் கூறிய போது "அவன் ஏன் என்கூட இந்த மாதிரி விளையாட்டுத்தனமாக பேசுவதில்லை?" என்று வருத்தப்பட்டார்.

யோசித்துப் பார்த்ததில் அதில் சிறிதளவு உண்மையும் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

அப்பாவுடன் பேசும் பொழுது கொஞ்சம் மரியாதை, பயம் கலந்த உணர்வு தான் மேலோங்கி இருக்கிறது. இதே அம்மாவிடம் பேசும் பொழுது ஒரு நண்பனிடம் பேசுவது போல அதிக உரிமையுடன் குழந்தைகள் அதுவும் மகன்கள் பழகுகிறார்கள்.

இதை மாற்ற வேண்டுமென்றால் அப்பாவும் மகனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சுப்பிரமணி எதைக் கேட்டாலும் "நீயே அப்பாவிடம் கேள்." என்று சொல்ல, அவனும் ஈஷ்வருடன் பேசிக் கொண்டிருந்தான்.

இருவரின் புரிதலில் கொஞ்சம் நெருங்கி இருந்தார்கள். அவனும் சரளமாக அப்பாவுடன் பேச, ஈஷ்வருக்கும் மகிழ்ச்சி. சேர்ந்து நடைபயிற்சிக்குச் செல்வது, இசை வாத்தியங்களை இசைப்பது என்று நிலைமை மாறியிருப்பதில் எனக்கும் மகிழ்ச்சி. 

பெரும்பாலான அப்பாக்களுக்குத் தங்கள் மகன்கள் நெருக்கமாக தங்களுடன் அளவளாவ வேண்டும் என்பதே விருப்பம். மகன்களுக்கும் அதே எண்ணம் இருந்தாலும் ஏதோ ஒரு மனத்தடை. மகன் தன்னைப் போல் ஆகிவிடக்கூடாது என்று நினைக்கும் அப்பாக்கள் தங்களையும் அறியாமல் சில விஷயங்களில் கூடுதல் அழுத்தம் கொடுப்பதை மகன்கள் புரிந்து கொண்டால் எல்லாம் சுபம். தன் அப்பாவிடம் தான் எதிர்பார்த்த ஒன்றை தன் மகனுக்கு கொடுத்து விட  துடிக்கும் தந்தை மனது மகன்களுக்குப் புரிவதில்லை. அதனால் தான் உறவில் இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. தந்தை-மகன் உறவின் அருமை நெருங்கிப் பழகும் இருவருக்கும் மட்டுமே புரியும். இருவரும் அடிமனதில் ஒருவருக்கொருவர் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தாலும் கொஞ்சம் விலகியே இருக்கும் அன்பை உணர்ந்து அப்பாக்களுடன் மகன்கள் பழக அம்மாக்கள் தான் வழிவிட வேண்டும் என்பது புரிந்தது.

இனிய தந்தையர் தின வாழ்த்துகள்.  


Tuesday, June 14, 2022

அன்புள்ள அப்பா


ஆல்பனிக்கு குடிபெயர்ந்த சில மாதங்களில் வேலை நிமித்தமாக கலிஃபோர்னியா செல்ல வேண்டிய நிர்பந்தம் கணவருக்கு! நிவியையும், வயிற்றில் சுப்பிரமணியுடன் இருந்த என்னையையும் விட்டுச் செல்ல அவருக்கு மனமில்லை. ஆனால் ஹெச்1பி விசாவைத் தக்க வைக்க வேறு வழியில்லை. போகத்தான் வேண்டும். 

"அப்பா போய்த்தான் ஆகனுமாம்மா? இங்கேயே ஏதாவது வேலைக்குப் போகலாமே" அழாத குறையாக கேட்டுக் கொண்டே இருந்தாள். இந்த அம்மாவுக்கு கோபம் வேறு அடிக்கடி வரும். 'படிபடி' என்று அனத்துவாளே செல்ல மகளுக்கோ அப்படி ஒரு கவலை!

"நான் தான் இருக்கிறேனே! உன்னைய நல்லா பார்த்துப்பேன்."

 எவ்வளவு தான் ஆறுதலாகச் சொன்னாலும் அவள் கவலையாகவே இருந்தாள். இருக்காதா பின்ன? சேர்ந்து புத்தகங்கள் வாசிக்க, விளையாட பூங்காவிற்கு அழைத்துச் செல்ல, கீபோர்டு இசைக்க என்று சகலமும் அப்பாவுடன் தான் அவளுடைய பொழுதுகள். சாப்பாடு, வீட்டுப்பாடம், குளியல், கடைகளுக்கு வருவது, அவ்வப்பொழுது சேர்ந்து விளையாடுவது என்று என்னுடன்.

"ஐ வில் மிஸ் யூ டாட்" என்று அவரை விமானமேற்றி விட்டு அமைதியாக என் விரல்களைப் பிடித்துக் கொண்டு வருபவளைப் பார்த்து எனக்கும் மிகவும் வருத்தமாக இருந்தது. இனி கோபம் வந்தாலும் மகளுக்காக அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டே வீடு திரும்பியவுடன் கையை மேலும் இறுக பற்றிக் கொண்டாள்.
 
"உள்ளே போக பயமா இருக்கும்மா."

என்ன பயம்?

"அப்பா இல்லல்ல. அதான்!"

அடக்கடவுளே! "ஏன்? நான் இருக்கேனே?"

அதற்குப் பிறகு வந்த நாட்களில் நான் எங்கே இருக்கிறேனோ அங்கே தான் இருப்பாள். தனியாக எங்கும் செல்ல பயம். அப்பா இல்லாத தனிமை தந்த கவலை. முடிந்தவரை நான் சகலமுமாக இருக்க, சிறிது நாட்கள் ஆயிற்று அவளுடைய பயங்கள் விலக. காலையில் டே கேரில் அவளை விட்டு விட்டு வேலைக்குச் சென்று மாலையில் அழைத்து வரும் ஒவ்வொரு நாளும் தவறாமல் கேட்பாள்.
 "அப்பா எப்போம்மா வருவாரு?"

தினமும் தூங்கப் போகுமுன் (கலிஃபோர்னியாவில் அப்பொழுது தான் மாலை நேரமாக இருக்கும்) அப்பாவிடம் பேசி விட்டுத்தான் தூங்குவாள். நான் வயிற்றில் குழந்தையுடன், வீடு, அலுவலகம், கடைகள் சென்று வர, இவளை அழைத்துக் கொண்டு நூலகம், பூங்கா, நண்பர்கள் வீடு என்று அப்பா இல்லாததை நினைத்துக் குழந்தை கவலைப்படக் கூடாதே என்று முடிந்தவரை அவளுடனே இருந்தேன். சமயங்களில் அலுவலக வேலை இரவு வரை நீளும் பொழுது வீட்டிற்கு வந்து நிவியையும் அழைத்துச் சென்று விடுவேன். தூக்கக் கலக்கத்தில் அவளும் பொறுமையாக இருந்தாள். டே கேர், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு வரும் காது, தொண்டை வலி, காய்ச்சல் மாதம் தவறாமல் வர ஆரம்பித்தது. அப்பொழுதெல்லாம் அவளுடைய அழுகையினூடே அப்பா எப்பம்மா வருவார் என்று தான் கேட்பாள். 

'மாங்கு மாங்கு' என்று இங்கு ஒருத்தி தூங்காமல் கவனித்துக் கொண்டிருக்கிறேன். எப்பொழுது பார்த்தாலும் அப்பா அப்பா என்று புலம்புகிறாளே என்று கோபம் வந்தாலும் அவளின் மனவேதனை புரியாமல் இல்லை. சீக்கிரம் வந்து விடுவார். கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லி கணவரிடமும் "வேறு வேலை பார்த்து ஊருக்கு வந்து விடுங்கள். நிவி மிகவும் ஏங்கிப் போயிருக்கிறாள்" என்று அவரும் வருத்தப்பட்டு...

ஒரு வழியாக ஆறேழு மாதங்களுக்குப் பிறகு ஈஷ்வருக்கும் நியூஜெர்சி மாநிலத்தில் வேலை கிடைக்க, வார இறுதிகளில் வீடு வர...கொஞ்சம் சமாதானம் ஆனாள். முற்றிலுமாக ஆல்பனி வந்து சேர்ந்தவுடன் தான் பழைய கலகலப்புடன் வலம் வர ஆரம்பித்தாள்.

மீண்டும் அப்பாவுடன் சேர்ந்து புத்தங்கள் வாசிப்பது, கீ போர்டு, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது என்று அவர்களும் கைக்குழந்தையுடன் நானும் என்று நாட்கள் வருடங்களாகி அப்பாவைப் போலவே ஆங்கில இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டு வாசிப்பது விவாதிப்பது என்று இன்று வரை தொடர்கிறது.

இப்பொழுது படித்து முடித்து வேலைக்குச் சென்று விட்டாலும் அவள் வீடு வந்து சேரும் வரை அப்பாவும் காத்திருக்க, வீட்டுக்கு வந்தவுடன் அன்று நடந்தவைகளைப் பேசி, என்ன சாப்பிட்டாள் என்ற விவரம் வரை கேட்டுக் கொண்டு, "நீங்க போய் தூங்குங்கப்பா" என்று சொன்னவுடன் தான் அப்பாவிற்கும் நிம்மதியாக இருக்கிறது. 

இன்றும் ஆங்கில இலக்கியங்கள், அமெரிக்க அரசியல், நடைமுறைச் சிக்கல்கள் என்று பேசி அலசுகிறார்கள்.

காலம் மாறி விட்டது. இன்று மகளுக்காக அப்பாவின் காத்திருப்புகள்! 
எப்பொழுதும் அன்னையர் தினத்தன்று ஊருக்கு வருபவள் இந்த முறை தந்தையர் தினத்தன்று ஊருக்கு வருகிறேன் என்றதில் ஈஷ்வருக்கு அத்தனை சந்தோஷம்!
 
இருக்காதா பின்ன?

இதைவிட வேறு என்ன பரிசு வேண்டும்?

Wednesday, June 20, 2018

திரும்பிப்பார்க்கிறேன் - அப்பா!

திருச்செந்தூர் முருகனைத் தரிசித்து விட்டு திருநெல்வேலியில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் செல்லும் வழியில் வன திருப்பதி ஊரில் சரவண பவனில் மதிய உணவை முடித்துக் கொள்ளலாம் என்று அங்கே சென்றோம். உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. வறட்சியுடன் கூடிய தோட்டங்களை கடந்து தனியாக ஒரு சாலை. அதற்குள் செல்ல கட்டணம் வேறு வசூலிக்கிறார்கள்! கேட்டால் தனியார் பராமரிப்பாம்! அந்த உணவகத்திற்குச் செல்ல காசு கொடுத்து உள்ளே சென்றது கொடுமையென்றால் சரவண பவன் உரிமையாளர் சொந்த ஊராம். சாப்பாடு விலையும் அதிகம். தரமும் குறைவு. கார், பஸ், வேன் என்று கூட்டம் அள்ளுகிறது. பின் வேறு எப்படி இருக்கும்? உணவகத்தின் எதிரே தங்கும் விடுதியும் கட்டி வைத்திருக்கிறார்கள். அருகே திருப்பதி பெருமாள் கோவிலும் கட்டி வைத்து அங்கும் கூட்டம்.
நாங்களும் சாப்பிட்டு முடித்து விட்டு வாசலில் சிறிது நேரம் உட்கார்ந்திருந்தோம். கோவில் என்றால் கடைகள் இருக்க வேண்டுமென்பது கட்டாயமாயிற்றே! இரண்டு மூன்று கோவில் கடைகளில் சாந்துப் பொட்டு முதல், கண்ணாடி வளையல்கள், தோடு இத்யாதிகள், கிரிக்கெட் மட்டை, பந்து, சிறு குழந்தைகள் விரும்பும் அத்தனை பொருட்களும் அங்கிருந்தன. ஒரு சிறுவன் ஒவ்வொரு பொருளாக கேட்டு வாங்கிப் பார்த்து கடைசியில் கையோடு அவன் அப்பாவை அழைத்து வந்து அவரும் ஒவ்வொன்றாக பார்த்து விலைகளைக் கேட்டு யோசித்தவாறே பேரம் பேசி எதுவும் படியாமல் அந்தச் சிறுவனை அழைத்துச் சென்றார். மகன் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியவில்லையே என்ற வருத்தம் அவருக்கு. தான் கேட்டு வாங்கிக் கொடுக்கவில்லையே என்று அழுத படி அந்தப் பையனும் முரண்டு பிடித்துப் போவதைப் பார்க்க பாவமாக இருந்தது. அந்த அப்பாவிற்குத் தானே தெரியும் அவ்வளவு செலவு செய்ய முடியாதென்று!
என் அம்மா சும்மா இருக்காமல் நீ கேட்குறதுக்கு முன்னாடியே அப்பா உனக்குப் பிடிச்சத வாங்கி கொடுத்துருவார் என்றார். உண்மை தான். நான் கேட்காமலேயே பலதும் எதிர்பாராத நேரங்களில் எனக்கு வாங்கிக் கொடுத்து திக்குமுக்காட வைத்திருக்கிறார் அப்பா. ஆனால் ஒரு முறை கோவில்கடையில் நான் கேட்ட பொருளை வாங்கிக் கொடுக்க மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணி விட்டார். நானும் ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ணிப் பார்த்ததில் வர வர வம்பு அதிகமாகிட்டே போகுது. சொல்ற பேச்ச சுத்தமா கேட்குறதில்ல வீட்டுக்குப் போனவுடனே முதுகுல நாலு வச்சா தான் சரியா வருவே அது இதுவென்று அவர் கத்த நான் முரண்டு பண்ண...அம்மா சமாதானம் பண்ண...கோபத்துடன் கோவிலை விட்டு வந்த நாளை அம்மாவிற்கு ஞாபகப்படுத்தினேன். அப்படி ஒரு நாள் தான் நடந்தது. அதை மட்டும் தெளிவாக நினைவில் வைத்திருக்கிறாய். எந்த ஊருக்குச் சென்றாலும் உனக்குப் பிடித்தவைகளை வாங்காமல் அப்பா வந்ததில்லை. அதையெல்லாம் மறந்து விட்டாயே என்று கோபித்துக் கொண்டார்.
அதையெல்லாம் நானும் மறக்கவில்லைம்மா. ஆனாலும்...அன்று நான் கேட்டு வாங்கிக் கொடுக்காதது மட்டுமில்லாமல் சாப்பிடச் சென்ற ஆரிய பவானில் கூட அவர் சொன்னதைத் தான் சாப்பிட வேண்டும் என்று அன்று நடந்த நிகழ்ச்சிகளை அசை போட்டுக் கொண்டே வந்தோம். இந்த அப்பாக்களுக்கு எப்பொழுது கோபம் வரும், எப்பொழுது செல்லம் கொஞ்சுவார்கள் என்பதே தெரியாது. என்னையெல்லாம் கோபித்தால் எனக்கும் கோபம் வரும் என்று நானும் பதிலுக்குப் பதில் பேச, அதில் அவருக்கு இன்னும் கோபம் அதிகமாகும். இருவரின் சுபாவம் தெரிந்ததால் அம்மா தான் பாவம் நடுவில் கிடந்து தத்தளிப்பார். வேடிக்கைப் பார்த்துக் கொண்டே சாப்பிட பிடிக்கும் என்று ஜன்னலோர சீட்டிற்குத் தாவினால் அங்கே உட்காரக் கூடாது. என் முன்னால் உட்காரு என்று சொன்ன கணத்திலிருந்து எனக்கு அப்பாவிடம் பேசக் கூட பிடிக்கவில்லை. சாப்பிட்டு முடித்து ஐஸ்கிரீம் கேட்டால், மசாலா பால் தான் குடிக்க வேண்டும் என்று ஆரம்பித்து நான் வாந்தியெடுப்பேன் என்று மிரட்டியும் அதை குடிக்க வைத்து...அப்பப்பா... இனி உன்னோட நான் ஹோட்டலுக்கெல்லாம் வர மாட்டேன் என்று அப்பாவிடம் சொல்லி விட்டு மூஞ்சியைத் திருப்பி பேசாமல்... நான் கேட்ட பொருள் வாங்கிக் கொடுக்கும் வரை அவரைத் தவிர்த்து...ஞாயிறன்று மதியம் திகர்தாண்டா பாய் கொண்டு வரும் ஐஸ்கிரீம் வாங்கித் தரும் வரை தொடர்ந்த போராட்டம் ஒருவழியாக முடிவுக்கு வந்ததில் அம்மாவுக்குத் தான் நிம்மதியாக இருந்திருக்கும். இனி அடம் பிடிக்க மாட்டேன், சொல் பேச்சு கேட்பேன் என்று சொன்னால் தான் ஐஸ்கிரீம் என்று அங்கும் கண்டிஷன் போட...இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா என்று அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு...ஹ்ம்ம்... எப்படியெல்லாம் செல்லமாக வளர்ந்து அரட்டி உருட்டி மிரட்டி இருந்திருக்கேன்.
கல்யாணம் பண்ணி வச்சு பாதிய தொலைச்சு சுப்பிரமணிய பார்த்ததுக்கப்புறம் அவனோட அரட்டல் உருட்டல் மிரட்டலுக்குப் பயப்படற மாதிரி ஆகி வாழ்க்கை ஒரு வட்டம்னு தெரிந்து போச்சுடா மாதவா!
ஹ்ம்ம்...
விட்டுச் சென்ற
நினைவுகளில்
வாழ்ந்து கொண்டிருக்கிறார்
அப்பா!

Sunday, November 30, 2014

அன்புள்ள அப்பா...

திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொரு பெண்ணுக்கும் வரும் அதே குழப்பம் எனக்கும். புகுந்த வீட்டில் மாமியார் கிடையாது. மாமனாரை எப்படி அழைப்பது? சரி, சம்பிரதாயப்படி மாமா அல்லது பாவா என கூப்பிடுவது என்று நினைத்திருந்தேன்.

கணவரின் அண்ணிகள் மாமனாரை அப்பா என்று அழைப்பதை பார்த்து எனக்கு ஒரே கவலை. என் அப்பாவை விட 20 வயது மூத்தவர். அவ்வளவு வயதான மனிதரைப் போல் எங்கள் குடும்பத்தில் யாரையும் நான் பார்த்தது கிடையாது. எனக்கு தாத்தா மாதிரி இருக்கிறார். இவரைப் போய் எப்படி அப்பா என்று அழைப்பது? அதுவுமில்லாமால் என் அப்பாவைத் தவிர யாரையும் அப்பா என்று கூப்பிடுவது எனக்குப் பிடிக்காத ஒன்று.

ஆனா, என்ன பண்றது?

அவரை பார்க்கச் செல்லும் போதெல்லாம் என்னம்மா, எப்படி இருக்கே? வேலை எல்லாம் எப்படிபோகுது? உங்க வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்க என்று கேட்கும் பொழுது பதில் சரியாகச் சொல்லி முடிக்க ஒரு குழப்பத்துடன் மாமா, பாவா... கடைசியில் மைண்ட் வாய்சில் அப்பா என்று எனக்குள் நானே கூறிக் கொள்வேன்.

இதில் கணவருக்கு மிக்க வருத்தம். பெண் குழந்தைகள் இல்லாத வீட்டில் மருமகள்கள் அப்பா என்று கூப்பிடுவது என் அப்பாவுக்கு மிகவும் பிடிக்கும். அண்ணிகளும் அப்படித் தானே கூப்பிடுகிறார்கள்? நீயும் அப்படியே கூப்பிட்டால் நன்றாக இருக்கும். அண்ணிகள் என் அம்மாவையும் அம்மா என்று தான் அழைத்தார்கள் என்றார்.

நானும், என் அப்பாவைத் தவிர யாரையும் என்னால் மனதார அப்பா என்றெல்லாம் கூப்பிட முடியாது. உதட்டளவில் அப்பா  என கூப்பிடுவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை. நீங்கள் என் அப்பாவை என்ன அப்பா என்றா கூப்பிடுகிறீர்கள் என்று கேட்டு விட்டு அப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டோம். well, எனக்கு என் நியாயம்!

திருமணம் முடிந்த நான்கைந்து மாதங்களில் எங்களுடன் வந்து தங்க மாமனாரை மச்சினர் வீட்டில் இருந்து அழைத்து வந்திருந்தோம். மச்சினர் வீட்டின் மாடியில் ஆபிஸ் இருந்ததால் அங்கு வேலை செய்ய வருபவர்கள், பிசினஸ் ஆட்கள் என்று பலருடனும் பேசி நன்கு நேரத்தைப் போக்கியவர். மாலையில் வாக்கிங் சென்று ஒரு பேக்கரி கடையில் அவர் வயதையொத்த நண்பர்களுடன் பேசி விட்டு அவருக்குப் பிடித்த சமோசா , கேக் என்று மாலைப் பொழுதுகளை போக்கி விட்டு இருந்தவருக்கு எங்கள் வீட்டில் பொழுதைப் போக்குவது மிகவும் சிரமமாக இருந்தது.

நான் என்ன செய்ய முடியும்? பார்க்க எனக்குத் தான் வருத்தமாக இருந்தது.

என் ஆரம்ப கால சமையல் கொடுமைகளை அனுபவிக்க வேண்டிய துர்பாக்கியம் வேறு அவருக்கு :(`

அரசியல் என்று பேச்சு வந்தால் காங்கிரஸ் தான் என்று மாமனார் ஆரம்பிக்க, உங்கள மாதிரி ஆட்கள் இருக்கிற வரை இந்தியா உருப்படற மாதிரி தான் என்று அரிவாள் சுத்தியல் எடுக்காத குறையாக மகனுக்கும் அவருக்கும் வாக்குவாதம். குடும்ப பிசினஸ் பற்றி பேச்சு வந்தால் அதற்கும் ஒரே கலவரம். சரி, நீங்க வேலைக்கு கிளம்புங்க . காலணா பெறாத விஷயத்துக்கெல்லாம் இப்பிடியா? எப்ப பாரு வெட்டி பேச்சு பேசிக்கிட்டு என்று கணவரை அவசரஅவசரமாக வெளியில் அனுப்புவதற்குள் போதும்போதுமென்றாகி விடும்.

இவன் இப்படித்தாம்மா! ஆ ஊன்னா கோபம் வந்துடும்(ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம்ங்கறது இது தான் போல ... ) நீ தான் நல்ல வார்த்தை சொல்லி அவன் கோபத்தை குறைக்கணும். (ம்ம்ம். அதுக்கு நான் தான் உங்களுக்கு கெடைச்சேனா ??)

ஓரிரு நாட்கள் அப்பாவிடம் பாராமுகம் தொடரும். அச்சமயங்களில் அவரைப் பார்த்தால் பாவமாக இருக்கும். மகள் என்று ஒருத்தி இருந்திருந்தால் அவர் நிலைமை இப்படி இருந்திருக்காது என்று நினைத்துக் கொள்வேன்.

காலையில் நான் எழுவதற்கு முன்பே எழுந்து பால் வாங்கி டீ போட்டு வைப்பது, கீரை வாங்குவது , வீட்டு வேலைக்காரம்மா வந்தால் பாத்திரங்களை எடுத்து வெளியில் வைப்பது என்று வேலைகளை அவர் செய்த போது எனக்குப் பதறி விட்டது. என் அம்மாவிற்குத் தெரிந்தால் அவ்வளவு தான்! நீங்கள் செய்யாதீர்கள் .....அப்பா(மைண்ட் வாய்சில்) என்று சொன்னாலும் காலையில் எழுந்திருக்க என்னால் முடியவில்லை. கருவுற்றிருந்த நேரம். மார்னிங் சிக்னஸ் :(

அவரோ, நீ சின்ன பொண்ணு. உன் உடம்பை பார்த்துக்க என்று சொல்லி மேலும் கில்ட்டியாக்க...எனக்கு மேலும் தர்ம சங்கடம். நீங்க சீக்கிரம் எந்திரிக்கணும், உங்க அப்பா பாவம்! எல்லா வேலையையும் செய்றது எனக்கு கஷ்டமா இருக்கு என்றவுடன் இவர் சிறிது நாட்கள் பார்த்துக் கொண்டார்.

ஒரு வழியாக காலையில் நான் எழ ஆரம்பித்ததும் பால்காரர், அப்பா இல்லியாம்மா? அவர் தான கொஞ்ச நாளா வந்தாரு? ஊருக்குப் போய் விட்டாரா என்று கேட்க, வேலைக்கார அம்மாவோ, அப்பாருட்ட நான் சொல்லி இருந்தேனே என்று சொல்லும் பொழுது அவர் என் மாமனார் என்று சொன்னால் இவர்கள் என்னை தப்பாக நினைத்து விடுவார்கள் போலிருக்கே! என சிறிது அச்சம். பின்னே, எந்த வீட்டில் மாமனார் வேலை செய்வார்?
எனக்குத் தெரிந்து இல்லை. மெதுவாக அவர் மேல் எனக்கு கூடுதல் மரியாதை ஏற்பட்டது.

மாலையில் வாக்கிங் முடிந்து வரும் போது எனக்கும்சேர்த்து சமோசா, கேக் கொண்டு வந்து கொடுக்க .. என் அப்பா மாதிரி அவரும் என்னை மகள் போல் நடத்த...என்னைச் சுற்றி இருந்த ஒருவித இறுக்கம் மெல்ல தளர்ந்து நானும் சகஜமாக இருக்க ஆரம்பித்தேன். அவருடைய பழங்கதைகளைச் சொல்லுங்கள் என்று அவருடைய தனிமையை என்னால் முடிந்த வரையில் கலகலப்பாக்க முயற்சித்தேன்.

அவர் அப்பா, அம்மா, கூடப் பிறந்தவர்கள், வாழ்க்கையில் நடந்த நல்ல, கெட்ட விஷயங்கள் என்று அவரும் ஆர்வமாக பேச ஆரம்பித்தார். மதுரையில் அவர்கள் வீட்டுச் சொத்து எங்கெல்லாம் எவ்வளவு இருந்தது என்று பெருமையாக சொல்லிக் கொண்டு இருக்கும் போதே, இப்பொழுது உங்களிடம் என்ன இருக்கிறது? போன கதைகளை ஏன் பேசி வெறுப்பேற்றுகிறீர்கள் என்று நெற்றிக்கண் திறக்க கோபக்கனலுடன் அப்பாவுக்கு எதிராக மகன் நிற்கும் போதெல்லாம், நான் தானே அவருடன் பேசிக் கொண்டிருக்கிறேன்? உங்களுக்கென்ன வேலை? அவருக்குப் பிடித்த விஷயங்களைப் பேசினால் அவருக்கும் நன்றாக இருக்கும் என்று கணவரையும் சமாதானப்படுத்தி இருக்கிறேன்.

பழைய நினைவுகள் தரும் சுகத்தைப் போல் வேறு எதுவுமில்லை என்று தினமும் மாலையில் அவருடன் பேசுவது , டிவி பார்ப்பது என்று எனக்கும் பொழுது போனது.

குடும்பத்தில் நடந்த பல விஷயங்களைக் கூறினார். கணவரிடம் இப்படி எல்லாம் நடந்ததா என்று கேட்கும் பொழுது அவர் பதறிக் கொண்டே உனக்கு எப்படித் தெரியும் என கேட்க . ம்ம்ம். ஓப்லா வீட்டு ரகசியம் இப்ப எனக்கும் தெரியுமே என்று அவரை கலவரப்படுத்த எனக்கும் அவையெல்லாம் தோதாக இருந்தது.

மனைவியை இழந்த துயரம், அன்று கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த என் கணவருக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்த தவிப்பு, இன்று வரை மகன் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற வருத்தம் என அவர் கலங்கியபடி சொல்லும் பொழுது எனக்கும் வேதனையாகி விட்டது.

மூத்த மகனை இழந்த சோகம் அவரை மிகவும் பாதித்திருந்தது. அதற்குப் பிறகு மனதுக்கு விரும்பாத நிகழ்வுகள், வியாபாரத்தில் எதிர்பாராத நஷ்டம் அதனால் உடல்பாதிப்பு என்று மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்.

உங்களுக்கு உடம்புக்கு ஏதாவது என்றால் என்னிடம் கூறுங்கள் என்று சொல்லும் பொழுது கூட, நீயோ இன்னும் சிறிது நாளில் கைக்குழந்தையையும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருமகள்கள் அனைவரும் வேலை செய்கிறீர்கள், நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லைம்மா என்று சொல்லும் பொழுது உண்மையாகவே என் கண்கள் கலங்கி விட்டது.

மனைவியை இழந்த கணவரின் நிலைமை மிகவும் கொடுமையானது போல!

என் குடும்பத்தின் மீதும் மிகுந்த மரியாதை அவருக்கு என்று பேசும் பொழுது புரிந்து கொண்டேன். தம்பிகள், அப்பா, அம்மா வரும் பொழுது அன்பாக பேசுவார்.

எங்களுக்கு மகள் பிறந்தவுடன் மகாராணி என்று அழைத்து தன் மகன் ஒருவழியாக வாழ்க்கையில் செட்டிலாகி விட்டான் என்ற மனநிறைவுடன் அவரின் விருப்பபடி யாருக்கும் தொந்தரவு தராமல் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்து விட்டது.

அன்பு தாத்தாவின் அறிமுகம் என் குழந்தைகளுக்கு கிடைக்கவில்லையே என்ற வருத்தம் என்றுமே எனக்கு உண்டு. அட்லீஸ்ட் மகளுடன் இருப்பது போன்ற ஃபோட்டோ ஒன்றாவது இருக்கிறது. மகனின் பல குணங்கள் தன் அப்பாவை நினைவுறுத்துகிறது என்று கணவர் கூறும் போதெல்லாம் பெருமையாக இருக்கும்.

யாருக்கும் தீங்கு நினைக்காத, பணத்தின் மேல் பற்றில்லாத, தனக்கு தீங்கிளைத்தவர்களையும் மன்னிக்கும் நல்ல பண்பான அமைதியான மனிதர்.

பழகிய சிறிது நாட்களில் என்னையும் அறியாமல் 'அப்பா' என்று சொல்ல வைத்த பெருமையுடன் அவரின் சகாப்தமும் முடிந்தது !






அழிக்கப்பட்ட புத்தகங்கள்… உருவான செயற்கை நுண்ணறிவு: அறிவின் புதிய போராட்டம்

என்ன தான் நடக்கிறது செயற்கை நுண்ணறிவு உலகில்? மனிதனின் மூளையாக செயல்பட, கணினிக்கு அறிவூட்ட எந்த எல்லை வரை நிறுவனங்கள் செல்கிறது? அறிவார்ந்த ...