Wednesday, July 23, 2014

இம்மையில் நன்மை தருவார் கோவில்

 இன்று கோவிலில் பிரதோஷ பூஜை நடப்பதை ஈமெயிலில் பார்த்தவுடன் அம்மாவுடன் கோவிலுக்குச் சென்ற நாட்கள் நினைவிற்கு வந்தன.


பிரதோஷத்திற்கு மீனாக்ஷி அம்மன் கோவிலுக்குள் முண்டியடித்து கூட்டத்துக்குள் சென்றாலும் சுவாமி அபிஷேகங்களை பார்க்க முடிவதில்லை. அவ்வளவு கூட்டம்! சரியென்று சன்னதி வெளியில் நின்று கண்ணாடி வழியே சிறிது நாட்கள் பார்த்து திருப்திபட்டுக் கொண்டோம். கூட்டம் அதிகமாக, நாங்கள் வரமாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்தவுடன் அம்மாவும் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.

மேலமாசி வீதியிலிருந்து சற்று உள்ளே இருக்கும் தெருவில் அப்பாவின் சித்தி வீட்டுக்குப் பல முறை இக்கோவிலைத் தாண்டி சென்றிருந்தாலும் முதன் முறை சென்ற பொழுது இவ்வளவு அமைதியான, அழகான பழைய கோவில், இங்கு இருப்பது எப்படி தெரியாமல் போனது என்று தான் தோன்றியது! முதன் முறை இங்கு சென்றது ஒரு பிரதோஷ நாளன்று தான்.

'கிணிங்கிணிங்' மணி சத்தத்துடன் சைக்கிள்களும், ஆட்டோ , பைக் எழுப்பும் ஹார்ன் ஒலிகளும், கடைகளுக்குச் செல்லும் கூட்டமும் 'ஜேஜே' என்று பரபரப்பான இரைச்சலான தெருவில் இருக்கிறது கோவில்.

விசாலமான கோவிலின் உள்ளே நுழைந்தவுடன் எதிரிலேயே சுவாமி சன்னதி. நுழைவாயிலின் இடப்பக்கத்தில் கணபதிக்கு ஒரு சன்னதி. ருத்ரம் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு அபிஷேகமும் சிறப்பாக நடக்க, முதன்முறையாக மிக அருகில் நின்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு கண்டுகளித்த பூஜை நேரங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாகி விட்டது.

சுவாமியை வலம் வருகையில் அம்மன், பைரவர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, நவக்கிரகங்கள் என்று பரந்த வெளியில். அரசமரமும், வில்வமரமும் பார்த்ததாக ஞாபகம். அன்று தட்சிணாமூர்த்திக்கு வில்வ அர்ச்சனையும் செய்தோம். நல்லா கும்பிட்டுக்கோங்க. அப்பத்தான் நல்லா படிக்க முடியும்னு சொன்னவுடனே கண்ணை இறுக்க மூடிட்டு வேண்டியதும் ஞாபகமிருக்கிறது*:) happy 
 
பிரதோஷ நாட்களில் இக்கோவிலின் நினைவு மீண்டும் மதுரைக்கே அழைத்துச் சென்று விடுகிறது!



http://www.youtube.com/watch?v=ObmIP88GY_Q


Friday, July 18, 2014

கனா காணும் காலங்கள் - 1

இன்று ஃபேஸ்புக்கில் நான் படித்த மேல்நிலைப்பள்ளி அறுபதாவது ஆண்டு விழாவைச் சிறப்பாக கொண்டாடுவதாக சுபா மேடம் செய்தி அனுப்பி இருந்தார்கள். அவரும் அப்பள்ளியில் படித்தவர்.

பள்ளி நாட்களில் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் துள்ளித் திரிந்த காலங்கள் வாழ்வின் வசந்த காலங்கள்!

சென்ற முறை ஊருக்குச் சென்றிருந்த பொழுது நான் படித்த பள்ளிகளுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. 'பல வருடங்களுக்கு' முன் பள்ளி சென்ற நினைவுகள் மீண்டும் மனதில் எழ ...!

அது ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடம். கூரை வேய்ந்த இடத்தில் நடந்த வகுப்புகள் நாங்கள் படிக்கும் காலத்திலேயே கட்டிடமாக உருவெடுத்தது. வெளி நாட்டினரின் பணஉதவியால் மதிய உணவு சில குழந்தைகளுக்கு அளிக்கப்பட்டது.பெரியபெரிய வேப்பிலை, நெட்டிலிங்கம் மரங்களும், பெரணிச் செடிகளும், பல வகையான குரோட்டன்ஸ் செடிகளும், அரைநெல்லிக்காய், முருங்கை மரங்களும் ஒரு பெரிய நாவல் மரமும் புடை சூழ இருந்த பள்ளி வளாகம் அது.

பள்ளியிலேயே கன்னியாஸ்திரீகள் தங்கும் மடமும் அவர்களுக்காக சமையல் கூடமும், மாடுகள் கட்டி வைத்த தொழுவமும், ஒரு தேவாலயமும் இருந்தது. அழகிய ரோஜா தோட்டத்தையும் நன்கு பராமரித்து வைத்திருப்பார்கள். நடுவே நீல வண்ண உடையில் மாதா கையில் ஏசுவுடன் இருக்கும் ஒரு சிலையும் அங்கே இருந்தது.

பள்ளிகளுக்கே உரிய பெரிய நீல வண்ணம் அடித்த கேட். அங்கு தாமதமாக வரும் மாணவியரை பிடித்து தண்டனை கொடுக்க கையில் பிரம்புடன் வெள்ளை உடையணிந்த கண்ணாடி போட்ட வயதான ஒரு கன்னியாஸ்திரீ! பார்த்தாலே பயமாக இருக்கும் உள்ளே நுழைந்தவுடன் வலப்பக்கத்தில் இருக்கும் அறைவாசலில் ஒரு சின்ன மணி. பக்கத்தில் ஒரு கரும்பலகை. அந்த ரூமைத் தாண்டிப் போனால் அரை கிளாஸ் மாணவியருக்கான இடம். ஆங்கில மீடியம் வகுப்புகளில் கலர் கலராக பூ, பழம், காய்கறிகள் படங்கள் சுவர் முழுவதும் தொங்கி கொண்டிருக்கும். தமிழ் மீடியத்தில் அப்படி எல்லாம் எதுவும் இருக்காது.

நெஞ்சில் கையை வைத்துக் கொண்டு வலது கையால் அசிர்வதிக்கிற ஏசுவின் படம் பள்ளி முழுவதும் அனைத்து வகுப்பறைகளிலும் இருக்கும். அதன் பின்னால் சாக்பீஸ் வைத்திருப்பார்கள். அதன் பால் போன்ற நிறமும், கரும்பலகையில் ஆசிரியைகள் எழுதும் பொழுது மாவுமாவாக கீழே விழும் துருவலும், முதல் வரிசையில் உட்கார்ந்தால் தலை மேல் விழுந்து வெள்ளை முடியாக இருப்பதை பார்த்து ஒருவொருக்கொருவர் சிரித்துக் கொண்டதும்...


ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!


நானும் என் அக்காவும் சிறு வயதிலிருந்தே ஒரே வகுப்பில் படித்தோம். அக்கா தனியாக போக பிடிக்காமல் அடம் பிடித்ததாகவும், நான் வீட்டில் அதிக சேட்டை பண்ணிக் கொண்டிருந்ததால்!!!! அவளுக்குத் துணையாக அனுப்பியதாகவும், பிறகு அவளுடனே தொடர்ந்து பள்ளிப் போக ஆரம்பிக்க, ஆசிரியைகளும் என்னை பள்ளியில் சேர்த்து விடலாம் என்று சொல்ல, இப்படியாகத்தான் என் ஆரம்ப பள்ளிக்காலம் ஆரம்பித்திருக்கிறது. என் தங்கையும் அங்கு தான் படித்தாள்.

எங்கள் தெருவில் இருந்த சீனியர் மாணவிகளுடன் சேர்ந்து பள்ளிக்குச் செல்வோம். நடந்து போனால் பள்ளிக்குப் போக குறைந்தது பத்து பதினைந்து நிமிடங்களாவது ஆகும். தெருவே அடைத்துக் கொள்கிற மாதிரி மாணவிகள் எல்லோரும் சேர்ந்து போக, வழியில் மற்ற மாணவிகளும் சேர்ந்து கொள்வார்கள். மங்களேஸ்வரி அம்மன் கோவிலில் ஒரு கும்பிடும் உண்டு.

பழையகுயவர்பாளையத்தில் ஆண்கள் நாடார் பள்ளியைத் தாண்டி ரோட்டோரமாக நடந்து போவோம். அப்போது தெரு மிகவும் அகலமாக இருந்தது. பெரிய பெரிய மரங்களும் இருந்தன. இன்றிருப்பது போல் அவ்வளவு ஜன நடமாட்டமும் வண்டிகளும் கிடையாது. இப்போது தெரு குறுகியது போல் உள்ளது. வழி நெடுக சிறிய, பெரிய, பல குடியிருப்புகளைக் கொண்ட வீடுகள். குச்சி, மச்சி வீடுகள். குழாயடியில் நன்கு துலக்கிய பளபளக்கும் பித்தளை, அலுமினிய, எவர்சில்வர் பாத்திரங்கள். பிறகு, பளிச் என்ற நிறத்துடன் பிளாஸ்டிக் குடங்கள் என உருமாறி விட்டது

பட்டுநூல்காரர், செட்டியார், நாடார், கிறிஸ்தவர், அத்து பல்கார் என்று சௌராஷ்ட்ரமும், தமிழும் கலந்து பேசும் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் என்று ஒரு கதம்பமாக குடும்பங்கள் இருக்கும் தெருக்களை கடந்து போவோம்.

நாடார் பள்ளிக்கு எதிரில் வீட்டின் மாடியில், சேமியா காயப் போட்டிருப்பார்கள். பார்ப்பதற்கே அழகாக இருக்கும். பாயசம் தவிர வேறு எதற்கும் சேமியா சேர்க்காத காலம்! நெசவு நெய்பவர்கள் வெளியில் நூலைப் போட்டு சரிபார்த்துக் கொண்டிருப்பார்கள். சிலர் வாசலில் வத்தல், அரிசி, வடாகம், அப்பளம் என்று எதையாவதைப் போட்டு காவல் காத்துக் கொண்டிருப்பார்கள். பெண்கள் தலை முடியை காய வைத்துக் கொண்டோ, பின்னலைப் போட்டுக் கொண்டோ வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் குப்பைமேட்டுக்குப் பக்கத்தில் ஒண்ணுக்குப் போய்க் கொண்டிருக்கும். தெரு நாய்கள் இங்கேயும் அங்கேயும் சுற்றிக் கொண்டிருக்கும்-இப்படி பல காட்சிகளை தினமும் கடந்து சென்றிருக்கிறோம்.

எங்கள் பள்ளிக்கு பாலரெங்கபுரம், கான்பாளையம், கிருஷ்ணாபுரம், ராம் தியேட்டர் பக்கத்திலிருந்தெல்லாம் படிக்க வந்தார்கள். மதிய நேரத்தில் சுடச்சுட அம்மா கொண்டு வந்து சாதத்தை கையில் உருட்டி கொடுக்க, நாங்களும் எங்கள் தெரு மாணவிகளும் வட்டமாக உட்கார்ந்து சாப்பிடுவோம். மோதிர அப்பளத்தை விரலில் மாட்டிக் கொண்டு, ஒவ்வொரு கவளமாக சாப்பிட்டு முடிக்க, மதிய வகுப்புகள் ஆரம்பமாகும். அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுக்கு உணவெடுத்துக் கொண்டு வருவார்கள். இப்போதிருக்கும் குழந்தைகளுக்கு அந்த கொடுப்பினை இல்லை. பெற்றோருக்கும் நேரமில்லை! பள்ளிகளும் அனுமதிப்பதில்லை. சாப்பிட்டு முடித்த பின் மீதமிருக்கும் தண்ணீரை மணலில் கொட்டி அது காணாமல் போவதை பார்த்து ஆனந்தப்பட்டதெல்லாம்...




ம்ம்ம். அது ஒரு கனாக்காலம்!


Thursday, July 17, 2014

லதா புராணம் 176-185

- என் முகநூல் பக்கங்களில் இருந்து....

காலையில் ஆர்ப்பாட்டத்துடன் முதல்வர் பதவி 

ஏற்க வந்த AAP AK போல் 

ஒளி வட்டத்துடன் உலா வந்தாய் !

மதியமே பனியாய் பொழிந்து 

தெருவில் போராட்டம் நடத்திய AAP AK போல் 

மக்களை அலைக்கழித்தாய்!

மாலைக் குளிரில்

பதவியைத் தூக்கி எறிந்து

மக்களின் நம்பிக்கைகளை

உறைய வைத்த AAP AK போல்

உறைபனியும் ஆனாய்!

போதும் உன் அரசியல் விளையாட்டு !

உன்னுடன் 'மோதி'ப் பார்க்க யாரால் இயலும்???



லதா புராணம் #176



நதிகளும் 

பெண் பெயர்களை

சுமப்பதாலோ என்னவோ

கயமைப் பேய்கள்

அதையும்

விட்டு வைப்பதில்லை !

லதா புராணம் #177



சூடான தோசைக் கல்லுல 

பொடிசா நறுக்குன வெங்காயத்தைத் தூவி

அதுக்கு மேலே ரவா தோசை மாவை தெளிச்சு விட்டு

ஒரு சுத்து எண்ணைய ஊத்தி 

அது 'ஜிவுஜிவு'ன்னு மாவோட சேர்ந்து வெந்ததும் 

அப்பிடியே ஒரு பாதியா மடிச்சு

இலைத்தட்டு மேலே வச்சு

ஓரத்தில மொருமொருன்னு இருக்கிற தோசைய கிள்ளி

தேங்காய் சட்னியில பொரட்டி

சாம்பார்ல தோச்சு

அப்பிடியே சாப்பிடுவேனே!!!! 

லதா புராணம் #178



இனிப்பைக் கண்டவுடன் 

மான் போல் துள்ளும் 

உள்ளம். 

இனிப்பை உண்டவுடன் 

நாவில் தோன்றும் 

இன்பம்.

இனிப்பான செய்தியைக்

கேட்டவுடன்

உவகை கொள்ளும்

இந்நாள் ஓர் 'இனிய' நாள்!

லதா புராணம் #179




மதுரை வெயிலுக்கு 

ஹீட்டரை மாற்றிப் புலரும் காலை வேளையில்,

அந்தக் குளிரிலும் 'புஸ்சு புஸ்சு' வென்று ஓடிக்கொண்டு 

போகும் மக்களைப் பார்க்கும் பொழுது

வரும் உணர்ச்சி சொல்ல வைக்கும்

அட காட்டான்களா! இந்தக் குளிரிலும் ஓடணுமா என்று !!!!

லதா புராணம் #180



பனிமேகங்களிடம் 

சிக்கி

'பரிதி' 

பரிதவிப்பு 

லதா புராணம் #181



அடக் கடவுளே! 

மார்ச் மாதம் ஆரம்பிக்கப் போகிறது

இன்னும் ஜனவரி மாதிரி 

குளிரும், பனியும்! 

போலர் வோர்ட்டெக்ஸ்-அ நெனச்சா ...

போதும் போதும் -- இது மேற்கில் !

இன்னும் ஏப்ரல் கூட வரல

வெயில் காந்துது

அதுக்குள்ளே தண்ணீர் பிரச்னை வேற 

அக்னி நட்ச்சத்திரத்தை நெனச்சா ...

போதும் போதும் -- இது கிழக்கில் !

-இயற்கையின் திருவிளையாடல்கள் 

லதா புராணம் #182



உன்னைத் தொலைத்து 

விட்டதாக நினைத்து

உன் நினைவுகளில் 

வாழ்கின்ற எங்களை 

விட்டுச் செல்ல 

மனமில்லாமல்

மீண்டும் வந்தனையோ?

-Polar Vortex 

லதா புராணம் #183



நீல வானில் 

'தகதக'வென 

ஜொலிக்கும் 

கதிரவனின் 

திவ்ய தரிசனத்தில் 

குளிர்காலைப் பொழுது!

-வாழ்வு தொடங்குமிடம் நீ தானே
வானம் முடியுமிடம் நீ தானே ...

லதா புராணம் #184



தட்டில் சுவையான போளியல் 

தரையில் எடை பார்க்கும் எந்திரம் 

நடுவில் நான்!

இங்கி பிங்கி பாங்கி ...

லதா புராணம் #185


Saturday, July 12, 2014

911

 வட அமெரிக்காவில் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தவுடன் தெரிந்து கொள்ளும் முதல் விஷயம் அவசர எண் 911 பற்றியதாகத் தான் இருக்கும். எந்த ஒரு தேவைக்கும்  இந்த எண்ணைத் தொடர்பு கொண்டால் விரைவில் உதவிகள் கிடைக்கும்.

வீடு தீப்பற்றி எரிகிறதா, குழந்தையை யாரவது போட்டு அடிக்கிறார்களா, மாடி வீட்டில் குடியிருப்பவர்கள் அதிகம் தொந்தரவு செய்கிறார்களா, ரோட்டில் கார் பிரச்னையா, ஆக்சிடெண்டா இந்த நம்பர் அடித்தால் போதும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் போலீஸ் கார்இருக்குமிடம் தேடி வந்து விடும் .

நாங்கள் யூட்டா மாநிலத்தில் இருக்கும் பொழுது ஒரு ஞாயிற்றுக்கிழமையில் நண்பர் குடும்பத்துடன் மதிய உணவு முடித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.  திடீரென்று fire alarm அலற ஆரம்பிக்க, பயந்து கொண்டே மகளும், நண்பரின் மகனும் வீட்டுக்குள் ஓடி வந்தார்கள்.

குடியிருந்தவர்கள் எங்கு தீப்பற்றி எரிகிறதோ புகை எங்காவது தெரிகிறதா என்று யோசனையுடன் பார்த்துக் கொண்டே இருக்க ...ஒரு சிலர் அவசரஅவசரமாக 911ஐ அழைக்க, சிறிது நேரத்தில் போலீஸ் கார்கள், தீயணைப்பு வண்டிகள் ஒன்றுக்கு இரண்டாக என்று அந்த இடமே பரபரப்பாக ... காது சவ்வு கிழியும் வகையில் அலாரம் அடிப்பது மட்டும் நிற்கவே இல்லை.

அன்று மார்மோன் கிறிஸ்தவர்கள் கடமை தவறாமல் சர்ச்சுக்குச் செல்லும் நாள். அபார்ட்மெண்ட் மேனஜேரும் சென்று விட்டிருந்தார்.

ஒரு வழியாக மேனஜரை கண்டுபிடித்து அவரிடமிருந்து சாவியை வாங்கி முதலில் அலாரம் ஆப் செய்யப்பட அப்பாடா என்றிருந்தது!

சிறிது நேரத்தில் போலீஸ் ஒருவர் வாசலில் வந்து உங்கள் அபார்ட்மென்ட்
முன்னாள் இருக்கும் அலாரம் தான் ஆக்டிவேட் செய்யப்பட்டிருக்கிறது. உங்களுக்குத் தெரியுமா என்றவுடன் தான் பயந்து கொண்டே வீட்டுக்குள் ஓடிப் போன குழந்தைகள் ஞாபகத்துக்கு வந்தார்கள்.

அவர்களை அழைத்து அவர்கள் செய்த தவறைச் சுட்டிக் காட்டிய பின் வாசலுக்கு வந்து பார்த்தால்,  குழந்தைகள் கூட அவசர நேரத்தில் எச்சரிக்கை செய்யும் வண்ணம் அலாரம் அவர்கள் உயரத்திற்கே வைக்கப்பட்டிருந்தது. குழந்தைகளுக்கே உரிய ஆர்வத்தில் அடித்துப் பார்த்து விட்டிருக்கிறார்கள் போலிருக்கு!

நியூயார்க் வந்த பிறகு ஒரு நாள் மகள் என் அம்மாவுடன் பேச இந்தியாவிற்கு டயல் செய்கிறேன் பேர்வழி என்று 011 போடுவதற்குப் பதிலாக 911 போட்டு விட மறுநொடியே யார், எங்கிருந்து பேசுகிறீர்கள், என்ன பிரச்னை என்றவுடன் பயத்தில் ஹலோ மட்டும் சொல்லி விட்டு எங்கோ தப்பு நடந்திருக்கிறது என்று 'டக்'கென்று ஃபோனை வைத்திருக்கிறாள்.

ஒரு குழந்தை பேசி ஃபோனை வைத்தவுடன் அவர்களுக்கும் டவுட்டாகி விட்டது போல. அதற்குள் என் கணவரும் என்ன நடந்தது என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே ஃபோன் அடிக்க, 911 ஆட்கள் வீட்டில் என்ன பிரச்னை, ஏன் ஒரு குழந்தை எங்களை கூப்பிட்டது?அந்த குழந்தை இருக்கிறதா? பேசச் சொல்லுங்கள் என்று சொல்ல,

எதற்கும் பயப்பட வேண்டாம், என்ன பிரச்னை என்றாலும் தயங்காமல் சொல்லலாம் என்று கூற மகளும் நான் தான் என் பாட்டியுடன் பேச நினைத்துத் தவறுதலாக இந்த எண்ணை அடித்து விட்டேன். வீட்டில் ஒரு பிரச்னையும் இல்லை என்று சொன்னாலும் அவர்கள் திருப்தியில்லாமல் எங்கள் கடமையை நாங்கள் செய்தே ஆக வேண்டும். போலீஸ் வந்து சரிபார்த்து விட்டுச் சொல்லட்டும் என்று வைத்து விட்டார்கள் ஃபோனை.

என்ன காரியம் செய்திருக்கிறாய், இப்ப பார் போலீஸ் வரப் போகிறது என்று அவளை மேலும் மிரட்டிக் கொண்டிருக்கும் பொழுதே கதவு தட்டப்பட, வெளியில் போலீஸ்.

இந்த வீட்டிலிருந்து 911ஐ ஒரு குழந்தை அழைத்திருக்கிறது. அதற்காகத் தான் வந்தேன். யார், எதற்காகச் செய்தார்கள் என்று கேட்டு விட்டு சிறிது நேரம் எங்கே வேலை செய்கிறீர்கள், யார் யார் வீட்டில் இருக்கிறார்கள் என்று எங்களிடம் கேட்டு விட்டு, மகளிடம் உனக்கு ஏதாவது பிரச்னையா, யாரவது அடித்தார்களா என்று மிரண்டு போயிருந்தவளிடம் கேட்க, அவளும் பயந்து கொண்டே அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. தெரியாமல் செய்து விட்டேன் என்று சொல்லவும் சமையல் அறை , பாத்ரூம், பெட்ரூம்கள் ஒன்று விடாமல் சுற்றிப் பார்த்து விட்டுச் சென்றார்.

ஒரு போலீஸ் வந்து வீட்டை சந்தேகத்துடன் பார்த்து விட்டுச் சென்றது கொஞ்சம் கலக்கமாகவே இருந்தது.

இது நடந்த பல மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் மாலையில் கடைக்குப் போய் விட்டு வரும் பொழுது 'விர் விர்'ரென்று லைட்டைச் சுழல விட்டுக் கொண்டே அதிவேகத்தில் ஒரு போலீஸ் கார் என்னைப் பின் தொடர, அட ராமா! யார் வீட்டில் என்ன பிரச்னையோ என்று ஒதுங்கி போலீஸ் கார் போகும் வரை காத்திருந்து பின் நானும் செல்ல..

(இந்த மாதிரி நேரங்களில் அனைவரும் ஒதுங்கி நின்று போலீஸ் , எமர்ஜென்சி  மருத்துவ வண்டி, தீயணைப்பு வண்டிகளுக்கு வழி கொடுக்க வேண்டும்)

நாங்கள் குடியிருந்த அபார்ட்மெண்ட்டுக்குள் கார் நுழைய, கடவுளே! குழந்தைகள் பத்திரமாக இருக்க வேண்டும் என்று டென்ஷனாகி விட்டது எனக்கு. வீட்டில் பெரியம்மாவும் இருந்தார் அப்போது.

இந்த போலீஸ் கார் சொல்லி வைத்த மாதிரி என் முன்னாடியே போய்க் கொண்டிருந்தது வேறு என் பதற்றத்தை இன்னும் அதிகரிக்க, சரியாக எங்கள் அபார்ட்மெண்ட் பில்டிங் முன்னால் நிறுத்த, நானும் அவசர அவசராமாக இறங்கி, என்ன பிரச்னை?  நான் இங்கு தான் குடியிருக்கிறேன் என்று சொல்லவும்,

ஒன்றுமில்லை, 911 கால் வந்தது என்றவுடன் சரி எந்த அபார்ட்மெண்ட் என்று கேட்க, நான் குடியிருந்த அபார்ட்மெண்ட் நம்பர் என்றவுடன் எனக்கு ஒரே பயம். மகனுக்கு அப்போது ஒன்றரை வயது. இப்போது என்ன நடந்திருக்கும் என்று ஒன்றும் புரியாமல் பதட்டத்துடன் நானே பில்டிங் கதவை திறந்து வீட்டுக் கதவை திறந்தவுடன் ஓடி வந்த குழந்தைகள் என் பின்னே வந்த போலீசைக் கண்டவுடன் கொஞ்சம் மிரள...

குழந்தைகளைப் பார்த்தவுடன் தான் நிம்மதியாக இருந்தது. அதற்குள் கணவரும் வந்து விட அப்பாடா என்றிருந்தது. போலீசும் உள்ளே வந்து வீட்டை நோட்டமிட்டார். என் பெரியம்மாவைப் பார்த்தவுடன் யார் இவர்கள் என்று அவருடைய பாஸ்போர்ட் இத்யாதிகளை சரிபார்த்து என்ன நடந்தது என்று கேட்க, அக்காவைப் போல வீடியோ கேம் விளையாடுவதாக நினைத்து மகன் ஃபோனில் இரண்டு விரல்களில் நம்பர்களை அழுத்த எப்படியோ 911 வந்திருக்கிறது. அது புரியாமல் அதை  தொடர்ந்து வந்த ஃபோனுக்கும் அவனே மழலையில் எங்களுடன் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியதில் பிரச்னை.




வாயில் pacifier வைத்துக் கொண்டு மகனும் போலீசிடம் போய் அவர் வைத்திருந்த துப்பாக்கியை கேட்க, நீ தானா அந்த வாண்டு? என்னிடமே துப்பாக்கி கேட்கிறாயே நிச்சயம் நீ தான் இந்த சேட்டையை செய்திருக்க வேண்டும் என்று சொல்லி சிறிது நேரம் அவனிடம் பேசி விட்டு, துப்பாக்கியையும் காட்டி விட்டு சிரித்து பேசி விட்டுச் சென்றார்.

இதோடு இரண்டாவது 911 அழைப்பு இந்த வீட்டில் இருந்து வந்திருக்கிறது. இது ஒரு அவசர எண். இதே நேரத்தில் வேறு ஒரு குடும்பத்திற்கு உண்மையிலேயே உதவி தேவையாக இருக்கலாம். இனிமேல் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள் என்று எங்களுக்கும் அறிவுரை சொல்லி விட்டு அடுத்த முறை இப்படி ஒரு fake கால் வந்தால் உங்களுக்கு ஃபைன் போடுவோம் என்று மிரட்டி! விட்டு அவர் போகும் வரை ஒரே ...


திக்... திக்... திக்... தான்!










ரங்கஸ்தலம்

தென்னிந்தியாவில் இருக்கும் கோவில்களுக்குச் சென்று வர இந்த ஜென்மம் பத்தாது போலிருக்கு! அத்தனை பழமையான கோவில்கள் இருக்கிறது! பார்க்காத கோவில்க...