Saturday, July 18, 2026

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர்களைத் தேர்ந்தெடுத்துப் பதவிகளை வழங்குகிறார்கள். அமெரிக்காவில் இன்னும் ஒரு படி மேலே சென்று மிகப் பொறுப்பான பதவிகளுக்கு சிறு நேர்முகத்தேர்வை வைத்து விடுவார்கள். முடிவில் அவர்கள் தகுதியானவர்கள் என்று அந்த மன்றம் தீர்ப்பு வழங்கும். சமயங்களில் இது கண்துடைப்பு நாடகம் போல தோன்றினாலும் சில தேர்ந்தெடுத்த நபர்கள் நேர்முகத்தேர்வின் போதே எதிர்ப்புகள் கிளம்பியவுடன்,  மேலும் கேவலப்படுத்துமுன் பதவியும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று கிளம்பிவிடுவார்கள். இவ்வாறாக பார்த்து, பார்த்து  ட்ரம்ப் தேர்ந்தெடுத்தவர்களை அவரே "யூ ஆர் ஃபயர்ட் " என்று சொல்லாமல் சொல்லி சிலரும், சொல்வதற்கு முன் சிலரும் நைசாக அவரது ஆட்சியில் இருந்து விலகி விட்டார்கள். அதுவும் நாடு பொருளாதார தேக்கத்தில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கும் நேரத்தில். சுங்கவரி என்று உலகநாடுகளுடன் விரோதித்துக் கொண்டிருக்கும் வேளையில். அமைதி பேச்சு வார்த்தை பாகிஸ்தான் மூலமாக நடந்து, முடிந்து, நடந்து என்று நடையாய் நடக்கும் காலத்தில். யார் யாரெல்லாம் பெரும் பதவியிலிருந்து தற்பொழுது விலகி விட்டார்கள் என்பதை விவரிக்கும் கட்டுரை👇👇👇
 
ஏதோ ஒட்டுப் போட்டோமோ அடுத்த வேலையைப் பார்ப்போமா என்றிருப்பதை விட, நாடு எந்த வழியில் சென்று கொண்டிருக்கிறது என்பதையும் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டியது ஒட்டு போட்ட மக்களின் கடமையும் கூட.



இன்று வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் வாஷிங்டனைத் தாண்டி வெகுதூரம் எதிரொலிப்பதைக் கண்கூடாக பார்க்கமுடிகிறது. ஆசியாவின் நிதிச் சந்தைகள், ஐரோப்பாவின் பாதுகாப்பு கணக்கீடுகள், சீனாவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள், லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் குடியேற்றக் கொள்கைகள், உலகெங்கிலும் உள்ள தூதரக உறவுகள் ஆகிய அனைத்திலும் இதன் செல்வாக்கு நீள்கிறது. உலகளாவிய கவனம் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ஈரான் போர் கொள்கைகள் மீது குவிந்திருக்கும் வேளையில், திரைக்குப் பின்னால் மற்றொரு முக்கியமான கதையும் அரங்கேறி வருகிறது. ஆம். அந்தக் கொள்கைகளைச் செயல்படுத்தப் பொறுப்பேற்றிருந்த மூத்த அதிகாரிகளின் தொடர்ச்சியான விலகல் தான் அது. சிலர் விருப்பத்தின் பேரிலும், மற்றவர்கள் அழுத்தத்தின் பேரிலும், இன்னும் சிலர் கொள்கை, நிர்வாகம், அரசியல் தொடர்பான மோதல்களுக்குப் பிறகு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் வெளியேற்றங்கள், கொள்கைகளைப் போலவே நிர்வாகத்தின் ஆட்சிப் பாணியைப் பற்றியும் பல விஷயங்களை அம்பலப்படுத்துகின்றன.

ஜனவரி 2025 அன்று அதிபராக இரண்டாவது முறையாக பொறுப்பேற்ற ட்ரம்ப், 
எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்திச் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைத்தல், கூட்டாட்சி அரசாங்கத்தை அதிக செயல்திறனுக்காக மறுவடிவமைத்தல், அமெரிக்க உற்பத்தியையும் பொருளாதார வளர்ச்சியையும் விரிவுபடுத்துதல், “அமெரிக்காவுக்கே முன்னுரிமை” போன்ற கொள்கைகளை முன்மொழிந்தார்.

2017 ட்ரம்ப் அரசு நிர்வாகத்தில் பல மூத்த அதிகாரிகள் பாரம்பரிய குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்ததற்கு மாறாக, 2025-ல் அவர் நியமித்தவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகவோ அல்லது அவரது கொள்கைகளை வெளிப்படையாக ஆதரித்தவர்களாகவோ இருந்தனர். அவர்களும் ட்ரம்ப்பிற்கு ஆதரவாகவே செயல்பட்டு வந்தாலும் ஒருகட்டத்தில் சிலர் மட்டும் அதிகாரத்தில் இருந்து விலகிக்கொண்டனர் அல்லது விலக்கப்பட்டனர்.

அவ்வாறு முதலில் விலகியது உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளராகப் பணியாற்றி வந்த ‘கிறிஸ்டி நோம்’. தனது குடியேற்றக் கொள்கைகளைத் தீவிரமாகச் செயல்படுத்தக்கூடிய ஒருவரை விரும்பிய ட்ரம்ப் இவருடைய பெயரை 2024, நவம்பரில் பரிந்துரை செய்ய, ஜனவரி 2025ல் அவரும் பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தெற்கு டகோட்டாவின் ஆளுநராகவும் காங்கிரசிலும் பணியாற்றியுள்ளார். ஜனநாயக அரசின் கோவிட்-19 கட்டுப்பாடுகளை எதிர்த்ததன் மூலம் தேசிய அளவில் பிரபலமானவர். ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கைகளை வலுவாக ஆதரித்து அவருடைய விசுவாசிகளில் ஒருவராக அறியப்பட்டவர். பழமைவாத வாக்காளர்களிடையே பிரபலமானவர். திறமையான பேச்சாளர். கடுமையான எல்லை அமலாக்கத்தை ஆதரித்தவர். வலுவான நிர்வாக அனுபவம் மிக்கவர் என்பதாலேயே இவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளராகப் பரிந்துரைத்து பணியிலும் அமர்த்தியது ட்ரம்ப் நிர்வாகம்.

கிறிஸ்டி நோம் தானாக முன்வந்து ராஜினாமா செய்யவில்லை. மார்ச் 5, 2026 அன்று, அதிபர் ட்ரம்ப் அவரை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கி, ‘ஷீல்ட் ஆஃப் தி அமெரிக்காஸ்’ அமைப்பின் சிறப்புத் தூதராக நியமித்தார். அதே நேரத்தில், எல்லைப் பாதுகாப்பில் அவரது பணிகளைப் பகிரங்கமாகப் பாராட்டினார். வெள்ளை மாளிகை இந்த நடவடிக்கையை “மறுபணியமர்த்தல்” என்று விவரித்தாலும், அவரது விலகலுக்குப் பின்னால் பல காரணங்கள் இருப்பதாகச் செய்தி அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) தலைமைப் பொறுப்பில் அவரது செயல்பாடுகள் மிகப்பெரிய சிக்கலாக இருந்தது. DHS-க்கு 70 மில்லியன் டாலர் மதிப்பிலான சொகுசு ஜெட், குடியேற்றத் தடுப்புக்காவல் திறனை விரிவுபடுத்துவதற்காக சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்பில் 11 கிடங்குகளை வாங்கும் அவரது முக்கிய முன்னெடுப்பும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

மற்றொரு பெரிய சர்ச்சை, ஆவணமற்ற குடியேறிகளைத் தாமாக முன்வந்து அமெரிக்காவை விட்டு வெளியேற ஊக்குவிக்கும் வகையில் மக்களின் வரிப்பணத்தில் DHS நடத்திய 220 மில்லியன் டாலர் மதிப்பிலான விளம்பரப் பரப்புரையைச் சார்ந்தது. அந்த விளம்பரங்களில் நோம் முக்கியமாக இடம்பெற்றிருந்ததும் ஒரு நாடாளுமன்ற விசாரணையின் போது, ட்ரம்ப் இந்தப் பிரச்சாரத்திற்கு ஒப்புதல் அளித்ததாகவும் அவர் கூறி, பின்னர் ட்ரம்ப் தனக்கு அதுபற்றித் தெரியாது என்று மறுத்ததால், பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சியினரிடையேயும் குழப்பம் ஏற்பட்டது.

மேலும், மினியாபோலிஸில் நடந்த ஒரு கூட்டாட்சி குடியேற்ற நடவடிக்கையின் போது கொல்லப்பட்ட இரண்டு அமெரிக்கக் குடிமக்களை விசாரணைகள் முடிவடைவதற்கு முன்பே “உள்நாட்டுப் பயங்கரவாதிகள்” என்று நோம் கூறியதால் இரு கட்சியினரிடமிருந்தும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். அதன் தொடர்பில் காங்கிரஸில் கடுமையான கேள்விகளையும் எதிர்கொண்டார்.

அவருடைய விலையுயர்ந்த கொள்முதல் முடிவுகள், முன்மொழியப்பட்ட குடியேற்றத் தடுப்புக்காவல் திட்டங்கள் உட்பட, உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் (DHS) செலவினங்கள் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்ப, துறைக்குள் நிலவும் நிர்வாகச் சிக்கல்கள், தொடர்ச்சியான சர்ச்சைகளால் வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரிகள் மிகுந்த விரக்தியடைந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன.

எல்லைப் பாதுகாப்பில் நோமின் முயற்சிகளை ட்ரம்ப் தொடர்ந்து பகிரங்கமாகப் பாராட்டிய போதிலும், மேற்கூறிய பிரச்சினைகள் அனைத்தும் சேர்ந்து அவரைப் பதவியிலிருந்து நீக்கும் முடிவுக்குக் காரணமாக அமைந்தன.

அவருக்குப் பதிலாக மார்க்வேய்ன் முல்லின் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த விக்கெட், ட்ரம்ப்பின் மிக நெருங்கிய சட்ட, அரசியல் கூட்டாளிகளில் ஒருவரும் நம்பிக்கைக்குரியவருமான பாம் போண்டி (Pam Bondi). ஃப்ளோரிடாவின் முன்னாள் அட்டர்னி ஜெனரல். பல்லாண்டு கால வழக்கறிஞர் அனுபவம் கொண்டவர். ட்ரம்ப்பின் முதல் பதவி நீக்க விசாரணையின்போது அவருக்காக வாதாடியவர். விரிவான சட்ட அனுபவம், திறமையான நீதிமன்ற வாதாடல் திறன், விசுவாசமான ஆதரவாளர் என்று நீளும் பட்டியல். இது போதாதா?

தனது சட்டம்-ஒழுங்கு செயல்திட்டத்தை ஆக்ரோஷமாகப் பின்பற்றும் ஒரு அட்டர்னி ஜெனரலை விரும்பிய அதிபர் இவரைப் பரிந்துரைக்க, பிப்ரவரி 2025-ல் பதவி உறுதியானது. சுமார் 14 மாதங்கள் அமெரிக்க அட்டர்னி ஜெனரலாகப் பணியாற்றிய பிறகு ட்ரம்ப் அவரை அப்பதவியிலிருந்து நீக்கினார். அவரது பணிநீக்கத்திற்கான விரிவான காரணத்தை வெள்ளை மாளிகை தெரிவிக்கவில்லை என்றாலும் அவரது பதவிக்காலத்தைச் சுற்றிப் பல சர்ச்சைகள் நிலவின.

ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளை நீதித்துறை கையாண்ட விதம் தொடர்பானதே மிகப்பெரிய சர்ச்சையாக இருந்தது. இந்த வழக்கை நீதித்துறை ஒட்டுமொத்தமாகக் கையாண்ட விதத்தை நியாயப்படுத்திய அதே வேளையில், ஆவணங்களை வெளியிடுவதில் தவறுகள் நடந்ததை அவரே ஒப்புக்கொண்டார். தாமதங்கள், திருத்தப் பிழைகள், வெளிப்படைத்தன்மை குறித்த கேள்விகள் தொடர்பாக ஜனநாயகக் கட்சியினரிடமிருந்தும் சில குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் அதிகமான விமர்சனங்களை எதிர்கொண்டார். மேலும், ட்ரம்ப்பின் அரசியல் போட்டியாளர்கள் சம்பந்தப்பட்ட விசாரணைகள் உட்பட, நீதித்துறையில் அதிகரித்து வரும் அரசியல் மயமாக்கலுக்காகவும் போண்டி விமர்சிக்கப்பட்டார். அரசியல் நோக்கங்களுக்காகத் தான் எதிர்பார்த்த சில சட்ட மாறுதல்களை போண்டி மூலம் நீதித்துறையில் கொண்டுவர இயலாததால் ட்ரம்ப் விரக்தியடைந்ததாக அறிக்கைகள் தெரிவித்தன.

எப்ஸ்டீன் கோப்புகளைச் சுற்றியுள்ள சர்ச்சைகள், நீதித்துறையின் சுதந்திரம் குறித்த விமர்சனங்கள், அவரது செயல்திறன் மீதான அதிருப்தி ஆகியவை அனைத்தும் சேர்ந்து போண்டியை அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து மாற்றுவதற்கான காரணமாக அமைந்தன. அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2026-ல் பதவி விலகினார் (விலக்கப்பட்டார்?)அவருக்குப் பதிலாக தற்காலிகமாக டாட் பிளான்ச் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்து பதவி நீக்கம் செய்யப்பட்டவர், தொழிலாளர் துறைச் செயலாளர் “லோரி சாவேஸ்-டிரெமர்”. மார்ச் 2025-ல் பதவி நியமனம் செய்யப்பட்டு ஏப்ரல் 2026-ல் பதவியிலிருந்து விலகினார்.

பல குடியரசுக் கட்சியினரைப் போலல்லாமல், சாவேஸ்-டிரெமர் பழமைவாதப் பொருளாதாரக் கொள்கைகளை ஆதரித்த அதே வேளையில், தொழிற்சங்கங்களின் ஆதரவையும் பெற்றிருந்தார். ஓரிகானில் உள்ள ‘ஹேப்பி வேலி’யின் முன்னாள் மேயராகவும், அமெரிக்கப் பிரதிநிதியாகவும், பணியாளர் மேம்பாடு, தொழிலாளர் பேச்சுவார்த்தைகளில் அனுபவம் கொண்டவராகவும் இருந்ததால் தொழிலாளர் வர்க்க வாக்காளர்களிடையே தனது செல்வாக்கை அவரால் விரிவுபடுத்த முடியும் என்று ட்ரம்ப் தீவிரமாக நம்பி இவரைத் தேர்ந்தெடுத்தார்.

வெள்ளை மாளிகை அவரது பணியைப் பாராட்டியபோதிலும், தொழில்முறை முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்த இன்ஸ்பெக்டர் ஜெனரல் விசாரணையால் அவரது பதவிக்காலம் மங்கியது. தனது தனிப்பட்ட பயணங்களுக்காக அரசாங்க வளங்களைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும், ஊழியர்களைத் தனது தனிப்பட்ட வேலைகளைச் செய்யப் பணித்ததாகவும், தனக்குக் கீழ் பணிபுரியும் ஒருவருடன் முறையற்ற உறவைப் பேணி வந்ததாகவும், அலுவல் ரீதியான பணி நடவடிக்கைகளின் போது மது அருந்தினார் என்றும் அறிக்கைகள் குற்றம் சாட்டின. கடினமான பணியிடச் சூழலும், தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்களிடமிருந்து வந்த பல புகார்களும் இவர் மேல் குற்றம் சாட்டினாலும் சாவேஸ்-டிரெமர் பகிரங்கமாகத் தனது தவறுகளை ஒப்புக்கொள்ளவில்லை.

விசாரணைகள் விரிவடைந்து பொதுமக்களின் கண்காணிப்பு தீவிரமடைந்த பிறகு தான் அவர் பதவி விலகினார். இதன்மூலம், ட்ரம்ப்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் விலகிய மூன்றாவது அமைச்சரவை உறுப்பினர் ஆனார்.

தற்பொழுது ஈரானுடன் போருக்குச் சென்றிருக்கும் நேரத்தில், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் இயக்குநர் ‘ஜோ கென்ட்’ பதவியை விட்டு விலகியது அரசிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சியாகவே வல்லுநர்களால் பார்க்கப்பட்டது. கென்ட், மார்ச் 17, 2026 அன்று தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநர் பதவியிலிருந்து விலகி, வெளியுறவுக் கொள்கைக் கருத்து வேறுபாடு காரணமாகப் பதவி விலகிய முதல் மூத்த ட்ரம்ப் நிர்வாக அதிகாரியுமானார்.

கென்ட்டின் விரிவான ராணுவ, உளவுத்துறைப் பின்னணியின் காரணமாகவே அதிபர் ட்ரம்ப் அவரைத் தேர்ந்தெடுத்தார். கென்ட், அமெரிக்க ராணுவத்தில் ‘கிரீன் பெரெட்’ ஆக 11 போர்ப் பணிகளில் பணியாற்றியுள்ளார். இவரின் ராணுவத் தலைமைத்துவம், உளவுத்துறை, போர் அனுபவம், பயங்கரவாத எதிர்ப்பு நிபுணத்துவம், டிரம்ப்-ன் வெளியுறவுக் கொள்கைக்கு கொடுத்த பொது ஆதரவினாலேயே இப்பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுத் தேர்ந்தெடுக்கவும் பட்டார்.

ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கையைத் தொடங்குவதற்கான நிர்வாகத்தின் முடிவை கடுமையாக எதிர்த்ததால் கென்ட் பதவி விலகினார். தனது ராஜினாமா கடிதத்தில், “நல்ல மனசாட்சியுடன்” இந்தப் போரை ஆதரிக்க முடியாது. ஈரான் அமெரிக்காவிற்கு உடனடி அச்சுறுத்தலை ஏற்படுத்தவில்லை. இந்த மோதல் ட்ரம்ப் பிரச்சாரம் செய்த தலையிடாமைக் கொள்கைகளுக்கு முரணானது என்றும் அவர் வாதிட்டார்.

ட்ரம்ப், கென்ட்டின் கூற்றுகளை நிராகரித்து, ராணுவ நடவடிக்கையை நியாயப்படுத்தினார். மேலும், ஈரான் ஒரு அச்சுறுத்தல் அல்ல என்று நம்பும் அதிகாரிகளுக்குத் தனது நிர்வாகத்தில் இடமில்லை என்றும் கூறினார். கென்ட்டின் ராஜினாமா, ட்ரம்ப் அரசின் தேசியப் பாதுகாப்புக் குழுவிற்குள் ஏற்பட்டிருக்கும் பகிரங்கப் பிளவுகளை வெளிப்படுத்தியதுடன், வெளிநாட்டு மோதல்களில் அமெரிக்காவின் பங்கு குறித்த கருத்து முரண்பாடுகளையும் சுட்டிக் காட்டியுள்ளது.

தற்பொழுது ‘ஜோ வெய்ர்ஸ்கி தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ட்ரம்ப்பின் மிகவும் வழக்கத்திற்கு மாறான நியமனங்களில் தேசிய உளவுத்துறை இயக்குநராக இருந்த ‘துளசி கபார்ட்’டும் ஒருவர். ஹவாய் தீவைச் சேர்ந்த முன்னாள் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், ஈராக் போரில் பங்கேற்றவரும், அமெரிக்க ராணுவ ரிசர்வ் படையில் தொடர்ந்து பணியாற்றி வருபவருமான கபார்ட், பிரதிநிதிகள் சபையின் ஆயுத சேவைகள் மற்றும் வெளியுறவுக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். அவர் ஒரு காலத்தில் ஜனநாயகக் கட்சிக்காரராக இருந்தபோதிலும், பின்னர் ஒரு சுயேச்சையாக மாறி, டிரம்ப்-ன் “அமெரிக்கா முதலில்” என்ற வெளியுறவுக் கொள்கையின் வலுவான ஆதரவாளராக உருவெடுத்து, அதிபரின் மிகவும் வழக்கத்திற்கு மாறான அமைச்சரவைத் தேர்வுகளில் ஒருவரானார். குடியரசுக் கட்சிக்கு வெளியிலிருந்தும் ஆதரவாளர்களைத் திரட்டுவதில் ட்ரம்ப்பின் விருப்பத்தையும் இந்த நியமனம் வெளிப்படுத்தியது.

தனது கணவரின் உடல்நலக்குறைவு தொடர்பான குடும்பக் காரணங்களைக் கூறி, மே 22, 2026 அன்று தேசிய உளவுத்துறை இயக்குநர் (DNI) பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும், அவரது பதவிக்காலம் சர்ச்சைகள் அற்றதாக இருக்கவில்லை. 2025 ஆம் ஆண்டு முழுவதும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் வெளியுறவுக் கொள்கை, குறிப்பாக ஈரானில் அமெரிக்க ராணுவத் தலையீடு தொடர்பான தனது சுதந்திரமான கருத்துக்களுக்காக காபார்ட் விமர்சனங்களை எதிர்கொண்டார். உளவுத்துறை மதிப்பீடுகள், தேசியப் பாதுகாப்புக் கொள்கை தொடர்பாக நிர்வாகத்திற்குள் பதட்டங்கள் நிலவியதாகவும் சில அறிக்கைகள் விவரித்தன. இருப்பினும் இந்தக் கருத்து வேறுபாடுகளே அவரது ராஜினாமாவுக்குக் காரணம் என்பதற்கு அதிகாரப்பூர்வ ஆதாரம் எதுவும் இல்லை. அவர் வெளியேறுவதற்கு முன்பு ஒரு இந்து மத அமைப்புடன் அவருக்கு இருந்த கடந்தகாலத் தொடர்புகள் குறித்த ஆய்வை ஊடக அறிக்கைகள் மீண்டும் தொடங்கின. இந்தக் குற்றச்சாட்டுகளை காபார்ட்டும் அவரது ஆதரவாளர்களும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும் இந்துக்களுக்கு எதிரானவை என்றும் நிராகரித்தனர்.

அவரது ராஜினாமா ஜூன் 30, 2026 அன்று நடைமுறைக்கு வந்தது. அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து விலகிய நான்காவது அமைச்சரவை உறுப்பினரானார். அவரது ராஜினாமா அதிகாரப்பூர்வமாக குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படையில் அமைந்திருந்தாலும், உளவுத்துறையிலும் வெளியுறவுக் கொள்கை குறித்த நிர்வாகத்திலும் ஒலித்த மிகத் தனித்துவமான குரல்களில் ஒன்றின் இழப்பைக் குறிக்கிறது. நிரந்தர இயக்குநர் உறுதிசெய்யப்படும் வரை ‘பில் புல்டே’வை தேசிய உளவுத்துறையின் தற்காலிக இயக்குநராக அதிபர் ட்ரம்ப் நியமித்துள்ளார்.

அமைச்சரவைச் செயலாளர் பதவியில் இல்லாவிட்டாலும், அரசாங்க செயல்திறன் துறை (DOGE) மூலம் ட்ரம்ப்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக ‘எலான் மஸ்க்’ இருந்தார்.

உலகின் மிகப் பெரிய பணக்கார தொழிலதிபர். முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர். செலவுகளைக் குறைப்பதிலும் விரைவாகச் செயல்படுவதிலும் நற்பெயர் பெற்றவர். கூட்டாட்சி அதிகாரத்துவத்தின் அளவைக் குறைக்கக்கூடிய ஒருவராக அதிபரால் கருதப்பட்டார். பெரும் பணியாளர் குறைப்புகளைச் செய்ய அவர் மேற்கொண்ட சீர்திருத்த முயற்சிகள், தொழில்நுட்ப நவீனமயமாக்கல் முன்மொழிவுகள் பல விமரிசனங்களையும் சட்டரீதியான சவால்களையும் எதிர்கொண்டது உலகறிந்ததே.

இவர்களின் விலகல்களைத் தொடர்ந்து அதிபர் டிரம்ப் தனது நிர்வாகத்தில் கூடுதல் மாற்றங்களைச் செய்வாரா என்பதில் தற்பொழுது கவனம் திரும்பியுள்ளது. பெயர் குறிப்பிட விரும்பாத வெள்ளை மாளிகை வட்டாரங்களை மேற்கோள் காட்டி, வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லட்னிக், FBI இயக்குநர் காஷ் பட்டேல் மற்றும் ராணுவச் செயலாளர் டேனியல் டிரிஸ்கால் ஆகியோர் பல்வேறு சமயங்களில் பதவியிலிருந்து நீக்கப்படக்கூடிய சாத்தியமான வேட்பாளர்களாக விவாதிக்கப்பட்டதாகச் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், ஜூன் 2026 இறுதி நிலவரப்படி, வெள்ளை மாளிகை எந்த அமைச்சரவைப் பதவி நீக்கங்களையும் அறிவிக்கவில்லை, அந்த மூன்று அதிகாரிகளும் தங்கள் பதவிகளில் நீடிக்கின்றனர்.

தலைப்புச் செய்திகளையும் அரசியல் விவாதங்களையும் கடந்து, அதிபர் டிரம்ப்-ன் இரண்டாவது நிர்வாகத்திலிருந்து ஏற்பட்ட விலகல்கள், அதிபர் பதவி என்பது வெள்ளை மாளிகையில் இருக்கும் நபரால் மட்டுமல்ல, நாட்டின் நிறுவனங்களை வழிநடத்தத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாலும் வரையறுக்கப்படுகிறது எனும் ஒரு எளிய உண்மையை எடுத்துக்காட்டுகின்றன. அதாவது, அமைச்சரவைச் செயலாளர்கள், உளவுத்துறைத் தலைவர்கள், முகமைத் தலைவர்கள், எல்லைப் பாதுகாப்பு, பொதுப் பாதுகாப்பு முதல் வேலைவாய்ப்புகள், சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் வரை அனைத்தையும் பாதிக்கும் முடிவுகளை எடுக்கிறார்கள். அந்தத் தலைவர்கள் மாறும்போது ​​முன்னுரிமைகளும் மாறக்கூடும்.

அரசியல் தலைவர்கள் வருவார்கள் போவார்கள், ஆனால் அவர்கள் வழிநடத்தும் நிறுவனங்கள் நிலைத்திருக்கும். அமைச்சரவையிலோ அல்லது உயர் தலைமையிலோ ஏற்படும் ஒவ்வொரு மாற்றமும் நிர்வாகத்தை வலுப்படுத்துமா அல்லது பலவீனப்படுத்துமா என்பது விலகும் அதிகாரிகளின் எண்ணிக்கையால் அல்ல, மாறாக அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றி பொதுமக்களுக்குத் திறம்பட சேவை செய்கிறதா என்பதைப் பொறுத்தே தீர்மானிக்கப்படும்.

இந்த விலகல்கள், ஜனநாயகம் என்பது ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரு அதிபரைத் தேர்ந்தெடுப்பது மட்டுமல்ல நமது சார்பாக யார் முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதும் அரசாங்கம் ஒவ்வொரு நாளும் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் எடுத்துரைக்கிறது.

அமைச்சரவை உறுப்பினர்களின் பெயர்கள் தேர்தல் வாக்குச்சீட்டுகளில் இடம்பெறாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் எடுக்கும் முடிவுகள் ஒவ்வொரு நாளும் அமெரிக்கர்களின் வாழ்க்கையை வடிவமைக்கின்றன. அவர்கள் யார், ஏன் விலகுகிறார்கள், அவர்களுக்குப் பதிலாக யார் பதவியேற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது என்பது வெறும் அரசியல் நலன் சார்ந்த விஷயம் மட்டுமல்ல. அது தகவலறிந்த குடிமக்களாக இருப்பதன் ஒரு பகுதியாகும். ஜனநாயகத்தில், தகவலறிந்த குடிமக்களே நல்லாட்சியின் மிக வலிமையான பாதுகாப்பு அரணாக இருக்க முடியும்.

பிரிவு

சில பிரிவுகள்
வயதைக் கேட்பதில்லை.

சில மரணங்கள்
காலத்தின் கதவைத் தட்டுவதில்லை.

ஒருவர் மறைவது
ஒரு உயிரோடு நின்றுவிடுவதல்ல.

ஒரு தாயின் இதயத்தில்
ஒரு மூச்சு குறைவது.

ஒருதந்தையின் கண்களில்
மறைக்கமுடியாத வெறுமைபிறப்பது.

நாளைய கனவுகள்
ஒரேநொடியில் சிதறிப்போவது.

பதில் சொல்லமுடியாத
ஒருமௌனம் வீட்டுக்குள் குடியேறுவது.

மரணம்
ஒரு மனிதரை மட்டுமே அழைத்துச் செல்கிறது.

ஆனால்...

அவரை நேசித்த
ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும்


ஒரு சிறு பகுதியை
தன்னோடு எடுத்துச் செல்கிறது.

இறைவன்
ஏன் சிலரை இவ்வளவுசீக்கிரம் அழைக்கிறான்


என்பதை
மனிதன் அறிய முடியாமல் இருக்கலாம்.

அவர்கள் விட்டுச்சென்ற நினைவுகள் மட்டும் 

மரணத்தை வென்று
வாழும்.

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...