Friday, November 18, 2022

நானே நானா யாரோ தானா

இன்று மாலை கோவிலுக்குச் சென்றிருந்தோம். உள்ளே நுழைந்தவுடன் என்னடா இத்தனை ஜோடி செருப்புகள் இருக்கிறதே என்று ஆச்சரியமாக இருந்தது. இந்தக் குளிரிலும் பள்ளி நாளிலும் இத்தனை பேர் கோவிலுக்கு வந்திருக்கிறார்களே ஏதாவது விசேஷமா என்று உள்ளே சென்று பார்த்தால்,
ஐயப்பனுக்கு அபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. பத்து மலையாளி குடும்பங்கள் அங்கிருந்தன. "இன்னிக்கு மண்டல பூஜை ஆரம்பம்" என்று அய்யர் கூறவும், நாளைக்குத் தானே கார்த்திகை மாசம் என்று குழப்பமாகிவிட்டது எனக்கு😕

சுவாமிக்கு மாலைத் தொடுக்க உதவிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சுருட்டைமுடி அழகி மை தீட்டிய கண்களுடன் 'பளிச்'சென்று சிரித்துக் கொண்டே "துளசி கல்யாண பூஜை எப்படி நடந்தது" என்று கேட்டார். இதற்கு முன் இவரை நான் பார்த்தது கூட இல்லை. துளசி கல்யாண பூஜையைப் பற்றி இவர் ஏன் என்னிடம் கேட்கிறார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அவரே, "நீங்கள் தானே பூஜைக்கு என்னை வரச் சொன்னீர்கள்" என்று அடுத்த குண்டைப் போட்டார். நானா? எப்போது? என்றவுடன் 
"நீங்கள் இல்லையா? சாரி! அவர் உங்களைப் போலவே இருந்தார். அதான்..." வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே நகர்ந்தார் மலையாளக் கரையோரம் இசை பாடும் அழகி.😍

அடடா! ஆல்பனியில என்னைய போல எத்தனை பேரும்மா இருக்கீங்க?😉

இங்கே தான் இந்தக் கதை என்றால் கேதார்நாத் செல்கிற வழியில சந்தித்த செட்டியார்கள் குடும்பத்தில் ஒருத்தரும் "இவங்க சிரிக்கிறது பேசுறத பார்த்தா யார் பெயரையோ சொல்லி அவங்க மாதிரி இல்ல" என்று...😟😆

இப்படித்தான் நியூயார்க் விநாயகர் கோவில் உணவகத்தில் வரிசையில் காத்திருந்த பொழுது பின்னாடி நின்றிருந்தவர்கள் அட! நம்ம ஆல்பனி மக்கள். வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அவர் வேறு பெயரில் என்னை அழைத்தார். நான் திரும்பிப் பார்க்கவில்லை. இரண்டாவது முறையும் யாரையோ அழைக்கிறார் போல என்று நினைத்துத் திரும்பினால் "சாரி! இவரோட மன்னி அப்படியே உங்களை மாதிரியே இருப்பா. அதான் லதான்னு பேரு கூட மறந்துடுச்சுப் பாருங்க." என்றார். பிள்ளையாரப்பா...அந்த மன்னி யாரப்பா?😝

நியூஜெர்ஸியியில் நண்பர் ஒருவரின் மகன் திருமணத்திற்குச் சென்றிருந்த பொழுது அவர்களுடைய பழக்க வழக்கங்களைக் காணும் ஆசையில் முதல் வரிசையில் உட்கார்ந்து திருமண வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல உயரமான அழகான பெண்மணி இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தார். நானும் அவர் கட்டியிருந்த சேலை நன்றாக இருக்கிறதே? நல்ல வடிவாக வேறு இந்தப் பெண்மணி இருக்கிறாரே என்று பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென திரும்பிப் பார்த்தவர் சிரித்துக் கொண்டே அருகில் வந்து அவரை அறிமுகப்படுத்திக் கொண்டு
"உமாவோட சிஸ்டரா நீங்க?" என கேட்க,
"உமாவா ? அவங்க யாரு?" என நான் "திருதிரு"வென முழிக்க,
"பொண்ணோட அம்மா தான் உமா. என் ஃபிரெண்ட்." என்றார்.
"அப்படியா? நான் மாப்பிள்ளை வீட்டுச் சார்பா வந்திருக்கேன்" என்றவுடன், பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு "உங்க ஊர்ல இருக்கிற இவரைத் தெரியுமா?" என்று ஆல்பனியில் பிரபலமான மருத்துவரைக் கேட்டார்.
"ஓ! நல்லா தெரியுமே. நல்ல மனிதர். நன்கொடையாளர். என் கணவருக்கு நல்ல பழக்கம்." என்றவுடன் 'டபக்'கென்று ஃபோனில் அவரை அழைத்து அவரும் ஃபேஸ்டைமில் வர, சிறிது நேரம் பேசினோம். பிறகு அந்தப் பெண்மணி என்னை அழைத்துக் கொண்டு போய் அங்கிருந்த அவருடைய அம்மா, அப்பாவை அறிமுகம் செய்து வைத்தார். அவர்களும், "நாங்க உன்னைய கோவில்ல பார்த்திருக்கிறோம்மா" என்றார்கள். இந்தப் பெண்மணியின் தங்கை எங்கள் ஊரில் இருக்கிறாளாம்.
அப்பப்பா! சிறிது நேரத்தில் என்னமாய் பேசிவிட்டாள் அழகி😊

நண்பர்களுடன் டொரோண்டோ கோவிலுக்குச் சென்றிருந்த பொழுது பெருமாள் சந்நிதியில் பட்டர்,
"என்ன இப்பல்லாம் கோவில்ல சுத்தமா பார்க்க முடியறதுல்ல?" என கேட்கவும் யாரைக் கேட்கிறார் என்று சுற்றிப் பார்த்தால் அவர் என்னைத் தான் கேட்டுக் கொண்டிருந்தார்.
"என்னையா? நான் ஆல்பனியிலேருந்து வந்திருக்கேன்." ஒரு அசட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன். ஆஹா! டொரொன்டோல இருக்கிற என்னோட 'டூப்' யாருன்னு தெரியலையே?😛

ஒரு முறை ஆல்பனி கோவிலில் நான் பாட்டுக்கு சிவனே என்று சாமி கும்பிட்டுத் திரும்புகையில்
"நேத்து நீங்க ரொம்ப நல்லா பாடினீங்க?" என்று அப்பாவியாக ஒரு பெண் சொல்லவும்,
"நானா? பாடினேனா?" நமக்குத் தான் சங்கீதம்னாலே கிலோ என்ன விலையாச்சே என்று யோசித்து
"நீங்க என்னைய மாதிரி வேற யாரையோ பார்த்திருக்கீங்க" என்றவுடன் "அப்படியே உங்களை மாதிரியே இருந்தாங்க" என்றார். ஒரு பாடகி பேர வச்சது என் குத்தமா உன் குத்தமா யாரை நானும் குத்தம் சொல்ல...😜

கல்லூரியில் என்னைப் போலவே ஒரு சீனியர் மாணவி இருந்தாள். பார்க்க கொஞ்சம் அவளும் என்னைப் போல இருப்பாள். பள்ளியில் இருந்தே அவள் தான் என் அக்கா என்று பலரும் நினைத்திருந்தார்கள். கல்லூரியிலும் பலர் கேட்டார்கள். எனக்கு வகுப்பெடுத்த விரிவுரையாளர் ஒருவரையும் என் அக்காவா என்று கேட்பார்கள். கொஞ்சம் ஒத்துக்கலாம்.

எங்கள் சமூகத்து மக்கள் சிலர் நான் குப்பா வீட்டுப்பெண் என்பதை மறந்து "அவங்க வீட்டுப்பெண்ணா? இவங்க வீட்டுப்பெண்ணா?" என்று வேறு வேறு குடும்ப பெயர்களைச் சொல்லிக் கேட்பார்கள். அதிலாவது கொஞ்சம் நியாயம் இருக்கிறது. எங்கள் சமூகத்தில் கொஞ்சம் முகம் ஒத்துப்போகும்.

ஆனால் மற்றவர்கள் கேட்கையில் 'நவராத்திரி' சிவாஜி மாதிரி மற்ற கெட்டப்களையும் பார்த்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்துக் கொள்வேன்😇😇😇

ஒரு முகம்
ஒவ்வொருக்கும் புதுமுகமாக
தெரிவது ஏனோ?






No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...