Thursday, May 30, 2019

Prom night


மே மாதம் என்றாலே மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்று (ஜூனியர் வருடம்) மற்றும் பன்னிரண்டாம் (சீனியர் வருடம்) வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு கொண்டாட்டமான மாதம். இம்மாதத்தில் தான் ஒரு மாலையில் ஜூனியர் ப்ராம் மற்றும் சீனியர் ப்ராம் கொண்டாடுகிறார்கள். நண்பர்களுடன் கூடி ஆடி மகிழும் சில மணிநேர குதூகலமான நிகழ்ச்சி இது. மறக்க முடியாத தருணங்களும் கூட! கல்லூரி இறுதியாண்டில் நடந்து கொண்டிருந்த இந்நிகழ்ச்சி பள்ளி இறுதி ஆண்டிலும் ஆரம்பித்துப் பல வருடங்களாக சிறப்பாக நடந்து வருகிறது.

மேல்நிலைப்பள்ளிகளில் "டான்ஸ் நைட்" என்று வருட இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியின் ஸ்டைலிஷ் வெர்ஷன் தான் இந்த "ப்ராம் நைட்". மாணவிகள் அழகழகு உடைகளில் வலம் வர, மாணவர்கள் அந்த இரவுக்கென்றே பிரத்தியேகமான tuxedo அணிந்து கொண்டு தங்களுடைய நண்பர்களுடன் உண்டு ஆடி மகிழும் நாள். உடைகள் வாங்குவதில், தலையலங்காரம் செய்து கொள்வதில் என்று படிப்புடன் இதற்காகவும் நேரத்தைச் செலவழிக்கும் குழந்தைகளுக்காக கையிருப்புகளைச் செலவழிப்பார்கள் பெற்றோர்கள். வேறு வழியில்லை என்பது தான் நிதர்சனம்.

மகளின் ப்ராம் நைட் அன்று லிமோசின் வண்டியை ஒரு மணிநேரத்திற்கு வாடகை எடுத்துக் கொண்டு அதில் அவள் தோழிகள் நால்வருடன் நகரை வலம் வந்து நடன நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் சென்று ஆடிப்பாடி உண்டு மகிழ்ந்து இனிய நினைவுகளுடன் வந்தார்கள். அவளுடைய தோழிகளில் ஒருவர் 500 டாலருக்கு உடை வாங்கியது கண்டு பெருத்த அதிர்ச்சி எனக்கு! மகளும் அவளுக்குப் பிடித்த உடையை 100 டாலருக்குள் வாங்கிக் கொண்டாள். நிகழ்ச்சி நாளன்று தலையலங்காரத்துக்கென தனி செலவு! அங்கு வந்திருந்த மாணவிகளைப் பார்த்த பொழுது ஏதோ ஆஸ்கார் விருது நிகழ்ச்சிக்குச் செல்வது போல் அத்தனை அலங்காரம்! விலையுர்ந்த ஆடைகள்! பிரமிப்பாகத் தான் இருந்தது!

சென்ற வாரம் சுப்பிரமணியும் அவன் நண்பர்களுடன் சென்று வந்தான். மகளுக்குச் செய்த செலவுகளை விட அதிகமாக செலவழிக்க வேண்டியிருந்தது!

இந்த ஓரிரவுக்காக பெண்கள் உடைகளுக்காகவும் அலங்காரங்களுக்காகவும் குறைந்தபட்சம் $150 வரை செலவு செய்கிறார்கள். அமெரிக்கர்கள் இதில் கொஞ்சம் தாராளம். அதிக செலவுகள் செய்வோரும் உண்டு! செலவிற்குப் பயந்தும் இதெல்லாம் ஹராம் என்று நினைப்பவர்களும் தங்கள் குழந்தைகளை இதில் பங்கேற்க அனுமதிப்பதில்லை. வாழ்வில் ஒரு அங்கமாக நண்பர்களுடன் இனிமையாக கழியும் பொழுதுகள். இதில் ஒன்றும் தவறு இல்லை. அவர்களே வேண்டாம் என்றால் ஒகே. அமெரிக்கா வந்த பிறகு இது நம் கலாச்சாரம் பண்பாடு இல்லை என்று கூச்சல் போட்டு தவறு செய்து விடுவார்களோ என்று அஞ்சுபவர்கள் தங்கள் குழந்தைகளின் மேல் நம்பிக்கை இல்லாதவர்கள். அதிக ஆசையுடன் தத்தம் நண்பர்களுடன் இந்நிகழ்ச்சிக்குச் செல்ல ஆசைப்படும் குழந்தைகளைத் தடுப்பதால் வருத்தம் மட்டுமல்ல பெற்றோர்கள் சொல்லும் காரணங்களின் மீதும் வெறுப்பு ஏற்பட்டு இந்த அனுபவத்தைத் தவற விடும் குழந்தைகள் பின்னாளில் பெற்றோர்கள் மேல் கோபபப்படவும் செய்யலாம்.

இந்நிகழ்ச்சிக்குச் செல்ல அனுமதிச்சீட்டின் விலை $85. இது அரங்கம், உணவு, டிஜேக்கான செலவிற்காக. இது மட்டுமா? மாணவன் ஒருவன் மாணவியை தன்னுடைய "ப்ராம் டேட்" ஆக அழைத்துச் செல்ல வேண்டுமென்றால் அவளுக்கும் சேர்த்தே அனுமதிச்சீட்டு வாங்க வேண்டும். பூங்கொத்து செலவு வேறு தனி! இதற்காக முறையாக அவளின் அனுமதி பெற வேண்டும். சில மாணவிகள் மாணவர்களை நிராகரிப்பதும் நடக்கிறது. அதற்காக ஆசிட் வீச்சு என்று வன்முறையில் எல்லாம் இறங்குவதில்லை. பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொள்கிறார்கள் மாணவர்கள். இந்த மனமுதிர்ச்சியில் தான் நாம் பின் தங்கியிருக்கிறோமோ? இங்கு தான் வேறுபடுகிறோமோ?

சுப்பிரமணியிடம் நிகழ்ச்சியைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையில் இது ஒரு நல்ல நிகழ்ச்சி தான். ஆனால் இந்த பகட்டும் ஆடம்பரமும் தேவையில்லாத ஒன்று என்று தெரிந்து கொண்டதாக கூறினான். தன்னுடன் படிக்கும் இந்திய மாணவி ஒருத்தி மட்டும் சேலையில் வந்திருந்தாள். "I respect you." என்று அவளை பாராட்டியதாகச் சொல்லி, ஏன் இத்தனை செலவு செய்து உடைகள், அதுவும் சில மணிநேரங்களுக்காக கிரிமினல் வேஸ்ட் என்று செலவு செய்ததை எண்ணி வருத்தப்பட்டான். இந்நிகழ்ச்சியை வைத்து எப்படி வியாபாரம் செய்கிறார்கள்? மக்களை எப்படி மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள் என்றும் ஆச்சரியப்பட்டான்! 

பூக்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள், வாடகை லிமோசின் வண்டிகள், நிகழ்ச்சிக்குப் பின்னான பார்ட்டிகள், உணவுகள், நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் என்று ஒரு பெரிய தொழிலாகவே மாறி பலதரப்பட்ட நிறுவனங்களுக்கும் லாபகரமான மாதம் இது.

இத்தனை செலவுகள் செய்து இந்த நிகழ்ச்சி தேவையில்லை. ஆடம்பரமில்லாமலும் நன்றாகவே கொண்டாட முடியும். ஆனால், அமெரிக்காவில் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் மக்களைச் செலவு செய்ய வைக்கும் நிறுவனங்களின் தந்திரங்கள் நிறைய இருக்கிறது. இவர்களாகவே போலியான ஒரு பிம்பத்தை தோற்றுவித்து  விளம்பரங்கள் வாயிலாக மக்களின் மனதிலும்  அதனை நிறுவி  விற்பனைகள் மூலமாக  கொள்ளை லாபம் பார்ப்பதில் இவர்களை அடித்துக் கொள்ளவே முடியாது!








No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...