Tuesday, June 11, 2019

வளரட்டும் கொடையுள்ளங்கள்

ஒவ்வொரு சமூகமும் தனக்கென ஒரு தொழில் அடையாளத்தைக் கொண்டிருந்தது போல நான் பிறந்த சௌராஷ்ட்ரா சமூகமும் நெசவுத் தொழிலையும் நூல் விற்பனை செய்வதையும் தொழிலாகக் கொண்டிருந்தது. இன்று வரை அது தொடர்ந்தும் கொண்டிருக்கிறது. சோம்நாத் கோவிலின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கொடூர இஸ்லாமியர்களிடமிருந்து தப்பித்து பல்லாண்டுகளுக்கு முன்னால் குஜராத்திலிருந்து தென்னிந்தியாவிற்கு குடிபெயர்ந்தவர்களில் சிலர் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் தங்கி விட, திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை, பரமக்குடி, திண்டுக்கல், சேலம், தஞ்சாவூர் பகுதிகளுக்குப் பலரும் புலம்பெயர்ந்தார்கள்.

இச்சமூகத்து மக்களுக்கு கல்வியறிவை வளர்க்க 1886ல் ஆரம்ப பள்ளி ஒன்று சமூக ஆர்வலர் திரு. L.K. துளசிராம் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.1904ல் அரசின் உதவியுடன் மேல்நிலைப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார். நூற்றாண்டுகளுக்கும் மேலாக உயர்ந்து நிற்கும் கற்கட்டிடம் இன்று பல்வேறு துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் பல மாணவர்களுக்கு கல்வியறிவை ஊட்டிய இடம். கலையுணர்வுடன் கட்டப்பட்டிருக்கும் இப்பள்ளியின் கற்கட்டிடத்தை பாராட்டாதவர்களே கிடையாது. எம்முன்னோர்களால் அக்காலத்திலேயே வழங்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடிய இப்பள்ளியின் பெருமைகளுள் ஒன்று. உணவிற்காக வேலை செய்ய வேண்டிய நிலையில் இருந்த பல குடும்பங்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர வைக்கப் பெரியோர்களால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பின்னாளில் தமிழக முதலமைச்சர் காமராஜரைக் கவர்ந்து அவர் தமிழக அரசுப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். அவருக்குப் பின் MGR அவர்களும் நெறிப்படுத்தினார். இன்று வரை இம்மதிய உண்வுத் திட்டத்தால் பல ஏழை மாணவர்களும் பயனடைந்து கொண்டிருக்கிறார்கள். இப்பள்ளியில் படித்த மாணவர்கள் மேலை நாடுகளில் இருந்தும்  இத்திட்டத்திற்கு இன்று வரை பணஉதவி செய்தும் வருகிறார்கள்.


பெண்கல்வியின் அவசியத்தையும் உணர்ந்த முன்னோர்கள் பெண்களுக்காக 1947ல் ஆரம்பப் பள்ளி ஒன்றையும் பிறகு முதல்வர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்றையும் துவங்கி இன்று வரை பல பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திட்டுள்ளார்கள்.

மேற்படிப்பிற்காக வேறு கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய நிலையில் 1967ம் வருடம் சமூக ஆர்வலர்களாலும் நன்கொடையாளர்களாலும் மதுரை விளாச்சேரியில் சௌராஷ்ட்ரா கலைக் கல்லூரி தொடங்கப்பட்டது. அக்கல்லூரியில் படித்த பல மாணவர்களும் தாங்கள் உயர்ந்தது மட்டுமில்லாமல் தங்கள் குடும்பத்தையும் உயர்த்தினார்கள். பயன் பெற்றோர் எண்ணற்றோர்!

எப்பேர்ப்பட்ட தொலைநோக்கு பார்வையுடன் சுயநலமற்ற எம்முன்னோர்கள் இருந்திருக்கிறார்கள்! இன்று வாழ்க்கையில், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கும் பலரும் உயர் அந்தஸ்து பதவிகளில் இருப்பவர்களும் கல்விக்கூடங்களை அமைத்த பெரியவர்களை நன்றியுடன் நினைவு கூறுவார்கள் என்றே நம்புகிறேன். எட்டு வருடங்கள் இக்கல்லூரியில் கணினியியல் துறையில் விரிவுரையாளராக வேலை பார்த்த பெருமிதமும் எனக்கு உண்டு.

மக்களுக்கு குறைந்த செலவில் நிறைவான மருத்துவம் வழங்க சமீபத்தில் 'பாதே' குடும்பத்தினர்(ரமோலா பெய் & விவேக் பாவா) மதுரையிலிருக்கும் தங்கள் இடத்தை நன்கொடையாக வழங்கி இருப்பதை அறிந்தேன். இதனால் பலரும் பயனடைவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை. உதவும் உள்ளங்கள் இருக்கும் வரை சமூகத்திற்கு நன்மையே! 

தற்பொழுது பொறியியல், நர்சிங், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, பெண்கள் கலைக்கல்லூரி என்று வளர்ந்து கொண்டே இருக்கிறது. இவையெல்லாம் சமூக மக்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்ட பல நன்கொடையாளர்களாலும், ஆர்வலர்களாலும் சாத்தியப்படுகிறது. சமூகத்திலிருந்து பெற்ற பலன்களைச் சிறிதேனும் சமூகத்திற்குத் திருப்பிச் செலுத்த நாம் எல்லோருமே கடமைப்பட்டிருக்கிறோம். முடிந்தவரையில் அடுத்தவருக்கு உதவும் மனப்பாங்கினை வளர்த்துக் கொள்வோம். பெரியவர்கள் நமக்காக விட்டுச் சென்றுள்ள கல்வி நிலையங்களை மேலும் வளர்த்து நல்வழியில் செலுத்திடவும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுத்திடவும் இணைந்து செயல்படுவோம்.

கொடையுள்ளங்களை வாழ்த்துவோம்! வணங்குவோம்! நன்றியுடன் இருப்போம்!


No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...