Friday, June 14, 2019

India's Frontier Railways


'India's Frontier Railways' நெட்ஃப்ளிக்ஸ் தொடர் ஒன்றை மூன்று பாகங்களாக பிபிசி நியூஸ் வெளியிட்டிருக்கிறது. இந்தியாவிலிருந்து நேபால், பங்களாதேஷ் , பாகிஸ்தான் என்று எல்லையைத் தாண்டிச் சென்று வரும் இந்த மூன்று ரயில் பயணங்களின் வாயிலாக அந்நாட்டு எளிய விளிம்பு நிலை மனிதர்களையும், அவர்களின் வாழ்வாதாரங்களையும், நிலப்பரப்பையும் மிக அழகாக மிகைப்படுத்தாமல் வழங்கியதற்கு இத்தொடரை எடுத்த குழுவினரை மனதார வாழ்த்தலாம். சிறு சிறு இடைஞ்சல்களும் வசதிக்குறைவுகள் இருந்தாலும் பேருந்து, விமான பயணங்களில் கிடைக்காத ஒரு சுகம் ரயிலின் ஆட்டத்தில் தன்னை மறந்து பயணம் செய்ய, பலருக்கும் ரயில் பயணம் ஒரு சுக அனுபவமே!

ரயில் நிலையங்களில் வேலை செய்பவர்கள், ரயிலுக்குள் வியாபாரம் செய்பவர்கள், பயணிகள், அவர்களின் கதைகள் என்று ரயிலோடு காடு, மலை, ஆறு, நதிகளென அருமையான ஒரு பயணம். நாடுகளுக்கிடையே இருக்கும் ஒற்றுமை வேற்றுமைகள், மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் விதம், அவர்களின் ஏக்கங்கள், கனவுகள் , ஏழை நாடுகளில் மக்களின் அன்றாட வாழ்க்கையைக் காணும் பொழுது தான் நாம் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலிகள் என்று தோன்றும். ரயில் பயணத்தை விரும்புபவர்களுக்கு இத்தொடரும் மிகவும் பிடிக்கும் ☺



பாகிஸ்தானிலிருந்து மகனின் கண் அறுவை சிகிச்சைக்காக பல நாட்கள் காத்திருந்து சம்ஹுதா எக்ஸ்பிரஸ்சில் டெல்லி வந்து சேருபவரின் அனுபவங்களும், இரு நாடுகளின் பிரிவினைக்குப் பிறகு பிரிந்திருந்த குடும்பங்கள் ஒன்று சேரும் கணங்களும், பிரிவினைக்குப் பின்னான பங்களாதேஷில் இருந்தாலும் கல்கத்தாவிற்கு மைத்ரீ எக்ஸ்பிரஸ்சில் வந்து செல்லும் இந்தியராகவே உணரும் பெண்ணின் வாழ்க்கைப் பயண அனுபவங்களும் , பாகிஸ்தான்-பங்களாதேஷ் போர்க்காலத்தில் வானொலி ஒன்றே இருந்த நாட்களில் வறுமையின் கோரப்பிடியில் எதிர்கொண்ட வாழ்க்கையினை விளக்குபவர் என்று பலதரப்பட்ட மக்களின் நேர்காணல் அவர்களின் பின்னணியிலிருந்து அழகாக எடுத்திருந்தார்கள். இந்த ஏழ்மையிலும் குறைவில்லாத திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என்று பார்ப்போரையும் உற்சாகமாகபடுத்துகிறது இந்த தொடர். ஜனக்பூரிலிருந்து இருபது மைல் தொலைவில் நேபால் செல்லும் ரயில் மட்டும் விரைவிலேயே மூடப்படும் நிலையில் இருக்கிறது. போதுமான நிதி மற்றும் பராமரிப்பு இல்லாததாலும் நடுநடுவே நின்று விடும் ரயில் செல்ல, மக்களே களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள்! இந்த ரயில்களில் வேலை பார்க்கும் பயணச்சீட்டு பரிசோதகர் முதல் வண்டி இயக்குபவர் வரை மிகவும் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதையும் , அவர்களின் வெகுளித்தனமான பேச்சுகளையும் அழகாக எடுத்திருக்கிறார்கள்.


தீவிரவாதத்திற்குப் பெயர் போன நாடுகளின் எல்லை தாண்டிய பயணங்களில் பாதுகாப்பு அவசியம் என்பதால் இந்திய அலுவலகங்களும், பாதுகாப்புத்துறையினரும் கவனமுடன் இருக்கிறார்கள். இந்திய அரசாங்கத்தின் கருணையால் தான் இந்த ரயில்கள் இன்று வரை இந்நாடுக்களிடையே ஓடிக்கொண்டிருக்கிறது. எளிய மக்களிடையே பேதங்கள் இல்லாவிட்டாலும் எல்லைக்கோடுகள் தீர்மானித்து வளர்த்து விடுகிறது தீவிரவாதத்தையும்.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...