Wednesday, May 1, 2019

தொழிலாளர் தினம்

எங்கள் வீட்டிலிருந்து இரண்டாவது தெருவில் காய்கறி, பழங்கள், வாழை இலை, பூக்கள் விற்பனை செய்யும் தெருவோர சந்தையில் வியாபாரம் செய்தவர்கள் பலரும் பெண்களே. காலையில் ஆறு மணிக்கே தலையில் கூடை நிறைய காய்களுடனும் தள்ளு வண்டியிலும் வருபவைகளை ஆண்கள் சிலர் ஒத்தாசை செய்ய இறக்கிக் கொண்டிருப்பார்கள். அவ்வளவு பெரிய வாழைத்தாரை ஒற்றை ஆளாய் வண்டியிலிருந்து தலையில் சுமந்து கீழே இறக்கி வைப்பதும், இலைகளைத் தரம் பார்த்து பிரித்து வைத்து கெட்டிகாரத்தனமாய் வாயாடி வியாபாரம் செய்வதும்,மார்போடு ஒட்டி பால் குடித்துக் கொண்டிருக்கும் குழந்தையை வைத்துக் கொண்டு வாழைத்தண்டை சீவும் இளம்பெண்ணை எப்படி இவ்வளவு சாமர்த்தியமாக, வலிமையாக இருக்கிறார் என்று ஆச்சரியமாய் பார்த்த நாட்களும் உண்டு.

அவர்களுக்குள்ளே பேசி சிரித்துக் கொண்டு அன்று கிடைத்த வருமானத்தை எண்ணிப் பார்த்து அடுத்த நாள் வியாபாரத்திற்குத் தயாராகும் அப்பெண்கள் பலருக்கும் குடும்பம், குழந்தைகள் என்று உண்டு. இவர்களின் சம்பாத்தியம் அவர்களுக்குத் தேவை. இப்படி குடும்பத்திற்காக, தனக்காக என்று சுயமாக உழைத்த பெண்களை என்னையறியாமல் மரியாதையுடன் கடந்து வந்திருக்கிறேன்.

முகம் நிறைய சுருக்கங்களுடன் தொங்கட்டான் பாட்டிகள் சுணங்காமல் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்து குடும்பத்தை கரையேற்றி வருவது காலம் காலமாக தொடர்கிறது. இவர்களுடன் மிகுந்த ஆர்வத்துடனும், வியப்புடனும் பழகியிருக்கிறேன். வெயில் சாயும் வரை கொண்டு வந்த பொருட்களை விற்று முடிக்கும் வரை அவர்களின் சாப்பாடும் அவ்விடத்தில் தான்! இயற்கை உபாதைகளை அதுவும் பெண்களின் மாதாந்திர பிரச்னைகளை எப்படி கையாண்டிருப்பார்கள் என்று நினைக்கவே மலைப்பாக இருக்கிறது! வசதியாக வீட்டில் இருந்து கொண்டே எத்தனை ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறோம்!

அனைவரும் தூக்குச்சட்டியில் பழைய சோறும், சின்ன தட்டில் ஊறுகாயும் கொண்டு வந்திருப்பார்கள். நடுநடுவே காஃபி, புகையிலை, வெத்திலை என்று வாயையும், வயிற்றையும் நிரப்பிக் கொண்டு வாரியர் டயட், இன்டெர்மிட்டண்ட் ஃபாஸ்டிங் என்று அலப்பறை செய்யாமல் இயற்கையாகவே இருக்க வேண்டிய சூழ்நிலையில் வெயிலில் வைட்டமின் டியும் கிடைத்து உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும்


இனிய தொழிலாளர் தின வாழ்த்துகள் !

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...