Thursday, October 10, 2019

World Mental Health Day 2019


ஐந்தில் ஒரு நபர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பலரும் அதற்கான மருத்துவத்தையோ ஆலோசனைகளையோ முறையாக பெறுவதில்லை என்றும் அதனைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10 அன்று உலக மனநல விழிப்புணர்வு தினமாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. இந்நாளில் மக்களிடையே கருத்தரங்குகளும் மருத்துவர்களின் ஆலோசனைகளும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகளும் என்று அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய அரசாங்கம் பல நிகழ்ச்சிகளையும் விளம்பரங்களையும் செய்து வருகிறது.

இன்று பலரும் மன அமைதியின்றி சோகங்களையும் துக்கங்களையும் யாருக்கும் தெரியாதவாறு சுமந்து கொண்டு விரக்தியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் தன்னைப் பற்றி என்ன நினைத்துவிடுவார்களோ என்ற அச்சமும், சமூகத்தின் நிராகரிப்பும், கிண்டல் கேலிகளை நினைத்து யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத சோகங்கள் மன அழுத்தத்தில் வந்து முடிகிறது. குழந்தைகளின் படிப்பு, கணவரின் வருமானம், உடல்நலம், குடும்பப்பிரச்னைகள், வேலையிடத்து நிர்பந்தங்கள், ஏற்றத்தாழ்வுகள், சமூகவலைத்தளத்தின் கணிசமான பங்குகள், தன்னைத் தவிர மற்றவர் எல்லோரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள் என்ற தாழ்வுமனப்பான்மையில் தொடங்கும் மன அழுத்தம் நிம்மதியற்ற குடும்பத்தை உருவாக்குகிறது. இதில் அந்த குடும்பமே பாதிக்கப்பட்டாலும் அதற்கான தீர்வை நோக்கி யாரும் செல்வதில்லை. மேலும் மேலும் பிரச்னைகளை வளர்த்து ஏதோ பிறந்து விட்டோம் வாழ்கிறோம் என்ற ரீதியில் தான் புழுங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தீவிர மனஅழுத்தம் தற்கொலைக்கும் வித்திடுகிறது. இந்நாளில் தற்கொலை எண்ணத்திலிருந்து வெளிவருவது பற்றின விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்கொலையால் பாதிக்கப்படப்போவது அவரின் நெருங்கிய குடும்பம் தான். அதிலிருந்து மீள அவர்கள் போராடுவதைப் பார்ப்பதற்கு தான் அவர்கள் இருப்பதில்லை. எந்த பிரச்னைக்கும் தீர்வு உண்டு என்று நம்புபவர்களும் அத்தீர்வினை நோக்கிச் சிந்திப்பவர்களும் தான் மன வியாதியிலிருந்து வெளிவருகிறார்கள்.

அமெரிக்கா வந்த பிறகு தான் வெளிபப்டையாக பாதிக்கப்பட்டவர்களையும் அதற்கான தீர்வுகளையும் அறிந்து கொண்டேன். இந்தியாவில் நான் இருந்தவரையில் மனநல மருத்துவரிடம் செல்வதை தவிர்த்தவர்களே அதிகம். இன்று அதில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது போல் தெரிகிறது. உடல்நலத்திற்கான மருத்துவ ஆலோசனை போலவே மனநலத்திற்கான ஆலோசனைகளும், மருத்துவமும், மருந்துகளும். புரிந்து கொண்டால் யாவருக்கும் நலம்.

மன அழுத்ததிலிருந்து வெளிவர தடையாக இருப்பது பாதிக்கப்பட்ட நபர் வெளிப்படையாக பேசாததும் புரிந்து கொள்ளாத சுற்றமுமே! தன்னுடைய மனஅமைதியையும் குலைத்து தான் செய்வது தவறு தன்னைச் சுற்றி இருப்பவர்கள் காயப்படுகிறார்கள் என்று தெரிந்தும் மென்மேலும் வார்த்தைகளாலும் செயல்களாலும் சாடுபவர்களைத் தக்க மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்று அந்நோயிலிருந்து மீள வழி செய்ய வேண்டும்.

இன்று பலருக்கும் மன அழுத்தம் பல்வேறு காரணங்களால் அதிகரித்து இருக்கிறது. கணவரால் 46% பெண்கள் மனஅழுத்தத்திற்கு உள்ளாவதாகவும் , 75% குடும்ப பொறுப்புகளைப் பெண்கள் கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும் இதைத்தவிர பணிச்சுமை , நண்பர்களின் போர்வையில் வருபவர்கள் தரும் துன்பங்கள் தங்களைத் துயரப்படுத்துகிறதென ஆய்வில் கூறியிருப்பதாக வானொலியில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். முடிவில், மனச்சோர்வுடன் இருப்பது குற்றமல்ல. அக்குறையை போக்கிக் கொள்ள தகுந்த மருத்துவ ஆலோசனையும்,மருந்துகளும், உடனிருப்பவர்களின் அன்பும், கரிசனமும் இருந்தால் போதும். தாழ்வு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களையும் உங்களைச் சுற்றியுள்ளோரையும் மிகவும் பாதிக்கும். மனவருத்தத்துடன் இருப்பவர்களுக்காக பல ஹெல்ப்லைன்களை அணுகி ஆலோசிக்கவும் என்று கூறி பேச்சை முடித்தார்கள்.

வீட்டில் போதிய ஆதரவும் புரிந்து கொள்ளலும் கிடைக்காத பள்ளிகளில் தடுமாறும் குழந்தைகள் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். பள்ளிகளும் பெற்றோர்களும் அதிக கவனம் எடுத்து வழிநடத்திச் செல்ல வேண்டிய பருவம் இது. இங்கு பள்ளிகளில் கூட தகுந்த மன ஆலோசகர்கள் மாணவர்களை கண்காணித்து வழிநடத்துகிறார்கள். இருந்தும் பல வேதனை மிகுந்த சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டுதானிருக்கிறது. பள்ளியிலிருந்து ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் குழந்தைகளுக்குத் தியானம், யோகா போன்றவற்றை அறிமுகப்படுத்தி மனதை ஒருமைப்படுத்தும் வழிகளைப் பள்ளிகளில் ஆரம்பிக்க வேண்டும். சில பள்ளிகளில் வெற்றிகரமாக செய்தும் விட்டார்கள் என்று கூறினார்.

இன்றைய அவசர உலகில் நமக்கான நேரத்தை ஒதுக்கி நம்மை பல வழிகளில் மேம்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. மனம் வாடி வருந்தி இருப்போருக்குத் தேவை ஆறுதலும், மனம் விட்டுப்பேச மனிதர்களும், நல்வழிகாட்டுதலும் தான். நமக்குள் இருக்கும் மனநோயை கண்டறிவோம். துன்புறும் நம் நண்பர்களுக்குத் தோள் கொடுத்து உதவுவோம்.

செவி சாய்த்து ஆறுதல் அளிக்கும் மனிதர்களாவோம்.

#worldmentalhealthday

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...