Wednesday, February 21, 2024

நல்ல மனம் வாழ்க!

சுவாரசியங்களுக்குக் குறைவில்லாதது மதுரை. காலையில் மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றி வலம் வருகையில் மேலச்சித்திரை வீதியில் 'துறுதுறு'வென்று ஒருவர் காலை உணவை விற்றுக் கொண்டிருந்தார். அவரைப் பற்றி ஏற்கெனவே யூடியூபில் பார்த்திருக்கிறேன். நான்கைந்து எவர்சில்வர் தூக்குவாளிச் சட்டிகளில் இட்லி, வெண்பொங்கல், வடை, சட்னி, சாம்பாரை சைக்கிளில் எடுத்துக் கொண்டு வருகிறார். சமயங்களில் தக்காளி சாதம், புளியோதரையும் கிடைக்கிறது. விலையும் மிகக்குறைவு. மூடியிருக்கும் கடை வாசலில் அவற்றை இறக்கி வைத்து விட்டு நிமிருவதற்குள் வாடிக்கையாளர்கள் வந்து விடுகிறார்கள்.

தட்டின் மேல் இலையை வைத்து மக்கள் கேட்பதைப் பரிமாறுகிறார். அவரே அதிகாலையில் எழுந்து அனைத்தையும் சமைப்பதாகக் கூறினார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு தன்னைச் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்தத் தொழிலை லாபநோக்கில் செய்யாமல் மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு அரிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதாகக் கூறியதைக் கேட்டதும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. மிகவும் எளிமையாகவும் தன்னடக்கத்துடனும் இருந்தார். அவரைப் பற்றின காணொளிகளைப் பலரும் பகிர்ந்து வருவதைக் கூறியதும் ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டார். தான் கொண்டு வந்ததை ஒரு மணிநேரத்தில் விற்றுவிட்டு வீடு திரும்புகிறார்.

இட்லி, வடை, பொங்கல், சட்னி, சாம்பார் அனைத்தும் சுவையாக இருந்ததாக என் கணவரும் கூறினார்.

காசுக்காக அலைபவர்களின் மத்தியில் இத்தகைய மனிதர்கள் தான் சிறுதுளி நம்பிக்கையை விதைக்கிறார்கள். மனிதம் பிழைத்துக் கிடப்பதும் இவர்களைப் போன்றவர்களால் தான். 

என் சமூகத்தைச் சார்ந்தவர் என்பதும் மனம் நிறைந்த சேவையைச் செய்பவரைக் கண்ட திருப்தியில் 'ஜனார்தனன் dhaa' வுடன் ஈஷ்வரையும் சேர்த்து ஒரு 'க்ளிக்'. கிடைப்பதில் திருப்தி கொண்டு வாழும் மனம் படைத்தவர்கள் வெகு சிலரே. அதோடு அடுத்தவர் நலன் கருதி இந்த வயதிலும் உழைத்துச் சாப்பிடும் இவர் போன்ற மனிதர்கள் வெகு அரிது!


வாழ்க வளமுடன்!







No comments:

Post a Comment

சொந்த ஊர் சோகங்கள்

முன்பெல்லாம் தெரு முக்கில் யார் வீடு இருக்கிறதோ இல்லையோ மனசாட்சியே இல்லாமல் ஓரத்தில் குப்பையைக் கொட்டிவிட்டு நழுவிப் போவார்கள் மதுரை மக்கள்....