Monday, February 19, 2024

உணவு நகரம் - நீயா நானா?


முடிவு எப்படியும் நம்ம "மதுரை" தான் என்றாலும் பங்கெடுத்தவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை. அதற்காகவே "உணவு நகரம்" பற்றின நீயா நானா நிகழ்ச்சியைப் பார்க்க ஆரம்பித்தேன். மதுரை சார்பில் பேசியவர் நன்றாகப் பேசினார். சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, விருதுநகர் என்று பலரும் தங்கள் நகரங்களின் உணவுகளைப் பற்றிச் சிலாகித்துப் பேசினர்.

ஆனால், உணவு நகரம் என்பதற்கு உணவுகள் மட்டுமே பிரதான தகுதி அல்ல என்பது என்னுடைய கருத்து. உணவுடன் கூடிய கலாச்சாரம் தான் உணவு நகரத்திற்கான சிறப்பைப் பெறுகிறது. அந்த வகையில் மதுரையை விட்டால் வேறு எந்த நகரம் அதற்கான தகுதியைக் கொண்டுள்ளது?

காலையில் விடிந்ததும் கடையில் விற்கும் காபியைக் குடித்து வழியில் அரிசி, கோதுமை, கேப்பை பிட்டு வாங்கிச் சாப்பிட ஒரு கூட்டம் என்றுமே இருக்கிறது. நடந்து உடலை ட்ரிம்மாக வைத்திருக்க நினைப்பவர்களுக்கு முளை விட்ட தானியங்கள், சூப்புகள். நடந்து முடிந்ததும் காபி, வடையை லபக்குபவர்கள் என்றுமே மதுரையில் அதிகம். உணவகங்களில் தோசை, பூரி, வடை என்று காலை உணவை நண்பர்களுடன் உண்டு களித்து மகிழும் கூட்டம் என்று மதுரையில் இன்று வரை வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் இருந்து கொண்டிருப்பதைக் காண மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதைத்தவிர, திகர்தண்டா, குருத்து, பருத்திப்பால் கடைகளும் உள்ளது. காலை இடைவேளை உணவாக வகைவகையான வடைகள் தள்ளுவண்டிகளில் குறைந்த விலையில் கிடைக்கிறது. சுவையாகவும் இருக்கிறது. சிலர், மாவையும் விற்கிறார்கள். வீட்டில் நாமே சுத்தமான எண்ணையில் பொறித்துக் கொள்ளலாம். ஆமவடை, உளுந்துவடை, தவளவடை, சீயம், வாழைப்பூ வடை, கார வடை என்று தினுசுதினுசாக கிடைக்கிறது.

மதிய உணவிற்கு கவலையே வேண்டாம். வீட்டிற்கே கொண்டு வந்து கொடுக்கும் வசதிகள் இருக்கிறது. கொரோனா காலத்தில் துவங்கிய பழக்கம் இன்று வயதானவர்கள் மிகுந்துள்ள மதுரையில் பலருக்கும் அத்தியாவசியமானதாக மாறியுள்ளது. வீட்டில் சமைக்கும் அளவிற்கு இல்லாவிட்டாலும் சுவையும் நன்றாக இருக்கிறது. மகாலைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்களுக்கு இந்த வசதிகள் நிறைய இருக்கிறது. மகால் 6வது தெருவில் மதிய உணவை விற்கும் ராம்குமார் என்பவரிடம் நாங்கள் வாங்கிச் சாப்பிடுகிறோம். நன்றாக இருக்கிறது. ஒரு கூட்டு, பொரியல், குழம்பு, ரசம், மோர், சோறு என்று ஒருவர் நன்றாகச் சாப்பிட 110 ரூபாயில் வேலை முடிந்து விடுகிறது. உணவைக் கொண்டு வந்து கொடுப்பவருக்கு 20ரூபாய் கொடுத்தால் சமைக்காமலே மதிய உணவு கிடைக்கிறது. தேவைப்படும் பொழுது ஒரு அவசரத்திற்கு இத்தகைய உதவிகள் வேண்டியிருக்கிறது. தினமும் சாப்பிடுபவர்களும் உண்டு.

மதிய நேரத்தில் இளநீர் விற்பவர்களும் வாசலுக்கே வந்து விற்றுச் செல்கிறார்கள். அவர் வரும் நேரம் வாசலில் காத்திருந்து வாங்கிக் கொள்கிறார்கள் சுகவாசிகள்!

மாலை நேரம் சுடச்சுடக் கீரை வடை, தேங்காய் அடை, சொஜ்ஜியப்பம் தள்ளுவண்டிகளில் கிடைக்கிறது. வரிசையில் நின்று வாங்கிச் சாப்பிடும் கூட்டம் எப்பொழுதும். இதைத்தவிர பஜ்ஜி, வடை என்று காபி கடைகளில் கிடைக்கிறது. மாலை மங்கும் நேரத்தில் இரவு நேரக்கடைகள் உயிர் பெறுகின்றன. புளியோதரை, எலுமிச்சை சாதம், இட்லி, தோசை என்று சிற்றுண்டிகளில் இரவு 10 மணி வரை வியாபாரம் கொடிகட்டிப் பறக்கிறது.

உணவகங்களில் எப்பொழுதும் கூட்டம். சிறு கடைகளில் நிரந்தர வாடிக்கையாளர்கள். எப்பொழுதும் சுவையுடன் தரத்துடன் இருந்த 'மாடர்ன் ரெஸ்டாரெண்ட்' இப்பொழுது மாறியிருக்கிறது😔 ஆ னால் சபரீஷ், கௌரிகங்கா, டெம்பிள் சிட்டி உணவகங்கள் மக்களுக்கு விருப்பமான உணவகங்களாக மாறியிருக்கிறது.

இதைத்தவிர ஏராளமான பிரியாணி, பரோட்டா கடைகள் முளைத்திருக்கிறது! என்ன! குண்டு குண்டு பரோட்டாவின் சுவையும் அளவும் வெகுவாக மாறிவிட்டிருக்கிறது. அல்லது எங்களுக்கு மட்டும் பிடிக்கவில்லையோ? சில கடைகளில் அதிக மசாலா இல்லாத பிரியாணியின் சுவை நன்கு உள்ளது.

இரவிற்கென்றே பட்டர் பன்னும் திரட்டுப்பாலும். இப்படி நேரத்திற்குத் தகுந்தாற் போல கிடைக்கும் உணவுகள் ஏராளம்.

இதைத்தவிர சந்தைகளில் அந்தந்தப் பருவங்களில் கிடைக்கும் பனங்கிழங்கு, நுங்கு, மாம்பழம், நெல்லிக்காய், சீத்தாப்பழம், அல்வா, மிக்சர், பட்டர் சேவு, முறுக்கு வகையறாக்கள் என்று நீளும் பட்டியல். வருடம் முழுவதும் சாப்பாட்டிற்குக் குறைவில்லாத நகரம் என்றால் அது மதுரை தான். இங்கிருக்கும் ஒவ்வொரு கடைக்கும் சென்று சாப்பிட வேண்டுமென்றால் இந்த ஜென்மம் போதாது. மதுரையைச் சுற்றின கழுதை எப்பொழுதும் இங்கேயே தான் சுற்றுமாம். அது போல, பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்களின் மனமும் சுவையும் மதுரையை மட்டுமே சுவாசித்துக் கொண்டிருக்கும்.

கோவில் நகரம், திருவிழா நகரம் போல உணவு நகரம் என்பதும் மதுரைக்கே உரித்தானது.

சரி தானே ?
 













No comments:

Post a Comment

சுவதந்த்ரவீர் சாவர்க்கர்

மிக அழகாக திரு.வீர் சாவர்க்கரின் வாழ்க்கையை எடுத்துரைக்கும் படம். நிறைய மெனக்கெட்டிருக்கிறார்கள். சாவர்க்கராக நடித்திருக்கும் 'ரந்தீப் ஹ...