Saturday, October 30, 2021

பட்டாசு அரசியல்



தொடர்ந்து நான்காவது வருடமாக இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதிலும் பல மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. பட்டாசு வெடிப்பதினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறுவதை ஓரளவிற்கு ஒத்துக்கொண்டாலும் பட்டாசினால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

தமிழக அரசின் அறிக்கையில், " தீபாவளி மற்றும் பிற நிகழ்ச்சிகளில் சாதாரண வகையிலான பட்டாசுகளின் பயன்பாட்டிற்கு எந்தவிதமான தடையும் இல்லை எனவும், பொதுமக்களின் உடல் நலன் மற்றும் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடிய பேரியம் ரசாயனம் கலந்து தயார் செய்யப்பட்ட பட்டாசுகள், மற்றும் சரவெடி பட்டாசுகள் தயாரிக்கவோ, சேமித்து வைக்கவோ, ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லவோ விற்பனை செய்ய அல்லது வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது." என்று சொல்லபட்டிருக்கிறது.

காலம்காலமாக தமிழகத்தில் பட்டாசுக்கென்றே பெயர் போன 'சிவகாசி' நகரத்தில் பட்டாசு தொழிற்சாலைகளும் அதனை வாழ்வாதாரமாக நம்பி சுத்துப்பட்டு கிராமத்து ஆட்களும் இருக்கிறார்கள் என்பதை ஆளும் அரசு நன்கு அறியும். கோடிகளில் புரளும் வியாபாரத்தில் அரசியல் பிரமுகர்கள் பலரே இருக்கக்கூடும். அப்படி இருக்கையில் தீபாவளி நெருங்கும் வேளையில் மட்டும் ஏன் இந்த திடீர் அறிவிப்புகள்? தடைகள்? காற்று, ஒலி மாசுவிற்கு காரணமான பட்டாசுகளை உற்பத்தி செய்வதை ஏன் அரசு முதலிலேயே தடை செய்யவில்லை? தடை செய்திருந்தால் அதனை ஏன் தொழிற்சாலைகள் பின்பற்றவில்லை? அது என்ன? தீபாவளிக்கு மட்டும் தொடருகிறது இந்த கண்துடைப்பு நாடகம்?

உண்மையிலேயே அரசிற்கு மாசுக் கட்டுப்பாட்டில் அக்கறை உள்ள பட்சத்தில் என்ன செய்திருக்க வேண்டும்? மாசு உற்பத்தி செய்யும் பட்டாசுகளை உற்பத்தி செய்வதை முன்பே தடை செய்திருக்க வேண்டும். உள்ளூர் பட்டாசு விற்பனையைப் பெருக்க சீன தயாரிப்பு பட்டாசுகளைத் தடை செய்திருக்க வேண்டும். செய்தார்களா? தேர்தல் வெற்றி, தலைவர்களின் வருகை, ஆங்கில புது வருடத்தின் போது வெடிப்பதையும் தடை செய்யலாமே? ஏன் செய்வதில்லை?

தீபாவளி என்றாலே ஒரு வாரத்திற்கு முன் அங்கொன்று இங்கொன்றுமாக வெடிக்கும் ஓலை வெடிச்சத்தம் தரும் குதூகலம், தீபாவளி நெருங்க நெருங்க இரவுகளில் அதிகரிக்கும். தீபாவளி அன்று புத்தாடை உடுத்தி கடவுளை வணங்கி, நண்பர்கள், குடும்பத்தினருடன் நாள் முழுவதும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது மரபு. ஆனால் சில வருடங்களாக குறிப்பிட்ட நேரத்திற்குத் தான் வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால் ஒரே நேரத்தில் மக்கள் பட்டாசுகளை வெடிக்க, எங்கும் புகை மண்டலம். இது தேவையா? அவரவர் வசதிக்கு நேரத்திற்கு வெடித்துக் கொண்டாடினால் தான் என்னவாம்? இந்த தடைகளால் உள்ளூர் பட்டாசு தொழிற்சாலைகளும் அதனை நம்பி இருக்கும் பல குடும்பங்களும் தான் பாதிக்கப்படுவார்கள் என்பதை அறியாதா இந்த அரசு? இதையும் தூத்துக்குடி தாமிர தொழிற்சாலையை இழுத்து மூடியது போல் மூட வைத்து அதிக விலையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைக்கு கொண்டு செல்ல துடிக்கிறார்களா?


நியூயார்க் மாநிலத்தில் அதிக அளவில் சுற்றுச்சூழலைப் பாதித்த வகையில் 'கோடக்' நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது அரசு. ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனம் ஆற்றில் கழிவுகளைக் கொட்டியது நிரூபணமாகி அவர்களையே மாசுகளை அப்புறப்படுத்த ஆணையிட்டது நீதிமன்றம். மக்களின் சுகாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு ஆலைக்கழிவுகளை முறையாக சுத்திகரிக்க ஆலைகளும், மாசுக்கட்டுப்பாட்டுத்துறையும் செயல்பட வேண்டும். ஆனால் நாம் ஆலைகளை மூட வைத்து விட்டு பொருட்களை அதிக விலையில் இறக்குமதி செய்து மற்ற நாடுகளின் வளர்ச்சிக்குத் துணை செல்கிறோம். லாப நோக்கில் செயல்படும் பெருநிறுவனங்களும், தலைவிரித்தாடும் லஞ்சமும், அரசியல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கும், மக்களின் மெத்தனமும், அறியாமையும் தான் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மாசுக்களை காற்றில் கலக்கச் செய்து கொண்டிருக்கிறது.

சமீப காலமாக ஆஸ்துமா, அலர்ஜி உள்ளிட்ட நோய்கள் பெருகியுள்ளது என்பது உண்மை. ஆனால் தினந்தோறும் ரசாயன ஆலைகள், சாயப்பட்டறை, தோல்பதனிடும் ஆலைக்கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள், அசைவ உணவுக்கழிவுகள்,பெட்ரோல், டீசல் வண்டிகளின் புகைகள் வெளியிடும் மாசுகளைக் கட்டுப்படுத்தியுள்ளார்களா? அவற்றினால் மக்களுக்குப் பாதிப்புகள் இல்லையா? கட்டுப்படுத்த வேண்டிய இடங்களில் லஞ்சம் வாங்கிக் கொண்டு கட்டுப்படுத்தாமல் மக்களின் சுகாதாரத்தில் விளையாடும் அரசும், நீதிமன்றமும் தொழிற்சாலைக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதில்லை என்று உறுதியாக கூற முடியுமா? இல்லையென்றால் அதற்கு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறார்களா?

ஏன் ஒருநாள் கொண்டாப்படும் இந்துப்பண்டிகையின் போது மட்டும் இந்த பிரச்னையைப் பெரிதாக்குகிறார்கள் என்பதில் இருக்கும் அரசியலில் தான் மக்களுக்கு ஐயமே!

தீப ஒளி ஏற்றி பட்டாசு வெடித்துக் குடும்பத்துடன் இனிதே கொண்டாடுவோம் நம் பண்டிகையை.

தீபாவளியைக் கொண்டாடும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.🎆🎆🎆🎆🎆



No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...