Saturday, October 30, 2021

Hometown Cha-Cha-Cha


தொடர்ந்து கொரியன் நாடகங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால் பல நடிக , நடிகையர்களை இனம் கண்டு கொள்ள முடியும். ஆனாலும் பல புதுமுகங்கள் ஒவ்வொரு நாடகத்திலும் வருகிறார்கள். நெட்ஃப்ளிக்ஸ்ல் டாப் 10ல் வலம் வந்து கொண்டிருந்தது Hometown Cha-Cha-Cha. கதாநாயகன் "Startup"ல் வந்த கன்னக்குழி அழகன்😍 அதில் இன்னும் இளமையாக தெரிந்ததாக ஞாபகம்! சிலரைப் பார்த்தவுடனே பிடித்து விடும். சிலரைப் பார்க்க பார்க்க பிடிக்கும். அந்த வரிசையில் கன்னக்குழி அழகி கதாநாயகி. இதழ்களுடன் கண்களும் சிரிக்கிறது. அழகு!

நகர வாழ்க்கையில் துவங்கி கடற்கரை கிராமத்தில் முடியும் அழகிய காதல் கதைத் தொடர். வேலை செய்யுமிடத்தில் அராஜகத்திற்குத் துணை போகாமல் வெளியேறும் தன்னம்பிக்கைப் பெண்ணாக கதாநாயகி. கால்போன போக்கில் வந்தடையும் கடற்கரையோர கிராமம் ஒன்றில் தங்க நேரிட, அம்மக்களுடன் வாழ பழகிக் கொள்கிறார். நன்றாக நீட்டி முழங்கி கத்திகத்திப் பேசுகிறார். இந்த கொரிய பெண்கள் கோபம் வந்தால் ஏகத்துக்கும் கத்திப் பேசுகிறார்கள். நாம் பரவாயில்லை என்று நினைக்க வைத்து விடுகிறார்கள்😉 பெருநகரத்திலிருந்து வந்த பெண்ணிடம் அதுவும் பல் மருத்துவரிடம் தயங்கித்தயங்கிப் பழகும் கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள். கிளைக்கதைகளையும் சுவாரசியமாக படைத்திருக்கிறார்கள். முக்கோண காதல் கதையில் நாயகி யாரிடம் மனதைப் பறிகொடுக்கிறாள், கதை சுபமா? பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மூன்று பாட்டிகள், இளம் தம்பதியர், பிரிந்து மீண்டும் சேரும் கணவன்-மனைவி, இசைக்கலைஞன், கதாநாயகியின் தோழி என்று ஆளுக்கொரு கதை. வம்பு, வீம்பு, கோபம், அழுகை, சிரிப்பு, கொண்டாட்டம், காதல் என்று அழகாக அலையாடிச் செல்லும் கதையில் கதாநாயகன் 'Jack of all trades' என்பது போல் அனைத்து வேலைகளையும் செய்யத்தெரிந்தவன். அவனில்லாமல் அந்த கிராமமே தவித்து விடும். மோதலுடன் துவங்கி காதலில் முடியும் கதையில் நாயகிக்காக உருகும் ஒருவன். ஆனால் நாயகியோ உருகி உருகி காதலிப்பது வேறொருவனை. அழகாக கொண்டு செல்கிறார்கள். வழக்கம் போல் அதிக செண்டிமெண்ட் கொட்டாமல் கதையின் நீரோட்டத்தில் இறப்பையும் கொண்டாட்டமாக ஆனால் உணர்வுப்பூர்வமாக கொண்டு சென்றது சிறப்பு. ஹிந்திப் படங்களில் 'தாதி மா' பாத்திரத்திற்கு என்றே இரண்டு மூன்று பேர் காலம்காலமாக வந்து கொண்டிருந்தார்கள். அப்படித்தான் இத்தொடரிலும் ஒரு 'தாதி மா' பல தொடர்களில் பார்த்திருக்கிறேன். இயல்பாக நன்றாக நடிக்கிறார்.

சிறு வயதிலேயே பெற்றோர்களை இழந்த கதாநாயகன் தாத்தாவின் அரவணைப்பில் வளர்கிறான். அவரும் இறந்து விட, ஊர் மக்கள் அவனை வளர்க்கிறார்கள். சிறு வயதில் தாயை இழந்த கதாநாயகி. இருவருக்குள்ளும் இருக்கும் வலிகளைப் புரிந்து கொள்ள முயன்று ஒருவருக்கொருவர் ஆதரவாக நெருங்கி, விலகி, நெருங்குகிறார்கள். தொடர் முழுவதும் சிறுசிறு கருத்துக்களை சொல்லிக் கொண்டே செல்கிறார்கள். ஏழையாக இருந்தாலும் பெற்றோருடன் இருப்பதே சிறப்பான வாழ்க்கை என தாயை இழந்த கதாநாயகி கண்கலங்கும் காட்சியில் சொல்லும் பொழுது உண்மைதானே என்று தோன்றும். பணமும் வெற்றியுமே மட்டுமே வாழ்க்கையல்ல மகிழ்ச்சி, அன்பு, பாசம், உறவு என்று நம்மைச் சுற்றி உள்ளவர்களும் முக்கியம். நம்முடைய கருத்துகளை அவர்களின் மேல் திணிக்காமல் அவர்கள் போக்கில் வாழ விடுவது தான் அனைவருக்கும் நல்லது என்று கதாநாயகிக்கு நாயகன் சொல்வதைப் புரிந்து கொண்டு மாறுகிறாள்.

தொடரை மேலும் அழகூட்டியிருக்கிறது கிராமத்து வீடுகளும், கடலும், நீல வானமும், கலங்கரை விளக்கமும். அதுவும் அந்த அந்த குறுகிய தெருக்கள், கடல் நோக்கிய முற்றம் வைத்த வீடுகள், சூரியோதயம், சூரிய அஸ்தமனம், கடற்காட்சிகள் எல்லாம் கொள்ளை அழகு. 

இத்தொடர் பிரபலமானதில் அங்குள்ள வீடுகளைப் பார்க்கும் ஆவலில் தென் கொரியர்கள் இந்த கிராமத்திற்குப் படையெடுத்திருக்கிறார்கள். தொடரின் இயக்குனர் கிராமத்து மக்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். அங்கு நிஜ மனிதர்கள் வாழ்கிறார்கள் என்று ஊடகங்களில் மக்களிடம் கேட்டுக் கொண்டதில் தெரிந்தது இத்தொடரின் வெற்றி. மற்றுமொரு அழகிய காதல் கதைக்களம்.

எப்படா சனிக்கிழமை வரும் என்று ஆவலைக் கூட்டிய தொடர்😉😉😉

'ஒப்பா' என்று அழைத்தால் முறைக்கிறார் என்னவர் 😊😊😊😊









No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...