Wednesday, October 27, 2021

நுரையீரல் ஆரோக்கிய தினம்

ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் ஆஸ்துமா முதல் நிமோனியா வரை பல வகையான நுரையீரல் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அதிக அளவு காற்று மாசுபாடு காரணமாக, காற்றுப்பாதைகள் வழியாக உடலுக்குள் செல்லும் நச்சுகளின் அளவுகள் நமது உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் நுரையீரல் நோய்கள் மற்றும் புற்றுநோயால் மக்கள் பாதிக்கப்படுவதும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது, வழக்கமான உடற்பயிற்சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவுப்பழக்கம் மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இதுபோன்ற நோய்களைத் தடுக்கலாம்.

அமெரிக்காவில் மக்களிடையே நுரையீரல் தொடர்பான நோய்களைப் பற்றின விழிப்புணர்வை ஏற்படுத்த , 2003ல் 'அமெரிக்கன் அசோசியேஷன் ஃபார் ரெஸ்பிரேட்டரி கேர்' (AARC) ஆல் அக்டோபர் மாதம் நான்காவது புதன்கிழமை 'நுரையீரல் ஆரோக்கிய தினமாக' அறிவிக்கப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியால் பாதிக்கப்படுவதாகவும்,  புற்றுநோய்களின் பாதிப்பில் சுமார் 13 சதவிகிதம்  நுரையீரல் புற்றுநோயால் மட்டுமே உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஒத்த பிற அமைப்புகள் நாள்பட்ட நுரையீரல் நோய்களின் விகிதம் உலகம் முழுவதும் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ளன. சிகரெட், வாப்பிங், காற்று மாசுபாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை போன்ற காரணங்களை அவர்கள் மேற்கோள் காட்டியுள்ளனர். நீண்ட நாட்களாக மாசு கலந்த காற்றைச் சுவாசிப்பதன் மூலம் நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இது புற்றுநோய் அல்லது பிற நோய்களுக்கு வழிவகுக்கிறது. வழக்கமான சோதனைகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

நுரையீரல் சரியாகச் செயல்படாமல், நம் வாழ்க்கையை சிறப்பாக நடத்த முடியாது. ஒரு வாரத்திற்கும் மேலாக சுவாசிப்பதில் சிரமம், நாள்பட்ட இருமல் அல்லது பிற அறிகுறிகளால் அவதிப்பட்டால், மருத்துவரைக் கலந்தாலோசிக்க 'நுரையீரல் ஆரோக்கிய தினம்' ஊக்குவிக்கிறது. ஆரம்பகால சோதனை பல சிக்கல்களைத் தடுக்கவும் உதவும்.

மனித உடல், உணவு மற்றும் தண்ணீர் இல்லாமல் கூட ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் சில நிமிடங்களுக்கு மேல் வாழ முடியாது. நல்ல சுத்தமான காற்று அனைத்து உயிரினங்களின் அடிப்படை உரிமை. அதனை கிடைக்கச் செய்வது அரசின் கடமை.

நோய் வருவதற்கு முன் தடுப்பதே சிறந்தது. புகையிலை உட்கொள்வது, புகைப்பிடிக்கும் பழக்கங்களை விட்டொழித்தல் நுரையீரல் நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். எவ்வித கெட்ட பழக்கங்களும் இல்லாதவர்களும் புகைப்பிடிக்காதவர்கள் சிலரும் 'செகண்டரி ஸ்மோக்'கால் பாதிக்கப்பட்டு இறக்க நேரிடுகிறது. செயற்கை நறுமணத்துடன் வரும் மெழுகுவர்த்திகள், நுரையீரலுக்குத் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலந்த பொருட்களைப் பயன்படுத்தலாகாது. மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதன் மூலம் நுரையீரலின் ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ள முடியும்.

அழகான வாழ்க்கைக்கு ஆரோக்கியமான நுரையீரல் அவசியம். வருங்கால சந்ததியினருக்கும் எடுத்துரைப்போம்.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...