Friday, October 22, 2021

தாண்டியா ஆட்டமும் ஆட தசரா கூட்டமும் கூட ...

நண்பர்கள் அனைவருக்கும் இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்🙂

நவராத்திரி என்றதும்  நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்கள் வீட்டு கொலுவைப்  பார்த்து விட்டு மஞ்சள், குங்குமம் வாங்கிக் கொண்டு, சுவையான உணவும் உண்டு களித்து வருவதும், கோவிலில் தினம் ஒரு அலங்காரத்துடன் அம்மனின் திருக்கோலமும் நினைவில் வருவதோடு  குஜராத் மக்களின் க3ர்பாவிற்கான அழைப்பிதழும் தவறாமல் வர, கோலாகலமாக இருக்கும் வார இறுதி நாட்கள்.  

'தசரா', 'நவராத்திரி'  என்று வேற்று மாநில மக்களாலும் கொண்டாடப்படும் இந்த ஒன்பது நாட்களும் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாமல் சரஸ்வதி பூஜை, விஜயதசமி பூஜைகளுடன் இனிதாக நிறைவுறும். சரஸ்வதி பூஜையன்று பாடப்புத்தகங்களை வைத்து ஒரு நாள் படிக்காமல் டிமிக்கி கொடுக்கலாம் என்பதால் ஆர்வமாக எல்லா புத்தகங்களையும் வைத்து விடுவது வழக்கம். வீடு முழுவதும் சுத்தம் செய்து ஆயுத பூஜைக்குத் தயாராகும் பொழுதே முழு குடும்பமும் உற்சாகத்தில் இருக்கும். அதுவும் மதுரை அரசமரம் ஏரியாவில் வாழைக்கன்று, மாவிலை, பூஜைப்பொருட்கள், பழங்கள் வாங்க கூட்டம் அலைமோதும். பள்ளிகளும் தொடர்ச்சியாக விடுமுறை விட்டுவிடுவதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆயுத பூஜை  அன்று சாயப்பட்டறைக்கும் விடுமுறை. வேலையாட்கள் பூஜையில் கலந்து கொண்டு சாப்பிட்டு விட்டுச் செல்வார்கள். ஆக, அனைவருக்கும் விடுமுறை நாள் கொண்டாட்டம்.

சென்ற வருடம் கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக  நண்பர்கள் வீட்டிற்குச் செல்லவில்லை. இந்த வருடம் கொலு ஊர்வலம் ஆரம்பித்தாகி விட்டது.  வழக்கமாக ஆல்பனி ஹிந்து கோவிலில் நடக்கும் கோலாட்டம் இந்த வருடமும் நடக்கவில்லை. அதே கொரோனா பயம் தான் 😔தனியார் இடங்களில் குஜராத்திகள் கொண்டாடும் டாண்டியா நடனம் விமரிசையாக நள்ளிரவு வரை கொண்டாடுகிறார்கள். வட இந்தியர்கள் பலரும் தென்னிந்தியர்கள் சிலரும், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளும் அதிகம் பங்கேற்கும் நிகழ்ச்சி இது. அமெரிக்க மாணவ மாணவியர் சிலரும் உற்சாகத்துடன் ஆடி மகிழுகிறார்கள். 

எங்கள் சமூகத்தில் வீட்டிற்கு வரும் மருமகளுக்கு மாமியார் வீட்டிலிருந்து சில பரிசுப்பொருட்களைப் பெட்டியில் வைத்து  மணமகளுக்கு கொடுப்பது வழக்கம். அதை 'சம்சுளா பெடி' என்பார்கள். அதில்  தவறாமல் வண்ணமயமான இரு கோலாட்ட குச்சிகள் இருக்கும். சௌராஷ்ட்ரா சமூகத்திலும் மங்கையர் ஆடும் கோலாட்ட நடனமுண்டு. தெற்கு கிருஷ்ணன் கோவிலில் தீபாவளிக்குப் பிறகு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் 'பொஸ்கண்ணோ' கோலாட்ட விழாவில் இளம்பெண்கள் பலரும் பெரியவர்கள் சிலரும் பங்கேற்றுச் சுழன்று சுழன்று ஆடுவார்கள்.

மதுரையில் குஜராத் சமாஜ் மக்கள் ஒன்று கூடும் தாண்டியா நடனத்திற்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. நியூ சினிமா தியேட்டர் எதிர்ப்புறத்தில் YMCA வளாகத்தில் நடந்தது. பாட்டி வீட்டிற்கு அருகே இருந்த குஜராத்தி குடும்பதுடன் அங்கே சென்றிருந்தோம். இரவு ஒன்பது மணிக்கு மேல் இளம்பெண்கள் அனைவரும் வண்ண வண்ண உடையணிந்து கொண்டு கைநிறைய வளையல்களும் வாய் நிறைய சிரிப்புமாக வலம் வர, ஆண்களும் வடக்கிந்திய வண்ண உடைகளுடன் அழகுப் பெண்களை ஓரக்கண்ணால் ரசித்தபடி வந்து கொண்டிருந்தார்கள். அழகான ஆண்டிகளும், வயதான அங்கிள்களும் என்று அந்த இடமே கும்மாளமும் கொண்டாட்டமுமாய் பார்க்கிறவர்களின் மனதிலும் உற்சாகத்தை அள்ளித் தந்து கொண்டிருந்தது. 

நேரம் செல்ல செல்ல பாட்டும் ஆட்டமுமாய் ஆரம்பித்த கோலாட்டம் நள்ளிரவில் இளம்பெண்கள், காளையர்கள்  என்று வாலிபம் பீறிட பெரியவர்கள் கைத்தட்டி உற்சாகப்படுத்த... 

பெண்கள் வளைந்து வளைந்து நடனமாட, ஆடைகள் வட்டமிட்டுச்  சுழல, லயத்துடன் கைகள் கோலாட்டம் ஆட, வேறு உலகத்தில் இருப்பது போன்ற பிரமை! வண்ண மயமான, கோலாகலமான நாளை கண்ட திருப்தி! எவ்வளவு அழகான பெண்கள்! பல நாட்களுக்கு அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். 

இன்றும், நாளையும் அடுத்த வார விடுமுறையிலும் இங்கு தாண்டியா நடனம் வெகு விமரிசையாக நடக்கும். அமெரிக்க கல்லூரிகளிலும் கொண்டாடி மகிழுகிறார்கள்! 

கொண்டாட்டங்களுக்காகவே திருவிழாக்கள்! நம்முடைய செக்கு மாட்டு வாழ்க்கையில் இத்தகைய திருவிழாக்கள் தரும் உற்சாகம் போல் வேறு எதுவுமில்லை. இது அத்தியாவசியமானதும் கூட! 

கொண்டாட்ட மனநிலையைத் தரும் எதுவும் எனக்குச் சம்மதமே!











No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...