Tuesday, October 3, 2023

இந்தியாவின் திருவிழாக்கள்

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் திருவிழாக்களுக்குக் குறைவே இல்லை. ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு திருவிழாக்களைக் கொண்டாடி வருவதைச் செய்திகளிலும் பத்திரிகைகளிலும் படித்திருக்கிறோம். சிலபல படங்களையும் பார்த்திருக்கிறோம். ஆளாளுக்கு கையில் ஸ்மார்ட்ஃபோனுடன் அலையும் காலம் இது. அதுவுமில்லாமல் சுற்றுலா சென்று வரும் மக்களும் அதிகரித்து வருகின்றனர். இதனால் மற்ற மாநிலங்களைப் பற்றி அறியும் ஆவலும் அதன் தொடர்பான செய்திகளையும் அறிந்து கொள்ள முற்படுகிறார்கள். தாங்கள் கண்டவற்றை சமூக ஊடகங்கள் வாயிலாக மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ள பல்வேறு பழக்கவழக்கங்கள், நடை, உடை, பாவனைகள், ஆடல், பாடல், கொண்டாட்டங்கள் என்று முற்றிலும் புதிய கலாச்சாரத்தை அறிந்து கொள்ள முடிகிறது.


சமூகஊடகங்களில் வரும் படங்கள், காணொளிகள் உலகமெங்கும் பரவி வெளிநாட்டினரும் கேமரா சகிதம் புறப்பட்டு வருகிறார்கள். எத்தனை அழகாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க முடியுமோ வழங்குகிறார்கள். திருவிழாக்களை நேரில் காணும் வாய்ப்பு இல்லாதவர்களுக்கு உட்கார்ந்த இடத்திலிருந்தே காணும் வாய்ப்பு கிடைக்கிறது. மதுரையில் பத்து நாட்கள் நடக்கும் 'சித்திரைத்திருவிழா' போலவே வெளிமாநிலங்களிலும் கோலாகலமான பெருவிழாக்கள் நடைபெறுவதை அழகாக தொகுத்து காணொளிகளாக யூடியூபில் 'நேஷனல் ஜியோகிராபிக் இந்தியா' வழங்குகிறது. ஒவ்வொரு புதன்கிழமை அன்றும் ஒரு புதுத்தொடர். சமையற்கலை நிபுணரான மீகன் நன்றாக இந்திய உணவுகளைச் சாப்பிடுகிறார். பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு கூட்டத்தில் ஒருவராக சிரித்த முகத்துடன் விவரங்களை அறிந்து தொகுத்து வழங்குகிறார்.

முதலில் 'எண்டே கேரளா'வின் ஓணம் பெருவிழாவில் இருந்து துவங்கியிருக்கிறார்கள். 'The Festival of Abundance' அம்மாநிலத்தின் அழகுக்கோவில்கள், ஏங்க வைக்கும் 'பச்சைப்பசேல்' நிலப்பரப்பு, சேச்சிகளின் நடனம், சேட்டாக்கள் பம்பரமாய் சுழன்று ஓணம் விருந்தைத் தயார் செய்து மக்களுக்குப் படைப்பது, யானைகளின் அணிவகுப்பு, படகுப்போட்டி, பாரம்பரிய உடை, இசை, களரி ஆட்டம் என்று அங்குமிங்கும் நகரவிடாமல் விழாக்களைப் பற்றின சுவையான தகவல்களுடன் வழங்கியிருப்பது சிறப்பு.



'The Divine Colors of Holi' என்ற அடுத்த பாகத்தில் வட இந்தியாவில் மதுராவில் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஹோலி திருவிழாவைப் பற்றி வண்ணமயமாக வழங்கியிருக்கிறார் மீகன். இத்தனை பிரம்மாண்ட விழாவை நேரில்பார்த்திருந்தால் கூட இத்தனை அழகாக இருந்திருக்குமோ? கூட்டத்தைக் கண்டு பயந்திருப்போம் என்று தான் தோன்றியது. மக்கள் கூட்டத்தைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது...!! ஆனால் உள்ளூர் மக்களின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி! திருவிழாக்கள் தரும் உற்சாகமே நம் வாழ்க்கையை மன அழுத்தத்திலிருந்து ஓரளவு நம்மைக் காப்பாற்றி வருகிறது. இவையெல்லாம் இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பாருங்கள்! பைத்தியமே பிடித்து விடும்.

இனம், மொழி, மதம் என பல வேற்றுமைகள் இருந்தாலும் இந்தியர்களாக இந்த மண்ணின் மகத்துவத்தை அறியும் தருணங்களில் பெருமையாக இருக்கிறது. வெளிநாடுகளில் இத்தகைய கலாச்சாரம் இல்லாதிருப்பதும் அவர்களுடைய விழாக்கள் பொருள்சார்ந்த வியாபாரமாக மாறிவரும் போக்கும் இருப்பதால் தான் மகிழ்ச்சியுடன் விழாக்களைக் கொண்டாடும் மக்களை, கலாச்சாரத்தை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர். வியக்கின்றனர். குறுகிய தெருக்கள், சிறிய கோவில்களில் வண்ணவண்ணப் பூக்களை, பொடிகளைத் தூவி ஹோலி கொண்டாடி கிருஷ்ணரை வணங்குவதை இதைவிட அழகாக எடுக்க முடியுமா? தெரியவில்லை.

அதுமட்டுமில்லாமல் அந்தந்த ஊர்களில் கிடைக்கும் உணவுகளைப் பற்றியும் அறிந்து அவர் சாப்பிடுகிறார். நமக்குத் தான் ஆகா! மனுஷன் வெளுத்து வாங்குறாரே! என்று பொறாமையாக இருக்கிறது😋 ட்ரோன் காட்சிகளெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

'The Joyous Festivities of Eid' ஹைதராபாத், டெல்லி மசூதிகளில் நடந்த பெருவிழாவைப் பற்றியும் ஒரு பாகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். அங்கு கிடைக்கும் உணவுகளையும் இஸ்லாமிய திருவிழாக்கள் பற்றியும் அழகாக தொகுத்து வழங்கியிருக்கிறார்.

The Ancient Nagas Tradition இந்த வார தொடர். பெருவிழா என்றால் பத்துநாட்கள் மும்பையில் நடக்கும் விநாயகர் திருவிழா இல்லாமலா? விரைவில்...

இனிவரும் தொடர்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...