Monday, October 2, 2023

The Vaccine War


2019 டிசம்பரில் உலகமே தொற்றுப்பரவலால் அல்லோலகப்பட்டு ஜனவரி 2020ல் பீதியாகி டாமினோ சரிவு போல தொடர் மரணங்கள். சீனா, இத்தாலி, இங்கிலாந்து வழியே நாலு கால் பாய்ச்சலில் கொரோனா அமெரிக்காவிற்கும் வந்து இறங்கிய நாள் முதல் நியூயார்க் தத்தளித்துத் தான் போனது! சீனர்களைக் கண்டு ஆத்திரம் கொள்ள மற்றுமொரு காரணம் கிடைத்துவிட்டது. அன்றைய அதிபர் முதல் ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்கள் வரை இதெல்லாம் சும்மா 'லுலுலாயி'. என்றார்கள். பின் சீனா வைரஸ் என்று சீனர்களை, அவர்களின் உணவுப் பழக்கங்களைக் குறை கூறினார்கள். மறந்தும் கூட அங்கிருந்த ஆராய்ச்சிக்கூடத்திலிருந்து பரவிய வைரஸோ என்பதை மட்டும் நேக்காக மறைத்தார்கள். மார்ச் மாதம் காலில் சலங்கையைக் கட்டிக்கொண்டு கோரத்தாண்டவம் ஆடிய கொரோனாவிற்கு முதன்முதலில் மக்கள் பயந்து அவசரஅவசரமாக முகக்கவசம் அணியத் தொடங்கினார்கள்.

இப்படித்தான் பீதியில் பேதியாகி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தேசம் ஆளானது. "அதெல்லாம் தேவையே இல்லை. எத்தனை நாட்கள் இப்படி வீட்டுக்குள் அடைந்து கிடக்க முடியும்? வேலையின்றி அடுத்தவேளைச் சோற்றுக்கு மக்கள் என்ன செய்வார்கள்? ஜனநாயக கட்சியினர் தேவையில்லாமல் மக்களை அச்சப்படுத்துகிறார்கள்" என்று ஆளும் கட்சி குறைகூறியது.

கண்முன்னே கொத்துக்கொத்தாக முதலில் வயதானவர்கள் பலர் இறந்தார்கள். சிகிச்சையை மாற்றிக் கொடுத்தாலும் இறப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் கூடிக்கொண்டே இருந்தது. மாற்றுமருந்தின் அவசியத்தை உணர்ந்த அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்விநிலையங்கள், அலுவலகங்கள் மூடப்பட்டது. வீட்டிலிருந்தே படிப்பு, வேலை என்றாகிப்போனது. அடடா! இதுவும் நன்றாக இருக்கிறதே என்று பலரும் வீட்டை விட்டு வெளியில் செல்லவே பயப்படும் 'தெனாலி'களானார்கள். தும்முபவர்களைக் கண்டால் காத தூரம் ஓடிப்போகும் மனநிலைக்கு உள்ளானார்கள்.

சரியாக அந்த நேரத்தில் நெட்பிளிக்ஸ்ல் 'Pandemic: How to Prevent an Outbreak' என்றொரு ஆறு பாகங்கள் கொண்ட ஆவணத்தொடரை வெளியிட்டார்கள். 100 வருடங்களுக்கு முன் நடந்த தொற்றுப்பரவலின் கோரத்தாண்டவ காட்சிகளுடன் தொடங்குகிறது தொடர். நியூயார்க் மருத்துவமனையில் தீவிர மருத்துவ சிகிச்சைப்பிரிவில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் அதே வேளையில் உலகின் மற்ற நாடுகளிலும் இதே போன்று நடக்கிறது. நோயை, நோயாளிகளை எப்படி கையாளுவது என்று தொடங்கி ஒரே ஒரு மருந்தினால் அனைத்து வைரஸ் தொற்றுப்பரவலைத் தடுக்க ஒரு ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்டு வருவதை அந்நிறுவனத்தைச் சார்ந்தவர்களுடன் நடக்கும் கலந்துரையாடலாக விவரித்திருந்தார்கள். அது சாத்தியமா என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்க,கொரோனா போன்ற தொற்றுப்பரவலுக்கான சாத்தியக்கூறுகள் வர இருப்பதை மருத்துவ ஆராய்ச்சி உலகம் ஏற்கெனவே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது தான் எனக்கு ஆச்சரியமான விஷயமாகத் தெரிந்தது!

'நியூயார்க் தொற்றுப்பரவல் கட்டுப்பாடு மைய'த்தில் எதிர் வரப்போகும் நுண்ணுயிரிகளின் தாக்குதலில் இருந்து மக்களைக் காப்பாற்றத் தேவையான வசதிகள் இருக்கின்றனவா என்று ஒரு அலசல். அப்படி ஏதும் இல்லை என்பதை அன்றே கணித்திருந்தார்கள். அதற்கான நிதி, மருத்துவர்கள், மருந்துகள், மருத்துவமனைகள் இன்னபிற தேவையான வசதிகள் போதாது என்று அதன் மேலாளர் கூறுகையில் 'பகீர்' என்றிருந்தது! "மரண பயத்த காட்டிட்டான் பரமா" மொமெண்ட் அது. "ஸ்பானிஷ் ஃப்ளூ" என்று கொரோனாவின் முன்னோடி 1918-1920 வரை பரவி ஏராளமான மக்கள் இறந்திருக்கிறார்கள். அன்றைய உலகம் வேறு. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து உலகநாடுகள் மீள பத்து வருடங்கள் ஆகியிருக்கிறது. இன்னும் கொரோனாவினால் ஏற்பட்ட பொருளாதார சேதாரத்தில் இருந்து மீள முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இன்னும் எத்தனை வருடங்களோ?

'எபோலா' ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் ஒருவரைப் பாதித்து அவர் இறந்து போக, ஒபாமா அரசு தக்க சமயத்தில் அதனைக் கட்டுப்படுத்தி விட்டது. அதனால் விரைவிலேயே அது தொடர்பான செய்திகள் வருவதும் நின்று விட்டது. அதைத்தொடர்ந்து பன்றிக்காய்ச்சல். இது இந்தியாவிலும் அதிகளவில் பரவியது. மருத்துவர்கள் வீடுவீடாகச் சென்று தடுப்பூசி போடுவதையும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பதையும் திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்று ஒரு மருத்துவர் ஆண்டவனிடம் வேண்டிக்கொள்வதையும் குறிப்பிட்டுக் காட்டியிருந்தார்கள். நம் நாட்டு 'அசால்ட் ஆறுமுகங்கள்' அப்படியே லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்து சும்மா ஜலதோஷம், காய்ச்சல், சளி, இருமல் என்று மருத்துவர் கொடுத்த மருந்துகளைச் சாப்பிட்டு "ஒரே மூட்டு வலி. நடக்க முடியவில்லை" என்று அந்த வைரஸ் காய்ச்சலின் பாதகங்களை ஏற்றுக் கொண்டார்கள். வேறு வழி? சிறிது நாட்கள் இந்தியாவிலிருந்து வருபவர்களை விமான நிலையங்களில் கண்காணித்தார்கள். அது மறந்து போய்க் கொண்டிருக்கும் பொழுது தான் கொரோனா ஆட்டம் போடத் துவங்கியது.

அமெரிக்காவில் ஒரு ஊரில் ஒரே ஒரு மருத்துவமனை. இரண்டே இரண்டு மருத்துவர்கள். அவர்களே தொற்றுப்பரவல் வந்தால் நிலைமையைச் சமாளிக்கும் வசதிகள் இங்கு இல்லை என்று பேட்டியில் கூறினார்கள்.

இந்தத் தொடரை முழுவதுமாக பார்த்து முடித்த பொழுது(மார்ச் 2020ல்) நியூயார்க்கில் இறப்பவர்களின் எண்ணிக்கை தினமும் கூடிக்கொண்டே இருந்தது. பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழிகளை மொத்தமாக ஒரு குழியில் போட்டு மூடியது போல நோயால் பாதிக்கப்பட்டு இறந்த மக்களையும் புதைக்க இடம் இல்லாமல் எங்கோ பெரிய குழியை வெட்டி உள்ளே தள்ளி மூடினார்கள். அடுக்கடுக்காய் சடலங்கள் தேவாலயங்களில் காத்துக் கிடந்த கொடுமைகள் எல்லாம் கூட நடந்து கொண்டிருந்தது. அதையெல்லாம் கவனமாக மறைத்த உள்நாட்டுப் பத்திரிகைக்காரர்களிடம்  கங்கையில் மிதக்கும் சடலங்களைக் கொடுத்து விலைபோனது  நம்நாட்டு அடிமை ஊடகங்கள். ஊடகவியலாளர்கள். 

ரத்தப் பரிசோதனை செய்யும் லேபுக்குத் தேவையான மருந்துகள், ஊசிகள் கடுமையான பற்றாக்குறையில். அமெரிக்கா இந்திய, சீனாவை நம்பி இருப்பது அப்பொழுது தான் அமெரிக்கர்களுக்குதே தெரிந்தது. மருத்துவர்களுக்கு வேண்டிய முகம், உடல் கவசமும் கைவசம் இல்லை. 'அங்கிள் சாம்' எல்லாவற்றையும் வெளிநாடுகளிலிருந்து வாங்கிக்கொண்டிருந்ததால் திகைத்துப் போனது. அவரவர் நாட்டிற்குத் தேவைப்பட்ட நிலையில் இந்தியா, சீனா அரசுகள் ஏற்றுமதி செய்ய மறுத்து விட்டது. மருத்துவர்களும், செவிலியர்களும், தீயணைப்பு படைவீரர்கள், அவசர மருத்துவ சேவை ஊழியர்கள் நாட்கணக்கில் வீடுகளுக்குச் செல்லாமல் பட்ட துயரங்கள்... 😌

அமெரிக்காவில் அவரவர் வீட்டுக்குள்ளே இருந்தாலும் 'தனிமைப்படுத்தல்' என்பது சாத்தியமான ஒன்று. இந்தியாவில்? பில்லியன் கணக்கில் நெருக்கி வாழும் மக்கள். எளிதில் நோய் பரவும் சாத்தியம். முறையான கட்டமைப்பு இல்லாத நிலையில் எப்படிச் சமாளிப்பார்களோ? என்று வருந்தாத நாள் இல்லை. கடவுளே நம் மக்கள் பத்திரமாக இருக்க வேண்டும் என்றே தான் மனம் வேண்டியது. குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று எத்தனை எத்தனை இழப்புகள்!

இப்படியே ஆறேழு மாதங்கள் சத்தமில்லாமல் சென்று கொண்டிருக்க, இங்கு ஃபைசர், மடோர்னா மருந்து நிறுவனங்கள் கொரோனவிற்கான தடுப்பூசியைக் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்தது. அரசும் அதிக கட்டுப்பாடுகளை விதிக்காமல் சில சோதனைகளுக்குப் பின் "பாதுகாப்பான தடுப்பூசி தான். மக்கள் போட்டுக் கொள்ள வேண்டும்" என்று அதற்கான வேலைகளில் இறங்கி விட்டது. -70டிகிரி வெப்பநிலையில் ஃபைசர் கோவிட் தடுப்பூசியை வைத்திருக்க வேண்டும். பாட்டிலை ஒருமுறை திறந்து விட்டால் உடனே காலி செய்து விட வேண்டும். இப்படி ஏகப்பட்ட நிபந்தனைகள். அரசு செலவழித்தது செலவழித்தது அப்படிச் செலவழித்தது! மருந்துக்கு மட்டும் 25.3 பில்லியன் டாலர்கள் என்கிறார்கள்!(25,300,000,000 ) இந்த மருந்துகளின் பக்க விளைவுகளின் பட்டியலைப் பார்த்தால் எப்படியும் செத்துப் போகப்போகிறோம். இந்த ஊசி போட்டுத் தான் சாகணுமா? என்று ஒரு குழு ஊசி போட்டுக்கொள்ள மாட்டேன் என்று போராட்டம். அவர்கள் போட்டுக்கொள்ளவுமில்லை.

இந்த இரு பெரிய நிறுவனங்களும் ஏகப்பட்ட பகல்கனவுடன் எல்லா நாடுகளின் தலையிலும் இந்த மருந்தைக் கட்டி கல்லா நிரப்பிட வேண்டும் என்று துடியாய் துடித்தது. சீனா வழக்கம் போல அவர்கள் நாட்டிலேயே தயாரித்த ஊசி என்று கமுக்கமாக போட்டுக் கொண்டது. அரபுநாடுகளுக்கும் விற்று விட்டது. ரஷ்யாவும் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்து நிலைமையைச் சமாளித்து விட்டார்கள்.

அப்பொழுது தான் இந்தியாவில் இருந்து பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி(NIV), 'பாரத் பையோடெக்' நிறுவனத்துடன் இணைந்து 'கோவாக்ஸின்' மருந்தைத் தயாரிக்கப் போவதாக அறிவித்தார். இதுநாள் வரையில் தடுப்பூசிகளுக்கு அண்டைநாடுகளைச் சார்ந்திருந்த நாம் இனி நம்நாட்டில் தயாரிக்கப் போகிறோம் என்று பெருமையுடன் உலகிற்கும் அறிவிக்கப்பட்டது.

எப்பேர்ப்பட்ட முன்னெடுப்பு? உடனே நமக்கிருக்கும் தாழ்வு மனப்பான்மையில் ஆங்கிலேய விசுவாச அடிமைப்புத்தியில் என்ன தோன்றும்? வெளிநாடுகளில் இருப்பது போன்ற அதற்கான கட்டமைப்புகள், வசதிகள், ஆராய்ச்சியாளர்கள், அறிவாளிகள் நம்மிடம் இல்லை என்று பகுத்தறிவுத்தனமாக பேசுவது போல் நம்மை நாமே கீழ்ப்படுத்தும் எண்ணங்கள் வெளிப்படும். வெளிப்பட்டது. அவர்களையெல்லாம் புறந்தள்ளி ஒரு குழு மிகத்தீவிரமாக ஆராய்ச்சிகள் செய்து பெரியண்ணன் நிறுவனங்களை விட தரமான மருந்தினைக் கண்டுபிடித்தது.

என்னடா இது? எப்படி சாத்தியம்? என்று கையூட்டு வாங்கிப் பிழைக்கும் சமூகம், "நிச்சயம் இது தரக்குறைவான மருந்தாகத் தான் இருக்கும். ஏன் தரமான அமெரிக்க மருந்து உற்பத்தி நிறுவன தடுப்பூசிகளை இந்தியர்களுக்கு வழங்கக்கூடாது. ஏ! பாசிச அரசே! என்று இங்கிருக்கும் கலகவாதிகள் முதற்கொண்டு கூவ ஆரம்பித்தார்கள். ஒருமுறை போடப்படும் அமெரிக்க நிறுவன தடுப்பு மருந்தின் விலை $120-130! இதன் வீரியம் ஆறு மாதங்கள் வரை தான். மீண்டும் ஒன்றைப் போட்டுக் கொள்ள வேண்டும். இந்திய மக்கள்தொகையினையும் இந்த விலையையும் பெருக்கிப் பார்த்து கணக்குத் தெரிந்தவன் என்றால் நம் நாட்டின் நிதியைச் சுரண்ட குரல்கொடுத்திருக்க மாட்டான். ஆனால் அரங்கேறிய நாடகங்கள் தான் நமக்குத் தெரியுமே? இதில் தமிழக அரசு நாங்கள் வாங்கி போட்டுக்கொள்கிறோம் என்று சவடால் பேச்சு வேறு. ஏற்கெனவே நிதிப்பற்றாக்குறையால் தள்ளாடி வீட்டு வரி, மின்சாரக்கட்டணம், பேருந்து, பால் விலை என்று அத்தியாவசியப் பொருட்களின் விலையை ஏற்றி மக்கள் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் எப்படியாவது வெளிநாட்டு ஊசியை வாங்கி அதில் லாபம் பார்க்க துடித்தார்கள். யார்? அவர்களே தான். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின் ஒரு டோஸின் விலை 225ரூபாய் மட்டுமே.

அதுமட்டுமல்ல, வெளிநாட்டு மருந்து நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் முன்பணம் செலுத்த வேண்டும். மருந்துகள் குறித்த நேரத்திற்குள் அனுப்புவார்களா? அவர்களுக்கே தெரியாது. சாவு அதிகமானால் பொறுப்பேற்றுக் கொள்ள மாட்டோம் என்று கூறிவிட்டார்களாம். இந்தியர்களை வைத்துப் பரிசோதனை செய்யாத மருந்தை எப்படி இந்தியர்களுக்கு வழங்க முடியும் என்று அரசு கேட்டு "அதெல்லாம் முடியாது" என்று கூறிவிட்டார்களாம். தலைமயிற்று ஷாம்பூ கூட ஒவ்வொரு இனத்தவரின் முடியை வைத்து ஆராய்ச்சி, சோதனைகள் செய்கிறார்கள். உயிர்காக்க வேண்டிய மருந்திற்குச் செய்ய மாட்டார்களாம்! இது எப்படி இருக்கு? தங்களுக்கு அடிபணிந்து நடப்பார்கள் என்கின்ற தெனாவெட்டில் பலத்த அடி. அவர்களே எதிர்பாராத ஒன்று. நடத்தி முடித்துக் காட்டிவிட்டது பாரதம்.

அடுத்து, "தரக்குறைவான மருந்து. முதலில் பிரதமர் போட்டுக் கொள்வாரா?" என்று ஜால்ரா 'டூல்கிட்' கூட்டங்கள் எப்படியாவது மக்கள் மனதில் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட தரமற்ற மருந்து என்ற எண்ணத்தை உருவாக்கி விட வேண்டும் என்று தலைகீழாக நின்று கதறினார்கள். அவரும் போட்டுக் கொண்டார். அவர்மீது நம்பிக்கை கொண்ட மக்களும் போட்டுக்கொண்டார்கள். வாயை மூடிக் கொண்டு வேறு வழியின்றி 'டூல்கிட்' கூட்டங்களும் வரிசையாக.

அமெரிக்காவின் கைப்பாவையான 'உலக சுகாதார மையம்' தன் பங்கிற்கு இந்திய தடுப்பூசியை அங்கீகரிக்க மறுத்தது. இரண்டாவது 'வேரியண்ட்' டிற்கு அமெரிக்க மருத்துவ நிறுவனங்களின் வேக்சின்கள் வேலை செய்யவில்லை. இந்திய மருந்துகளின் தரத்தை உணர்ந்து அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். உலகமே எதிர்த்து நின்றாலும் போராடி வெற்றி பெற்ற நம் மருத்துவ ஆராய்ச்சிக்குழுவினருக்கு நாம் நன்றிக்கடன்பட்டிருக்கிறோம். இதற்கான 'பேட்டண்ட்' என்று மருந்து நிறுவனம் எந்த விதிமுறைகளையும் விதிக்காமல் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது. அதுமட்டுமல்ல. 101 நாடுகளுக்கும் மருந்தை இலவசமாக கொடுத்து துன்பத்தில் கைகொடுத்து உதவி சனாதன தர்மத்தைப் பின்பற்றியுள்ளது நம் நாடு. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

இத்தனை பெரிய பேராபத்தைத் தடுக்க நாட்கணக்கில் மருத்துவ உலகம் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க, தடுப்பூசிக்காக ஆராய்ச்சியாளர்கள் அதுவும் 70 சதவிகிதம் பெண்கள் பணிபுரிந்து சாதனைப் படைத்திருக்கிறார்கள் என்பது எத்தனை பெருமையான விஷயம்! அவர்கள் குடும்பத்தினர் பட்ட கஷ்டங்கள், தியாகங்கள், 'டூல்கிட்' அரசியல் என்று உள்நாட்டில் மருந்து தயாரிக்க நடந்த பல விஷயங்களையும் அழகாகப் படமாக்கியிருக்கிறார் திரு.விவேக் அக்னிஹோத்ரி!

'The Vaacine War' நாம் அனைவரும் காண வேண்டிய திரைப்படம். அரசியல், மொழி, மதம், இனம் தாண்டி இந்தியர்களாகப் பெருமை கொள்ள வேண்டிய தருணத்தை ஊடகங்கள் மக்களிடம் கொண்டு செல்லாமல் கவனமாகத் தவிர்த்து விட்டது. அதனை நிவர்த்தி செய்ய பள்ளி, கல்லூரிகளில் இத்திரைப்படத்தைத் திரையிட்டு இந்தியர்களின் பெரும்சாதனையை உணர்த்த வேண்டும். மக்களும் திரையரங்குகளுக்குச் சென்று இப்படத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

Yes, we can do it💪💪💪  















No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...