Wednesday, October 11, 2023

அழகர்கோவில்

புரட்டாசி மாத சனிக்கிழமை என்றாலே பெருமாள் கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதுவும் 'திவ்யதேச' கோவில்கள் என்றால் கேட்கவே வேண்டாம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான அழகர்கோவில் மதுரையிலிருந்து 21கிமீ தொலைவில் இருக்கிறது.

மதுரையில் இருக்கும் கோவில்கள் ஒவ்வொன்றும் என் சிறுவயது நினைவுகளுடன் அதிக தொடர்புடையவை. ஒவ்வொரு முறை ஊருக்குச் செல்லும் பொழுதெல்லாம் அங்குச் சென்று வந்த இனிய நாட்களை, அனுபவங்களை நினைத்துப்பார்க்க, பாட்டி, அப்பா என இழந்துவிட்ட உறவுகள் மீண்டும் உயிர்பெற்று வருவார்கள் (மகாளயபட்ச காலம் வேறு தொடங்கி விட்டது!) அந்த வகையில் அழகர்கோவிலும் என் மனதிற்கு மிக நெருக்கமான கோவில்.

ஒரு மாத கால பள்ளி கோடை விடுமுறைகளில் பாட்டி(அங்கெர்அம்போ, அம்மம்மா) எங்களை அழைத்துச் செல்லும் இடங்கள் பெரும்பாலும் கோவில்களாகத் தான் இருக்கும். திருப்பரங்குன்றம், நரசிங்கம்பட்டியில் ஓரிரு நாட்கள் தங்கி இருந்தாலும் அதிக நாட்கள் குடும்பத்துடன் தங்கி இருந்தது அழகர் கோவிலில் தான். இப்பொழுது நினைத்துப் பார்த்தால் புலம்பெயர்ந்த எம் சமூக மக்கள் அன்றே பெரிய பெரிய சத்திரங்களைக் கோவில்கள் அருகே கட்டி திருவிழா வைபவங்களில் அங்கம் வகித்திருக்கிறார்கள். பெருமையாக இருக்கிறது!

விடுமுறையில் அழகர்மலைக்குச் செல்வதென்றால் ஒரே 'ஊஊலலலா' மொமெண்ட்ஸ் தான் எனக்கு. எத்தனை நாட்கள் தங்கப்போகிறோமோ அதற்குத் தேவையான உணவுப்பொருட்கள், சிறு தீனி மூட்டைமுடிச்சுகளுடன் புறப்பட்டு விடுவார் பாட்டி. அம்மா தன் பங்கிற்கு ஏராளமான நொறுக்குத் தீனிகளை வாங்கிக் கொடுத்துவிடுவார். அதிகாலையில் வெயில் பட்டையைக் கிளப்புவதற்கு முன்பே கிளம்பிவிடுவோம். மிஷன் ஆஸ்பத்திரி பேருந்து நிறுத்தத்தில் கூட்டமில்லாத 44ம் பேருந்தில் ஜன்னலோர இருக்கை கிடைத்து விட்டால் போதும். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி ஆகிவிடுவேன். அப்புறம் என்ன? ஒரே வேடிக்கை தான். மனதில் எந்தவித கவலையுமில்லாமல் அந்தந்த நொடிகளில் வாழும் சுகம் இருக்கே! அனுபவித்தே உணர வேண்டியது. எல்லோரும் சேர்ந்து உட்கார வேண்டும் என்று பாட்டி சொல்ல, ஆளுக்கொரு ஜன்னல் இருக்கையில் அமர்ந்து அவருக்கு அப்பொழுதிருந்தே தலைவலி ஆரம்பித்துவிடும்😜 சொல்ற பேச்சைக் கேட்குதுங்களா? என்று ஆரம்பித்து விடுவார். அதில் தம்பிகள் வேறு ஆண்கள் இருக்கைப்பக்கம் அமர்ந்து கொள்ள, நடத்துனரிடம் சீட்டு வாங்க, அவர் எந்தெந்த இருக்கைகளில் அமர்ந்திருக்கிறோம் என்று சரிபார்த்து 'ர்ர்ர்ரைட் ரைட்' சொல்ல இனிமையான பயணம் துவங்கும்.

வெத்தலைப்பேட்டையில் பெரிய பெரிய பண்டல்களுடன் வாழைத்தார், பழக்கூடைகள், வெத்தலைக்கட்டுடன் வியாபாரிகள் பலரும் ஏற ஒரே தள்ளுமுள்ளாக இருக்கும். விவசாயத்திற்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் விற்கும் கடைகளில் கிராமத்து மணம் வீசிக்கொண்டிருக்கும். கீழமாசி வீதியில், சிம்மக்கல்லில் தான் காய்கறி, பழ மண்டிகள் இருக்கிறது. மேம்பாலத்தைக் கடக்கையில் வைகை ஆற்றில் சுகமாக தலையை மட்டும் நீட்டி குளித்துக் கொண்டிருக்கும் எருமை மாடுகளும், பொதிகளைச் சுமந்து வந்த கழுதைகளும், 'உஜ்ஜாலா' இல்லாமல் வெண்மையில் பளிச்சிடும் கொடிகளில் உலரும் துணிகளும் துவைத்துக் கொண்டிருக்கும் வண்ணான்களுமாய் பிசியாக இருந்த இடம் இன்று சகதி, குப்பைக்கூளங்களுடன்! வாஷிங் மெஷின் வந்த பிறகு வண்ணான்கள் மறைந்து விட்டார்கள். கழுதைகளும் தான். அதிர்ஷ்டம் இருந்தால் வைகையில் தண்ணீரைப் பார்க்கலாம். மாலை/இரவு நேரங்களில் ஒளிவிளக்குகள் மின்ன அருமையாக இருக்கும். நிறைய பாலங்களை ஆற்றின் குறுக்கே கட்டி வயதான பெரிய பாலத்திற்கு ஒய்வு கொடுக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் தெற்கே செல்ல செல்ல குப்பைகள் மிகுந்து மிதந்து நாறிப்போய்க் கிடக்கிறது😌 'இதெல்லாம் அரசியல்ல' என்று கடந்து போனால் நீயும் மதுரைக்காரனே!

பாலத்திலிருந்து இறங்கி தேவர் சிலையைத் தாண்டினால் அமெரிக்கன் கல்லூரி வளாகம். இப்பொழுது பெரிய பெரிய கடைகளும் உணவகங்களும் ஆக்கிரமித்துள்ளது. அதற்குப் பிறகு அகலமான பெரிய சாலை. தமுக்கம் மைதானம், தந்தி ஆஃபீஸ். கடந்து சென்றால் அன்றைய நட்சத்திர பாண்டியன் ஹோட்டல். எதிர்புறம் அரசினர் மாளிகை. இங்கிருந்து சாலையின் இருபுறமும் அடர்ந்த தூங்குமூஞ்சி மரங்கள். பிறகு தல்லாகுளம். 'எல்லாரும் சாமிய கும்பிட்டுக்கோங்க', பாட்டி சொல்லவும் கோபுர தரிசனம். மக்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் பல நிறுத்தங்கள். கண்டாங்கி சேலை, தண்டாட்டி தொங்கட்டான் பாட்டிகள், வேட்டி கட்டியவர்கள் அதிகமாக இருந்தார்கள். இப்பொழுது அதிகம் தென்படுவதில்லை. நாகரீக மாற்றம்!

வழியெங்கும் அத்தனை டெய்லர், காபி, பலகாரக் கடைகள். ரெடிமேட் உடைகள் வந்தபிறகு ஆண்களுக்கான சட்டை, பேண்ட் தைப்பவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். ஆனால், பெண்கள் நாங்கள் அவர்களை விடுவதாக இல்லை. எத்தனை ரெடிமேட் சோளிகள் கிடைத்தாலும் ஜன்னல், கதவு இத்யாதிகளுடன் டிசைன் ப்ளவுஸ் தைக்க மவுசு கூடிக் கொண்டு வருவதால் நவீன தையல் நாயகி/நாயகர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம். சட்டை தைக்கும் விலையை மட்டும் கேட்டு விடாதீர்கள்😜 கடைகளில் 'ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்'. அத்தனை உயிர்நாடியாய் பாடல்கள் அன்றாட வாழ்வில் இரண்டற கலந்து விட்டிருந்தது! இன்றும் அப்படியே! ரசனை மாறியிருக்கிறது!

பரபரப்பான கேகே நகர், புதூர் தாண்டியதும் கடச்சனேந்தல். இப்பொழுது முற்றிலுமாக அடையாளம் தெரியாத அளவிற்கு இந்தப்பகுதிகள் மாறிவிட்டிருக்கிறது! இருக்கும் சிறு இடங்களில் கூட கட்டிடங்களைக் கட்டி ஏராளமான கடைகள். உள்ளே சென்றால் வீடுகள்! ஹ்ம்ம்.. ஊர் விரிவடைகிறது. அதற்குப் பிறகு வரும் ஊர்களின் பெயர்கள் எல்லாம் அழகாக இருக்கும். எம் சமூகத்து மக்கள் தறிகள் போட்டுக் கொண்டு அங்கு வாழ்கிறார்கள். காதக்கிணறு ஊரில் தான் ஸ்ரீமான் நடனகோபால சுவாமிகளின் சமாதி உள்ளது. பகவானைப் போற்றி என்னுடைய தாய்பாஷையில் இவர் இயற்றிய கீர்த்தனைகள் மிகவும் பிரபலமாக இருந்தது! அவற்றைப் பாடிக்கொண்டு முன்பு பலரும் வருவார்கள். வீட்டிற்கு வருபவர்களைப் பாட வைத்து உணவளித்துப் பணமும் கொடுத்து அனுப்புவார் பாட்டி (அம்மோ, அப்பாவின் அம்மா) . அப்படி பாடிக்கொண்டு வந்த தலைமுறையே இன்று காணாமல் போய்விட்டிருக்கிறது😔 கேட்பவர்களும் தான்😒 நண்பர் ஒருவர் இத்தளத்தில் நாயகி இயற்றிய கீர்த்தனைகளைச் சேமித்துள்ளார். ஆர்வம் இருப்பவர்கள் இங்கே சொடுக்கவும் http://srimannayagi.org/tamilindex.htm வருடந்தோறும் கோவிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெறுகிறது. சிறியதாக இருந்த மண்டபம் இன்று பலரின் உதவியால் வளர்ந்து இருக்கிறது.

காதக்கிணற்றிலிருந்து 'எங்க ஊரு மாட்டுக்காரன்' கிராமம் போல இருந்த செம்பியனேந்தல் , கள்ளந்திரி பகுதிகள் கிராமத்திலிருந்து கொஞ்சம் வளர்ந்து சிறு நகரங்களாய் உருமாறியிருக்கிறது! கள்ளந்திரியில் அரசு சுகாதார நிலையப் பேருந்து நிறுத்தத்தில் கையில் குழந்தைகளுடன் பெற்றோர்கள், உடல்நலம் குறைந்த வயதானவர்கள் இறங்குவார்கள். இங்கிருக்கும் கால்வாயில் நீச்சல் அடித்துக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்தால் எப்படித்தான் இப்படி தைரியமாக ஓடும் நீரில் ஜாலியாக குளித்துக் கொண்டிருக்கிறார்களோ என்று தோன்றும்! அந்தப்பகுதி முழுவதும் 'பச்சைப்பசேல்' என்று விவசாயம் அதிகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. இப்பொழுது நன்கு குறைந்திருக்கிறது😕

ஒத்தக்கடையிலிருந்து கடச்சனேந்தல் வரும் வழியெங்கும் கரும்புத்தோட்டங்கள் அதுவும் தை மாதம் அங்கு சென்றால் 'நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ, போ' என்று உயர்ந்து வளர்ந்திருக்கும் கரும்புத்தோட்டங்களைப் பார்க்கப் பார்க்கத் தித்திக்கும்! கள்ளந்திரியைக் கடந்து விட்டால் 'பூங்காற்று உன் பேர் சொல்ல' காதில் வருட, அழகர்மலை தெரிய ஆரம்பித்துவிடும். பரபரப்பு தொத்திக் கொள்ளும். புளியமரங்கள் சாலையின் இருபுறமும் அடர்த்தியாக நிழற்குடை போல் அணிவகுத்து நிற்கும் அழகே அழகு. இப்பொழுது சாலையை விரிவாக்குகிறேன் என்று பொட்டலாக்கி வைத்திருக்கிறார்கள்😖

நாங்கள் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தவுடன் ஆளுக்கொரு மூட்டையைத் தூக்கிக் கொண்டு ஆனந்தமாக இறங்கி விடுவோம்.

அழகர்கோவிலில் தங்க வேண்டுமென்றால் அன்று சத்திரங்களில் தான் இருக்க வேண்டும். 'பாதே', 'செட்டின்' என்ற குடும்பப்பெயர் கொண்டவர்களின் முன்னோர்கள் கட்டிய சத்திரங்கள் இன்றும் பக்தர்கள் தங்கிச் செல்லும் இடங்களாக இருக்கிறது. சௌராஷ்ட்ரா மக்கள் பலரும் அங்கு தங்குவார்கள்.

அழகர் கோவில் கோட்டைக்குள் இருக்கும் ஒரு கோவில். 'பாதே' சத்திரம் கோட்டைக்கு வெளியே நுழைவாயிலில் இடப்புறத்தில் இருக்கிறது. தென்னை, மாங்காய், அரைநெல்லிக்காய், புளியமரங்கள் சூழ நடுவில் சத்திரம். வாசலின் முன்பு இருபக்கமும் திண்ணை. உள்ளே தனித்தனி அறைகளும் ஹாலும் பின்பகுதியில் சமையற்கூடம், குளியல் அறை என்று விசாலமான இடம். எதிர்ப்புறத்தில் காபிக்கடை ஒன்றில் எந்நேரமும் வானொலியில் பாட்டு. மேலூர் திரையரங்குகளில் ஓடும் படங்களுடன் சுவரொட்டிகள். 44ஆம் எண் பேருந்துகள் கருப்பசாமி கோவில் வரை சென்று வந்தது இப்பொழுது வெளியிலேயே நிறுத்தி விடுகிறார்கள். காலையில் சூடாக கருப்பட்டி காபி. பாட்டி சமையல்வேலைகளில் மும்முரமாக பெரியம்மா மகளுடன் நாங்கள் வாசலில் குரங்குகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்போம். குட்டியுடன் செல்லும் ஆடு, மாடுகள், சாலையோர மரங்களை மேய்ந்து கொண்டிருக்கும். எனக்கென்ன என்று சாணம் போட்டுக் கொண்டே செல்லும். அதைக் கூடையில் அள்ளிக்கொண்டே செல்லும் பெண்மணி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே அவரும் செல்வார்.

முன்வாசல் கதவைத் தாண்டி சாலைக்குச் செல்லக்கூடாது என்பது பாட்டியின் கட்டளை. அதனால் அதற்குள் விளையாடிக் கொண்டிருப்போம். சொட்டாங்கல்லு, ஓடிப்பிடித்து விளையாடுவது, புளியம்பழம், அரைநெல்லிக்காய்களைப் பறித்து உண்பது என்று நன்கு பொழுது போகும். இவையெல்லாம் மதுரை நகரில் கிடைக்காத அனுபவங்கள் ஆச்சே! கையில் அலைபேசி இல்லாத பொற்காலம் அது! இல்லையென்றால் படங்களை எடுத்து இன்ஸ்டாவில் போடவும் ஃபேஸ்புக்கில் பதிவு போடுவதிலும் நேரத்தை விரயம் செய்திருப்போமோ?

குளிப்பதற்கு மலைக்குச் செல்ல துணிகளை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தால் வழியில் மாங்காய், நுங்கு, வாழைப்பழம், மாம்பழம் என்று எதையாவது ஒன்றை வாங்கி அதைக் குரங்குகளிடமிருந்து காப்பாற்றித் தின்று முடிப்பதற்குள் போதும் போதும் என்று இருக்கும்.

ம்ம்ம். அழகர் கோவிலைப் பற்றி எழுத ஆரம்பித்தால் எங்கேயோ ஆரம்பித்து நான் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கிறேன்.

இனி தான் மெயின் சப்ஜெக்டே!

கோட்டைச்சுவர் சூழ சோலைமலையின் பின்னணியில் அமைந்துள்ள அழகான கோவிலின் வெளி கோட்டைச்சுவரைக் கடந்து உள்ளே சென்றால் அது ஒரு தனி உலகமாக இருக்கும். கோவிலில் வேலைபார்ப்பவர்களுக்கான வீடுகள் மட்டுமே இருந்த இடங்களில் தற்பொழுது பயணிகள் தங்கிச்செல்ல நிறைய புதுக்கட்டிடங்கள் முளைத்துள்ளன. அதையும் தாண்டி யோகநரசிம்மருடன் உள்கோட்டைச்சுவர் வரவேற்க,பரந்து விரிந்த மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து மக்கள் கூட்டத்தைக் காணலாம்.

சித்திரை, ஆடி மாதங்களில் டிராக்டரில், இரண்டு, நான்கு சக்கர வாகனங்களில் மாமன், மச்சான் குடும்பங்கள், உறவுகளுடன் புடைசூழ வந்து குழந்தைகளுக்கு மொட்டையடித்து, 'கடா' வெட்டி பொங்கல் படையல் போடுவார்கள். புகை அடுப்புகளும் சந்தனம் பூசிய மொட்டைத்தலைகளும், காதுகுத்தியதில் அழும் குழந்தைகளை ஒருவர் மாற்றி ஒருவர் தூக்கிக்கொண்டு சத்தமாய் சிரித்துக் கொண்டு பார்க்கவே நமக்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் தொற்றிக்கொள்ளும். அவரவர் உலகத்தில் ஆனந்தமாய் இருக்கும் நொடிகளில் வெறுப்பு என்பதே இல்லாமல் எத்தனை இன்பமாய் இருக்கிறோம்! தற்பொழுது மொட்டையடிக்க, காதுகுத்து நடத்த, படையல் போட என்று நிறைய மண்டபங்களைக் கட்டி விரிவாக்கியுள்ளார்கள். கோவில் தேர் நிறுத்துமிடத்தில் இருந்து கூட்டம் தொடங்கிவிடும். நிழல் தரும் மரங்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் வழக்கம் போல சுகமாக தூங்கிக்கொண்டிருக்கும் சிறு கூட்டம். திருவோடு ஏந்தியவர்கள், குரங்குப்பட்டாளங்கள், பறவைகள் என காட்சிகளுக்குக் குறைவிருக்காது.

அது என்னவோ தெரியவில்லை என்ன மாயமோ புரியவில்லை? பதினெட்டாம்படி கருப்பசாமி என்றால் ஒரு ஈர்ப்பு தான். கிராமத்துக் கடவுள் என்றாலும் சுந்தர்ராஜப் பெருமாளின் காவல் தெய்வம். இவரை வணங்கித்தான் பெருமாளைக் கும்பிட கோவிலுக்குச் செல்வோம். அங்கே சிதறு தேங்காயை உடைக்கும் சத்தத்தைக் கேட்டவுடன் 'சடசட'வென குரங்குகள் மரங்களில் இருந்து ஓடிவரும். கைகளில் கிடைத்த துண்டுகளுடன் மறைந்திருந்து சாப்பிடுவது கொள்ளை அழகு! கிராமத்துப் பூசாரிகள் தான் அங்கே இருப்பார்கள். ஏழுநிலைகள் கொண்ட ராஜகோபுரம். அதன் கீழே மலர்மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு சந்தனத்தால் பூசப்பட்டிருக்கும் இரண்டு பெரிய கதவுகள் தான் கருப்பசாமியாக பல குடும்பங்களுக்கும் குல தெய்வமாக நம்பிக்கை கடவுளாக காட்சியளிக்கிறார். வருடத்தில் ஒருமுறை திறக்கப்படும் கதவு, பூஜைகள் முடிந்த அடுத்த நொடியில் மூடிவிடுவார்கள். வாழ்க்கையில் நம்பிக்கை என்பது எத்தகைய வலிமையானது என்பதை அங்கு பார்த்தால் புரியும். பாமரன் எங்கும் கடவுளைக் காண்கிறான். மனநிறைவும் மகிழ்ச்சியும் கொள்கிறான். தன் மனச்சுமைகளை அவனிடத்தில் இறக்கி வைத்து ஆறுதல் பெறுகிறான். ஆடி மாதத்தில் கிராமத்து மக்கள் அதிகம் வந்து திருவிழாவைக் கொண்டாடிச் செல்கிறார்கள். முதன்முறையாக வீச்சரிவாள்களைக் கோவில் சுவற்றில் பார்த்தவுடன் எப்படி தயாரித்தார்களோ என்று ஆச்சரியமாக இருந்தது! வெண்ணையும், குங்குமமும், துளசிமாலையும் சூடிய குட்டி ஆஞ்சநேயர் சந்நிதியும் அருகிலேயே உள்ளது.

எதிரில் இருக்கும் மண்டபத்தின் அருகே கொய்யா, நவ்வாப்பழம், மாங்காய், நெல்லிக்காய், இலந்தைப்பழம் என்று அந்தந்த பருவத்தில் கிடைக்கும் பழங்களைத் தரையில் சணல் சாக்குப் பை மீது போட்டு விற்றுக் கொண்டிருப்பார்கள். இப்பொழுது தள்ளுவண்டிகளில் விற்கிறார்கள். அங்கிருந்து தான் பழமுதிர்சோலை மற்றும் தீர்த்த தொட்டிக்குச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். உள்ளே சிறிது தூரம் சென்றால் கட்டுமானப்பணி நிறைவேறாத கோபுரம் புல், பூண்டுகள் சூழ பாழடைந்து நிற்கிறது😞

கருப்பண்ணச்சாமியை வணங்கி மேட்டில் நடந்து சென்றால் உட்கோட்டையில் 'கள்ளழகர்' குடியிருக்கும் அழகிய திருமாலிருஞ்சோலை கண்முன்னே விரியும். வாசலில் கருடன், சஞ்சீவி மலையைத் தூக்கியபடி ஆஞ்சநேயர் திருஉருவங்களை வரைந்திருப்பார்கள். உள்ளே சென்று செருப்பைக் கழட்டிவைத்து விட்டு கற்சாலைகளில் நடந்து செல்ல வேண்டும். கருப்பசாமி கோவில் கோபுரவாசலை ஒட்டி மடப்பள்ளி. அங்கிருந்து தான் பெருமாளுக்கு நைவேத்யம் செய்து பூஜைக்கு எடுத்துச் செல்வார்கள். 'கமகம'வென்று வடை, புளியோதரை, அழகர்கோவில் ஸ்பெஷல் தோசை வாசம் அழைக்கும். 'பொறு மனமே பொறு. அழகரைத் தரிசித்து விட்டு ஓடி வருகிறேன்' என்று மனதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குள்😜

அருகே கோவில் பட்டர்கள் தங்கும் உறைவிடங்கள். எதிரே வசந்த மண்டபம். கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சிலைகள் பிரமிக்க வைக்கும்! நாங்கள் ஓடியாடி விளையாட அத்தனை பெரிய இடம்! முன்பு செருப்பு வைக்கும் இடத்திற்கு அருகே சிறிய உணவகம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சிறிய பலசரக்கு கடை, பொரிகடலை விற்கும் கடை இருந்தது. இப்பொழுது இல்லை என்று நினைக்கிறேன். அதற்கும் பக்கத்தில் இருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டியில் தான் நூபுரகங்கைத் தீர்த்தம் மலையிலிருந்து கீழே வரும்வகையில் குழாய்களை வைத்திருந்தார்கள். கூட்டம் வருவதற்கு முன்பே குளித்துமுடிக்க விடியும் முன்னே இருட்டில் பாட்டி அழைத்துச் செல்வார். தற்பொழுது அந்த தண்ணீர்த்தொட்டி உபயோகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை😕

பகல் நேரத்தில் குரங்குகளின் அட்டகாசம் தாங்க முடியாது. அதுவும் அந்த 'ஆல்ஃபா மேல்' குரங்கு தெனாவெட்டாக நடந்து வருகையில் மற்ற குரங்குகள் சிதறி ஓடிவிடும். எனக்கு குட்டி குரங்குகள் அல்லது பிள்ளையைச் சுமந்து வரும் பெண் குரங்குகளைத் தான் அதிகம் பிடிக்கும். அவர்களுக்குத் தான் தீனியைப் போடுவது வழக்கம். ஒன்றும் கிடைக்கவில்லையென்றால் இந்த ஆண் குரங்குகள் 'ஆ ஊ' என்று மூஞ்சியைக் கோணலாக்கி நம்மை பயமுறுத்தும். அதனால் எப்பொழுதும் குச்சி ஒன்றைக் கையில் வைத்திருப்போம். அதற்கெல்லாம் பயப்படுறவன் நான் இல்லை என்று தாக்க வரும் 'மட்டா கோதி'(முரட்டு குரங்கு). "ராமா ராமா" என்று குட்டி குரங்குகளைக் கூப்பிட்டால் 'கிடுகிடு'வென்று வந்து கையில் இருப்பதைப் பிடுங்கிக்கொண்டு ஓடும். குரங்குகளுடன் நன்றாகப்பொழுதுகள் போகும். 

ராஜகோபுரத்தில் இருக்கும் சிலைகளைப் பார்த்து எங்களுக்குள் சிரித்துக் கொள்வோம்😜 வசந்த மண்டபத்தைச் சுற்றிச்சுற்றி வந்து விளையாடுவோம். அங்கு அமர்ந்து சாப்பிடும் மக்களை வேடிக்கைப் பார்ப்போம். பிரசாதம் என்று பொங்கல் கொடுப்பார்கள். தயங்கித்தயங்கி வாங்கிக் கொள்வோம். சரளமாக தமிழில் பேசத்தெரியாத காலம்! பேசினால் கிண்டலடிப்பார்கள் என்று தமிழ் பேசுபவர்களிடமிருந்து கொஞ்சம் விலகியே இருப்போம். எம் மக்கள் என்றால் அவர்கள் எந்த வீட்டுக் குழந்தைகள் என்று கேட்பார்கள். சாப்பிட அழைப்பார்கள். யாருடனும் பேசக்கூடாது என்று பாட்டி சொல்லைத்தட்டாமல் சிரித்துக்கொண்டே ஓடிவிடுவோம். தெரிந்த குடும்பங்கள் என்றால் மட்டும் பாட்டியிடம் சொல்வோம். கூட்டம் இல்லையென்றால் சிலைகளை வேடிக்கைப் பார்ப்பது தான் வேலை. மீண்டும் அங்கு செல்ல துடிக்குது மனசு. சென்ற முறை அங்கே சென்றிருந்த பொழுது வசந்த மண்டபத்தை மூடிவிட்டிருந்தார்கள்!அங்கே கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்ட சிலைகள் பிரமிக்க வைக்கும்!

அருகே கோவில் பட்டர்கள் தங்கும் உறைவிடங்கள். முன்பு செருப்பு வைக்கும் இடத்திற்கு அருகே சிறிய உணவகம் இருந்தது. அதற்குப் பக்கத்தில் சிறிய பலசரக்கு கடை, பொரிகடலை விற்கும் கடை இருந்தது. இப்பொழுது இல்லை என்று நினைக்கிறேன். அதற்கும் பக்கத்தில் இருக்கும் பெரிய தண்ணீர்த் தொட்டியில் தான் நூபுரகங்கைத் தீர்த்தம் மலையிலிருந்து கீழே வரும்வகையில் குழாய்களை வைத்திருந்தார்கள். கூட்டம் வருவதற்கு முன்பே குளித்துமுடிக்க விடியும் முன்னே இருட்டில் பாட்டி அழைத்துச் செல்வார். தற்பொழுது அந்த தண்ணீர்த்தொட்டி உபயோகத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை😕

அதற்குப் பக்கத்தில் ஆண், பெண் இருபாலாரும் தங்கிப் படிக்கும் தேவஸ்தானத்தைச் சேர்ந்த அரசு உறைவிடப் பள்ளி இருந்தது. அங்கு தங்கிப் படித்தவர்கள் பெற்றோர்கள் அற்ற குழந்தைகள்😑 மரத்தடியில் தான் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும். ஒரே ஒரு பெரிய ஹால். அவர்கள் துணியை அவர்களே துவைத்துக் காயப்போட்டு பாத்திரங்களைக் கழுவி சிறிய ட்ரங்க் பெட்டியில் மொத்த பொருட்களையும் வைத்துக்கொண்டு அவர்களுடைய சின்னஞ்சிறுஉலகம்! அப்பா, அம்மா யாரும் இல்லாமல் எப்படித்தான் இருக்கிறார்களோ என்று அவர்களைப் பார்க்கும் பொழுதெல்லாம் வருந்தியதுண்டு😔 அருகில் தேவஸ்தான அலுவலக கட்டிடங்கள்.

சித்திரைத்திருவிழாவின் நாயகன் அழகர். மதுரைக்குச் செல்லும் பொழுது ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் மக்கள் கூட்டம் அலைமோத இங்கிருந்து புறப்படுவதை வீடியோவிலும் படங்களிலும் பார்த்திருக்கிறேன். திருவிழா தவிர மற்ற நாட்களில் கூட்ட நெரிசல் இல்லாமல் அமைதியாக நடந்து சோலைமலையின் அழகை ரசிக்கலாம். கருங்கற்கள் பதித்திருந்த இடத்தில் இப்பொழுது சிமெண்ட் பூசிய தரை! அத்தனை கற்களையும் பெயர்த்து என்ன செய்தார்களோ? இப்பொழுதெல்லாம் அரசு வாகனங்கள் வசந்த மண்டபம் வரை வருகிறது! எளியவர்கள் பாடு தான் திண்டாட்டம்.

மூன்று வருடத்திற்கு ஒருமுறை பெருமாளுக்குத் தைலக்காப்பு உற்சவம்நடக்கிறது. தை மாதம் முதல் ஆடி மதம் வரை தொடரும் இந்த விழாவில் மூலவரைக் காண முடியாது. நீண்ட உயர்ந்த தூண்களைக் கொண்ட மண்டபங்கள். கோவிலுக்குள் நுழையும் பொழுதே பக்தர்கள் காணிக்கையாக அளித்த நெல்லின் வாசத்தை சுவாசிக்கலாம். அதுவும் அறுவடைக்குப் பிறகு காணிக்கையாக கோவிலுக்கு மூட்டையில் நெல்லை அளிக்கிறார்கள். மதுரையைச் சுற்றியுள்ள ஊர்களில் இருந்து வரும் பக்தர்கள் அதிகம். இப்பொழுதெல்லாம் கோவில்களில் குடமுழுக்கு என்ற பெயரில் தூண்கள் அனைத்தையும் 'sand blasting' செய்து பாழாக்கி வைத்திருக்கிறார்கள்.

உயரமான கொடிமரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் நீண்ட உயர்ந்த தூண்களைக் கொண்ட மண்டபங்கள். அதையும் கடந்து மூலவரைத் தரிசிக்கும் முன் சுற்று மண்டபத்தில் உக்கிர யோகநரசிம்மர்! இவரின் உக்கிரத்தைக் குறைக்க சிறப்பு அபிஷேகங்கள் தினமும் நடக்கிறது. அவரை வணங்கி படிகளில் ஏறினால் கருவறையில் வீற்றிருக்கும் பெருமாளின் அழகிய தரிசனம்.கம்பீர தோற்றத்துடன் சங்கு, சக்கரம், கதை, வாள், வில்லுடன் நின்ற கோலத்தில் 'கன்னங்கரேல்' பரமசுவாமி பெருமாள் தேவியர்களுடன் திவ்யமாக காட்சி தருகிறார். பெருமாள் கோவில்களுக்கே உரித்த சிறப்பு அலங்காரங்கள் மனதைக் கொள்ளை கொள்ளும். தீபாராதனையில் ஜொலிக்கும் பெருமாளைக் காண, 'கோவிந்தா கோவிந்தா' கோஷதில் மனம் பரவசமாகி விடும். சுற்று மண்டபத்தில் சுந்தரவல்லித்தாயார் சந்நிதி. பழமையான கோவில் என்பதை அங்கிருக்கும் ஒவ்வொரும் நிமிடமும் உணர முடியும். மதுரையில் கூடலழகர் பெருமாள் கோவில் விஸ்தாரமாக காற்றோட்டமாக சூரிய ஒளி படரும் வண்ணம் இருக்கும். இந்தக் கோவிலில் அப்படி உணர்ந்ததில்லை. அதனால் கொஞ்சம் பயந்ததுண்டு. இப்பொழுது பெருமாளைத் தரிசிக்க வரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த சுற்றி சுற்றிச் செல்கிறது வரிசை. சிறப்பு தரிசன சீட்டு வாங்கினால் இரண்டு சுற்று குறையும்.

கோவிலுக்குச் சென்று வரும் பொழுது கிடைக்கும் மனநிம்மதியுடன் வெளியே வந்தால் பிரசாத கடையில் வடை, அப்பம், புளியோதரை, முறுக்கு.. இதெல்லாம் யாருக்கு வேண்டும்? இந்தக் கோவிலின் சிறப்பே அழகருக்குப் படைக்கும் தோசை தான். மிளகு தூக்கலாக தாராள நெய்யில் செய்த கருப்பு உளுந்து தோசை!!! யம் யம் யம்... சாப்பிட்டு முடிக்கையில் எண்ணெய் அப்பிய இதழ்கள் சொல்லாமல் சொல்லும்ம்ம்ம்ம்😝

பூமியில் புதைந்திருந்த தெப்பக்குளத்தை சில வருடங்களுக்கு முன் தான் கண்டுபிடித்து தூர்வாரி தற்பொழுது தண்ணீருடன் இருக்கும் படங்களைப் பார்த்தேன்.

பழமையும் சிறப்பும் வாய்ந்த புராதன கோவில். கண்டிப்பாக சென்று வர வேண்டிய கோவில்.

சென்ற வருடம் 2022ல் சென்றிருந்த பொழுது நல்ல மழை. குடமுழுக்கிற்கு கோவில் தயராகிக் கொண்டிருந்ததது.









No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...