Saturday, November 25, 2023

The Railway Men

கடந்த 1984ல் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிக்கும் தொழிற்சாலையிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி பலரும் மரணமடைந்த செய்தி வெளியான பொழுது நாடே அதிர்ந்தது. வரலாற்றில் நடந்த கொடும் விபத்து அது. அதனைப் பற்றின செய்திகளைக் கேட்கவும் பார்க்கவும் அச்சப்படும் வகையில் இருந்ததை அன்று பார்த்தவர்களும் கேட்டவர்களும் மறக்க முடியாது.

போபால் நகரில் ஏழை மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதியில் 'யூனியன் கார்பைடு' எனும் பெயரில் பூச்சிக்கொல்லி ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இது 'யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன்' என்ற அமெரிக்க நிறுவனத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய நிறுவனம். 1984ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் நள்ளிரவு 'யூனியன் கார்பைடு' நிறுவனத்தில் இருந்து சுமார் 45 டன் அபாயகரமான "மெதில் ஐசோசயனேட்" வாயு வெளியேறியது. அது காற்றில் பரவியதில் ஆலையைச் சுற்றியுள்ள மக்கள் சுவாசித்ததில் உடனே ஆயிரக்கணக்கானோர் இறந்துவிட்டனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் போபாலை விட்டு வெளியேற முயற்சித்ததால் பீதியை உருவாக்கியது. இறுதி இறப்பு எண்ணிக்கை 15,000 முதல் 20,000 வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயிர் பிழைத்தவர்களின் எண்ணிக்கை சுமார் 500,000 பேர்கள் என்று கணக்கிடப்பட்டது. அவர்களும் சுவாச பிரச்சனைகள், கண் எரிச்சல், குருட்டுத்தன்மை, பிற உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனர்.

விபத்து நடந்து முடிந்த பல வருடங்களுக்குப் பிறகும் 21ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் 400 டன்களுக்கும் அதிகமான தொழிற்சாலை கழிவுகள் அந்த தளத்தில் இருந்தன. தொடர்ந்து எதிர்ப்புகளும் வழக்கு முயற்சிகளும் நடந்த போதிலும், 2001ல் யூனியன் கார்பைடு கார்ப்பரேஷனை வாங்கிய டவ் கெமிக்கல் நிறுவனமோ அல்லது இந்திய அரசாங்கமோ அந்த இடத்தை சரியாகச் சுத்தம் செய்யவில்லை. அதனால் நிலம், நீர் மாசுபட்டதால் அங்கு வசித்தவர்களுக்கு நாள்பட்ட உடல்நலப் பிரச்சனைகள். உடல் குறைபாடுகளுடன் குழந்தைகள் பிறந்தன. நிலத்தடி நீர் மாசுபடுவதால் போபாலில் வசிப்பவர்களுக்குச் சுத்தமான குடிநீரை வழங்குமாறு 2004ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

2010 ஆம் ஆண்டில், ஆலையின் முன்னாள் மேலாளர்கள் ஏழு பேருக்கு இந்திய நீதிமன்றம் மிகக்குறைந்த அபராதம் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியது. யூனியன் கார்பைடு நிறுவனம் 470 மில்லியன் டாலர்களை இந்திய அரசுக்கு இழப்பீடாக வழங்கியது. பாதிக்கப்பட்ட பலருக்கும் சில நூறு டாலர்கள் மட்டுமே இழப்பீடு வழங்கப்பட்டது.

தகவல் தொழிநுட்பங்கள் இன்றைய அளவிற்கு வளர்ச்சியடைந்திராத காலம் அது. மக்களிடமிருந்து பல உண்மைகளைச் சாமர்த்தியமாக மறைத்து இந்தியர்களை ஏமாற்றி விட்டது அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசு. யூனியன் கார்பைடுக்கு எதிராக இன்னும் முறையான நீதி வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்களும் போராளிகளும் கருதுகின்றனர். இதுவரை பேரழிவிற்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தின் நிர்வாகியான வாரன் ஆண்டர்சனை நாடு கடத்துவதற்கான இந்தியாவின் அனைத்து கோரிக்கைகளும் அமெரிக்க அரசால் நிராகரிக்கப்பட்டது. அவரும் 2014ல் இறந்து விட்டார்.

அன்றைய ஆளும் கட்சியான காங்கிரஸ் அரசின் அலட்சியத்தால் மூன்று தலைமுறைகளுக்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கும் பாதிப்பிற்கு முறையான நடவடிக்கைகளும் இழப்பீடுகளும் வழங்கப்படவில்லை.

இந்த உண்மைச்சம்பவங்களை வைத்து எடுக்கப்பட்ட தொடர் தான் நெட்ஃப்ளிக்ஸ்ல் வெளிவந்துள்ள "The Railway Men". போபால் பேரழிவின் பொழுது ரயில்வே நிர்வாகிகள் செய்த உதவிகளையும் எடுத்த நடவடிக்கைகளையும் விவரிக்கிறது. தன்னலம் கருதாத மக்கள் என்றுமே இருக்கிறார்கள். அவர்களால் தான் இவ்வுலகம் இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. அக்டோபர் 1984ல் அன்றைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி இறந்திருந்த நேரம். சீக்கியர்களை விரட்டி விரட்டி காங்கிரசார் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலம். அதையும் இத்தொடரில் காட்சிப்படுத்தியிருந்தார்கள். கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய தொடர். பேரழிவினைப் பற்றின அறிமுகத்தை, அரசின் மெத்தனத்தை அறிந்து கொள்ள முடியும்.

இந்தியர்கள் என்றாலே மிகையுணர்ச்சி, கெட்டவன் நல்லவனாக மாறும் கதைகள், மாதவன், ஜுஹி சாவ்லா தனிப்பட்ட வாழ்க்கை வசனங்கள், ஜுஹி சாவ்லா புகைபிடிப்பது போன்ற தேவையற்ற காட்சிகள் வைக்க வேண்டும் போல. அவற்றைக் குறைத்து நீதி விசாரணைக்காட்சிகளை வைத்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...