Tuesday, June 21, 2022

கோடைக்கால காற்றே


மதுரையில் பிறந்து வளர்ந்து விட்டதாலோ என்னவோ நாம் கோடையை கொண்டாடுவதில்லை. வெயில் நம்மை வாட்டி வதைத்துவிடுமே என்ற பயத்தில் வெறுப்புடனே இருந்து விட்டு வட அமெரிக்காவில் இப்பொன்னாளுக்காக மக்கள் ஏன் காத்திருக்கிறார்கள் என்று வியந்ததுண்டு!

மழைக்காலம் முடிந்து நீண்ட பகற்பொழுதாக கோடைக்காலம் இன்று முதல் ஆரம்பமானாலும் மழையின் வாசம் அவ்வப்பொழுது 'சிறுசிறு' தூறல்களாக, 'சிலுசிலு' மழைச்சாரல்களாக மண்ணை நனைத்துச் செல்லும். மழை தந்த உற்சாகத்தில் புத்துயிர் பெற்ற மரங்கள், பூத்த மலர்கள் இனி காய்களாக, கனிகளாக! புது உயிர்களும் இவ்வுலகைக் காண, மரங்களில் பறவைகளின் குதூகல சங்கீதம் மென்மேலும் கேட்கும். வண்டுகளும், தேனீக்களும், பட்டாம்பூச்சிகளும் மலர்கள் தாவும். துள்ளியோடும் முயல்களும், அணில்களும், மான் கூட்டங்களும் கொண்டாடும் இனிய காலம்!
 
இனி வரும் நாட்களில் காலை தொடங்கி மாலை வரை தெருவெங்கும் ஓடியாடும் குழந்தைகளின் விடுமுறைக் கொண்டாட்டம் இனிதே ஆரம்பமாக, அவர்களுடன் களிப்புற விளையாடி மகிழும் பெற்றோர்கள் பூங்காக்களுக்கும், ஆறு, குளங்களுக்கும் சென்று குழந்தைகளுடன் குழந்தைகளாய் குதூகலித்து இரவில் மறையும் சூரியனை வழியனுப்பி விட்டு களைப்புடன் வீடு திரும்பும் மனம் ஏங்கும் மீண்டும் ஒரு நன்னாளுக்காக!
 
ஓடுபவர்கள், நடைபயிலுபவர்கள், மீன் பிடிப்பவர்கள், படகுகளில் உல்லாசமாக செல்பவர்கள் என்று எங்கும் மக்கள் கூட்டம்! அதுவும் கோடை வார இறுதிகளில் சாலைகளில் போக்குவரத்து நெரிசலுடன் படகுகளையும் சுமந்து செல்லும் வண்டிகளும், அனைத்து வசதிகளுடன் கூடிய விடுமுறை வாகனங்களும் இயற்கையோடு இணைந்த முகாம்களை முற்றுகையிடும்.
எதைப் பற்றியும் கவலைப்படாமல் சூரிய ஒளியைப் பெற அரை நிர்வாணமாக பூங்காக்களில், கரையோரம் என்று படுத்துக் கொண்டும், காதலர்கள் தத்தம் காதலியரோடு அளவளாவிக் கொஞ்சிக் கொண்டும், குழந்தைகள் மணல் வீடு கட்ட, பெற்றோர்கள் சூரியக்குளியல் போட...இது ஒரு இனிய காலம்.

நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் பெரும் விருந்துகள் கோலாகலமாக சிரிப்பும் உற்சாகமுமாய் காற்றில் வலம் வரும். கூடவே சுட்ட கறியின் வாசமும்ம்ம்ம்

பெட்டிகளுடன் விமான நிலையத்துக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டமும் காத்திருக்கும் அருமையான காலம்!

அடுக்கடுக்காக உடைகள் உடுத்திய காலங்கள் சென்று அழகிய ஆடைகளுடன் தேவதைகள் உலா வரும் கோடைக்காக காத்திருந்து கொண்டாட நானும் தயாராகிறேன்.

கோடைக்கால காற்றே குளிர் தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடும்
அதைக் கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்ம்ம்ம்ம்
லல லால லாலா ...

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...