Tuesday, June 28, 2022

Our Blues

வாரம் இரு நாட்களுக்கு ஒளிபரப்பான "அவர் ப்ளூஸ்" கொரியன் தொடர் கடந்த வாரத்தோடு நிறைவடைந்தது. ஆரம்பத்தில் என்னடா இத்தனை மெதுவாக போகிறதே என்று தோன்றினாலும் அழகான அந்த "ஜெஜூ" தீவுக்காகவே பார்க்க ஆரம்பித்து வழக்கம் போல் கொரியன் தொடர் அடிமையாகி முழுவதும் பார்த்து முடித்தேன்.  'ஹோம் டவுன் ச்சா ச்சா'வில் வரும் கதாநாயகி, 'ஒன் ஸ்ப்ரிங் நைட்' தொடர் கதாநாயகி , 'மிஸ்டர் சன்ஷைன்' கதாநாயகன், அம்மா அக்கா கதாபாத்திரங்களில் என பல தொடர்களில் நடித்த இத்தொடரின் கதாநாயகி, பல தொடர்களில் வயது முதிர்ந்த கதாபாத்திரத்தில் நடித்த பாட்டிகள் என  அறிமுகமான முகங்கள் இத்தொடரைத் தொடர்ந்து பார்க்கத் தூண்டியது.

பறந்து விரிந்த நீல வானத்தைப் பிரதிபலிக்கும் கடல். அழகான கடற்கரையோர கிராமம். அந்தக்கால திண்ணை வீடுகளை நினைவூட்டும் எனக்கு மிகவும் பிடித்த கொரிய வீடுகள் என்று காட்சிகளோடு ஒன்றிச் செல்லும் இயற்கையும் மனதை கொள்ளை கொள்ளும். அந்தச் சிறுமி கூட அத்தனை அழகாக நடித்திருந்தார்.

பள்ளி வயதில் வரும் இனக்கவர்ச்சி என்றுமே பசுமையாக மனதில் இருந்தாலும் ஒரு வயதிற்குப் பின் அது நல்லதொரு நட்பாக அமையும் சாத்தியக்கூறுகள் அதிகம். காதல் வயப்பட்டாலும் மனவளர்ச்சி குன்றிய தன் சகோதரியையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வாய்ந்த காதலனும் அவன் குடும்பமும் என்று செல்லும் கதை அழகு.

சிறுவயதில் மன பாதிப்புக்குள்ளான இருவர் எவ்வாறு மீண்டு தங்களைக் கண்டடைகிறார்கள் என்று சொல்லிய விதமும் குடும்பங்கள் அதுவும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில் பெற்றோர்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதைப் போகிற போக்கில் சொன்ன விதமும் அழகு.

கொரியர்களுக்குஅமெரிக்கா மேல் இருக்கும் கவர்ச்சி. அதற்காக எந்த எல்லைக்கும் சென்று தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக தங்கள் வாழ்க்கையைக் கூட துறக்கும் மனிதர்கள் என்று கதாபாத்திரங்களின் வழியே அவர்களின் வலியைக் கூறுகிறது இந்தத் தொடர்.

ஒரு சிறிய ஊரில் பள்ளி வயதிலிருந்து பழகிய நண்பர்கள் வயதானாலும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்து பருவங்களைக் கடந்து வருவது தான் கதை. தாயின் மேல் வெறுப்பாக இருந்தவன் அவளைப் புரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததும் மனம் வருந்தி அவளைக் கரையேற்றுவதுடன் கதை நிறைவடைகிறது. 

நம் அனைவருக்கும் வாழ்க்கையில் ஏதாவது "blues" இருக்கத்தான் செய்கிறது. அதை ஒவ்வொருவரும் எப்படி கையாளுகிறோம் என்பதில் தான் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைவான வாழ்க்கையும் இருக்கிறது. நல்ல குடும்பம், நண்பர்கள் அமைந்து விட்டால் எந்தவொருப் பிரச்னையையும் எதிர்கொள்ள முடியும் என்பதைத்தான் இந்த தொடர் உணர்த்துகிறது. காதல், நடுத்தர வயது வாழ்க்கை, பள்ளி வயதில் கர்ப்பம், மன அழுத்தப் பிரச்னைகள், விவாகரத்து, வளர்ந்த குழந்தைகளைப் பற்றின முதியோர்களின் கவலை, நோயாளிகள், குழந்தைகளின் நம்பிக்கை என்று அனைத்துப் பருவ காலங்களையும் அதனைக் கடந்து வந்தவர்கள் ஒரு சமுதாயமாக எதிர்வரும் பிரச்சினைகளைச் சமாளிப்பதும் "இஃகிகை" வாழ்க்கை முறை என்பது இப்படியாகத் தான் இருக்கும் என்று தோன்றியது.








No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...