Wednesday, June 15, 2022

விக்ரம்

எழுத்தாளர் சுஜாதாவின் புதினத்தைத் தழுவி 1986ல் வெளிவந்த "விக்ரம்" திரைப்படம் பல காரணங்களுக்காக வெற்றிப்படமாக அமைந்திருந்தது. ராஜ்கமல் தயாரிப்பில் கமலஹாசன் கதாநாயகனாக தமிழுக்குப் புதிதான கதைக்களத்தில் இளையராஜாவின் இசையில் பாடல்களும் பிரபலமாகி 100 நாட்களைத் தாண்டி லாபகரமாக ஓடிய படம். 

தற்பொழுது கமல் நடித்து அதே பெயரில் வெளிவந்துள்ள படத்தை மொத்தமே 7 பேருடன் சேர்ந்து அமெரிக்காவில் பார்த்த பொழுது "நாம் தான் தெரியாமல் மாட்டிக்கொண்டோமோ" என்றிருந்தது. பாவம் எனக்காக ஈஷ்வரும் படம் பார்க்க வந்திருந்தார். வீட்டிலேயே வசதியாக படங்களைப் பார்க்க ஆரம்பித்த பிறகு அரங்கத்தில் பார்ப்பது வித்தியாசமாகவே இருக்கிறது. முதலில் இந்த அமெரிக்க திரையரங்கு உரிமையாளர்களிடம் இந்திய படங்களைத் திரையிடுகையில் ஒலியின் அளவைக் குறைத்து வைக்கச் சொல்ல வேண்டும். படம் முடிந்து வெளிவருகையில் காது சவ்வு கிழிந்து விட்டது போன்ற பிரமை😒

இந்தப் படத்தையா "அருமை. ஆஹா! ஓஹோ!" என்று எழுதித்தள்ளினார்கள்? தமிழ்த் திரையுலகம் தான் என்ன செய்யும்? கதைப்பஞ்சம்? தேவைக்கு மேல் அதிகமாக நடிக்கும் நடிகர்கள், தேவையற்ற 'பன்ச்' வசனங்கள், அவசியமில்லாத ஆடம்பர காட்சி களேபரங்கள் என்றே பழகி விட்டிருக்கிறது கோலிவுட். ஒரு படத்தை வித்தியாசமாக இயக்கி விட்டால் அந்த இயக்குனரைத் தலை மீது தூக்கி கொண்டாடி கடைசியில் ரஞ்சித் மாதிரி ஆட்களிடம் நாம் மாட்டிக் கொண்டு விடுகிறோம். இப்பட இயக்குநரை ஒன்றும் சொல்ல முடியாது. இது கமல் படம். அவ்வளவு தான். போதாக்குறைக்கு விஜய் சேதுபதி எனும் பெரிய கொடிய வில்லன்! வில்லனுக்கு மூன்று மனைவிகள் என பெரிய குடும்பம். இதில் என்ன குறியீடு இருக்கிறதோ அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம். கடவுள் தேசத்திலிருந்து ஃபகத் ஃபாசில். கொடுத்த பாத்திரத்திற்கு ஏற்ற நடிப்பு. இப்படித்தான் கதை போகும் என்று எளிதாக கணிக்க முடிகிற திரைக்கதை. ஆரம்ப காட்சிகளிலே கமல் இறந்து விட்டால் அப்புறம் படம் எப்படி இருக்கும்? கமல் வருவார் என்று தெரிந்து விடுகிறது. 

விஜய் நடித்த 'திருப்பாச்சி' படக்கதை  தான். அங்கே ஒரு அண்ணன் தன் தங்கையின் நகர வாழ்க்கையில் வில்லன்களே இருக்க கூடாது என்று அடித்து நொறுக்குவான். இங்கே தன் பேரன் போதைமருந்து கும்பலிடம் சிக்காமல் இருக்க வில்லனை அடித்து நொறுக்குவதாய் 'உல்ட்டா'வாக்கி இருக்கிறார்கள். விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார்கள் என்று கார்த்தி குரலையும் கடைசிக்காட்சியில் கத்திக்கொண்டே சூர்யாவும் இரண்டாவது பாகத்திற்கு அச்சாரம் போட்டு பயமுறுத்திச் சென்றிருக்கிறார்கள். வேகமாக மூச்சிரைக்க பேசினாலே கைதட்டும் கூட்டம் இருக்கும் வரை இம்மாதிரியான படங்கள் ஓடும்.

அரசியல்வாதி, காவல்துறை என்றுமே ஊழல் பெருச்சாளிகள் தான் என மக்களை ஏற்றுக்கொள்ள வைப்பதில் பெரும் வெற்றி கண்டது இம்மாதிரி திரைப்படங்களே. பழைய விக்ரம் படப்பாடல் ஓரிரு இடங்களில் வந்தது. அதைத்தவிர வேறு எந்த தொடர்பும் இரு படங்களுக்கும் இல்லை. கமல் பாடித்தான் ஆகவேண்டும் என்று என்ன நிர்பந்தமோ 😒 அப்பாடலில் இருக்கும் குறியீடு என்று சமூக வலைதளங்கள் விவாதித்தது வேறு கதை. கமல் இன்னும் நடிக்கிறார் என்பது அவரது ரசிக சிகாமணிகளுக்கு  கொண்டாட்டமான விஷயம் தான். ஆனால், உலகத்தரம், வேற லெவல், அப்படி இப்படி என்று அளக்காமல் இருக்கலாம். 

எப்படியோ கமலே எதிர்பார்க்காத அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது இப்படம். மற்றபடி நல்ல பொழுதுபோக்குப் படம் என்றும் சொல்லும் அளவிற்கு கூட இல்லை. சண்டைக்காட்சிகள், பெரிய நடிகர்கள் போதும் என்று நினைத்து விட்டார்களோ? வன்முறைக்காட்சிகள் எல்லாம் 'வெறி'த்தனமாக இருக்கிறது. ஏன் இப்படி எடுக்கிறார்கள் என்றே தெரியவில்லை!

நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய திரைப்படங்களைக்  கண்டுகளிக்க தமிழ் சினிமா ரசிகர்களாகிய நாமும் வளர வேண்டியிருக்கிறது😞

'விக்ரம்', பல வருடங்களுக்குப் பிறகு கமல் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் மற்றவர்களுக்குத் திண்டாட்டம்.


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...