Saturday, July 2, 2022

ஜூன் போனால் ஜுலை காற்றே

கோடை ஆரம்பமாகி நீள்கிறது பகல் பொழுதுகள். ஆம் இனி வரும் நாட்களில் அதிக நேரம் சூரிய வெளிச்சம் இருக்கும். காலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை கூடஇது தொடரும். விடுமுறையில் இருப்பதால் குழந்தைகளும் 'ஓடி விளையாடு பாப்பா' என்று தெருவில் பெருங்குரலெடுத்து நண்பர்களுடன் விளையாடி மகிழும் இனிய காலம். 

வீட்டுத் தோட்டங்களில் காய்கறிகளும், பழங்களும் , பூக்களும் பூத்துக் குலுங்க, பறவைகளும் ,அணில் , முயல்களும் துள்ளியோடும் அழகில் மனம் மயங்கும் பருவம். மழைக்காலத்தில் வருகை தந்த பறவைகள் கூடுகள் கட்டி கொஞ்சிக் குலாவி முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளுக்கு இரை தேடி ஊட்டி வளர்ந்து பறக்கும் வரை சீராட்டிப் பாராட்டும் பொறுப்பான காலம். மழையுடன் பல வண்ணப்பறவைகளின் இனிய இசையில் மனமும் மயங்கும் வசந்த காலம். பார்க், பீச் என்று மக்கள் குடும்பமாக கோடை விடுமுறையைக் கொண்டாடி உறவினர்களின் விருந்தோம்பலில் மகிழ்ந்திருக்கும் நாட்கள் மனதிற்கும் இனிமை. தாய் நாட்டுக்குச் செல்பவர்கள் விமான நிலையத்தை நோக்கிப் படையெடுக்க, பெற்றோர்களை ஊரிலிருந்து வரவழைத்து வெளிநாட்டைச் சுற்றிக் காண்பிக்க தாத்தா, பாட்டிகள் பேரக்குழந்தைகளுடன் அகமகிழ்ந்து வெளிநாட்டு வாழ்க்கையின் சுவாரசியத்தை அனுபவிக்கும் இனியதொரு காலம். வியர்வையும் புழுதியும் கொசு, பூச்சிக்கடிகளும் உடலைப் பதம் பார்க்க நீச்சல் குளங்களில், நீர்நிலைகளில் கூட்டம் அலைமோதும்.
 
நானும் நினைத்திருந்ததுண்டு! நாம் தான் வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி என்று பழகி விட்டதால் இந்த வட அமெரிக்கர்கள் ஏன் இப்படி கோடை கோடை என்று கொண்டாடுகிறார்கள் என்று!
பள்ளி திறக்கும் செப்டம்பர் மாதம் வரை தொடரும் இப்பருவம் பின் மெதுவாக குளிர்ப்போர்வையை சுமக்க ஆரம்பிக்கும். படுக்கையிலிருந்து எழ அடம்பிடிக்கும் குழந்தைகளைப் போலவே சூரிய பகவானும் வானில் உலா வர மறுத்து இருள் விலகா காலையில் மாணவச்செல்வங்கள் பள்ளிக்குச் செல்வார்கள். காலைக்குளிர் புற்களில் வைரமாக ஜொலிக்க இளம் தென்றல் சாமரம் வீச கோடைக்கால துணிமணிகளுக்கு விடை கொடுத்து விட்டு ஸ்வெட்டர், சாக்ஸ், ஷூ என்று இலையுதிர் காலத்திற்குத் தயாராக வேண்டும். கோடை மலர்கள் மலர்ந்து உதிர்ந்து இலையுதிர்காலத்தில் பூக்கும் மலர்கள் வீடுகளை அலங்கரிக்கும். கோடை வரை பாடித்திரிந்த பல பறவைகளும் புலம் பெயர சில துயில் கொள்ள ஆரம்பிக்கும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளைச் சுமந்து செல்லும் வண்டிகள் சாலையை ஆக்கிரமித்துக் கொண்டு போக்குவரத்து நெரிசலை உண்டாக்கி எரிச்சல் படுத்தும் பருவமும் கூட! விடியலில் தொடங்கி மாலை மங்கும் நேரம் செல்வது கூட தெரியாமல் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு பெற்றோர்களும் பம்பரமாகச் சுழல... மரங்களின் இலைகள் வண்ணங்களுடன் வலம் வர அக்டோபர் மாதம் பிறந்திருக்கும். 

காற்றில் தவழ்ந்து வரும் குளிரும் பனிமூட்டமும் காலை நேரத்தை அழகூட்ட மரங்களின் வண்ண இலைகள் நகரையே மெருகூட்ட, மழையும் காற்றும் இலையுதிர்காலத்தை தொடங்கி வைக்க...அது ஒரு அழகிய கனாக்காலம்! நவம்பரில் குளிர் சற்று அதிகமாகி தேங்க்ஸ்கிவிங் , கிறிஸ்துமஸ் விழா நாட்களின் உற்சாகத்துடன் மக்கள் வலம் வர, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் மெதுவாக வெண்பனியினால் சூழ... வசந்த காலத்திற்காக காத்திருக்கும் மனது!

வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் மழை , குளிர், பனி, பனிமழை, ஐஸ் என்று வீட்டுக்குள் முடக்கி விடுவதால் வசீகரன் வானில் உலா வரும் நாட்களைக் கொண்டாடுகிறார்கள். கொண்டாடுகிறோம். கொண்டாடுகிறேன்!
 
இப்பொழுது தெரிந்து விட்டது கோடையின் மகத்துவம்!
மழைக்காலத்திற்கு விடை கொடுத்து வரவேற்போம் கோடையை
ஜூன் போனால் ஜுலை காற்றே ....

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...