Tuesday, July 26, 2022

ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்

"ராக்கெட்ரி" திரைப்படம் வெளியாகிறது என்றவுடன் உள்ளூர் திரையரங்குகளில் திரையிடப் போகிறார்களா என்று பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சியது. கண்ட கருமாந்திரப் படங்களைப் போடுகிறார்கள் அத்திப் பூத்தது போல் பல மொழிகளில் வெளியாகும் ஒரு நல்ல படம். அதுவுமில்லாமல் "எண்டே மாதவா" வின் தயாரிப்பில் உருவான பயோ-பிக். ரசனை கெட்ட உலகமடா மாதவா என்று ஒடிடியில் வெளியாகும் நாளுக்காக காத்திருந்தோம். நேற்று அமேசான் பிரைமில் எதையோ தேட போய்,

'ஆ! ராக்கெட்ரி படம் வந்துடுச்சு. வாங்க பார்க்கலாம்' என்று வேலைகளை முடித்து விட்டு தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்து படம் முடியும் வரை எழுந்திருக்கவில்லை. 

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்

என சுப்ரபாதத்துடன் துவங்கும் முதல் காட்சியிலேயே பிரம்மாண்ட அண்டம் சுழலும் காட்சி ஈர்த்து விட்டது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின்(இஸ்ரோ) முன்னாள் விஞ்ஞானியும் விண்வெளிப் பொறியாளருமான நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஏன் இவருடைய கதை ? ஒரு தேசப்பற்று மிகுந்த விஞ்ஞானியை எப்படி உடல், மனதளவில் நொறுங்க வைத்து நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்க நினைத்திருக்கிறார்கள் என்ற உண்மைக்கதையைப் படமாக நமக்கு எடுத்துக் காட்டியுள்ளார் நடிகர் மாதவன்.

இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தையாகக் கருதப்படும் டாக்டர் விக்ரம் சாராபாய் நம்பி நாராயணின் திறமையை ஊக்குவித்து ஒரு குருவாக வழிநடத்தியிருக்கிறார். அமெரிக்காவின் உயர்தர பல்கலையில் படிக்கும் காலம் முடியும் முன்னரே பட்டப்படிப்பை முடித்து திறமைக்கேற்ப அமெரிக்க விண்வெளி மையத்தில்( நாசா) கை நிறைய சம்பளத்துடன் கௌரவமான வேலை கிடைத்தும் தாய்நாட்டிற்குத் திரும்புகிறார் நம்பி நாராயணன். இஸ்ரோவில் ராக்கெட் தயாரிக்க வேண்டிய நுட்பங்கள் தெரிந்தும், வசதியும் போதிய நிதியும் இல்லாமல் ஃபிரான்ஸ் நாட்டுடன் கூட்டு சேர்ந்து குடும்பங்களை விட்டு பல விஞ்ஞானிகளுடன் வெற்றிகரமாக சோதனையை முடித்து திரும்புகிறது இவருடைய தலைமையிலான குழு. ராக்கெட் தயாரிக்க தேவையான பொருட்களை சோவியத் ரஷ்யாவிலிருந்து அந்நாடு சிதறுவதற்குள் இந்தியாவிற்கு கொண்டு வந்து விட, அங்கிருந்து ஆரம்பிக்கிறது நம்பியின் வாழ்க்கையைத் துண்டாடும் காட்சிகள். நேர்க்காணல் மூலம் படக்காட்சிகளை அமைத்திருந்தது சிறப்பு.

1994ல் இஸ்ரோவில் பணிபுரிந்த பொழுது ​​நாராயணன் இந்தியாவின் விண்வெளித் திட்டம் குறித்த ரகசியத் தகவலை பாகிஸ்தானிற்கு விற்க இரண்டு மாலத்தீவு நாட்டினரிடம் பகிர்ந்து கொண்டதாக பொய்யான குற்றச்சாட்டுக்கு ஆளானார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு 50 நாட்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். 1996ல் சிபிஐ மற்றும் 1998ல் இந்திய உச்ச நீதிமன்றத்தால் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை என்று தள்ளுபடி செய்யப்பட்டன. ஏப்ரல் 2021ல் இந்திய உச்ச நீதிமன்றம் இவருடைய கைதின் சதி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. நடந்த தவறுகளுக்குப் பொறுப்பேற்று திரு.நாராயணன் அவர்களுக்கு கேரள அரசு ரூ.1.3 கோடி இழப்பீடு வழங்கியது.
 
விஞ்ஞான வளர்ச்சிக்காக நாடு செலவழிப்பது தேவையற்றது என்று கூவி மூலைக்கு மூலை சிலைகளை வைத்துக் கொண்டு திரியும் கூட்டத்தில் விஞ்ஞான வளர்ச்சியின் அவசியத்தை உணர்ந்து பல சிரமங்களுக்கிடையில் உள்நாட்டிலேயே ராக்கெட் தயாரித்து இன்று அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே வியக்கும் வகையில் நம் தேசமும் முன்னேறியிருப்பதில் இவருடைய பங்கும் அளப்பரியது. இந்தியாவில் ராக்கெட் அறிவியலின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரித்து இந்திய அரசாங்கம் நாராயணனுக்கு 2019 ஆம் ஆண்டில் நாட்டின் மூன்றாவது உயரிய சிவிலியன் விருதான பத்ம பூஷன் விருதை வழங்கி கௌரவித்தது.

இத்தனை படித்த நேர்மையான மனிதர் மீது களங்கம் சுமத்தி குடும்பத்தை அலைக்கழித்து தான் என்ன தவறு செய்தோம் என்றே புரியாமல் அவரை மனச்சோர்வுக்கு உள்ளாக்கிய மத்திய காங்கிரஸ், மாநில கம்யூனிஸ்ட் அரசாங்கம் மனிதாபிமானற்றது என்பதைக் காட்சியாக காண மனம் பதைபதைக்கிறது. 1996ல் பாஜக ஆட்சிக்காலத்தில் தான் இவருக்கு நீதி கிடைத்திருக்கிறது. இந்த வழக்கில் நாராயணன் மற்றும் சிலரை பொய்யாக சிக்க வைத்த குற்றச்சாட்டில் 17 முன்னாள் கேரள போலீஸ் மற்றும் ஐபி அதிகாரிகள் மீது சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 15 வருடங்களில் 684 இஸ்ரோ விஞ்ஞானிகள் மர்மமான முறையில் இறந்துள்ளதாக தெரிகிறது. அணு மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறுவதைத் தடுக்க மேலைநாடுகளின் சதியாக அதற்கு நம்நாட்டு எட்டப்பன்கள் உதவி இருப்பதைத் தான் காட்டுகிறது . இந்திய ஊடகங்கள் இந்தச் செய்திகளுக்கு ஒருபோதும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அவை பெரும்பாலும் ஒரு கட்சிக்கு அதுவும் தேசத் துரோகிகளுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. கடைசிக் காட்சியில் கண்களில் நீர் வழிய "ஜெய்ஹிந்த்" என்று நம்பி நாராயணன் அவர்கள் கூறும் பொழுது வசனம் பேசி உணர்ச்சிகரமாக அதுவரை நடித்த சூர்யாவின் வாயிலிருந்து "ஜெய்ஹிந்த்" வராதது எந்த அளவிற்கு நம் நாட்டின் மேல் வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறது தேசத்துரோகிகள் கூட்டம் என்று தெரிகிறது. நமக்கு எதிரிகள் வெளியில் இருப்பதை விட உள்நாட்டில் தான் அதிகம். அவர்களால் தான் இத்தகைய மாமனிதர்களுக்கு அச்சுறுத்தல் என்ற நினைவே வெட்கமாகவும் வேதனையாகவும்இருக்கிறது.

ஒரு டாலர் அதிகம் கிடைத்தால் கூட வேலையை மாற்றிக் கொள்ள நினைக்கும் மனம் படைத்த மனிதர்கள் வாழும் காலத்தில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத சம்பளம், வசதி வாய்ப்புகள் கிடைத்தும் அனைத்தையும் நிராகரித்து தேசத்திற்காக வாழ்வை அர்ப்பணித்த உன்னத மனிதர்களுள் ஒருவர். தன்னுடைய குருவின் நினைவாக வெற்றிகரமாக இயங்கி வரும் "விகாஸ்
என்ஜினை உருவாக்கின மாமனிதர். தெய்வ பக்தியும் தேசப்பற்றும் மிக்க சில நம்பி நாராயணன்களால் தான் பல தேச துரோகிகளையும் மீறி இந்தியா தன்னிறைவு பெற்ற நாடுகளின் வரிசையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இவர் போன்ற மனிதர்களே நம் வருங்கால சந்ததியினருக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள். தமிழக அரசு இப்படத்தைப் பள்ளிகளில் திரையிடலாம் அல்லது வரி விலக்கு அளித்து கௌரவிக்கலாம். செய்வார்களா?

கண்டிப்பாக படத்தைப் பாருங்கள். அமேசான் ப்ரைமில் காண கிடைக்கிறது.

ஒரு நல்ல மனிதரின் வாழ்க்கையை அற்புதமாக படமெடுத்த "எண்டே மாதவன்" கதாசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக, "நம்பி நாராயணனாக" மிளிர்ந்திருக்கிறார்.

வாழ்த்துகள் மாதவன் 💖💖💖

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...