Thursday, July 21, 2022

The Magic of your first work friends

 சமீபத்தில் 'நியூயார்க் டைம்ஸ்'ல் வெளிவந்த "The Magic of your first work friends" கட்டுரையில் வீட்டிலிருந்து வேலை செய்வதால் புதிதாக வேலைக்குச் சேர்பவர்கள் இழக்கும் பல விஷயங்களை அலசி இருந்தார்கள். அதில் முக்கியமாக வேலையிடத்து நண்பர்கள். முதன்முதலில் பணியில் சேரும் பொழுது நம் அலைவரிசையுடன் ஒத்து வரும் நண்பர்கள் அமைந்து விட்டால் வேலைக்குச் செல்வதில் ஒரு நாட்டம் உருவாகி விடும். புத்துணர்ச்சியுடன் ஒரு வித உத்வேகத்துடன் பணிக்குச் செல்லும் மனநிலையில் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியான பொழுதுகளாக இருக்கும். பணியில் திருப்தியும் மனஉளைச்சல் இல்லாத  நாட்களுமாய் வாழ்க்கையும் வீறு நடை போடும். அலுவலகத்திற்குச் சென்று புது நபர்களைச் சந்தித்து நண்பர்களாகி தொடரும் பந்தம் அனுபவித்தே உணர்வது. நம் நாட்டில் இப்படிப்பட்ட உறவு வீடு வரை தொடரும். அமெரிக்காவில் பெரும்பாலும் வேலையிடத்து நண்பர்கள் வேலையிடத்தில் மட்டுமே. ஆனால் வீட்டு விஷயங்களில் இருந்து சொந்தப் பிரச்னைகள் வரை நன்கு பேசுவார்கள். நமக்கிருக்கும் மனக்கிலேசமோ என்னவோ வீடு வரை வெகு சிலரை மட்டுமே அனுமதிக்கத் தோன்றும். இதெல்லாம் கோவிட் காலத்திற்கு முன். பழைய ஆட்கள் மட்டும் எப்பவும் போல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 

புதிதாக சேர்ந்தவர்கள், வருகிறார்கள். வேலை செய்கிறார்கள். போய்க் கொண்டே இருக்கிறார்கள். யாரும் யாருடனும் முகம் கொடுத்துப் பேசுவது இல்லை. ஏன் தான் அலுவலகத்திற்கு வருகிறோமோ என்ற முகபாவம் தான் பலருக்கும்! அதுவும் இந்த தலைமுறை என்றால் சோகமாக தனியாக இருப்பது போல் தோன்றுவது எனக்குத்தானோ?

இன்று வரையிலும் சந்திப்புகள் டீம்ஸ் அல்லது ஜூம் என்றாகி விட்டதால் இடைவேளைகளில் நடக்கும் கலாட்டா பேச்சுக்கள் சிரிப்புகள் எல்லாம் தொலைந்து தான் போயிருக்கிறது.

சமீபத்தில் அலுவலகத்தில் புதிய முகம் ஒன்று. அமைதியாக சோகமாக இருந்தார் அந்த இளைஞர். ஒரே தளத்தில் வேலை செய்வதால் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு. வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது என்றார்! இப்படி பல முகங்கள்! 

நேற்று இரு இந்திய பெண்கள் அலுவலகத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவரை எங்கேயோ பார்த்த ஞாபகம். அனேகமாக கோவிலாகத் தான் இருக்க வேண்டும். அதற்குள் அந்தப் பெண்ணே சிரித்துக் கொண்டு தன்னை அறிமுகப்படுத்தி "உங்களை இதற்கு முன் எங்கேயோ பார்த்திருக்கிறேன்." என்று ஸ்னேகத்துடன் அவரைப்பற்றி பேசி விட்டுச் சென்றார். 

புதிதாக அணியில் சேர்ந்திருக்கும் நபர் அவருடைய அலுவலகத்தில் ரூபிக்ஸ் கியூப் பல அளவுகளில் விதவிதமாக வைத்திருப்பார். நேற்று அழகாக ஒன்றை வைத்து மண்டையைக் குடைந்து கொண்டிருந்தார். 

"என் மகனுக்கும் கணவருக்கும் ரூபிக்ஸ் கியூப் பிடிக்கும்." என்றவுடன் முகம் மலர்ந்து பேச துவங்கி விட்டார். அவரும் வேலைக்குச் சேர்ந்து ஐந்தாறு மாதங்கள் ஆகி விட்டது. இது வரை பேசியதில்லை. ஒவ்வொருவர் ஒவ்வொரு நாட்கள் வந்து செல்வதால் யாருக்கும் மற்றவரைப் பற்றின அறிமுகப்படலம் கூட நடக்கவில்லை என்று நினைக்கிறேன். நேற்று தான் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டோம். 

"நீங்கள் என்ன மொழியில் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார். 

"ஆஹா! நாம யாருக்கும் புரியாதுன்னு தைரியமா சௌராஷ்டிரால பேசுறத ஒட்டு கேட்கறானுவோ"😀😀😀 நல்ல வேளை ! ஒன்னும் புரியாது 😎

நினைத்துக் கொண்டே என் தாய்ப்பாஷையைப் பற்றி, தமிழைப் பற்றி சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் ஆப்கான் மொழி பஷ்டோ படித்தவராம். அதனாலேயே ராணுவத்தில் வேலையும் பார்த்திருக்கிறார்! 

"ம்ம்ம்ம். ஜாக்கிரதையா இருக்கணும் போலயே!" 

சிறிது நேரம் ஆப்கானிஸ்தான் பற்றி பேசி விட்டு வேலைகள் பக்கம் பேச்சு திரும்பியது. அவர் புதிதாக ஒரு வலைத்தளத்தைக் காண்பித்து அங்கிருக்கும் விவரங்கள் நன்றாக இருக்கிறது. நிறைய படிக்க வேண்டியிருக்கிறது. என்று புதிய பாதையைக் காண்பித்தார்.  நானும் குறிப்பெடுத்துக் கொண்டு திரும்பினேன்.

இன்று காலையில் என்னைக் கண்டதும் ஏதோ யோசித்தவராக "காலே வணக்கம்" என்றார் சிரித்த முகத்தோடு.

அட! பரவாயில்லையே!

நானும் "நன்றி" சொல்ல, கூகுளாண்டவர் உதவினார் என்று இந்த நாளை இனிமையாக்கினார்.

என் வண்டிக்கு அருகே ஒரு வயதான பெண்மணியும் அவர் வண்டியை நிறுத்துவார். தினமும் காலையில் முகமன் சொல்லிக்கொண்டு அன்றைய காலைப்பொழுதைப் பற்றி சிறிது நேரம் அளவளாவுவோம். அங்கிருக்கும் பாதுகாவலர் காலை ஆகாயத்தை, சூரிய பகவானை எடுத்த படங்களைக் காண்பிப்பார். எலிவேட்டரில் பயணிக்கையில்"நல்ல வேளை இன்னும் ஒரு நாள்  தான் இருக்கிறது வார இறுதிக்கு" என்று பெருமூச்சு விட்டுக் கொண்டு செல்லும் மனிதர்களுடன் அருகில் இருக்கும் குழந்தைகள் டே கேர் சென்டருக்குச் செல்லும் சின்னஞ்சிறு மழலைகள் பூ போன்ற கைகளை அசைத்தவாறு செல்லும் அழகு என்று ஏகப்பட்ட காட்சிகள் கிடைக்கும்!

என்ன தான் வீட்டில் இருந்து வேலை பார்ப்பது சுகமாக இருந்தாலும் சின்ன சின்ன உரையாடல்கள், நலம் விசாரிப்புகள், வம்பு தும்புகள் என்று இருந்தால் தானே நன்றாக இருக்கிறது? 

அலுவலகம் முடிந்து மாலையில் வீடு திரும்பியவுடன் அன்று பள்ளியில் நடந்த நிகழ்வுகளை குழந்தைகளும் அலுவலகத்தில் நடந்தவற்றை நாங்களும் பேசிக் களித்த தருணங்கள் தான் எத்தனை இனிமையாக இருந்தது! 

ஆன்லைன் சந்திப்புகளில் இவையெல்லாம் சாத்தியமில்லையே! மனிதன் ஒரு சமூக விலங்கு. அவனைக் கூண்டுக்குள் அடைத்து வைப்பது போல தான் வீட்டிலிருந்து வேலை பார்க்கச் சொல்வதும். அதுவும் பெண்களுக்கு கூடுதலாக சமையல் வேறு😓

ஆமாம்! பெட்ரோல் விற்கிற விலையில் அலுவலகம் வந்து செல்ல கூடுதல் செலவு தான். வெயில் 100 டிகிரி வாட்டுகிறது தான். யாரவது தும்மினாலோ இருமினாலோ பயம் வரத்தான் செய்கிறது. அதற்காக எத்தனை நாட்கள் "தெனாலி" மாதிரி பயந்து கொண்டிருக்கப் போகிறோம்? பல கட்டடங்களும் ஆட்கள் இல்லாமல் வெறிச்சோடி இருக்கிறது. ஒரு அலுவலகம் என்றால் அதைச் சுற்றி உணவகங்கள், வண்டி நிறுத்தும் இடங்கள், கடைகள் என்று பலருடைய பொருளாதார வாழ்க்கையும் இரண்டற கலந்திருக்கிறது. கொரோனாவால் அவர்கள் பலத்த நஷ்டத்தைச் சந்தித்து வருகிறார்கள். என்று மீளுவோமோ தெரியவில்லை! 

அமெரிக்கா இந்த பயத்திலிருந்து வெளியில் வந்தாலும் வீட்டில் இருந்து வேலை செய்ய பழகி விட்ட மனிதர்கள் பெருகிவிட்டார்கள் என்பது தான் உண்மை!

என்னவோ போடா மாதவா!


No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...