Friday, May 8, 2020

Thappad



கணவன் ஒரு முறை கோபத்தில் அடித்தால் மனைவி உடனே விவாகரத்து கேட்பது சரியா? 'தப்பட்' ஹிந்தி படத்தைப் பார்த்ததும் பலருக்கும் இப்படித்தான் கேட்க தோணுகிறது! இரண்டு தலைமுறைக்கு முன்பு வரை பொருளாதாரம் சார்ந்து ஆணை சார்ந்திருக்க வேண்டிய சூழலில் கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்று ஆண்களுக்கு சாதகமாகவே பெண்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு வாழ்ந்தார்கள். அடித்தாலும் உதைத்தாலும் அவனுடனே குடும்பம் நடத்தியாக வேண்டிய கட்டாயம் இருந்தது பெண்களுக்கு. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் தான் பெண்கள் அரக்கர்களின் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்கிறார்கள்.

குடும்பங்களில் கோபம் என்பது ஆணுக்கு ஒரு நியதியாகவும் பெண்ணுக்கு வேறொன்றுமாகவே இருக்கிறது. இருந்து வருகிறது. ஆண் கோபப்படுவதில் நியாயம் கற்பிப்பதும் பெண் கோபப்பட்டால் குடும்பத்தைப் பாதிப்பதாகவும் பொறுப்பற்றதாகவும் சித்தரிக்கப்படுகிறது.

பெண் எவ்வளவு படித்திருந்தாலும் உயர்பதவியில் இருந்தாலும் வீட்டில் அவளின் பங்கும் எதிர்பார்ப்புகளும் கடமைகளும் என்றுமே குறைவதில்லை.

நம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா மகிழ்ச்சியாக வாழவில்லையா? அவர்களுக்குள் பிரச்னைகள் வந்ததில்லையா? அவர்கள் ஒருவரை ஒருவர் பொறுத்துச் சென்று நம்மை வளர்க்கவில்லையா போன்ற கேள்விகளுக்கெல்லாம் .. யார் பொறுத்துச் சென்றது? செல்ல வேண்டும் என்று சமூகம் யாருக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறது? அது ஏன் பெரும்பாலும் பெண்ணாகவே இருக்க சபிக்கப்பட்டிருக்கிறாள்? யாராவது அவர்களிடம் நீங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்று கேட்டிருப்போமா? கேட்டிருந்தால் தெரிந்திருக்கும்.

மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பெண்ணை வதைக்கலாம் வன்முறைக்கு உள்ளாக்கலாம் என்று ஆண் அரக்கர்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தது? ஆண் என்ற ஒரே ஒரு காரணத்தால் பெண்ணைத் துன்புறுத்த உனக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என்று ஏன் பெற்றோர்கள் சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை? அந்த மரமண்டைகளுக்கும் ஏன் புரிவதில்லை?

அது தான் இந்தப் படத்தில் அம்ரிதா சொல்ல வருவது.

பெண்களின் பலவீனமே கண்களை மூடிக் கொண்டு காதலிப்பதும் கணவன் என்று நெக்குருகுவதும் தான். வீட்டு வேலைகளை மாங்கு மாங்கு என்று இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது. அவன் திட்டினாலும் ஏசினாலும் கணவன் தானே, அவனுக்கு இல்லாத உரிமையா என்று சமாதானம் செய்து கொள்வது. அதே பெண் கணவன் தன்னை பலர் முன்னிலையில் அடிக்கும் பொழுது தான் அவன் அம்மா அதைப் பற்றி ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் எதுவுமே நடக்காதது போல் அந்த நிலையிலும் மற்றவர்களை வழியனுப்ப மருமகளைக் கூப்பிடுவது அவளுக்கு பேரதிர்ச்சியாக இருக்கிறது. நடந்த தவறுக்கு கணவன் மன்னிப்பு கேட்பான் வருந்துவான் என்ற எதிர்பார்ப்பும் பொய்யாக, வீட்டை விட்டு வெளியேறுகிறாள். அதற்குப் பிறகும் மனைவியை அடித்தது தவறு என்று உணராதது மட்டுமில்லாது அவனின் மூர்க்கம் அதிகமாகி அவள் மேல் பழி சுமத்துகிறானே ஒழிய தன் தவறை உணர்வதில்லை.  அந்த நிகழ்வினால் இப்பொழுது என்ன நடந்து விட்டது என்பது போல அவன் நடந்து கொள்வது தான் அம்ரிதாவை வதைக்கிறது. அங்கு தான் அவளின் காதல் தோற்றுப் போகிறது. மகிழ்ச்சியை இழக்கிறாள். கடமைக்காக வாழும் வாழ்க்கையை விட பிரிவதே மேல் என்று நினைக்கிறாள். கணவன் தவறை உணரும் பொழுது மனதளவில் பிரிந்து வெகுதூரம் சென்று விடுகிறாள் அம்ரிதா.

வீட்டு விருந்தில் நண்பர்கள், பெற்றோர்கள் முன்னிலையில் கணவனிடம் அடிவாங்க அதிர்ச்சியில் அனைவரும் உறைந்து விடுகிறார்கள். அச்சம்பவத்தை மறக்கவே நினைக்கிறார்கள். அவளின் உணர்வுகளை மதித்து அவளுடன் யாரும் பேசவில்லை. பெற்ற தாயும் சமாதான தொனியில் பேசுகிறாள். கணவன் ஜஸ்ட் லைக் தட் என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறான். தான் செய்தது தவறு என்றோ அதனால் மனைவி காயப்பட்டிருக்கிறாள் என்றோ கவலைப்படவே இல்லை. தன் கோபத்தை இயலாமையை அவள் மேல் காட்டிய மூர்க்கத்தனத்தை அவன் புரிந்து கொள்ளவில்லை. வீட்டில் இருக்கும் அவன் அம்மாவும் அவனுக்கு உணர்த்தவில்லை. இப்படித்தான் பல குடும்பங்களிலும் ஆண்கள் இருக்கிறார்கள்.

அம்ரிதாவின் வீட்டில் அவளுடைய தம்பியின் காதலி அம்ரிதாவிற்கு ஆதரவாகப் பேச, அவளுடைய தம்பிக்கு கோபம் வந்து கை ஒங்க , அம்ரிதாவின் பெற்றோர்கள் உடனே அவனைக் கடிந்து கொண்டு அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்கச் சொல்வதையும் பெற்றோர்களின் கடமையை நினைவுறுத்துகிறது. அதை அம்ரிதா ஆச்சரியமாக பார்க்கிறாள்.
அந்த கதாபாத்திரமும் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்கிறான். அப்பெண்ணும் ஏற்றுக் கொள்கிறாள். இதைத்தான் அம்ரிதா எதிர்பார்த்திருப்பாள் அவள் கணவனிடமும் அன்பாக இருந்த மாமியாரிடமும்.

ஆண்களை வளர்க்கும் பெற்றோர்களுக்கான மிகப்பெரிய கடமை இது. தவறைத் திருத்த முயலா விட்டால் அவர்கள் மனித மிருகங்களாகிறார்கள். தங்களுடைய கோபத்தை இயலாமையை மனைவியிடம் காட்டுகிறார்கள் அதிகாரமாக! அதற்கு தங்களுக்கு உரிமை இருக்கிறது என்று தீவிரமாக நம்புகிறார்கள். அது தான் இந்தப்படம் சொல்ல வருவது.

பெண்ணின் மகிழ்ச்சி என்பது ஆணின் கையில் இருக்கிறது என்று நினைக்கும் சமூகம் இருக்கும் வரை அவளின் முடிவு அதிர்ச்சியாகத் தான் இருக்கும். அவளைப் புரிந்து கொண்ட குடும்பம் இருந்தது போல உண்மையில் எத்தனைப் பெண்களுக்கு இருக்கிறது? நிஜ வாழ்வில் பல பெண்களும் மெளனமாக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

விவாகரத்து வாங்கி விட்டால் பிரச்னைகள் முடிந்து விடுமா என்று கேட்பவர்களுக்கு... இப்பொழுது தான் பெண்கள் படித்து சுயமாக, சுயமரியாதையுடன் வாழ ஆரம்பிக்க முற்படுகிறார்கள். இதுவரை குடும்பங்கள் தழைத்திருக்கிறது என்றால் அவர்கள் பொறுமையாக கண்டும் காணாது போல் பல அவமானங்களையும் துன்பங்களையும் கடந்து சென்றதால் தான். இனி வரும் காலங்களில் மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும். இல்லையென்றால் போடா என்று போய்க்கொண்டே இருப்பார்கள். நீங்கள் அவர்களுக்கு என்ன பட்டம் கொடுத்தாலும். முதலில் பெண்ணுக்கான மரியாதையைக் கொடுக்க கற்றுக் கொள்ளுங்கள். நம் குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தனிமரமாக நின்று கொண்டிருக்க வேண்டியது தான்.

பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறேன் என்று சாஷ்டாங்கமாக காலில் விழுவதும் நல்லதல்ல. பல வீடுகளில் பெண்களின் அராஜகமும் நடக்கிறது. ஆணை அடக்கியாளத் துடிக்கும் பெண் வர்க்கங்கள் அரக்க குணம் படைத்த ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. இவர்களின் தவறுகளுக்கும் அப்பெண்களின் பெற்றோர்களே முழுமுதற்காரணம். அதையும் மறுப்பதற்கில்லை.

பெண்ணும் ஆணும் பரஸ்பரம் புரிந்து கொண்டு சுயமரியாதையுடன் வாழ கற்றுக்கொண்டால் அன்பான உலகம் நமக்கே சொந்தம்.

"Doing the right thing doesn't always end in happiness."









5 comments:

  1. Its a must watch for all the parents (an eye opener). Especially in a society where women are brain washed by their own parents that the level of tolerance is directly proportional to the dignity of the family.

    ReplyDelete
    Replies
    1. agree. Parents are the ones who need to learn when it comes to domestic violence so that they can guide their children properly.

      Delete

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...