Sunday, May 17, 2020

விக்ருதி


நெட்ஃப்ளிக்ஸில் விக்ருதி மலையாளப் படம் வந்திருந்தது. இணையத்தில் பலரும் நன்றாக இருக்கிறது என்று போட்டிருந்தார்கள். நிஜமாகவே நன்றாக இருந்தது. இரு குடும்பங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கிறது. அதன் பாதிப்பிலிருந்து எப்படி மீள்கிறார்கள் என்று மிக இயல்பாக காலத்தோடு பொருந்திப் போகிற கதை.

தங்கள் பாத்திரத்தை உணர்ந்து மிகைப்டுத்தாமல் நடித்திருந்தார்கள். கதாநாயகன் என்றால் வரும் பொழுதே காதுகள் அதிர இசை என்னும் இம்சை இல்லை. சம்பந்தமே இல்லாமல் நூறு பேருடன் குத்தலாட்டம் போட்டு அரசியல் வார்த்தைகளுடன் பாட்டு இல்லை. சற்றும் பொருத்தமே இல்லாமல் ஸ்லோமோஷன் காட்சிகள், நடிக்கிறேன் பேர்வழி என்று கண்ணைக் கசக்கி அறிவுரைகளைத் தெளிக்காத மிகவும் இயல்பான படம். கதாநாயகி என்றாலே வெள்ளையாக இருக்க வேண்டும் என்ற தமிழனின் கொள்கை இல்லாத பக்கத்து வீட்டு கதாநாயகிப் பெண்கள். கண்ணை உருட்டி ஓவர்ஆக்ட் செய்து கொல்லாமல் நடிக்கவும் செய்கிறார்கள்.

கடவுளின் தேசத்துப் படங்களில் எனக்குப் பிடித்தது ஆடம்பரமில்லாத, கூடுதல் அலங்காரமில்லாத நடிகர் நடிகையர்கள். வேட்டி , கைலியுடன் வளைய வரும் மனிதர்கள், மரங்கள் சூழ வீடுகள் எல்லாமே மனதிற்கு நெருக்கமாகி விடுகிறது. கதை தான் திரைப்படத்திற்கு அவசியம் என்று சேட்டன்களுக்குத் தெரிந்திருக்கிறது. நமக்கு அது எண்ணிக்குப் புரிஞ்சு தெரிஞ்சு தெளிவடைய!

தமிழ்ப்படங்களில் கதாநாயகன் என்றால் நூறு பேரைத் தூக்கி மிதிக்க வேண்டும். நரம்புகள் தெறிக்க நடைமுறைக்கு ஒவ்வாத ஆவேச வசனங்கள் பேச வேண்டும். கவர்ச்சி நடிகைகளுடன் குத்தாட்டம் போட்டு வண்டிவண்டியாக அறிவுரைகள் கூற வேண்டும். இயற்கையாக படம் எடுக்கிறேன் பேர்வழி என்று செயற்கைத்தனத்தில் இவர்களை மிஞ்ச முடியாது. இப்படி கொடுத்த காசிற்கு மேல் கூவுறவர்கள் நடித்து நாமும் அதைப் பார்த்துத் தொலைய வேண்டுமென்ற தலைவிதியை மலையாளப் படங்கள் மாற்றி வருகிறது.

கொரோனா வந்தாலும் வந்துச்சு...தமிழ்ப்படங்களைத் தவிர எல்லாவாற்றையும் பார்க்க போய் இனி தமிழ்ப்படம் என்றால் காத தூரத்திற்கு ஓட வைத்திருக்கிறது.

என்னவோ போடா மாதவா!

No comments:

Post a Comment

Can This Love Be Translated?

 “Can This Love Be Translated?” பல நாட்களுக்குப் பிறகு பார்த்த கே-ட்ராமா. தலைப்பே வித்தியாசமாக இருந்ததில் வசப்பட்டேன். கதாநாயகி புதிதாக இருந...