Sunday, May 10, 2020

சான்ஃப்ரான்சிஸ்கோ 7 - Bye, Bye SFO

SFO 1
SFO 2
SFO 3
SFO 4
SFO 5
SFO 6

Pier 39லிருந்து Palace of Fine Artsக்கு ஊபரில் பயணம். பதினைந்து நிமிடத்தில் வந்து விட்டது. கலைநேர்த்தியுடன் கட்டப்பட்ட புரதான ரோமன் கிரேக்க கட்டடக் கலையை பிரதிபலிக்கும் பிரம்மாண்ட கட்டடம். கண்களை நிறைக்கிறது அதன் வடிவமைப்பு. இதற்கென தனி வரலாறும் இருக்கிறது. கலைக்கண்காட்சிகள் நடக்கும் இடமாக இருந்தது காலப்போக்கில் பலவிதமாக பயன்பாட்டில் உள்ளது. ஜோடியாக ஜோடியாக திருமண உடைகளில் படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள். கழுத்தை வளைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. அத்தனை உயரமான தூண்களுடன் கூடிய மண்டபங்கள்! நீர் சூழ ரம்மியமானஇடத்தில் அமைந்திருக்கிறது. நகரத்திலிருந்து வேறு கலாச்சாரத்திற்கு சென்று வந்ததது போலொரு நினைவினைத் தந்தது அவ்வளாகம். சிறிது நேரம் புல்தரையில் அமர்ந்து ஒருவர் சாக்ஸஃபோன் வாசித்துக் கொண்டிருந்ததைக் கேட்டோம்.

அப்பா இருந்திருந்தார்னா இங்கருந்து கிளம்பியிருக்க மாட்டார்ல?

அன்னம், வாத்துகள் ஆமைகள், நாரை இனங்கள் என பலவும் குளத்தில் உலவிக்கொண்டிருந்தது. செல்வந்தர்கள் வசிக்கும் அப்பகுதியில் வீடுகள் எல்லாம் கொள்ளை அழகு. மில்லியன் டாலர் வீடுகள்ம்மா.

ம்ம்ம்ம்.... மில்லியன் டாலர்களுக்கு புல்தரையுடன் மரங்கள் சூழ பெரிய்ய்ய்ய்ய்ய வீடுகள் கிடைக்கும் ஆல்பனியில். இங்கு அத்தகைய வீடுகளுக்கு மலைகளை நாடுகிறார்கள்! சில படங்களை க்ளிக் செய்து கொண்டோம். எந்த வீடு அழகாக இருக்கிறது என்று பார்த்துக் கொண்டே ஊபரில் "Burma Love" எனும் பர்மியர் உணவகத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்பா வந்திருந்தப்ப இங்க வந்தோம். அவருக்குப் பிடிச்சது. உனக்கும் ரொம்ப பிடிக்கும்மா.

ஆஹா! புதுவகையான உணவா? பாங்காக்ல சாப்பிட்டது மாதிரி இருக்காதே?

ம்ஹூம்! நம்ம ஊர் ஸ்டைல்ல தான் இருக்கும். அந்த சாலட் உனக்குப் பிடிக்கும்.

அப்புறமென்ன?

இங்கும் நீண்ட வரிசை. பிரபலமான உணவகம். காத்திருந்து உண்கிறார்கள்!

வணக்கம் சொல்லி இருக்கையில் அமர வைத்து உணவுப்பட்டியலைக் கொடுத்து விட்டுச் சென்றாள் பர்மிய அழகி. பின்னணியில் மெல்லிசை இழையோட தட்டுகளில் ராகம் பாடிக்கொண்டிருந்தது முள்கரண்டிகள். மதுப்பிரியர்கள் அழகான கண்ணாடி போத்தல்களில் குடித்துக் கொண்டே உணவருந்திக் கொண்டிருந்தார்கள். உணவுடன் மது அருந்துவது இவர்களின் பழக்கமாக இருக்கிறது. வரிசையாக என்னென்ன உணவு வகைகள் இருக்கிறது என்று பார்த்தேன். பெயர்கள் எல்லாம் புதுமையாக இருந்தது. என்ன ஆர்டர் செய்வது என்று தெரியவில்லை. நானே உனக்கும் சேர்த்து சொல்லிவிடுகிறேன் என்று நிவியே ஆர்டர் செய்து விட்டாள்.

பக்கத்து மேஜைகளில் விதவிதமான கிண்ணங்களில் புதுப்புது உணவு வகைகள்! ப்லாத்தா (நம்மூர் வீச்சு பரோட்டா), டீ லீஃப் சாலட், தேங்காய்ப்பால் கறியில் செய்த "நான் பியா டோக்" நூடுல்ஸ். சிக்கன் கிரேவி. சிறு சிறு கிண்ணங்களில் சாலடுக்குத் தேவையானவைகளை எடுத்து வந்து நம்முன் கலந்து கொடுக்கிறார்கள். அப்படியே நூடுல்ஸ்க்கும். ட்ராவல் ஷோக்களில் பார்த்திருக்கிறேன். அதை ஒரு கலை போல் செய்கிறார்கள். பார்க்க அழகாக இருந்தது. சாம்பார் சட்னி கிண்ணங்களுக்குப் பதிலாக வேறு சிறு சிறு கிண்ணங்கள்! சிறிது கசப்புடன் டீ லீஃப் சாலட் வித்த்தியாசமான சுவையில் நன்றாக இருந்தது. பேசிக்கொண்டே அனைத்தையும் காலி செய்தோம். திருப்தியான சாப்பாடு. இரவு உணவுக்காக சாலட் வாங்கிக்கொண்டோம்.

மாலை நேரம். உணவகங்களின் வெளியில் அமர்ந்து சாப்பிடும் கூட்டம் தெருக்களில். சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்களோ? சரியான சாப்பாட்டு ராமன்கள் உலகமாக இருக்கிறதே!

அம்மா இது தான் நம்ம கடைசி நிறுத்தம். 'ஸ்மிட்டன் ஐஸ்கிரீம்' கடையின் முன்னால் நின்றிருந்தோம். நகரின் பிரபலமான கடை. விதவிதமான நிறங்களில், மணங்களில். இங்கே குளிர்ந்த ஐஸ்கிரீமை மெஷினில் ஒன்றரை நிமிடத்திற்க்கு கடைந்து சுவையைக் கூட்டுகிறார்கள். ஜில்லென்று தொண்டைக்குள் இறங்குகிறது. யம் யம் யம்.... 😍

வழியில் கிரேக்க இனிப்பான பக்லாவா கடை மூடியிருந்தது. இல்லையென்றால் அதையும் ஒரு கை பார்த்திருக்கலாம். இம்முறை வீட்டுக்கு வரும் பொழுது நிறைய வாங்கி வந்து விட்டாள் நிவி. ஃப்ரெஷ்ஷாக நன்றாக இருந்தது. வாயில் வைத்தால் கரைகிறது. வெண்ணையும் சர்க்கரையும் செய்யும் மாயம் தான் என்னவோ? வீட்டில் செய்து பார்க்க வேண்டும் 😜

நேரம் கடந்து சாப்பிட்டாலும் திருப்தியான சுவையான மதிய உணவு. பிடித்த ஐஸ்கிரீம். பேசிக்கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். தினமும் குறையாமல் 23,000 ஸ்டெப்ஸ் நடந்திருந்தோம். வீட்டிற்கு வந்து வத்தல் குழம்பு, ரசம், கறி சமைத்துக் கொடுத்தேன். இனி நாலைந்து நாட்களுக்கு உனக்கு கவலையில்லை நிவி. நல்லா சாப்பிடு.

அந்த வீட்டில் தங்கியிருந்த மற்ற நண்பர்களையும் சந்தித்துப் பேசியதில் மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களும் நிவி இந்த வீட்டையும் எங்களையும் நன்கு நிர்வகிக்கிறாள். பொறுப்பான பெண் என்று பாராட்ட பெருமையாக இருந்தது. வீட்டில் நிவி கைப்பட அனைவரின் வேலைகளை அட்டவணை போட்டு வைத்திருந்தாள். அவர்களிடமும் கள்ளம் கபடம் இல்லாத ஒருவித வெளிப்படைத்தன்மை இருந்தது. நல்ல நண்பர்கள் அமைவதும் வரமே! அவர்களிடம் விடைபெற்று ஊருக்குத் திரும்ப துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு நானும் விமானநிலையத்துக்கு கிளம்ப தயாராகினேன். கவலையாக இருந்தது.

என் நண்பர்களை நிவியின் நண்பர்களைச் சந்தித்தது, நகர வாழ்க்கையைத் தெரிந்து கொண்டது , புதிய இடங்களைச் சுற்றிப் பார்த்தது, புதுப்புது உணவு வகைகளை ஆசைதீர உண்டது என நாட்கள் மடமடவென்று ஓடியே விட்டது.

நீ இங்க வந்தது நாம சுத்தினது நல்லா இருந்ததும்மா. அடுத்த தடவை வரும் போது இன்னும் கொஞ்ச நாள் கூட இருக்கிற மாதிரி வரணும். உனக்கு இங்க என்ன பிடிச்சதும்மா?

எனக்கு உன்கூட இருந்த எல்லா நேரமும் பிடிச்சது நிவி. எனக்கு என்னென்ன பிடிக்கும்னு பார்த்து பார்த்து நீ செஞ்சது ரொம்பவே பிடிச்சது. இந்த மாதிரி யாரும் என்னை கவனித்துக் கொண்டதில்லை. நான் தான் இப்படி மற்றவர்களுக்கு செய்து பழக்கம். நீ செய்தது எனக்கு ஆனந்தமாகவும் பெருமையாகவும் இருக்கு..

நீ எங்களுக்கு எவ்வளவு செய்யற? இதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா. சொல்லும் பொழுதே உடைந்து நான் அழ ஆரம்பிக்க, நிவியும் அழுதாள். கவலைப்படாதேம்மா. நான் அடுத்த மாசம் ஊருக்கு வர்றேன். வண்டி வர, அழுது கொண்டே விடைபெற்றேன். நான் ஏர்போர்ட் வரைக்கும் வரவா?

வேண்டாம். இப்பவே மணி 10 ஆயிடுச்சு. போய் தூங்கு. நீயும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோ. உடம்ப பார்த்துக்கோ. நேரத்துக்குச் சாப்பிடு. அவளைக் கல்லூரியில் விட்டுவிட்டு கிளம்பும் போது எந்த மனநிலையில் இருந்தேனோ அதே மனநிலையில் தான் அன்றும் இருந்தேன்.

அன்பு மகளைப் பிரிந்துசெல்கிற வருத்தமா ? பெண் குழந்தைகள் தான் பொறுப்பாக இருப்பார்கள். தன்னுடைய மகனைப் பற்றி புலம்பிக்கொண்டும் சொந்தக்கதையை சொல்லிக் கொண்டும் வந்தார் மெக்ஸிகன் டிரைவர். ஊருக்கு வரும் பொழுது இருந்த உற்சாக மனநிலை இப்பொழுது இல்லை. ஏதோ ஒரு இனம்புரியாத கவலை.

பாலங்களின் விளக்கொளியில் பசிபிக் கடலும் மின்னிக் கொண்டிருந்தது. விமான நிலையத்தில் விடுமுறை முடிந்து ஊருக்குத் திரும்பும் கூட்டம். வந்து சேர்ந்த தகவலைச் சொல்லி விட்டு செக்கின் முடிந்த பிறகு மீண்டும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

சரிம்மா. பத்திரமா போ. டெட்ராய்ட் போனவுடனே எனக்கு டெக்ஸ்ட் பண்ணு. நான் தூங்கப் போறேன். களைப்பாக இருந்தது அவளுடைய குரல். பாவம்! அழுதாளோ என்னவோ. என்னைப் பற்றிக் கவலைப்பட்டிருப்பாள். நான் அழாமல் இருந்திருக்கலாம். பயமுறுத்தி விட்டேனோ?

அங்கிருந்த ஒவ்வொரு நாளையும் திகட்ட திகட்ட அன்பினால் என்னைச் சீராட்டி வாழ்வில் மறக்க முடியாத, பொக்கிஷமான நாட்களாக்கி விட்டாள் செல்ல்ல்ல மகள். சுகானுபவம்! தட் அவள் எனக்கா மகளானாள்... நான் அவளுக்கு மகளானேன் மொமெண்ட்ட்ட் 🙂

தூரத்தில்
தொலைதூரத்தில்
உற்றார் உறவினர்
எவரும் அருகே
இல்லாத ஒருதூரத்தில்
மகளிடத்தில்
மகளாயிருந்ததே
மாதவம்ம்ம்ம்ம்😍😍😍

SFO 7 Photos

No comments:

Post a Comment

சிகரம் தொட்டவர்களின் கதை

2011ம் ஆண்டில் மலையேற்ற வீரர்கள் கான்ராட் ஆங்கர், ஜிம்மி சின், ரெனன் ஆஸ்டர்க் மூவரும் கர்வால் இமயமலைப் பகுதியில் 22,000 அடி உயரமுள்ள மவுண்ட...