Friday, May 8, 2020

National Teachers Appreciation Day

அமெரிக்காவில் மே 5ந்தேதியை 'National Teachers Appreciation Day'யாகவும் இந்த வாரம் முழுவதும் ‘National Teachers Appreciation Week’ ஆகவும் கொண்டாடுகிறார்கள். அநேக பள்ளிகளில் மதிய விருந்துணவுடன் அன்பளிப்பு, பாராட்டுகள் என்று மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களை கௌரவிக்கும் தினம். இந்த வருடம் கொரோனாவால் இம்மகிழ்ச்சியான நாளை இழந்துள்ளார்கள் ஆசிரியர்களும் மாணவர்களும்.

காலையில் வானொலியில் இது சம்பந்தமாக நேயர்களிடம் உங்களுக்கு விருப்பமான ஆசிரியர் யார்? எதனால் உங்களுக்கு அவரைப் பிடிக்கும்? அவரால் உங்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன? என்று கேட்க, பல மாணவர்களும், மாணவர்களாக இருந்தவர்களும் சுவாரசியமான பதில்களைக் கூறினார்கள். வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தா விட்டாலும் ஒரு மாணவரின் வாழ்க்கை ஒரு ஆசிரியரால் நல்ல மாற்றத்துக்கு உள்ளாயின் அதுவே அவரின் வெற்றியாகும். கண்டிப்பு, பாசம், அறிவுரை என்று பெற்றோருக்கு நிகராக என்னுள் மாற்றங்களைக் கொண்டு வந்த பல ஆசிரியர்களும் என் நினைவில் வந்து சென்றார்கள். பள்ளி செல்லும் மகனும் அவனில் மாற்றங்களைக் கொண்டு வந்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்தான். மானசீகமாக அனைவருக்கும் நன்றி கூறிக் கொண்டு தொடங்கியது இன்றைய காலை.

இந்த நாள் இனிய நாள்.

வீட்டில் இருக்கும் நேரத்தை விட பள்ளிகளில் அதிக பகல் பொழுதைச் செலவிடும் மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும், படிப்பிலும், விளையாட்டிலும்,மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ள ஆசிரியர்களை கவுரவிக்க ஒரு நாள் போதாது தான். அவர்களுடைய கடும் உழைப்பை, அர்ப்பணிப்பை மதித்து உணவும், பரிசுகளும், விளையாட்டுமாக அவர்களுக்காக ஒரு நாள்.

என்னுடைய அனுபவத்தில் இங்குள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மாணவர்களுக்காக அதிகச் சிரத்தை எடுத்துக் கொள்வதுடன் காலையில் அரைமணிநேரத்திற்கு முன்பே வருவதும், பள்ளி முடிந்த சில மணிநேரங்கள் படிப்பில் தடுமாறும் மாணவர்களுக்குப் புரியும் வகையில் சொல்லிக் கொடுப்பதும் என அவர்களின் சொந்தவேலைகளையும் புறந்தள்ளி மாணவர்களுக்காகக் காத்திருந்து உதவி செய்வதற்கே பாராட்டலாம். பெற்றோர்களும் எந்த நேரத்திலும் ஆசிரியர்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது.

ஒரு சில ஆசிரியர்கள், சில பல மாணவர்களின் வாழ்க்கையை நேர்படச் செய்வதில் பெரும்பங்கு கொள்வதுடன் ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்கும் பொறுப்பையும் சுமக்கிறார்கள். நல்லாசிரியர் ஒருவரின் வழிகாட்டுதலில் தோன்றிய பல மாணவர்கள் இன்றும் கல்வி மற்றும் ஒழுக்கம் கற்றுத் தந்த குருவினை வாழ்நாள் முழுவதும் நினைத்துக்கொண்டிருப்பது தான் இப்புனித பணியில் அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் மனநிறைவு.

வாழ்க அவர்கள் தொண்டு.

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரா
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ!

ஹரி ஓம்!

No comments:

Post a Comment

வெள்ளை மாளிகைக்குள் என்ன நடக்கிறது? வெளியேறும் முக்கிய அதிகாரிகள்

ஒரு அரசு வெற்றிகரமாக ஆட்சியை நடத்த தலைமைப் பொறுப்பில் இருப்பவருடன் அமைச்சரவை சகாக்களின் பங்குகளும் அதிகம். அதனால் தான் பொறுப்பான, தகுதியானவர...