
அமெரிக்காவின் விவசாயப் பண்ணைகள் அதன் சொந்த மக்களுக்கு உணவளிப்பது மட்டுமல்லாமல், தானியங்கள், இறைச்சி, பால் மற்றும் பிற உணவுப்பொருட்களை உலக சந்தைகளுக்கும் வழங்கி வருகின்றன. அதுவும், சோளம், சோயாபீன்ஸ், கோதுமை ஆகியவற்றின் பரந்த வயல்கள் நீண்ட காலமாக மிகுதியையும் நிலைத்தன்மையையும் அடையாளப்படுத்தினாலும் இந்த பிம்பத்திற்குப் பின்னால், அமெரிக்க விவசாயம் மெதுவாக உருவாகிக்கொண்டிருக்கும் நெருக்கடியை எதிர்கொண்டு வருவதைச் சமீபத்தில் ஊடகச் செய்திகள் மூலமாக அறிந்து கொள்ள முடிகிறது. அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள், நிலையற்ற உலகளாவிய வர்த்தகம், காலநிலை உச்சநிலைகள், தொழிலாளர் பற்றாக்குறை, மாறிவரும் அரசாங்கக் கொள்கைகள் ஒரு காலத்தில் நம்பகமானதாகக் கருதப்பட்ட ஒரு அமைப்பைச் சீர்குலைத்துள்ளன.
பல தலைமுறைகளாக உலகை உணவூட்டிய அமெரிக்க விவசாயிகள், உழைப்பு நிச்சயம் மதிக்கப்படும் என்ற நம்பிக்கையில் விதை விதைத்தவர்கள். இன்று அந்த நம்பிக்கை சிதறிக் கொண்டிருக்கிறது. விளைந்த பயிர்களை வாங்குபவர் இன்றி களஞ்சியங்கள் நிரம்பியிருக்க, விலையோ படுபாதாளத்தில்! மாற்றம் வேண்டும் என்று வாக்களித்தவர்கள் இப்போது தங்களின் உழைப்பின் மதிப்பு வாஷிங்டனில் எடுக்கப்படும் அரசியல் முடிவுகளால் நிர்ணயிக்கப்படுவதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். மழையும் வெயிலும் மட்டுமே விவசாயத்தின் எதிர்காலத்தைத் தீர்மானித்த காலம் முடிந்து, இன்று வர்த்தக வரிகள், அரசியல் மோதல்கள், உலகளாவிய போட்டிகள் ஒரு விவசாயியின் தலைவிதியைத் தீர்மானிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதில் இருப்பது அரசியல் அன்றி வேறு எதுவும் இல்லை.
சமீபத்தில் நியூயார்க் டைம்ஸ்-ல் வெளியான கட்டுரை ஒன்றின் சாராம்சத்திலிருந்து அறிந்து கொண்ட வருத்தமான செய்தி தான் இக்கட்டுரையை எழுதத் தூண்டியது.
அதிகளவில் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யும் நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. முக்கிய பயிர்களில் சோளம், சோயாபீன்ஸ், கோதுமை, அரிசி, பருத்தி ஆகியவை அடங்கும். கால்நடை வளர்ப்பில் மாட்டிறைச்சி, கோழி, பன்றி இறைச்சி, பால் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த உற்பத்தியில் பெரும்பகுதி ஏற்றுமதி சார்ந்தது. அதாவது விவசாயிகள் நிலையான சர்வதேச சந்தைகளைப் பெரிதும் நம்பியுள்ளனர்.
‘மிசிசிப்பி டெல்டா’ அமெரிக்காவின் மிகவும் வளமான விவசாயப் பகுதிகளில் ஒன்றாகும். இங்குள்ள விவசாயிகள் பயிர் விலைகளில், குறிப்பாக அரிசியில் கடுமையான சரிவை எதிர்கொண்டு வருகின்றனர். பல விவசாயிகள் தங்கள் பயிர்களை வளர்ப்பதற்கான செலவை மீட்டெடுக்க முடியாத அளவிற்கு விலைகள் மிகவும் குறைவாக இருப்பதாக கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
‘ஜாக் வெஸ்டர்ஃபீல்ட்’ என்ற நெல் விவசாயி, 2.2 மில்லியன் பவுண்டுகள்(கிட்டத்தட்ட 997903.214 கிலோ) அரிசியுடன் சிக்கித் தவிப்பதாகவும் அவரால் லாபகரமாக விற்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். அதிக உள்ளீட்டு செலவுகள், பலவீனமான சந்தைகள் விவசாயிகளுக்கு எந்த சாத்தியமான வழிகளையும் இல்லாமல் செய்துள்ளன.
அமெரிக்கா விதிக்கும் வர்த்தக வரிகள் (tariffs) பல நேரங்களில் பிற நாடுகளின் பதிலடி வரிகளைத் தூண்டி அதன் முதல் பாதிப்பு விவசாயத்தில்தான் தெரிகிறது. அமெரிக்க அரிசி, சோயா பீன் போன்ற பயிர்களுக்கு வெளிநாடுகளில் விலை உயர்வதால், வாங்குபவர்கள் பிரேசில், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு மாறுகிறார்கள். இதனால் அமெரிக்காவின் வேளாண் ஏற்றுமதி குறைந்து விற்கப்படாத பயிர்கள் நாட்டுக்குள் குவிந்து, சந்தையில் oversupply உருவாகியுள்ளது. அதன் விளைவாக விலைகள் உற்பத்திச் செலவிற்கும் கீழே சரிந்து நிதி இழப்பாக மாறியுள்ளது.
அதே நேரத்தில், கட்டண வரிகள், வர்த்தக மோதல்கள் காரணமாக உரம், இயந்திரப் பாகங்கள், எரிபொருள் போன்ற விவசாய உள்ளீடுகளின் விலைகளும் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் ஒரே நேரத்தில் குறைந்த விற்பனை விலை, உயர்ந்த உற்பத்திச் செலவு என்ற இரட்டை சிக்கலில் சிக்கியுள்ளார்கள்.

அரசியல் ரீதியாக, இறக்குமதி வரிகள் “தேசிய பாதுகாப்பிற்காக”, “உள்நாட்டுத் தொழில்கள் பாதுகாப்பிற்காக” என ட்ரம்ப் முழங்கினாலும், அதன் உடனடி பலி ஏற்றுமதி சார்ந்த விவசாயிகள் தான். இதன் காரணமாக பயிர்களை விற்கவே முடியாத நிலையில் சில விவசாயிகள் நஷ்டத்தில் விற்பதற்குப் பதிலாக பயிர்களை அழிக்கவோ, அழுக விடவோ பரிசீலித்து வருகின்றனர். “பயிர்களை அழிக்க அரசு இழப்பீடு வழங்க வேண்டும். விலைகளை நிலைப்படுத்த உற்பத்தியைக் குறைக்க வேண்டும்” என்ற யோசனைகளையும் பரிசீலிக்கின்றனர். இது 1980களின் விவசாய நெருக்கடியில் பயன்படுத்தப்பட்ட ஒரு நடைமுறை தான். மிசிசிப்பியின் வரிசை பயிர்களின் மதிப்பு 2024 முதல் 2025 வரை 9% சரிந்தது. அதே நேரத்தில் 2025ம் ஆண்டில் மாநிலத்தின் மொத்த விவசாய உற்பத்தி $9.5 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உணவு பற்றாக்குறையால் அல்ல, வர்த்தக அரசியலால் உருவான சந்தை சிதைவு.
இந்த நெருக்கடி ஒரே இரவில் உருவாகவில்லை. வானிலை, சந்தை சுழற்சிகளால் மட்டுமே என்றும் இதைக் குறுக்கி விட முடியாது. அரசாங்க கொள்கைகள் – குறிப்பாக வர்த்தகம், தொழிலாளர், எரிசக்தி, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை என அனைத்தும் தீர்க்கமான பங்கைக் கொண்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ன் கீழ், விவசாயம் பரந்த அரசியல் மற்றும் பொருளாதார உத்திகளில் ஒரு மைய அரங்கமாகவும் மாறியுள்ளது. உள்நாட்டுத் தொழில்களையும் தேசிய நலன்களையும் பாதுகாப்பதற்கான முயற்சிகளாக விளம்பரப்படுத்தப்பட்ட கட்டண வரிகள், குடியேற்ற அமலாக்கம், ஒழுங்குமுறை மாற்றக்கொள்கைகளால் விவசாயத்தில் அவற்றின் விளைவுகள் சிக்கலாக, சீரற்றவையாக, ஆழமாக உணரப்பட்டு வருவதை தினமும் வெளிவரும் செய்திகள் நிரூபித்து வருகின்றன.
இங்கு இயந்திரமயமாக்கப்பட்ட விவசாயம் மூலதனம் மிகுந்ததும் கூட. உலகின் பல பகுதிகளில் பொதுவாகக் காணப்படும் பாரம்பரிய சிறுதொழில் விவசாயத்தைப் போலல்லாமல், அமெரிக்க விவசாயம் மேம்பட்ட இயந்திரங்கள், வணிக உள்ளீடுகள், கடன் அமைப்புகள், காப்பீட்டுத் திட்டங்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை நம்பியுள்ளது. இதன் விளைவாக, விலைகள், வட்டி விகிதங்கள், வர்த்தகக் கொள்கை, எரிசக்தி செலவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
நவீன விவசாயத்திற்குத் தேவையான நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகைக்கு விடப்பட்டதாகவோ உள்ளது. தற்பொழுது அதிகரித்து வரும் நிலத்தின் விலைகளால் சிறு/புதிய விவசாயிகள் இந்தத் துறையில் நுழைவதும் கடினமாகியுள்ளது. பாசனத்திற்குத் தேவையான நீர் மழைப்பொழிவு, ஆறுகள், நீர்த்தேக்கங்கள், நிலத்தடி நீர்நிலைகளைச் சார்ந்திருப்பதால் வறட்சி, அதிகப்படியான பயன்பாடு, காலநிலை மாற்றம் ஆகியவை நீர் கிடைக்கும் தன்மையைக் குறைக்கின்றன. அதுவும் குறிப்பாக மேற்கத்திய மாநிலங்களில் நீர் உரிமைகள் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுகின்றன.
பெரும்பாலான விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் வணிக கலப்பின அல்லது மரபணு ரீதியாக வடிவமைக்கப்பட்ட விலை உயர்ந்த விதைகளையே வாங்குகிறார்கள். இந்த விதைகள் அதிக மகசூல் பெறவும் பூச்சிகள், வறட்சியை எதிர்க்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு பெரும்பாலும் சட்டப்பூர்வமாக மீண்டும் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கின்றன. இதனால் விவசாயிகள் பெரிய விதை நிறுவனங்களைச் சார்ந்திருப்பதை அதிகரிக்கின்றன.
நவீன விளைச்சலுக்கு அவசியமான நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் உரங்களும் பயிர்களைக் காக்கும் களைக்கொல்லிகள், பூச்சிக்கொல்லிகள், பூஞ்சைக் கொல்லிகளும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால் வெளிநாட்டுச் சந்தைகள், சுரங்கம், சர்வதேச வர்த்தகத்தைச் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் மட்டுமில்லாமல் புவிசார் அரசியல் இடையூறுகளால் இயக்கப்படும் விலை உயர்வுகள் நேரடியாக விவசாயச் செலவுகளை உயர்த்துகின்றன.
தற்பொழுதைய நவீன விவசாய உலகம் டிராக்டர்கள், அறுவடை, நடவு இயந்திரங்கள், நீர்ப்பாசன அமைப்புகள், டிஜிட்டல் கருவிகள் என விலை உயர்ந்த இயந்திரங்களைச் சார்ந்துள்ளது. பொதுவாக கடன்கள் மூலம் அதற்கான நிதியளிக்கப்பட்டாலும் அதன் வட்டி விகிதங்கள், கட்டணங்களால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
பல அமெரிக்க பண்ணைகள் புலம்பெயர்ந்த, பருவகால தொழிலாளர்களை, குறிப்பாக பழங்கள், காய்கறிகள், பால் பொருட்களுக்கு நம்பியுள்ளன. ட்ரம்ப்பின் குடியேற்றக் கொள்கையால் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது கண்கூடு.
இதைத்தவிர, பெரும்பாலான விவசாயிகள் வானிலை, விலை ஏற்ற இறக்கங்களால் ஏற்படும் அபாயங்களை நிர்வகிக்க, வங்கிக் கடன்கள், அரசாங்க ஆதரவு கடன், பயிர் காப்பீட்டுத் திட்டங்களைச் சார்ந்துள்ளனர்.
மேலும் நீர்ப்பாசனம், இயந்திரங்களை இயக்க தேவையான டீசல் எரிபொருள், விவசாய சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்துக்கான எரிசக்தி விலை ஏற்ற இறக்கம், உள்கட்டமைப்பு சிக்கல்கள், தொழிலாளர் இடையூறுகள் என அனைத்தும் நேரடியாக பண்ணை லாபத்தை பாதிக்கிறது.
இவ்வாறு ஒவ்வொரு கட்டத்திலும் பலவித சிக்கல்களை விவசாயிகள் எதிர்கொண்டு வருவதால் மூலதனமும் தொழில்நுட்பத்தை அணுகக்கூடிய பெரிய விவசாய வணிகங்களும் மட்டுமே விரிவடைந்து வருகின்றன. அதே நேரத்தில் சிறிய, நடுத்தர குடும்ப பண்ணைகள் உயிர்வாழவே போராடுகின்றன. பண்ணைகளை ஒருங்கிணைப்பதால் கிராமப்புற சமூகங்களும் குறைந்து வருகின்றன.
நீண்ட காலமாக நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படும் அமெரிக்காவின் விவசாயப் பண்ணைகள் முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தை தற்பொழுது எதிர்கொண்டுள்ளன. வாக்காளர்கள் தொடர்ந்து குடியரசுக் கட்சியின் தலைமையை ஆதரித்து வரும் மையப்பகுதிகளில் கூட விரக்தி தெளிவாகத் தெரிகிறது. பயிர் விலைகளை நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்ட எத்தனால் கொள்கைகள், கட்டுப்பாடு நீக்கம், மானியங்களுக்கு ஆதரவளிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். போராடும் விவசாயிகளுக்கு குறுகிய கால நிவாரணமாக 12 பில்லியன் டாலர் உதவி போன்ற திட்டங்களை அவருக்கு வாக்களித்த அயோவா, மத்திய மேற்கு விவசாயிகள் பெரிதும் பாராட்டுகிறார்கள். கிராமப்புற பிரச்சினைகளில் ட்ரம்ப்பின் கவனத்தையும், உதவிக்கும் பலர் நன்றி தெரிவித்தாலும் தீர்க்கப்படாத வர்த்தகம், சந்தை சவால்கள் குறித்து விரக்திகள் நீடித்துக் கொண்டு தான் இருக்கின்றன.
“அவர் எங்களைப் பற்றி பேசுகிறார் என்பது முக்கியம் என்றாலும் பயிர்களுக்கான தேவையைக் கொண்டுவரும் ஒப்பந்தங்கள் தான் எங்களுக்கு அவசியம்” – மத்திய மேற்கு தானிய விவசாயி.
“அவருடைய நிவாரண நிதி உதவியது. ஆனால் செலவுகள் இன்னும் அதிகமாக உள்ளன. சந்தைகள் நிலையானவை அல்ல.” – அயோவா சோள விவசாயி.
“இங்கு அரசியல் பிரச்சினை அல்ல. தொழிலாளர்களுக்கான அணுகலும் நியாயமான வர்த்தகமும் தான்.” – அரிசோனா விவசாயி
பண்ணை மாநிலங்களில் ட்ரம்ப்பிற்கு விசுவாசம் வலுவாக இருந்தாலும் பொருளாதார அழுத்தங்கள் பொறுமையைச் சோதிக்கின்றன. கணிக்கக்கூடிய சந்தைகள், உயிரி எரிபொருள் தெளிவு, தொழிலாளர் நிலைத்தன்மையைத் தான் விவசாயிகள் விரும்புகிறார்கள்.
அமெரிக்க விவசாயத்தின் எதிர்காலம் இன்று குறுக்குவெட்டு பாதைகளின் சந்திப்பில் நின்றுள்ளது. குறுகிய கால அரசியல் லாபங்களுக்காக உலக சந்தைகளுடன் மோதும் ஒரு பாதை; விவசாயியை மையமாக வைத்து நம்பிக்கையையும் நிலைத்தன்மையையும் கட்டியெழுப்பும் மற்றொரு பாதை. விவசாயி உதவித் தொகைகளால் மட்டுமே வாழ வேண்டியவன் அல்ல. அவன் உழைப்புக்கான நியாயமான விலையை எதிர்பார்க்கும் மனிதன். உலகை உணவூட்டும் மண், அரசியல் போர்க்களமாக மாறும்போது, அதன் விளைவுகளைச் சுமப்பது வயல்களில் நிற்கும் மனிதர்களே.
உணவு நிறைந்த நாட்டில் பயிர்களை அழிக்க வேண்டிய நிலை உருவாகிறதென்றால், சிக்கல் உழைப்பில் இல்லை. அதை வழிநடத்தும் வர்த்தக அரசியலில் தான் என்பது நிரூபணமாகிறது. விவசாயியின் வாழ்வையும் சந்தையின் கணக்கையும் ஒரே நேர்கோட்டில் இணைத்து விவசாயிகளின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது அரசின் பொறுப்பு.
விவசாயம் நசுங்கும் போது நாடுகள் செழிப்பதில்லை என்ற வரலாற்று உண்மையை அமெரிக்கா மீண்டும் உணருமா அல்லது தன் உணவுப் பாதுகாப்பையும் விவசாயியின் வாழ்க்கையையும் உலக அரசியலின் விலையாகச் செலுத்துமா என்பதே தற்போதைய கேள்வி.

No comments:
Post a Comment