Wednesday, July 5, 2023

Dum Laga Ke Haisha



நாம் நினைத்தபடி வாழ்க்கை அமைந்தால் வரம். இல்லையா? கிடைக்கின்ற வாழ்க்கையை வரமாக்கிக் கொள்ள வேண்டும். இது தான் 'Dum Laga Ke Haisha' படத்தின் கரு. அதை சமூகத்தில் புரையோடிக்கொண்டிருக்கும் ஒரு விஷயத்தை வைத்து மிக அழகாகப் படமாக்கியிருக்கிறார்கள், 

படிக்காத ஒல்லிப்பையனாக அப்பாவிற்கு பயந்தவனாக ஆயுஷ்மான் குரானா நன்றாக நடித்திருக்கிறார். அப்பாவின் மிரட்டலுக்குப் பயந்து குண்டான, படித்த பட்டதாரிப் பெண்ணை வேண்டாவெறுப்பாகத் திருமணம் செய்து கொள்கிறார்.

அனைவரிடத்திலும் அன்பாக அதே நேரத்தில் ஆடல், பாடல் என்று சிரித்த முகத்துடன் கணவனின் அன்புக்கு ஏங்குபவராக, வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் சராசரிப் பெண்ணாக பூமி பட்னேகரின் நடிப்பும் அருமை. வீடுகளில் நடக்கும் பிரச்சினைகளைச் சுவையாகப் படத்திற்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். அப்பா கதாபாத்திரம் அந்த கால அப்பாக்களை பலருக்கும் நினைவுப்படுத்துகிறார். இந்தக்காலத்தில் அப்பாக்கள் மகன்களை மிரட்டுகிறார்களா என்ன?  அத்தையாக வருபவர் போல் வீடுகளில் ஒருவர் இருப்பார்😀

இன்றும் கூட குண்டாக இருக்கும் பெண்களின் நிலைமை கொடுமையானது. பெண் என்றால் ஒல்லியாக மெல்லிடையாளாக இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற நவீன பாணி அடிமைத்தனம். இது பெண்களுக்குத் தான் அதிகம். உடல் ஆரோக்கியதிற்காக எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வது வேறு. சமூகத்தின் கேலி, கிண்டல்களுக்குப் பயந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டால் தான் நாலு பேர் நம்மை மதிப்பார்கள் என்று நினைத்து சைஸ் ஸீரோவாக மெனக்கெட முயன்று கொண்டே இருப்பார்கள். மனஉளைச்சலுக்கும் ஆளாவார்கள். 

ஆணை விட பெண் அதிகம் படித்திருந்தாலும் உயர் பொறுப்பில் இருந்தாலும் அவளைச் சிறுமைப்படுத்த  சமூகம் தயங்குவதில்லை. அதை ஆங்காங்கே சிறுசிறு வசனங்கள் மூலம் அழகாகக் கூறியிருக்கிறார்கள். மிகப் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய சமூகமே குண்டாக இருப்பதை அசிங்கம் என்பது போல் மக்களின் மனதில் விஷத்தைத் தூவிக் கொண்டிருக்கிறது. நாமும் அதற்குப் பலிகடாவாகிக் கொண்டிருக்கிறோம். இப்படத்தில் கதாநாயகியின் தம்பி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவளின் உடல் எடையைச் சுட்டிக் காட்டுவான். யாரும் கண்டிக்காமல் இருப்பதையும் பார்க்கலாம்.  அதே போலத்தான் சமூக வலைதளங்களில், தொலைகாட்சி நிகழ்ச்சிகளில், திரைப்படங்களில் குண்டாக இருக்கும் பெண்களைப் பற்றின கேலியும் கிண்டலும் அதிகமாகி வருவதும் மனதளவில் பல பெண்கள் பாதிக்கப்படுவதும் தொடர்ந்து வருவது தான் கொடுமை. இந்தப்படத்தில் அந்த மனநிலையை மாற்ற முயன்றிருக்கிறார்கள். 

செய்யும் தொழிலில் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் பொழுது அதற்கு மாற தடுமாறுவதையும் அழகாக எடுத்து இருந்தார்கள். நன்கு நினைவில் இருக்கிறது. மதுரையில் ஒலிநாடாவில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருந்த காலத்தில் காளான்கள் போல மதுரை டவுன்ஹால் தெருக்களில் சிறுசிறு கடைகள் முளைத்தது. பாடல்களைப் பதிவு செய்ய கூட்டம் கூட்டமாக இளைஞர்கள் முண்டியடித்துக் கொண்டு இருப்பார்கள். கடை உரிமையாளர்கள் பலரும் புது பணக்காரர்கள் ஆனார்கள். காலம் மாறியது. சிடிக்களில் பாடல்களைக் கேட்கும் தொழில்நுட்பம் வளர்ந்தது. அதில் மாற தயங்கியவர்கள் தொழிலில் நஷ்டமடைந்தார்கள். இன்று அந்தக் கடைகளே இல்லாது போய்விட்டிருக்கிறது. கதாநாயகனின் கடையும் அப்படித்தான் இப்படத்தில் ஒருகட்டத்தில் தேங்கி விடுகிறது. நன்றாக அதனைக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர். இப்படி 'சபாஷ்' போட வைக்கும் காட்சிகள் இப்படத்தில் பல உண்டு.  

ஹரித்வார், ரிஷிகேஷ் என்று நாங்கள் சமீபத்தில் சென்று வந்த இடங்களை மீண்டும் படத்தில் பார்க்கும் பொழுது நன்றாக இருந்தது. குறுகிய தெருக்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமையான நகரம், வீடுகள், கங்கா ஆற்றங்கரை என்று படம் முழுவதும் சாமரம் வீசும் காட்சிகள்.

பட நாயகன் ஷாகாவிற்குச் செல்வதாக காட்சிகளை அமைத்திருந்த இயக்குனருக்குப் பாராட்டுகள். இம்மாதிரியான காட்சிகளை இந்திப்படங்களில் தான் பார்க்க முடியும். அதிக செலவில்லாமல் ஓவர் மேக்கப், குத்தாட்டம், இரைச்சல் என்ற அக்கப்போருகள் இல்லாமல் நம் வீடுகளில் நடப்பதைப் போல் சாதாரணமாக அதுவும் நல்ல கதையுடன் அருமையாக ஒரு படத்தை எடுக்க முடியும் என்று நிரூபித்த இயக்குனர் ஷரத் கட்டாரியாவிற்கு 👏👏👏

இன்றும் பல திருமணங்களில் மனப்பொருத்தத்தை விட பணப்பொருத்தமே முதன்மையாக இருக்கிறது. திருமண உறவு என்பது ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே இருக்கும் அன்பினால் பலப்படுவது. அதை கதாநாயகன் உணரும் வேளையில் எல்லாம் சுபமே.

இனிமையான இந்தப் பாடல் இன்னொரு முத்தாய்ப்பு💕

Ye moh moh ke dhaage
Teri ungliyon se ja uljhe
Koi Toh Toh na laage
Kis tarah girah ye suljhe
Hai rom rom iktaara
Hai rom rom iktaara
Jo baadalon mein se guzre...

மிக நல்ல பொழுதுபோக்குப் படம். அமேசானில் காண கிடைக்கிறது.


No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...