Saturday, July 22, 2023

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு...


சில வருடங்களாகவே அரிசி தட்டுப்பாடு வரப்போகிறது என்று 'புலி வருது, புலி வருது' கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்பொழுது நிஜமாகவே வந்து விட்டது போலிருக்கிறது. அதுவும், இந்தியர்கள் முண்டியடித்துக் கொண்டு வரிசையில் அரிசிக்காக காத்திருப்பது போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. அரிசி என்பது நம்முடைய அன்றாட உணவு. ஒருவேளை சோறு உண்ணவில்லை என்றால் அந்த நாளே திருப்தியாக கழியாது நமக்கு. அப்படித்தான் பழக்கப்பட்டு இருக்கிறோம். அது மட்டுமா? இட்லி, தோசை, அடை, பிரியாணி, விதவிதமான பொங்கல், சாம்பார், ரசம், தயிருடன் நித்தம் நித்தம் நெல்லுச் சோறு சாப்பிட்டுப் பழகின ஜென்மங்கள் ஆயிற்றே! இப்படி தட்டுப்பாடு, கட்டுப்பாடு என்று சொன்னால் அதிர்ச்சியாக இருக்காதா?

முதலில் தோன்றும் எண்ணம் ஓடிப்போய் கடையிலிருந்து இரண்டு மூன்று இருபது பவுண்ட் அரிசி மூட்டைகளை வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் தோன்றுவது இயற்கை தான். இப்படித்தான் பருப்பு தட்டுப்பாடு என்று உளுந்து, துவரம் பருப்பு விலையை 'கிர்ர்ர்ர்ர்ர்ர்'ரென்று ஏற்றினார்கள். சில மாதங்களுக்கு முன் கோதுமை தட்டுப்பாடு! இப்பொழுது அரிசியும் சேர்ந்து கொண்டிருக்கிறது. இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல, தெற்காசிய மக்களையும் அதிகம் பாதிக்கும். 2024 வரை தொடரப்போகும் இந்தத் தட்டுப்பாட்டினால் உலகளவில் விலை ஏறப்போகிறது என்பது மட்டும் கண்கூடாகத் தெரிகிறது.

தெற்காசியாவிலிருந்து அதிகமாக அரிசி மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. தண்ணீர் பற்றாக்குறை, போதிய விளைச்சல், லாபம் இல்லாத தொழிலாக விவசாயம் மாறிவருவதால் விளைநிலங்களில் வீடுகளைக் கட்டிவருவது பல இடங்களில் நடக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மழை, வெள்ளம், நிலத்தில் இறங்கி விவசாய வேலைசெய்வோர்களின் எண்ணிக்கையும் கணிசமான அளவில் குறைந்து விட்டதும் தற்போதைய ரஷ்ய-உக்ரைன் போரும் சில காரணங்களாகக் கூறப்படுகிறது. இயந்திரங்களைக் கொண்டு விவசாயம் செய்ய அதிக முதலீடு தேவைப்படுவதும் மற்றொரு காரணம்.

இதனால் அதிகமாக பாதிக்கப்படப்போவது மேற்கத்திய நாடுகள் என்றாலும் தற்போது சிங்கி அடித்துக் கொண்டிருக்கும் இலங்கை, பாகிஸ்தான், சிரியா, துருக்கி, ஆப்பிரிக்க நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பவே பதுக்கல் ஆசாமிகள் மூட்டைகளைப் பதுக்க ஆரம்பித்து விட்டிருப்பார்கள்!

இதில் கலிஃபோர்னியாவில் சில இடங்களில் விளைவிக்கப்படும் அரிசியில் ஈயத்தின் அளவு அதிகமாக இருக்கிறது. அதைச் சாப்பிடக்கூடாது என்று சில வருடங்களுக்கு முன் செய்தியாக வெளிவந்தது. இப்படி சாப்பிடும் அரிசியில் கூட உயிரைக்கொல்லும் வேதியியல் பொருட்கள் கலந்து... என்னவோ போடா மாதவா!

இந்த தட்டுப்பாடுகளுக்கெல்லாம் முக்கிய காரணம் பெருகி வரும் மக்கள் தொகை தான். அதைக் கட்டுக்குள் கொண்டு வராத வரை எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வு என்பதே கிடையாது. முன்பு சீனா செய்தது போல் இந்திய அரசாங்கம் முதலில் மக்கள் தொகையைக் குறைக்க வழி செய்ய வேண்டும். இல்லையென்றால் 'பல்லு இருக்கிறவன் பக்கோடா சாப்பிடுவான்' நிலைமை அதிகரிக்கும். வழக்கம் போல் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை பரிதாபமாகி விடும். இப்பொழுது நதிநீர் பங்கீட்டு அரசியல் நடப்பது போல் அரிசிக்காக சண்டைகள் நடக்க ஆரம்பித்தால் நினைக்கவே பதட்டமாக இருக்கிறது. சாப்பிடுவதற்கு அரிசி கிடைக்காமல் பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய. ஹ்ம்ம்ம்...

இந்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக அரிசி ஏற்றுமதியைக் குறைத்துள்ளது.

இன்னும் நான் கடைக்குப் போகாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறேன். இனி கடைக்குப் போனால் அரிசி கிடைக்குமோ இல்லையோ?

நித்தம் நித்தம் நெல்லுச்சோறுன்னு இனி பாட முடியாதா கோபால்?



No comments:

Post a Comment

போகநந்தீஸ்வரசுவாமி திருக்கோவில்

கர்நாடகாவில் நந்தி மலை அடிவாரத்தில் இருக்கும் மிக அழகான கோவில் ஸ்ரீபோக நந்தீஸ்வரசுவாமி திருக்கோவில். ரங்கஸ்தலத்திலிருந்து 12கிமீ தொலைவில் ஆ...